Tuesday, March 13, 2018

டாக்டர் மனோகர்.

தஞ்சை மருத்துவ கல்லூரியில் MBBS.. பின் சில வருடங்களில் MD படிப்பு.. தென்னர் ஹிந்தி பிரச்சார சபா சமீபம் காஞ்சிப்பெரியவரால் அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கிய ஹிந்து மிஷன் ஆசுபத்திரயில் தன் பணியை துவங்கினார் இவர். எனக்கு மைத்துனர். டாக்டர் மனோகர்.
என் மூத்த சகோதரி ஹேமலதா(Hemalatha Manohar)வின் கணவர். உறையூர், தென்னூர் சாஸ்திரி ரோடு அருகே, மலைவாசல் கிலேதார் தெரு என அங்கங்கே க்ளினிக் துவங்கினார்.
பகலில் இரண்டு மூன்று மணி நேரங்கள் மட்டும் சாப்பிட வீட்டுக்கு வருவார். மற்றபடி காலை பத்து முதல் இரவு பன்னிரண்டு மணி வரை ஆசுபத்திரி மற்றும் தன் க்ளினிக்கில் இருப்பார். எதற்காக இரவு பன்னிரண்டு வரை? மையின்கார்டு கேட், சிங்காரதோப்பு, பெரியகடை மற்றும் சின்ன கடை வீதியில் இருக்கும் பெரும்பாலான கடைக்காரர்கள் இவரது பேஷன்ட்டுகள். பத்து மணிக்கு கடையடைத்த பிறகே இவரிடம் அவர்கள் வருவதால் இரவு பன்னிரண்டு வரை வைத்தியம் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு ஊசிக்கு ஐந்து பத்து, தெரிந்தவர்களுக்கு இலவசம், பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு பணம் இல்லையென்றால் இலவசமாக என இருந்தவரை என் சகோதரி சொல்லி சொல்லி பிறகு ஃபீசை உயர்த்தினாலும் காசு விஷயத்தில் கராராக இல்லாமல் இருப்பவர்.
சுப்பரமணியபுரத்தில் இவருக்கு வீடு. பொதுவாக வீட்டில் இவர் மருத்துவம் செய்வதில்லை. அப்படியும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலசமயம் அவசர சிகிச்சைக்கு வந்து விட்டால் இல்லையென்று திருப்பி அனுப்பாமல் இலவசமாகவே ட்ரீட் செய்துவிடுவார்.
பக்கத்து குடிசைப்பகுதியில் ஒரு பெண் சூடான வடித்த கஞ்சியை குடிசைக்குள்ளிருந்து வெளியே ஓங்கி வீசும்போது தனது 3 வயது குழந்தை குறுக்கே ஓடி வர, சூடான கஞ்சி பட்டு குழந்தையின் நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதியில் முழுக்க தோல் பிய்ந்து ரணமாகிப்போக, பக்கத்து மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு முன்பணமாக கட்ட பத்தாயிரம் ரூபாய் இல்லாத்தால் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ஒரு பைசா கூட அவரிடம் வாங்காமல் அடுத்த பத்து நாட்கள் தினமும் காலை மருத்துவம் பார்த்து குழந்தையை பூரண குணமடையச்செய்தவர்.
சுற்றுப்புற ஆட்டோ டிரைவர்கள் எல்லோருக்கும் டாக்டர் நண்பர். ரமலான், கிருஸ்துமஸ், பொங்கல் என எல்லா பண்டிகைகளுக்கும் இவருக்கு வாழத்துக்களும் அன்பளிப்புக்களும் குவியும்.
தலையனை மெத்தை தைக்க, வாட்ச் ரிப்பேர், போட்டோ ஃப்ரேம், கல்யாண மண்டபம், விசேஷங்களுக்கு வேன், பஸ் வாடகை, திருமண அலங்காரம், கல்யாண பாத்திரம் மற்றும் ஷாமியானா வாடகை, கார் ரிப்பேர், ரியல் எஸ்டேட் என எல்லா துறைகளிலும் இவருக்கு ஆட்கள் மற்றும் செல்வாக்கு.
நானும் என் சகோதரனும் வெளிநாட்டில் இருப்பதால் என் அம்மா அப்பா இருவரையும் நன்றாக பார்த்துக்கொண்டவர். எளிமையான மனிதர். கோபமே வராதொரு நிதானம்.. அளவான பேச்சு..வாட்சப் மற்றும் முகநூல் இல்லாமல் இன்னமும் சாதாரன கைப்பேசி..
திருச்சியில் ஒரு குறுநில மன்னன் போல வலம் வரும் என் மைத்துனர் டாக்டர் மனோகருக்கு இன்று பிறந்த நாள்.
நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நிம்மதியான வாழ்க்கை இவருக்கு அருள மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை வேண்டுகிறேன்.
Image may contain: 4 people, including Keerthi Shri, Hemalatha Manohar and Sadana Mano, people smiling, people standing

No comments:

Post a Comment