சிறுவயதில் காலை எழுந்தவுடன் கோபால்/பயோரியா பற்பொடியில் பல் தேய்த்த கையோடு காப்பி குடித்தாக வேண்டும் எங்கள் வீட்டில். 60, 70 களில் எங்கள் அம்மா அகன்ற பாத்திரத்தில் காப்பி பொடி, வெந்நீர் கலந்து தெளிய வைத்தெடுத்த டிகாக்ஷனில் கலந்து கொடுக்கும் காப்பி அமிர்தமாக இருக்கும், கொஞ்சம் கூடுதல் சர்க்கரையுடன்.
பிறகு கல்லூரி மற்றும் சீஏ பருவத்தில் காபி சமாச்சாரமெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் மேலோங்க ஸ்டைலாக டீ குடிக்கும் வழக்கம் ஆரம்பமானது. நந்தி கோயில் தெரு ஐயங்கார் பேக்கரி அல்லது பக்கத்தில் நேசே காபி பாரில் டீ குடிப்பது வழக்கம். நண்பர்களுடன் மடித்துக் கட்டிய லுங்கியுடன் திருச்சி மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் காலனியிலிருந்து காலார நடந்து TVS டோல்கேட் பகுதியில் ‘நேத்து ராத்திரி யம்மா!’ பாடல் ஒலிக்க டீ க்ளாஸை சுழற்றி சுழற்றி் குடிக்கும் சுகமே அலாதி.
பின்னாளில் பம்பாய் செம்பூரில் பிரம்மச்சரிய வாழ்க்கை துவங்கியதும் பில்டர் காபி குடிக்கும் ஆவல் அதிகரிக்க காரணம் சக ரூம் நண்பர்கள் தான். எல்லோருமே ஶ்ரீரங்கத்தான்கள். ஆனால் அப்போது பில்டர் வாங்கும் அளவிற்கு பெரிய சம்பாத்தியம் இல்லாததால் அண்ணாச்சி கடையில் வாங்கிய சின்ன அலுமினிய சொம்பை திருப்பிப்போட்டு ஆணியால் சிறு சிறு துளைகள் போட்டு அதை ஃபில்டராக்கி எவர்சில்வர் தம்ளர் மேல் வைத்து இறக்கிய டிகாஷன் காப்பி அற்புதம். ஆனால் நண்பர்கள் ரங்கு, Balasubramaniam Chandrasekaran (சந்துரு), Murali Soundararajan (முரளி), ஶ்ரீராம் எல்லோரும் ப்ரூ காபி குடிப்பவர்கள் என்பதால் நானும் ப்ரூவுக்கு மாறினேன்.
94இல் பஹ்ரைன் வந்ததும் லிப்டன் டிப் ச்சாய் அல்லது ஹஸ்முக்ராய் மசாலா சாய் குடிக்க ஆரம்பிக்க, ஃபில்டர் காப்பி ஹோட்டலில் மட்டுமே குடித்தோம். அதிலும் நிறைய சங்கடங்கள். ‘என்னங்க! பால் ஜாஸ்தியா இருக்கு, கொஞ்சம் டிகாக்ஷன் விடுங்க’ என சொல்லிய மறு நிமிடம் படக்கென டிகாகஷனை மேலே கொட்டி அந்த காப்பியை படு கசப்பாக்கிய சரவணபவனை அடுத்த சில வருடங்களில் மூடி விட்டார்கள். மனாமா விருந்தாவன் ஹோட்டலில் மினி டிபனுக்கப்புறம் அவர்கள் கொடுக்கும் காப்பி அருமையாக இருந்தது. கூர்க் காபியாம். ஆனா சூடு பத்தாது.
கடந்த பத்து வருடங்களாக வார இறுதிகளில் மட்டும் ரிலாக்ஸ்டாக வீட்டில் காப்பி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி, சிலசமயம் வாரத்துக்கு இரண்டு நாட்களும் காபி குடிக்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். உம்மல்ஹாசம் பகுதி அல்-ஆதில் சூப்பர் மார்க்கெட் பையன் நான் கடையில் நுழையும்போதே ‘நரசுஸ் காபி பௌடர் கதம் ஹோகயா’ என சொல்வான்.
உயர்தர ஃபில்டர் காப்பி எப்படி செய்வது என நிறைய படித்திருந்தாலும், என்னைப்பொருத்த வரை சற்று கூடுதல் சிரத்தையுடன் செய்தால் அருமையான ஃபில்டர் காப்பி கிடைக்கும் என்பது என் மேலான கருத்து.
புத்தகங்களில் போட்டிருப்பது போல் இரண்டு மூன்று ஸ்பூன் காபி பொடியை போட்டு, கட்டை விரலால் மேலே அமுக்கி, அதற்கும் மேல் ஜல்லி கரண்டி போன்ற ஏதோ ஒன்றை வைத்து அழுத்தி வெந்நீர் ஊற்றினால் டிகாக்ஷன் திக்காக வரும் என்பதெல்லாம் கறிக்கு உதவாது. பத்து நிமிடம் கழித்து பார்த்தால் ஒரு சொட்டு கூட கீழே இறங்கவில்லையென்றால் எங்கிருந்து வரும் கள்ளிச்சொட்டு!
யாரோ சொல்லி ஃபில்டர் மண்டையை அதன் மூடியால் நங்..நங் என தட்டினால் ஒரே நிமிடத்தில் இறங்கியது. ஆனால் அரபிக் காபி போல அடிமண்டியுடன் கிடைத்தது. சொன்னவர்கள் பெயரை இங்கு குறிப்பிட்டு முகநூலில் அன்ஃப்ரெண்டாகி விட எனக்கு விருப்பமில்லை.
பில்டர் போடும் முன் அதை காஸ் அடுப்பு சூட்டில் காண்பித்தால் துளைகள் பெரிதாகி நல்ல காப்பி கிடைக்கும் என்று சொன்னவரை இப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்காத வரை அவருக்கு நல்லது.
நண்பர் கணேஷின் மனைவி ரமா அவர்களது ஐடியாவிற்கு நன்றி. கொஞ்சம் கொறகொற வென இருந்த காப்பி பொடியை மிக்ஸியில் போட்டு ஒரே அடி (கவனிக்க! ஒரே அடி தான். அதற்கு மேல் அடித்தால் மைதா போல் பொடியாகி விட சாத்தியங்கள் அதிகம்). நல்ல டிகாக்ஷன் கிடைத்தது. ஆனால் என்ன வில்லங்கமென்றால், அடுத்த முறை லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் ‘ஏம்ப்பா காப்பி பொடி கொஞ்சம் கொறகொறன்னு கிடைக்குமா?’ என கேட்ட என்னை எதோ விஷ ஜந்துவைப்போல் பார்த்தான் மலையாளி சேட்டன்.
லெவிஸ்டா, கல்மனே போன்ற பெரிய பிராண்டுகளை தேடிப்போவோர் வெகு சீக்கிரம் உதயம் நரசூஸ்க்கு திரும்பி வருவது உத்தமம். அருமையான ஃபில்டர் காப்பி கிடைக்க முக்கியமான ஒன்று நமக்கு அருமையான ஃபில்டர் காபி போட தெரிந்திருக்க வேண்டும். கொஞ்சம் மய்யமாக யோசிப்பது போல இருக்கிறதல்லவா!
ஆம். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் உதயம் நரசுஸ் காப்பி பொடியை ஃபில்டரில் போட்டு ரொம்ப கொதிக்கும் நிலைக்கு வருமுன் இறக்கிய வெந்நீரை ஊற்றி ஒரு ஐந்தாறு நிமிடம் பொறுமையாக இருத்தல் அவசியம். கீழே இறங்கிய டிகாக்ஷனை எடுத்து மறுபடியும் உள்ளே கொட்டுவது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தாலும் தக்க பலன் கிட்டும். டிகாக்ஷன் இறங்கிக் கொண்டிருக்கும்போதே சிம் அடுப்பில் தயாராக பால் கொதித்தல் அவசியம். மறக்காமல் கொதிக்கும் பாலில் உள்ள ஆடையை தயவு தாட்சண்யம் இல்லாமல் ஸ்பூனால் எடுத்து சிங்க்கில் கொட்டுதல் உசிதம். காப்பி குடிக்கும் போது நடுவே பாலாடை நம் நாக்கில் தட்டுப்பட்டால் நீங்கள் ஃபெயில். அரியர்ஸ் அனுமதி கூட கிடையாது. பெங்களூரில் எல்லா சாகர் ஓட்டல்களிலும் அந்த மங்களூர் பையன்கள் கொதிக்கும் பாலிலிருந்து பாலாடையை வடிகட்டி, பிடி கெட்டில் பாத்திரத்தால் மொண்டு மொண்டு அதன் மேலேயே ஊற்றி, காப்பி மேல் நுரையை தூக்கி வைப்பான்கள்.
டிகாக்ஷனை தம்ளரில் கொட்டி கொதிக்கும் பாலை மொண்டு ஒரே டேக்கில் கொட்டி சரியான ‘போலீஸ் காக்கி’ நிறத்தில் காப்பியின் தன்மையை கொண்டு வருபவர்கள் உண்மையிலேயே மகான்கள். கொஞ்சம் கூடுதல் டிகாக்ஷன் விட்டாலும் அது ‘மிலிட்டரி காக்கி’யாகி விடக்கூடிய அபாயமுண்டு.
சில வீடுகளில் கொடுக்கப்படும் காப்பியை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி விடலாம் அது ‘காலையில போட்ட டிகாக்ஷன்’ அல்லது புதிய பால் அல்ல என. சில பெண்கள், நாம் கேட்காமலேயே கிச்சனிலிருந்து வரும்போதே நமக்காக காப்பியை டபராவில் ஆற்றிக்கொண்டே வரும்போது ‘நான் கேட்டேனா!’ என கதறத்தோன்றும். சூடு இல்லாத காபி கொடுக்கும் பெண்களை ஜகம் மன்னிக்காது.
பெஸ்ட் காப்பி என நான் கருதுவது என் சகோதரி Hemalatha Manohar, நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar வீட்டில் அவரது மனைவி Kalpana Sankar மற்றும் பஹ்ரைனில் ரமா கணேஷ், Sudha Hariharan, Hema Kasinath போன்றவர்கள் வீடுகளில் போடும் காபி தான். (கொலை மிரட்டல்கள் வரத்துவங்குவதால் இந்த பட்டியல் மேலும் நீளும்)
விஷயத்திற்கு வருகிறேன். இரண்டு நாள் முன்பு ஆதம்பாக்கத்தில் நண்பர் Gurumoorthy Subramanian அவர்கள் துவங்கியிருக்கும் 'குரூஸ் காபி ஹவுசு'க்கு என் மூத்த சகோதரர் Suresh Babu வுடன் விஜயம் செய்தேன். காபி கோப்பையில் ‘க்ளக்’ என டிகாக்ஷன் விட்டு ஒரேமுறை பாலை விட்டு முக்கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அவர் கலந்த காப்பி திவ்யமாக இருந்தது, என்னை நேராக சொர்க்கத்திற்கே கொண்டு சென்றது. மனுஷன் கில்லாடி. காபி,டீ, சமோசா, பிஸ்கெட், கோலி சோடா, ரோஸ்மில்க் என வியாபாரம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அவரது உழைப்பும் அபரிதமாக தெரிகிறது. வாழ்த்துக்கள் குரு!
காபியை குடித்த கையோடு பலேனோவை ஸ்டார்ட் செய்து அடுத்த முக்கா மணி நேரத்தில் பெங்களூர் நெடுஞ்சாலையை பிடித்து ஓட்டும்போதும் காபியின் சுவை நாவில் இருந்தது. குரு ‘ஆத்தா நா பாஸ் ஆயிட்டேன்!’ என கத்தலாம். சிறிய முதலீட்டில் நீங்கள் துவக்கிய இந்த வியாபாரம் வளர்ந்து வாழ்க்கையில் மேலும் உங்களை உயர்த்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment