காரைக்குடியில் மாமியார் வீட்டில் டேரா! கொளுத்தும் வெயில் வெளியே. வீட்டிலேயே எவ்வளவு நேரம் தான் அடைந்து கிடப்பது!
‘வாங்க ஜனப்ரியா மளிகை போகலாம்!’ என மனைவி உஷா Usharani Sridhar என்னை இழுத்துக்கொண்டு போனார். காரைக்குடி வரும்போதெல்லாம் தன் அம்மாவிற்காக மருந்து, மளிகை சாமான்களை வாங்கிப்போட்டு விடுவார். டிரைவர் வேலை மட்டுமேயென்றாலும் நான் எனக்குப்பிடித்த ஜில்லெட் மாக்-3 ரேசர் பிளேடு, காப்பித்தூள் என எடுத்து போட்டுவிடுவேன். தரமான மளிகை சாமான்கள் மட்டுமில்லாமல் கடுக்காய் பொடி, திரிபலாதி பொடி போன்ற தமிழ் மருந்துகள் கூட கிடைக்கிறது இந்த சூப்பர் மார்க்கெட்டில்.
சரக்குகளை வந்திறங்கிய கையோடு சிஸ்டத்தில் என்ட்ரி செய்கிறாள் ஒரு பெண். கண்ட்ரோலுக்கு ஒரு நோட்டுப்புத்தகத்திலும் குறித்து வைக்கிறாள். சாதனங்கள் இருப்பு குறைய குறைய ஸ்டாக்கை ரிப்ளெனிஷ் செய்கிறார் ஒரு பாய். பாய்ன்ட் ஆஃப் சேல்ஸ் (POS) கௌண்ட்டர்கள் நாம் வாங்கிய சாதனங்களை துரிதமாக ஸ்கேன் செய்து செக்அவுட் செய்கிறார்கள். கடைசி நேரத்தில் இது வேண்டாமே என மக்கள் கவுண்ட்டரில் ஒதுக்கி விடும் சாமான்களை அள்ளி இன்னொரு பெண் அந்தந்த ஷெல்ஃப்களில் திரும்ப வைக்கிறார்.
பெர்பெச்சுவல் இன்வென்ட்டரி சிஸ்டம் இங்கே அபாரம். வாசலில் செக்யூரிட்டி நம் இன்வாய்சை வாங்கி ரேண்டமாக செக் செய்து அனுப்புகிறார். ஷாப் லிஃப்ட்டிங் எனப்படும் பில்ஃபெரேஜுக்கே (திருட்டு) இடமில்லை. பஹ்ரைன் ட்ராஃப்கோ குழுமத்தின் அங்கமாக ஒரு சூப்பர் மார்கெட் சங்கிலி செயல்படுகிறது. அதற்குத் தேவையான நிறைய ஐடியாக்கள் காரைக்குடியில் இன்று கிடைத்தது.
கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் உஷா அடுத்து ஒரு காய்கறிக்கடை போய் காய்கறிகள் வாங்கி டிக்கியில் போட்டார். அங்கே ஹாட்சன் மோர் ஜீரா கலந்து செம்ம ருசி.
மாமியாரை பார்த்துக்கொள்ளும் கேர் டேக்கர் பெண் சமையலும் செய்கிறார். அருமையான மோர் குழம்பு, காரம் குறைவாக வாழைக்காய் வறுவல், கேரட்+கோசு பொறியல், ரசம் மற்றும் ஆரோக்யா தயிர் என திவ்யமான மதிய உணவு முடிந்து வழக்கம்போல பெட்ரூமுக்குள் புகுந்து கொண்டேன்.
மாமியாருக்கு டீவி ஆனில் இருக்க வேண்டும். அம்மா, பெண் மற்றும் கேர்டேக்கர் பெண் மூவரும் பேசிக்கொண்டிருக்க நமக்கு கண்ணை சொழட்டியது. மூன்று மாதத்திற்கொரு முறையாவது இங்கே வரும் எனக்குத்தான் பொழுது போகாது. இந்த பதிவே அதனால் தாங்க.
மதியம் நாலு மணிக்கு எழுந்து ஹாலுக்கு வந்தேன். டீவியில் ஏதோ படம். மாடு ஒன்றுக்கு(ம்) பிரமிளா முத்தம் கொடுத்து கொஞ்சிக்கொண்டிருந்தார். அட இது கோமாதா என் குலமாதா ஆச்சே! 72 அல்லது 73இல் திருச்சி பேலஸ் டாக்கீஸில் பார்த்த படம். ‘மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகளானேன்’ என சங்கர் கணேஷ் இசையில் பாடல். ‘விருந்துண்ண வந்தேன் நான் விருந்தாகிப்போனேன்’ என கண்ணதாசன் போதையூட்டுவார். கிளைமாக்ஸ் சீனில் ஶ்ரீகாந்த் தேங்காய் ஶ்ரீனிவாசனுடன் ஜீப்பில் தப்பி ஓட, மாடு அவர்களை விரட்டும். அவர்களை குறுக்கு வழியிலெல்லாம் ஓடிப் பிடிக்க முடியாமல் மா.. மா.. என அந்த மாடு கத்தி ஓட, உடனே அந்தப்பக்கம் மேய்ந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான மாடுகள் ‘நம்ம ஃப்ரெண்டு கூப்புடறான்.. வாங்க.. வாங்க!’ என கூட்டமாக ஏதோ ஒரு திசையில் ஓட காளிமார்க் கலர் மற்றும் கடலை மிட்டாய் சாப்பிட்டவாறே சின்ன பசங்களாக நாங்கள் பார்த்த படம். நாலு கேமராக்களில் தனியாக மாடுகளை படம் எடுத்து ஒன்று சேர்த்து திரை முழுக்க மாடுகள். இன்றைக்கும் அதே சுவாரசியத்துடன் இருந்த படத்தை, மனைவிடமிருந்து ரிமோட்டை பிடுங்கி நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஶ்ரீகாந்த் தரையில் விழுந்து கிடக்க, அவரைக்கொல்ல மாடு ஒடி வரும்போது ‘லச்சுமி! என் புருசனை கொண்ணுடாதே!’ என பிரமிளா இந்தப்பக்கமிருந்து ஓடி வருவார். அப்படியும் மாடு அவரை நெருங்கும் முன், ‘என் புருசனை கொல்றதுக்கு முன்ன என்னய கொண்ணுடு!’ என்றபடிவே மல்லாந்து கிடக்கும் ஶ்ரீகாந்த் மேலேயே குறுக்காக தாட்டியான பிரமிளா ப்ளஸ்(+) வடிவத்தில் பச்சக்கென அவர் மேல் குப்புற விழுந்து கிடக்க, மாடு இன்னும் ஓடி வந்துகொண்டிருக்கும். ‘அவசரமில்ல.. மெதுவாகவே ஓடி வரட்டும்!’ என என்னுடன் சேர்ந்து ஶ்ரீகாந்த்தும் வேண்டிக்கொண்டிருப்பார் போலும். அந்த படத்திற்கு சம்பளமே வேணாமெனக் கூட சொல்லிருப்பார்
. படம் நல்லபடியாக முடிந்து மற்ற மாடுகள் ‘வறேன் ப்ரோ!’ என கிளம்ப, பிரமிளாவும் எழுத்துகொள்ள, தேவரின் பாலதண்டாயுதபாணி ஃபிலிம்ஸ் என முருகன் படத்தைக் காட்டி படத்தை முடிப்பார்கள். வெகு நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி பார்த்த திருப்தி.

மாலை காரைக்குடி மல்லீஸ் கிச்சனில் ஆப்பம்+தே.பால் என டின்னருடன் இன்றைய தினம் இனிதே முடிந்தது.
No comments:
Post a Comment