Friday, July 19, 2013

வைத்ய ரத்னா ஆயுர்வேதா மெடிகல் செண்டர்

பஹ்ரைன் வைத்ய ரத்னா ஆயுர்வேதா மெடிகல் செண்டர் முன்பு வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன். நாலு நாளாக முதுகும் இடுப்பும் ஒரே வலி..சாதாரண இடுப்பு வலி தான்.. 8 தினாருக்கு பகுதி (மலையாளத்தில்) மசாஜ் என்றார்கள். அதாவது பாதி மசாஜாம். புல் மசாஜ் 15 தினார். 

உள்ளே ஒரு ரூமுக்குள் போய் அவர்கள் கொடுத்த கோவணத்தை சுற்றிக்கொண்டு தயங்கி தயங்கி வந்த என்னை நடு ஹாலில் போடப்பட்டிருந்த ஒரு பெரிய மேசையின் மேல் குப்புற படுக்க சொன்னார் அந்த சாஜன் என்ற நபர். 'நாட்ல எவ்வடே' என்று பரிவுடன் விசாரித்தார். 'அடப்பாதகா! இடுப்புல வலி எவ்வடேன்னு கேக்காம ஊரைப்பத்தி விசாரிக்க இதுதான் நேரமா' என்று நினைத்துக்கொண்டு 'திருச்சி' என்று சொன்னேன். மறுபடியும் 'நாட்ல எவ்வடே' என்று அவர் கேட்டபோது எனக்கு காது சூடானது. இப்பத்தானே பதில் சொன்னேன்? அப்புறம் தான் புரிந்தது மலையாளத்தில் 'திருச்சி' என்றால் 'மறுபடியும்' என்று அர்த்தம். ஒருவழியாக இந்த சம்பாஷனை முடிந்து பணியை ஆரம்பித்தார். தேநீர் போடும் கெட்டிலை எடுத்தார். பரவாயில்லையே குடிக்க டீயெல்லாம் கொடுப்பார்கள் போல என்ற என் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டார். கற்பூராதி தைலம் கலந்த எண்ணையை கெட்டிலில் விட்டு சூடாக்கி இடுப்பில் மிக தாராளமாக கொட்டி ஒத்தடம் என்கிற பேரில் முதுகையும் இடுப்பையும் துவம்சம் செய்யத்துடந்கினார். பரோட்டா மாஸ்டர் வேலை பார்த்தவர் போலிருக்கும்.
அடுத்தடுத்த ரூம்களில் இதே மாதிரி இஷ்டமித்திர பந்துக்களுடன் மசாஜ் வைபவங்கள்..ஒருவழியாக உடை மாற்றிக்கொள்ள வேறு அறைக்கு போனால் எங்கெங்கு காணினும் ஜட்டியடா...

எல்லாம் முடிந்து ரிஷப்ஷனுக்கு வந்து பணத்தை கட்டும்னோது அவர் சொன்னார் ' சாரே ஈ மாசம் offer இண்டு ' என்றார். மசாஜுல என்னப்பா offer என்று கேட்டேன். 'இன்னு மசாஜ் செய்யுங்கில் 10 தெவசம் கழிந்க்னு 50% சார்ஜிலே மற்றொரு மசாஜ் கிட்டும்' என்றாரே பார்க்கலாம். இன்று ஒரு 'தெவசம்' போதும் என்று சொல்லி வெளியே வந்தேன்...

ரயில்வே TXR…

பால்ய நண்பன் கணபதி ஒரு முறை சென்னையில் இருந்து போன் செய்து 'டேய் ஸ்ரீதரா! உனக்கு தெரியுமா.. நம்ம பொன்மலை ராஜசேகர் செத்து போய்ட்டான்.. "
"  அய்யய்யோ.. எப்பிடிப்பா..அவனுக்கு 50 வயசு தானே ஆவுது?"
"இல்லடா.. 2 வருஷமா அவனுக்கு கிட்னியில ப்ராப்ளம்  தெரியுமில்ல..  திருச்சி ஜன்ஷன்ல தானே வேல அவனுக்கு.."
"ஞாபகம் இருக்குப்பா..நம்ப தானே அவன் வீட்டுக்கு போனவருஷம் போனோம்?"

சென்ற வருடம் ஆண்டு விடுமுறைக்கு திருச்சி போயிருந்தபோது நானும் கணபதியும் KK  நகரில் ராஜசேகர் வீட்டுக்கு போயிருந்தோம். ராசாராம் சாலையில் புதிய வீடு கட்டிகொண்டிருந்தான். கீழ் போர்ஷன் கட்டி முடிந்து உடனே பொன்மலையில் இருந்து அங்கே குடி புகுந்தான். பிறகு மெதுவாக லோன் போட்டு மாடி கட்டிக்கொண்டிருந்தான். வீட்டை சுற்றி பார்த்தோம். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அந்த வீடு கட்டப்படுகிறது என்பது நன்றாக தெரிந்தது. சிமென்ட்டுக்காக காத்திருக்கும் சீராக அடுக்கப்பட்ட      செங்கல். பணமுடையால் அங்கங்கே பாதியில் நிற்கும் அரைகுறை வேலைகள்...

"திடீர்னு அடி வயித்துல வலி.. டாக்டர் டெஸ்ட் செஞ்சுட்டு ஒன்னும் பெரிய்ய ப்ராப்ளம் இல்லைங்கறார் .. சிறுநீரக கல்லு தான் பிரச்சனையாம். நெறையா தண்ணி குடிக்க சொல்றார். கைல காசு வேற இல்ல.. இந்த மாடி வீடு லோன் போட்டு தான் கட்டறேன். ரயில்வே டிபார்ட்மெண்ட்டுன்னு பேரு தாண்டா.. வெய்யில்ல வேல செய்யறதால ஒத்துகல போல"  என்று  சிரித்துக்கொண்டே சொல்லிகொண்டிருந்தான்.
 ராஜசேகர் திருச்சி ரயில்வேயில் டிரெயின் எக்ஸாமினர் (TXR ) பணியில் இருந்தான். TXR என்பது மிகவும் பொறுப்பான பணி. ரயில் பிளாட்பாரம் வந்து சேர்ந்ததும் ஒவ்வொரு பெட்டிக்கு கீழே குனிந்து தண்டவாளம் மற்றும் ரயில் பெட்டியின் சில பகுதிகளை ஒரு இரும்பு கழியால் 'டக்...டக்..' என்று தட்டி சோதனை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட வண்டிகளை சோதனை செய்ய வேண்டும். நிறைய நடக்க வேண்டும். வெயில் காலத்தில் பணி செய்வது கஷ்டம். தொண்டை வற்றிப்போகும். 
இந்த வருட விடுமுறைக்கு  திருச்சி போயிருந்தபோது, கணபதி சென்னையில் இருந்து மறுநாள் காலை  ராக்போர்ட்டில் வருவதாக சொன்னான், இறந்துபோன ராஜசேகர் வீட்டுக்கு போய் துக்கம் விசாரிக்க..  மறுநாள் விடிகாலை 5 மணிக்கு முன் திருச்சி ஜங்க்ஷன் போய் விட்டேன். 30 வருடங்களுக்கு முன் வெறும்  IRR கான்டீன் மட்டும் தான் இருந்தது. இப்போது அடையார் ஆனந்தபவன்... ஜே.. ஜே.. என கூட்டம்.  வித விதமான சாதங்கள் ஸ்பூனுடன் சிறிய டப்பாவில் விற்கிறார்கள். எவ்வளவு  ஜாங்கிரி மைசூர் பாக் கொண்டு வந்து வைத்தாலும் அதை வாங்க காத்திருக்கும் கூட்டம்.  'அந்த மிக்சர் 3 கிலோ  குடுங்க' என்ற பெரியவரை மேலும் கீழும் பார்த்தேன்.... 'அடப்பாவி 3 கிலோவா' என்று வியந்து.  அவரும் பதிலுக்கு என்னை முறைத்து பார்த்துவிட்டு சரட்டென்று வேட்டியை தூக்கி  தன் 'ராஜ்கிரண்' அண்ட்ராயரில் இருந்து கைக்கொள்ளாத 500 ருபாய் கட்டிலிருந்து அனாயாசமாக ஒரு நோட்டை உருவி கவுண்ட்டர் பையனிடம் கொடுத்தார். முதல் நாள் அடித்த சரக்கு வாசனை அவரிடம். ஹ்ம்ம்... பணம் ரொம்பத்தான் புழங்குகிறது  என்று எண்ணிக்கொண்டே பிளாட்பாரத்தை நோக்கி நடந்தேன். 

 நாலாவது பிளாட்பாரம் போய் ஒரு பென்ச்சில் உட்கார்ந்தேன். 20, 30 வருடம் கழித்தும் அதே பெஞ்சு..பெஞ்சுக்கு அடியில் நாய்... தொங்கிகொண்டிருக்கும் புத்தகங்களுக்கு நடுவே தலையை காட்டும் ஹிக்கின் பாதம்ஸ் கடைக்காரர்... ஏராளமான ராஜேஷ்குமார், ராஜேந்திர குமார் புத்தகங்கள்..  அதே கேன்டீன்....தூரத்தில் மேம்பாலத்தில் பஸ்சுகள், ஆட்டோக்கள் போய்க்கொண்டிருந்தன.. தண்டவாளத்தை எட்டிப்பார்த்தேன். வண்டி  நிற்கும்போது ரயில் பெட்டிக்குள் கழிவறைகள் உபயோகிக்க வேண்டாம் என்ற வேண்டுகோளை ஜனங்கள் எவ்வளவு மதிக்கிறார்கள் என்று தண்டவாளத்தை பார்க்கும்போது தெரிந்தது. அதில்லாமல் சகட்டு மேனிக்கு குப்பைகள், டிபன் பொட்டலங்கள், வாழைப்பழ தோல், காலி  பிஸ்லேரி பாட்டிகள்..

ரயில் வர ஒரு மணி நேரம் தாமதமாகும் என தமிழ், ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்த ஹிந்தியில் 'கிருப்பியா த்யான் தீஜியே' ஒரு பெண்மணி  7, 8 முறை அறிவித்துக்கொண்டிருந்தார்.  அவர் "ரவானா ஹோகி".. "தேர்சே ஆயேகி".... போன்ற பாமரர்களுக்கு விளங்காத ஹிந்தியில் அறிவுப்புகள் செய்து, அடுத்து தமிழில் சொல்லும்போது தான் எல்லாம் புரிந்தது. இத்தனை வருடம் கழித்தும் அதே 'கர.. கர..அறிவிப்பு பெட்டிகள். ரயில் வருவதற்கு முன் இறந்து போன ராஜசேகர் பற்றி கொஞ்சம்...

பொன்மலை கிறித்துவ மேனிலை பள்ளியில் (சாமியார் ஸ்கூல் என்பார்கள்) கணபதி, ராஜசேகர், ஜேம்ஸ் மூவரும் படித்தார்கள். ராஜசேகர் ரயில்வே TXR .. ஜேம்ஸ் ஜுபிடர் தியேட்டர் எதிரே உள்ள சையது முர்துசா  அரசு உயர்நிலை பள்ளியில் வாத்தியார்.. கணபதி CA மற்றும் அதை சார்ந்த CISA போன்ற படிப்புகள் படித்து பல வருடங்கள் என்னுடன்  பஹ்ரைனில் இருந்து விட்டு சென்னையில் ஒரு ஆடிட் firm  இல் பார்ட்னர் மற்றும் அதே குழுமத்தில் இயக்குனராக இருக்கிறான். பொன்மலை பூங்காக்கள், ரயிலடி, ஆர்மரி கேட், ரயில்வே ஷெட்போன்ற இடங்களில் நாங்கள் சேர்ந்து CA பரீட்சைக்கு படிப்போம். அவ்வப்போது ராஜசேகர் அங்கு வருவான். "டேய்.. டேய்.. அந்த கட்டபொம்மன் வசனத்தை கொஞ்சம் சொல்லேன்டா" என கணபதி கேட்டதும் "ஹ..ஹ..ஹா ..வானம் பொழிகிறது.." என்று ராஜசேகர்  கர்ஜித்து வீர வசனம் பேசுவான். பள்ளியில் வாத்தியார் வருவதற்கு முன் வகுப்பில் நிறைய இது மாதிரி வசனங்கள் பேசுவான் ராஜசேகர். ஒரு முறை வகுப்பில்  "என்ன சொன்னான் கலிங்க நாட்டான்?" என்று அவன் கர்ஜித்துக்கொண்டிருக்கும்போது அவசரமாக உள்ளே வந்த கணித ஆசிரியர்... "ம._..ற..புடுங்கச்சொன்னான்.. நோட்டுபுக்க எடுங்கடா"  என்று ஓலைமிட்டதை சொல்லி பொன்மலையே அதிரும்படி சிரித்து கொண்டு சொன்னான் ராஜசேகர்.

அவனது அப்பா பொன்மலை கல்கண்டார் கோட்டை பக்கம் இட்டிலி, பரோட்டா விற்கும் இரவுகடை ஒன்று வைத்திருந்தார். பகலில் ஒரு மேசையில் மைதா மாவை மலை போல் குவித்து நடுவே பள்ளம் செய்து தண்ணீரை ஊற்றி பிசைந்து, மாவு உருண்டைகள் செய்து, பெரிய தட்டில் வைத்து மேலே எண்ணெய் ஊற்றி ஈரத்துணியால் மூடி, ஊற வைத்து இரவு 7 மணிக்கு மேல் வீச்சு பரோட்டா போடுவார்.  அன்றன்றைக்கு முதல் போட்டு சாமான்கள் வாங்கி ஹோட்டலில்  இரவு 1 மணி வரை வியாபாரம் செய்த பின் அன்றைக்கான லாபத்தை கணக்கிடுவார். பெரியதாக ஒன்றும் வருமானம் இருப்பதில்லை. கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி ராஜசேகரை டிப்ளமோ படிக்க வைத்து கணபதியின் அப்பா மூலம் ரயில்வேயில் சேர்த்து விட்டு ஒருநாள்  தூக்கத்திலேயே மேலே போய்ச்சேர்ந்தார்.

 'பாஆஆம் .'. என்ற ராக்போர்ட் எக்ஸ்ப்ரெஸ் பிளாட்பாரத்தில் தூரத்தில் வந்து கொண்டிருந்த சப்தத்தில் நான் திடுக்கிட்டு பெஞ்ச்சை விட்டு எழுந்தேன். 

முதல் வகுப்பில் இருந்து கலைந்த தலையும் கசங்கிய வெள்ளை சட்டையுடன் கணபதி மடிக்கணினியுடன் இறங்கினான். "லால்குடியில... ராஸ்கல்ஸ்... ஒரு மணி நேரம் போட்டுட்டானுங்க.." என்று ரயில்வே நிர்வாகத்தை அந்த அதிகாலையிலும் செல்லமாக திட்டியவாறே ..“ம்ம்ம் சொல்றா ஸ்ரீதராஎன என் தோளில் கையை போட்டவாறே நடந்தான். ஜங்க்ஷன் வாசலில் 4 நிமிடம் வரிசையில் நின்று 8 ரூபாய்க்கு பில்டர் காபி வாங்கி கொடுத்தான். "சூடு பத்தாதுப்பா"  என்று சொல்லி அவர்களிடம் சொல்லி விட்டு நாங்கள் நகர்ந்ததை அவர்களும் சட்டை செய்யவில்லை.  நேராக ஆஷ்பி ஹோட்டல் போனோம்.

'சிவாஜி கணேசன் எப்ப வந்தாலும் இங்க தான் தங்குவாரு..' என்று யாரோ எப்போதோ சொன்னது அப்போது ஞாபகம் வந்தது. நேரில் பார்த்ததாக மட்டும் யாரும் இதுவரை சொல்லவில்லை..  " ஸ்ரீதரா... ஞாபகம் இருக்கா.. இந்த ஹோட்டல்ல."  என்று கணபதி ஆரம்பிக்கும்போதே .. " ஞாபகம் இருக்குப்பா... சிவாஜி தானே?"  என்று நான் சொன்னதும் 'படார்' என்று என் முதுகிலடித்து 'கில்லாடிடா .. நீ' என்று சிரித்தான். அந்த காலை வேளை... வெய்யில் இல்லாமல் நல்ல கிளைமேட்... ரோட்டில் கூட்டமில்லை .. கூட ஆருயிர் தோழன்.. சொல்லவே வேண்டாம் ..சந்தோஷமான தருணம் அது...

குளித்து விட்டு  ஹோட்டலுக்கு வெளியே வந்தோம். கணபதி பாக்கெட்டிலிருந்து முழு 50 ருபாய் எடுத்து பையனுக்கு கொடுத்தான். டிப்ஸ் அவனைப்போல் தாராளமாக யாரும் கொடுக்க முடியாது. அந்த பையன் அந்த ஒரு நாளில் கணபதிக்கு உயிரையே கொடுத்து விடுவான்.
எதிரே கவிதா ஹோட்டலில் இட்டிலி, ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டோம். "வேற எதாவதுங்க?" என்று சாம்பார் ஊற்றிக்கொண்டே கேட்ட பெண்மணியின் காலர் வைத்த ஊதா கலர் சட்டை முழுக்க அப்பியிருந்த சாம்பாரை பார்த்து விட்டு .. "போரும்மா" என்று சொல்லி வெளியே வந்தோம்.

நேராக KK நகருக்கு போனோம். ராஜசேகர் வீடு புதிய தோற்றத்தோடு கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அவனது மனைவி பெருங்குரலெடுத்து சப்தத்துடன் அழுது எங்களை வரவேற்ப்பார் என எதிர்பார்த்தது என்  தப்பு.      "நல்லாத்தான் இருந்தாருங்க.. எப்ப பாத்தாலும் வெய்யில்ல வேல.. தண்ணி குடிச்சிட்டே இருக்கணும்னு டாக்டர் சொல்லுவார். சிறுநீரக கல்லு கரைஞ்சிடுச்சுன்னு தான் சொன்னாங்க.. ஆனா அவருக்கு சுகரு இருந்ததால திடீர்னு  என்னமோ ஆச்சு... போயிட்டாரு. பெரியவனுக்கு அவங்க டிபார்ட்மெண்டிலெ வேல போட்டு கொடுப்பாங்களாம். சின்னவள BE சேத்துட்டேன். கொஞ்சம் காசு வந்தது... பாதியில அவரு உட்டுட்டு போன மாடி வீட்ட கட்டி முடிச்சிட்டேன். முந்தாநேத்து யாரோ வாடகைக்கு கேட்டாங்க. ஏதோ ரொம்ப கஷ்டமில்லாம ஓடுது.." என்று மூச்சு விடாமல் அவர் பேசியது கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
இறைவன் ஒரு கதவை மூடி மறு கதவை திறந்து எப்படி அந்த குடும்பத்தை கரை ஏற்றுகிறான் என்று எண்ணி வியந்தேன். கணவர் இறந்த துக்கத்தை ஒரு ஓரத்தில்வைத்து விட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களான குழந்தைகள் படிப்பு, வேலை, வருமானத்திற்கு வழி என்று அப்பெண்மணியின்  அடுத்தடுத்த முடிவுகள் எங்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

" என்னாங்க யோசனை.. அட நீங்க எதுக்கு அவர நெனைச்சு வெசனப்பட்டுகிட்டு... காப்பி தண்ணி, பன்னீர் சோடா எதுனா குடிக்கிறீங்களா ''   என்று கேட்ட, படு எதார்த்தமான ராஜசேகரின் மனைவியை கையெடுத்து கும்பிட்டோம்.. கணபதி ஆறுதலான சில வார்த்தைகள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.         

விடை பெற்றுக்கொண்டு சில பழைய நண்பர்களை பார்க்க கிளம்பினோம். அன்று இரவே கணபதி சென்னை புறப்பட்டான். அவனை ரயிலில் ஏற்றி விட்டு நான் பிளாட்பாரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது டிரெயின் எக்சாமினெர் (TXR ) ஒருவர் இரும்புக்கழியால் டிரெயினுக்கு கீழே தட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார் . மெதுவாக அவரிடம் போய் 'எத்தன வருஷமா இந்த வேல பாக்கறீங்க' என்று கேட்டேன். 
'20 வருஷமா' என்றார். 
"கொழந்தைங்க"
"2 சார்.... அது சரி.. சாரு யாருன்னு...." என இழுத்தார்.

" நெறையா தண்ணி குடிங்க" என்று சொல்லி விடுவிடுவென நடந்த என்னை அவர் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். .

Tuesday, July 9, 2013

2nd Class waiting room..

2nd க்ளாஸ் வெயிட்டிங் ரூம்....
அலகாபாத் யுனிவர்சிடியில் B.Sc தேர்வுகள் முடிந்து ஒரு மாத விடுமுறையை திருச்சியில் கழித்த பின் மீண்டும் பிரயாணம். மதராஸ் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் கங்கா காவேரி எக்ஸ்ப்ரஸ் 18 பெட்டிகளை இழுத்துக்கொண்டு மெதுவாக கிளம்பியது. இது 79இல்..
நிறைய மிலிட்டரிக்காரர்களும், காசி யாத்திரை செல்பவர்களும் செய்யும் 36 மணி நேர பயணம். ப்ராட்கேஜ் என்பதால் பெரிய ரயில் பெட்டிகள்.
'உங்க பெர்த் நெம்பர் அறுபதா? அப்ப நீங்க மேலே போயிடுவீங்களா?' என காலங்கார்த்தாலே அமங்கலமாக கேட்பவர்களை மண்டையில் நறுக்கென குட்டலாம் போலிருக்கும்.
சீட்டில் உட்கார்ந்திருப்பவர்கள் திடீரென 'டொய்ங்' என ஒரே நேரத்தில் காலைத்தூக்கினாrல் யாரோ பிரகஸ்பதி அத்தப்பக்கம் தண்ணீரை கீழே கொட்டிவிட்டான் என அர்த்தம்.
இட்லி சாப்பிட்ட கையோடு இரண்டு பெர்த்துக்கு நடுவே புடவையால் குழந்தைக்கு தூளி கட்டிவிட்டு, ஓடும் ரயிலின் ஜன்னலுக்கு வெளியே நீட்டி யாரோ ஒரு பெண் கையைக்கழுவ, அடுத்த ஜன்னலிலிருத்து 'எய்.. யாருங்க அது' என சத்தம் கேட்கும்.
ஸ்டேஷன்களுக்கிடையே ரெயிலில் வரும் பட்டானி பொறிகடலை, பஜ்ஜி என கண்டதை வாங்கி சாப்பிட்டு முழு வயிற்றை நிரப்பிக்கொண்ட சிலர், அடுத்த ஸ்டேஷனில் சுடச்சுட உப்புமா சாப்பிடுபவர்களை பார்த்து பொறாமையுடன் 'நல்லா இருக்குங்களா?' என கேட்பது சகஜம்.
'வண்டி ஒரு மண்ணேரம் லேட்டு.. இடார்ஸி தாண்டினதும் மேக்கப் பண்ணீருவான்' என ஆருடம் சொல்லும் கணவான்கள் சிலர்.
சீட்டிலிருந்து ஒரொரு கம்பியாக பிடித்து மெதுவாக போன பெருசுகள் டாய்லட் கதவைத்திறந்து பார்த்து படாரென மூடிவிட்டு ஒரொரு கம்பியாக பிடித்து திரும்பி வந்து உட்கார்ந்ததும் '’ராஸ்கல்!.. போய்ட்டு தண்ணி ஊத்த மாட்டானுங்க!' என திட்ட, எதிர் சீட்டுக்காரர் ஜன்னல் பக்கம் திரும்பிக்கொள்வார். போனதே அந்த எதிர்சீட்டுக்காரராகத்தான் இருக்கும்.
தலை வாறும் சீப்பு விட்டு சுற்றினால் மட்டுமே ஓடும் ஃபேன்கள், கடகடவென அதிர்ந்து தண்ணீரை நம் மேலே பீச்சி அடிக்கும் வாஷ்பேசின் குழாய்கள், குறுக்கே முட்டு கொடுத்தால் மட்டுமே கீழே இறங்காத கண்ணாடி ஜன்னல்கள், எப்படி உட்கார்ந்து போனாலும் எட்டாத தொலைவில் குழாய் பொருத்தப்பட்ட டாய்லெட்கள்..இதெல்லாம் இல்லாமல் ரயில் பயணமா?
குண்டக்கல், நாக்பூர், வார்தா, ஜபல்பூர், சிர்பூர் காகஸ் நகர், இடார்சி என்ற விதவிதமான பெயர்களில் ஊர்கள். நாக்பூரில் பெரிய சந்த்ரா (ஆரஞ்சு), இடார்சியில் மைதாவில் செய்த பூரி-ஆலு சப்ஜி, மட்காவில் தேநீர், ச்சிவ்டா (பொரித்த அவல் கடலை) ... இது போதாதென்று அம்மா கட்டிகொடுத்த புளியோதரை, துவையல், உ. கிழங்கு சிப்ஸ்... இதெல்லாம் சாப்பிட்டுக்கொண்டு 'பர்மா ரமணி' நாவல் படித்துக்கொண்டே அலுப்பு தெரியாமல் பயணம் முடிந்து மூன்றாம் நாள் வாரணாசிக்கு 3 மணி நேர முன்பு அலகாபாத்தில் இறக்கும்போது தலை முடி, மூக்கு முழுக்க கரித்தூள்.
அலகாபாத் ஜங்ஷன் விட்டு வெளியே வந்து 'தர்பாங்கா காலோனி சலோ' என டோங்காவில் ஏறி அமர்ந்தேன். உயர்நீதிமன்றம் தாண்டி மிக அகலமான சிவில் லைன்ஸ் ரோடு. ரோடெங்கும் ராஜ்தூத், எஸ்டி மோட்டார் பைக்குகள், வெஸ்பா, லாம்ப்ரட்டா ஸ்கூட்டர்கள், ஃபியட் கார்கள்.. ரோட்டின் இரு புறமும் அடர்த்தியான மரங்கள்..வங்கிகள், கடைகள், பான்வாலாக்கள், 'சித்சோர்', ‘ஸ்வாமி’ படம் ஓடும் நிரஞ்சன் தியேட்டர், ஆலு டிக்கியா மற்றும் சர்தார்ஜி லஸ்ஸி கடைகள், மண் சட்டியில் நிலக்கரி போட்டு பொறி கடலை விற்கும் பிகாரி ரோட்டுக்கடைகள், .. மிகப்பெரிய ஹனுமார் கோவில்.. வாசலில் நிறைய ஃபூல் மாலா, பேடா கடைகள்..
என் அக்கா திருமணமாகி அங்கே தான் இருந்தாள். மைத்துனர் (என் தாய் மாமா) பத்ரி மாமா 'நைனி'யில் ஒரு மத்திய அரசு பொது நிறுவனத்தில் எஞ்சினீயர். திருச்சி செயின்ட் ஜோசப்ஸில் பி.யு.சி முடித்து REC யில் இஞ்சினியரிங் கிடைக்காததால் பிற்காலத்தில் C.A தான் படித்து முடிப்போம் என தெரியாமல் நான் அலகாபாத் யுனிவர்சிடியில் BSc படித்துக்கொண்டிருந்தேன்..
கம்பெனி கார்டன் வழியாக வரும்போது ஆளறவமற்ற ரோட்டில் அங்கங்கே துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள். திடீரென, நெற்றியில் திலகமும் முதுகில் துப்பாக்கியுடன் புல்லெட்டில் கப்பர் சிங் மாதிரி வரும் கிராம டாகூர்கள் நடுரோட்டில் யாரையாவது படீரென சுட்டு வீழ்த்துவது படு சகஜம். அதனால் தான் போலிஸ் அங்கங்கே. டோங்கா மெதுவாக வீடு வந்து சேர்ந்தது. மறுநாள் பல்கலைக்கழகம் போகவேண்டும்.
அலகாபாத் பல்கலைக்கழகம் மிக பிரம்மாண்டமானது. அப்போதெல்லாம் இந்தியாவில் IAS தேர்வில் வெற்றி பெற்றவர்களில் மிக அதிகமானவர்கள் கான்பூர், லக்னௌ மற்றும் அலகாபாத்காரர்கள் தான். ஆங்கிலப்புலமை குறைவாக இருந்தாலும் கணிதம், விஞ்ஞானம் மற்றும் சட்டத்துறைகளில் மிகவும் அறிவு கூர்மையுடையவர்கள் .
நெற்றியில் செங்குத்தாக சிவப்பு வர்ண திலகம், உதட்டில் பான் தாம்பூலச்சாயம், சஞ்சீவ் குமார் மாதிரி தோளில் சால்வை…இது அனைத்தும் இருந்தால் அவர் மாணவர் யூனியன் தலைவர் என அர்த்தம். ' நமஷ்கார்... க்யா ஹால் ஹெ.. பந்து ?'...என மாணவர்களுக்குள் குசலம் விசாரிப்புகள். வருடத்தின் முக்காவாசி நாள் ஸ்ட்ரைக்.. பந்த். எல்லா மாணவர்களும் பாதி நேரம் பல்கலை வளாக தேநீர் கடைகளில் கூடியிருப்பார்கள். பிஸ்கூத், பஜியா, கச்சோரி மற்றும் பான் விற்பனை அமோகமாக இருக்கும்.
வெறும் இருபது இருபத்தைந்து முக்கிய கேள்வி பதில்கள் கொண்ட நோட்ஸ் புத்தகங்கள் எல்லா கடைகளிலும் சல்லிசான விலையில் கிடைக்கும். பரிட்சைக்கு ஓரிரு வாரங்கள் முன் அதை வாங்கி படித்தாலே வெற்றி நிச்சயம். அந்த நோட்ஸ் புத்தகங்கள் முன் நம்மூர் கோணார் நோட்ஸெல்லாம் ரொம்ப டஃப்.
பத்ரி மாமாவைப்பற்றி... அலகாபாத் தமிழ் சங்கத்தின் செயலர். திருச்சி சேஷசாயி தொழில் கல்லூரியில் டிப்பளமா படித்தவர். தந்தையுடன் (என் தாத்தா) ஸ்ரீரங்கம் அடையவளஞ்சான் தெரு, கீழ சித்திரை வீதியில் பல வருடங்கள் குடியிருந்தவர். ஶ்ரீரங்கத்தில் என் மாமாக்கள் அடிக்காத லூட்டி கிடையாது. தாத்தா போஸ்ட் மாஸ்டர். முன்புறம் போஸ்ட் ஆபிஸ் பின்னால் வீடு. மாமா, சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதையில் வரும் சில பாத்திரங்களுடன் நிறைய பொழுதை கழித்தவர். வாலி தன் வீட்டு மொட்டை மாடியில் நடத்தும் டிராமாக்களில் இருந்தவர்.
அலுவலகத்தில் நல்ல பெயர் அவருக்கு. பாஸின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதால் கான்பூர், லக்னௌ, புது டெல்லி போன்ற இடங்களுக்கு டெண்டர் உள்ளிட்ட அலுவல் நிமித்தம் மாமாவை அடிக்கடி அனுப்புவார்கள். அரசுத்துறைகளில் அவருக்கு பரிச்சயமான ஆட்கள்… லஞ்ச லாவண்யங்கள் இல்லாமல் சாதுரியமாக பேசி பான் பீடா வாங்கிக்கொடுத்தே நிறைய காரியங்களை சாதித்து முடித்து விடுவார். பல வருடங்கள் அலபாபாத்தில் இருப்பதால் சரளமான ஹிந்தி. பஞ்சாபி கத்ரி, காயஸ்த், பனியா, பெங்காலி என எக்கச்சக்கமான நண்பர்கள். வருடத்திற்கு இரு முறை என்னை பெனாரெஸ் கூட்டிப்போவார்.
விஷயத்திற்கு வருகிறேன். அன்று மாமா அவசரமாக கான்பூர் செல்ல வேண்டியிருந்தது. தனது ஜாவா மோட்டார் பைக்கை ரயிலடியில் விட்டு விட்டு தீன் சுகியா எக்ஸ்ப்ரஸ்ஸில் கிளம்பி கான்பூர் போனார்.. பணியை முடித்து மாலை அலகாபாத் திரும்பும் முன் பாசிடமிருந்து போன்.. உடனே டெல்லி போகச்சொல்லி. பணம் கையில் கொஞ்சமாக இருந்ததாலும் அன்றிரவே கிளம்பி காலை 8 மணிக்கு டெல்லி சென்றடைந்தார்.
ரயில்வே ஸ்டேஷனில் அவசரமாக 2ஆம் வகுப்பு வெயிட்டிங் ரூம் போய் பெட்டியை ஒரு மூலையில் வைத்து விட்டு சவரம் செய்து கொண்டிருந்தபோது வெள்ளை ஜிப்பாக்காரன் ஒருவன் மாமாவின் பெட்டியையே பார்த்துக்கொண்டிருந்தான். சாந்தினி சௌக் செல்ல வேண்டிய அவசரத்தில் குளிக்கப்போன மாமா 10 நிமிடங்களில் வெளியே வந்தபோது பெட்டி திறந்திருக்க பணப்பையை காணோம். வெள்ளை ஜிப்பாக்காரன் அவசரமாக வெளியேறிக்கொண்டிருந்தான்.
சந்தேகமே இல்லாமல் அவனை நெறுங்கும் முன் அவன் ஓட ஆரம்பிக்க, அடுத்த சில நொடிகளில் மாமா அவனை பிடித்து 'கிதர் ஹை மேரா பைசா?' என கேட்க வெள்ளை ஜிப்பாக்காரன் உச்சஸ்தாயியில் கத்தினான். "சாலே! தும் மத்ராசி லோக் க்யா சமஸ்தா? கூடியிருந்தவர்கள் வெள்ளை ஜிப்பாக்காரனுக்கு சாதகமாக பேச, மாமாவிற்கு அழுகை முட்டத்தொடங்கியது. 'பணத்தை வேறு எங்காவது தொலைத்து விட்டிருப்பாய்... ஒழுங்கா வீடு போய் சேர்'.. என்ற பாணியில் மாமாவை அடிக்காத குறையாக கூட்டம் விரட்டியது. எல்லாம் வெள்ளை ஜிப்பாக்காரன் ஆட்கள் போலும். மாமா எதுவும் சொல்ல முடியாமல் ஸ்டேஷன் படிகளில் ஏறி முதல் பிளாட்பாரத்திற்கு செல்ல அங்கே ஒரே அமளி.
முதல் பிளாட்பார தண்டவாளத்தில் ஒரே கூட்டம். 'யாரோ ஒருவன் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் வந்து இடித்து விட்டது' என்று கூட்டத்தில் யாரோ சொல்ல.. கூட்டத்தை விலக்கி அங்கே எட்டிப்பார்த்தார் மாமா.
தண்டவாளத்திற்கு அப்பால் அதே வெள்ளை ஜிப்பாக்காரன் பாதி மூடிய கண்களுடன் தரையில் உட்கார்ந்திருந்தான் இரண்டு தொடைகளை நீட்டியபடி. தொடைகளுக்குக்கீழ் முழங்கால்கள் இரண்டையும் காணோம்.. கொஞ்சம் தள்ளி வெட்டப்பட்ட முழங்கால் இரண்டும் துண்டுகளாக பக்கத்தில் கிடந்தன. விபத்து நடந்து சில நிமிடங்களே ஆனதால் வெட்டப்பட்ட சதைப்பகுதி இன்னமும் வெள்ளையாக இருக்க ரத்தம் கூட கசிய ஆரம்பிக்கவில்லை.
ஒரு கணம் மாமா விக்கித்து நின்றார். அதே நேரம் வெள்ளை ஜிப்பாக்காரன் கூட்டத்தின் நடுவே தெரிந்த மாமாவின் முகத்தை பார்த்து விட, மறுகணம் அவரை பார்த்து ஏதோ சொல்ல முயன்று கையை தூக்கி காட்டி அப்படியே மயக்கமடைந்தான். அவன் யாரை காட்டுகிறான் என்று எல்லோரும் திரும்பி பார்க்க, மாமா அங்கு இல்லை…