Tuesday, July 17, 2018

திருச்சி கதைகள்-5 (கடைசி பாகம்)


காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் சாலை வரகனேரி செல்லும் வழியில் அண்ணா மராட்டா புரோட்டா கடையை அடுத்த கடைகளில் ஒன்று சாஸ்தா உணவகம். மற்ற கடைகளின் டன்..டன்..டன்..கொத்து புரோட்டா, முட்டை புரோட்டா சத்தங்களுக்கு நடுவே இந்த சைவ உணவகத்தில் இட்லி, தோசை, புரோட்டா குருமா, இடியாப்பம், ஆப்பம் சாப்பிட கூட்டம் அள்ளும். சென்ட்ரல் டாக்கிஸில் மேல்நாட்டு மருமகள் செக்கன்டு ஷோ முடிந்து இரவு ரெண்டு மணி வரை எப்பவுமே ஜேஜேன்னு கூட்டம்.
கடை உரிமையாளர் பவித்ரன். மலையாளி. நெற்றியில் எப்பவும் சந்தனம், முகம் முழுக்க தாடி, வெள்ள சட்டை வேட்டி தான். இரவு இரண்டு மணிக்கு கடையை பாலனிடம் விட்டுவிட்டு சைக்கிள் மிதித்து உறையூர் பாண்டமங்கலத்தில் வீடு வந்து சேரும்போது காலை மணி மூன்றாகிவிடும். மதியம் பன்னிரண்டு வரை முன் ரூமில் பெஞ்சு மேல் தலகானியில்லாமல் தூக்கம். பின் மாலை ஏழு மணிக்கு மேல் குளித்துவிட்டு கடைக்கு போவார். பாலன் மற்றும் ஐந்து மலையாளி பையன்களை வைத்து நடத்தும் வியாபாரம்.
பல வருடங்களுக்கு முன் கேரளாவை விட்டு மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் திருச்சி வந்து நைட்டுக்கடை போட்டது நல்ல நேரம். பணம் தாராளமாக புழங்கியது. பீடி சிகரெட் தண்ணி கிடையாது. அடுத்து மூன்று குழந்தைகள். உறையூரிலேயே 90 ரூபாய் மாத வாடகை வீட்டை முப்பதாயிரத்திற்கு விலைக்கு வாங்கி, பின்பக்கம் பத்தடிக்கு இடத்தில் கொட்டாய் போட்டு கறவை பசுக்கள்.
மார்கழி மாதம் முழுவதும் அவர்கள் வீட்டில் ஐயப்ப பூஜை. ‘என்ன மணக்குது.. எங்கே மணக்குது’, ‘சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்’ போன்ற பாடல்களை அவர்கள் மனமுருக பாடும் அழகே தனி.
மனைவி அனகா ஈரத்தலை, நெற்றியில் சந்தனத்துடன் சுகுமாரி மாதிரி இருப்பாள். செலவுக்கு எப்போது பணம் கேட்டாலும் கணவனின் ‘என்டே சர்ட்டில் நின்னும் எடுத்தோ’தான். கடை வருமானத்திலிருந்து வீட்டு செலவுக்கு அவள் எடுத்துக்கொள்ளும் பணம் மற்றும் பால் வியாபார பணத்தை அக்கம்பக்கத்தில் நூறு இருநூறு என வட்டிக்கு விட்டு இரண்டு சுற்று பெருத்திருந்தாள்.
பெரிய பெண்ணை பாலக்கரையில் லேத்து பட்டரை நடத்தும் மலப்புரம் விநோதனுக்கு கட்டிக்கொடுத்தார். இரண்டு பையன்கள் தென்னூர் இந்தி பிரச்சார சபா இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் படித்து காலேஜ் மேற்படிப்பு என போய் விட்டார்கள்.
கடைக்குட்டி லெலிதா கல்யாணத்துக்கு காத்திருந்தாள். நெடுநெடுவென உயரம். வெளிச்செண்ணெயில் வளர்ந்த நீண்ட கேசம். அழகு, எழில், நளினம், வனப்பு, வாளிப்பு என எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தமாக இருந்தாள். ஆனால் சரியான பையன் கிடைக்காதது பவித்ரனை கவலையில் ஆழ்த்தியது. மரக்கடை வித்யாதரன் பையனை லெலிதாவுக்கு பார்த்தார்கள். பையனிடம் எப்பவும் சாராய வாடை மற்றும் இருமும்போது தகர உண்டியல் சத்தம் (பீடி இருமல்). பேலஸ் தியேட்டர் காண்டீன் நடத்தும் செருதுருத்தி கோவிந்தன் பையன் ரெவி அழகாய் இருந்தாலும் கடன் அதிகம் என்பதால் பவித்ரனுக்கு இஷ்டமில்லை.
பவித்ரனுக்கு கடை தவிர வேறு எதுவும் தெரியாது. பையன்கள் யாரும் அவருக்குப்பின் கடையை எடுத்து நடத்தக்கூடியவர்கள் அல்ல. அவரை விட்டால் பரோட்டா மாஸ்டர் பாலனுக்குத்தான் கடை வரவு செலவு, சாதனங்கள் வாங்குவது போன்றவை தெரியும். பாலன் ஹைஸ்கூல் வரை படித்தவன். பல வருடங்கள் பவித்ரனுடனே இருந்து விட்டான். கோதுமை சிவப்பு நிறத்தில் சுருட்டை முடி, பட்டை மீசை, எடுப்பான பற்கள். மேலுதட்டையும் சேர்த்து மேலே தூக்கின மாதிரி மூக்கு. சுருக்கமாக..இளம் மம்மூட்டி சாயல்.
‘சரி ஶ்ரீதர். புரிஞ்சிடுச்சு! பாலன் நல்லவன். லெலிதாவுக்கும் கல்யாணமாகவில்லை. பவித்ரனுக்கு அப்புறம் கடையை பாலன் தான் பார்த்துக்கொள்கிறான். அதனால் லெலிதா- பாலன் காதல்! கரெக்ட்டா?’ என கேட்பவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்! தொடர்ந்து படிக்க!.
பவித்ரன் ஒரு வழியாக திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் ரோட்டில் டீக்கடை நடத்தும் மது என்ற பையனுக்கு லெலிதாவை பார்த்து கல்யாணத்தை முடித்தார்.
அடுத்த ஒரே வருடத்தில் அவருக்கு சர்க்கரை வியாதி, கால் வீக்கம் என கடை பக்கம் அதிகம் போக முடியாமல் போனது. மனைவி அனகா குடும்பத்தை குறையில்லாமல் நடத்த, பையன்களும் வேலைக்கு போக ஆரம்பித்தார்கள்.
கடையை பாலனுக்கே கொடுத்து விட முடிவு செய்து அது விஷயமாக அவனிடம் பவித்ரன் பேச, பாலனுக்கு இஷ்டமில்லை. அரசுக்கு சொந்தமான சாலையில் கடை இருந்ததால் பகடி ஐம்பதினாயிரம் கொடுத்து கடையை வாங்க நிறைய பேர் முன் வந்தும், பாலனுக்கே மிகக்குறைந்த விலையில் கடையை கொடுப்பதாக முடிவு செய்தார்.
ஒரு நாள் சென்னையிலிருந்து கைக்குழந்தையுடன் வந்திறங்கினாள் லெலிதா, இரண்டே வருடத்தில் கணவனால் விரட்டப்பட்டு... ‘என்டே பர்த்தாவு என்னெ கை விட்டு.. அது கொண்டானு ஞான் வீடு விட்டு எறங்ஙியது..’
பவித்ரன் நிலைகுலைந்து போனார். பெற்ற பாசம். ‘நீ சங்கடப்படண்டா மோளே! ஞான் நின்னே நோக்கிக்கொள்ளாம்’ என அவளை தேற்றினாலும், உடல் நிலை சரியில்லாமல், மகள் திரும்பி வந்தது அவரை மேலும் வாட்ட, அடுத்த சில மாதங்களில் தூக்கத்திலேயே போய்ச்சேர்ந்தார்.
அனகா மனம் தளறாமல் லெலிதாவையும் குழந்தையையும் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தினாள். உறவினர்கள் பாலனுக்கே லைலிதாவை கட்டி வைத்துவிடலாமேயென கேட்க ஆரம்பிக்க, லெலிதா தீவிரமாக மறுத்தாள். பாலன் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழலாமே என நினைத்தாள். அனகா என்ன நினைத்தாள்? பாலன் என்ன சொல்கிறான்? முடிவு தான் என்ன?
முடிவு-1
நீண்ட தயக்கத்திற்குப்பிறகு லெலிதா பாலனை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க, பவித்ரன் மீதுள்ள மரியாதையால் லெலிதாவையும் குழந்தையையும் பாலன் ஏற்றுக்கொள்கிறான். குடும்பத்தில் சந்தோஷம் நிலவுகிறது.
முடிவு-2
தன்னால் பாலன் எதற்காக வாழ்க்கையை தியாகம் செய்யவேண்டும்! நான் குழந்தையுடன் தனியாகவே இருந்து விடுகிறேனே என லெலிதா முடிவெடுக்க, பாலன் திருமணத்தை நல்ல முறையில் அனகா நடத்தினாள். பின் லெலிதா மற்றும் கைக்குழத்தையுடன் பவித்ரனின் நினைவுகளுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு பயணம் செய்யத்தொடங்கினாள்.
முடிவு-3
இந்த முடிவு தான் நான் எழுத நினைத்தது. என்னவாக இருக்கும்! நீங்களும் சொல்லலாமே!
சட்டென வரைந்த ஓவியத்துடன்
(சீதாபதி ஶ்ரீதர்)

திருச்சி கதைகள்-4


வடு என்கிற வடுகநாதன் தென்னூர் பருப்புக்கார தெருவில் வசிக்கும் செட்டியார் வீட்டுப்பையன். அப்பா ராமநாதன் புத்தூர் பெரியாஸ்பத்திரியில் கம்பவுண்டர்.
பையன் நல்ல சேப்பு கலர். நேஷனல் ஈவ்னிங் காலேஜில் BA கார்ப்பரேட். சுமாரான உயரம். நெஞ்சாங்கூடு கட்டி உரோமக்காடு. பேப்பரை சுருட்டியபடி காலை பதினோறு மணிக்கு ஜெனரல் பஜார் தெரு மொகனையில் டைப்ரைட்டிங் ஹையர் படித்தான். எதிரே அழகான பெண் வந்தாலும் ஏறெடுத்து பார்க்காத சுபாவம்.
டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் இன்ஸ்ட்ரக்டர் பிலோமினா நல்ல கருப்பான நிறம். கருங்கல் சிலை போலிருப்பாள். லேசாக விடைத்த மூக்கு. மூக்கின் மேல் வைரம் போல மின்னும் வியர்வைத்துளிகள். திருத்தமான புருவங்களுக்கிடையே கொஞ்சம் சொறுகின மாதிரி அழகிய கண்களில் எப்போதும் காந்தம். பேசும்போது நம் கண்களை அவள் வசீகரமாக ஊடுருவி பார்க்க, எந்த ஆணும் பயத்துடன் சட்டென பார்வையை அகற்றுவான். இரு காதுகளின் பின் பக்கம் எடுத்து விடப்பட்டிருக்கும் நீண்ட முடிக்கற்றை அவள் அழகை இன்னும் பத்து பர்ஸன்ட் கூட்டியது. மினி ஜாங்கிரி போன்ற ஈர அதரங்கள். நொடிக்கொரு தரம் தன்னையே குனிந்து பார்த்து, உடையை சரிப்படுத்தி, நம்மையும் படுத்தியெடுத்து ‘இப்ப நாம என்ன செஞ்சிட்டோம்!’ என நம்மை யோசிக்க வைப்பாள். நகங்களை அழகுபடுத்தி பிங்க் கலர் நெயில் பாலிஷ் இட்டு அவள் நளினமாக டைப் செய்யும்போது நமக்கு படு அவஸ்தை. ‘மஞ்சள் வானம்.. தென்றல் காற்றில்.. உனக்காகவே நான் வாழ்கிறேன்’ என நம்மை கனவு சீனுக்கு கொண்டு போய்... வேணாம்.. படுத்தாதே பிலோமினா!.
கதையை எழுதும் நமக்குத்தான் இவ்வளவு அவஸ்தை. தினமும் அங்கே டைப்பிங் செய்யும் வடு ஏதோ கோவில் பிரகாரம் சுற்றுவதுபோல இயந்திரமாய் வலம் வருவான். ‘அந்த கார்பன் சீட்டை எடுங்க’ என யாராவது ஒரு பெண் கேட்டால் நாம் ஜென்ம சாபல்யம் அடைந்த மாதிரி துள்ளிக்குதித்து பேப்பரை எடுத்துக்கொடுத்து ஜெமினி மாதிரி அவளை பார்ப்போம். வடு அப்படியல்ல. முகத்தை கூட பார்க்க மாட்டான்.
வடுவின் இந்த குணமே பல பெண்களை அவன் பக்கம் ஈர்க்க, அவன் வீசாத காதல் வலையில் பிலோமினா தொபுக்கடீரென விழுந்தாள்.
அவனுக்கு மட்டும் சில சலுகைகள கொடுப்பதை மற்ற பெண் இன்ஸ்ட்ரக்டர்கள் கவனிக்காமலில்லை. வடுவிற்கு சாமர்த்தியம் போறாது. அவனவன் பிலோமினாவிற்காக உயிரையே விடத்தயாராக இருக்க, இவன் ஏன் இப்படி ஜடம் மாதிரி?
மற்ற பையன்கள் சங்கிலியாண்டபுரம் போய் ரெண்டு ரூபாய் கொடுத்து ஸ்டெப் கட்டிங், முடியை பின் பக்கமாக காலர் வரை புரள விட்டு அப்படியே ரோலிங் கோம்பில் சுருட்டி, சமஸ்பிரான் தெரு ஆல்ஃபா டெய்லரிடம் பதினெட்டு இஞ்ச் பாட்டம் மற்றும் தேயாமலிருக்க ஜிப் வைத்து, நெஞ்சு வரை பேண்ட், கட்டையில் செய்த செறுப்பு, படு குட்டையான சட்டை, முழங்கை மூடிய அரைக்கை, ஸ்வஸ்திக் பக்கிள் வைத்த பட்டை பெல்ட்.. என இவ்வளவு முஸ்தீபுகளுக்குப்பின் கடைசியில் அந்த பெண்கள் ‘தேங்க்ஸ்ண்ணா!’ என வெறுப்பேற்றுவார்கள். ஆனால் சாதாரண பாட்டா செறுப்பில் வரும் வடுவிற்கு மட்டும் அப்படி என்ன மச்சம், பிலோமினா அவனைச்சுற்றி வர!
‘வடு! இங்க வாயேன்! இங்கிலீஷ் வார்த்தைகள் நீ ரொம்ப தெரிஞ்சுக்கனும். நல்லது தானே! இந்தா வச்சுக்கோ!’ என ஒருநாள் அவள் லிஃப்கோ டிக்‌ஷ்னரி கொடுக்கும்போது காதலுடன் அவனை ஓரக்கண்ணால் பார்த்து அனுப்பியதை அவன் கவனித்த மாதிரி தெரியவில்லை.
முன்கூடத்தில் அப்பா அம்மா இருக்க, வடு ரூமுக்குள்ளே டிக்‌ஷ்னரியை சுவாரசியமில்லாமல் புரட்டினான். நடுவே சில பக்கங்கள் மடிக்கப்பட்டு இருக்க, ஏதோ நினைவாக அலட்சியமாக அந்த பக்கங்களை அவன் திரும்ப பார்க்க E, I, L,O,U,V எழுத்துக்கள் ஆரம்பமாகும் பக்கங்கள் முறையாக மடிக்கப்பட்டு இருந்தன. அதென்ன E I L O U V? சட்டென வடு பிரகாசமானான். அந்த எழுத்துக்களை மாற்றியமைத்தால் ‘I LOVE U’.. சட்டென தெப்பமாக நனைந்திருந்தான் வடு. தூரத்தில் எங்கோ 100 யானைகள் பிளிற, செண்டை மேளம் முழங்க, அணையில் வெள்ளம் புரண்டு ஓட, பாரதிராஜா பட கடைசி சீன் உடுக்கை சத்தம் கேட்க.. வடுவிற்கு முதல் முறை காதல்..
படாரென எழுந்து ஹாலுக்கு வந்தால் நிசமாகவே ஏதோ பாரதிராஜா படத்தின் கடைசி காட்சி.. திரையில் ‘அ ஃபிலிம் பை பாரதிராஜா’. ‘என்னாச்சுப்பா! ஏன் வியர்த்திருக்கே?’ என அவனது அப்பா அம்மா கேட்க, வழிந்தபடி ஏதோ சொல்லி சமாளித்தான். உடலெங்கும் இனம்புரியாத ஏதோ ஒரு சிலிர்ப்பு.
‘தம்பி! டிக்கெட் எடுத்தீங்களா இல்லியா? சோஃபீஸ் கார்னர் வந்துடுச்சு!’ என கண்டக்டர் சத்தம்போட்டதும் தான் சட்டென சகஜ நிலைக்கு வருவான் வடு. டவுன் பஸ்ஸில் போகும்போதும் ‘வடு மீது தலை வைத்து.. விடியும் வரை தூக்கமோ!’ என பிலோமினாவுடன் கனவு சீனில் இப்ராஹிம் பூங்காவில் பூக்கள் மத்தியில் கிடப்பான். பாதி தூக்கத்தில் திடுக்கென எழுந்து உட்கார்ந்து, மீதி தூக்கத்தை இழப்பான். புத்தகத்துடன் உட்கார்ந்தாலும் நடுவே தானாகவே சிரிப்பான். யாரும் பார்க்கவில்லையே என சுற்றுமுற்றும் பார்த்துக்கொள்வான். அரியர்ஸை மட்டும் கவனமாக குறைக்காமல் பார்த்துக்கொண்டான்.
வடு-பிலோமினா காதல் விஷயம் இன்ஸ்டிட்யூட்டில் பரவ, அடுத்த சில நாட்களில் ‘கொஞ்சம் டவுட் இருக்கு. லிஃப்கோ டிக்‌ஷ்னரி இருக்கா?’ என பையன்கள் விஜாரிக்க ஆரம்பித்தார்கள். எல்லா பையன்கள் காலிலும் சாதாரண பாட்டா செறுப்பு.
இங்கே செட்டியார் அப்பா பூமிக்கும் ஆகாசத்துக்குமாக குதித்துக்கொண்டிருந்தார். ‘டேய்! நாம செட்டியாருங்க.. அவங்க கிரிஸ்டியன். ஒத்து வராது. தள்ளி வச்சுருவாங்க’
‘யாரு தள்ளி வப்பாங்க?’ தெகிரியமா கேட்டான் வடு.
‘நம்ம சமூகம் தான். எந்த கல்யாணம், சாவுக்கும் இனி போக முடியாது.’
‘ஆமா.. பெரிய சமூகம். இப்பவே தள்ளித்தானே இருக்கோம் திருச்சியில. நீ எந்த கல்யாணத்துக்கும் காரைக்குடி பக்கம் போறதே இல்லியே! அப்பிடியே போனாலும் ஒரு ரூபா தானே மொய் வெக்கிறே உன் சமூகத்துக்கு!’ வடு சமயம் பார்த்து ராவினான்.
‘ நம்ம சமூகத்துல ஒரு ரூபா மொய் வெக்கிறது தானே வழக்கம்! அதெல்லாம் இருக்கட்டும். இந்த கல்யாணம் நடக்காது’ தீர்க்கமாக சொன்னார் செட்டியார்.
இதற்குள் பிலோமினாவின் அப்பா ஒரு பங்கு தந்தையுடன் செட்டியாரை பார்க்க வந்தார். அவர்களுக்கு இந்த திருமணத்தில் ஆட்சேபனை இல்லையாம்.
‘வணக்கம் சார். நான் பெஞ்சமின். என் பொண்ணு பிலோமினா. நான் கோர்ட்டுல அமினா’
‘க்கும்.. கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. அமினா பொண்ணு பிலோமினா.. பொருத்தமாத்தான் பேர் வச்சிருக்கீங்க. கல்யாணம் மட்டும் சரிப்பட்டு வராதுய்யா!’ செட்டியார் வெடித்தார்.
‘ இல்லீங்க! சர்ச்சுல வச்சு கல்யாணம் பண்ணீறலாம்’. இதோ பங்கு தந்தையே சொல்றாரு..’
‘யோவ்! அவரு பங்கு தந்தை.. பையனுக்கா தந்தை? அவர் பங்குக்கு எதையாச்சும் சொன்னா நீயும் வந்துடறதா? போய்யா அப்பால!’
வாக்குவாதங்களுக்கு நடுவே ஒரு நாள் வடு, பிலோமினா திருமணம் பீமநகர் ரெஜிஸ்த்ரார் ஆபிசில் நடந்து முடிந்தது. வடுவை சமூகம் தள்ளி வைத்தது.
கலப்புத்திருமணத்தால் பிலோமினாவின் தங்கை கல்யாணம் தள்ளிப்போனது. ‘இன்னும் எத்தினி நாள் பொறுமையா இருக்கச்சொல்லுவீங்க?’ என பங்கு தந்தையிடம் எரிந்து விழுந்தார் அமினா.
ஒருநாள் செட்டியாருக்கு பெராலிடிக் அட்டாக்.. அப்பாவை பார்க்க வடு ஓடினான். சமூகம் உள்ளே விட மறுத்தது. ‘அடேய்! அவரு எங்கப்பாடா! சமூகமா வந்து தைலம் தேய்க்கும்?’
உங்களாலத்தான் என் தங்கை கல்யாணம் நடக்கல என பிலோமினாவும், உன்னாலத்தான் அப்பாவுக்கு உடம்புக்கு வந்தது என வடுவும், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு, அவர்களுக்குள் தினமும் நடக்கும் சண்டையை சமூகமும் பங்கும் வேடிக்கை பார்த்தன.
ஒருநாள் வடு ஆபிசிலிருந்து வீடு வந்தபோது பிலோமினா எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் மேசை மீது லிஃப்கோ டிக்‌ஷ்னரி. எடுத்துப்பார்த்தான்.
C D E I O R V எழுத்து கொண்ட பக்கங்கள் மடிக்கப்பட்டு இருந்தன.
சட்டென வரைந்த ஓவியத்துடன்,
(சீதாபதி ஶ்ரீதர்)

திருச்சி கதைகள்-3


மன்னார்புரம் (அரசு குடியிருப்பு) செங்குளம் காலனி. பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர். ஒரு ஃப்ளாட்டில் மரக்கடை சையத் முர்துசா பள்ளியின் தமிழாசிரியர் குடியிருப்பாரென்றால் பக்கத்து ஃப்ளாட்டில் தாசில்தார் அலுவலக குமாஸ்தா. ‘DA அரியர்ஸ் போட்ருவானா இந்த தடவை?’ போன்ற பேச்சுக்கள் அங்கங்கே பரவலாக கேட்கும்.
ஹாலில் சோஃபா கம்பெட், டயனோரா டிவி, வாசலில் மொபெட் (சுவேகா அல்லது லூனா) என நடுத்தர குடும்பத்தினருக்கான அடையாளங்கள். கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டருக்கும் பையில் பால் பாக்கெட் காலை விழுந்தால் மேல் மாடிக்காரர் மேலே இழுத்துக்கொள்வார்.
அநேகமாக எல்லோரது வீட்டிலும் பொன்னருவியோ, KS ராஜாவின் இலங்கை திரை விருந்தோ (‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா’) பாடிக்கொண்டிருந்தது. சோனா மீனா, மாரிஸ், சிப்பி தியேட்டர்கள் வந்த புதிது. எல்லாமே நல்ல நல்ல படங்கள். தீபா, ஶ்ரீபிரியா, சத்யகலா, ராதா, அம்பிகா,மாதவி, சசிகலா போன்ற இளம் நடிகைகள் படங்கள் சக்கை போடு போட்டு இளையராஜா கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார்.
முகப்பருக்களுடன் கதாநாயகனாக வரும் மோகனை விட கதாநாயகி தான் முக்கியம் என நினைக்கும் பருவம் அது! தாசேட்டனின் ‘ராமனின் மோகனம்’, பாலுவின் ‘தேவதையிளம்தேவி உன்னைச்சுற்றும் ஆவி’ என முனுமுனுத்தபடி இளைஞர்கள் முக்கா கட்டு லுங்கியுடன் காலனிக்குள் திரிந்தனர்.
நெருக்கமான இரண்டடுக்கு கட்டிடங்களில் தலா ஆறு ஃப்ளாட்கள். அநேகமாக எல்லா வீடுகளிலும் கல்லூரி பெண்கள். நம் வீட்டு ஹாலில் இருந்து பார்த்தால் பின் ஃப்ளாட்டின் ஹாலோ பெட்ரூமோ தெரியும். ‘இது போதாதா வாலிப மாணவ மாணவியருக்கு’ என நினைப்பவர்கள் மன்னிக்க!
காதல் நமக்கு வந்தாலும் அந்த பக்கத்திலிருந்து வரனுமே! எப்படி வரும்? எப்போது எட்டிப்பார்த்தாலும் அந்தப்பக்கம் முண்டா பனியன் மற்றும் கையில் பேப்பருடனும் அவளது அப்பா தான் உட்கார்ந்திருப்பார். அதிலும் சிலர் வெங்காயம் நறுக்கிக்கொண்டு... மனைவிக்கு உதவியாம். அந்த பெண் ஈரத்தலையுடன் எப்போதாவது துணி உலர்த்த பால்கனி பக்கம் வரும்போது தான் கீழே தண்ணி லாரி வந்து தொலைக்கும். அப்பா கூட நாம் குடத்துடன் ஓடனும்.
எதிர் ஃப்ளாட் பெண் ஹோலி க்ராஸோ சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியோ. டவுன் பஸ்ஸில் நம் கூடத்தான் வருவாள் போவாள் . ஆனால் பேச மாட்டாள். மாலையில் அவங்கம்மாவுடன் நம் வீட்டுக்கு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு போக வருவாள். அத்தோடு சரி. பேச்செல்லாம் கிடையாது. போதா குறைக்கு ‘இந்த தடவையும் இவனுக்கு ரிசல்ட்டுல போயிடுச்சு. ஹும்! சிஏ பரிட்சை கஷ்டம்னு சொன்னாலும் மத்த வீட்டு பசங்க பாஸ் பண்றாங்களே!’ போன்ற அம்மாவின் அங்கலாய்ப்புக்களுக்கு நடுவே காதல் எங்கிருந்து வரும்!. காதல் வர (நமக்கு) சான்சே இல்லாத இடமென்றால் அந்த காலனி தான்.
ஆனால் காதல் வந்ததே! யாருக்கு? எப்படி?
இரண்டாம் தளத்து வீட்டுப்பையன் நாயுடு. சுருட்டை முடி. முகத்தில் பரு. ஐடிஐ படிப்பு முடித்து திருவெறும்பூர் பகுதியில் எங்கோ வேலை. காக்கி பாண்ட் வெள்ளை சட்டை யூனிபார்ம், டிபன் டப்பா, டி-ஸ்கொயர் ஸ்கேல் சகிதம் காஜாமியான் ஸ்டாப்பில் இறங்கி ஈபி வழியாக காலனி உள்ளே தலை குனிந்தபடி வருவான். கூச்ச சுபாவம். அவன் அப்பா காய்கறி-வொயர் கூடையுடன் வருவது போவது தவிர வேறென்ன செய்கிறார் தெரியாது. ஆனால் சரியாக இரவு 2 மணிக்கு எங்கோ நாய் ஊளையிடுவதை தொடர்ந்து அவர் கொல்..கொல்லென இருமுவது காலனி முழுவதும் கேட்கும். பையனுக்கு ஒரே தங்கை. காலேஜ் போகும் நேரம் தவிர அவளை யாரும் பார்க்கவே முடியாது. ‘ஒரேய்!’ என அடிக்கடி கூப்பிடும் அம்மா தெலுங்கில் சாதாரணமாக பேசினாலே இரண்டரை கட்டை உச்ச ஸ்தாயி. சண்டையென வந்து விட்டால் குரல் தாரை தப்பட்டை தான்.
பையனுக்கு பக்கத்து ஃப்ளாட்டில் சைவ பிள்ளைமார்கள். அப்பா, அம்மா, குட்டி தம்பியுடன் நெடுநெடு உயர பெண். அவள் குண்டா, ஒல்லியா என நாம் யூகிக்க முடியாதபடி ஆண்கள் போடும் முழுக்கை சட்டை மற்றும் பாவாடை. தாவணி பிடிக்காதாம். ஹாலில் மேலும் கீழும் நடந்துகொண்டே பொருளாதாரம் படிப்பவள். பாங்க் எக்ஸாம் எழுதிக்கொண்டிருந்தாள்.
பையன் ஃப்ளாட்டுக்கு நேர் எதிரே பால்கனியில் இரண்டு கல்லூரி மாணவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை எதிரே வைத்து பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ‘டேய்! இதென்ன பொழுதன்னிக்கும் கண்ணாடில மூஞ்சை பாத்துக்கிட்டு!’ என அவர்கள் அம்மா கேட்டு விட்டு அந்தப்பக்கம் போய்விட பையன்கள் மறுபடியும் கண்ணாடியுடன்...
விஷயம் இது தான். கண்ணாடியில் பார்க்கும்போது அதில் அவர்களுக்கு பின்னால் தூரத்தில் காக்கி பாண்ட் பையன் தன் பெட்ரூம் ஜன்னல் அருகே நின்று கொண்டு ஏதோ சைகை காட்ட, அந்தப்பக்கம் ஆம்பளை சட்டைப்பெண் அவள் வீட்டு பெட்ரூமிலிருந்து பதிலுக்கு சைகை. காலனியில் சில இளைஞர்களுக்கு மட்டும் அந்த சைகைக்காதல் விளையாட்டு தெரியவர, விஷயம் வெளிவராமல் கப்சிப் தான்.
அடுத்த சில நாட்களில் மன்னார்புரம் EB ஆபிஸ் பின்புறம் மறைவாக கருவேல மர நிழலில் எப்போதும் அந்த ஜோடி பேசிக்கொண்டிருந்தது. அரசல் புரசலாக எல்லோருக்கும் தெரியவர, காலனியில் அந்த காதலுக்கு சப்போர்ட்.
திடீரென ஒருநாள் பையன் வீட்டு பால்கனியில் இருந்து லபோ லபோவென சத்தம். பையனும் பெண்ணும் திடீரென திருமணம் செய்துகொண்டு மாலையுடன் பெண் வீட்டில் தஞ்சமடைய, பையனின் நாயுடம்மா தன் பால்கனியிலிருந்து எதிரே பெண் வீட்டை பார்த்து வாயில் வந்தபடி திட்டிக்கொண்டிருக்க, காலனி பரபரப்பானது. வொயர் கூடை அப்பா கையில் புடலங்காயுடன் வழக்கம்போல மௌனம்.
அடுத்து சில நாட்களில் தினமும் மாமியார் வீட்டிலிருந்து பையன் பெண்ணுடன் ஆபிஸ் கிளம்பும்போது, நாயுடம்மா அதே நேரத்திற்கு பால்கனியிலிருந்து ‘அடியே சிறுக்கி! எம்பையனை முந்தானைக்குள்ள வச்சிக்கிட்டு.. நீயெல்லாம் பொம்பளையா?’ என கத்த, மற்ற ஃப்ளாட்காரர்கள், காஸ் அடுப்பில் பால் பொங்குவதையும் விட்டுவிட்டு , அதை வேடிக்கை பார்க்க அலாரம் வைத்துக்கொண்டார்கள்.
அம்மா கடைசி வரை பையனை வீட்டிற்குள் சேர்க்க மறுத்ததால், அவன் மாமியார் வீட்டோடு இருந்தான். 9 மணி பால்கனி சத்தங்கள் தொடர்ந்தன. மற்ற வீட்டிலும் அலாரம் அடித்துக்கொண்டு தான் இருந்தது.
ஒரு நாள் காலை 9 மணிக்கு பால்கனியில் சத்தத்தையே காணோம். எல்லோரும் தத்தம் வீடுகளிலிருந்து எட்டிப்பார்த்தபோது வீட்டுக்குள்ளே இருந்தும் நாயுடம்மா வெளியே வரவில்லை.
அவர் சத்தம்போடுவதை ஏன் நிறுத்தினார் என எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் ஒரு செட்டியாரம்மா வேறு ஒரு ஃப்ளாட் பால்கனியிலிருந்து நாயுடம்மா வீட்டை பார்த்து ‘அடியே சிறுக்கி!....’ என கத்திக்கொண்டிருந்தார்.
சட்டென வரைந்த ஓவியத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)

திருச்சி கதைகள்-2


(சகோதரியின் பெண்ணுடன் திருச்சியில் அரட்டை அடிக்கும்போது மற்றொரு குட்டி கதைக்கான கரு கிடைக்க, பெயர்கள், ஊர், வீதிகள் மாற்றப்பட்டு சில பாத்திரங்கள் சேர்க்கப்பட்டு..... கதையை படித்த அவள் சொன்னது: பாதிக்கு மேல இதெல்லாம் நான் சொல்லவேயில்லியே..மாமா!..)
இனி கதை..
தென்னூர் பட்டாபிராம்பிள்ளை தெரு பெருமாள் கோவில் எதிரே குறுகலான சௌராஷ்ட்ரா தெரு. பட்டுநூல் காரத்தெரு என்றால் எல்லோருக்கும் தெரியும். சங்கர் பட செட்டிங் போல நெருக்கமான வீட்டு வாசல்களில் வேட்டியுடன் சௌராஷ்ட்ர இளைஞர்கள் சடசடவென ‘ஊசிபட்டாசு’ போல சதா பேசிக்கொண்டிருப்பார்கள். அடிதடி தப்புத்தண்டா என எதிலும் சேராத அமெரிக்கையான மக்கள்.
புத்தூர் சின்ன மைதானத்தில் கால் பந்தாட்டம் ஆடிவிட்டு சௌராஷ்ட்ரா தெரு வழியாக சைக்கிள் இளைஞர்கள் எத்தனை தடவை தேடித்தேடி சுத்தி வந்தாலும் கண்ணில் படாத இளம் பெண்கள். இரத்த சோகை மாதிரி வெள்ளை வெளேர் சருமம் மற்றும் பூனை விழிகள் கொண்ட பெண்கள் அநேகம் பேர் அந்த தெருவில். அதில் ஒரு பெண் தான் இப்பதிவின் நாயகி ரேணுகா.
கொஞ்சம் பூசின மாதிரி தேகம். பெரிய வட்ட முகம். அழகிய கண்கள். கீழ் தாடை கொஞ்சம் முன்னுக்கு தள்ளி, சட்டென ஜெயசித்ரா மாதிரி இருப்பாள் ரேணுகா. தைலா முதலியில் அரை மீட்டர் அதிகமெடுத்து தைத்த பாவாடை தாவணியில் காலை 9 மணிக்கு உருமு தனலட்சுமி கல்லூரிக்கு அவள் கிளம்பினால் அந்த தெருவில் பல இளைஞர்களுக்கு அன்று தூக்கம் கெடும்.
டவுன் பஸ்ஸில் ஒரு ரூபாய் கொடுத்து 60 பைசா டிக்கெட் எடுக்கும்போது, 10 காசு இருக்கா என கண்டக்டர் கேட்டால் சட்டென மண்டையில் ஏறாமல் பேந்த பேந்த அவள் முழிப்பதே அழகு. அவசரப்படாமல் ஆற அமர ஐந்து வருடங்களில் அவள் பாட்டனி பட்டப்படிப்பு முடித்து சென்னையில் HCL நிறுவனத்தில் கார்டு பஞ்ச்சிங் வேலை. கம்ப்யூட்டர் வருவதற்கு முந்தைய காலம். வேலைக்குச்செல்லும் பெண்டிர் விடுதியில் ஜாகை. ஞாயிறன்று ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ பார்த்துவிட்டு அன்னபூர்னாவில் பரோட்டா விஜிடபிள் குருமா சாப்பிட்டு மேலும் ஓரிரண்டு கிலோ கூட்டியிருந்தாள்.
மீண்டும் திருச்சிக்கு வருவோம். சௌராஷ்ட்ரா தெரு கொஞ்சம் தாண்டி மூலைக்கொல்லை தெரு பகுதியில் ‘தட்டி போட்ட திருச்சி லோகநாதன் வீடு எங்கேங்க?’ போன்ற விசாரிப்புகளுக்கு அடுத்து அதிகம் கேட்கப்படுவது ‘ஆசாரி வீடு எங்கேங்க?’ தான்.
விசாலமான வீட்டுத்திண்ணையில் நகைபட்டறை. ஆறேழு இளைஞர்கள் அரிசி உமி கரியடுப்பு சகிதம் நகைகளை உருக்கி டன்டன் என சுத்தியலால் அடித்து கம்பியை நீட்டிக்கொண்டிருக்க (தங்க கம்பிங்க!) , பெரியவர் வேலாயுத ஆசாரி ஊதுகுழாயை நெருப்பில் ஊதி வளைவி செய்துகொண்டிருப்பார். அக்கம்பக்கத்தார் ‘திருகாணி, சங்கிலி அறுந்து போச்சுங்க’ என சின்னச்சின்ன வேலைகளுடன் அங்கே வருமுன் சங்கிலியின் குண்டுமணிகளை முன்கூட்டியே எண்ணிவைத்துக்கொண்டு கொடுப்பார்கள். அந்த வீட்டுப்பையன் சுப்பையா தான் இப்பதிவின் நாயகன்.
சுப்பையாவிற்கு அப்பாவின் பொற்கொல்லர் தொழில் இஷ்டமில்லை. தலைக்கு எண்ணெய் வைத்து படிய வாரி வெள்ளிக்கிழமை விரதம் சிவகுமார் மாதிரி டைட் பாண்ட்டில் இருப்பான். டோல்கேட் ராதாஸில் டிபன் பண்ணிக்கொண்டு, நடுவே பக்கத்தில் ஜமாலில் தலையை காண்பித்து பௌதிகம் படித்து, கல்லூரி ஆர்க்கெஸ்ட்ராவில் ட்ரிபிள் காங்கோ, டிரம்ஸ் வாசிப்பவன்.
அப்பாவின் நகை பட்டறை மற்றும் உடம்பிலிருந்த பூணுல் இரண்டையும் கடாசிவிட்டு சென்னையில் HCL நிறுவனத்தில் ரேணுகா வேலை செய்யும் அதே கார்டு பஞ்ச்சிங் பிரிவில் சூப்பர்வைசராக சேர்ந்து அவனும் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ பார்த்து தொலைத்தான்.
பாட்டனியும் பௌதிகமும் சேர்ந்து வேதியியல் ஆனது. கார்டு பஞ்ச்சிங் வேலை காலதாமதமானது. அன்னபூர்னா பரோட்டா குருமா அமோக விற்பனையானது. பருவமே.. புதிய பாடல் பாடியது. சௌராஷ்ட்ரமும் ஆசாரியும் சேர்ந்த கதை நாடார் (ஷிவ்) வரை போனது. வார்னிங் மெமோக்கள் பறந்தன. வேலை போகவில்லை. வார/மாத இறுதியில் இருவரும் சேர்ந்து KPN புஷ்பேக் சீட்டில் திருச்சி பயணம்.. டெக்கில் அன்புள்ள ரஜினி காந்த். உளுந்தூர்பேட்டையில் ‘பஸ் பத்து நிமிசம் நிக்கும்’ என கண்டக்டர் சொல்லியும் பதினைந்து நிமிடம் மசாலாப்பால் சாப்பிட்டார்கள்.
ஆக, பஸ் திருச்சி போகும் முன் மேட்டர் போய்ச்சேர்ந்தது. அவ்ளதான்..பட்டுநூல் கார தெருவெங்கும் ஊசி பட்டாஸ் வெடி. மூலைக்கொல்லைத்தெரு முழுக்க ஊதுகுழாய் சத்தம். இரு வீட்டு பெரியவர்கள் கூடினார்கள். ஜாதி சங்கங்கள் கலந்து பேசின. கண்டனங்கள் பறந்தன. பாட்டனியும் பௌதிகமும் பாதர் செய்யவில்லை. அடுத்த எட்டு வருடமும் அன்னபூர்னா, KPN, உளுந்தூர்பேட்டை என காதல் கொடிகட்டி பறந்தது, ரேணுகாவின் மதுரை அத்தை ஒருவர் வந்து சேரும்வரை.
மதுரை அத்தை, சி.கே. சரஸ்வதிக்கே அத்தை. திருச்சி வந்து பூரா விபரங்களையும் தெரிந்து கொண்டார். விஷயம் முற்றிப்போனாலும், வெத்தலை சீவலை வாயின் ஒரு பக்கம் ஒதுக்கி, இதை வேறு மாதிரி கையாள வேண்டும், அவசரப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டு சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் நன்னாரி சர்பத் குடித்து அண்ணா பேருந்தில் ஒரு முடிவோடு பஸ் ஏறினாள் மதுரை அத்தை.
அடுத்த வாரம் ஒரு நாள் ‘அம்மினி! கார்டு பஞ்சிங் போறும். அமெரிக்காவில் உனக்கு டிரெய்னிங்’ என ஆர்டர் வந்தது ரேணுகாவிற்கு. அவளுக்கு இஷ்டமில்லையெனினும் அமெரிக்கா போகச்சோல்லி சுப்பையா வற்புறுத்தினான். நம் எதிர்காலத்திற்கு இந்த டிரெய்னிங் முக்கியம் என சுப்பையா நம்பினான் பாவம்!.
‘சுப்பையா! நம்ம கல்யாணம் எப்பையா?’ என இவள் கேட்டுக்கோண்டே அமெரிக்கா கிளம்ப, அவன் பான் வாயேஜ் சொல்லி அனுப்பி வைக்க, அங்கே மதுரை அத்தை விஷமப்புன்னகையுடன் யாருக்கோ போன் போட்டு நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள்.
அடுத்த ஆறு மாதத்தில் அத்தையின் நெருங்கிய நண்பர் ஒருவரின் பிள்ளை அமெரிக்காவில் ரேணுகாவை சுற்றி சுற்றி வந்ததும், ரேணுகா அவனை தவிர்க்க முற்பட்டதும், அவன் தான் ரேணுகாவின் புதிய காதலன் என அத்தை மூலமாக சுப்பையாவிற்கு பொய்யான தகவல் தரப்பட்டதும், அதை உண்மையென நம்பி, சுப்பையா அவளுக்கு டார்ச்சர் கொடுத்ததும், தேவையில்லாத சந்தேகத்தினால் எட்டு வருட காதல் முறிந்ததும், சந்தேகப்படும் இவனைவிட அந்த அமெரிக்கா பையனே மேல் (male) என கல்யாணம் செய்துகொள்ள ரேணுகா சம்மதித்ததும், அதனால் தனக்கு ஒன்றும் பெரிய நஷ்டமில்லையென கோபாவேசத்துடன் தன் முறைப்பெண்ணையே சுப்பையா மணந்ததும்...
எல்லாமே சரஸ்வதி அத்தை சாமர்த்தியமாக நகர்த்திய காய்கள்..
அப்புறம் உளுந்தூர்பேட்டையில் KPN பஸ் பத்து நிமிடத்திற்கு மேல் நிற்பதில்லை.
சட்டென வரைந்த காதல் வாகனத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)

திருச்சி கதைகள்-1


மனைவி Usharani Sridhar ன் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக பஹ்ரைனிலிருந்து கிளம்பி திருச்சி வந்து பத்து நாட்கள் ஓடியது தெரியவில்லை. ஆசுபத்திரி, அனஸ்தீசியா, ஐசியூ இத்யாதிகளுக்கு நடுவே உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது கிடைத்த சுவாரசியமான சில திருச்சி குட்டிக்கதைகள்..(நிற்க! மனைவி தற்போது நலமே!)
இடம்: நலம் மருத்துவமனை, சுப்ரமணியபுரம்.
கதை சொன்னவர்: நம் உறவினர் பார்த்தசாரதி பாவா (கீர்த்தி சுரேஷ் மாதிரி பாதி தெலுங்கு பாதி தமிழில் பேசுவார்)
‘மஞ்ச்சி ஃபாமிலி.. ஶ்ரீதர்!’
‘யாரு பாவா?’
‘தோ.. எதுத்த வார்டுல இருக்காங்களே! அந்தம்மா..’
‘அப்படியா?’
‘ ஆமா.. சுமாரான வசதி உள்ள குடும்பம். ஓரே பையன். அப்பா சீக்கிரம் எறந்துட்டாரு. மனவாளு! பையன் பிஷப் ஹீபர்ல தான் படிச்சான். ஓரளவு மார்க்கு வாங்கி காரைக்குடி கிட்ட ராயவரம் பாலிடெக்னிக்ல டிப்ளமோ படிச்சான்’
‘சரி..’
‘’தரவாத்த.. பசங்க நாலஞ்சு பேரை சேத்திக்கிட்டு பெல்லு (BHEL) கிட்ட ஒரு யூனிட் போட்டான். நெறைய பெல்லு சப்-கான்ட்ராக்ட் கெடச்சது. நல்லா சின்சியரா வேலய முடிச்சு கொடுப்பான். அதனால அவனுக்கு பெல்லுலயே வேல போட்டு கொடுத்தாங்க. யூனிட்ட மத்த பசங்களுக்கு வித்துட்டு வேலைல சேந்தான்’
‘சுவாரசியமா இருக்கே!’
‘வீடு சீரங்கத்துல தான். ஒத்திக்கி வீடெடுத்தான். அம்மாகாரி சமச்சி போட, பையன் திருவெறும்பூருக்கு தெனம் பைக்குல வேலக்கி போவான்’
‘சரி..’
‘வீட்டு ஓனரு மதுரக்காரங்க, மாடில உண்ட்டாரு. ரெண்டு பொண்ணு. இத்துருனி பெத்த பில்லலு. பெரியவள உள்ளூர்ல கட்டிக்கொடுத்து அவங்க புருசன் உறையூர்ல டீக்கடை. நல்ல வசதி’
‘டீக்கடைல அவ்ளோ காசா?’
‘மரி ஶ்ரீதர்! ஒரு கடை தொறந்து நல்ல காசு சேத்து, எம்பது லச்சத்துக்கு வீடு. புத்தூர்ல இன்னொரு கடையும் தொறந்தாங்க.. அத விடு. ரெண்டாவது பொண்ணு பக்கத்துல காலேஜ் போய்ட்ருந்தாப்டி.. கீழ் வீட்டுல ஒத்தக்கி இருந்த நம்ம பையன் ஆபிசுக்கு கெளம்பற சமயம் இவளும் காலேஜ்க்கு கெளம்புவா’
‘லவ்வா?’
‘அவ்னு! (கொஞ்சம் வெட்கத்துடன்).. வீளு தெலுங்கு..ஆ பில்ல அரவம்.. தேவர்வாளு.’
‘ரெண்டு வீட்லயும் ஒத்துக்கிட்டாங்களா!’
‘அவ்னு. அவங்களுக்கு பையன ரொம்ப பிடிக்கும். இருவத்தெட்டு வயசுல பின்னோடு ச்சால பொடுவு (பையன் நல்ல உயரம்) ஓரளவு நல்ல வேலை. ஒத்திக்கு கொடுத்த வீட்டை இவங்க விக்கலாம்னு இருக்கறப்ப பையனே வெலைக்கி வாங்க ரெடின்ட்டான். ஒத்திக்கி மேல கொஞ்சம் பணத்த லோனு போட்டு கட்டி வாங்குனான். அஞ்சு பத்து பாக்கி இருந்து லவ்வு வேற வந்துடுச்சா! கல்யாணத்த பண்ணி வச்சுட்டா அம்மாகாரி. பெல்லி பாக சேஸினாரு ஶ்ரீதர்!’
‘பரவால்லியே. சாதி பிரச்சனை ஒன்னுமில்லியே?’
‘அதி சினிமா, பாலிடிக்ஸ்லோ தா பா!’
‘ரொம்ப சந்தோஷம்’
‘பையன் காலைல ஆபிஸ் போயிடுவான். பொண்ணு தில்லைநகர்ல எதோ டிராவல்சுல வேல’
‘சரி..’
‘அம்மாகாரி அப்பப்ப பஸ் புடிச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலுக்கு போய்டுவா. கெட்டிக்கார பொம்பள. வாராவாரம் அவங்களுக்கு மைக்கேல்ல ஐஸ்கிரீமும் சிரப்பும் சாப்புடனும். அப்படியே சினிமா போயினுவா. வர்றப்ப சாஸ்திரி ரோடு அடயார் ஆனந்தபவன்ல சாப்ட்டு பையனுக்கும் கோடாலுக்குனி (மருமகளுக்கும்) பார்சல் வாங்கிட்டு வந்துடுவா. நேரங்கெடச்சா ஜங்ஷன் பக்கம் பையனுக்கு இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டறது, லோனு இம்மய் அது இதுன்னு அலைவா பாவம். நல்லா தெம்பா இருப்பா. எளநீ, பாலக்கரை பிரம்மானந்தால சர்பத், ஜிகர்தண்டா வாங்கி குடிக்கும்’
‘சரி அப்பறம்..’
‘பையன் ஒருநா காட்டூர்ல இருந்து இந்தப்பக்கம் வர்றான். அரியமங்கலம் மேம்பாலத்துல ஏறுனான். சீரங்கம் தானே! பைப்பாஸ் ரோட்ட புடிச்சான்’
‘அப்பறம்?’ (பைக்னு சொன்னப்பவே பக்குன்னு எதோ ஒரு பயம் எனக்கு)
‘டிரைய்லர் பின்னாடி ஒழுங்காத்தான் வந்துட்ருந்தான் பைக்குல. டிரெய்லர் என்ன தலதெறிக்கவா ஓட்டுவான்?’
‘சரி.. விசயத்துக்கு வாங்க பாவா’
‘அவசரம்.. சைட்ல ஓவர்டேக் பண்ண பாத்தான் பையன்’
‘ஓவர்டேக் பண்ணானா?’
‘லேது.. எதுத்தாப்ல மெட்ராஸ் பஸ் ஒஸ்துந்தி கதா! பையன் சுதாரிச்சு ஸ்பீடை கொறச்சு டிரைய்லர் பின்னாடி திரும்ப வரலாம்னு...’
‘ஐய்யய்யோ.. ஒன்னும் ஆகலயே!’
‘பின்னாடி அவனால வர முடியல. ஏதோ ஒன்னு அவன இழுத்துச்சு. எதுத்தாப்ல பஸ் கிட்ட வந்துடுச்சு’
‘என்னாச்சு.. சட்னு சொல்லுங்க பாவா’
‘டிரெய்லரோட சைடு பக்கம் கயிறு சுத்திக்கட்ட இரும்பு கொக்கி இருக்குமே! அதுல பையன் சட்டையோ காலரோ மாட்டி பைக்கோட உள்ளாற போய்ட்டான்’
‘ஐயோ! ஒன்னும் ஆபத்தில்லே!’
“பையன் தொடைல பின்வீலு எக்கிந்தி. நெத்துரு (இரத்தம்) ஒக்கட்டி லேது. பையன் முழிச்சிக்கிட்டு தான் ரோட்ல கெடந்தான். படுத்த வாக்குலயே அம்மாகாரிக்கு போன் போட்டு ‘அம்மா! இட்டவேல அய்ப்பொய்ந்தி. பயம் லேது! நா ஆபிஸ் போன் சேசி ச்செப்பு’ன்னு சொல்லிட்டு மயக்கமாயிட்டான்”
‘கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்களேன் பாவா! பையன் பொழைச்சிக்கிட்டானா இல்லியா?’
‘ஆபிஸ் காரங்க ஸ்பாட்டுக்கு வர்றதுக்குள்ளாற பின்னாடி வந்த பெல்லுகாரங்க யாரோ அவன் யூனிஃப்ர்மை பாத்துட்டு வண்டிய நிறுத்தி போன் செஞ்சி ஆம்புலன்ஸ் வந்துடுச்சு’
‘ ஐயோ..’
‘ ஆசுபத்திரில சேத்து ரெண்டு நாள்ல போய்ட்டான்’
‘ஐயோ பாவம். பயங்கர அதிர்ச்சியா இருக்கே! கல்யாணம் ஆயி மூன்னாலு மாசந்தானே ஆச்சு!’
‘ சும்மா சொல்ல கூடாது ஶ்ரீதர்.. அம்ம கத்த போல்டு தா!. பையனுக்கும் நல்ல தைரியம். அந்த ரெண்டு நாள்ல அம்மாவையும் பொண்டாட்டியையும் பயப்பட வேண்டாம்னு சொன்னான். இன்ஷீரன்ஸ் உந்தி காதா! தான் இறந்துட்டா வீட்டு லோன் கட்டவேண்டியதில்லைனு முன்கூட்டியே சொல்றான் பாத்துக்க!’
‘அப்படியா! அவ்ளோ வெவரம் தெரிஞ்சவனா?’
‘அவ்னு! இன்டெலிஜென்ட் வாடு! ஷிஃப்ட்க்கு ஒரு மணி நேரம் முன்னயோ பின்னயோ, வேலை செய்ற எடத்துக்கு பதினஞ்சு கி.மீ சுத்தி எங்க ஆக்சிடென்ட்ல செத்தாலும், அது டூட்டில செத்த மாதிரி.. ஆபிஸ்ல பணம் முழுசும் கெடைக்கும்னு சொல்லிட்டு செத்துப்போனான். பசிவாடு.. பாப்பம்..சச்சியே பொய்னாடு!’
‘இதெல்லாம் நடந்து எத்தினி நாளாவுது?’
‘ஒக்கட்டினார சம்வச்சரம் (ஒன்னறை வருடம்) அய்ந்தி..’
‘சரி.. இப்ப அந்தம்மா எதுத்த வார்டுல எதுக்கு இருக்காங்க?’
‘ஆ அம்மக்கு இப்புடு ஹை ஃபீவர்.. ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் சேஸ்தாரு.. நாலு மணிக்கு அவங்களோட மருமக தன் புருஷனோட டீ கொண்டாருவாங்க’
‘ என்ன! அந்த பொண்ணுக்கு கல்யாணமாயிடுச்சா?’
‘மரி! பையன் செத்த கொஞ்ச நாள்லயே தேனி பக்கத்துலர்ந்து நல்ல பையனா பாத்து அந்தம்மாவே கல்யாணம் செஞ்சி வச்சிருச்சு. அவனுக்கும் திருச்சியில தான் வேலை’
‘தேனியா? பையன் தேவரா.. தெலுங்கா?’
‘அதி மனக்கு எந்துக்கு இப்புடு? டீ சாப்டலாமா ஶ்ரீதர்?..இப்ப அதே வீட்ல நாலு பேரும் இருக்காங்கல்ல!’
‘நாலு பேரா?’
‘ஆமா.. பேரன் பொறந்துட்டான்ல! மொகுடு பென்லாம் பாக உண்ணாரு. மன செய்லோ ஒக்கட்டி லேது ஶ்ரீதர்.. தேவுடு தா சேஸ்தாடு காதா! ’
கதையை நீட்டி சொன்ன பார்த்தசாரதி பாவாவுக்கு நன்றி..
சட்டென வரைந்த பத்து நிமிட ஓவியத்துடன்...
(சீதாபதி ஶ்ரீதர்)

Sunday, April 22, 2018

கலவச்சட்டி.....-2014 மீள்

2 நாட்களுக்கு முன் திருச்சியில் எங்கள் சுந்தர் நகர் வீட்டிற்கு போயிருந்தேன். முன்பு அம்மா அப்பா மாடி போர்ஷனில் குடியிருந்தார்கள். இருவரும் தற்போது இல்லை. வீட்டை விற்க மனமில்லை. வாடகைக்குக்கொடுத்துவிட்டோம்.
சில மராமத்து வேலைகள் இருந்ததால் ஒரு மேஸ்திரி மற்றும் சித்தாள் வைத்து வேலைகளை காலை 9 மணிக்கு ஆரம்பித்தேன். பதினொன்னரை மணியளவில் அவர்களுக்கு வடையும் டீயும் (இன்னுமா இந்த சிஸ்டம்!) வாங்கிக்கொடுத்து விட்டு மெல்ல வீட்டைச்சுற்றி வந்தேன்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் அம்பாசடர் கார் நிறுத்த இடம் போறாததால் எங்கள் பகுதியிலிருந்து ஓரடியை தங்கள் நிலத்துடன் சேர்த்து முள்வேலிக்கம்பி தடுப்பு சுவர் எடுத்ததை நான் 20 வருடங்களுக்கு முன் கண்டித்தபோது அப்பா "இருக்கட்டும்டா..பின்னால பாத்துக்கலாம்..அவங்க ஏமாத்தமாட்டாங்க. மஞ்ச்சி வாளு!" என சொன்னார். இப்போதும் அந்த வேலிக்கம்பி அப்படியே இருந்தது. ஆனால் அம்பாசடர் இருந்த இடத்தில் ஃபோர்டு ஃபிகா. தற்போது இரண்டடி இடம் மிச்சமாக அவர்கள் பக்கம்.
ஆண்டு விடுமுறைக்கு நாங்கள் வரும்போது அம்மா ஒரு ஆளை வைத்து இளநீர், கொய்யா, சீதாப்பழம், மாங்காய் எல்லாம் எங்க வீட்டு மரங்களிலிருந்து பறித்து பேரன்களுக்கு கொடுப்பது நினைவுக்கு வந்தது. தற்போது தென்னைமரம் ஒன்றை காணோம். ஒருமுறை தங்கள் அம்பாசடர் கார் மேல் தென்னை ஓலை விழுந்ததால் மரத்தை பக்கத்து வீட்டுக்காரர்களே தரையோடு தரையாக வெட்டியிருந்தார்கள். அதற்கு முன் பதிவுத்தபாலில் இன்ன திகதிக்கு மரத்தை வெட்டப்போவதாக அறிவித்து சட்டபூர்வமாக கடிதம் வேறு. மற்ற இரு தென்னைமரங்களை பூச்சியரித்து பாதி இளநீரைக்காணோம். மாங்காய் மற்றும் கொய்யா மரங்களும் மொட்டையாக இருந்தன. அம்மா இருந்தவரை 6 மாதங்களுக்கொருமுறை பூச்சிக்கொல்லி மருந்தடித்து உரம் போட்டு வளர்த்த மரங்கள் அம்மாவோடு போய்ச்சேர்ந்துவிட்டன.
"சார்! பின்பக்க காம்பவுன்டு சுவத்த கொத்தி வுட்டு பூசனும். மேல ஏற ஏணி வேனும்" என மேஸ்திரி கேட்க வீட்டின் பக்கவாட்டில் படிக்கட்டின் கீழே முன்பு அப்பா சாய்த்து வைத்திருந்த ஏணியை தேடினேன். முற்றிலும் உடைந்திருத்தது. "பரவால்ல சார்..கடைல எடுத்தரலாம். நா சாப்ட்டு வாங்கியாந்துர்றேன். நாள் வாடக 50 ரூபா தானென மேஸ்திரி கடைக்கு ஓடினார். முன்பு மாதிரி பித்தளை தூக்கில் மதிய உணவெல்லாம் அவர்கள் கொண்டுவருவதில்லை. காசு வாங்கிக்கொண்டு குஸ்கா சாப்பிட ஹோட்டலுக்கு ஓடினார்.
வாசலில் மேல் போர்ஷனுக்குறிய எலெக்ட்ரிக் மீட்டரில் வேப்பங்குச்சி தொட்டு சிவப்புக்கலர் பெயின்ட்டில் எழுதிய ‘சீதாபதி’ என்ற அப்பாவின் பெயர் அப்படியே இருந்தது. எப்போதும்போல் மீட்டர் பெட்டியின் உள்ளேயிருந்து ஒரு பல்லி எட்டிப்பார்த்தது. அருகே முன்பு தொங்கிக்கொண்டிருந்த கொக்கி காணாமல் போயிருந்தது. அதில் மின்கட்டண பில்கள், வீட்டு வரி ரசீது, கேபிள் டீவி கார்டு அனைத்தையும் குத்தி மாட்டி வைத்திருப்போம். வாசல் கேட்டில் பால் பாக்கெட் மஞ்சப்பை மாட்டும் கொக்கியையும் காணோம்.
கேட்டுக்கு பக்கத்தில் தரையில் காவேரி தண்ணீர் மீட்டர் பழுதடைந்திருந்தது. முன்பு அப்பா அந்த இடத்தில் சிறியதாக தொட்டி ஒன்றை கட்டி அதனுள் குழாய் வைத்திருப்பார். அதன் வாயில் வடிகட்ட துணி (வேட்டியில் கிழித்த). நல்ல தண்ணீர் வரும் அந்த இரண்டு மணி நேரம் குடத்தில் பிடித்து மாடியில் தேக்ஸா, தவலை, அண்டாவிலிருந்து சிறிய போவனி வரை ரொப்புவது அவர் வேலை. தற்போது அதற்கெல்லாம் அவசியமில்லை. போன் செய்து விட்டால் பல்சர் பைக்கில் கொண்டுவந்து போடுகிறார்களாம்.
அந்த தொட்டி மூடப்பட்டு அங்கே தற்போது மோட்டர் பைக்.. முன்பு அப்பாவின் ராலே சைக்கிள் இருக்கும். நினைவுகள் மெல்ல பின் செல்ல...சைக்கிள் சீட்டின் அடியில் சொறுகப்பட்டிருக்கும் துணி, அந்த துணியை சக்கரங்களின் இடையே கொடுத்து ஸ்போக்ஸ் மற்றும் ரிம்மை சரட் சரட்டென்று இழுத்து துடைப்பது, டைனமோவை அழுத்தி சக்கரத்தைச்சுற்ற விட்டு முன்புறம் லைட் எறிகிறதாவென அவர் சரிபார்ப்பது, டைனமோ மோட்டரால் டயர் தேயாமலிருக்க அதற்கும் ஒரு சிறிய ரப்பர் கவர், முன்புறம் டைனமோ லைட்டைச்சுற்றி கட்டப்பட்டிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் மஃப்ளர் மாதிரியான மஞ்சள் துணி, சைக்கிள் செயின் கவர் இடுக்கில் உள்ள ஓட்டையில் எண்ணெய் விட ஒரு சிறிய ஆயில்கேன், பின் காரியரில் சுற்றப்பட்ட சைக்கிள் டியூப்(அரிசி மூட்டை, பழைய பேப்பர் கட்ட), "சார் பஞ்சர் இல்ல.. வால்டியூப் தான் போய்ருச்சு" போன்ற வசனங்கள்...
"சார் எக்ஸ்ட்ரா அரை மூட்ட சிமென்ட் வந்துருச்சு" ..மேஸ்திரி கூப்பிட, சட்டென்று விழித்து வாசலுக்கு விரைந்தேன். மோட்டர் பொறுத்தப்பட்ட பெடல் வண்டியிலிருந்து சிமெண்ட் மூட்டை இறங்கியது. முன்பு மாட்டு வண்டியில் வந்திறங்கும். சிமென்ட் இறக்கி முடியும்வரை மாட்டின் மூக்கனாங்கயிறு சக்கரத்தில் கட்டப்பட்டிருக்கும்.
லூசில் நாலைந்து கிலோ சிமென்ட் மற்றும் மணல் 4 சட்டி அப்பா வாங்கி கொடுத்தால் கலவச்சட்டி கொண்டு வரும் மேஸ்திரி வாசலில் பெயர்ந்திருக்கும் தரையை அழகாக பூசி மட்டப்பலகையில் தேய்த்து சரி செய்யும் அந்த நாள் இனி வருமா!
ஒருவழியாக மாலை 6 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வெளியே இருந்தபடியே குடித்தனக்காரர்களிடம் விடை பெற்றுக்கொண்டேன். வீட்டின் உள்ளே போக மனமில்லை. போயிருந்தால் நிச்சயம் கீழ் கண்டவை நினைவுக்கு வந்திருக்கும்:
1. அப்பாவின் பழைய மர்ஃபி ரேடியோ, அதன் பின்புறமிருந்து வயர் எடுத்து ஒரு கண்ணாடி கிளாசில் எர்த்திங் விட்டிருப்பார், ரேடியோவின் தலையில் இரண்டாக மடிக்கப்பட்ட காசி துண்டு.
2. படுத்தவாறு நேஷனல் பானசானிக் டேப் ரெகார்டர். நீட்டிய கால்கள் போல 4 பட்டன்கள்.
3. TDK காஸெட்டுகள்.. பக்கத்தில் அரை பென்சில் (காஸெட் சுற்ற)
4. கேமலின் இங்க் பாட்டில்(blue black) மற்றும் இங்க் ஃபில்லர்.
5. இன்லாண்டு லெட்டர், போஸ்ட் கார்டு.
6. விராலிமலைக்கு பணம் அனுப்ப மணியார்டர் பாரம்.
7. அவசரத்திற்கு தந்தி பாரம்
8. கோபால் மற்றும் பயோரியா பல்
பொடி.
9. ஃபோர்ஹான்ஸ் டூத் பேஸ்ட் (எங்களுக்கு)
10. புலிமார்க் சீயக்காய் மற்றும் அறப்புத்தூள்
11. பொன்வண்டு சோப்பு.
12. மரச்சீப்பு (ஈறு, பேனெடுக்க)
(வேறு ஏதும் நினைவுக்கு வருகிறதா?)
என்னதான் பழமைவாதியாக இருந்தாலும் அப்பாவிற்கு புதிய வாட்சுகள், ஸ்டேட் எக்ஸ்பிரஸ் பெல்ட், பஹ்ரைனில் வாங்கிய சின்ன டிரான்சிஸ்டர், தம்பி Vijay Raghavan ஓமானிலிருந்து வாங்கி வந்த டி.வி.டி ப்ளேயர் (ரஜினி படம் பார்க்க) எல்லாம் பிடிக்கும்.
iPhone பிறப்பதற்கு முன் அப்பா இறந்துவிட்டார். இல்லையென்றால் இன்று காலை திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் பஸ் ஏறியவுடன் ஆரம்பித்து காரைக்குடி இறங்கும்போது இந்தப்பதிவை iPhone இல் தட்டச்சு செய்து முடித்திருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பார்...
சட்டென வரைந்த பென்சில் ஓவியத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)

வாடிகன்-2014 மீள்

...
நேற்று மதியம் சுமார் 3 மணி நேரம் வாடிகன் அரண்மனையை எங்களுக்கு சுற்றிக்காண்பித்த அந்த கைடுக்கு வயது 70க்கு மேல் இருக்கும். அமெரிக்கர். சவரப்பச்சை முகம். நம்மை ஊடுருவி பார்க்கும் விழிகள். ஏதோ திருச்சி அல்லிமால் தெரு முனையில் வேட்டியை மடித்துக்கொண்டு கதைத்துக்க்கொண்டிருப்பது போல் வாஞ்சையுடன் பேசிக்கொண்டிருந்தார். ...நாங்கள் மொத்தம் 12 பேர் அவரது குழுவில்.
வெளியே நல்ல குளிர். ஐரோப்பா போவதற்காக வாங்கிய ஸ்கெட்சர் ஷூ, லைஃப்ஸ்டைலில் வாங்கிய தெர்மல்வேர் என எல்லோரும் எக்ஸ்ட்ரா ஒரிரண்டு கிலோ கூடுதல் எடையுடன் இருந்தாலும் நம்மூர் மங்கி குல்லா மஃப்ளருக்கும் ஈடாகுமா!
ரோம் நகரம் மற்றும் ஒருங்கிணைந்த இத்தாலி உருவான கதை, தனி நாடாவதற்கு முன் வாடிகனில் போப்பாண்டவர்கள் தங்கள் உரிமைக்காக போராடியது, பிறகு பிரம்மாண்டமான தேவாலயத்தை கட்டியது போன்ற பழங்கதைகளை அவர் எடுத்து விட, ஒவ்வொருவராக கொட்டாவி விட ஆரம்பித்தோம். ஆனால் சிலர் மட்டும் (என்னைத்தவிர) படு சீரியஸாக அவர் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தார்கள். காரணம், அவருக்கு பின்னால் அந்தப்பக்கம் கூந்தலை அள்ளி முடித்து, முழு மஞ்சள் முதுகையும் காட்டியபடி நின்று கொண்டிருந்த அரை நிக்கர் சீனப்பெண். ‘அதை நீயும் தானே பார்த்தாய்!’ என கேட்பவர்கள் அடுத்த பாரா போய்விடுவது உசிதம்.
ஸீஸர் மற்றும் அகஸ்டஸ் பற்றிய விபரங்கள், மைக்கல் ஆஞ்சலோ முதன்முதலில் ரோமுக்கு வந்தது, ஆரம்பத்தில் அவரை யாருக்கும் தெரியாதென்பது, அவர் தனியாக தீவு ஒன்றில் சில வருடங்கள் தங்கியிருந்து அரண்மனையின் வரைப்படத்துக்கு (plan) ஏற்றவாறு ஓவியங்கள் வரைய அளவுகள் மற்றும் themes தயார் செய்தது, பிறகு அரண்மனையில் சீடர்கள் தண்ணீரில் வர்ணங்களை கலந்து 20 மீட்டர் உயரத்தில் இருக்கும் மைக்கலுக்கு கயிறு மூலம் அனுப்ப அவர் வானம் பார்த்தவாறு படுத்துக்கொண்டே உட்கூரை சுவற்றில் ஏசு கிருஸ்து, மோசஸ், கன்னி மரியாள், கடைசி விருந்து போன்ற உலகப்புகழ் பெற்ற ஓவியங்களை நான்கு வருடங்களில் வரைந்த விபரங்கள்.. கேட்க சுவாரசியமாக இருந்தாலும் கைடு நீட்டிக் கொண்டு போனார்.
மைக்கலாஞ்சலோ சிற்பம், ஓவியம், கவிதை என பன்முகத்திறன் கொண்டவராம். திருமணமே செய்து கொள்ளவில்லையாம். (இருக்காதா பின்னே!) ...கைடு மூச்சு விடாமல் பேச, நாங்கள் அடிக்கடி மணிக்கடிகாரத்தை பார்ப்பதை அவர் கவனிக்கத்தவறவில்லை. ஒரு உ.பி. பைய்யா கைடின் கடிகாரத்தையே உற்று பார்த்து தொலைத்தான். கைடின் காது லேசாக சிவக்க, அவரை திருப்தி படுத்த அவரைப்பார்த்து கூடுதலாக தலையை அசைத்தது என் குற்றம்! அடுத்த அரை மணி நேரம் என்னையே பார்த்துக் கொண்டு அவர் விளக்க, பல்லை கடித்துக் கொண்டு கொட்டாவியை அடக்க முயன்றேன்.
மனுஷனுக்கு கை, கால் கொடைச்சலே வராது என நினைக்கிறேன். எங்களுக்குத்தான் அப்பப்ப பசி, தண்ணித்தாகம், இயற்கையின் அழைப்பு எல்லாம் வரிசையாக....
ஒரு மணி நேரத்திற்கு மேல் விலாவாரியாக அவர் விளக்கியபோது நமக்கு விலா எலும்பு வலித்தது. எவ்வளவு நேரம் தான் மோட்டு வளைகளையும் விட்டத்தையும் பார்ப்பது?
தோளுக்கு மேல் வளர்ந்த என் சின்னவன் மெல்ல என் தோளில் சாய்ந்து கொண்டு 'does he not have any break in his job?' என கேட்ட போது அவருக்கு ஏதோ அசரீரி சொல்லி விட்டது மாதிரி புரிந்து விட்டது போலும். ஆசாமி படு சூட்டிகை. தொண்டையை கனைத்துக்கொண்டு ‘at the end of my briefing I will be asking questions to some one I choose from you guys’ என ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அது வரை தலையை அசைத்துக்கொண்டிருந்த மனைவி Usharani Sridhar கலவரத்துடன் என்னை பார்த்து "ஏமி போடுஸ்தாமா" என கேட்க, கூட வந்திருந்த மற்றொரு இங்கிலாந்துக்காரர் "oh gaad!" என சலித்துக்கொண்டார்.
அடுத்து அவர் 'next one hour I will be briefing you, the functioning of pope's office and his powers' என்றதும் நாங்கள் கீழே விழாமலிருக்க ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டோம். அரை நிக்கர் சீனாக்காரி படியேறி எப்போதோ அடுத்த அரண்மனை போய்விட்டிருந்தாள். வாடிகனை எவன் கண்டுபிடிச்சான்! என சிலர் சலித்துக்கொண்டனர்.
கைடு பக்கமே திரும்பாமல், அந்தப்பக்கம் ஏதோ நிர்வாண சிற்பத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெங்காலிக்காரரைப் பார்த்து ‘are you with me?’ என கோபமாக நம்ம கைடு அதட்ட, பெங்காலிக்காரர் அதிர்ந்து, நறநறவென பல்லைக்கடித்து அம்ரீஷ் பூரி மாதிரி ‘yes! I am’ என பதிலுக்கு முறைக்க எங்களுக்கு இன்னும் சுவாரசியம் கூடியது. ச்சே! அவர்கள் சண்டை ஒன்றும் போட்டுக்கொள்ளவில்லை.
அந்த கைடை குறை சொல்வதற்கில்லை. மிக அழகாக விளக்கி அவர் தன் கடமையை செய்து கொண்டிருக்க, அது வாடிகனோ வாடிப்பட்டியோ, மதியம் 4 மணிக்கு மேல் ஆனதால் எல்லோருக்கும் டீ தேவைப்பட்டது. பாவிகள்! எங்கேயும் ஜனங்கள் உட்கார முடியாதபடி நாற்காலியோ, திண்ணையோ இல்லை. கூட்டம் நகர வேண்டுமல்லவா!
கடைசியாக பிரம்மாண்டமான Sistine chapel எனப்படும் சிற்றாலயம் வந்தபோது பிரமிப்படைந்தோம். எங்கு பார்த்தாலும் ஓவியங்களும் சிற்பங்களும்..
அடுத்து ‘இந்த வெள்ளைக் கோட்டிற்கு அந்த பக்கம் வாடிகன், இந்த பக்கம் ரோம்’ போன்ற சுவாரசியமான சமாசாரங்கள்.
உலகத்தில் உள்ள எல்லா கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவர் போப் என்றும், அவர் தங்கும் இல்லம், வாடிகனில் அலுவலகங்கள், பரப்பளவில் ஶ்ரீரங்கத்தை விட சிறியதான(என் ஊகத்தில்)அந்நாட்டிற்கு தனி நாணயம், பாஸ்போர்ட் போன்ற விபரங்கள், அங்கே பணி புரியும் அலுவலர்கள் எல்லோரையும் காண்பித்தார் கைடு.
சிப்பந்தி ஒருவர் மிகவும் பொறுப்புடன் போப் மற்றும் அவரது glergymen, கார்டினல்களுக்கு சிகப்பு வண்ணத்தில் புதிய உடைகள் தைத்து அழகாக கண்ணாடி அல்மேராவில் மாட்டி வைத்துக்கொண்டிருந்தார். அங்கங்கே காவலுக்கு நிற்கும் அத்தனை guardsம் உம்மனாம் மூஞ்சிகள். எல்லோரும் சுவிஸ் நாட்டவர்களாம். நமக்கு வத்தல் வடாம் மாதிரி சுவிஸ் நாட்டவர்களுக்கு சாக்லேட் தான் மதியம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள..போன்ற தகவல்களை கைடு அளித்து பசியை மேலும் தூண்டினார்.
அரண்மனையில் பணிபுரியும் சிலர் க்ரீஸ் மற்றும் எகிப்து நாட்டவர்களாம்.(முன்பு கிரீஸ், எகிப்து நாடுகள் இத்தாலியின் காலனி ஆதிக்கத்திற்குட்பட்டிருந்ததால்). முந்தைய போப் பெனடிட்டோ ஜெர்மானியர் என்பதால் வாடிகனுக்கு நிறைய ஜெர்மானியர்களை கொண்டு வந்தார் என்பது உபரித்தகவல். நம் அமெரிக்க கைடு கொஞ்சம் விஷமப்பேர்வழி. தாழ்ந்த குரலில் அரண்மனையில் நடக்கும் அரசியலையும் குறும்புத்தனத்துடன் நமக்கு கொஞ்சம் விளக்கினார்.(அட! அப்போது மட்டும் எங்களுக்கு களைப்பே தெரியவில்லையே!)
அது சரி! அங்கு கர்ம சிரத்தையுடன் போப் மற்றும் கார்டினல்களுக்கு உடைகள் தைக்கும் அந்த அன்பருக்காகத்தான் இந்த பதிவையே எழுதுகிறேன். அவர் ஒர் இந்தியர் என கைடு சொன்னபோது எங்களுக்கு பெருமிதம் தாங்கவில்லை. உலகத்தின் மிகப்பெரிய தேவாலயம் கொண்ட வாடிகனில் ஒரு இந்தியரா என எங்களுக்கு புல்லரித்தது. அது சரி! அவர் எந்த மாநிலத்தவர்?
புள்ளி..மலையாளியானு..!
(சட்டென வரைந்த பென்சில் ஓவியத்துடன்..)
சீதாபதி ஶ்ரீதர்
2014 மீள்

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்...


க்வீன்ஸ் நெக்லெஸ் எனப்படும் பம்பாய் மரைன் டிரைவ் பகுதி முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வசித்த இடம். சர்ச்கேட் ஸ்டேஷனிலிருந்து பொடி நடையாய் அந்த பகுதி வந்து பெரிய அடுக்குமாடி கட்டிடம் முன் நின்றேன்.
பழங்கால ஒட்டிஸ் லிஃப்ட்டின் இரும்புக்கதவுகளை கிர்ரீச்சென இழுத்து மூடிய மராட்டிய லிஃப்ட் கிழவர் என்னை பார்க்க நான் 'தீஸ்ரா மாலா' என்றேன்.
மூன்றாவது தளத்தின் ஒரு ஃப்ளாட்டில் வயதான பெண்மணியொருவர் 'ஆவ் ஷிரிதர்பாய்..' என வரவேற்றார். அவர் திருமதி. ஸ்மிதாபென் மெர்ச்சன்ட்...அவரது கண்ணசைவை ஏற்று மராட்டிய பாயி (வேலைக்காரி) என் முன் குளிர்ந்த நீரை வைத்தார்.
"ஷிரிதர்பாய்! உன்னைப்பற்றி ஜதின்பாய் நிறைய சொன்னார்.."என அவர் பேச ஆரம்பிக்க என் கவனம் எதிரே இருந்த தேநீர் மற்றும் பிஸ்கோத்தை..
90 களில் நாரிமன் பாய்ன்ட்டில் நிதி மற்றும் பங்குகள் சார்ந்த எங்கள் குழுமத்தின் ஆடிட்டர் ஜதின் ஷராஃப் தனக்கு தெரிந்த பணக்கார குஜராத்தி குடும்பத்தாரின் பங்குகள் சம்மந்தப்பட்ட கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள்ள ஒரு இளம் CA தேவையென்றும், 'பார்ட் டைம் ஜாப்..நல்ல சம்பளம்' என்றும் சொல்லி என்னை இங்கே அனுப்பினார். 2000 சதுரடிக்கு மேலிருக்கும் அந்த ஃப்ளாட்டில் பழங்கால விலை உயர்ந்த சோஃபாக்கள். செந்தில் டவுசர் அணிந்த 3 வேலைக்காரர்கள். சமையலறையில் கடி மற்றும் தால்கிச்சடி வாசனை மூக்கை துளைக்க ‘நல்ல சாப்பாடு கெடைக்கும் போலிருக்கே!’ என நான் யோசித்துக்...
'ச்சாய் டண்டா ஹோஜாய்கா ஷிரிதர்பாய்..!' திடுக்கென திரும்பி எதிரில் நின்ற திருமதி.மெர்ச்சன்ட்டை பார்த்தேன். சுருக்கமில்லாமல் இஸ்திரி போட்ட பண்டரிபாய் வெள்ளை உடை. 65 வயது இருக்கலாம். இடுப்பில் பெரிய சாவிக்கொத்து. சர்க்கரை வியாதி மற்றும் மூட்டு வலி நிச்சயம் அவருக்கு உண்டென சூடம் அணைத்து சத்தியம் செய்வேன்.
ஆடையை ஊதி விலக்கி அருமையான குஜராத்தி மசாலா டீயை உறிஞ்சியபடியே கண்ணை உயர்த்தினேன். பண்டரிபாய் இப்போதைக்கு பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை. கணவர் கட்டாவ் மில்ஸில் நிறைய சம்பாதித்தாராம். இருக்கட்டும்! அந்தக்காலத்தில் குறைந்த விலையில் நல்ல பங்குகளை வாங்கிப் போட்டாராம். போடட்டும்! சில வருடங்களுக்கு முன் பக்கெட்டை உதைத்தாராம். போய்ட்டாரா! அப்பறம்? அவருக்குப்பின் அவரது முதலீட்டை தன் இரு பெண்களுடன் இந்தம்மா பார்த்துக்கொள்கிறாராம். சந்தோஷம்! மொறுமொறுப்பான உப்பு பிஸ்கெட்... வாய் ஓரத்தை துடைத்துக்கொண்டு அசுவாரசியமாக அவர் கதையை நான் கேட்டுக்கொண்டிருக்க, வாசல் கதவு மணியடித்து தபால்காரர் கொண்டுவந்த அன்றைய தபாலில் நிறைய டிவிடென்டு வாரன்ட்டுகள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பங்குகள் வாங்கி விற்கும் டீல் ஸ்லிப்புகள், போனஸ் அறிவிப்புகள், மாதாந்திர வங்கி ஸ்டேட்மெண்டுகள் என எல்லா கோப்புகளையும் மராட்டிய வேலைக்காரி என் முன் மலை போல் குவித்து விட, 'என்னது! இவ்ளோ வேலையா!' என மலைத்து கோப்புகளுக்கு அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தால்...புண்ணியவதி.. ஒரு தட்டில் ஏலக்காய் பொடி தூவிய பளபளக்கும் சிவப்பு வர்ண ஜிலேபி மற்றும் கமகமவென வாசனையுடன் சூடான கச்சோரி..நாக்கில் ஜலம் ஊர 'நாளைக்கே வேலையை ஆரம்பிச்சுடலாங்க' என அறிவித்தேன்.
'மொதல்ல என் மகள்கள் இருவரையும் நீ பார்ப்பது அவசியம்' என அவர் சொல்ல, மறுநாள் அவரது தாட்டியான இரு பெண்கள் முன் நான். பம்பாயின் பெட்டர் ரோடு, அல்டாமவுண்டு ரோடு போன்ற பகுதியில் குடியிருக்கும் மேல்தட்டு வர்க்கத்தினர். பெண்கள் இருவருமே SV ரங்காராவின் தங்கைகள் போல ஆறடி உயரம். பக்கத்தில் தவக்களை மாதிரி நான் அவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருக்க தங்கள் குடும்பத்தின் பங்கு வர்த்தகம் பற்றி விளக்கினார்கள்.
திருமதி.மெர்ச்சன்ட்டுக்கு ஒரே பையன் மற்றும் அந்த இரண்டு பெண்கள். பையன் சிங்கப்பூரில் தொழில். இரண்டு பெண்களுடன் அம்மா பங்கு வர்த்தகம். அடியாத்தி! அம்மா கையெழுத்தை அவர் முன்னால் பெண்களே அசால்ட்டாக போடுகிறார்கள். பங்குசந்தை பற்றிய விபரங்கள் விரல்நுனியில் அவர்கள் வைத்திருந்தாலும் அதன் கணக்கு வழக்குகள், அட்வான்ஸ் வருமான வரி கட்டுவது, வருடாந்திர ரிட்டர்ன்கள் போன்ற சமாச்சாரங்கள் எதுவும் தெரியவில்லை. அதனால் தான் நம்ம வண்டி ஓடுகிறது! பார்க்க முரட்டு ஷாஃபி இனாம்தார் மாதிரி அவர்களது கணவர்கள் இருவரும் வழக்கறிஞர்களாம். பணபலம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. தவிர அரசு,வங்கிகள்,போலீசில் செல்வாக்கு.
அதிகம் பேசாமல் சம்பளத்தை அலட்சியமாக ஒத்துக்கொண்டார்கள். 'என்ன இன்னைக்கி சாப்பிட/குடிக்க ஒன்னையும் காணோமே' என கண்கள் மராட்டிய வேலைக்காரியை தேட...மவராசி..ஒரு தட்டில் எண்ணை சொட்டச்சொட்ட மேத்தி தேப்லா , வறுத்த மூங்தால், ஆம்ரஸ்(மாம்பழச்சாறு).. என கொண்டு வந்து வைக்க, 'அம்மா! நீங்க சம்பளமே தராம மூணு வேள சோறு மட்டும் போட்டா போதும்' என சொல்ல வேண்டும் போல் இருந்தது.
ஒருநாள் திருமதி.மெர்ச்சண்ட் என்னிடம் 'ஷிரிதர்பாய்... எங்கள் மகனுக்கு உதவியாக சிங்காப்ப்பூர் (சிங்கப்பூர் அல்ல) அலுவலகத்தைப்பார்த்துக்கொள்ள ஒரு CA தேவைப்படுகிறது. யாராவது இருந்தால் சொல்லேன்!' என கேட்க, நான் சற்று யோசித்து 'நானே போகலாமா' என கேட்டதும் அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. 'ஆஹா.. எங்களுக்கு உன்னைத்தான் சிங்கப்பூர் அனுப்ப ஆசை... நீ ஒப்புக்கொள்வாயா என கொஞ்சம் யோசித்தோம்' என்றனர் பெண்கள்.
அடுத்த சில நாட்களில் சிங்கப்பூரில் இருந்து என் தற்காலிக வேலை பெர்மிட்டுடன் அவரது பையன் யோகேஷ் மெர்ச்சண்ட் வந்தார். கண்களுக்கு கீழே பைகளுடன், கட்டையாக குண்டாக, அறையில் பாதியை அவரே ஆக்கிரமித்திருந்தார். . பம்பாயில் இவர்களது வங்கிகள் சம்மந்தப்பட்ட வேலைகளை பார்த்துக்கொள்ளும் அவரது நண்பன் துஷார்பாயும் கூட இருந்தான். ஒல்லி வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரியிருந்த துஷார்பாயின் பார்வையில் போக்கடாத்தனமே அதிகம் தெரிந்தது. சதா பான்பராக், குட்கா மென்ற பிஜேபி பற்கள்.
இருவரும் அன்று மாலை கொலாபா பகுதியில் ஒரு க்ளப்புக்கு என்னை கூட்டிப்போனார்கள். ரிசப்ஷனில் இருந்த ரிஜிஸ்தரில் யோகேஷ்பாயும், 'பான்பராக்'கும் வேறு பெயர்களை எழுத, நான் மட்டும் அழகாக ‘சீதாபதி ஶ்ரீதர்’ என முட்டை முட்டையாக எழுதியதை பார்த்து விட்டு 'தேக்கோ ஶ்ரீதர்பாய்! அடுத்தமுறை நீ வேற பேர்ல கையெழுத்த போடனும்..தெர்தா?' என காதில் கிசுகிசுக்க, 'ஹாங்! அதெப்படி! நா எதுக்கு வேற பேர்ல கையெழுத்து போடணும்? ' என உச்ச ஸ்தாயியில் கேட்ட என்னை சட்டென கோழியைப்போல அமுக்கி உள்ளே இருட்டுக்குள் இழுத்துக்கொண்டார்கள்.
உள்ளே... சீமைச்சாராய வாடை, புகைமண்டலம், அதிரும் இசை, கண்ணாடி கோப்பைகள் உரசும் க்ளிங் சத்தம். ‘அதிசய உலகம்.. ரகசிய இதயம்’ க்ளப் டான்ஸுக்கேற்ற சூழல். மேற்கத்திய இசைக்கு நம்மையறியாமல் தலை ஆடியது. தொழிலதிபர்கள் மற்றும் பங்குத்தரகர்கள் கலைந்த தலையும் காட்டன் சட்டையுமாய் மது, சிகரெட் சகிதம் தங்கள் வர்த்தகம் பற்றி சம்பாஷித்துக்கொண்டிருந்தனர். அந்த பப்(b)பில் உயரமான ஸ்டூலின் படியில் ஏறி அவர்களுடன் நானும் உட்கார்ந்தபோது தான் கவனித்தேன், யோகேஷ்பாயின் இரண்டு பின்புறங்களின் பாதி மட்டும் தான் ஸ்டூலில் உட்கார முடிந்தது. தவிர க்ளீவேஜுடன் அவன் ஜட்டி வேறு அந்த இருட்டிலும் தெரிந்து தொலைத்தது. 'ப்ளக்'கென பாட்டிலின் கார்க்கை அனாயசமாக அகற்றி மேற்படி வஸ்துவை அவன் சிந்தாதாமல் கோப்பையின் பக்கவாட்டு சுவற்றில் சரித்து, நுரை வர விடாது மட்டத்தை உயர்த்தும் இலகுவான ஸ்டைலை ஆச்சரியமாக பார்த்தேன். தப்புத்தண்டாவைக்கூட தடியன்.. எவ்ளோ திருத்தமா செய்றான்! ஆரஞ்சு பழச்சாறு மட்டும் போதும் என்ற என்னை ‘அடச்சீ’ என எகத்தாளமாக பார்த்து சம்பிரதாயமாக சில கேள்விகள் கேட்டுவிட்டு முந்திரியை அள்ளி வாயில் போட்டு 'சூ கபர் ச்சே' இருவரும் குடியில் மூழ்கி திளைத்தனர்.
“சிங்காப்பூழ் இன்னொம் ஒழு மாசத்துக்குழ்ள போக தயாழா இழ்ழுக்கனு”மாம்!
மறுநாள் ஒரு அரசுடமை வங்கிக்கு வரச்சொன்னார்கள். தாயார், பையன், இரு மகள்கள், பான்பராக் பிஜேபி எல்லோரும் வங்கி மேலாளர் முன் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்ததும் பம்பாயின் பிரபல கணினி கம்பெனி அதிபர் உள்ளே நுழைந்தார். பையன் சி.பூரிலிருந்து ரஷ்யாவிற்கு கனினிகள், அதன் உதிரி பாகங்களான PC board என ஏற்றுமதி செய்ய உதவுவது தரகு நிறுவனமான சகோதரிகளின் இந்தியக்கம்பெனி. வங்கி LC அல்லது refinance மூலம் முழு பணத்தை ரஷ்யர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தரம் குறைந்த அல்லது ஒப்புக்கொண்டதைவிட குறைவாக பொருட்களை ஏற்றுமதி செய்வது, பிரச்னை வந்தால் 'ஷாஃபி இனாம்தார்' கணவர்கள் மூலம் வழக்குகளை சந்திப்பது. பல லட்ச ரூபாய் பரிவர்த்தனைகள். வங்கி மேலாளர், கணினி நிறுவனம், சகோதரனின் சி.பூர் மற்றும் சகோதரிகளின் இந்திய நிறுவனங்கள் எல்லோருமே சுருட்டிய பணத்தின் பெனிஃபிஷியரிகள். இதெல்லாமே இஸ்திரி பண்டரிபாய் ஆசியுடன்..
' டாகுமென்ட்கள் ரெடி செய்யப்போவது யார்?’ என கணினி MD கேட்டு எல்லோரும் என்னை கைகாட்ட, அடக்கமாக SV சுப்பையா மாதிரி நான் தானுங்க என கழுத்தை முன்னே நீட்டிய என்னை ‘இவனா?’ என விஷ ஜந்துவை பார்ப்பதுபோல் அவர் பார்க்க, கழுத்தை பின்னே இழுத்துக்கொண்டேன். அடுத்து வங்கி மேலாளர் காட்டிய தஸ்தாவேஜுக்களில் சகோதரிகள் கிடுகிடுவென கையொப்பமிட, கணினி MD டையை தளர்த்தி கையை நீட்ட, வங்கி மேலாளர் பாக்கெட்டில் கைகளை விட்டு பேண்ட்டை ஜிகுஜிகுவென மேலே இழுத்துக்கொண்டு அவர் கையை பிடித்து குலுக்கினார்.
பயம் லேசாக பற்றிக்கொள்ள, மறுநாள் பான்பராக் ஆசாமி துஷார்பாயை தனியே தள்ளிக்கொண்டு போய் மெதுவாக கேட்டேன் 'என்னடா நடக்குது? இதெல்லாம் என்னா யாவாரம்ப்பா?' என.
துஷார்பாய் கொஞ்சம் உஷார்பாய். முதலில் ஏதோ பூசி மெழிகினான். அப்புறம் 'அரே ஷிரிதர்பாய்! சப் காலா தந்தா ஹை.' என நாசூக்காக சொல்லிவிட்டு குட்கா பொட்டலத்தை கிழித்தான். 'பின்னே எதுக்குடா அவங்கூட வெத்திலை போட்டுக்கிட்டு சுத்தறே?' என கேட்ட கேள்விக்கு அந்தப்பக்கம் திரும்பி பொளிச்சென எச்சிலைத்துப்பிவிட்டு, அதனால் தான் வேலையை விடப்போவதாக சொன்னான்.
எனக்கு பயம் அடிவயிற்றில் இறங்க உடனே கழிவறை போகவேண்டும் போலிருந்தது. சாதாரணமாக திருச்சி NSB ரோட்டில் எதிரே போலீஸ்காரர் வந்தாலே ரோட்டை க்ராஸ் செய்யும் ஆசாமி நான். அடுத்து என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்த ஜதின்பாய்க்கு போன் செய்தேன். 'உன்னை பங்கு வர்த்தக வேலைக்கு part time மட்டும் தானே போகச்சொன்னேன்? ஏன் சி.பூர் வேலையை ஒப்புக்கொண்டாய்? அவர்கள்மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன' என அவர் சொன்னபோது எனக்கு தலையைச்சுற்றியது.
ஏதோ பகுதி நேர வருமானம் மற்றும் நாக்குக்கு பிடித்த குஜராத்தி தின்பண்டங்கள் என ஆரம்பித்த நம் வேலை ஜெயிலில் முடிவதா? நல்ல வேளை ..எங்கோ பெரிய ப்ரச்னையில் மாட்டிக்கொள்ள இருந்தேன். இப்போது என்ன செய்வது?
இவ்வளவு பயம் தேவையா என நண்பர்கள் கேட்டார்கள். 'ஶ்ரீதரா... நீ சி.பூரில் தானே இருக்கப்போகிறாய்... இந்தியாவில் உனக்கு பிரச்னை எதுவும் வராது.. பேசாமல் அந்த வேலையில் சேர்ந்துவிடு' என அட்வைஸ்.
அதிகம் குழம்பிக்கொள்ளாமல் சட்டென முடிவு செய்தேன். பம்பாயிலேயே தப்புத்தண்டா பண்ணாமல் நல்ல வேலையில் இருக்கும்போது பாழாய்ப்போன பார்ட் டைம் மற்றும் சி.பூர் வேலை தேவையா? இந்தியா வரும்போதெல்லாம் வேறு பெயர்களில் கையெழுத்திட வேண்டுமா? என்றாவது மாட்டிக்கொண்டால்?
கைதி உடையில் 'என் அண்ணன்' MGR ஜெயிலில் கல்லுடைத்துப்பாடும் 'கடவுள் ஏன் கல்லானார்.. மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே' பாட்டு நினைவுக்கு வந்தது. எம்ஜியார் வெளிய வந்துடுவாரு.. நாம வருவமா? 'நஹீஈஈ...' என அலறியடித்து ஜிதேந்திரா எழுந்து உட்காரும் இந்தி கெட்டகனவு எனக்கும் வந்தது.
அடுத்த சில நாட்களுக்கு திருமதி.மெர்ச்சன்ட் என் ஆபிசுக்கு செய்யும் எல்லா போன்களையும் தவிர்த்தேன். ஒரு மாதம் கழித்து சி.பூர் தடியன் ஊருக்குப்போனதும், தாயார் மற்றும் சகோதரிகளை நேரில் பார்த்தேன். 'கல்யாணம் முடிவு செய்து விட்டதாலும், என் ஜாதகத்தில் நான் வேலை செய்யும் கம்பெனிக்கு இப்போதைக்கு என்னால் நேரம் சரியில்லை' என ஏதோ ஒரு பொய்யை அவிழ்த்து விட, அவர்களும் பயந்து போய் 'அப்ப சி.பூர் வேலை மட்டுமல்ல, பார்ட் டைம் வேலைக்கும் வரவேண்டாம்' என சொன்ன கையோடு பெரிய வட்டமான தட்டில் குஜராத்தி தாலி பரிமாற, மசாலா லஸ்ஸியை கடைசி சொட்டு விழும் வரை வாயில் கவிழ்த்து விட்டு கிளம்பினேன்.
அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஜில்லென காற்று முகத்தில் வீச, பரவசம்.. நீண்ட மூச்சை இழுத்து விட்டேன். தூரத்தில் மராட்டிய கிழவர் க்றீச்சென இழுத்து மூடும் லிஃப்ட் சத்தம். பம்பாய் முன்னை விட அழகாகத்தெரிந்தது. சர்ச்கேட் ஸ்டேஷனில் ஒரு சாய் வாங்கி மெதுவாக ருசித்துக்குடித்தேன். மனசு லேசானது. அப்பாடா... இனி வேறு பெயர்களில் கையெழுத்து போட வேண்டியதில்லை. உள்ளூரில் தைரியமாக இனி நம் பெயரிலேயே கையெழுத்து போடலாம்!.
ரயில் சீசன் டிக்கெட் பத்திரமாக இருக்கிறதாவென பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து பார்த்தபோது அதில் 'சீதாபதி ஶ்ரீதர்' என்ற பெயரே அழகாக இருந்தது.
கோட்டோவியத்துடன்,
சீதாபதி ஶ்ரீதர்

எது உன்னுடையதோ..2014 மீள்

அந்த பதிவாளர் அலுவலகம் திருச்சி நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. முன்கூட்டியே போனில் சொல்லி வைத்திருந்ததால் கம்பெனி பிரதிநிதி (க.பி) என்னையும் மனைவி Usharani Sridhar ஐயும் காலை எங்கள் வீட்டிலிருந்து தன் இன்டிகா காரில் ஏற்றிக்கொண்டார்.
நிலம் தொடர்பான பதிவு செய்ய நாங்கள் அங்கு சென்றதும் பத்திரம் எழுதும் கடை முன் கார் நிற்க, க.பி மட்டும் உள்ளே ஓடினார். "ஒன்னும் பெரிய வேலை இல்ல சார். அக்ரிமென்ட் கம்ப்யூட்டர்ல ரெடியா இருக்கு. ஆயிர்ருவாய்க்கு பத்திரத்தாள் வாங்கி அதுல ப்ரின்ட் எடுக்கனும்" என சொல்லி ஓடிய க.பி.க்கு சுமார் 25 வயது தான் இருக்கும். மாதத்தில் முக்காவாசி நாட்கள் தமிழ்நாட்டின் பல பாகங்களுக்கு வாடிக்கையாளர்களை கூட்டிச்சென்று அவர்கள் கம்பெனி மூலம் வாங்கிய நிலத்தை அந்தந்த மாவட்ட/ஊர் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுப்பது அவர் வேலை. அவரே 'செல்லர்' மற்றும் ‘கம்பெனி இயக்குநர்’ என கையொப்பமிடுவார்.
பதிவு செய்ய முன்கூட்டியே எல்லா செலவுகளுக்கும் சேர்த்து கனிசமான தொகையை நம்மிடமிருந்து வாங்கி விடுவார்கள். நமக்கு அதிகம் வேலையில்லை. இளநீர் சாப்பிட்டுக்கொண்டே (பைசா அவர் குடுத்துட்டார்) அவர்கள் கை காட்டுமிடத்தில் கையொப்பமிடவேண்டும். எல்லாம் முடிந்தபின் திருச்சி பஸ் ஸ்டாண்டில் பெரிய ஓட்டல் ஒன்றில் மதிய சாப்பாடு வாங்கிக்கொடுத்து வாழைப்பழம் பீடாவுடன் நம்மை வீட்டில் ட்ராப் செய்துவிடுவார்கள்.
"பதிவு செஞ்சவுடன ஒரு வில்லங்கம் எடுக்கனுமே" என தயங்கி கேட்கும் நம்மிடம் "இன்னும் 10 நாள்ல சிஸ்டத்துல ஏத்திடுவாங்க.. அப்பறமா நீங்க ஆன்லைன்ல போட்டு வில்லங்கம் எடுத்துறலாம்" என டக்கென பதில் வரும்.
"ஏம்ம்பா..நெலத்தை சுத்தி காம்பவுன்டு செவுரெடுத்து இரும்பு கேட் போட்டு கேட்டான்ட 'இந்த நிலம் இன்னாருக்கு சொந்தம்..மீறி உள்ளே வருபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'னு போர்டு வைக்கனுமே என வெள்ளந்தியாக கேட்ட நம்மிடம் அவர் "சார் நான் ரிஜிஸ்ட்ரேஷன் டீம். அதெல்லாம் மார்க்கெட்டிங் டீம் பாத்துப்பாங்க" என சொல்லிவிட்டு '10 கிலோமீட்டருக்கு சுத்திலும் வெறும் நெலந்தான் இருக்கு.. கல்லு நட்டதே பெருசு.. இவுருக்கு காம்பவுன்டு செவுராம்" என அவர் முனுமுனுத்தது நம் காதில் லேசாக விழுந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அந்த பக்கம் திரும்பிக்கொண்டோம் .
பக்கத்தில் இன்னொரு இளைஞர். அவரும் கஸ்டமராம். கத்தார் பார்ட்டி. சம்பிரதாயத்துக்கு அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தேன் தமிழில். வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே பதில் சொன்ன அவர் பிசியாக தினமணி படித்துக்கொண்டிருந்தார். இதற்குள் பத்திரங்கள் ரெடி செய்து நம்மிடம் வந்தார்கள். எல்லா பக்கங்களிலும் கருப்பு மையில் கையொப்பமாம். போட்டோம்.
"சார்.. நீங்க கத்தார் பார்ட்டிக்கு சாட்சி கையெழுத்து போடுங்க.. அவுரு உங்களுக்கு சாட்சி கையெழுத்து போடுவார்" என இவர் சொன்னதும் எனக்கு சுள்ளென கோபம் வந்தது. "அதெப்பிடிப்பா? அவர இப்பத்தான் நா பாக்கறேன். எந்த நெலத்த எப்பிடி வாங்கறார்னு எனக்குத்தெரியாம நா எப்பிடி சாட்சிக்கையெழுத்த அவருக்கு போடமுடியும்" என எகிற, அவர் உடனே கூலாக "பரவால்ல சார்.. நம்ம டிரைவர் போடுவார்" என சொல்லவும் தயாராக காத்திருந்த டிரைவர் கிடுகிடுவென சாட்சி கையெழுத்து போட்டார்.
" என்னப்பா! மணி ஒன்ற.. எப்ப முடியும்?" பொறுமையிழந்து கேட்ட என்னிடம் அவர் "மொத்த டாக்குமென்ட்ட ரெடி பண்ணி மேடம் டேபிள்ள வெக்கனும். அவங்க வந்து சுறுக்க ரெண்டு , ரெண்ட்ரைக்குள்ளாற முடிச்சுடுவாங்க" என்றார். பதிவாளர் ஒரு பெண்ணாம்.
இரண்டு மணிக்கு மேடம் வந்ததும் அவர் மேசையைச்சுற்றி யார் யாரோ நின்று கொள்ள எங்களை வெளியே நிற்க வைத்தார்கள். துண்டு பேப்பர்கள் சொறுகி பல ரிஜிஸ்தர்களை அவர் முன் வைக்க அவர் ஏதோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.
'இந்த அலுவலகம் கண்காணிப்பு கேமிராவுக்குட்படுத்தப்பட்டுள்ளது' என்ற போர்டை ஆச்சர்யத்துடன் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே "செல்வம் வாங்க சார்!" என குரல் கேட்டதும் கத்தார் பார்ட்டி உள்ளே ஒடினார். குனிந்தவாறு இருந்த பதிவாளர் பெண்மணியின் கண்கள் மட்டும் தன் மூக்குக்கண்ணாடிக்கு மேல் வெளியே வந்து தீர்க்கமாக அவரை பார்த்து ஏதோ கேட்க கத்தார் பார்ட்டி திருப்பதி லட்டு மாதிரி இருந்த தன் மோட்டா மணி பர்ஸிலிருந்து சுமார் 10 க்ரெடிட் கார்டுகளுக்கு நடுவே இருந்த பான் கார்டை வெளியே எடுத்துக்காட்ட கிஷ்ணமூர்த்தி என்ற குமாஸ்தா "இந்தாண்ட வாங்க சார்" என அவரை கூப்பிட்டார். வெள்ளை வேட்டி சட்டையணிந்த கருப்பான கிராமத்து முதியவர் கிஷ்ணமூர்த்தி. கி.ராஜநாராயணன் சாயல். முரட்டுத்தோற்றம்.
அடுத்து நாங்கள். "மேடம் உங்க பான் கார்டெங்க?" என என் மனைவியை கிஷ்ணமூர்த்தி கேட்க கூட வந்திருந்த க.பி. உடனே அவர் காதில் ஏதோ சொல்ல, என் பான் கார்டை மட்டும் பதிவாளர் பெண்மணி பரிசோதித்தார். மேலும் ஆறேழு சிப்பந்திகள் எதற்காக எங்களைச்சுற்றி நிற்கிறார்களென தெரியவில்லை. டொம் டொம் அந்த பிரதேசமே அதிர அவர்கள் சீல் அடிக்க நாங்கள் கோத்ரொஜ் பீரோவை ஒட்டி பவ்யமாக நின்றோம்.
"அங்க நேரா பாருங்க சார்"- கிஷ்ணமூர்த்தி கை காட்ட அந்த திசையில் உள்ள கவுன்டர் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு வெப்கேமிரா நாகப்பாம்பு போல நம்மை படமெடுத்தது. திருப்தியுடன் நான் மனைவியை பார்க்க புடவையை சரி செய்துகொண்டு அவளும் போஸ் கொடுத்தாள்.
அடுத்து கட்டைவிரல் பதிவு. நம் கை கட்டை விரலை கிஷ்ண மூர்த்தி இறுக்க பிடித்து மையில் தொட்டு பத்திர தாளில் மாறி மாறி அழுத்த உயிர் போகும் வலி. ரிஜிஸ்ட்ரேஷன் கட்டன ரசீதையும் நம் படமெடுத்த காகிதத்தையும் வெளியே எடுத்து அதில் நாம் கையொப்பமிடவேண்டுமாம்.
பிரின்ட்டர் கக்கிய காகிதத்தை பார்த்தேன். இந்த போட்டோவுல இருக்கற ஆசாமிக்கு கிட்டத்தட்ட நம்ப மொக ஜாடை இருக்கே என நான் வியந்து மறுபடியும் போட்டோவை.. அடச்சீ! அது நம்முடைய போட்டோ தான்! கிட்டத்தட்ட ஒற்றைக்கண் சிவராசு மாதிரி ஆக்கிவிட்டார்கள் பாவிகள்..
அதற்குள் வேறு ஏதோ தவறு நடந்துவிட 'செல்வம்' என்று பிரின்ட் செய்யப்பட்டுள்ள ரசீதை என் முன் நீட்டினார்கள். ‘அய்யா! நா சீதாபதி ஶ்ரீதருங்க!’ என ஏவியெம் ராஜன் மாதிரி பரிதாபமாக சொல்ல ரசீதை கையால் அடித்து பேரை மாற்றி எழுதினார் கிஷ்ணமூர்த்தி. ‘சார்..,பேரு மாறி இருக்கே... அத கைல திருத்தலாமுங்களா? சிஸ்டத்துல மாத்த வேணாமுங்களா?‘ என்ற என்னிடம் "ரசீதுல பேரை விட நம்பரு தான் முக்கியம்...நாங்க பாத்துக்கிடுவம்" ... கிஷ்ணமூர்த்தி லேசாக உஷ்ணமூர்த்தியானார்.
அந்த வெப் கேமிரா, தம்ப் இம்ப்ரெஷன் பார்ட்டிகள் எல்லோரும் அரசாங்க ஊழியர்கள் கிடையாதாம். அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட சர்வீசாம் அது. அதற்கென்ற தனியாக சார்ஜ் கொடுக்கவேண்டுமென கிஷ்ணமூர்த்தி சொல்ல நம் க.பி. மறுபடியும் அவர் காதில் ஏதோ சொல்ல கிஷ்ணமூர்த்தி முகத்தில் மலர்ச்சி. "நீங்க வெளிய இருங்க சார் " என நம்மை அனுப்பிவிட்டார்கள்.
ஒருவழியாக முடிந்து வெளியே வந்தோம். எல்லாமே ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் அங்கு ஓடுகிறது. பதிவாளர் பெண் நம் அடையாள அட்டை, தஸ்தாவேஜுக்களை அலட்சியமாக பார்வையிடுகிறார். நம்பரை சரி பார்க்கிறார். உடனே கிடுகிடுவென கையொப்பமிடுகிறார். நடுவே பிஸ்லேரி அருந்துகிறார். எப்போதாவது ஏதோ கேள்வி கேட்க கிஷ்ணமூர்த்தி போன்றவர்கள் முன்னே பாய்ந்து உடனே பதில். தள்ளி நிற்கும் நமக்கு இனம்புரியாத பயம். தேவையில்லாமல் சுற்றிலும் கூட்டம். 'லீகல் சர்வீஸ் சார்ஜஸ்' என மொத்தமாக நம்மிடம் ஏற்கனவே வசூலித்த பணத்திற்கு விளக்கமெல்லாம் கிடையாது. கேட்டால் வெடுக்கென பதில்.
பதிவாளர் பெண் இருக்கையின் பின்புறம் லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் படங்கள். அந்தப்பக்கம் பெரிய கிருஷ்ணர் படம்... பக்கத்தில் கீதோபதேசம்..மெல்ல வாசித்தேன்...
"எது நடந்தோ அது நன்றாகவே நடந்தது" ( ஆஹா.. அப்ப நிலம் வாங்கியது நல்லது தான்)
அடுத்த சில வரிகளுக்குப்பின்...
" இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது" (ஐயோ! நாராயணா! விசு ஜோக் ஞாபகத்துக்கு வருதே!)
(சீதாபதி ஶ்ரீதர்)
2014 மீள்