பெங்களூரிலிருந்து கிளம்பி என் மாமனாருக்கு நெருங்கிய நண்பரும் உறவினருமானவரின் இல்லத்திருமணம் நடக்கும் மணப்பாறை நோக்கி வாகனமோட்டியபடி பயணம். குளித்தலைக்குப்பின் திருச்சி போகாமல் தோகைமலை வழியாக மணப்பாறை வந்து, திண்டுக்கல் ரோட்டில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விடுதியில் அறை. நண்பர் உள்ளூரில் கட்டிட ஒப்பந்ததாரர், மணல், செங்கல் மொத்த வியாபாரம். தன் சொந்த கல்யாண மண்டபத்தில் பையனின் திருமணத்தை நடத்தினார். பையனின் அம்மா என் மனைவி மற்றும் மைத்துணி இருவருக்கும் நெருங்கிய தோழி. கலகலப்புக்கு சொல்லவா வேண்டும்.
கல்யாணம் பற்றிய பதிவில் சாப்பாட்டைப்பற்றி எழுதாமல் இருக்க முடியுமா! காலை உணவில் இலையில் தண்ணீர் தெளித்து துடைத்ததும் முதலில் விழுந்தது பொன்னிற மினி ஜாங்கிரி. பையன் அடுத்த இரண்டு இலை தாண்டுவதற்குள் என் இலையிலிருந்த ஜாங்கிரியைக்காணோம். இட்லி, வடை, பொங்கலையடுத்து முறுகல் ரவா விழுந்தது. தம்பி! அடுத்து என்ன டிபன் வரப்போகுதுன்னு சொல்லிட்டா அதுக்கு தகுந்தாப்படி பொங்கல் இன்னம் சாப்பிடுவேன் எனக்கேட்டேன். பூரி மசால் சார் என்றான் பையன். இலை முழுக்க இண்டி கூட்டணி போல நிறைய டிபன் வகைகளின். எதிரே காங்கிரஸ் கலரில் புதினா, தேங்காய், மிளகாய் சட்னிகள் மற்றும் பிஜேபி கலரில் அக்காரவடிசல். இலையின் ஓரத்தில் எண்ணெய் மி்.பொடி வெளியே இருந்து ஆதரவு. டிபனே அம்சமாக இருந்ததென்றால் மதிய சாப்பாடோ இன்னும் ஒரு படி மேல். ‘தம்பி பருப்பு விட்டியே, நெய் எங்கப்பா?’ எனக்கேட்டேன். பருப்பிலயே நெய் சேர்த்திருக்கு என்றான். என்னவொரு ருசி. மனசேயில்லாமல் சாம்பாருக்கு தாவினேன். பவன் கல்யான் போல சேனையை தூக்கலாக சேர்த்ததில் அவியலின் பெரும்பான்மை சுவையை உயர்த்தியது. ரசம் இன்னொரு கப் கேட்டு வாங்கிக் குடித்து கடைசியில் கங்கனா ரனவத் போல இளநீர் பாயசம். யாரப்பா அந்த மணப்பாறை வேலூஸ் கேட்டரர்ஸ்?
பதிவின் தலைப்பை கவனித்தீர்களா? விஷயத்திற்கு வருகிறேன். கல்யாணத்திற்கு பெங்களூரிலிருந்து நிதானமான வேகத்தில் தான் வந்துகொண்டிருந்தேன். கிருஷ்ணகிரி தாண்டியதும் ஓரிடத்தில் நெடுஞ்சாலையின் குறுக்கே ஒரு நாய் வந்து, பா(பீ)தியில் திரும்பி ஓட முயற்சிக்க, அந்த சில விநாடிகளில் சடாரென ப்ரேக் போட்டால் பின்னால் வரும் வண்டிகள் இடிக்கும் அபாயம், இல்லையென்றால் நாய் துவையல் ஆகிவிடும் என்பதால் வேகத்தை ஜாக்கிரதையாக குறைத்தேன். டாமார் என முன் பக்கம் சத்தத்தையடுத்து நாய் ஊளையிடும் சத்தம். வாகனத்தின் பக்கவாட்டில் பின் பக்கத் தோற்றக்கண்ணாடி வழியாக நாய் கத்தியபடியே ஓடுவது தெரிந்ததும் நிம்மதியானது. திடீரென நான் வேகம் குறைத்த காரணம் தெரியாமல் சிலர் என்னை சுட்டெறிக்கும் பார்வையுடன் கடந்தார்கள்.
வண்டியை ஓரங்கட்டி இறங்கி முன் பக்கம் பார்த்தோம். நம்பர் பலகை ஒடுங்கி, பம்ப்பர் லேசாக உடைந்திருந்தது. வேறு சேதமேதும் இருப்பதாக தெரியவில்லை. எம்.பி சீட்டுக்காக கவர்னர் பதவியை விட்டு, கடைசியில் ரெண்டும் போனதால் யாராவது கவலைப்பட்டோமா! அதுபோல கவலைப்படாமல் வண்டியை கிளப்பி மணப்பாரை போய் திருமணத்தில் கலந்து கொண்டோம்.
இனி க்ளைமாக்ஸ். முகூர்த்தம் முடிந்து, சாப்பாடு, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு தாம்பூலப்பையுடன் விடுதிக்கு வந்து உடை மாற்றிக்கொண்டு கூகுள் மேப்பில் மணப்பாறை- காரைக்குடி வழித்தடம் பார்த்து வண்டியை செலுத்தினேன். அழகான கிராமங்கள். அற்புத சாலைகள், இரண்டு பக்கமும் அடர்ந்த மரங்கள். ரம்மியமாக இருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் புதுக்கோட்டை, அப்புறம் முப்பதே நிமிடங்களில் காரைக்குடி என திரை காட்டியது. பரம்பூர் எனும் கிராமத்தை கடக்கும்போது ‘இஞ்சின் அதிகம் சூடாயிடுச்சு’ என டேஷ்போர்டு காட்ட படாரென வேகத்தை குறைத்து, சாலை ஓரத்தில் விஸ்தாரமான இடம் பார்த்து வண்டியை நிறுத்தினேன். நாய் மீது இடித்த அதிர்வில் ரேடியேட்டர் பழுதடைந்தது போலும்.
இங்கு தான் நம்மூர் கிராம மக்களைப்பற்றி குறிப்பிடவேண்டும். அதற்கு முன்! வண்டியை நிறுத்தி Road assist எனும் அவசர எண்ணை டயல் செய்ய, ‘நீங்க வழியில எங்கியோ மாட்டிக்கிட்டீங்க போல. விபத்து ஒன்னுமில்லியே!’ என நொய்டாவிலிருந்து வட இந்திய இளைஞன் பரிவுடன் விஜாரித்தவன், ‘ஒரு லிங்க அனுப்பறேன், அதை அழுத்துங்க!’ என்றதும், ட்ரிங் சத்தத்துடன் வந்த லிங்க்கை நான் அழுத்த, ‘மகாலட்சுமி லேடீஸ் வேர் முன்னே தானே உங்க வண்டி நிக்கிது?’ என வ.இ இளைஞன் கேட்க, ஆச்சரியத்துடன் காரின் பக்க வாட்டு ஜன்னல் வழியாகபார்த்தேன். ராஷ்மிகா மந்தானா பாடியுடன் சிரித்தபடி ஷேமமாக நிற்கும் பெயர்ப்பலகையுடன் மகாலட்சுமி லேடீஸ் வேர் எனும் கடை. சாட்டிலைட் மேப்பின் சாகசம் அப்போது புரிந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் ரெகவரி வாகனம் வந்து பாரதிராஜா படம் போல நம் வாகனத்தை ராவோடு ராவாக இழுத்துக்கொண்டு ஓடிவிடுமாம், திருச்சிக்கு!
சின்ன கிராமம். டீக்கடை, சலூன், ஹார்ட்வேர், எலக்ட்ரிகல்ஸ், மொபைல் ஷாப், கோயில் கும்பாபிஷேக ஒலிபெருக்கி, பல்சர் பைக் இளைஞர்கள் என பிசியாக இருந்தது. பக்கத்தில் ஒரு சிறிய மளிகைக்கடையில் பன்னீர் சோடா வாங்கி அவரிடம் பேச்சு கொடுத்தேன், வாகனம் நின்று போன கதையுடன். சுத்துப்பட்டில் சுமார் இருபது கிராமங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் வருகிறார்களாம். கல்லா வழியாக நீலக்கலர் நூறு ரூபா நோட்டுக்கள் தெரிந்தது. வியாபாரம் அமோகமாக போவதாக சந்தோஷத்துடன் சிரித்தார். பின்னால் வடிவுக்கரசி போல கிராமத்து வெட்கத்துடன் அவர் மனைவி ‘உங்க பொண்டாட்டியையும் மாமியாரையும் கார்ல இருந்து இறங்கி வரச்சொல்லுங்க. பக்கத்துல தான் எங்க வீடு. பாத்ரூம் போகனுமில்ல அவங்களுக்கு!’ என பரிவுடன் கேட்டார்.
‘சார்! யார் நீங்க? கேரளா வண்டியா? ரொம்ப நேரமா இங்கியே நிக்கிரீய!’ என கிராமத்து பெருசு ஒருவர் கேட்டார். ‘இல்லீங்க, இது கர்நாடகா வண்டி. நாய் ஒன்னு குறுக்கா ஓடி, வண்டி இடிச்சி, நாய்க்கு ஒன்னுமில்ல, ஆனா வண்டி ரேடியேட்டர் டேமேஜ் ஆயிடுச்சு’ என்ற என்னிடம் அவர் ‘ வண்டிய விடுங்க, ரிப்பேர் பண்ணிக்கலாம், உங்களுக்கு ஒன்னுமில்லயே! பாவம்ங்க இந்த நாய்ங்க என்ன செய்யும்! தெனம் பத்து நாய்ங்க அடிபட்டு சாகுது!’ என்றபடி நகர்ந்தார். ரெகவரி வண்டி வந்துட்டு போனதும் எங்களுக்கு காரைக்குடி போக இங்க டாக்சி கிடைக்குமா என மளிகைக்கடைக்காரரிடம் கேட்க, அடுத்த இரண்டு கடைகள் தாண்டி மின் சாதனங்கள், மோட்டார் காயில் ரிப்பேர் செய்யும் சாயபு ஒருவர் வந்து விட்டார். ‘கார்ல எலெக்ட்ரிகல் ரிப்பேர்னா நானே பாத்துடுவேன், இருங்க என்னன்னு பாக்கறேன் என்றபடி சட்டென தரையில் படுத்து இரண்டு முன் சக்கரங்களின் நடுவே ஊர்ந்து உள்ளே போய் ‘ ரேடியேட்டர் ஃபேன் போயிடுச்சு. நானே சரி பண்ணுவேன். உங்க வண்டிக்கு இன்ஷூரன்ஸ் இருக்கறதால சர்வீஸ் சென்டர்லயே பாக்கறது நல்லது’ என பின் பக்கம் ஒட்டியிருந்த மண்ணை தட்டியபடியே வெளியே வந்தார். ‘நம்ம வண்டியில உங்கள காரக்குடில விட்டுற்ரேன், எவ்ளோ லேட்டானாலும்.. இன்ஷா அல்லா!’ என்றதும் நிம்மதியடைந்தேன்.
குடுமியான்மலை வழியாக சீக்கிரம் வந்த ரெகவரி வண்டியைச்சுற்றி சுமார் பத்து பேர் கூட்டம் கூடியது. அதன் பின்பக்க கனரக கொக்கியொன்று என் காரின் முன்பக்க சக்கரங்களை சர்ரென தூக்கிக்கொண்டு இருட்டில் மறைந்ததும், எலெக்ட்ரிகல் கடையை மூடிவிட்டு ஐந்தே நிமிடத்தில் பெருஞ்சத்தத்துடனான பழைய டாடா இன்டிகா வண்டியில் வந்தார் சாயபு. 2006 மாடலாம். மாலை கடை மூடியதும் டாக்சி ஓட்டுகிறாராம். டிக்கியில் பெரிய மோட்டார்கள் காயில் ரிப்பேருக்காக. ‘ பெட்டிங்கள முன் பக்கம் அடுக்கிறலாம்’ என சொன்ன கையோடு பெட்டிகளை தூக்கி வைத்து, முன்பக்க கண்ணாடி பாதியை அடைத்தார். மீதி பாதியில் சாலை மங்கலாக தெரிந்தது. பின்னால் நாங்கள் மூவர். மளிகைக்கடைக்காரர், வடிவுக்கரசி மனைவி, ஒருசில பெருசுகள், சிறுவர்கள் எல்லோரும் விடை கொடுத்தனுப்ப, அசுர வேகத்தில் வண்டியை செலுத்தினார் சாயபு.
இரவு 9 மணிவாக்கில் காரைக்குடியில் மாமனார் வீடு முன் வண்டியிருந்து பெட்டிகளை அவரே இறக்கி வீட்டிற்குள் வைக்க, ‘பக்கத்துல ஹோட்டல்ல இறக்கி விட்ருங்க. சாப்ட்டு நாங்க ஆட்டோ புடிச்சி வீட்டுக்கு வந்துடறோம்’ என்றதும் தயங்காமல் வந்தார். எவ்வளவு வற்புறுத்தியும் எங்களுடன் டின்னர் சாப்பிட மறுத்து ரூ. மூவாயிரம் பெற்றுக்கொண்டு வண்டியை கிளப்பி சென்று விட்டார்.
பி.கு: தங்க மீனாட்சி என்ற எழுத்தாளரின் புத்தகத்திலிருந்து:
‘மனிதன் எப்போது மனிதனாகிறான்?
ஆபத்தில் இருப்பது நமக்கு அறிமுகமில்லாதவராக இருந்தாலும், அவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம் வரும் போது…’
No comments:
Post a Comment