Friday, July 19, 2013

வைத்ய ரத்னா ஆயுர்வேதா மெடிகல் செண்டர்

பஹ்ரைன் வைத்ய ரத்னா ஆயுர்வேதா மெடிகல் செண்டர் முன்பு வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன். நாலு நாளாக முதுகும் இடுப்பும் ஒரே வலி..சாதாரண இடுப்பு வலி தான்.. 8 தினாருக்கு பகுதி (மலையாளத்தில்) மசாஜ் என்றார்கள். அதாவது பாதி மசாஜாம். புல் மசாஜ் 15 தினார். 

உள்ளே ஒரு ரூமுக்குள் போய் அவர்கள் கொடுத்த கோவணத்தை சுற்றிக்கொண்டு தயங்கி தயங்கி வந்த என்னை நடு ஹாலில் போடப்பட்டிருந்த ஒரு பெரிய மேசையின் மேல் குப்புற படுக்க சொன்னார் அந்த சாஜன் என்ற நபர். 'நாட்ல எவ்வடே' என்று பரிவுடன் விசாரித்தார். 'அடப்பாதகா! இடுப்புல வலி எவ்வடேன்னு கேக்காம ஊரைப்பத்தி விசாரிக்க இதுதான் நேரமா' என்று நினைத்துக்கொண்டு 'திருச்சி' என்று சொன்னேன். மறுபடியும் 'நாட்ல எவ்வடே' என்று அவர் கேட்டபோது எனக்கு காது சூடானது. இப்பத்தானே பதில் சொன்னேன்? அப்புறம் தான் புரிந்தது மலையாளத்தில் 'திருச்சி' என்றால் 'மறுபடியும்' என்று அர்த்தம். ஒருவழியாக இந்த சம்பாஷனை முடிந்து பணியை ஆரம்பித்தார். தேநீர் போடும் கெட்டிலை எடுத்தார். பரவாயில்லையே குடிக்க டீயெல்லாம் கொடுப்பார்கள் போல என்ற என் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டார். கற்பூராதி தைலம் கலந்த எண்ணையை கெட்டிலில் விட்டு சூடாக்கி இடுப்பில் மிக தாராளமாக கொட்டி ஒத்தடம் என்கிற பேரில் முதுகையும் இடுப்பையும் துவம்சம் செய்யத்துடந்கினார். பரோட்டா மாஸ்டர் வேலை பார்த்தவர் போலிருக்கும்.
அடுத்தடுத்த ரூம்களில் இதே மாதிரி இஷ்டமித்திர பந்துக்களுடன் மசாஜ் வைபவங்கள்..ஒருவழியாக உடை மாற்றிக்கொள்ள வேறு அறைக்கு போனால் எங்கெங்கு காணினும் ஜட்டியடா...

எல்லாம் முடிந்து ரிஷப்ஷனுக்கு வந்து பணத்தை கட்டும்னோது அவர் சொன்னார் ' சாரே ஈ மாசம் offer இண்டு ' என்றார். மசாஜுல என்னப்பா offer என்று கேட்டேன். 'இன்னு மசாஜ் செய்யுங்கில் 10 தெவசம் கழிந்க்னு 50% சார்ஜிலே மற்றொரு மசாஜ் கிட்டும்' என்றாரே பார்க்கலாம். இன்று ஒரு 'தெவசம்' போதும் என்று சொல்லி வெளியே வந்தேன்...

No comments:

Post a Comment