நாமக்கல், தொட்டியம் தாண்டி காவிரி பாலம் வந்ததும் திருச்சிக்கு இரண்டு வழிகள்.. நேராக போனால் முசிறி வழியாக சிறுகாம்பூர், நொச்சியம், சமயபுரம் டோல்கேட். இந்த குறுகலான சாலையில் அதிக வளைவுகள் மற்றும் மற்ற வாகனங்களை முந்தியபடி நமக்கு நேர் எதிரே படுவேகத்துடன் வரும் இன்னோவா, ஸ்விஃப்ட்டுகள் அதிகம். நான் காவிரி பாலத்தை கடந்து குளித்தலை ரூட் எடுத்தேன். காரணம் காவிரி நம்முடன் இடது பக்கமும் ரயில் பாதை வலது பக்கமும் என அகலமான சாலைப்பயணம் சுகமாக இருக்கும். பேட்டவாய்த்தலை, சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துரை, திருச்செந்துரை, அல்லூர், முத்தரசநல்லூர் என அழகிய கிராமங்கள் பார்த்து ரசித்தபடி கரூர் பைபாஸ் ரோட்டில் திருச்சி வந்தடைவது சுகம். சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே சங்கீதாவில் நிறுத்தி வண்டிக்கு 30 நிமிட ஓய்வு கொடுக்கும் சாக்கில் கார+ஸ்வீட் பணியாரம் அன்டு ஃபில்டர் காபியை மொஸ்க்கி விட்டு இ.ஆர் மேநிலைப்பள்ளியை அடுத்த பாலத்தில் ஏறி ஓயாமாரி, பைபாஸ் ரோடு என வழக்கமான பாதை.
திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி சாலை மிகவும் அபாயகரமானது என்பேன். வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்திச்செல்வது நம் பயணத்திற்கு பாதுகாப்பல்ல. காரைக்குடி வரை வேகத்தை குறைத்து சர்வஜாக்கிரதையுடன் காரை செலுத்த வேண்டியதாயிற்று.
பள்ளி விடுமுறை என்பதாலோ என்னவோ காரைக்குடி நகரம் வெறிச்சோடிக்கிடக்கிறது. பொதுவாக கல்லுக்கட்டி, அஞ்சு வெளக்கு பகுதிகளில் போக்குவரத்து அதிகமாகவும், சுத்துப்பட்டு சிற்றூர்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதுண்டு. பெங்களூரில் நகர நெரிசலுக்கு நடுவே மூன்று மணி நேரத்தில் நாம் வாங்கும் சாதனங்களை காரைக்குடியில் பத்து இருபது நிமிடங்களில் வாங்கி விடலாம், நடுவே பன்னீர் சோடா, ஜிகர்தண்டா போன்ற பானங்களை சுவைத்தபடி. குண்டு, குழி என எதுவும் இல்லாத சீரான தெருக்கள், சாலைகள். கஞ்சி சலவை, இஸ்திரி போட்ட தும்பைப்பூ வெள்ளை சட்டை, வேட்டியுடன் நெற்றியில் விபூதி பட்டை குங்குமத்துடன் டிவிஎஸ் ஃபிஃப்டியில் மக்கள் பளிச்சென செல்வதை இப்பவும் பார்க்கிறேன்.
நான் முன்பே சொல்லியிருந்தபடி இங்கே ஜனங்கள் பேக்கரிகளில் பஃப்ஸ் மற்றும் ஸ்வீட் வாங்குவதும், புடவைக்கடைகளில் ஷாப்பிங் செய்வதும், நகைகள் வாங்குவதும் என பணத்தை வாறி இறைக்கிறார்கள். அட.. அறுந்து போன செயினை பத்த வைக்க நகைக்கடைக்கு போனால் முதலில் பவண்டோ தருகிறார்கள். ‘சௌக்கியமா இருக்கீயளா! உங்க மாமா இருந்தவரை தெனம் கடைக்கு வந்துருவாக’ என எனது மாமனாரைப்பற்றி இப்பவும் விசாரிக்கிறார்கள். கொப்புடைய அம்மன் கோவில் சமீபம் மேனா மேனா வீதியில் கடை வைத்திருந்த மாமனாருக்கு உள்ளூரில் நல்ல மரியாதை. MM streetஐ என்ன அழகாக மேனா மேனா வீதி என்கிறார்கள் பாருங்கள்!
வந்து மூன்று, நாலு நாட்களில் சின்னச்சின்னதாக நிறைய வேலைகள் சட்டென முடிந்தன. வெயில் அதிகமென்றாலும் சாலையோரம் நிறைய மரங்கள். ப.சி மற்றும் கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற அலுவலகம் எதிரே பார்க்கிங் கிடைக்க பக்கத்தில் ஸ்டேட் பாங்கிலும் சட்டென வேலை முடிந்தது. காரைக்குடி வந்தால் கம்பு, தினை மாவு, பனங்கல்கண்டு, செக்கெண்ணெய், சீரக சம்பா மற்றும் இதர மளிகை ஜாமான்கள் காரை நிரப்பி விடும்.
எப்போதும் காரைக்குடி நகர சிவன் கோவில் தவறாமல் விஜயம் செய்து விடுவேன். அந்தக்காலத்தில் பாண்டிய மன்னர்கள் கட்டிய கோவிலை நகரத்தார்கள் எனப்படும் செட்டியார் சமூகத்தார் மேம்பாடு செய்து வருகிறார்கள். அழகிய சுந்தரேசுவரர் மூலவராக அருள்பாலிக்க, பக்கத்து சன்னதியில் மீனாட்சி அம்மன் வலது கையால் அபய ஹஸ்தத்துடன் நிற்கிறார்.
நேற்று தான் நன்றாக கவனித்தேன், எத்தனை தெய்வங்கள் இக்கோவிலில்! எல்லா சன்னதிகளின் மேற்புறம் தேவாரப்பாடல்கள்.
‘நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திருக்கரக் கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே’
என்ற பாடல் சோமஸ்கந்தர் சன்னதியின் மேல் என்னைக கவர்ந்தது.
கோவிலினுள்ளே நுழையும்போது இடது வலது புறம் சூரிய சந்திரர்கள். பிரகாரத்தில் மூலவரை தரிசிக்கும் முன் இடதுபக்கம் மாதப்பிள்ளையார். இந்தப்பக்கம் பைரவர் மற்றும் திரிபுரசுந்தரி சன்னதி. கோவிலை சுற்றி வரும்போது நர்த்தன கணபதி, கன்னிமூல கணபதி, 63 நாயண்மார்கள், சரபேசர், காசி விசுவநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானை சகிதம் முருகர், சோமஸ்கந்தர், அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர், தெட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, லட்சுமி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர், நவகிரகம் என எல்லா கடவுள்களையும் தரிசித்த பின் கோவில் பிரகாரத்தில் ஐந்து நிமிடம் அமர்ந்து கண்களை மூடி நாம் வேண்ட.. ஆஹா! என்னவொரு நிம்மதி!
மாமியாருக்கு கண்புரை அறுவை சிகிச்சை என்பதால் மனைவி Usharani ஒரு வாரம் இங்கே தங்கியிருக்க வேண்டி இந்த பயணம். மாமியாரை பார்த்துக்கொள்ளும் மணப்பாறை பெண்மணி கொஞ்சம் உப்பு, காரம் குறைவாக சமைக்க, உஷா அவரிடம் ‘பரவால்ல, நாங்க ஓரளவு காரம் சேத்துப்போம்’ என்றதும் தான் தாமதம்.. செம்ம கிராமத்து சமையலாக பாசிப்பயறு காரக்கொழம்பு, தேங்காப்பால் குருமா, டிபன் சாம்பார் (இட்லி தோசைக்கு), பாசிப்பருப்பு+ உ.கிழங்கு மசால் (பூரிக்கு) தண்டுக்கீரை, கேரட் கோசுப்பொரியல் என அம்மணி கலக்குகிறார். சாப்பாட்டைப்பற்றி எழுதாமல் இருப்பமா!
No comments:
Post a Comment