Tuesday, March 13, 2018

வெங்கடேஷ்

டோல்கேட்டிலிருந்து செந்தண்ணீர்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் வலதுபுறம் ஜி-கார்னர் திரும்பி ‘பேய் தொங்கிட்ருக்குமோ!’ என பயத்துடன் அந்த புளிய மரங்களை பார்ப்பதை தவிர்த்து, அடர்ந்த மரங்கள் இருபுறமும் உள்ள சாலை உள்ளே நுழைந்தால் பொன்மலை. பொன்மலை ரயிலடி எதிரே ‘அவன் தான் மனிதன்’ சிவாஜி வீடு மாதிரி பெரிய வீடு. உள்ளே நுழைய ஒரு கேட். வெளியே வர ஒரு கேட். வெள்ளைக்காரன் கட்டிய, டிவிஷனல் இஞ்சினீயர் சப்தரிஷி வீடு.
பெரியவன் வெங்கடேஷ். சின்னவன் வைத்தி. நான், வைத்தி, கணபதி மூவரும் சேர்ந்து சி.ஏ பரீட்சைக்கு படிக்க ரயில்வே ஸ்டேஷன் போகும் முன் வைத்தி வீட்டில் காபி. வெங்கடேஷ் எம்.ஏ முடித்து மனிதவளம் சார்ந்த (DPMIR) படிப்பு. வாசலில் நாலைந்து சேர் போட்டு எல்லோரும் அரட்டை. அந்தப்பக்கம் அவர்கள் அம்மாவும், சில சமயம் டூர் முடிந்து ஜீப்பில் வந்திறங்கிய அப்பா சப்தரிஷியும் பனியனுடன்.
பேச்சின் நடுவே ‘அப்பா நேத்து ரயில்ல ஏ.சி சலூன்ல வற்ரச்சே’ என வெங்கடேஷ் சொல்ல, நான் குறுக்கிட்டு ‘ஏசி சலூனா! அப்ப முடி வெட்டறவருக்கு ஜாலி தான்.. அவருக்கும் ஏசி இல்ல!’ என சொல்ல பெருங்குரலுடன் நண்பர்களின் வெடிச்சிரிப்பு அந்த இடமே ஒலிக்கும். டி.ராஜேந்தர், பாரதி ராஜா, பாக்யராஜ் படங்கள், ராதா, அம்பிகா என நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம்.
சில்க் ஸ்மிதா, ப்ரிமிளா என பேச்சு ஒரு மார்க்கமாக திரும்பும்போது குரலை கம்மி குசுகுசுவென நாங்கள் பேச ஆரம்பிக்க, ‘போதும்பா! நாழியாச்சு! படிக்க கிளம்புங்க!’ என அம்மா விரட்டியும் கேட் அருகே நின்று கொண்டு ஶ்ரீப்ரியா ஜோக் (இங்க எழுத முடியாதுங்க) பற்றி இன்னும் கொஞ்ச நேரம்..
இன்கம் டாக்ஸ் சப்ஜெக்டில் ‘ஏம்ப்பா! அந்த க்ளப்பிங் ஆஃப் இன்கம் டாக்ஸ் ஆஃப் ஸ்பௌஸ்.. என்ன செக்‌ஷன் அது!’ என நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளே இருந்து ‘செக்‌ஷன் 64(1)!’ என வெங்கடேஷ் கத்துவான். இன்கம்டாக்ஸ் அமென்ட்மென்ட் பற்றி எங்களுடன் நிறைய விவாதிப்பான் வெங்கடேஷ். அசாத்தியமான ஞாபக சக்தி அவனுக்கு.
நெடுநெடுவென உயரம் வெங்கடேஷ். ஞாயிரன்று அவன் பெரிய வெள்ளை ஜிப்பா+ஜீன்சுடன் தம்பி வைத்தி சகிதம் தனது லூனாவில் சோனாமீனா தியேட்டரில் கன்னிராசி படம் பார்க்க போகும் வழியில் சர்க்யூட் ஹவுஸ் காலனியில் குடியிருக்கும் என்னை பார்க்க வரும்போது அங்கங்கே மாணவிகள் பால்கனியிலிருந்து இவர்களை சைட் அடிப்பது பார்க்க எனக்கே பொறாமையாக இருக்கும். ‘ஹும்! எல்லாத்துக்கும் மச்சம் வேணுமே!’ என பெருமூச்சுடன், தண்ணி லாரி பின்னால் குடத்துடன் ஓடுவேன்.
1986இல் இப்படியான திருச்சியின் சொர்க்கமான இளமைக்காலத்தை அப்படியே விட்டுவிட்டு பம்பாய் சென்றதும், வெங்கடேஷ், வைத்தி போன்ற நண்பர்கள் தொடர்பு அற்றுப்போனதும், கணபதியுடன் பம்பாய், இந்தோர், பஹ்ரைன் என ஊர் ஊராக மாறியது.. 31 வருடங்கள் உருண்டு ஓடியது தெரியவில்லை.
சில வருடங்கள் முன் கணபதி மூலம் வைத்தியின் (Vaidya Rishi) தொடர்பு கிடைக்க 25 வருடங்களுக்குப்பிறகு பெங்களூரில் அவனை சந்தித்தேன். நிதிஷ் எஸ்டேட்ஸ் எனும் புகழ் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ED யாக இருக்கிறான். பலால் ரெசிடென்சியில் முறுகல் ரவா தோசைக்கு நடுவே மறக்காமல் வெங்கடேஷின் நம்பரை வாங்கிக்கொண்டு, அப்போதிலிருந்து வெங்கடேஷுடனும் மீண்டும் தொடர்பு கொண்டாலும் அவனை நேரில் சந்திக்க இயலாமல் தள்ளிப்போனது. முகநூலில் நட்பு தொடர்ந்தது.
சென்ற மாதம் சென்னையில் நண்பர் வீட்டு
விஷேசத்திற்கு போகவேண்டியிருந்தது. ‘ஶ்ரீதரா! வெங்கடேஷை வரச்
சொல்லியிருக்கேன்!’ என கணபதி சொல்ல மனம் குதூகலமானது. மண்டபத்தில் நுழையும்போது கூட்டத்தின் நடுவே உயரமான வெங்கடேஷ் தான் தெரிந்தான். அப்படியே இறுக்க கட்டிக்கொண்டான். இப்பவும் அதே சிரிப்பு, பொன்மலை தெனாவெட்டு, குறும்பு, அரட்டை.. நெற்றியில் குங்குமம்.
HR Consultancy, இன்டெலிஜென்ட் என வெங்கடேஷைப்பற்றி கணபதியின் முகநூல் பதிவு பார்த்தேன்.
இன்று வெங்கடேஷுக்கு பிறந்தநாள். ‘ஶ்ரீதரா! அவம்படத்தையும் வரஞ்சு போட்ரு’ என்ற கணபதியின் கட்டளையை மீறுவேனா!
நமக்கு நண்பர்கள் தானே வாழ்க்கையே!
Image may contain: 1 person, smiling, drawing

பார்சிலோனா

ஃபிரான்ஸும் ஸ்பெயினும் உரசிக்கொள்ளுமிடத்தில் உள்ள அழகிய பெர்பியான் (Perpignan) நகருக்கு அலுவல் நிமித்தம் செல்ல வேண்டியிருந்தது. அந்நகரம் பிரான்ஸில் இருந்தாலும் பாரிஸ் வெகு தொலைவு. ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து இரண்டே மணி நேர பஸ் பிரயாணம் தான். கூடவே மனைவி Usharani Sridhar .
நாங்கள் தங்கிய மெர்க்யூர் விடுதி முழுக்க பெண்களால் இயக்கப்படுவதால் அங்கங்கே பளிச்சென மலர் கொத்துகள், வண்ண விளக்குகள், சுவர்களில் பிங்க் வர்ணம். வரவேற்பறை பெண்கள் பகுதி நேர சிப்பந்திகளாம். கல்லூரியில் படிக்கும் கீர்த்தி சுரேஷ்கள். மலர்ந்த முகம், இனிமையான பேச்சு. சின்ன குழந்தைகள் பென்சிலை செங்குத்தாக இறுக்கி பிடித்து முட்டை முட்டையாக எழுதுவது போல ஃப்ரெஞ்ச் மொழியில் அவர்கள் எழுதுவதை ரசித்தேன் (கூட இருந்த உஷாவும்தான்).
பெர்பியான் கிட்டத்தட்ட கரூர் மாதிரி. எக்கச்சக்கமாக பணம் புழங்கும் சிறிய வியாபார நகரம். உலகின் மற்ற பாகங்களுக்கு பழங்கள், பூக்கள், காய்கறிகள் ஏற்றுமதி செய்கிறார்கள். எங்கும் பச்சை பசேலென ஊரே அழகு. நகருக்குள் விபத்தே ஏற்பட முடியாத அளவு நூற்றுக்கணக்கில் சிக்னல்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களுடன் வளைந்து வளைந்து செல்லும் குறுகிய சாலைகள். வாகனங்கள் நாற்பது கி.மீ வேகத்தில் அசைந்து மெதுவாக செல்வது மறக்க முடியாத அனுபவம். பஹ்ரைனில் அதிகம் போனியாகாத சிட்ரோயென், ஓபல், ரிநோ மற்றும் வோக்ஸ்வேகன் கார்கள் இங்கே ரோடு முழுக்க.
பல்வேறு உணவுப்பொருட்களை பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பஹ்ரைன் சந்தை, அரசாங்கம், ராணுவம் மற்றும் அமெரிக்க கடற்படைக்கு விநியோகிக்கிறது எங்கள் நிறுவனம். நாங்கள் இறக்குமதி செய்யும் நெதர்லாந்து பால் பவுடர், பாகிஸ்தானிய/இந்திய பாசுமதி அரிசி, மலேஷிய உணவு எண்ணெய், இந்திய மற்றும் ஜெர்மானிய சர்க்கரை, எகிப்திய பாலாடைக்கட்டி (cheese) போன்ற பொருட்கள் இங்கு அதிகம் பாவிக்கப்படுகின்றன. அதனால் நிறைய food exhibition களுக்கும், புதிய தரமான உணவுப்பொருட்களை ஆ(பீ)ராய்ந்து தேடியும் நான் செய்யும் பயணங்களில் இதுவொன்று.
நான்கு நாட்களில் வேலை முடிந்து பெர்பியானிலிருந்து பார்சிலோனாவிற்கு இரண்டு மணி நேர பஸ் பயணம். சீராக வெண்ணை போன்ற சாலையில் பஸ் ஊர்வது போல இருந்தாலும் சுமார் 120 கி.மீ வேகமே தெரியவில்லை. இது போல நெடுந்தொலைவு பயணமென்றால் உறவினர்கள் நண்பர்கள் பற்றி மனைவியுடன் பேசிக்கொண்டு போவதால் பயணக்களைப்பு தெரிவதில்லை. அதிலும் குடும்ப அரசியல் பேச்சென்றால் போதும், பஸ்ஸாக இருந்தாலும் உஷா சம்மனங்கால் போட்டுக்கொண்டு பேச ஆரம்பித்து விடுவாள். மாலை இருள் மெல்ல சூழ, தூரத்தில் மங்கியதோர் நிலவினிலே பார்ஸிலோனாவை கண்டேன்.
ஐரோப்பாவின் பார்சிலோனா என்றால் முதலில் நினைவுக்கு வருவது கால் பந்தாட்டமும் ஒலிம்பிக் போட்டியும் தான். எஸ்பானியா (ஸ்பெயின்) நாட்டின் முக்கிய நகரமான பார்சிலோனா சமீபத்தில் தன்னாட்சி பெற்ற காட்டலூனியாவின் தலைநகரமாகும். ஐரோப்பியாவின் பெரிய விமானநிலையங்களில் பார்சிலோனா ஒன்றாம்.
ஸ்டெஃபி க்ராஃப் சாயலில் செம்பட்டை கேசத்துடனிருந்த விடுதிப்பெண் எங்களுக்கு அறையை ஒதுக்க, இரவு 7 மணிக்கு பெட்டியை போட்டு விட்டு மனைவி கெட்டிலில் போட்டுக்கொடுத்த பச்சை தேநீர் மற்றும் பஹ்ரைனிலிருந்து கொண்டு சென்ற க்ராய்ஸ்ஸோன் பசியை ஓரளவு அடக்க, விடுதியை விட்டு வெளியே வந்து காலாற தெருவில் நடந்தோம்.
நிறைய சர்தார்ஜிகளை பார்க்க முடிந்தது. பஞ்சாபி கவுரின் சிறிய கடை (convenient store)
உள்ளே நுழைந்து சாப்பிட பக்ஷ்ணம் தேடினோம். Ready to eat பஞ்சாபி கறி, புலாவ் என டெட்ராபேக் உணவு பொட்டலத்தை கொதிக்கும் நீரில் அப்படியே போட்டு சில நிமிடங்களில் வெளியே எடுத்து சாப்பிட்டால், மறுநாள் dரிப் ஏற்றும் அளவிற்கு வயிறு உபாதை வருவது சாத்தியம்.
வளைகுடா நாடுகள் போல இல்லாமல் ஐரோப்பிய விடுதிகளில் எப்போதும் சிறிய அறைகள் தாம். அறையில் கெட்டில், காபி, டீ, சர்க்கரைப்பைகள் இலவசம். ஆனால் பக்கத்தில் சிறிய ஃப்ரிட்ஜ்ஜில் உள்ள சீமைச்சாராயம், பீர், வறுகடலை, பிஸ்கோத்து வகையாக்கள் எல்லாம் தொட்டு பார்த்தாலே காசு. அழகான சிறிய குளியலறை. நான்கு பக்கமும் கண்ணாடி. ச்சீ! நமக்கே வெட்கமாக இருந்தது. கழிவறையில் டிஷ்யூ பேப்பர் தான். அரை லிட்டர் காலி பாட்டில்கள் ஏழெட்டை மனைவி எதனால் பெட்டியில் வைத்திருந்தாள் என இப்போது புரிந்தது.
பார்சிலோனாவை சுற்றிப்பார்க்க மொத்தம் இரண்டே நாட்கள் இருந்தன. பொதுவாக டூர் ஏஜென்ட் போன்றவர்கள் மூலம் நான் ஊரை சுற்றிப்பார்ப்பதில்லை. செலவு அதிகம். நாமே உள்ளூர் வரைபடம் மற்றும் கைப்கேசியில் கூகிள் மேப் வைத்துக்கொண்டு டாக்சி, மெட்ரோ ரயில் அல்லது ‘ஹாப் இன் ஹாப் ஆஃப்’ என சுற்றிக்கொண்டிருக்கும் சைட் சீயிங் ரெட் பஸ்களை வேண்டுமிடத்தில் பிடித்து மொத்தம் 18 ஸ்தலங்களில் நமக்கு பிடித்த இடங்களில் மட்டும் இறங்கி சுற்றி பார்த்து விட்டு மறுபடியும் அதே பஸ் பிடித்து திரும்பி வந்து விட்டோம்.
நகரில் அங்கங்கே பஸ்ஸிலோ ரயிலிலோ மாலிலோ உணவகங்களிலோ அகஸ்மாத்தாக பேசிக்கொண்டிருக்கும் கணவன் மனைவியர் திடீரென மூடு வந்து பச்ச்ச்சக்கென உதடுகளை கவ்வி உறிஞ்சி.. யப்பா! பார்க்கும் நமக்கே உதடு வலித்தது. லைட்டா பொறாமையும் கூட. எல்லோரும் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது ஒரு ஜோடி மட்டும் இன்னும் ‘லிப்லாக்’கில் இருக்க அந்த பெண் அவனை விடுவிக்க முயல ‘நம்மவர்’ விடுவதாக இல்லை.
கேடலூனியா அரண்மனை, சாக்ரடா ஃபேமிலியா தேவாலயம் (கதீட்ரல்), உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட மைதானம் (camp nuo), ஒலிம்பிக் ஸ்டேடியம் என ஒரே நாளில் நிறைய இடங்களை சுற்றிப்பார்த்தோம்.
மறுநாள் விலா டி’கார்ஸியா என்ற பகுதிக்கு டாக்சி பிடித்து ‘ஸ்வாகதம்’ இந்திய உணவு விடுதி வந்தோம். குல்ஷன் குரோவர் சாயலிலிலிருந்த லூதியான்வி மேலாளர் ‘ஹாஞ்சி நமஷ்கார்’ என வரவேற்றார். அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் பெரும்பாலோர் எஸ்பானியரே. நாங்கள் வாலன்ஸியா ஆரஞ்சு பழச்சாறு, லார்டு நெல்சன் புதினா எலுமிச்சை தேநீருடன் வெறும் பருப்பு சாதம் மட்டுமே சாப்பிட முடிந்தது. மீதி ஐட்டங்கள்?.. ஏற்கனவே சொன்னமாதிரி மறுநாள் dரிப் தான். அந்தப்பக்கம் ஒரு டியூனிசிய தாத்தா தந்தூரி சிக்கனையும் காந்தா பஜியாவையும் கபளீகரம் செய்து உள்ளே தள்ளிக்கொண்டிருக்க, மேலே உதித் நாராயணும் அல்கா யக்னிக்கும் கால் கால் என கத்திக்கொண்டிருந்தார்கள்.
மாலை ‘லா ரம்லா’ (Las Ramblas) தெருவுக்கு வந்த போது பிரமிப்படைந்தேன். தெருவின் இருபுறமும் ஏராளமான கடைகள். தெருவின் நடுவே ப்ளாட்ஃபாரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஓவியர்கள். கரிக்கட்டி (charcoal), பென்சில், மார்க்கர் கொண்டு விதவிதமாக வரைந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள். சுமார் 5 யூரோக்களுக்கு நம் உருவப்படத்தை சில நிமிடங்களில் வரையும் காரிகேச்சரிஸ்ட்டுகள். ஒருவர் கருப்பான பொடியை ப்ரஷ்ஷில் தொட்டு பேப்பரில் பதித்தவுடன் கை விரல்களால் பூசி பூசி வடிவமைத்த ஓவியம் பிரமிப்பாக இருந்தது.
கடைசியாக ஒருவரிடம் போனோம். அவர் எங்களை எதிரே நிற்க வைத்து, கையில் வைத்திருந்த கருப்பு வெள்ளை தாளை கத்தரிக்கோல் கொண்டு வெட்டி சில நிமிடங்களில் எங்கள் இருவரின் நிழற்படத்தை அற்புதமாக வெட்டி வடிவமைத்து கொடுத்தார் (படம் பார்க்க!)
அதே தெருவில் ISKCON கோயில் இருப்பது கேள்விப்பட்டு இடத்தை விஜாரித்தோம். பத்து கட்டிடங்கள் தள்ளி பிளாசா ரியால் (Royal Plaza square)இல் கோயில் இருப்பதாக பங்காலி இளைஞன் சொன்னான். பிளாசா ரியால் மிகப்பெரிய சதுர வளாகம். கீழ் தளத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இருட்டான சாராய மற்றும் இரவுநேர கேளிக்கை விடுதிகள், கண்ணாடி குவளையில் மொந்தை மொந்தையாக சாராயம் பருகும் லெபனீய பெருசுகள், அலட்சியமாக ஹெனிக்கன் பியர் கேனை திறந்து வாயில் கவிழ்த்து நுரையைத்துடைக்கும் அரேபிய இளைஞர்கள்.. பின்னால் ஈனசுரத்தில் ஜியார்ஜ் மைக்கலின் ‘கேர்லெஸ் விஸ்பர்’. அங்குமிங்கும் ஓடும் துக்குனியூண்டு அரை நிஜார் பிலிப்பினோ பணிப்பெண்கள்.
மேலே முதல் தளத்தில் உள்ள வீடுகள் ஒன்றில் கோயிலாம். படிகளில் ஒரே இருட்டு. தட்டுத்தடுமாறி படியில் ஏறி இரும்பு கேட் ஒன்றின் முன் நின்றோம். அருகே அழைப்பு மணி மாதிரி தெரிந்தது. இருட்டில் தடவி மணியை அழுத்த ஒரு நிமிடம் கழித்து கர்ரர்ர்ரென இரும்பு கேட் திறந்தது. பயந்துகொண்டே கேட் கதவை திறந்து உள்ளே கால் எடுத்து வைக்.. ‘தொபக்’கென் பள்ளம். நல்ல வேளை.. கீழே விழவில்லை. ‘இதி ஒத்து மனக்கு.. பயங்கா உந்தி’ என உஷா தயங்க, நான் அவளை இழுத்துக்கொண்டு இருட்டில் முன்னேற, வெளிச்சமில்லா தாழ்வாரத்தில் மிகப்பெரிய கனமான மரக்கதவு. சக்தி முழுவதையும் திரட்டி க்ற்ற்றீச்சென கதவை தள்ள உள்ளே இஸ்கான் பிரபு ஒருவர் கருப்பு சால்வையை போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜியார் ஜப்பானிய கோவில் உள்ளே நுழையும்போது முக்காடு போட்டு குத்த வைத்து உட்கார்ந்து கண்களை உருட்டிபடி ‘தோஷிகா, கிமோகா’ என ரகசிய வார்த்தைகள் சொல்லும் தெற்றுப்பல் நம்பியார் நினைவுக்கு வந்தார்.
‘என்ன ப்ரபுஜி! கோயிலுக்குள்ளே வருவதற்கு இவ்வளவு கட்டுப்பாடா? பாஆஆன்னு கதவை திறந்து வைக்கலாமே!’ என நான் கேட்க முக்காடை விலக்கிய நம்பியார் பிரபு அமைதியாக சொன்னது: ‘இது அமைதியான ஊர்னு நினைக்காதீங்க பிரபு!. ஐரோப்பா முன்ன மாதிரி இல்ல. அல்ஜீரியா, மொராக்கோ, சிரியா ன்னு எல்லா நாட்டுக்காரனும் இங்க இருக்கான். அரபி, பிரெஞ்சு, எஸ்பானிய, கேடலான் மொழி சகஜமா பேசுவானுங்க. தீவிரவாதி யாருன்னே கண்டு புடிக்க முடியாது. கல்லூரி பேராசிரியரா இருப்பான். கால்நடை மருத்துவராவும் இருப்பான். திடீர்னு தாக்குதல் நடத்துவான். இடுப்புல வெடிகுண்டு பெல்ட்டோட கூட்டத்துல புகுந்து துப்பாக்கில சுடுவது, போலிஸ் புடிக்க வந்தா வெடிகுண்டை ட்ரிக்கர் பண்ணி தானே அபீட் ஆயிருவான். தற்கொலை அவங்களுக்கு தக்காளி சோறு மாதிரி. அவங்களுக்கு அமைதியை குலைச்சி அப்பாவி மக்களை கொல்லனும். உங்கள சிசி டீவில பாத்தாவுட்டுத்தான் கதவ தொறந்தோம். ஹரே கிருஷ்ணா!’
அவர் சொன்னது முற்றிலும் சரி என்பது அடுத்த சில நாட்களில் பஹ்ரைன் வந்ததும் தெரிந்தது. கோயில் இருக்கும் அதே ‘லா ரம்லா’ பகுதியில், அந்த ஓவியர்கள் தங்கள் பிழைப்புக்காக தம் படைப்புக்களை விற்றுக்கொண்டிருந்த அதே தெருவில், உஷாவை நிற்க வைத்து அவளது ஓவியத்தை வடித்த அதே இடத்தில் தீவிரவாதி ஒருவன் படு வேகத்தில் ரினோ (Renault) வேனை கூட்டத்தினர் மீது மோதி சுமார் 100 பேரை காயப்படுத்தி, 14 பேரை அநியாயமாக கொன்ற பின், நிதானமாக நடந்து போய் மற்றொரு ஃபோர்டு காரை திறந்து காரோட்டியை கத்தியால் குத்தி கொன்று, இறந்த உடலோடு காரை ஓட்டிச்சென்று ஒரு போலீஸ் செக் போஸ்ட்டை இடித்து விட்டு மறைந்து, அடுத்த நான்கு நாட்களில் போலீசாரால் சுடப்பட்டு இறந்தானாம்.
இறந்த 14 பேரில் தன் பெற்றோருடன் 6 வயது சிறுவனும். அதே நேரத்தில் அவனது 5 வயது தங்கை வேறு பகுதியில் பாட்டு வகுப்பு முடிந்து மற்றொரு வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாளாம்..
ஹரே கிருஷ்ணா!

டாக்டர் மனோகர்.

தஞ்சை மருத்துவ கல்லூரியில் MBBS.. பின் சில வருடங்களில் MD படிப்பு.. தென்னர் ஹிந்தி பிரச்சார சபா சமீபம் காஞ்சிப்பெரியவரால் அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கிய ஹிந்து மிஷன் ஆசுபத்திரயில் தன் பணியை துவங்கினார் இவர். எனக்கு மைத்துனர். டாக்டர் மனோகர்.
என் மூத்த சகோதரி ஹேமலதா(Hemalatha Manohar)வின் கணவர். உறையூர், தென்னூர் சாஸ்திரி ரோடு அருகே, மலைவாசல் கிலேதார் தெரு என அங்கங்கே க்ளினிக் துவங்கினார்.
பகலில் இரண்டு மூன்று மணி நேரங்கள் மட்டும் சாப்பிட வீட்டுக்கு வருவார். மற்றபடி காலை பத்து முதல் இரவு பன்னிரண்டு மணி வரை ஆசுபத்திரி மற்றும் தன் க்ளினிக்கில் இருப்பார். எதற்காக இரவு பன்னிரண்டு வரை? மையின்கார்டு கேட், சிங்காரதோப்பு, பெரியகடை மற்றும் சின்ன கடை வீதியில் இருக்கும் பெரும்பாலான கடைக்காரர்கள் இவரது பேஷன்ட்டுகள். பத்து மணிக்கு கடையடைத்த பிறகே இவரிடம் அவர்கள் வருவதால் இரவு பன்னிரண்டு வரை வைத்தியம் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு ஊசிக்கு ஐந்து பத்து, தெரிந்தவர்களுக்கு இலவசம், பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு பணம் இல்லையென்றால் இலவசமாக என இருந்தவரை என் சகோதரி சொல்லி சொல்லி பிறகு ஃபீசை உயர்த்தினாலும் காசு விஷயத்தில் கராராக இல்லாமல் இருப்பவர்.
சுப்பரமணியபுரத்தில் இவருக்கு வீடு. பொதுவாக வீட்டில் இவர் மருத்துவம் செய்வதில்லை. அப்படியும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலசமயம் அவசர சிகிச்சைக்கு வந்து விட்டால் இல்லையென்று திருப்பி அனுப்பாமல் இலவசமாகவே ட்ரீட் செய்துவிடுவார்.
பக்கத்து குடிசைப்பகுதியில் ஒரு பெண் சூடான வடித்த கஞ்சியை குடிசைக்குள்ளிருந்து வெளியே ஓங்கி வீசும்போது தனது 3 வயது குழந்தை குறுக்கே ஓடி வர, சூடான கஞ்சி பட்டு குழந்தையின் நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதியில் முழுக்க தோல் பிய்ந்து ரணமாகிப்போக, பக்கத்து மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு முன்பணமாக கட்ட பத்தாயிரம் ரூபாய் இல்லாத்தால் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ஒரு பைசா கூட அவரிடம் வாங்காமல் அடுத்த பத்து நாட்கள் தினமும் காலை மருத்துவம் பார்த்து குழந்தையை பூரண குணமடையச்செய்தவர்.
சுற்றுப்புற ஆட்டோ டிரைவர்கள் எல்லோருக்கும் டாக்டர் நண்பர். ரமலான், கிருஸ்துமஸ், பொங்கல் என எல்லா பண்டிகைகளுக்கும் இவருக்கு வாழத்துக்களும் அன்பளிப்புக்களும் குவியும்.
தலையனை மெத்தை தைக்க, வாட்ச் ரிப்பேர், போட்டோ ஃப்ரேம், கல்யாண மண்டபம், விசேஷங்களுக்கு வேன், பஸ் வாடகை, திருமண அலங்காரம், கல்யாண பாத்திரம் மற்றும் ஷாமியானா வாடகை, கார் ரிப்பேர், ரியல் எஸ்டேட் என எல்லா துறைகளிலும் இவருக்கு ஆட்கள் மற்றும் செல்வாக்கு.
நானும் என் சகோதரனும் வெளிநாட்டில் இருப்பதால் என் அம்மா அப்பா இருவரையும் நன்றாக பார்த்துக்கொண்டவர். எளிமையான மனிதர். கோபமே வராதொரு நிதானம்.. அளவான பேச்சு..வாட்சப் மற்றும் முகநூல் இல்லாமல் இன்னமும் சாதாரன கைப்பேசி..
திருச்சியில் ஒரு குறுநில மன்னன் போல வலம் வரும் என் மைத்துனர் டாக்டர் மனோகருக்கு இன்று பிறந்த நாள்.
நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நிம்மதியான வாழ்க்கை இவருக்கு அருள மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை வேண்டுகிறேன்.
Image may contain: 4 people, including Keerthi Shri, Hemalatha Manohar and Sadana Mano, people smiling, people standing

Mythili Varadarajan

சில மாதங்கள் முன் பெங்களூர் சென்றிருந்த சமயம் இவரை நேரில் சந்திக்கலாமென இருந்தேன். இவரும் வீட்டிற்கு வரும்படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
ஒரு மதிய வேளை போகலாமென முடிவு செய்து மல்லேஷ்பாளையா என பிக்கப் இட்டு ஓலா டாக்ஸி தேடினேன். அடுத்த விநாடி ஓலா வரைபடத்தில் கரப்பான் பூச்சி மாதிரி ஏழெட்டு டாக்சிகளில் ஒன்று பொம்மை கார் மாதிரி சரட் சரட்டென முன்னே பின்னே நகர்ந்து திடீரென வீடு நோக்கி வர என் கைப்பேசியில் உடனே மெசேஜ். வெளியே ஓடிப்போய் டாக்சியில் அமர்ந்து ஓட்டுநரிடம் ஓட்டிபி கொடுத்த கையோடு ஓலா வரைபடத்தில் சர்ஜாபூர் அம்பாலிபுரா ரோடு எங்கேயென தேடினேன். சின்ன புள்ளியொன்று என் டாக்சி போகும் தடத்தை அழகாக காட்ட, வெளியே நல்ல டிராஃபிக்.
கரடுமுரடான பெங்களூர் சாலைகள் இன்னும் எத்தனை வருடத்திற்கென தெரியவில்லை. 80, 90 களில் எவ்வளவு அழகாக இருந்த நகரம்!. முன்பெல்லாம் அகண்ட சாலைகள் இருமருங்கிலும் மரங்கள். சிக்பேட்டில் பஸ் விட்டிறங்கி 'சிவாஜி நகர் ஹோகி' என ஆட்டோ பிடித்தால் சில்லென குளிர் காற்று நம் முகத்தில் வீச ஸ்வெட்டர் போட்ட ஆட்டோக்காரர் பத்தே நிமிடத்தில் சிவாஜி நகரில் இறக்கி விட்டு நம் முகம் கூட பார்க்காமல் காசு வாங்கிக்கொண்டு திரும்ப சிக்பேட்டுக்கே போவார். இப்ப அதெல்லாம் சாத்தியமில்லை.
பெங்களூரில் ரோட்டில் போகும்போது தலையை தூக்கினாலேயே மெட்ரோ ரயில் பாலங்கள் கட்டுமானம் தான் எங்கு பார்த்தாலும். 24 மணி நேரமும் பானி பூரி சாப்பிடும் நகரம். மோட்டார் பைக்குகளும் ஸ்கூட்டிகளும் ஆட்டோக்களும் தலை தெறிக்க ஓட்டுகிறார்கள். டிராஃபிக்கிற்கு பயந்து முதல் நாள் பய்யப்பன்னஹள்ளியில் மெட்ரோ ரயில் பிடித்து மஹாலக்ஷ்மி போய் இஸ்கான் கோவில் தரிசணம் முடித்த கையோடு கோவில் பிரசாத உணவகத்தில் கோகோனட் ஹோளிகே (தேங்காய் போளி), பெண்ணெ (வெண்ணெய்) தோசா மற்றும் காஃபின் நீக்கப்பட்ட வேதிக் காபி சாப்பிட்டது சுகானுபவம் (காபி தவிர).
ஓலா வரைபடத்தில் புள்ளி சர்ஜாபூர் ரோட்டைக்காட்ட அதற்குள் இவரிடமிருந்து குறுஞ்செய்தி.. 'எங்கே இருக்கீங்க' என. தொடர்ந்து தொலைபேசி அழைப்பு. 'இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேங்க' என சொல்லி ரோட்டை பார்த்தேன். கார்களுக்கிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் வரிசையாக ஸ்கூட்டிகளும் பைக்குகளும் புகுந்து முன்னேற, ஓட்டுநர் தொலைபேசியில் 'ஹொரகடே இல்லப்பா..ஒளகடே..நானு ஹேளிதே.. அவ்தா? அவ்தா?' என யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
பிக் பஜார் தாண்டி டோமினோ பீட்ஸா முன்னால் இடது பக்கம் திரும்பி ஶ்ரீரெட்டி கட்டிடம் நுழைந்து நேபாளி செக்யூரிட்டி காட்டிய ரிஜிஸ்தரில் கையொப்பமிட்டு முதல் தளத்தில் நாலைந்து ஃப்ளாட்டுகள் தாண்டி அழைப்புமணியை அழுத்த, கதவைத்திறந்து புன்முறுவலோடு வரவேற்றார். சென்ற ஆண்டு என் முகநூல் நண்பரானவர்.
இவரது முகநூல் பதிவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில். அபாரமாக எழுதுபவர். அப்பா, சகோதரிகள் என இவரது குடும்பத்தில் எல்லோரும் புத்தகம் சார்ந்த துறைகளில் (மாக்மில்லன்) பணியாற்றியவர்கள்.
தன் குடும்பத்தைப்பற்றி சுறுக்கமாக சொல்லி, எனது குடும்பத்தாரைப்பற்றியும் விஜாரித்தவுடன்,
பணிப்பெண்ணை காபி கலக்கச்சொன்னார். காபியை உறிஞ்சியவாறே வீட்டை சுற்றி வந்தேன். அழகான இரண்டு பெட்ரூம் ஃபளாட். முன் அறை, பெட்ரூம் என எங்கு பார்த்தாலும் ஏராளமான புத்தகங்கள். எனக்கு எதிரே அமர்ந்திருந்த அவரின் கைக்கெட்டும் தூரத்தில் சோஃபாவிலேயே கொஞ்சம் புத்தகங்கள்.
புத்தகம் அதிகம் படிப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். ரயிலில் கடலை வாங்கி சாப்பிட்டாலும் கடலை பொட்டலத்தின் பேப்பரை முழுவதும் படிக்க விரும்புவேன்.
அடுத்த அரை மணி நேரம் இவருடன் பேசும்போது நிறைய மெசேஜ்கள் எனக்கு கிடைத்தன. வயதான காலத்தில் அடுத்தவருக்கு உபத்திரவமோ தொந்தரவோ கொடுக்காமல் கூடியவரையில் நம்மை நாமே பார்த்துக்கொள்வது, கவலையோ வருங்காலத்தைப்பற்றியோ நினைத்துக்கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் வாழ்வது, பாசிட்டிவ் மனப்பான்மை, எந்த வித கஷ்டத்தையும் புன்முறுவலுடன் ஏற்று அதனுடனே பயணிப்பது, சிரமங்களை தவிர்க்க நம் நினைவுகளை திசை திருப்பி (diversion) புத்தகம் படித்தல், நண்பர்களை சந்திப்பது போன்று நமக்கு பிடித்தவற்றை செய்வது.. இவையெல்லாம் இவரிடம் கற்றுக்கொண்டேன்.
தனக்கு பிடித்தவர்கள் லிஸ்ட்டில் இவரது பேத்தி முதலிடம் என்பதை தெரிந்து கொண்டேன். அவ்வப்போது இவருடைய பதிவுகளில் பேத்தியின் புகைப்படத்தை பார்க்க முடிகிறது.
இவரின் இனிய பிறந்த நாளான இன்று பேத்தியுடனிருக்கும் இவரது பென்சில் ஓவியத்தை வரைந்து பதிவிடுவதில் எனக்கு மகிழ்ச்சி.