Monday, August 5, 2013

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் ...


 சுமார் 7 மணிக்கு மேல் திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் பயங்கர  களை கட்டும். உறையூர், புத்தூர், தில்லைநகர்,தென்னூர் என்று எல்லா பக்கங்களில் இருந்தும் மாணவர்கள் ஈசல் போல் வந்து குவியும் இடம். 83, 84ஆம் வருடம் என நினைக்கிறேன். 'ஒரு தலை ராகம்' பெல்பாட்டம்,ஸ்டெப் கட்டிங், சிகப்பு ரோஜாக்கள் பெல்ட் எல்லாம் போய் விட்டது. அப்போது எல்லாம்  'சட்டம்' கமல் போடும் டைட்டான பேண்ட், சன்னமான பெல்ட், கூரான ஷூ தான். அதற்கு காரணமானவர்கள்   சமஸ்பிரான் தெரு ஆல்பா டைலர்ஸ், சிங்காரத்தோப்பு ஜோதி டைலர்ஸ், மலைவாசல் மார்கரெட் சலூன்  போன்ற புண்ணியவான்கள் .  சிகையலங்காரம் செய்துகொள்ள  மார்கரெட் சலூன் போகும்போது நமக்கு ஏதோ தாழ்வு மனப்பான்மை.. மலை வாசலில் இருந்து மூன்றாவது கடை. மற்ற கடைகளை விட மும்மடங்கு கட்டணம்.கடையில் உள்ள 3,4 இளைஞர்கள் நாம் உள்ளே நுழைந்ததும் நம்மை ஏற இறங்க பார்த்து 'வாங்க புள்ள...' என வரவேற்பார்கள். முக்கால்வாசி அங்கு பெண்கள் பற்றிய பேச்சு தான். வருடாவருடம் அவர்கள் சிங்கபூர் மலேசியா  போய் வந்த அனுபவத்தை விவாதிப்பார்கள்.

 சமஸ்பிரான் தெரு ஆல்பா டைலர் அப்போதே பெரிய வீடு கட்ட ஆரம்பித்து விட்டார்.   கடை மாஸ்டர்   நாம் சட்டையை போட்டு ட்ரயல் பார்த்ததும்  நம் முன்னே அந்த சட்டை தையலை டர்ர்ரென்று பிரித்து டைலர் பையன் மீது வீசி 'என்னடா தெச்சிருக்க..அர இஞ்சு புடி..' என்று அடுத்த 15 நிமிடத்தில் ரெடி செய்து சுளையாக 60 ருபாய் வசூலிப்பார். பேண்ட் அளவு கொடுக்க  போனால் தோளில் உள்ள டேப்பை  தன்  வலது கையால் நமக்கு பக்க வாட்டில் வீசி நம் இடுப்பில் சுற்றி இடது கையால் மறுமுனையை ஸ்டைலாக பிடிப்பார். பிடித்த கையோடு வயிற்றை டேப்பால்  டைட்டாக பிடித்து 30 என்று சொன்னதும் எங்கோ மூலையில் காஜா எடுக்கும் சிறுவன் ஒரு அட்டையில் குறிப்பான். அடுத்து நம் துடைகளுக்கு இடையே டேப்பை விட்டு நம்மை லேசாக ஒரு இஞ்சு உயரத்திற்கு தூக்கி 7 என்று சொல்லி நம்மை இறக்கி விடுவார். தைத்து முடிந்து பேண்ட் போட்டு பார்க்கும்போது நமக்கு  'வாழ்வே மாயம்' கமல் ஆனது போல் உணர்வு(படத்தின் முன்பாதி கமல் மட்டும்.. பின்பாதி இல்லை..). புதிய பேண்ட்டை மாட்டிக்கொண்டு  சனிக்கிழமை நேரே கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் தான்

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றதே மாணவர்களால் தான். அந்த சமயம்  இளமைக்காலங்கள், பன்னீர் புஷ்பங்கள், மூன்றாம் பிறை, ராஜபார்வை, போன்ற படங்களின் பாடல்கள் மிகவும் முனுமுனுக்கப்பட்டவை. எல்லா பசங்களுக்கும் சுமன், சுரேஷ், கமல் மாதிரி நெனைப்பு வேறு. கோவிலில் மூலவர், உற்சவர்,மற்றும் whichever பக்கம் போனாலும் மாணவர் தான். அதிலும் திருச்சி பசங்களுக்கு கொஞ்சம் கூட சைட் அடிக்கவே தெரியாது. சரி... அந்த பெண்ணுக்கு மட்டும் தெரியும்படியாக ஜொள்ளு விடலாம் என்ற எதிக்ஸ் எல்லாம் கிடையாது. பிரகாரத்தில் பயந்து பயந்து சுற்றி வரும் பெண்ணை ஒரே நேரத்தில் நான்கைந்து தீவிட்டி தடியன்கள்  ' ஙெ' என ராஜேஷ்குமார் ஸ்டைலில் வெறிக்க வெறிக்க பார்த்து அவள் அப்பனை கடுப்பேத்துவார்கள். வடை மாலை சாத்திய  கையோடு  அவனுங்களையும் நாலு சாத்தானும் போல தோன்றும்.

கோவிலின் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் தத்தமது 'ஆள்' வந்தாகி விட்டதா என கண்ணால் தேடி முகத்தில் பக்தி பரவசம் சொட்ட சொட்ட பிரகாரத்தை சுற்றோ சுற்றென்று சுற்றுவார்கள். அந்த பக்கமும் ஒன்னும் குறைச்சல் இல்லை. பசங்கள் தம்மை குறி வைத்து தான் சுற்றி சுற்றி வருகிறார்கள் என தெரிந்து அந்த யுவதிகளும்  பாதி மூடிய கண்களுடன் தம் சிறு பாதங்களால் மணிக்கணக்காக  9 ரவுண்டு சுற்றுவது கண்டு சநீஸ்வரனே பொறுமை இழப்பார்.
 "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னை
படிப்பறை கொண்டு யாம் பெரும் சன்மானம்" ...
ராமர் சன்னதி பக்கம் உபன்யாசகம் கேட்க நல்ல கூட்டம் வந்திருந்தது.
புரியாத 27ஆம் பாசுரத்தை புரிந்த மாதிரி தலையாட்டி  சுற்றிலும் நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்கள்  நாலைந்து கோட்டான்கள். அவர்கள் தேடி வந்த திருப்'பாவை'யே வேறு..
இத்தனை அழிச்சாடியங்களையும் பார்க்க மற்றும் சுவாமியை சேவிக்க சனியன்று கோவிலுக்கு தவறாமல் நானும் கீழ் வீட்டு சீனிவாசனும் வந்து விடுவோம்.

கீழ் வீட்டு சீனிவாசனை பற்றி.. மன்னார்புரம் சர்க்கியூட் அரசு குடியிருப்பு காலனியில் நாங்கள் இரண்டாம் தளம். கீழே DCTO பக்தவத்சலம் வீடுசீனிவாசன், கோவிந்தராஜன், பாலாஜி என 3 பசங்கள்.   எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நானும் சீனிவாசனும் திருச்சி புறநகர் பகுதியில் இருக்கும் எல்லா சினிமா கொட்டகையிலும் (டூரிங் தியேட்டர் உள்பட) MGR  படங்கள் பார்ப்போம். முக்காவாசி நேரம் அவர்கள் வீட்டில் தான் கிரிக்கெட்  மாட்ச் பார்த்துக்கொண்டிருப்போம்ஒரே சிரிப்பு, கும்மாளம் தான். சீனிவாசன் சரியான லூட்டி.. கெட்ட வார்த்தைகளை கூசாமல்  ஸ்பஷ்டமாக சொல்வான்

நேஷனல் காலேஜில் என் தம்பி விஜயரகவனுடன் பி.காம் படித்துக்கொண்டிருந்தான். எப்போதும்  BNV யின் அக்கவுண்ட்ஸ் கிளாசை புகழ்வான்.சில லேக்ச்சரர்களின் பெயர்களுக்கு முன் 'க்காலி' என செல்லமாக அடைமொழி சேர்த்து திட்டுவான்.  அழகான வரிசையான வெண்மையான பற்கள்  என நினைக்க வேண்டாம்.  அப்பிடியே ஆப்போசிட்.. நெற்றியில் திருமண்...எப்போதும் மலர்ந்த முகம். MGR  படம்  என்றால் உயிர். படம் ரிலீஸ் ஆன முதல் நாள் எல்லோரும் முரட்டுக்காளை போகும்போது நானும் சீனிவாசனும் ரகசிய போலிஸ் 115, கு.கோயில், 1000இல் ஒருவன், தெய்வத்தாய், ராணி சம்யுக்தா போன்ற படங்களுக்குத்தான் போவோம்

ஒவ்வொரு சனியன்றும் நானும் அவனும் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு போனாலும்  சைட் எல்லாம் அடிக்கும் அளவுக்கு விருப்பமில்லை எங்களுக்கு. ஆனால் யார் யார் அன்று வரவில்லை. புதியதாக எந்த பார்ட்டிகள் வந்தது போன்ற கணக்கெடுப்புகள் உண்டு. பொன்மலையில் இருந்து ரங்கநாதன் என்றொருவன் 7 மணிக்கு முன்னால் கல்லுக்குழி முதலாம் குறுக்கு தெருவில் யாரோ ஒருவர் வீட்டிற்கு  வந்து, பின் 8 மணி வாக்கில் அழகான ஒரு பெண் (சங்கராபரணம் ராஜலக்ஷ்மி மாதிரி) மற்றும் அவளது அம்மாவுடன் கோவிலுக்கு வருவான் . பக்கத்தில் பிரகார மண்டபத்தில் கச்சேரி வெகு ஜோராக நடக்கும். தொன்னையில் வெண் பொங்கல் சாப்பிட்டவன்னம் மிருதங்கத்தை ரசித்து விட்டு, 9 மணிக்கு வீடு திரும்புவோம். 'இந்த கோவிலுக்கும் எனக்கும் ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்குடா.. என்னால் இங்க வராம இருக்க முடியாது' என்று சீனிவாசன் அடிக்கடி சொல்வான்.

அடுத்த வருடம் நான் திருச்சி விட்டுப்போய் பாம்பேயில் தஞ்சமடைந்ததும் எங்கள் கடித நட்பு  மட்டும் தொடர்ந்தது. அவனும் சென்னைக்கு வேலை தேடி திருச்சி விட்டுப் போய் விட்டான்பிறகு  ஓரிரு வருடங்களில் கடித போக்குவரத்தும் நின்று போனது. அடுத்த 4,5 வருடங்களில் திருச்சிக்கு போகும்போது எப்போதாவது ஒரு முறை கல்லுக்குழி ஆஞ்சநேயர் போனால் சீனிவாசன் நினைவு தான். 'சங்கராபரணம் ராஜலக்ஷ்மி'யுடன் வரும் ரங்கநாதனையும் காணோம். முன்பு மாதிரி கமல் ரஜினி ஸ்டைலில் மாணவர்களையும் அதிகம் பார்க்க முடியவில்லை. ஏன்... கமல்  கூட சிப்பிக்குள் முத்து  போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். கமல் அழுவது மிமிக்ரி செய்பவர்களுக்கு  வசதியாகி விட்டதுரஜினிக்கு ' வேலைக்கார ' னில் முன் வழுக்கை ஆரம்பமாகி விட்டது.. பன்னீர்புஷ்பங்கள் சுரேஷ் தலை மறைவு.. சுமனுக்கு ஜெயில்

திடீரென்று பிரம்மச்சாரி வாழ்க்கையில் ஒரு திருப்பம். வேலைப்பளு, வேலை மாற்றங்கள், பெண் பார்க்கும் படலம், சைக்கிள் ஓட்டும்போது இருந்த குதூகலம் மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது தொலைந்திருந்தது..சட்டைப்பையில் பைசா இல்லாமல் சுற்றும்போது இருந்த சந்தோஷம் மணி பர்சில் இல்லை... சரி.. இது வாழ்க்கையில் அடுத்த phase தான். responsibility அதிகரிக்கும்போது freedom  தொலைவது இயல்பு தானே என்று  தேற்றிக்கொண்டேன். மறுபடியும் 23,24 வயது திரும்ப வராதா என்று சிறிய ஏக்கம்...

 5 வருடங்கள் போனதே தெரியவில்லை ... மீண்டும் வசந்தகாலம் ஆரம்பம்..

பி.கு-1: ஒருநாள் செம்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கறிகாய் வாங்கிக்கொண்டிருந்தான் பொன்மலை ரங்கநாதன். கூட அவன் பார்யாள்.. ஒரு நிமிஷம் யோசித்தேன்.. அவளே தான்....'சங்கராபரணம் ராஜலக்ஷ்மி'.. அவள் இடுப்பில் அழகான குட்டி மஞ்சு பார்கவி …. ரங்கநாதனுக்கு பாபா அட்டாமிக் ரிசேர்ச் சென்டரில் (BARC) வேலையாம்..

பி.கு-2: திடீரென்று ஒருநாள் திருச்சி ஜங்க்ஷன் அருகே நம்ம சீனிவாசனை பார்த்தேன். பார்த்ததும் ஆசையாக இறுக கட்டி பிடுத்துக்கொண்டான். சபார்டிநெட் அக்கவுண்ட் சர்வீஸ் பரிச்சையில் தேறி தேனாம்பேட்டை பக்கம் AG s ஆபிசில் ஆடிட்டர் வேலையாம்.
உபரி தகவல்: அந்த கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் குருக்கள் …. இப்போது அவனுடைய  மாமனார்.


பி.கு-3: கமலுக்கு மைக்கேல் மதன காமராஜன்  போன்று சூப்பர் ஹிட்டு படங்கள்.. ரஜினியும் முக்கா வழுக்கையில் தளபதி, மன்னன்,   என்று கலக்க ஆரம்பித்தார்.... சுமனுக்கு ஜாமீன்…  

No comments:

Post a Comment