Sunday, April 22, 2018

வாடிகன்-2014 மீள்

...
நேற்று மதியம் சுமார் 3 மணி நேரம் வாடிகன் அரண்மனையை எங்களுக்கு சுற்றிக்காண்பித்த அந்த கைடுக்கு வயது 70க்கு மேல் இருக்கும். அமெரிக்கர். சவரப்பச்சை முகம். நம்மை ஊடுருவி பார்க்கும் விழிகள். ஏதோ திருச்சி அல்லிமால் தெரு முனையில் வேட்டியை மடித்துக்கொண்டு கதைத்துக்க்கொண்டிருப்பது போல் வாஞ்சையுடன் பேசிக்கொண்டிருந்தார். ...நாங்கள் மொத்தம் 12 பேர் அவரது குழுவில்.
வெளியே நல்ல குளிர். ஐரோப்பா போவதற்காக வாங்கிய ஸ்கெட்சர் ஷூ, லைஃப்ஸ்டைலில் வாங்கிய தெர்மல்வேர் என எல்லோரும் எக்ஸ்ட்ரா ஒரிரண்டு கிலோ கூடுதல் எடையுடன் இருந்தாலும் நம்மூர் மங்கி குல்லா மஃப்ளருக்கும் ஈடாகுமா!
ரோம் நகரம் மற்றும் ஒருங்கிணைந்த இத்தாலி உருவான கதை, தனி நாடாவதற்கு முன் வாடிகனில் போப்பாண்டவர்கள் தங்கள் உரிமைக்காக போராடியது, பிறகு பிரம்மாண்டமான தேவாலயத்தை கட்டியது போன்ற பழங்கதைகளை அவர் எடுத்து விட, ஒவ்வொருவராக கொட்டாவி விட ஆரம்பித்தோம். ஆனால் சிலர் மட்டும் (என்னைத்தவிர) படு சீரியஸாக அவர் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தார்கள். காரணம், அவருக்கு பின்னால் அந்தப்பக்கம் கூந்தலை அள்ளி முடித்து, முழு மஞ்சள் முதுகையும் காட்டியபடி நின்று கொண்டிருந்த அரை நிக்கர் சீனப்பெண். ‘அதை நீயும் தானே பார்த்தாய்!’ என கேட்பவர்கள் அடுத்த பாரா போய்விடுவது உசிதம்.
ஸீஸர் மற்றும் அகஸ்டஸ் பற்றிய விபரங்கள், மைக்கல் ஆஞ்சலோ முதன்முதலில் ரோமுக்கு வந்தது, ஆரம்பத்தில் அவரை யாருக்கும் தெரியாதென்பது, அவர் தனியாக தீவு ஒன்றில் சில வருடங்கள் தங்கியிருந்து அரண்மனையின் வரைப்படத்துக்கு (plan) ஏற்றவாறு ஓவியங்கள் வரைய அளவுகள் மற்றும் themes தயார் செய்தது, பிறகு அரண்மனையில் சீடர்கள் தண்ணீரில் வர்ணங்களை கலந்து 20 மீட்டர் உயரத்தில் இருக்கும் மைக்கலுக்கு கயிறு மூலம் அனுப்ப அவர் வானம் பார்த்தவாறு படுத்துக்கொண்டே உட்கூரை சுவற்றில் ஏசு கிருஸ்து, மோசஸ், கன்னி மரியாள், கடைசி விருந்து போன்ற உலகப்புகழ் பெற்ற ஓவியங்களை நான்கு வருடங்களில் வரைந்த விபரங்கள்.. கேட்க சுவாரசியமாக இருந்தாலும் கைடு நீட்டிக் கொண்டு போனார்.
மைக்கலாஞ்சலோ சிற்பம், ஓவியம், கவிதை என பன்முகத்திறன் கொண்டவராம். திருமணமே செய்து கொள்ளவில்லையாம். (இருக்காதா பின்னே!) ...கைடு மூச்சு விடாமல் பேச, நாங்கள் அடிக்கடி மணிக்கடிகாரத்தை பார்ப்பதை அவர் கவனிக்கத்தவறவில்லை. ஒரு உ.பி. பைய்யா கைடின் கடிகாரத்தையே உற்று பார்த்து தொலைத்தான். கைடின் காது லேசாக சிவக்க, அவரை திருப்தி படுத்த அவரைப்பார்த்து கூடுதலாக தலையை அசைத்தது என் குற்றம்! அடுத்த அரை மணி நேரம் என்னையே பார்த்துக் கொண்டு அவர் விளக்க, பல்லை கடித்துக் கொண்டு கொட்டாவியை அடக்க முயன்றேன்.
மனுஷனுக்கு கை, கால் கொடைச்சலே வராது என நினைக்கிறேன். எங்களுக்குத்தான் அப்பப்ப பசி, தண்ணித்தாகம், இயற்கையின் அழைப்பு எல்லாம் வரிசையாக....
ஒரு மணி நேரத்திற்கு மேல் விலாவாரியாக அவர் விளக்கியபோது நமக்கு விலா எலும்பு வலித்தது. எவ்வளவு நேரம் தான் மோட்டு வளைகளையும் விட்டத்தையும் பார்ப்பது?
தோளுக்கு மேல் வளர்ந்த என் சின்னவன் மெல்ல என் தோளில் சாய்ந்து கொண்டு 'does he not have any break in his job?' என கேட்ட போது அவருக்கு ஏதோ அசரீரி சொல்லி விட்டது மாதிரி புரிந்து விட்டது போலும். ஆசாமி படு சூட்டிகை. தொண்டையை கனைத்துக்கொண்டு ‘at the end of my briefing I will be asking questions to some one I choose from you guys’ என ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். அது வரை தலையை அசைத்துக்கொண்டிருந்த மனைவி Usharani Sridhar கலவரத்துடன் என்னை பார்த்து "ஏமி போடுஸ்தாமா" என கேட்க, கூட வந்திருந்த மற்றொரு இங்கிலாந்துக்காரர் "oh gaad!" என சலித்துக்கொண்டார்.
அடுத்து அவர் 'next one hour I will be briefing you, the functioning of pope's office and his powers' என்றதும் நாங்கள் கீழே விழாமலிருக்க ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டோம். அரை நிக்கர் சீனாக்காரி படியேறி எப்போதோ அடுத்த அரண்மனை போய்விட்டிருந்தாள். வாடிகனை எவன் கண்டுபிடிச்சான்! என சிலர் சலித்துக்கொண்டனர்.
கைடு பக்கமே திரும்பாமல், அந்தப்பக்கம் ஏதோ நிர்வாண சிற்பத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெங்காலிக்காரரைப் பார்த்து ‘are you with me?’ என கோபமாக நம்ம கைடு அதட்ட, பெங்காலிக்காரர் அதிர்ந்து, நறநறவென பல்லைக்கடித்து அம்ரீஷ் பூரி மாதிரி ‘yes! I am’ என பதிலுக்கு முறைக்க எங்களுக்கு இன்னும் சுவாரசியம் கூடியது. ச்சே! அவர்கள் சண்டை ஒன்றும் போட்டுக்கொள்ளவில்லை.
அந்த கைடை குறை சொல்வதற்கில்லை. மிக அழகாக விளக்கி அவர் தன் கடமையை செய்து கொண்டிருக்க, அது வாடிகனோ வாடிப்பட்டியோ, மதியம் 4 மணிக்கு மேல் ஆனதால் எல்லோருக்கும் டீ தேவைப்பட்டது. பாவிகள்! எங்கேயும் ஜனங்கள் உட்கார முடியாதபடி நாற்காலியோ, திண்ணையோ இல்லை. கூட்டம் நகர வேண்டுமல்லவா!
கடைசியாக பிரம்மாண்டமான Sistine chapel எனப்படும் சிற்றாலயம் வந்தபோது பிரமிப்படைந்தோம். எங்கு பார்த்தாலும் ஓவியங்களும் சிற்பங்களும்..
அடுத்து ‘இந்த வெள்ளைக் கோட்டிற்கு அந்த பக்கம் வாடிகன், இந்த பக்கம் ரோம்’ போன்ற சுவாரசியமான சமாசாரங்கள்.
உலகத்தில் உள்ள எல்லா கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவர் போப் என்றும், அவர் தங்கும் இல்லம், வாடிகனில் அலுவலகங்கள், பரப்பளவில் ஶ்ரீரங்கத்தை விட சிறியதான(என் ஊகத்தில்)அந்நாட்டிற்கு தனி நாணயம், பாஸ்போர்ட் போன்ற விபரங்கள், அங்கே பணி புரியும் அலுவலர்கள் எல்லோரையும் காண்பித்தார் கைடு.
சிப்பந்தி ஒருவர் மிகவும் பொறுப்புடன் போப் மற்றும் அவரது glergymen, கார்டினல்களுக்கு சிகப்பு வண்ணத்தில் புதிய உடைகள் தைத்து அழகாக கண்ணாடி அல்மேராவில் மாட்டி வைத்துக்கொண்டிருந்தார். அங்கங்கே காவலுக்கு நிற்கும் அத்தனை guardsம் உம்மனாம் மூஞ்சிகள். எல்லோரும் சுவிஸ் நாட்டவர்களாம். நமக்கு வத்தல் வடாம் மாதிரி சுவிஸ் நாட்டவர்களுக்கு சாக்லேட் தான் மதியம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள..போன்ற தகவல்களை கைடு அளித்து பசியை மேலும் தூண்டினார்.
அரண்மனையில் பணிபுரியும் சிலர் க்ரீஸ் மற்றும் எகிப்து நாட்டவர்களாம்.(முன்பு கிரீஸ், எகிப்து நாடுகள் இத்தாலியின் காலனி ஆதிக்கத்திற்குட்பட்டிருந்ததால்). முந்தைய போப் பெனடிட்டோ ஜெர்மானியர் என்பதால் வாடிகனுக்கு நிறைய ஜெர்மானியர்களை கொண்டு வந்தார் என்பது உபரித்தகவல். நம் அமெரிக்க கைடு கொஞ்சம் விஷமப்பேர்வழி. தாழ்ந்த குரலில் அரண்மனையில் நடக்கும் அரசியலையும் குறும்புத்தனத்துடன் நமக்கு கொஞ்சம் விளக்கினார்.(அட! அப்போது மட்டும் எங்களுக்கு களைப்பே தெரியவில்லையே!)
அது சரி! அங்கு கர்ம சிரத்தையுடன் போப் மற்றும் கார்டினல்களுக்கு உடைகள் தைக்கும் அந்த அன்பருக்காகத்தான் இந்த பதிவையே எழுதுகிறேன். அவர் ஒர் இந்தியர் என கைடு சொன்னபோது எங்களுக்கு பெருமிதம் தாங்கவில்லை. உலகத்தின் மிகப்பெரிய தேவாலயம் கொண்ட வாடிகனில் ஒரு இந்தியரா என எங்களுக்கு புல்லரித்தது. அது சரி! அவர் எந்த மாநிலத்தவர்?
புள்ளி..மலையாளியானு..!
(சட்டென வரைந்த பென்சில் ஓவியத்துடன்..)
சீதாபதி ஶ்ரீதர்
2014 மீள்

No comments:

Post a Comment