Sunday, June 22, 2025

பிரேமா-அஜய் கல்யாண வைபோகமே..

நெருங்கிய பஹ்ரைன் நண்பர் சிவகுமார்-கல்யாணி தம்பதியின் மகள் டாக்டர் யௌவனா என்கிற பிரேமா - டாக்டர் அஜய் திருமணம் சென்னையில். சிவகுமார், கல்யாணி இருவரும் சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட்கள். சாய் சத்சங் அங்கத்தினர்களானதால் பஹ்ரைனில் இவர்களுக்கு ஏராளமான நண்பர்கள். கல்யாணி பஹ்ரைனில் ஒரு ஆடிட் நிறுவனத்திலும் சிவகுமார் அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்கள் (FMCG-Fast Moving consumer Goods) குழுமங்களில் ஒன்றில் நிதித்துறை வைஸ் பிரெசிடென்ட்டாக இருந்தவர். தவிர CA டோஸ்ட்மாஸ்டர் க்ளப்பிலும் முக்கிய அங்கத்தினர், சிறந்த பேச்சாளர் (குறிப்பாக நகைச்சுவை பேச்சு). சிஏ மட்டுமல்லாது ICWA, CISA மற்றும் ACCA (UK) போன்ற உயர் படிப்புகள் மெத்த படித்தவர். அதிலியா பகுதியில் எங்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் நவராத்திரி விழாவின்போது வரும்போது மகள் பிரேமா பஜன் பாடல்கள் பாட நான் தபலா வாசிப்பதுண்டு. பஹ்ரைனிலிருந்து துபாய் பக்கம் போய் கடந்த பதினோறு வருடங்களாக மின்துறை நிறுவனமொன்றில் எக்ஸக்யூடிவ் வைஸ் பிரெசிடென்ட்டாக இருக்கிறார்.
சமீபத்தில் இவர்களது இல்லத் திருமணம் மிகவும் கோலாகலமாக சென்னையில் நடந்தேறியது. நண்பர் வீட்டுத் திருமணமென்றால் நாம் தனியாகவா போவோம்! பஹ்ரைன் பட்டாளத்துடன் கூடினோம். பெங்களூரிலிருந்து வாகனமோட்டியபடி செங்கல்பட்டையடுத்த மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் மற்றொரு பஹ்ரைன் நண்பர் முத்துகுமார்-ஷ்யாமளா தம்பதியுடன் திருமணத்தில் கலந்துகொண்டோம். மற்ற பஹ்ரைன் நண்பர்களும் விமானத்தில் வந்திறங்கி ஆஜர்.
இரண்டு நாட்கள் கல்யாணத்திலேயே டேரா. முதல் நாள் விரதம், நிச்சயதார்த்த வைபவங்களுக்கு உறவினர்கள், சாய் சத்சங் நண்பர்கள், குறிப்பாக பஹ்ரைன் நண்பர்கள் மட்டுமே. காலை கொலைப்பசியுடன் மண்டபத்தில் நுழைந்து சிவகுமாரை கட்டிப்பிடித்த கையோடு நேராக ப்ரேக்ஃபாஸ்ட், பைஜாமா நாடாவை தளர்த்தியபடியே. விநாயகா கேட்டரிங்னா சும்மாவா! விரதம் வைபவம் முடிந்து காசி அல்வா, இட்லி, வடை, பொங்கல், கொத்சு, கோதுமை உப்புமா, ரவாதோசை எல்லாவற்றையும் குழைத்தடித்தோம். மத்யம் இலையில் நெய்யுடன் வழுக்கியபடியே விழுந்தது சர்க்கரை பொங்கல். விதவிதமான காய்கறி கூட்டு சாப்பாட்டு வகைகளுடன் கீரை வடை, லெமன் ரைஸ், மல்லி சாதம், மைசூர் ரசம், கடைசியாக போளி!
உண்ட மயக்கத்துடன் அறையில் குட்டி தூக்கம் போட்டு மாலை அமர்க்களமாக ஆடல் பாடல்களுடன் ஜானவாசம். இரவு உணவில் அடப்பிரதமன், பிரிஞ்சால் காரக்கறி, ரசவாங்கி, பொடிமாஸ், மங்களூர் போளியுடன் சாப்பாடு. இன்னம் நிறைய ஐட்டங்கள்!
கல்யாணத்தில் பஹ்ரைன் மற்றும் துபாய்
நண்பர்கள் குடும்பங்களே அதிகம். எல்லோரும் சேர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்டோம் திருமண மேடையை ஆக்கிரமிப்பு செய்து ‘யால்லா பஹ்ரைன்!’ (Let’s go Bahrain) என கோஷமெழுப்ப, காமிராக்காரர்கள் எங்களை புகைப்படமெடுக்க திணறி விட்டார்கள்.
சிவா-கல்யாணி இந்த திருமணத்தை கார்ப்பரேட் ஸ்டைலில் நடத்தினர் எனவே சொல்லலாம். கடந்த பல மாதங்களாக பட்டியல் தயார் செய்து திருமண ஏற்பாடுகளை திறம்பட செய்திருக்கிறார்கள்இருவரும். திருமணத்திற்கு 2 நாள் முன்பு வரை கல்யாணி காய்ச்சலுடன் மருத்துவமனையில் இருந்தும் மன உறுதியுடன் கணவர் மற்றும் மகனின் உதவியுடன் பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் பரிபூரண அருளால் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி முடித்தார்.
மயிலாப்பூர், அடையாறு, சென்னை, பிராட்வே மற்றும் காஞ்சிபுரத்தில் புடவை வேஷ்டிக்கு ஷாப்பிங் செய்யப்பட்டது.
பெரிய திருமண மண்டபம் மற்றும் உணவுக்கூடம் வேண்டுமென நிறைய மெனக்கெட்டு எக்மோர் ராணி மெய்யம்மை, ராஜா முத்தையா, சேத்பேட்டை குச்சலாம்பாள், மயிலாப்பூர் ஏவிஎம் ராஜேஸ்வரி, மேயர் ராமநாதன் செட்டியார் ஹால் எல்லா மண்டபங்களையும் பார்த்துவிட்டு, கடைசியாக ஈஸ்ட்கோஸ்ட் ரோட்டில் ஆர்கே கன்வென்ஷன் சென்டர் தேர்ந்தெடுக்கப்பட்டது. எக்கச்சக்கமான வாகனங்கள் நிறுத்த வசதி.
இங்கிலாந்தில் வசிக்கும் மகன் அரவிந்த் கைவல்யா (அவனும் அம்மா, அப்பாவைப்போல சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட்) துடிப்புடன் ஓடியாடி திருமண ஏற்பாடுகளை செய்தும், தாத்தா பாட்டியை பிரத்யேகமாக கவனித்துக்கொண்டு, சங்கீத் நிகழ்ச்சியை நடத்தி, வந்திருந்த விருந்தினர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி அபாரமான உழைப்புடன் திருமணத்தில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. நண்பர்களுக்கு தங்கும் அறை மற்றும் வாகன வசதிகள்செய்வதற்கெனவே பிரத்யேகமாக excel pivot table சகிதம் உட்கார்ந்து பட்டியல் தயார் செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளான் அரவிந்த்.
ரேடியன்ட் பல் மருத்துவமணையின் கூடுவாஞ்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை இம்மூன்று கிளினிக்குகளையும் ஆர்த்தோடான்டிஸ்டாக நிர்வகிக்கும் மணப்பெண் டாக்டர் பிரேமா (யௌவனா) வும் தன் பங்குக்கு புகைப்படக் கலைஞர் (ஸ்ரீராம் ரகு), மேக்கப் ஆர்ட்டிஸ்ட் (ரத்னா மேக்கப்), டிசைன்களுக்கான அலங்காரத்தில் ஈடுபடுதல் மற்றும் மின் அழைப்பிதழை உருவாக்குதல் என மிகக் குறைந்த விடுமுறையில் இருந்தபோதிலும் ஓடியாடி பணியாற்றியுள்ளார்.
சஃபாரியில் நடமாடும் சில பௌன்சர்களை நியமித்திருந்தார் நண்பர் சிவா. நம் பாதுகாப்புக்காக அவர்கள் கூட்டத்தை கண்காணிப்பதுடன், ஒவ்வொரு பந்தியிலும் உண்பவர்களது எண்ணிக்கை கணக்கிடுதல் போன்ற பணிகளை செய்தனர். இலை/ப்ளேட் கணக்கு தானே! எண்ணிக்கை எதற்கு என நீங்கள் நினைக்கலாம். தற்போது திருமணங்களில் கேட்டரிங்காரர்களே 50 பேருக்கும் மேல் பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுகின்றனர், நம் கணக்கில். சாப்பாட்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என ஒரு ஆளுக்கு வசூலிப்பவர்கள் அவர்களது ஆட்களையும் நம் செலவில் சாப்பிட வைப்பதால், பேரம் பேசி அதற்கென விலையில் தள்ளுபடி வாங்கி விட்டார் கில்லாடி சிவா.
சம்மந்தி குடும்பத்தினரைப்பற்றி..
திரு.பாலசங்கர் தீவிர சிவபக்தர், குறிப்பாக தில்லை நடராஜ பக்தர். திருச்சிற்றம்பலம் என்றபடியே அனைவரையும் வரவேற்பார். புகழ்பெற்ற பாடகர்களுக்காக வாசிக்கும் மிருதங்க வித்வானும் கூட. மும்பை ஐ.ஐ.டியில் படித்து தங்கப் பதக்கம் வென்றவர். அங்கே ஒரு உற்பத்தி நிறுவனத்தின் வைஸ் பிரெசிடென்ட்டாக உள்ளார்.
மனைவி திருமதி மாலா நிகழ்ச்சிகளை வடிவமைத்து ஏற்பாடு செய்யும் (event management) திறமை மிக்க வணிகப்பெண் இவர். அன்பான தாய், மாமியார் மற்றும் பாட்டி என்பது கூடுதல் தகவல். மாப்பிள்ளைக்கு அண்ணனோ அக்காவோ உண்டுங்கறதை அப்படிச்சொன்னேன். மூத்த பையனும் பல்கலைவித்தகர். திருமணத்தில் சாய்பஜனில் மிருதங்கம் மற்றும் ரிதம் பேட் அபாரமாக வாசித்தார்.
கார்நாடக சங்கீத பாடகர்கள் நித்யஶ்ரீ மகாதேவன், மற்றும் சிவஶ்ரீ ஸ்கந்தபிரசாத் ஆகியோர் இத்திருமண வைபவத்தில் கலந்து கொண்டார்கள். முதல் நாள் மதியம் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் மற்றும் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் மற்றும் முஹூர்த்தத்திற்குப் பிறகு சாய் பஜனைகள் போன்றவை இத்திருமணத்தில் ஆகச்சிறந்த இரண்டு நிகழ்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாள் வைபவத்தில் மன, உடல் அசதியை சற்றும் காட்டாமல் வந்திருப்பவர்களை கவனித்தும், விரதம், நிச்சயதார்த்தம், ஜானவாசம், வரவேற்பு, முகூர்த்தம், நலங்கு என எல்லாவற்றிலும் பிசியாக இருந்தபோதிலும் அவ்வப்போது ‘சாப்டீங்களா?’ என எல்லோரையும் கேட்டு உபசரித்து ஜாம் ஜாம் என திருமணத்தை நடத்தி முடித்த சிவா ( Sivakumar Lakshman), கல்யாணி ( Kalyani Sivakumar), பிரேமா (Prema Sivakumar), அரவிந்த் மற்றும் சம்மந்தி வீட்டார் அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்.

No comments:

Post a Comment