Sunday, December 7, 2014

பாபு

இந்தப்பக்கம் நிற்பவன் மூத்தவன்..
பாபு..பாம்பேவாசி. அந்தப்பக்கம் தம்பி.. ரவி, ஒமான்(Jani Vijay Raghavan) வருடத்திற்கு இருமுறை ஊருக்குப்போனாலும் சகோதரர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக சந்திப்பது அபூர்வம். கடந்த 2,3 வருடங்களாகத்தான் அம்மா, அப்பாவின் மறைவினால் நாங்கள் அடிக்கடி சந்திக்கிறோம். 

பெரியவன் பாபு பரமசாது,கூச்ச சுபாவமுள்ளவன். கொஞ்சம் வெகுளி. சின்னவன் ரவி அப்படியல்ல. அவன் ஏவியெம் ராஜன் மாதிரியென்றால் இவன் ஆனந்தராஜ்.

சின்ன வயதில் பாபு ரொம்ப கண்டிப்பானவனா இருப்பான். எங்கள் இருவருக்கும் அவனிடத்தில் கொஞ்சம் பயம். ரெண்டு தடவை திட்டுவான். மூன்றாவது தடவை பளார் தான்.

70 களில் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் தெருவில் இருந்தோம். ஏதாவது கலியாணமென்றால் லௌட் ஸ்பீக்கரில் 'ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் (மாணிக்கத்தொட்டில்)... கேட்டுக்கோடி உறுமி மேளம்..(ப.பா)... ' என பாடல்களும் முழு சினிமாப்பட வசனம் ஓடிக்கொண்டிருக்கும். படம் பார்க்காமலேயே வசனங்கள் எங்களுக்கு அத்துப்படி. அடிக்கடி சினிமாவும் போவோம். பேலஸ் தியேட்டரில் 'கோமாதா என் குலமாதா', அருணா தியேட்டரில் 'பாபி', ராமகிருஷ்ணாவில் 'சிரித்து வாழ வேண்டும்', பத்மாமணியில் 'தீபம்', ஜுபிடரில் 'நீதிக்குத்தலை வணங்கு'.. என எக்கச்சக்கமான படங்கள்.

ராக்ஸி வெலிங்டனில் பட்டிக்காடா பட்டனமா படத்துக்கு ஒரு நாள் எங்களை கூட்டிப்போனான் பாபு. சரியான கூட்டம். ஐம்பது பைசா டிக்கட் கியூவில் நாங்கள் முன்னால் நின்றாலும் கவுன்ட்டர் திறந்தவுடன் திடீரென வரிசை கடைசியிலிருப்பவர்கள் மேலே ஏறி நம் தலைக்கு மேல் இருக்கும் இரும்புக்கம்பியை பிடித்துக்கொண்டு பல்லி மாதிரி தலைகீழாய் ஊர்ந்து முன்னால் வர, "டாய்.. எறங்குடா.." வென கூச்சல். கசகசவென கூட்டம், பீடி நாற்றம் எல்லாம் சேர்ந்துகொள்ள பாபுவுக்கு திடீரென மூச்சு முட்டி கண்கள் சொறுகி.. மயக்கம் வர, "பாபு..பாபு.." என நானும் ரவியும் கத்தினோம். " டேய்.. இவனுக்கு மயக்கம்டா..அடுத்த நிமிடம் வரிசையிலிருந்து வெளியேற்றப்பட்டோம். 'ச்சே..படம் பார்க்க வந்த சமயத்திலயா இவனுக்கு மயக்கம் வந்துத்தொலையனும்?...சில நிமிடங்களில் அவனுக்கு குடிக்க தண்ணீரெல்லாம் கொடுத்ததும் எழுந்து உட்கார்ந்தான். 'அப்பாடா.. எந்திரிச்சுட்டான்..திரும்பவும் கியூவில் நிற்கலா'மென நாங்கள் நினைக்கும்போது ' வாங்கடா.. வீட்டுக்கு போலாம்' என எங்களை வெறுப்பேற்றி வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போனபோது ஈஸ்வரியின் 'ஓ..மை ஸ்வீட்டி.. ஓ குடுமி அங்கிள்..' பாட்டு மனதில் ஓடியது..

அந்தத்தெருவில் நாங்கள் குடிபோன புதிதில் சின்ன சைக்கிள் ஒரு மணி நேரம் வாடகைக்கு எடுத்து விடுவான் பாபு. எண்ணைக்கடைக்கார வீட்டுப்பையன்கள் இவன் சைக்கிள் சக்கரத்துக்குள் குச்சியை விட தபாலென இவன் கீழே விழுந்து ' ஏன்டா.. சைக்கிள் வீல்ல குச்சியை விட்டா சைக்கிள் எப்பர்றா ஓடும்' என வெகுளியாக கேட்க 'ஆஹா... கண்டுபிடிச்சுட்டார்யா..கொலம்பஸ்..' என கலாய்த்து அன்றிலிருந்து இவன் பெயரையே 'கொலம்பஸ்' ஆக்கினார்கள்.

அந்த வெகுளித்தனம் அவனுக்கு கல்யாணம் ஆகியும் போகவில்லை. 90இல் (பம்பாய்-முலுன்டு) இவனது குழந்தையின் மூன்றாவது பிறந்த நாளன்று அக்கம்பக்கத்து சின்னக்குழந்தைகள் சப்பிட வரிசையாக தரையில் உட்கார்ந்ததும், அண்ணி 'ஏங்க.. குழந்தைங்களுக்கு இட்லி வைங்க' என சொன்னதுதான் தாமதம், மூன்று, நான்கே வயதான குழந்தைகள் எல்லோருடைய தட்டிலும் மூன்று மூன்று இட்லி மற்றும் பெரிய சாம்பார் கரண்டியால் சட்னியை ஊத்தி, எல்லா ஐட்டங்களையும் ஒரே பந்தியில் காலி செய்து மனைவியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டான்.

பாபு படிப்பில் மட்டும் எப்போதும் பயங்கர புலி. ஆனால் தீபாவளியன்று நானும் ரவியும் பாம்பு மாத்திரை விடும்போது இவன் மட்டும் புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டு எங்களை கடுப்பேத்துவான்.

கான்பூர் யுனிவர்சிட்டியில் இளங்கலை பாட்டனி மற்றும் எம்.ஏ படித்து குடும்ப சூழ்நிலையால் பாங்க் எக்ஸாம் எழுதி சீக்கிரம் வேலைக்குப்போனாலும், உடனே சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்தவுடன், ராவ்ஸ் கோச்சிங் இன்ஸ்டிட்டியூட்டில் சேர்ந்து சிவில் சர்வீஸ் (IAS & IPS) தேர்வுக்கு கடுமையாக உழைத்து, ப்ரிலிமினரி மற்றும் மெயின் பரிட்சைகள் பாஸ் செய்து டெல்லி இன்டர்வியூ வரை போய், 961வது ராங்க் வாங்கி சுமார் 15 ராங்க்குகள் பின் தங்கியதால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் அருமையான வாய்ப்பை இழந்தான்.

பின் பம்பாயில் ரிசர்வ் வங்கியில் வேலை செய்து கொண்டு ஒரே அட்டெம்ட்டில் ICWA ஃபைனல், பின் CFA போன்ற படிப்புகளை அசால்ட்டாக பாஸ் செய்து MBAவும் முடித்து பம்பாய் பங்கு மார்க்கெட்டுக்குத்தாவினான்..ஆனாலும் அதே வெகுளித்தனத்துடன்..

சென்ற மாதம் நாங்கள் மூவரும் திருச்சியில் எங்கள் ஒரே சகோதரி Hemalatha Manoharவீட்டில் கூடினோம். அம்மாவுக்கு முதல் வருட ஸ்ராத்தம்.. வழக்கம்போல வீட்டில் ஒரே அரட்டை..சின்ன வயசில் எவ்வளவு வெகுளியாக இருப்பாய் நீ என பாபுவை கேலி செய்துகொண்டிருந்தோம்.

பூஜைக்கு நேரமாகவே புரோகிதர் 'மூத்தவர் வந்து மொத ஒக்காருங்க' என இவனைக்கூப்பிட்டு, 'சட்டைய கழட்டீட்டு இடுப்புல துண்டை சுத்துங்கோ' என சொன்னவுடன் 'அப்ப வேஷ்டி?' எனக்கேட்டு சாஸ்திரிகளையே கலங்கடித்தான்.

ராமசாமி தாத்தா…


'ரேய்.. ஸ்ரீதர்.. ரேப்பு தாத்த (தாத்தா) ஒஸ்தாரு... தெலுசுனா..' என நைனா கேட்டதும் எனக்கும் தம்பி ரவிக்கும்  ஒரே சந்தோஷம். தாத்தாவுடன் அரட்டை அடிப்பது, அவரை சத்தாய்ப்பது என்பது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அந்த தெருவில் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோருக்கும் தாத்தாவைத்தெரியும்.
1973.. திருச்சி தென்னூர் பட்டாபிராம் பிள்ளைத்தெருவை ஒட்டிய ஜெனரல் பஜார் தெருவின் ஒரு பகுதியான சிறிய சந்து தான் பென்ஷனர்கார தெருவு. மொத்தமே 40 வீடுகள், எண்ணெய்க்கடைக்காரர்கள் வீட்டிலிருந்து வரும் 'ஞீஈஈ....' யென செக்கு சுற்றும் சப்தமும் நல்லெண்ணை வாசனையும், பள்ளிவாசலில் பாங்கு ஓதும் சத்தமும், அடுத்த தெரு மன்னான்பாய் வீட்டுக்கல்யாணத்திலிருந்து ஷைலேந்தரின் இனிமையான குரலில் "பாஹர்ஸெ கொய் அந்தர் நா ஆசக்கே.."யைத்தொடர்ந்து வரும் அக்கார்டியன் இசையும் ...ரம்மியமான சூழ்நிலை.
சூம்பிய போலியோ கால்களுக்கு இரு பக்கமும் கக்கத்தில் வைத்த கட்டைகளை ஊன்றியவாறு கார் ஹாரன் ரிப்பேர் செய்யும் பாஷா வீட்டு திண்ணையில் அன்று காலை கவுன்சிலர் கிருஷ்ணன் வெத்திலை சீவல் போட்டவாறு அரை மணி நேரம் பேசிவிட்டுப்போனால் அன்று மாலைக்குள் ஃப்யூஸ் போன பல்புகள் மாற்றப்பட்டு தெரு விளக்குகள் பளிச்சென்று எரியும்.
ஏழெட்டு வீடுகள் தள்ளி தர்கா..சந்து என்று தான் பேர்.. எப்போதும் ஆள் நடமாட்டம்…. விடியற்காலையில் ‘குடுகுடு’(ப்பைக்காரன்),.. "மா.. கத்தரிக்கா, முருங்கக்கா, வெண்டிக்கா.." சப்தங்கள்.. 8 மணிக்கு "புட்டு.. இடியாப்பேய்..." அடுத்து "முறுக்கு... அதிரச... சுண்டல் வடேய்...." பிறகு பரங்கிக்காய் தம்புராவை மீட்டியபடி நெற்றியில் நாமம், முண்டாசு கட்டி வரும் ஜோசியக்காரர்கள்.. நெற்றி நிறைய பொட்டுடன் வரும் குறி சொல்லும் பெண்கள்..மற்றும் 'பளய இரும்புக்கு பேரீச்சம்பளேய்ய்..'
தொன்னூறு ரூபாய் வாடகைக்கு ஓரளவு வசதியானது எங்கள் வீடு. மண்சுவற்றில் கட்டிய பழைய ஓட்டு வீடு. மாதாமாதம் பீமநகரில் இருந்து வாடகை வசூலிக்க வரும் வீட்டுக்காரம்மா சுலேகா பீவியிடம் 'மழ வந்துச்சுன்னா வீடு ஒழுகுதுங்க' என சொன்னால் உடனே ஓரிரண்டு ஓடுகளை மாற்றி சரி செய்து விடுவார்..
வாசலில் மூங்கில் தட்டிக்கதவு. அடுத்து முன்புறம் திண்ணை.. ஒரு ஆள் கால் நீட்டி படுக்கலாம். பக்கத்தில் அடுப்பெறிக்க கருவேலமர விறகுக்கட்டைகள்.. . அதற்கடுத்து ஒரு சின்ன ரூம், சாமி ரூம், பெரிய பட்டாசாலை மற்றும் பொய்க்காட(அடுப்படி). கொல்லைப்புறம் தொட்டியில் தண்ணீர் ரொப்பியிருக்கும். பக்கத்தில் துணி துவைக்கும் கல் மற்றும் விளக்குமாற்றுக்குச்சி குத்திய சன்லைட் சோப், பெண்களுக்கு மட்டும் குளியலறை.. தினமும் காலை கூடையில் சாம்பல் மற்றும் தகரம் சகிதம் மலம் அள்ளவரும் கக்கூஸ்காரி உள்ளே வர பின்பக்க கதவு.. ரோட்டின் இரு புறமும் மோரி (சாக்கடை)..
இளமைக்காலத்தில் அதிக வருடங்கள் நாங்கள் கழித்தது அந்த தெருவில் தான். "ம்மா... கஞ்சி!" என மூலைக்கொல்லைத்தெருவில் இருந்து தினமும் தன் ஆடுகளுக்கு ஊற்ற வீடு வீடாக கஞ்சி வாங்க வரும் ஜமாலி அம்மாவின் குரல் கேட்டால் மணி பதினொன்று என அர்த்தம். "கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்".. TMS குரல் டிரான்சிஸ்டரில் ஒலிக்க பாடலை கேட்டவாறு வீடுகளில் பெண்கள் பீடி சுற்றுவார்கள்.
வீட்டுக்குப்பின்னால் கோடை காலத்தில் மட்டும் சலசலவென நீரோடும் உய்யகொண்டான் வாய்க்கால்... 'சித்தி' ஜெமினி கணேசன் (வெற்றுடம்புடன் 'பொத்தக்'கென குதித்து 'தண்ணீர் சுடுவதென்ன' பாடுவாரே!) மாதிரி நாங்களும் தண்ணீரில் குதித்து ஆட்டம் போடுவோம்.
நாலைந்து வீடுகள் தள்ளி வசிக்கும் ஆட்டோ டிரைவர் பண்டரிநாதன் தெருமுனைகுழாயில் இரண்டு பக்கெட்டுகளில் தண்ணீர் பிடித்து அவசரமாக வீட்டுக்கு ஓடுவார். துருபிடித்த வாளியின் ஓரங்கள் காலில் சிராய்த்துவிடாமல் இருக்க கையை கொஞ்சம் அகட்டியவாறு பக்குவமாக தண்ணீர் கொண்டுபோகும் அவரை, வெள்ளை ஜிப்‌பா பெந்தகொஸ்தேக்காரர் வழி மறித்து ' பிரதர்... நாளை உலகம் அழியப்போகுது.. உங்களை சுவிசேஷப்பாதையில் அழைத்துச்செல்ல தேவன் இதோ வருகிறார்' என சொல்லும்போதே துருப்பிடித்த வாளியின் ஓரம் பண்டரிநாதன் காலை கிழிக்க, மண்டைவரை ஜிவ்வென்று ரத்தம் ஏறி அவர் 'நீ மொத போய்க்கோய்யா.. சுவிசேஷப்பாதைக்கு நாங்க அப்பறமா வர்றோம்' என காட்டுக்கத்தல் போடுவார்.
ஊரிலிருந்து தாத்தா வருவதாக சொன்னேன் இல்லையா? தாத்தாவை யாராவது உடுமலை பேட்டையில் பஸ் ஏற்றிவிட்டால் தனியாக திருச்சி பஸ் ஸ்டாண்ட் வந்து விடுவார்.
ராமசாமி தாத்தாவைப்பற்றி....
உடுமலை, தாராபுரம், ஈரோடு, கோவை பகுதிகளில் தெலுங்கர்கள் அதிகம். எங்களுக்கு அப்பகுதிகளில் நிறைய ஒரம்பரை. தாத்தா பல வருடங்கள் முன்பு உடுமையில் உரிமையியல் (ஸிவில்) வழக்குகள் நடக்கும் மாவட்ட முன்சீஃப் கோர்ட்டில் வக்கீல் குமாஸ்தாவாக இருந்தவர். பத்திரம் அருமையாக எழுதுவார். நல்ல வருமானம். விருப்ப ஆவணம் (உயில்), அதன் இணைப்புத்தாள்கள் (Codicil), இந்து வாரிசு உரிமைச் சட்டம், உயில் எழுதாமல் இறந்து போனவரின் (Intestate)வாரிசு உரிமை .. என எல்லா சட்ட விபரங்களும் அவருக்கு விரல் நுனியில். கிடைக்கும் வருமானத்தில் சிக்கனமாக இருப்பார். அப்பப்ப கொஞ்சம் வட்டிக்கும் கொடுப்பார். இன்டிக்கி பாடிகை லேது.. ஓத்திக்கு எடுப்பார்.
அவருக்கு 4 பையன்கள். அவ்வா ஆண்டாளம்மாவுக்கு கடைசி பையனான எங்க நைனா மீது அலாதி பிரியமாம். சின்ன பையனான நைனா கையை பிடித்தவாறே புற்று நோயால் அவ்வா இறக்கும்போது கையை பிரிக்க முடியவில்லையாம். அப்போ நைனாவுக்கு கல்யாணமான புதிது. பெத்த கோடாளு (மூத்த மருமகள்கள்) நீலா, தனம் மற்றும் சேசு பெத்தம்மா தான் குடும்பத்தை நடத்தியவர்கள். கூட்டுக்குடும்பம். கடைசி மருமகளான என் அம்மா, வீட்டு வேலைக்கு அவர்களுக்கு உதவியாக இருந்தார்கள். தினமும் வடித்த சாப்பாட்டுக்கஞ்சியை கீழே கொட்டாமல் குளியலறையில் ஒரு வாளியில் கொட்டுவார்களாம். படுக்கும் முன் இரவில் ஆண்கள் எல்லோரும் தத்தம் அன்டர்வேரை அந்த கஞ்சியில் போட்டுவிட்டால் காலையில் துவைத்து உலர்த்துவது அம்மாவின் வேலை. பெரிதாக பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்தவர்கள்.
நைனா எஸ்செஸ்செல்சி வரை படித்து விட்டு சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருந்ததால், தாத்தா யாரையோ பிடித்து அதே கோர்ட்டில் பெஞ்சு கிளார்க் வேலை வாங்கிக்கொடுத்தார். மாஜிஸ்டிரேட்டுக்கு கீழே தனியாக யாரோ சின்ன பையன் உட்காந்திருக்கானே என எல்லோரும் நைனாவை ஆச்சரியத்துடன் பார்ப்பார்களாம்.
பையன் படு சுறுசுறுப்பு.. மாஜிஸ்டிரேட் பெட்டியை தூக்குவது, நீதி மன்றத்தின் தினப்படி அட்டவணைப்படி வழக்கு எண்களை தயாரிப்பது, கோர்ட்ஆவணங்கள், தஸ்தாவேஜுக்கள், கோர்ட் சீல் அனைத்தும் பெஞ்சுகிளார்க் வசம் தான். வக்கீல் மற்றும் சாட்சிக்காரர்கள் கூண்டில் ஏறியவுடன் சத்தியப்பிரமாணம் எடுக்க அவர்கள் முன் சின்ன பையனாக இவர் போய் நின்றால் 'ஒரேய்..எவரு ரா நுவ்வு.. சின்ன பின்னோடு' என முறைப்பார்களாம்.
வழக்குகளின் போது 'கோவிந்தராஜுலு…கோவிந்தராஜுலு…கோவிந்தராஜுலு’ என பெயர்களை மூன்று முறை சத்தமாக விளிக்கும் இவர், ஒரு நாள்'சீதாபதி..சீதாபதி..சீதாபதி' என தன் பேரையே உரக்க கூவி விட்டு மறுகணம் கூண்டில் ஏறி நின்று விட, யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது சைக்கிளில் விளக்கு இல்லாமல் போன மாதிரி ஏதோ ஒருசின்ன குற்றத்துக்கு இவர் மேலேயே வழக்கு பதிவாகியிருந்ததென்று. ஜட்ஜ் சிரித்துக்கொண்டே இவரை மன்னித்து விட்டாராம்.
ஆச்சு.. தாத்தா நாளை வர்றார்..
நைனா திருச்சி பஸ் ஸ்டாண்ட் போய்ச்சேரும்போது எப்போதோ பஸ் வந்து சேர்ந்து தாத்தாவை யாரோ கீழே இறக்கி விட்டிருக்கிறார்கள். 80 வயசுக்கு மேல் இருக்கும் தாத்தாவை 'குர்ரம்பண்டி'யில் ஏற்றி பின்னாலேயே நைனா சைக்கிளில் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.
தாத்தா நல்ல சிவப்பு. வெள்ளைக்காரன் மாதிரி பச்சைக்கண்கள். (நைனாவுக்கும் தான்).. நரம்புத்தளர்ச்சியால் தலை எப்போதும் 'சரி.. சரி..' என சொல்வது போல் ஆடிக்கொண்டிருக்கும். நாங்களும் அவரிடம் பேசும்போது அவரை மாதிரியே தலையை ஆட்டி பேசுவது கண்டு ' அட்ரா.. பொட்டி மவனே' என செல்லமாய் அடிக்க வருவார். கன்னத்தில் 50 பைசா நாணய அளவு 'வில்லன் மனோகர்' மச்சம். வழுக்கையில்லாத வெள்ளை முடி… அத்வானி மாதிரி மேலுதட்டத்தின் நுனியில் ஓட்டிக்கொண்டிருக்கும் வெள்ளைப்பஞ்சு மீசை. காமராஜர் கணக்கா பெரிய சட்டை. உள்ளே பருத்தித்துணியால் தைத்த முண்டா பனியன் மற்றும் பை வைத்த கால்சராய்.
சட்டைப்பையில் சிறிய பொடி மட்டை மற்றும் ஒரு டப்பாவில் நாமக்கட்டி, சூரனம் மற்றும் வெள்ளிக்கம்பி… அவரது தோல் பையிலிருந்து நீலவட்ட வடிவ வெள்ளி தட்டு (சாப்பாட்டுக்கு), சிறிய நீலவட்ட தட்டு (தொட்டுக்கொள்ள) மற்றும் வெள்ளி தம்ளர் வெளியே எடுத்து அம்மாவிடம் கொடுப்பார். வயிற்று வலிக்கு கொஞ்சம் கடுக்காய்வைத்திருப்பார்.
முழு தினமும் அவருக்கு திண்ணையில் தான் வாசம். காலை 6 மணிக்கு எழுந்ததும் படுக்கையிலேயே சில நிமிடங்கள் ஏதோ ஸ்லோகம் சொல்வார். பின் வேடி நீளு (சுடுதண்ணி) குடித்து அடுத்த பத்தே நிமிடத்தில் காலைக்கடன்... 9 மணிக்கு எழுந்து ஸ்நானஞ்சேசி கோசியை (கோமணத்தை) அலசி காயப்போட்டபின் உள்ளே வந்து நாமக்கட்டியை குழைத்து நெற்றியில் பெரிய திருமண்னிட்டு, சில நிமிடங்கள் உட்கார்ந்தவாறே பெருமாளை சேவித்து சரியாக நாலே இட்டிலியுடன் முடித்துக்கொண்டு திண்ணைக்கு வந்துவிடுவார்..
வாசல் கதவு மூங்கில் தட்டியின் நிழல் தரையில் விழும் இடத்தை சாக்கட்டியில் குறித்து வைத்துக்கொண்டு, தினமும் கடிகாரமில்லாமல் 10,11,12 மணியென தெரிந்துகொண்டு டான்னென்று பகல் ஒரு மணிக்கு சாப்பிட எழுந்துவிடுவார்.
ஊரிலிருந்து வரும்போதே பத்திரம் எழுதும் வேலையை கொண்டு வந்துவிடுவார். பகலில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்ற வழக்கறிஞர்களுக்காக உயில் போன்ற சாசனங்கள் எழுதுவார். “உயில் என்பது ஒருவர் இறப்பதற்கு முன்னர், தனது சொத்துக்களை தனது விருப்பப்படி, தனக்குப்பிடித்த நபருக்கு ஏற்படும் உரிமை குறித்து எழுதப்படும் ஆவணம்.. அந்த நபர் இறந்ததும் சொத்துக்கள் பிரிவினை தொடர்பாக , தாவாக்கள், வழக்குகள், சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எழுதி வைக்கப்படுகிற ஆவணமாகும். வெறுமனே சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது” என எங்களுக்கு நீண்ட விளக்கமளிப்பார் தாத்தா.
சொல்ல வந்த வாக்கியத்தை கடேசி வரை நீட்டி மூச்சுமுடியும் வரை சொல்ல எத்தனித்து கடைசி இரண்டு மூன்று வார்த்தைகளை கஷ்டப்பட்டு முடிப்பார். போதாதா எங்களுக்கு! நாங்களும் அவரை மாதிரியே'தாத்தா.. உள்ள சாப்பாடு வெச்சிருக்கு.. கைய கழுவிட்டுசா..ப்..பி..ட...வா..ங்..க..' என மூச்சு முட்டும் வரை பேசிஅவரை கலாய்ப்போம்.
இரவு உணவுக்குப்பின் அவர் படுக்கையை தின்னையில்விரித்து, மேலே மெத்தையை போட்டு, நான்கு பக்கமும்சுவற்றில் உள்ள ஆனியில் கொசுவலையை கட்டி, படுக்கையின் நான்கு பக்கங்களிலும் அடியில்கொசுவலையை சொருகி எல்லாம் தயார் செய்யும் வரை நாங்களிருவரும் பொறுமையாக படித்துக்கொண்டிருப்பது போல பாவ்லாகாட்டுவோம். அவர் மெல்ல எழுந்து புழக்கடைப்பக்கம் பாத்ரூம் போனவுடன் நாங்கள் சடாரென குதித்தெழுந்து ஓடி வந்து கடகடவென கொசுவலையை ஆனியிலிருந்து பிடுங்கி மடித்து, மெத்தை மற்றும் பாயை பழையபடி சுருட்டி உள்ளே அறையில் போட்டு விட்டு மீன்டும் படித்துக்கொண்டிருப்பது போல பாசாங்கு செய்யும்போது தாத்தா திரும்பி வருவார். வெற்றிடத்தைப்பார்த்து ' படுக்கையை இப்பத்தான் விரிச்சுட்டுப்போனோமா.. இல்ல..நேத்து விரிச்ச மாதிரி ஞாபகமா' வென அவர் குழம்பி மெதுவாக திரும்பி எங்களை பார்ப்பார். சிரிப்பை அடக்க முடியாமல் ஹே.. வென பெருங்கூச்சலிட்டு சிரிப்போம். நைனா தாத்தாவிடம் அதிகம் பேச மாட்டார். ஆனாலும் நாங்கள் தாத்தாவை கலாட்டா செய்வது கண்டு ரசிப்பார்.
உயில் மற்றும் பத்திரங்கள் எழுத சில சமயம் எங்களையும் துணைக்கழைப்பார் தாத்தா. கை அவருக்கு நடுங்குவதால் அவர் சொல்ல சொல்ல நாங்கள் எழுதுவோம். “U.R. நாதமுனி நாயுடுவின் புதல்வனான N.சாரங்கபாணி நாயுடு ஆகிய நான் என்னுடைய சுய புத்தியுடனும், பூரண ஞாபக சக்தியுடனும், யாருடைய தூண்டுதலுமின்றி எழுதி வைக்கும் உயில் சாசனமாவது'' என அவர் சொல்ல ஆரம்பித்தால் கிட்டத்தட்ட ஓரிரண்டு மணி நேரங்கள் போகும்.
நடுநடுவே இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என பக்கவாட்டில் சாய்ந்து வயிற்றிலிருந்து வாயுவை பெருஞ்சத்தத்துடன் அவர் வெளியேற்றும் போது நாங்கள்'கெக்கெக்கே'வென விழுந்து விழுந்து சிரிப்பது கண்டு கோபித்துக்கொள்ள மாட்டார் . “ஆ காடுக்காயனி இக்கட கொன்ராப்‌பா..(அந்தகாடுக்காய இங்க கொண்டு வாப்பா!) சரியா வெளிக்கி போவலையாட்ருக்கு”.. "காலையில்இஞ்சி...நண்பகல் சுக்கு..மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண.. கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பரே..''- என்று சித்தமருத்துவப் பாடலை முனுமுனுத்தவாறே வாயில் காடுக்காய்த்தூளை போட்டுக்கொள்வார்.. சின்ன உபாதையென்றாலும் உடனே அதற்கான இயற்கை மருந்தினை எடுத்துக்கொள்வார். மற்றபடி மருத்துவரிடம் போனதே கிடையாது.
ஆச்சு.. தாத்தா உடுமலைக்கு ஒரு நாள் திரும்பிப்போனார். அடுத்து சில நாட்களில் யாரையும் கேட்காமல் தான் சாம்பாரித்த வீடு, பணம் மற்றும் நிலங்களை பிள்ளைகளுக்கு பிரித்துக்கொடுத்து அதற்கான தஸ்தாவேஜுக்கள், பத்திரத்தாள் அனைத்தையும் தயாரித்து சட்டப்படி தன் வாரிசுகளுக்கு பாத்தியதை செய்து கொடுத்து விட்டார்.
' சொத்துக்களை பிரிக்காமே உயில மட்டும் எழுதறத உட்டுட்டு…இப்புடு ஏமி அவசரம் நாயனா?!' என சிலர் கேட்டே விட்டார்கள். கடைசி வரை தான் செய்தது சரியென்றே நம்பினார் தாத்தா.
அடுத்த ஓரிரு வருடங்களில் அவருக்கு வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஆரம்பமாகி 87 வருடங்கள் மருத்துவரிடம் போகாத அவரை ஆசுபத்திரியில் சேர்த்து சட்டென்று போய்ச்சேர்ந்து விட்டார்.
“இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச்சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. உயில் என்பதே உறவுகளைச்சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச்சரியாக பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்” என அடிக்கடிசொல்லும் தாத்தா எதற்காக தான் மட்டும் உயில் எழுதாமல் இறப்பதற்கு முன் சொத்துக்களை பிரித்துக்கொடுத்தார் என்பது விளங்காத புதிர். ஒரு சமயம் உயில் மட்டும் எழுதிவைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் வருடம் உயிரோடிருந்திருப்பாரோ!
யாரிடமோ அவர் இப்படி சொல்லியிருந்ததாக சில நாட்கள் கழித்து எங்களுக்கு தெரிந்தது ' நா மரனாந்தரம் நா பில்லலு ஆஸ்தி கோசம் கோர்ட், கேஸ்ஸூன்னி போத்தாரா தெலிது.. நேனு மரனீஞ்சிலோப்பே ஆஸ்தினீ பஞ்சதம் சேசி வாளு ஆனந்தம்கா கலிசி உன்னாரன்டே நாக்கு சந்தோஷம் காதா?’(எனது மரணத்திற்குப்பிறகு சொத்துக்காக என் பிள்ளைகள் கோர்ட் வாசலை மிதிப்பார்களா தெரியாது.. அதனால் என் மரணத்திற்கு முன்பே ஆஸ்தியை பிரித்துக்கொடுத்து அவர்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்ப்பது எனக்கு சந்தோஷம் தானே?)
ராமசாமி தாத்தா இறந்தவுடன் அவரது பழைய தோல்ப்பையில் கண்டவை : வெள்ளி சாப்பாட்டுத்தட்டு, வெள்ளி தம்ளர், நாமக்கட்டி, மற்றும் சுடுகாட்டுச்செலவுக்கு கொஞ்சம் பணம்….
(ராமசாமி சீதாபதி ஶ்ரீதர்)

Friday, September 5, 2014

பொளேர்... பொளேர்... (மீள் பதிவு.. புது நண்பர்களுக்காக.. சில மாற்றங்களுடன்)

இப்பவும் பனியன் போடும்போது முதுகுப்பக்கம் கொஞ்சம் லேசா வீங்கின மாதிரி ஒரு பிரமை எனக்கு…எல்லாம் ஸ்கூல் வாத்தியார் கிட்ட வாங்கின விழுப்புண்கள்.. திருச்சி புனித வளனார் (St Joseph's) பள்ளியில்  காலை உள்ளே நுழைந்ததும் மாலை வரை ஒரு தனி உற்சாகம்…வேறென்ன..வாத்தியார்களை ஓட்டுவதில் தான்..சக மாணவர்களும் என்னை உற்சாகப்படித்தி உசுப்பேற்றுவதில் கில்லாடிகள்..நடுவே அவர்களே நம்மை மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதுமுண்டு ..

"என்ன கெளவன்னு நெனைக்காதீங்கடா.. தொலைச்சுப்புடுவேன்" என்று தன்  சோடாபுட்டி கண்ணாடி வழியாக பார்த்து மிரட்டும் சவுரிராஜன் வாத்தியார் கிளாசில் நானும் தென்னூர் கவுன்சிலர் கிருஷ்ணனின் பையன் தனபாலும் அடி வாங்கிய நாட்கள் பல. 'where the mind is without fear' மற்றும் ‘palanquin bearers’ என்ற poemகளை மனப்பாடமாக சொல்லவில்லை என்றால் பிச்சுப்புடுவார். கிளாசின் நடுவே நான் காலை ஆட்டிக்கொண்டிருக்கும்போது தனபாலும் தனது கால்களால் என் கால்களை உதைத்து ஆட வைப்பதை ரசித்து நாங்கள் சிரித்துக்கொண்டிருக்கும்போது 'என்ன கிளாஸ்ல சத்தத்தையே காணோமே' என நிமிர்ந்து பார்த்தால் சவுரிராஜன் எதிரே நின்றுகொண்டு எங்களை பார்த்துக்கொண்டிருப்பார். அடுத்த நிமிடம் 'தொபேல்..தொபேல்' என அடி விழும். மனுஷன் படு ஒல்லி.. ஆனால் அடித்தால் அங்கங்கே நானாவிதமாக கன்னிப்போகும்.

முக்காவாசி கலாட்டா தமிழ் கிளாசில் தான். தமிழ் வாத்தியார் பரிமேலழகர்... "எல்லோரும் செய்யுள் படிங்கடா" என சொல்லிவிட்டு பாதி நேரம் சேரில் சாய்ந்தவன்னம் யோகநித்திரையில் இருப்பார். நாங்கள் ஒரே கலாட்டா செய்துகொண்டு நடுநடுவே அவரை 'அய்யா..அய்யா..இவன் அடிக்கிறாய்யா' என கூப்பிடுவோம்.. காதில் விழுந்தும் அவர் எழவில்லை என்றால் நடுவே 'அய்யா'வுக்கு பதில் 'யோவ்' என நாங்கள் கத்த "டேய்.. யார்ரா அவன் யோவ்னு கூப்புட்டது" என எழுந்துவிடுவார்.

எழுந்ததும் 'பரஞ்சோதி! எங்க..'பொங்கு பல சமயமெனும்'  செய்யுள் சொல்லு' என்றதும்,பரஞ்சோதி எழுந்து கை கட்டி 'பொங்ங்ங்ஙகு பல' என்று முதல் வார்த்தையை மட்டும் காட்டு கத்தலுடன் ஆரம்பித்து, பிறகு..$$.. ##..&&..@@..மண..மன.. லப..ளப... என்று மற்ற எல்லா வார்த்தைகளை வேண்டுமென்றே முழுங்கி... கடைசி வார்த்தை மட்டும் 'தேவ தேவே’  என்று சத்தம் போட்டு சடுதியில் முடித்து விஷமப்புன்னகையுடன் உட்காருவான். அவனை நாங்கள் பொறாமையுடன் பார்ப்போம், வெறும் மொதல் வார்த்தையும் கடைசி வார்த்த மட்டும் தெரிஞ்சிக்கிட்டு எப்பிடி சமாளிச்சிட்டான் பாரு' என்று. அந்த சாமர்த்தியம் இல்லாமல் செய்யுளை தப்பாகச்சொல்லி சத்தியசங்கல்பனாக மாட்டிக்கொண்ட எங்களுக்கு 'பொளேர்.. பொளேர்..' தான். திருச்சி வயலூர்/உய்யகொண்டான் திருமலை கிராமப்பகுதியில் இருந்து அந்த காலத்திலேயே தினம் டெரிகாட்டன் சட்டையுடன் வரும் பரஞ்சோதி 2011ல் ஜெயலலிதா அமைச்சரவையில் மந்திரியானான்(ர்).

சயென்ஸ் வாத்தியார் தாமஸ் வகுப்பில் convex லென்சு வழியாக பார்க்கும்போது objects தலைகீழாக தெரியும் என்று வாத்தியார் விளக்கும்போது, செந்தில் மாதிரி கட்டையாக முழங்கால் வேட்டியுடன் நம் வகுப்பிற்கு  வாசஞ்செய்யும் பியூன் அந்தோணியை காட்டி நாங்கள் 'சார்...அப்ப அந்தோனிய convex லென்சு வழியே தலைகீழா பார்த்தா வேட்டி கீழ எறங்கிடுமே' என்று எழுந்து கேட்டவுடன் கிளாஸே குபீரென சிரிக்கும். மறு நிமிடம் 'நரம்புப்பயலே.. வாடா இங்க' என வாத்தியார் கூப்பிட, அன்று எனக்கு முதுகு பழுத்து விடும்.  நாம் அடி வாங்கும்போது சக மாணவர்களுக்கு ஸ்கூலுக்கு வெளியே விற்கும் ஜிகர்தன்டா சர்பத் குடித்த மாதிரி திருப்தி.

'வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை' பாடலை நாங்கள் 'ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி ' மெட்டில் பாடிக்கொண்டிருக்கும்போது, பின்பக்கமாய் வந்து நின்று கொண்டு வாத்தியார் பார்த்துக்கொண்டிருப்பது தெரியாமல், மாட்டிக்கொள்வோம். பிறகென்ன? பொளேர்..பொளேர் தான்...

காலை ஸ்கூல் வாசலில் நிற்கும் ஹெட் மாஸ்டர் ஆரோக்யம் SJ அவர்களை எல்லா மாணவர்களும் 'ஸ்தோத்திரம் ஃபாதர்' ...'ஸ்தோத்திரம் ஃபாதர்'..என்று  சத்தம் போட்டு சேவிக்கும்போது  'தோச தின்றோம் ஃபாதர்' என்று நாங்கள் மட்டும் கூட்டத்தின் நடுவே கத்துவொம். கூட்டத்தில் அவர் மலையாள காதுக்கு சரியாக கேட்காது என்ற நம்பிக்கை…  

தமிழ் புத்தகம் முழுவதும் பேனாவால் பெயர்களை திருத்தி எழுதுவது ஒரு விளையாட்டு. 'உமறு புலவர்' என்பதை 'திமுறு புலவர்' என்றும், 'திரு.கோ. வில்வபதி' என்ற அழகான பெயரை 'திருக்கோவில் விபூதி' என்று மாற்றி சக மாணவர்களுக்கு காட்டி மகிழும்போது  யாராவது ஒருத்தன் வாத்தியாரிடம் போட்டுக்கொடுக்க, அவர் புத்தகத்தை பிடுங்கி சத்தமாக வாசித்து காட்டுவார். பிறகென்ன..'பொளேர்..பொளேர்' தான்.

சிங்கராயன் ஸார் கிளாஸ் நடக்கும்போது பக்கத்து வகுப்பில் இருந்து மாணவன் ஒருவன் வந்து 'ஸார் என் அண்ணன் மணியை பார்க்கணும்' என அழைப்பான். வெளியே வந்த மணியிடம் அவன் தன் வாயிலிருந்து எடுத்த பாதி சாப்பிட்ட நெல்லிக்காயை கொடுக்க, மணி லபக்கென்று வாயில் போட்டுக்கொண்டு உள்ளே வருவான்.  'எங்க அம்மா தான் ஆளுக்கு பாதின்னு சொன்னாங்க ஸார்' என விளக்கம் வேறு.

'k' லாங்கூவேஜ் அப்போது ரொம்ப பிரபலம். சீனி என்ற பெயரை      'க-சீ க-னீ 'என்று கற்றுக்கொண்டதும் முதல் வேலை சில கெட்ட வார்த்தைகளை 'k' லாங்குவெஜில் சொல்லிப்பார்ப்பது (வாத்தியார் பெயரையும் சேர்த்து தான்).

'கிளைவ்ஸ் ஹாஸ்டல்' போலீஸ் தடியடி சம்பவம் சமயத்தில் அடிக்கடி ஸ்கூல் ஸ்ட்ரைக் நடக்கும். வகுப்பு நடக்கும்போது ஸ்கூலுக்கு வெளியே மாணவர்கள் கத்தும் சத்தம் கேட்கும். அடுத்த சில நிமிடங்களில் ஹெட் மாஸ்டர் அறையிலிருந்து அவர் மைக்கை 'டொக்.டொக்' என்று தட்டுவது மேலே ஸ்பீக்கரில் கேட்டவுடனே கிளாஸ் முழுவதும் கடாமுடாவென  சத்தம்.. வேறென்ன மூட்டை கட்டுவோம். வாத்தியாரும் உள்ளுக்குள் சந்தோஷத்துடன் 'டேய்... இருங்கடா HM என்ன சொல்றாருன்னு கேப்போம்' என்று சொன்ன மறு நிமிடம் HM மெதுவாக 'மாணவர்களே!... இன்று..நம் பள்ளி..' என ஆரம்பித்தால் போதும், முழு வகுப்பும் 'ஹோ' வென கூச்சலோடு வீட்டிற்கு ஒடுவோம்..

PT கிளாஸ் என்றாலே எல்லோருக்கும் வயிற்றை கலக்கும். ஸ்ரீரங்கம் கிட்டப்பனும் கிராப்பட்டி ஜானும் எடுத்த எடுப்பிலேயே பளார் என்று அறைந்து நம்மை நிலைகுலையச்செய்பவர்கள். 'எவன்டா அது வரிசைய வுட்டு தனியா நிக்குறான்' என கிட்டப்பா சொல்லும்போதே  தெரிந்துவிடும் யாருக்கோ இன்னிக்கி செமத்தியா இருக்கு என. கிராப்பட்டி ஜான் தண்ணீர் விட்டு தலைமுடியை தூக்கி வாரியிருப்பார். ஸ்கூலுக்கு வந்தவுடன், பின் மண்டையிலிருந்து மெதுவாக அழுக்குத்தண்ணீர் கழுத்தில் வழிவது பார்க்க எங்களுக்கு அறுவறுப்பாக இருக்கும். கண்,காது,மூக்கு என இந்திரியங்கள் பார்க்காமல் அவர் நம்மை அறைந்தால் ஒரு சில வினாடிகள் காது கொய்ங்...கண் மங்கலாகத்தெரியும். எல்லோரும் கிளாசிலிருந்து கிளம்பி இரண்டிரண்டு பேராக வரிசையாக PT கிரவுண்டுக்கு போகும்போது யாரும் பேசக்கூடாது என்பது சட்டம். நாங்கள் கடைசி வரிசை.. பின்னால்  2 வாத்தியார்களும் சைக்கிளில் வருவது தெரியாமல் ஜாலியாக 'வாஸ்கோடகாமா... வென்ட் டு தி டிராமா... ஒப்பன்ட் ஹிஸ் பைஜாமா' என்று பாடிக்கொண்டே போகும்போது எங்களை பிடித்து  தனியாக முட்டி போட வைத்து லாடம் கட்டுவார்கள்.  

ஆசிரியர்களுக்கு விதவிதமான நாமகரணங்கள் சூட்டியிருக்கிறோம்:
'குட்டாரோக்யசாமி' ( கைக்குட்டையை முழங்கையில் கட்டியிருப்பார்),
'குண்டாரோக்யசாமி' ( விளக்கம் தேவையில்லை),
 'செங்கோல் வாத்தியார்' (கையில் மொத்தமான தடியுடன் வருவார்),
'வாத்தியான்'( யாருக்கும் இவரை பிடிக்காது),
'கரிபால்டி' (சரித்திர ஆசிரியர் ஒரு மாணவனிடம் கரிபால்டி (garibaldi) பற்றி கேள்வி கேட்டதற்கு அவன் 'உலகப்போர் முடிந்து இத்தாலியில் முன்னொருகாலத்தில் இவர் கரி விற்றார்,பால் விற்றார், டீ விற்றார்' என பதில் சொல்லி அலற அலற அடி வாங்கி அன்றிலிருந்து வாத்தியாருக்கே அந்தப்பெயர் வந்துவிட்டது)
இதெல்லாம் இல்லாமல் சீத்தலை சாத்தனார், உமறு புலவர், நாலடியார், நியான்டர்தால் மனிதன் என்றழைக்கப்படும் சில வாத்தியார்கள்.

ஆசிரியர் தினமான இன்று வாத்தியார்களை வைத்து நாங்கள் லூட்டியடித்தை நினைவுகூர்வதில் என்ன ஒரு மகிழ்ச்சி..

பி.கு: மேற்சொன்ன இத்தனை அட்டூழியங்களை மறக்காமல் எழுதத்தூண்டிய நம் வாத்தியார் சுஜாதாவை மறக்க முடியுமா?.. அவர் ஸ்ரீரங்கத்தில் படிக்கும்போது வகுப்பில் சிறிய பிளேடை டெஸ்க்கில் சொருகி ' டொய்ங்..டொய்ங்' என மாணவர்கள் சப்தம் எழுப்பும்போது 'என்னடா சத்தம்' என்று வாத்தியார் கேட்டால் 'வண்டு ஸார்'...என்பார்களாம்.

Monday, September 1, 2014

கத்தார் பெண் கல்யாண வைபோகமே....


சுமார் 16 வருடங்கள் முன் பஹ்ரைன் விமான நிலையம் கட்டிய மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றில் தனக்குக்கீழ் இவரை வேலைக்குச்சேர்த்தான் நண்பன் கணபதி.உடனே எங்கள் பஹ்ரைன் ஸ்லோகா க்ரூப்பிலும் சேர்த்து எனக்கு அறிமுகப்படுத்தினான். " யப்பா! படு கில்லாடிடா இவுரு... எதக்கொடுத்தாலும் வித்துடுவாரு மனுஷன்". கட்டப்படப்போகும் பெரிய கட்டிடத்தின் உரிமையாளர்களைப்பார்த்து தங்கள் பணிக்கு எழுத்துவடிவில் ஒப்புதல் பெற்ற சில மணி நேரங்களில் இவர் தன் ஆட்களுடன் சைட்டில் ஆஜராகி 'இக்கட்டிடத்தின் இன்னென்ன பணிகள் தமது கம்பெனிக்கு வழங்கப்பட்டிருக்கிறது' என பெரிய போர்டு எழுப்பி போட்டியாளர்களை பின்னுக்குத்தள்ளி கிடுகிடுவென மற்ற ஆர்டர்களை படிக்க ஓடுவார்..

எனது நண்பர் விஜய் மற்றும் ராதா  இல்லத் திருமணத்தைப்பற்றித்தான் இப்பதிவில் பேசுகிறோம். எந்த விஷயத்தைப்பற்றி பேசினாலும் உடனே அதைப்பற்றிய முழு விபரங்கள், அதன் பின்னனி,சம்மந்தப்பட்ட நபர்கள், அதிலுள்ள பிரச்னைகள், அரசியல், பணவிவகாரங்கள் என அடுக்கடுக்காக புள்ளிவிபரங்களை நம் முன் வைப்பார் விஜய். அது சினிமாவாகட்டும் அரசியலாகட்டும் உலகத்தலைவராகட்டும்..நடமாடும் என்சைக்ளோபீடியா தான் இவர். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் பத்தாது இவருக்கு. ' நாலு மணி நேரம் தூங்கினாவே போதுங்க' என முன்பு அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. சில வருடங்களில் மற்றொரு நிறுவனம் இவரை கொத்திக்கொண்டு போய் புதிய தொழில் தொடங்க அந்த கம்பெனியையும் படுவேகத்தில் உயர்த்தினார்.

மற்றவர்களுக்கு சளைக்காமல் நிறைய உதவிகள் செய்வார்.ஆலோசனைகள் சொல்வார். வாராவாரம் வெள்ளியன்று பிரபந்தம் ஸத்ஸங்கில் கலந்து கொள்வார். வருடம் ஓரிருமுறை இவர் வீட்டில் சுந்தரகாண்டம் படிப்போம். சுந்தரகாண்டம் படிக்கும்போதே கிச்சனிலிருந்து ராதா சமைக்கும் பச்ச கற்பூரம் மணத்துடன் சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் (தொட்டுக்க கத்தரிக்கா கொத்ஸு), புளியோதரை வாசனை நைவேத்தியத்திற்கு வந்துவிடும். ராதா நிறைய குழந்தைகளுக்கு பாட்டுசொல்லிக்கொடுக்கிறார். இவர்களது இரண்டு பெண்களும் (ப்ரியா & மீரா) பரதம் கற்று 'அலரிப்பூ'வில் ஆரம்பித்து 'அன்டங்காக்கா கொண்டைக்காரி' வரை எல்லா நடனங்களும் ஆடுபவர்கள். கத்தாரில் அவரது நிறுவனத்தின் புது கிளை ஆரம்பித்து 10 வருடங்களாக அங்கு பொது மேலாளராக கோலோச்சி வருகிறார் விஜய்.

இவரது பெரிய பெண் ப்ரியாவின் திருமணத்திற்கு ஒரு பஹ்ரைன் கூட்டமே சென்ற ஜூலை மாதம் சென்னையில் கூடினோம். திருமணத்தை விஜய் கார்ப்ரேட் ஸ்டைலில் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 6 மணிக்கு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது விஜய்யின் அண்ணன் மோகன் இன்னோவாவில் காத்திருந்தார். நேராக நங்கநல்லூர் நம்மாழ்வார் கெஸ்ட் ஹவுஸில் எங்களுக்கு போடப்பட்டிருந்த ரூமில் இறக்கிவிட்டார். யார் யாரை கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பது, அவர்கள் ஃப்ளைட் எத்தனை மணிக்கு, என்ன ரூம் நம்பர் என எக்ஸெல் ஷீட் லிஸ்ட் ரிசப்ஷனில் ரெடியாக இருக்க, டப்டப்பென கார் கதவுகள் மூட எங்களைப்போல் இன்னும் 20, 30 பேர் கசங்கிய உடைகளுடன் கையில் பிஸ்லேரி பாட்டில்களுடன் அவசரமாக வந்திறங்கினார்கள். இது போதாதென்று பக்கத்தில் சூர்யா கெஸ்ட் ஹவுஸில் சுமார் 35 அஞ்சான்கள், சத்திரம் அருகே ராகவேந்திராவில் மேலும் 15 பேர்.

இனி கல்யாணம்:
கல்யாணம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் பக்கத்திலுள்ள ராம் மந்திரம் மண்டபத்தில். கல்யாணத்திற்கு முதல் நாள் காலை வ்ரதம்/ஜாதகாதி, மாலை ஜானவாசம், நிச்சயதார்த்தம், மறுநாள் காலை பிடி சுற்று, ஊஞ்சல் & மாலைமாற்றல், பாலிகை கரைத்தல், மையிடுதல், சம்பாவனை, கன்னிகாதானம், பாணிக்ரஹனம், அம்மி மிதித்தல், ஸப்தபதி, கிரகப்பிரவேசம், பால்பழம், நலங்கு, சம்மந்தி விருந்து, மறுநாள் கட்டுசாதம் இத்யாதி என பெரிய்ய்ய்ய்ய ஐடினரரியை விஜய் 6 மாதங்களுக்கு முன்னே தயாரித்து கனடா சம்மந்திக்கு அனுப்பி, முதல் நாள் அவர்களுடன் அமர்ந்து இருவீட்டார் பக்கமும் என்னன்ன சம்பிரதாயங்கள், யார்யார் முன் நின்று செய்வது, என்னென்ன அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என இவர் டிஸ்கஸ் செய்ய, ' என்னதிது.. எள்ளுன்னா எண்ணெயா அல்லாத்துக்குமே கைல லிஸ்ட்டோட நிக்கிறாரே இவர்!' என அவர்கள் பயந்து போய் 'நீங்க தான் ப்ரமாதமா ஹான்டில் பண்றீங்களே.. அதன்படியே இருக்கட்டும்' என ஒத்துக்கொண்டார்கள்.

கல்யாணத்தை நடத்திக்கொடுத்த வாத்யார் எக்ஸெலன்ட் ஆர்கனைசராம். 6 மாதங்கள் முன்னமே அவருக்கு வேண்டிய லிஸ்ட்டை கொடுத்து, முதல் நாளன்று லிஸ்ட்டின்படி எல்லா ஐட்டங்களையும் வாங்கி, ஒவ்வொரு சம்பிரதாயத்திற்கான சாமான்களை தனித்தனி டப்பாக்களில் போட்டு பேரெழுதி தனது சீடர்கள் இருவரையும் அதற்கென நியமித்து விட்டதால் குழப்பமேதுமின்றி எல்லாம் நல்லபடியாக நடந்தேறியது.

மாலைமாற்றல், பிடிசுற்று, ஊஞ்சல் நிகழ்ச்சிகளுக்கு யார் யார் பாடவேண்டும் என்ற லிஸ்ட்டை ஓரிரு மாதங்கள் முன் ராதாவே தயார் செய்து பாடுபவர்களுக்கு அனுப்பி ஸ்கைப்பில் ரிஹர்சல் செய்து, கல்யாணத்தன்று வெற்றிகரமாக அந்த சம்பிரதாயங்களை நடத்தியது மிகவும் பாராட்டுக்குரியது. தங்கள் குடும்பத்துக்கு உதவியவர்களையும் மிகவும் பிரியமானவர்கள் சிலரையும் அங்கீகரிக்கும் விதத்தில் அவர்களை வ்ரத பட்சணங்களை கொண்டுவரச்செய்து தனது நன்றியைக்காட்டினார் ராதா.

பஹ்ரைனில் இருந்து சென்னை வந்து செட்டிலான நண்பர்கள் மற்றும் 
ஹ்ரைனிலிருந்து வந்திருந்த நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மண்டபத்தில் நல்ல அரட்டை. பஹ்ரைனை விட்டால் மீதி கத்தார்க்காரர்கள் தான் அதிகமாகத்தெரிந்தார்கள்.

ஜானவாசம்:
மனுஷன் பிசினஸ் லைக்காச்சே.. ஜானவாசத்துக்கு குதிரை மற்றும் சாரியட் (ரதம்) இரண்டையும் சேர்த்து காண்ட்ராக்ட்டில் எடுத்தால் செலவு லட்சத்தை தாண்டுமென்பதால், குதிரைகள் சப்ளை செய்யப்படும் சோர்ஸான திருவல்லிக்கேணி ஏரியாவில் ஒருஆளைப்பிடித்து குதிரையையும், வேறிடத்திலிருந்து ரதத்தையும் தனித்தனியாக பிடித்து மொத்தம் முப்பதாயிரம் செலவில் சல்லிசாக முடித்துவிட்டார் கில்லாடி விஜய்.

அதுமட்டுமா.. கல்யாணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பாடு செய்திருந்த 'சங்கீத்' நிகழ்ச்சிக்கான மேடை அலங்கார டிசைன் வரைபடத்தை வாங்கி ஃப்ளாப்பி மற்றும் ஸ்கைப் மூலம் மற்றொருவருக்கு அனுப்பி அதே டிசைன் மற்றும் ஸ்டைலை சில திருத்தங்கள் செய்து ரிஸப்ஷன் மேடைக்கும் போட்டு குறைந்த செலவில் வேலையின் ஸ்கோப்பைக்கூட்டி அசத்தினார்.

நகருக்குள் யானை கொண்டுவர போலீஸ் ஒப்புதல் கிடைப்பது கஷ்டமென்பதால் யானை மேல் பவனி வரவேண்டுமென்ற மாப்பிள்ளையின் ஆசையை பெரிய ரதத்தில் முடித்து வைத்தார். ஆனாலும் ஜானவாசத்தில் அந்த பத்து பன்னிரண்டு பெண்கள் செம டான்ஸ்...பாண்டு வாத்தியக்காரர்களும் டெம்ப்போவைக்குறைப்பதாக இல்லை.
பாதியில் மணப்பெண்ணும் மணமகனுடன் சேர, ஊர்வலம் முடிந்து மண்டபத்திற்குள் நுழைந்ததும், ரிஸப்ஷன் மேடையை நெறுங்கும் முன் பார்வையாளர்கள் முன் பையனும் பெண்ணும் சூப்பராக ஒரு என்ட்ரி டான்ஸ் கொடுத்தது விழாவின் ஹைலைட். டீவி புகழ் சங்கரியின் கச்சேரி மற்றும் செய்தி அறிவிப்பாளர் ரங்கநாதனுடன் பாடல்கள் நிகழ்ச்சிகள் இருந்தன.

சங்கீத்:
மணப்பெண் ப்ரியாவின் தங்கை மீரா வழங்கிய வடநாட்டார் ஸ்டைலில் 'சங்கீத்' நிகழ்ச்சி ஆடல் பாடலுடன் அமர்க்களமானது. மாப்பிள்ளை ஶ்ரீவத்ஸனே ராப் பாடல் தயார் செய்து ஆடிப்பாடினார். மணப்பெண் ப்ரியா ஆடியவன்னம் பார்வையாளர்களைக்கடந்து மேடை ஏறி 'dhol baaje' பாடலுக்கு அற்புதமாக நடனமாடினார். ஹமாத் டவுன் டாக்டர் மாலா 'வா வாத்யாரே வூட்டான்டே' பாடலை அசத்தலாகப் பாடி எல்லோரையும் உசுப்பேற்றினார்.

சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் go green பற்றி சில வார்த்தைகள் விஜய் மேடையில் பேசினார். கூடியவரை பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தவில்லை. சணல், துணி மற்றும் காகிதப்பைகள் மட்டுமே. அனிருத் மற்றும் அரவிந்த் என்ற அவர்களது உறவுக்கார பையன்கள் இருவரும் வந்திருந்தவர்களுக்கு செம்பருத்தி, கீழாநெல்லி மற்றும் துளசிச்செடிக்கன்றுகள் வினியோகம் செய்தது பாராட்டப்படவேண்டியது. சர்க்கரை கலக்காமல் வெல்லத்தால் செய்த காஜு கத்லி, ரவா லாடு, பால் அல்வா, வெனிலா கேக், நுக்கல், முத்துசரிகை போன்ற பலகாரங்களை துணிப்பையில் வந்திருந்தவர்களுக்கு கொடுத்தார்களென்பதும் குறிப்பிடத்தக்கது.

கேட்டரிங் பட்டப்பா:
மூன்று நாள் சமையல் காண்ட்ராக்ட் தி.கேனி பட்டப்பா.. சுமார் 1600 பேரை வைத்து 15 வருடங்களாக இத்தொழிலை செய்கிறாராம். பிரமாதமான சாப்பாடு. ஒரு வருடம் முன்பே அவரை புக் செய்யவேண்டுமாம். வடநாட்டு உணவு வகைகளையும் மெனுவில் சேர்ப்பது அவரது சிறப்பு.. குறிப்பாக வளைகுடா இந்தியர்கள் இவரை அதிகம் புக் செய்கிறார்களாம்.

காசி அல்வா, அக்காரவடிசல், கோதுமை அல்வா, கேசரி, ஜாங்கிரி என எல்லோருக்கும் ஷுகர் எகிற மூன்று நாளும் இவ்வளவு இனிப்பு சாப்பிட்டா என்னாவது என வியந்தவன்னம் சாப்பிடும்போதே நம் முன் சிரோட்டி வைத்து அதன் தலையில் பாதாம் பாலைக் கொட்டி நம்மை மேலும் திக்குமுக்காடவைத்தார் பட்டப்பா. 'இது எனக்கு வேணாம்' என குட்டிப்பையன் பாயசத்தை ஒதுக்க, கூட இருந்த தாத்தா 'சாப்பாட்ட வேஸ்ட் பண்ணக்கூடாது தெரியுமோ'வென சொல்லி அந்த பாயசத்தை லவட்டி மடக்கென குடித்து காலி செய்ததை அவரது மனைவி முறைத்துப்பார்த்தார், 'சான்ஸு கெடச்சா சக்கரை பதார்த்தத்தை விடமாட்டீங்களே' என சொல்லியபடி.

டிபனுக்கு தோசை, சப்பாத்தி, ஸ்டஃப் பரோட்டா, இட்லி, தேங்கா சேவை, பொங்கல், வடை,பூரி கிழங்கு, ரவா தோசை, போண்டா, கஞ்சிவரம் இட்லி என வெரைட்டி..அப்பாடா வயிறு ஃபுல்..போதும்.. கையலம்பலாம் என நினைக்கும்போதே அடுத்த ரவுண்டு சூடா ஊத்தப்பம் வந்து பசியைத்தூண்டியது. மூன்று நாட்களும் மதியம் இரவு சாப்பாட்டுக்கு பிசிபேளாபாத், புளியோதரை, மோர்குழம்பு, பகளாபாத், விதவிதமான கரமது கூட்டு கொத்ஸு பச்சடி சிப்ஸ் வகைகள், வாழக்கா பொடிமாஸ், பூந்தி ராய்தா, பால் பாயசம், பூரி பாயசம், ருமாலி ரோட்டி, சன்னா, பனீர்பட்டர் மசாலா, என மூன்று நாளும் வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் சாப்பாடு...(சாப்பாட்டு லிஸ்ட் எழுதவே ஒரு தனி பதிவு தேவைப்படும்).

படிக்கட்டு வழியாக இறங்கி கீழ்த்தளத்துக்கு சாப்பிடப்போனவர்கள் சாப்பாட்டுக்கப்பறம் திரும்ப லிஃப்ட்டில் மேலே வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பந்திக்கும் கடைசி பந்திக்கும் சரி ஒரே மாதிரியான சூட்டில் உணவுவகைகள். கடைசி பந்திக்கு உட்கார்ந்தவர்களுக்கும் இலையில் எல்லா ஐட்டங்கள் இருந்தது. ஒரு ஐட்டம் பரிமாறும் அன்பர் வேறு ஐட்டம் தொடமாட்டார். இலையில் வைக்கப்படும் நான்காவது ஐட்டம் மாங்கா பச்சடியென்றால் அத்தனை 500, 600 இலையிலும் மா.பச்சடி தான் நான்காவது பண்டம் என்ற விதியை கடைபிடிக்கிறார்கள்.

சமையல்கட்டு பெரியதாக விசாலமாக இருந்தால்தான் அவ்வளவு பெரிய மெனுவுக்கு காண்ட்ராக்டே எடுப்பார் பட்டப்பா. சமையலுக்காக கொல்லைப்புறம் வண்டி நிறைய விறகுக்கட்டைகள் வந்திறங்குவது, கீத்துக்கொட்டகையில் சாக்குப்பை சுற்றிய தவலையில் சாதம் வடிப்பது, பெரிய கடாயில் அப்பளம் பொறிப்பதெல்லாம் அந்தக்காலம். பட்டப்பாவின் மகன் பாலாஜி பயன்படுத்துவது எல்லாமே நவீன சமையல் எந்திரங்கள்.

ஒரு ட்ரேயில் 48 இட்லி வீதம் 10 ட்ரேக்களில் எட்டே நிமிடங்களில் வார்த்த 480 இட்லிகள் பந்திக்கு வந்துவிடுகிறது. நாற்பத்தைந்தே நிமிடங்களில் 50 கிலோ அரிசி வேகவைக்கும் ராட்சஸ குக்கர் மெஷின். நடுவே எக்ஸாஸ்ட் சிஸ்டமோ ஏதோ வேலை செய்யாமல் போக பட்டப்பா உடனே ஜாகையை பக்கத்துத்தெருவில் வேறொரு ஹாலுக்கு மாற்றி சில மணி நேரங்களிலேயே லட்டு மற்றும் சில இனிப்பு வகைகள் செய்து கொண்டுவந்துவிட்டார். ஒரே நேரத்தில் 10 பேர் சேர்ந்து வட்டமாக அமர்ந்துகொண்டு இரண்டு கைகளிலும் இரண்டிரண்டு லட்டுக்களை உருட்டித்தள்ளுகிறார்கள்.

பட்டப்பாவின் பில் செட்டில் செய்துவிட்டு அநேகமாக நாமும் காசி யாத்திரை செல்லவேண்டியிருக்கும். ஆனால் விஜய்க்கு மிகவும் திருப்தி... எவ்வளவு அதிகம் கொடுத்தாலும் பட்டப்பா சமையலின் சிறப்பே தனியாம்.

நடுவுல கொஞ்சம் எங்கள காணோம்:
நடுநடுவே நாங்கள் நங்கநல்லூரையும் சுற்றிப்பார்க்கத்தவறவில்லை. கல்யாணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தத்துக்கு நடுவே கீழே வந்து எதிரே ஆஞ்சநேயர் கோவில் போனோம்.ஆஹா..பிரம்மாண்டமான கோவில். பிரகாரத்தைச்சுற்றி வரும்போதே நெய்ப்பொங்கல் வாசனை. வாசலில் தொன்னையில் கொடுத்தார்கள். வெளியே வந்து ஆட்டோ பிடித்து நாலு தெரு தள்ளி டாக்டர் மாலாவின் புதிய வீட்டிற்குப்போனோம். வாசக்கதவு தாள்ப்பாளில் இருந்து வாட்டர் டேங்க் வரை பஹ்ரைன் தினார் வாசனை.

கல்யாண மண்டபத்தைச்சுற்றி பூக்கடை, இளநீர், பூஜை சாமான்கள், ஜெராக்ஸ், போலீஸ்பூத், ஹோட்டல்கள், போட்டோ ஃப்ரேம் கடை, சினிமா சீ.டி கடைகள், ஆட்டோ ஸ்டாண்டு, கால் டாக்ஸி... பிசியான அந்த இடமே ஜே..ஜேயென கூட்டம். நங்கநல்லூர் எங்கும் சீராக போடப்பட்ட புதிய ரோடுகள். கிட்டத்தட்ட மாம்பலம் மயிலாப்பூர் மாதிரியாகிவிட்டது ந.நல்லூர்.

பக்கத்தில் ஒரு டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அந்த இடத்தை கொஞ்சநேரம் ரசித்துக்கொண்டிருந்தேன், கையில் பாய்லர் டீயும் கண்ணாடி பாட்டிலிலிருந்து எடுத்த பிஸ்கட்டுடன். கூட வந்திருந்த என் பையனுக்குப்பிடித்த பன்னீர் சோடாவும் கிடைத்தது...

மீன்டும் கல்யாண மண்டபம்..சில சுவாரஸ்யமான தகவல்கள்:

1. சுமார் 6 மாதங்கள் முன்பே ட்ரெஸ், சுடிதார் புடவை வகைகளை 'பாலம் சில்க்' கடையில் உட்கார்ந்தவாறே கத்தார் மற்றும் மற்ற இடங்களிலுள்ள நண்பர்கள்/உறவினர்களுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் ஸ்கைப்பில் அனுப்பி அவர்கள் விரும்பியபடி தேர்ந்தெடுத்தார்களாம்.

2. கத்தாரில் நூற்றுக்கும் மேல் மற்றும் பஹ்ரைனில் 60, 70க்கும் மேல் குடும்பங்களுக்கு பத்திரிகை வைத்ததில் மொத்தம் 160 பேருக்கு மேல் வந்திருந்தார்கள். வரமுடியாதவர்களின் வயதான பெற்றோர்கள் உள்ளூரிலிருந்து வந்திருந்து சிறப்பு.

3. விஜய்யின் சார்பாக சென்னையில் சரவணன் என்ற ஒரே நபர் எல்லா தொடர்புகள் மற்றும் உள்ளூர் வேலைகள் முழுவதும் மேற்பார்வை செய்து அவ்வப்போது விஜய்க்கு தகவல் அனுப்பி எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்ததில் இரண்டு லட்சத்துக்கு மேல் செலவு மிச்சமாம்.

4. கல்யாணத்துக்கு வேண்டிய பொருட்களின் லிஸ்ட், கிடைக்குமிடங்கள், பொறுப்பேற்ற நபர்கள், கைப்பேசி எண்கள், தேவையான பணம் அனைத்தையும் 4 மாதங்களுக்கு முன்பே தயார் செய்துவிட்டார் விஜய். ஃபாலோ-அப்புக்கு அவசியமே இல்லையாம்.

5. கல்யாணத்துக்கு 15 நாட்கள் முன்பிருந்து சுமார் 10 கார்கள் 16 மணி நேரம் புக் செய்யப்பட்டிருந்தனவாம். எல்லா டிரைவர்களுக்கும் புது துணிமணிகள் எடுத்திருந்தார் விஜய்.

6. அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்கள் பெயர்ப்பட்டியலில் கணவன், மனைவி, குழந்தைகள், அவர்களுக்கான பரிசு பொருட்கள், வேட்டி, புடவை, கார் பிக்கப் என சகலமும்...

7. உள்ளூர் மற்றும் அமெரிக்கா, கனடா, அயர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த ராதா, விஜய்யின் சகோதரர்கள் குடும்பங்களிலிருந்து மொத்தம் 15 கசின்களை மீரா ஒன்று சேர்த்து, அறிமுகப்படுத்திக்கொண்டு எல்லோருடன் மண்டபத்திலேயே தங்கி எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களை பங்கு பெறச்செய்தது மிகப்பெரிய சாதனை.

8.மண்டப வாசலில் ஒரு அன்பர் மாதுளை, எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, கிரினிப்பழ வகைகளை மிக்ஸியில் பிழுந்து தள்ளி வெயிலுக்கு இதமாக நம் தொண்டையை நனைத்தார். காபிப்பிரியர்களுக்காக மண்டபத்தின் ஒரு ஓரத்தில் பில்டர் காபி...மண்டபத்தையே தூக்கியது.

9. பட்டப்பா அனுப்பிய ஒரு மாமி முதல் நாளே மண்டபம் வந்து எல்லா கோலங்கள் போட்டுவிட்டுப்போனாராம். BE படித்து ஆக்செஞ்ச்சரில் ட்ரெய்னிக்கு கிடைக்கும் முதல் சம்பளத்துக்கு சற்றே குறைவான தொகை அந்த மாமிக்கு கொடுக்கப்பட்டதாம். ஆனால் கோலம் படு க்ளாஸ்..வாத்யார் கேட்ட நேரத்துக்கு வந்து நேர்த்தியாக கோலம் போட்டுவிட்டுப்போனார்.

10. சாப்பாட்டு பந்தி டேபிளில் இலைக்குக்கீழே நீண்ட காகித ரோல் போடப்பட்டிருந்தது. எல்லோரும் சாப்பிட்டவுடன் பெரியவர் ஒருவர் வந்து பேப்பர் ரோலுடன் சாப்பிட்ட இலைகளை முக்கோணமாக சமோசா மடிப்பது மாதிரி மடித்துக்கொண்டே போய் கடைசியில் ஒரே ஒரு பொட்டலமாக வெளியே கொண்டு போனது அட்டகாசம். பெரிய வாளி கொண்டுவந்து சாப்பிட்ட இலைகளை இழுக்கும்போது சிந்தும் ரசம் மோர் பாயசம் போன்ற பிரச்னைகளில்லை.அதையும் நின்று கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்தோம்.

11.மணமக்கள் அமர்ந்து செய்யும் நலங்கு நிகழ்ச்சிக்கான பட்டுப்பாய் பாரிஸ் கார்னர் 'கரீம் பாய்ஸ்' இடம் வாங்கியதாம். ரொம்ப ஆவி வந்த கடையென சொல்லும் அளவிற்கு அவ்வளவு ராசியாம்.. அருமையான குடும்பத்தவர்களாம். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாரப்பரியமிக்க பட்டுப்பாய்களை கும்பகோணத்தில் தயாரிக்கிறார்கள். இரு குத்துவிளக்குகள், நடுவே மயில், மற்றும் மணமக்கள் பெயர்களுடன் நெய்த பட்டுப்பாய்க்கு 40 நாட்கள் முன்பே ஆர்டர் கொடுக்கப்படவேண்டுமாம். 'கரீம் பாய்'- பட்டுப்பாய்... நல்ல மாட்ச்..

12. கல்யாணத்திற்கான மனைப்பலகை,உலோகமில்லாமல் முழுவதும் மரத்தால் (ரோஸ் வுட்) செய்யப்பட்டது பாரிஸ் மின்ட் ஸ்ட்ரீட்டில் வாங்கியதாம்.

13. விஜய் குடும்பத்தில், ப்ரியா 75 வருடங்கள் கழித்து பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் இந்த நூறு ஆண்டுகளில் முதல் கண்ணிகாதானம் இது என்பது கவனிக்கத்தக்கது..பெரியவர்களின் ஆசிர்வாதமும் பூர்வஜென்ம புண்ணியம் தான் இது.

இந்த திருமணத்தில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று..யாருடைய முகத்
திலும் (குறிப்பாக ராதா, விஜய்) ஒரு பதற்றமோ, ஆங்ஸைட்டி எதுவுமில்லாமல், 'அதைக்காணோமே.. இங்குதான் வெச்சேன்.. போன் போட்டுக்கேளேன்' போன்ற வசனங்கள்.. ம்ஹும். சிரித்த முகத்துடனே எல்லோரையும் உபசரித்துக்கொண்டும், அவ்வப்போது 'சாப்டீங்களா... எல்லாம் நல்லா படியா இருக்கா' என ராதா விசாரித்துக்கொண்டிருந்தார். விஜய் வெளி வேலைகள் பார்த்துக்கொண்டதுபோல் ராதாவும் தன் பங்குக்கு நிறைய contribute செய்திருக்கிறார். வாழ்த்துக்கள் ராதா..

ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் திருமணத்தின் எல்லா வேலைகளிலும் பங்குகொண்டு முன்னின்று நடத்தும் அலாதியே தனி என நினைக்கிறார் விஜய். அதில் கிடைக்கும் மகிழ்ச்சி, திருப்தி, stress buster மற்றும் மன நிம்மதிக்கு ஈடு இணையே கிடையாதாம். மேலும் நமக்காக நம் பெற்றோர் இவ்வளவு செய்திருக்கிறார்களே என்ற நன்றி/கடமை உணர்வும் குழந்தைகளுக்கு ஏற்படும்... அந்த உணர்வு அடுத்த தலைமுறையினருக்கும் செல்ல வேண்டுமென்பது விஜய் ராதா இருவரின் விருப்பமாம். இப்பதிவைப்படிக்கும் எல்லா பெற்றோரும் இதை முழுமனதுடன் ஆமோதிப்பார்கள் விஜய்.

சுபம்:
வேதங்களே ஆதாரமான நமது ஸனாதன தர்மத்தை மனதில் கொண்டு, கூடியமான வரையில் எந்த கர்மாவையும் விடாமல் விஜய் ராதா தம்பதியினர் இக்கல்யாணத்தை நான்கு நாட்கள் விஸ்தாரமாக நடத்தியது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. முக்கியமாக இந்த விவாஹத்தில் வைதிக விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நன்கு செலவழித்து வேதோக்தமான இந்நிகழ்ச்சியை யதோக்தமாக நடத்தி, வேத ப்ராஹ்மணர்களிடம் ஆசீர்வாதம் பல கட்டங்களில் வாங்கிக் கொண்டும், வேத மந்திரங்களுக்கும் ப்ரயோகங்களுக்கும் முதலிடம் தந்து எல்லோரும் எல்லா ச்ரேயசும் அடைய வேண்டியும், முக்கியமாக வந்திருந்தவர்களுக்கு நேராநேரத்திற்கு விதவிதமான பதார்த்தங்களால் விருந்தளித்து நடத்தப்பட்ட அமோகமான விவாஹம் இது. பாராட்டுக்கள் விஜய், ராதா & மீரா..

“வேத மார்க்கத்தில் வாழ்க்கையை நடத்துவதற்கும், வம்ச வ்ருத்தியின் பொருட்டும், அக்னி சாக்ஷியாக உன்னை கைப்பிடிக்கின்றேன்; எந்த கோபதாபங்கள் அல்லது சிரமங்கள் ஏற்பட்டாலும் உன்னை அவமானப்படுத்தமாட்டேன்; கைவிட மாட்டேன்; நமக்கு எல்லா தேவதைகளும் அருள் புரியட்டும்” என்று மந்த்ர பூர்வமாக, தனது வலது கரத்தினால் ப்ரியாவின் வலது கரத்தை பிடித்து ஶ்ரீவத்சன் (வாத்யார் சொல்லிக்கொடுக்க) சொன்ன 'பாணிக்ரஹனம்' நிகழ்ச்சியை அசைபோட்டவன்னம் தலா 2 கிலோ உடல் எடையைக்கூட்டிக்கொண்டு நாங்கள் மூட்டை முடிச்சுக்களுடன் கால் டாக்ஸி பிடித்து மயிலாப்பூர் உட்லண்ட்ஸுக்கு திரும்பினோம்

Wednesday, August 13, 2014

பக்ரீனா...சார்ஜாவா...அபிதாயியா..

சென்ற மாதம் விடுமுறைக்காக பஹ்ரைனிலிருந்து நான் சென்னை வந்திருந்தது தெரிந்ததே.. (ரொம்ப தினத்தந்தி படிச்சா இப்பிடித்தான்) ஆனால் அபுதாபி வழியாக மட்டும் இனி வரக்கூடாதென முடிவெடுத்துவிட்டோம். 

அபுதாபி நேரம் இரவு 9 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதம். சரி.. கிளம்பி ஒரு அரை மணிக்குள் உட்கார்ந்து செட்டிலானவுடன் சாப்பாட்டுக்கடையை எப்போது திறப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தோம். சரியான பசி வேறு. பஹ்ரைன் ஏர்போர்ட் லவுஞ்சில் மாலை 4 மணிக்கு சாப்பிட்டது.

விமானம் கிளம்பி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை குடிதண்ணீர்,குளிர் பானம், நீராவியில் வைக்கப்பட்ட கைக்குட்டை வகையராக்கள் விநியோகம் நடந்து முடிந்தபின் மெதுவாக சாராய வண்டியை தள்ளிக்கொண்டு பணிப்பெண் வந்தாள். ஒவ்வொருவரிடமும் நெருங்கி வந்து குனிந்து 'ஊத்திக்கிறியா?' என பவ்யமாக ஆங்கிலத்தில் கேட்டாள். பக்கத்தில் மனைவி இருந்ததால் தான் நான் 'வேணாம்.. நன்றி' என சொன்னதாக நினைக்க வேண்டாம். தனியாக பிரயாணம் செய்திருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பேன். 'குடிக்க என்னென்னம்மா இருக்கு?' என கேட்டவர்களுக்கு முன் அவள் தரையில் மண்டியிட்டு அமர்ந்து அஷ்டோத்தரம் மாதிரி வரிசையாக சொல்ல ஆரம்பிக்க, அருள்வாக்கு கேட்பது போல சிலர் தலையை ஆட்டி தாகசாந்தி பெற்றுக்கொண்டார்கள்.

கண்ணாடி போத்தல் மூடியை அவள் அலட்சியமாக திருகி மதுவை சன்னமாக கோப்பையின் பக்கவாட்டுச்சுவற்றில் சரித்து, கிடுக்கியால் ஐஸ் கட்டியை மேலே மிதக்க விட்டு, பக்கத்தில் தொட்டுக்க ஒரு சின்ன கின்னத்தில் வறுத்த முந்திரி, கடலை, பிஸ்தா, பாதாம்..எல்லாம் வைக்க ...ஆஹா யாருக்குத்தான்
தண்ணியடிக்க ஆசை வராது!

அந்தபக்கம் விருத்தகிரி விஜய்காந்த் மாதிரி ஒருத்தர் தன் பெரிய வயிற்றுக்கு பின்னாடி உட்கார்ந்திருந்தார். சீட் பெல்ட் அவருக்கு போறாது. நெஞ்சுக்குத்தான் சீட் பெல்ட்டே போட்டிருந்தார். 'நீ சீக்கிரம் குடிச்சி முடிக்கலைன்னா அடுத்த ரவுண்டு உனக்கில்ல' என யாரோ அவருக்கு சொன்னமாதிரி ஒரு அவசரம். கோவில் தீர்த்த பிரசாதம் மாதிரி மடக் மடக்கென குடித்து, மீசையில் ஒட்டியிருந்த அந்நிய நாட்டுச்சாராயத்தை புறங்கையால் துடைத்துக்கொண்டே பிஸ்தாப்பருப்பை பற்களிடையே உள்ளே தள்ளினார். 'ஹையா..நான் குடிச்சே ஒழிஞ்சிடுவேனே...' என மகிழ்ச்சியுடன் சொல்லும் சிவந்த கண்கள். நமக்கு இன்னிக்கி புவ்வா அவ்வளவு தான் என நினைத்தேன்.

எனக்கு பக்கத்தில் ஒருத்தர் சின்ன பையனாட்டம்... அடடே..'ஜூன் போனா..ஜூலைக்காற்றே' பாடகர் க்ரிஷ். பகல் முழுவதும் பாரிசிலிருந்து அபுதாபி வரை பிரயாணம் செய்த களைப்பு அவருக்கு. படித்ததெல்லாம் அமெரிக்கா. திருச்சி கல்லுக்குழி பூர்விகமாம். விமானம் கிளம்பும் முன் எல்லா கணவன்மார்கள் போல அவரும் கைப்பேசியில் ' தோ..டேக் ஆஃப் ஆகப்போறதும்மா.. காலைல 6 மணிக்கு வந்தர்றேம்மா.. சரிம்மா..வச்சுடட்டுமாம்மா' என பயபக்தியுடன் அப்டேட் கொடுத்துவிட்டு, மதுவகை பட்டியல் அட்டையை 'பீர்'ராய்ந்தார். அமைதியாக மிகுந்த மரியாதையுடன் கொஞ்ச நேரம் என்னுடன் பேசிவிட்டு சாக்ஸை கழட்டி காலை நீட்டி சோம்பல் முறித்தார். 'அட.. சினிமாக்காரங்களும் நம்பள மாதிரியே எல்லாம் செய்றாங்களே' என வியந்து இந்தப்பக்கம் திரும்பினால்......தண்ணியடித்த கணவான்கள் சிலருக்கு முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர, வரிசையாக பாத்ரூம் போக நின்றார்கள்.

விமானம் சீரில்லா காற்றழுத்தத்தினால் கடகடவென அதிர பெங்களூர் மாரத்தஹள்ளி ரோட்டில் போவது போலிருந்தது. வழியை அடைத்துக்கொண்டு பாத்ரூம் போக நிற்பவர்களிடம் பணிப்பெண் 'வெளிய டர்புலன்ட் வெதர்.. இப்பசத்திக்கி அடக்கிட்டு அப்பறமேட்டுக்கு உச்சா போலாமே' என பணிவாக கெஞ்சியும், மேற்படி ஆட்கள் 'அடக்கு'முறைக்கு ஒப்புக்கொள்ளாமல் இருமாப்புடன் அங்கேயே கொஞ்சநேரம் நின்றுவிட்டுத்தான் பாத்ரூம்/மில் 'போனார்கள்'. விருத்தகிரியும் தான். வெளியே வரும்போது அவரை கவனித்தேன்.. பாண்ட்டிலேயே கொஞ்சம் போயிருந்தார்.விமானத்தின் அதிர்வு இல்லியா...

விமான ஓட்டிக்கு மிக அருகே முன்னால் மூன்றாவது வரிசையில் நாங்கள். எங்கள் பகுதிக்கு இரண்டு பணிப்பெண்கள். முதல் வரிசையில் ஒரு கைக்குழந்தைக்கு காது வலி போலும்..பாவம். வீர்..வீரென்று அது அலற, குழந்தையின் அம்மாவும், இடது கையில் மதுக்கோப்பையுடன் அப்பாவும் போராடினார்கள். யாருக்கும் புவ்வா இன்னும் கொடுக்கப்படவில்லை.

சாராய வண்டி மறுபடியும் ஊர்ந்து வர, அணையின் நீர்மட்டம் குறைந்த மக்களுக்கு இரண்டாவது சுற்று தண்ணீர்ப்பந்தல் ஆரம்பிக்க, நான் மெதுவாக பணிப்பெண்ணைக்கூப்பிட்டு 'ஏம்மா...தண்ணியடிக்காதவங்களுக்கு மட்டும் இப்ப சோறு கெடைக்குமா' வென கேட்டேன். அவள் உடனே குனிந்து தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து 'இப்பத்திக்கி இல்ல' என சொன்னாள் (இதை மண்டிபோடாமலேயே சொல்லலாமே!).

ஆஹா... ஒரு வழியாக அம்மணி வந்து எனக்கு முன் சாப்பாட்டுப்பலகையை சீட்டிலிருந்து வெளியே இழுத்து அதன்மேல் துண்டைப்போட்டாள். உணவுப்பட்டியல் அட்டையை காட்டி மரக்கறியா, மாமிசக்கறியா என முடிவு செய்ய வேண்டுமாம். அதற்குள் ஃபிலிப்பினோ பணிப்பெண் என்னிடம் வந்து மண்டிபோடாமல் சொன்னாள்.. 'நீங்க ஹிண்டு மீல் கேட்டு டிக்கெட் பதிவு பண்ணியிருக்கீங்க.. சரியா? அது கவுச்சாக்கும்..அதுல மாட்டுக்கறி உண்டாக்கும்.. பரவால்லியா' என கேட்க, எனக்கு ரத்தம் ஜிவ்வென்று தலைக்கு ஏறியது. ' சகோதரி... எங்க ஆபீஸ்காரங்க டிக்கெட் புக் பண்ணப்ப என்னை விஜாரிக்கல... ஹிண்டு மீல்னா காய்கறி இல்லியா? மாடு, பன்னியெல்லாமா? அப்ப மரக்கறிக்கு இன்னா ச்சூஸ் பண்ணனும்?' என கேட்டேன். அவள் 'அதுக்கு நீங்க ஏஷியன் ஹிண்டு மீல் னு கேக்கனும்' என பொழிப்புரை வழங்க, ஹிண்டு மீல் க்கும் ஏஷியன் ஹிண்டு மீல் லுக்கும் மாட்டுக்கறி தான் வித்தியாசமாவென வியந்தவன்னம் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்..விடிகாலை வெளிச்சம் லேசாக தெரிந்தது.

ஒருவழியாக கெஞ்சி கூத்தாடி வெஜ்ஜி மீல் கெடச்சுது...துக்குனூன்டு தட்டில். திருச்சி ஆதிகுடி காபி க்ளப்பில் அதே அளவு சிறிய தட்டில் பஜ்ஜி...இங்கே வெஜ்ஜி. தட்டின் ஒருபக்கம் துணியால் சுற்றப்பட்ட கரண்டி, கத்தி, முள்கரண்டி, காபி கலக்கி (ஸ்டிர்ரர்)...பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் இலைதழைகள் மற்றும் ஆலிவ், மறு கிண்ணத்தில் கேக்..அப்புறம் தேநீர், தண்ணீர் குடிக்க 2 காலி கோப்பைகள், சாக்லேட், பல் குத்த குச்சி மற்றும் ஃப்ளாஸ், குட்டி சாஷேயில் பால், சீனி, வெண்ணெய், பன்...ஸ்ஸப்பாடா! இதெல்லாம் வைத்தது போக மீதியிருக்கும் இடத்தில் பிடிசோறு.. கொஞ்சம் பீன்ஸ் கலந்த குழம்பு மாதிரி ஒரு வஸ்து, இதெல்லாம் வயத்துக்கு எந்த மூலைக்கு என பத்தாமல் 'ப்ளடி மேரி' அடித்த பெருசுகள் 'ப்ளடி இடியட்ஸ்' என முனுமுனுத்தவாறே முன்னே எட்டி எட்டி பார்த்தார்கள்.. ஊஹும்... பணிப்பெண்கள் வரக்காணோம்..

சாப்பாட்டுத்தட்டில் துணியைத்திறந்து கத்தி, கரண்டிகளை வெளியே எடுக்கும்போது 'ணங்ங்' என ஆங்காங்கே சிலர் கீழே போட்டார்கள். காதுவலி பாப்பா அழுகையெல்லாம் நிறுத்தி சிரித்து விளையாடியபடியே ஸ்பூனை பக்கத்து சீட்டுக்காரர் மேல் விட்டெறிய, அதை தடுக்க முயன்ற அப்பா ஒரு டம்ளர் தண்ணீரை அப்படியே அவர் சீட்டில் கொட்டினார். இந்தாண்ட பாண்ட் ஜிப்பை போட மறந்து ஜாலியாக எலும்பை கடித்துக்கொண்டிருந்தார் விருத்தகிரி. ஒருவழியாக எச்சில் தட்டுக்களை அப்பெண்கள் வாங்கி வண்டியில் சொறுகிக்கொண்டு போனவுடன் ஒரு அரைமணி நேரம் தூங்கியிருப்போம்.

மணி காலை 3.30(இந்திய நேரம் 5 மணி). 'சீட்டை நேராக்கி உக்காருங்க..இறங்கப்போறோம்' என எழுப்பிவிட்டார்கள்.

எங்கள் பஹ்ரைன் ஸ்லோகா குரூப் நண்பர் Sampath Vijaykumarமற்றும் Anuradha Vijaykumar தம்பதிகளது பெண் Aishwarya Vijaykumarதிருமணத்திற்காக சென்னை வந்திறங்கினோம். அத்திருமணம் பற்றிய பதிவைத்தான் விபரமாக எழுதலாமென ஆரம்பித்து விமானப்பயண அனுபவத்திலேயே இருக்கிறேன்...கோலாகலமான திருமண வைபவம் பற்றி அடுத்த பதிவில்...

அம்மா விட்டுச்சென்ற பொக்கிஷம்

போன வருடம் அம்மா விட்டுச்சென்ற பொக்கிஷங்களில் ஒன்று இது (சிவசங்கரி தொடர்கதை)...
பழைய விகடன், குமுதம் கதைப்பக்கங்களை வாராவாரம் கிழித்து 31 வாரங்களில் தொடர்கதை முடிந்ததும் கோனி ஊசி, ட்வைன் நூலால் தைத்து வைத்திருக்கிறார்கள்.

பழைய அட்டைப்பெட்டியில் 50 வருடங்களுக்கு முன் வெளிவந்த சில புத்தகங்கள் கிடைத்தன. நிறைய கதைகளைக்காணோம். பழைய ராணிமுத்து, தினமணிக்கதிர், ராணி, கல்கண்டு ஒன்றையும் காணோம்.
'ஜலதீபம்', 'தேன் சிந்துதே வானம்', 'எதற்காக' 'ரத்த
ம் ஒரே நிறம்', 'கரையெல்லாம் செண்பகப்பூ 'கதைகளை கிழித்து வைத்திருந்தார்கள்.எங்கே போனது?

நினைவிருக்கிறதா?...
38ஆம் பக்க மூலை, ஆறு வித்தியாசங்கள், மல்யுத்த வீரர் மல்லப்பா, கவுன்சிலர் கனகசபை, அப்புசாமி-சீதாப்பாட்டி-பீமாராவ்-ரசகுண்டு, இரட்டை வால் இரண்டு, மதனின் ரெட்டைவால் ரெங்குடு, வாணி ஜோக்ஸ், மணியன் பயனக்கட்டுரை, பரனீதரன் கட்டுரை, துப்பறியும் குவாக் சுந்தரம், கருத்துப்படம் (கக்கன் மரணம்-தானு கார்ட்டூன்), குரங்கு குசலா, அன்புள்ள அல்லி, பாட்டி வைத்தியம், சமைத்துப்பார், அழகாபுரி அழகப்பன், கான்ஸ்டபிள் கந்தசாமி(ஏ.கே.பட்டுசாமி).,...
இன்னும் சில வருஷங்கள் முன் ஶ்ரீதர் கார்ட்டூன்கள், மெரினா கதைகள், மோகமுள், பர்மா ரமணி, தேவன் கதைகள், நைலான் கயிறு, SS66, இன்னொரு செறுப்பு எங்கே, சங்கர்லால் துப்பறிகிறார், இட்ஸ்பெக்டர் வகாப், பேயாழ்வார், சாவி, வாஷிங்டனில் திருமணம், அருணாசல மகிமை, அகிலன், கொத்தமங்கலம் சுப்பு கதைகள்(தி.மோ), ஆதிமூலம், மருதி, லதா,வர்ணம், மாயா, ஜி.கே.மூர்த்தி, ஸிம்ஹா, வினு, கோபுலு ஓவியங்கள்...

மேலும் எதாவது நினைவுக்கு வருகிறதா?

ரங்கநாதன் கோதண்டம்

'தொட்டால் குழையும் சோறு
தொட்டால் விறைக்கும் மனைவி
நொந்து போனது மனசு'

இந்தக்கவிதையை எழுதிய ranganathan Kothandam அவர்களை நேற்று காலை மாரத்தஹள்ளி அடையாறு ஆனந்த பவனில் சந்தித்தேன். 

காலை 8.30 மணியளவில்
சந்திப்பதாக முடிவு செய்திருந்தோம். 7.30 க்கு வீட்டை விட்டு நான் கிளம்பி பழைய ஏர்போர்ட் ரோட்டை பிடித்ததும் காரின் இரண்டு பக்கமும் உரசியபடி பைக் மற்றும் ஆட்டோக்கள்... 'கீக்...கீக்'கென ஒரே ஹார்ன் சப்தம். இஞ்ச் இஞ்ச்சாக நகர்ந்தது பெங்களூர் ட்ராஃபிக். முந்திச்சென்ற பைக்குகள் என்னை 'சாவு கிராக்கி'யென கன்னடத்தில் சபித்துச்சென்றது போலிருந்தது. கடைசியில் அ.ஆ.பவனுக்காக திரும்பவேண்டிய இடது பக்கத்தையும் (வலது பக்க driving வண்டி வேறு) கோட்டை விட்டு அடுத்த சிக்னல் போய் சுற்றி வர மேலும் அரை மணி நேரம் விரயம்.8.15இலிருந்து 9 மணி வரை பொறுமையாக ஹோட்டல் வாசலில் நின்றிருந்தார் ரங்கா.

உயரமான டேபிளின் முன் எதிரெதிரே நின்றுகொண்டே மற்ற பெங்களூர்க்காரர்கள் போல மினி டிபன் சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தோம். பெங்களூர்க்காரர்கள் முக்காவாசி நேரம் வண்டி ஒட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வண்டி ஒட்டாத நேரத்தில் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். குறிப்பாக பானிபூரி...

ரங்கா நல்ல உயரம். ஒடிசலான உருவம். இளநரை. கலைந்த தலைமுடி. நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் மற்றும் சரியான அரட்டைப்பேர்வழி என முகத்திலேயே தெரிகிறது.
நாற்பத்தைந்தே வயதான ரங்காவின் ரசனை, விருப்பங்கள், ஆன்மிகத்தில் ஈடுபாடு, எழுத்தாற்றல், குழந்தைகள் நலன்களில் அக்கறை, தொண்டு செய்யும் ஆர்வம், வயதில் பெரியவர்களுக்கு மரியாதை,பணிவிடை செய்தல்....இவ்வளவு நற்குணங்களைக்கொண்டவரா இவர்! மலைப்பாக இருந்தது..

18 வயதிலிருந்து எழுதுகிறாராம். ஆரம்பத்தில் கையெழுத்துப்பிரதி தொடங்கி, பிறகு 300 ரூபாய் செலவில் 20 பிரதிகள் வீதம் அச்சிட்டு பத்திரிக்கை(1999), 'என் பார்வையில்' என்ற தலைப்பில் சினிமா விமரிசனங்கள் எழுதுதல், ப்ளாக் எழுதுதல், அதன்பின் யாஹூ க்ரூப்பில் பத்திரிக்கை நடத்தியவர்..பேச்சு சுவாரசியத்தில் தட்டிலிருந்த இட்லி, பொங்கல், வடை, சேசரி மற்றும் மசால்தோசை எங்கே போனதென்று தெரியவில்லை.

காஞ்சி மஹா பெரியவரின் மகிமைகளையும் எழுத்துக்களையும் நன்கு அறிந்தவர்.அதன்படி தன் கடமைகளை தவறாமல் செய்பவர்.திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்களின் பக்தர். வாரியாரவர்களைப்பற்றி நிறைய பேசிப்புகழ்ந்தார். வாரியாரின் கந்தர் அநுபூதி, கந்தர் அலங்கார விரிவுரைகளை நிறைய படித்திருக்கிறாரென்பதால் அதிலிருந்து நிறைய பாடல்களையும் மேற்கோள் காட்டினார்.

மினி டிபனோடு சேர்த்து காபி இல்லையாம். 2 காபி வாங்கிக்கொண்ட பின், குடும்பம், குழந்தைகள் மற்றும் அவர்களது படிப்பைப்பற்றியும் பேசினோம். காலை/மாலையில் தினமும் குழந்தைகள் தம் தாய் தந்தையரை பணிவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் பேசினார். தற்போதைய தலைமுறை நமது மூதாதையர்களை மறந்தும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கர்மகாரியங்களை சரிவர செய்ய இயலாததையும் குறிப்பிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். 'சிந்தனையைத்தூண்டுகிற சின்னஞ்சிறு விஷயங்களையும் சுவாரசியமாகச்சொல்லும் கலை நண்பர் ரங்கநாதன் கோதண்டராமன்' என எஸ்ஸெஸ்பீ அவர்கள் சரியாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். நேரமின்மை காரணமாக அடுத்தமுறையே குடும்ப சகிதம் சந்திப்பதாகவும் முடிவு செய்தோம்.

தான் எழுதிய பக்தி கஃபே (தனிச்சுற்றுப் பத்திரிக்கை) யின் முதல் பாகம், எஸ்ஸெஸ்பீ அவர்கள் தமிழ்ப்பாக்களில் வெளியிட்ட ஶ்ரீ ஹனுமான் சாலிசா மற்றும் அசோகமித்திரன் அவர்
களின் சிறுகதைத்தொகுப்பு (மாற்று நாணயம்)
ஒன்றையும் பரிசாக அளித்த ரங்கா போன்ற இனிய மனிதர்கள் எனக்கு முகநூல் நண்பர்களானதில் மிகுந்த பெருமையடைகிறேன்..

சுமார் 45 நிமிடங்களேயான எங்களது சந்திப்பை 9.45க்கு
முடித்து விடைபெற்றுக்கொண்டு அவர் வொயிட்ஃபீல்டு பக்கமும் நான் மல்லேஷ்பாலயா திசையிலும் கிளம்பினோம்.

'கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே! ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழிசெல்லும் அவாவினையே'...
பாடலை வீடு திரும்பும்போது முனுமுனுக்க வைத்துவிட்டார் ரங்கா

ஜருகன்டி...ஜருகன்டி


வருடாந்திர விடுமுறையை சென்னையில் துவங்கப்போவதாக ஆருயிர் நண்பன் கணபதிக்கு சொன்னதும் இனம்புரியாத சந்தோஷம் அவனுக்கு. சென்னையில் ஶ்ரீதர் & சந்தானம் என்ற ஆடீட் ஃபெர்மில் இருக்கும் கணபதி கடந்த 3 மாதங்களாக நைரோபி(கென்யா)வில் ஒரு அரசு நிறுவனத்தில் ஐ.டி.இம்ப்ளிமென்ட்டேஷன் என ரொம்ப பிசியாக இருந்தான். கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் உ.பி. பையாவின் அருமையான சமையலை 10 நாட்கள் விட்டு விட்டு சென்னை வந்துவிட்டான்.

முதல் இரண்டு நாட்கள் வழக்கம்போல் கணபதியின் மயிலாப்பூர் வீடு, அலுவலகம் மற்றும் காலை 6 மணிக்கு மெரினா கடற்கரை நடைபயிற்சி...மெரினாவிலிருந்து நேராக அவர்களது பார்ட்னர் திரு.சந்தானம் அவர்களது வீடு சென்றோம். நேபாலிச்சிறுவன் அருமையான ஃபில்டர் காபி கலந்து கொடுத்தான்.

மூன்றாவது நாள் காலை 5.30க்கு நான் தங்கியிருந்த உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு வெளியே இன்னோவாவில் காத்திருந்தான் கணபதி. அம்மா, துர்கா கணபதி, மகன் ஹேரம்பா மற்றும் எங்கள் குடும்பத்தினர் எல்லோரும் திருப்பதி கிளம்பிப்போனோம்.

சீரான வேகத்தில் அருமையான கார் பயணம். பென் ட்ரைவில் ஶ்ரீவெங்கடேசா பாட்டு..டிரைவர் புகழேந்தி (பாலாஜி டிராவல்ஸ்) படு ஸ்மார்ட்.வேகத்தடைகளை பொறுமையாக தாண்டி, மற்ற ஊர்திகளையும் கவனமாக முந்தி காரைச்செலுத்தினார். மாதத்தில் 25 நாட்கள் திருப்பதி போய்வருகிறாராம். காலை 5 மணி வாக்கில் சென்னையிலிருந்து வாடிக்கையாளர்களை தினமும் கொண்டுசென்று தரிசனம் செய்வித்து சிற்றுண்டி, மதிய உணவு வாங்கிக்கொடுத்து மாலை 6 மணிக்குள் பத்திரமாக சென்னை கொண்டுபோய்ச்சேர்க்கிறார். திருப்பதி பற்றி அவர் புத்தகமே எழுதலாம். இன்ன நேரத்துக்கு இன்ன மாதிரியான சேவைகள், எத்தனை மணிக்கு போனால் சீக்ரதரிசனம் கிடைக்கும், கூட்டம் அதிகமான சமயங்களில் எப்படி தரிசனம் கிடைக்கும், சுப்ரபாத சேவை எத்தனை நாட்கள் போன்ற நிறைய தகவல்கள் அவரிடமிருந்து கிடைத்தன.

பொதுவாக டிரைவரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டேயிருக்க வேண்டுமென்பது கணபதியின் தாயாரின் கருத்து. குறிப்பாக மதியம் சாப்பாட்டுக்குப்பிறகு மற்றும் இரவில் பயணம் செய்யும்போது டிரைவருக்கு தூக்கம் வராமலிருக்க நாம் அவரிடம் பேச்சுக்கொடுத்தல் அவசியமாம். 'பரவால்ல...ரொம்ப ஜாக்ரதையா ஓட்டறீங்களே! எத்தினி வருஷமா கார் ஓட்டறீங்க?' என டிரைவருக்கு பிடித்த விஷயங்களைப்பற்றி பேசுதல் அவரை உற்சாகப்படுத்துமாம்.
கணபதியின் பையன் ஹேரம்பா ஒருமுறை இரவில் காரில் பயணம் செய்யும்போது திடீரென இப்படி சொன்னானாம்.." அப்பா டிரைவர் தூங்கி விழறான்..மொதல்ல அவன் வாயில டீய வாங்கி ஊத்து... இல்லாட்டி நம்ம வாயில பால் ஊத்திருவான்"..

நேத்ரசேவா போவது சுகமான அனுபவமென புகழேந்தி குறிப்பிட்டார். அப்போது மட்டும் பெருமாள் உடம்பில் குறைவான ஆபரணங்கள் மற்றும் வஸ்திரங்கள்...அவரது கால்களை நாம் பார்க்க இயல பெருமாளும் கண்களைத்திறந்து நம்மை பார்த்தவாறு தரிசனம் கொடுப்பாராம். மற்ற தரிசனங்களில் நாம் தான் அவரைப்பார்ப்போம். உள்ளூரில் கொடிகட்டிப்பறக்கும் ஆடிட்டர் தேவராஜ் ரெட்டி ப்ரசாத சேவை நிறைய செய்வதாக கணபதி சொன்னான். CA சென்ட்ரல் கமிட்டி மெம்பரான அவர் சீக்கிரம் இன்ஸ்டிட்யூட் பிரெசிடுன்ட் ஆவது நிச்சயமாம். சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் சமீபத்தில் பெருமாளுக்கு எதிரே அதிகம் பேர் நின்று தரிசனம் செய்ய 3 வரிசைகள் அமைத்திருக்கிறார்களாம்.

திருமலை கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் அனைத்தும் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டனவாம்.மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை ஒருகாலத்தில் சூரையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தானாம். மேலும் ஸ்ரீரங்கத்தில் இருந்த அரங்கனின் திருஉருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறதாம்.

திருச்சானூர் நெருங்கும் முன் வடமாலப்பேட்டா என்ற ஊரில் இருந்து எங்களை திருமலையை பார்க்கச்சொன்னார் புகழேந்தி. குறிப்பாக ஏழு மலைகளில் ஒருமலையின் ஒரு பகுதி பெருமாள் சாய்ந்தவன்னம் நிற்பது போலத்தோற்றம்.தலைக்கிரீடம், உடல், கால்கள் என பாறையில் செதுக்கப்பட்டமாதிரியான உருவத்தை ஆச்சரியமுடன் பார்த்தோம்( படம் பார்க்க).

இன்னோவா திருச்சானூர் உள்ளே நுழைய வரிசையாக நிறைய கட்டிடங்கள்... அடுத்து எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிலையைப்பார்த்தோம். சுற்றிலும் கடைகள், ஓட்டல்கள், பிரபு வணக்கத்துடன் கல்யான் ஜுவெல்லரி போர்டுகள், டீக்கடைகள், மருந்தகங்கள், அடகுக்கடைகள்,புரோட்டாக்கடைகள்,புடவைக்கடைகள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள், அங்கங்கே டூப்ளிகேட் சரவண பவன்கள்...

காலை சுமார் 9 மணிக்கே மலைக்கு கீழே சப்தகிரி போய்விட்டோம். மேலே போகும் முன் வாகன பரிசோதனையாம். சிகரெட், பீடி கொண்டுசெல்லமுடியாதாம். தனியாக அதற்கு வெட்டினால்.. 'ம்..ம்.. ஓகே'யாம். வரிசையாக வாகனங்கள் காத்திருக்க பின்பக்கமிருந்து கார்கள் பக்கவாட்டில் வந்து மூக்கை நுழைத்து நம்மைத்தாண்டிச்செல்வதை எங்களுடன் சேர்ந்து போலீஸ்காரரும் வேடிக்கை பார்த்தார்.

ஒருவழியாக அதை முடித்துக்கொண்டு கார் மலை மேல் போக ஆரம்பித்தது. சில இடங்களில் புகழேந்தி காரை நிறுத்தி அங்கிருந்து மலையைப்பார்க்கச்சொன்னார். ஆஹா.. மலையின் ஒரு பகுதியின் பாறை அப்படியே கருடாழ்வார் நிற்பதைப்போலிருந்தது(படம் பார்க்க)

300 ரூபாய் டிக்கட் வரிசையில் நம்மை நிற்க வைத்தார் புகழேந்தி. இருபுறமும் இரும்புக்குழாய்கள் பொறுத்தப்பட்ட வரிசைகள். வரிசையில் நிற்பவர்களுக்கு அங்கங்கே வெளியில் இருந்து இலவசமாக உப்புமா மற்றும் மோர் விநியோகம் செய்கிறார்கள். அங்கங்கே கழிவறைகள் இருந்தாலும் அவசரத்திற்கு மட்டுமே பிரயோகிப்பது நல்லது. இல்லையென்றால் தப்பித்தவறி போய்விடவேண்டாம் என்பது என் வேண்டுகோள்.

சுமார் ஒன்றரை மணி நேரம் வரிசையில் சில இடங்களில் மிக மெதுவாகவும், சில இடங்களில் தபதபவெனவும் ஓடினோம். 'ஏடு கொண்டலு வாடா.. வெங்கட்ராமா.. கோவிந்தா.. கோவிந்தா..' வென எல்லோரும் கோஷமிட்டோம். சின்னவனுக்கு நானும் கணபதியும் கோஷமிட்டதைப்பார்த்து ஒரே சிரிப்பு.

கடைசியாக கோவிலின் நடுப்பகுதி வந்தடைந்தோம். கூட்டம்... தள்ளு முள்ளு...கால்களுக்கு கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க இரண்டு மூன்று திருப்பங்கள்.. இதோ பெருமாள் சன்னதி வந்து விட்டது... அடடா இல்லியா! மறுபடியும் கொஞ்ச தூரம்... ஓரிடத்தில் வரிசைக்கு குறுக்கே கயிறு கொண்டு தடுத்து நிறுத்திவிட்டார்கள். தரிசனம் முடித்தவர்களை முதலில் வெளியே அனுப்பிவிட்டு பிறகு எங்களை உள்ளே அனுப்ப... ஆஹா.. இதோ பாலாஜி ஸ்வாமி தரிசனம் கிடைக்கப்போகிறது.....கூட்டம் பின்னாலிருந்து தள்ள மறுபடியும் இன்னொரு திருப்பம்.. திடீரென எதிரே ஶ்ரீ வெங்கடேசப்பெருமாள் காட்சியளித்தார். பெருமாளே! உலக நன்மைக்காக அவரை மானசீகமாக வேண்ட ஆரம்பிக்க...பின்னாலிருந்து 'ஜருகன்டி...ஜருகன்டி...' குரல்கள் ஒலிக்க...என்னென்ன நினைத்து வேண்டுவது அந்த அவசரத்தில் ! அந்த நேரம் பார்த்தா புகழேத்தி சொன்ன நேத்ரசேவா நினைவுக்கு வரும்(பெருமாளின் கால்களைப்பார்க்கலாமென சொன்னது) ? அன்றைக்கு நேத்ரசேவா இல்லையென்றாலும் என்னையறியாமல் பெருமாளின் கால்கள் தெரிகிறதாவென நான் கீழே பார்க்க.. பின்னாலிருந்து 'ஜருகன்டி'கள் எங்களைத்தள்ளியதில் ரங்கநாதர் முகத்தையே சரியாக பார்க்க முடியாமல் வெளியே வந்துவிட்டோம். " ச்சே... பார்த்த திருப்தி இல்லியே...ஒரு செக்கன்டு தானே பார்த்தோம்.. சரியா வேண்டக்கூட நேரமில்லியே...அப்பிடியே திரும்பவும் உள்ளாற போக விடுவாங்களா!.. " போன்ற கருத்துக்களை எப்போதும்போல பகிர்ந்து கொண்டு வெளியே வந்தோம்.

உண்டியல் பகுதியை நெருங்க அங்கேயும் முன்டியடிக்கும் கூட்டம். அதெப்படி சார் உண்டியலில் காசு போட பாண்ட் பாக்கெட்டில் கை விடும்போது மட்டும் கரெக்டாக சில்லரை மற்றும் சிறிய நோட்டுக்கள் வராமல் 100, 500 ரூபா நோட்டுக்களே வரும்? உள்ளுக்குள் பயம் வேறு...சாமியிடமே கணக்கு பார்க்கிறோமாவென..பயத்துடன் காணிக்கை செலுத்திவிட்டு வெளியே வந்தோம்.

கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வரும்போது சிறிய தொண்ணையில் புளியோதரை கொடுத்தார்கள். ஒன்று வாங்கி சாப்பிட்ட பிறகும் இன்னொன்று வாங்கி சாப்பிட ஆசை. எல்லோருக்கும் இந்த ஆசை இருக்கும் போலும். எல்லோர் கையிலும் ரெண்டு தொண்ணைகள். மறுபடியும் வாங்கி சாப்பிட்டோம். நாம் கொடுக்கும் கட்டணம் லட்டுவிற்கும் சேர்த்து என்பதால் புகழேந்தி ஓடிப்போய் லட்டு வாங்கி வந்துவிட்டார்.

திருமலையில் இருந்து கிளம்பி அடுத்த ஒரு மணி நேரத்தில் கீழ் திருப்பதியில் பீமாஸ் ஓட்டலில் வயிறாற தாலி சாப்பாடு. பொருத்தமான பெயர் தான் ஓட்டலுக்கு..

மதியத்திற்கு மேல் அருமையான பத்மாவதித்தாயார் தரிசனம். அதற்கும் வரிசை... நல்ல கூட்டம்..தாயாரின் சன்னதி நெறுங்கும் முன் கணபதி சில 50,100 ரூபாய் நோட்டுக்களை கையில் தயாராக வைத்திருக்க அங்கங்கே நின்றிருந்த 'தாயார்கள்' நம்மை நன்றாக கவனித்து பிரசாதம், மாலைகள் வாங்கிக்கொடுத்தார்கள். எல்லா இடத்திலும் டப்பு இருந்தால் நல்ல மரியாதை என்பது வேதனை.

மாலை 6 மணி வாக்கில் பத்திரமாக சென்னை வந்து சேரந்தோம். அருமையான பயணம்..நல்ல தரிசனம்..சென்ற வருடம் பெரியவனுக்கு 3 மாதங்கள் திருப்பதி தேவஸ்தான ஆடிட் இருந்ததால் அவனுடைய உதவியால் எங்களுக்கு திருப்பதி செல்ல நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த வருட உபயம் நண்பன் கணபதி...

கலவச்சட்டி

2 நாட்களுக்கு முன் திருச்சியில் எங்கள் சுந்தர் நகர் வீட்டிற்கு போயிருந்தேன். முன்பு அம்மா அப்பா மாடி போர்ஷனில் குடியிருந்தார்கள். இருவரும் தற்போது இறந்துவிட்டதால் வீட்டை வாடகைக்குக்கொடுத்துவிட்டோம். 

சில மராமத்து வேலைகள் இருந்ததால் ஒரு மேஸ்திரி மற்றும் சித்தாள் வைத்து வேலைகளை காலை 9 மணிக்கு ஆரம்பித்தேன். சுமார் பதினொன்னரை மணியளவில் அவர்களுக்கு வடையும் டீயும் வாங்கிக்கொடுத்து விட்டு மெல்ல வீட்டைச்சுற்றிப்பார்த்தேன்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் அம்பாசடர் கார் நிறுத்த இடம் போறாததால் எங்கள் பகுதியிலிருந்து ஓரடியை தங்கள் நிலத்துடன் சேர்த்து வேலிக்கம்பி தடுப்பு சுவர் எடுத்ததை நான் 20 வருடங்களுக்கு முன் கண்டித்தபோது அப்பா "இருக்கட்டும்டா..பின்னால பாத்துக்கலாம்..அவங்க ஏமாத்தமாட்டாங்க"வென சொன்னார். இப்போதும் அந்த வேலிக்கம்பி சுவர் அப்படியே இருந்தது. ஆனால் அம்பாசடர் இருந்த இடத்தில் ஃபோர்டு ஃபிகா. தற்போது இரண்டடி இடம் மிச்சமாக அவர்கள் பக்கம்.

வருடமொரு முறை நாங்கள் லீவுக்கு வரும்போது முன்பு அம்மா ஒரு ஆளை வைத்து இளநீர், கொய்யா, சீதாப்பழம், மாங்காய் எல்லாம் எங்க வீட்டு மரங்களிலிருந்து பறித்து பேரன்களுக்கு கொடுப்பது நினைவுக்கு வந்தது. தற்போது தென்னைமரம் ஒன்றை காணோம். ஒருமுறை தங்கள் அம்பாசடர் கார் மேல் தென்னை ஓலை விழுந்ததால் மரத்தை பக்கத்து வீட்டுக்காரர்களே தரையோடு தரையாக வெட்டியிருந்தார்கள். அதற்கு முன் பதிவுத்தபாலில் இன்ன திகதிக்கு மரத்தை வெட்டப்போவதாக அறிவித்து எங்களுக்கு கடிதம் வேறு. மற்ற இரு தென்னைமரங்களை பூச்சியரித்து பாதி இளநீரைக்காணோம். மாங்காய் மற்றும் கொய்யா மரங்களும் பாதி மொட்டையாக இருந்தன. சீதா மரத்தையே காணோம். அம்மா இருந்தவரை 6 மாதங்களுக்கொருமுறை பூச்சிக்கொல்லி மருந்தடித்து உரம் போட்டு வளர்த்த மரங்கள் இன்று அம்மாவோடு போய்ச்சேர்ந்துவிட்டன.

"சார் பின்பக்க காம்பவுன்டு சுவத்த கொஞ்சம் கொத்திவுட்டு பூசனும். மேல ஏற ஏணி வேனும்" என மேஸ்திரி கேட்க வீட்டின் பக்கவாட்டு படிக்கட்டின் கீழே முன்பு அப்பா சாய்த்து வைத்திருந்த ஏணியைத்தேடினேன். அது முற்றிலும் உடைந்திருத்தது. "பரவால்ல சார்..கடைல எடுத்தரலாம்.. நாள் வாடக 50 ரூபா தானென மேஸ்திரி கடைக்கு ஓடினார். முன்பு மாதிரி சாப்பாட்டு தூக்கில் மதிய உணவெல்லாம் அவர்கள் கொண்டுவருவதில்லை. காசு வாங்கிக்கொண்டு ஹோட்டலுக்கு ஓடினார்.

வாசலில் மேல் போர்ஷனுக்குறிய எலெக்ட்ரிக் மீட்டரில் சிவப்புக்கலர் பெயின்ட்டில் கையால் எழுதிய 'சீதாபதி' பெயர் அப்படியே இருந்தது. எப்போதும்போல் மீட்டர் பெட்டியின் உள்ளேயிருந்து ஒரு பல்லி எட்டிப்பார்த்தது. அருகே முன்பு தொங்கிக்கொண்டிருந்த கொக்கி காணாமல் போயிருந்தது. அதில் மின்கட்டன பில்கள், வீட்டு வரி ரசீது, கேபிள் டீவி கார்டு அனைத்தையும் குத்தி மாட்டி வைத்திருப்போம். வாசல் கேட்டில் பால் பாக்கெட் மஞ்சப்பை மாட்டும் கொக்கியையும் காணோம்.

கேட்டுக்கு பக்கத்தில் தரையில் காவேரித்தண்ணீர் மீட்டர் பழுதடைந்திருந்தது. முன்பு அப்பா அந்த இடத்தில் சிறியதாக தொட்டி ஒன்றை கட்டி அதனுள் குழாய் வைத்திருப்பார். நல்ல தண்ணீர் வரும் அந்த இரண்டு மணி நேரம் குடத்தில் நீர் பிடித்து மேலே அண்டாவில் ரொப்புவது அவர் வேலை. தற்போது அதற்கு அவசியமில்லையாம். குடி தண்ணீருக்கு போன் செய்து விட்டால் பல்சர் பைக்கின் முன்புறம் வைத்து தண்ணீர் கேன் கொண்டுவந்து போட்டுவிடுவார்களாம்.

அந்த தொட்டி மூடப்பட்டு அங்கே தற்போது மோட்டர் பைக்.. முன்பு அப்பாவின் சைக்கிள் இருக்கும். நினைவுகள் மெல்ல பின் செல்ல...சைக்கிள் சீட்டின் அடியில் சொறுகப்பட்டிருக்கும் துணி, அந்த துணியை சக்கரங்களின் இடையே கொடுத்து ஸ்போக்ஸ் மற்றும் ரிம்மை சரட் சரட்டென்று அப்பா இழுத்து துடைப்பது, டைனமோவை அழுத்தி சக்கரத்தைச்சுற்றி முன்புறம் லைட் எறிகிறதாவென அவர் சரிபார்ப்பது, டைனமோ மோட்டார் டயரைத்தொட்டுக்கொண்டு சுற்றுவதால் டயர் தேயாமலிருக்க அதற்கும் ஒரு சிறிய ரப்பர் கவர், முன்புறம் டைனமோ லைட்டைச்சுற்றிக்கட்டப்பட்டிருக்கும் மஃப்ளர் மாதிரியான மஞ்சள் துணி (அர்விந்த் கேஜ்ரிவால்), சைக்கிள் செயின் கவர் இடுக்கில் உள்ள ஓட்டையில் எண்ணெய் விட ஒரு சிறிய ஆயில்கேன், பின் காரியரில் சுற்றப்பட்ட சைக்கிள் டியூப்(அரிசி மூட்டை, பழைய பேப்பர் கட்ட), "சார் பஞ்சர் இல்ல வால்டியூப் தான் போயிருருச்சு" போன்ற வசனங்கள்...

"சார் எக்ஸ்ட்ரா அரை மூட்ட சிமென்ட் வந்துருச்சு" என மறுபடியும் மேஸ்திரி கூப்பிட, சட்டென்று விழித்து வாசலுக்கு விரைந்தேன். மோட்டர் பொறுத்தப்பட்ட பெடல் வண்டியிலிருந்து சிமெண்ட் மூட்டை இறங்கியது. முன்பு மாட்டு வண்டியில் வந்திறங்கும். சிமென்ட் இறக்கி முடியும்வரை மாட்டின் மூக்கனாங்கயிறு சக்கரத்தில் கட்டப்பட்டிருக்கும்.

ஒருவழியாக மாலை 6 மணிக்கு வேலை முடிந்தது. வீட்டிற்கு வெளியே இருந்தபடியே குடித்தனக்காரர்களிடம் விடை பெற்றுக்கொண்டேன். வீட்டின் உள்ளே போயிருந்தால் நிச்சயம் கீழ் கண்டவை நினைவுக்கு வந்திருக்கும்:

1. அப்பாவின் பழைய மர்ஃபி ரேடியோ, அதன் பின்புறமிருந்து வயர் எடுத்து ஒரு கண்ணாடி கிளாசில் விடப்பட்டிருக்கும்(எர்த்திங்), ரேடியோவின் தலையில் இரண்டாக மடிக்கப்பட்ட துணி..
2. படுத்தவாறு நேஷனல் பானசானிக் டேப் ரெகார்டர்.கால்கள் போல 4 பட்டன்கள்.
3. TDK காஸெட்டுகள்.. பக்கத்தில் அரை பென்சில் (காஸெட் சுற்ற)
4. கேமலின் இங்க் பாட்டில்(blue black) மற்றும் இங்க் ஃபில்லர்.
5. இன்லாண்டு லெட்டர், போஸ்ட் கார்டு.
6. விராலிமலைக்கு பணம் அனுப்ப மணியார்டர் பாரம்.
7. அவசரத்திற்கு தந்தி பாரம்
8. கோபால் மற்றும் பயரியா பல்
பொடி.
9. ஃபோர்ஹான்ஸ் டூத் பேஸ்ட்
10. புலிமார்க் சீயக்காய் மற்றும் அறப்புத்தூள்
11. பொன் வண்டு சோப்பு.
12. மரச்சீப்பு (ஈறு, பேனெடுக்க)
(வேறு ஏதும் நினைவுக்கு வருகிறதா?)

என்னதான் பழமைவாதியாக இருந்தாலும் அப்பாவிற்கு புதிய வாட்சுகள், பெல்ட், பஹ்ரைனில் வாங்கிய சின்ன டிரான்சிஸ்டர், டி.வி.டி ப்ளேயர் (ரஜினி படம் பார்க்க) எல்லாம் பிடிக்கும்.

iPhone பிறப்பதற்கு முன் அப்பா இறந்துவிட்டார். இல்லையென்றால் இன்று காலை திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் பஸ் ஏறியவுடன் ஆரம்பித்து காரைக்குடி இறங்கும்வரை இந்தப்பதிவை iPhone இல் தட்டச்சு செய்வதை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பார்...

கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணய்யர் & சித்ரா கிருஷ்ணமூர்த்தி

ட்ராக் சூட் பாண்ட்..மேலே ஒரு டீ ஷர்ட்..அலட்சியமாக மடிக்காமல் விடப்பட்ட காலர்...உடலை கட்டுடன் வைத்திருப்பதில் மிகுந்த அக்கரை...தலைமுடி சீராக வாரி கண்ணாடியனிந்து, தொப்பையேதுமில்லாமல் பக்காவாக BMI மெயின்டெயின் செய்பவர், கார்பரேட் எக்ஸிக்யூடிவ்ஸ்டைலுடன் சரளமான ஆங்கிலம்.. நடுநடுவே நிறைய நகைச்சுவை..கலகலவென சிரிப்பு முகத்துடன் பேச்சு.. மற்றவர்களின் ப்ளஸ் பாயின்டுகளை தாராளமாக தயங்காமல் குறிப்பிட்டு புகழ்தல்.. அந்த ஒரு மணி நேரத்தில் இத்தனையும் கவனித்தேன் இவரிடம்.

'பெரியவா பாத்துப்பா' தொடரை தொடர்ந்து எழுதிக்கொண்டு காஞ்சி மகாப்பெரியவரின் மகிமையையும் புகழையும் பரப்பி தம் முகநூல் நண்பர்களுக்கு விருந்தளிப்பவர். ஶ்ரீமதி.ராஜலக்ஷ்மி விட்டல் மாமி அவர்களுடன் சேர்ந்து சண்டி ஹோமம், அம்பாள் திருக்கல்யாணம், அன்னை ஶ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்,கஜபூஜை போன்ற நிறைய ஆன.மிக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர். 'அழகிய மணவாளம்' தொடரை படு ஸ்வாரஸ்யமாக எழுதி பட்டையைக்கிளப்பியவர். 'டேய் மாதவா', 'கே.கே... சில குறிப்புகள்' என தன்னுடைய வித்தியாசமான ஸ்டைலில் நிறைய பதிவுகள் பதித்துக்கொண்டிருப்பவர்.

100 feet ரோடு வந்து அவர்களுக்கு போன் போட்டவுடன் கே.கே (Krishnamurthy Krishnaiyer) யும் அவரது மனைவி Chitra Krishnamurthyயும் போனில் மாறி மாறி வழி சொன்னார்கள்..'லெஃப்ட் எடுத்து கணபதி வந்து பஸ் ஸ்டாண்டைத்தாண்டி நேரா வந்து பி.எஸ்.என்.எல் கிட்ட ரைட் எடுத்து அந்த பேங்க் ஏ.டி.எம் தாண்டி உள்ள வந்து கடைசி லெஃப்ட் எடுத்து கொஞ்ச தூரம்..பாண்டியன் ஸ்டோர் இடது கைப்பக்கம் வந்தவுடன அங்க ரைட் எடுத்து நேரா வந்தா எங்க காம்பவுன்டு கேட் வரும்'....ஆஹா...வாசல் வரை வந்து என்ன ஒரு வரவேற்பு..

எங்கள் குடும்பத்தவர் அனைவரைப்பற்றியும் நான் சொல்ல சொல்ல பொறுமையாக கேட்டு தன் குடும்பத்தவர் பற்றியும் சொன்னார். கூட வந்திருந்த எனது மனைவி, மகன., என் சகோதரி, அவளது பெண் (பல் மருத்துவர்) என எல்லோரையும் அக்கரையுடன் விசாரித்தார். மற்ற முகநூல் நண்பர்களைப்பற்றியும் நிறைய பேசினோம். உட்லண்ட்ஸ் ஹோட்டல் முகநூல் நண்பர்கள் சந்திப்பை விட கோவை சந்திப்பு அருமை என நான் சொன்னால் கே.கே. சந்தோஷப்படுவார். ஆனால் சென்னை வழியாக நான் பத்திரமாக பஹ்ரைன் திரும்புவது சந்தேகம் தான்.

ஜிம்முக்கு போய்விட்டு படு ஹான்ட்ஸமாக வந்தார் இவர்களது கடைக்குட்டிப்பையன் நந்து. மெக்கெட்ரானிக்ஸ் படிக்கும் இன்ஜினியரிங் மாணவன்.. அப்பாவை கலாய்க்கிறார்..தயக்கமில்லாமல் எங்களுடன் கலந்துரையாடி போட்டோவெல்லாம் எடுத்தார் ஜூனியர் கே.கே.

சமையலறை அருகேயுள்ள பூஜையறை உள்ளே நிறைய ஸ்வாமி படங்கள், பெரியவா படங்கள், ஸ்ருங்கேரி ஸ்வாமிகள் படங்கள். அம்மாவிடம் நம்மை அறிமுகப்படுத்தினார் கே.கே. நான் அவருக்கு அளித்த காஞ்சி மகாமுனிவரின் படத்தையும் அம்மாவிடம் காட்டினார்.

விஸ்தாரமான வில்லா ..சுற்றிலும் மரம் செடிகொடிகள்..காலையில் வீட்டின் கேட் மேல் சிலசமயம் மயில் வந்து அமர்ந்து அகவுமாம்(முன்பு போட்டோ பார்த்திருக்கிறேன்) சின்ன குழந்தைகள் இல்லாத வீடு என பார்த்தவுடன் சொல்லும் அளவிற்கு பராமரிப்பு..ஏற்கனவே பெரிய ஹாலாக இருந்தாலும் அளவான மற்றும் தேவையான ஃபர்னிச்சர் மட்டுமே இருப்பதால் மிகவும் விசாலமான பட்டாசாலை..மற்றொரு அறையின் சுவற்றில் அவர்களது மருமகள் வரைந்த ஓவியம் மிக அருமை.
சிவதாண்டவமாடும் ஈசனின் ப்ரம்மாண்டமான ஓவியம் அந்த இல்லத்திற்கு கூடுதல் சிறப்பு... ஹாலின் ஒரு பகுதியில் மாடியிலிருந்து வளைந்து கீழே இறங்கும் படிகள். ஏகப்பட்ட பாசிடிவ் எனர்ஜி அங்கே உண்டு என்பது நிச்சயம்.

சித்ரா அவர்கள் எங்களை வாசல் வரை வந்து வரவேற்றதுமுதல் திரும்ப நாங்கள் கிளம்பும்போது கார் அருகே வந்து தன் கணவருடன் விடைகொடுக்கும் வரை அளவான பேச்சு.. ஆடம்பரம் மற்றும் ஆர்ப்பாட்டமில்லாத பணிவு..ஸ்வீட், மிக்சர், சமோசா, மசாலா தேநீர் என ஏக உபசரிப்பு எங்களுக்கு. ஏற்கனவே முன்பு Ananya Mahadevanனிடம் 'இன்னொரு டம்ளர் பாயசம் வேணுமா?' என பாசமாக கேட்டவர் என்பது எனக்குத்தெரியும்.
சித்ரா, என்னுடன் கூட வந்திருந்த என் சகோதரியின் ஜூனியராம் (Trichy SRC கல்லூரி). மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இவர்கள் இருவரும் ஜூனியர்ஸ் போன்ற உபரித்தகவல்களால் நாங்கள் கிளம்புவது இன்னும் அரை மணிநேரம் ஸ்வாரஸ்யமாக தள்ளிப்போனது.

கிளம்ப மனமேயில்லாமல் பேசிக்கொண்டிருந்தோம். எப்படியும் இரவு 12 மணிக்குள் திருச்சி போய்ச்சேரவேண்டுமென்பதால் அவர்களின் டின்னர் வேண்டுகோளை பணிவாக மறுத்து பாயசத்தை மிஸ் செய்தோம்.

குடும்பத்துடன் அவசியம் பஹ்ரைன் வந்து எங்ககளுடன் தங்கவேணுமாய் கேட்டுக்கொள்கிறேன் கே.கே.சார்..


கார்த்திகேயன் மீனாக்ஷி சுந்தர் (கோவை)

கோவை RS புரம் போஸ்ட் ஆபிஸ் எதிரே இவரை சந்தித்து பக்கத்திலுள்ள காஃபி டேயில் அமர்ந்து பேசலாமென முடிவு செய்தோம்.
அந்த ஒரு மணி நேரம் வழக்கம்போல குடும்பத்தினரை ஏதாவது மால் அல்லது புடவைக்கடையில் விட்டுவிடலாமென முடிவு செய்து, புடவைக்கடையில் விட்டுவிட்டால் நமக்கு நிறைய நேரம்()கிடைக்குமென்பதால் PSR சில்க்ஸ் வாசலில் இறக்கிவிட்டு RS புரம் வந்தேன்.

போஸ்ட் ஆபிஸ் எதிரே நின்றிருந்த என்னை தன் காரிலிருந்தபடி அவர் கைப்பேசியில் கூப்பிட அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் ஒரு காஃபி டேயில் செட்டிலானோம்.

இவர் எனக்கு எப்படி முகநூல் நண்பரானார்?ஆரம்பத்தில் ஃப்ரென்ட் ரிக்வெஸ்ட் அனுப்பும் முன்னேயே என்னுடைய பதிவுகளுக்கு நிறைய லைக் போட்டவர். பிறகு நண்பரானார்.

இவரது ஆங்கிலப்புலமை, ஆங்கில எழுத்தாற்றல் என்னை மலைக்க வைத்தது. பதிவுகளின் நடுவே பிரெஞ்சு வாக்கியங்கள் அடிக்கடி எடுத்து விட்டு நம்மை அசத்துவார். டென்னிஸ் மற்றும் கால்பந்தாட்ட ரசிகர். இவான் லென்டில், பாட் காஷ், ஆன்ட்ரெ அகஸ்ஸி, மெக்கென்ரோ, ஸ்லோபதான் சிவோயினோவிக் போன்ற டென்னிஸ் வீர்ர்களின் ஸ்டைல் மற்றும் ரெகார்டுகள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி.

சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியை தினமும் தனது சுவற்றில் அலசினார். அவ்விளையாட்டின் நுனுக்கமான விபரங்களை எல்லோருடனும் பகிர்ந்துகொண்டார்.

தனது சொந்த கம்பெனி ஒன்றை நடத்துகிறார் அதன் CEOவான இவர். சில மருந்துப்பொருட்களை மற்ற கம்பெனி மூலம் தயாரித்து சுமார் 12 விற்பனையாளர்களை வைத்துக்கொண்டு விநியோகம் செய்கிறார். இந்தியாவின் பல பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்து தனது தொழில் விருத்தியடைய உழைக்கிறார்.

பீகார், கல்கத்தா என நிறைய வட மாநிலங்களுக்கு விஜயம் செய்வதால் அதைப்பற்றி அழகாகவும் எழுதுகிறார். சினிமா பற்றி ஏகப்பட்ட சமாசாரங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் பாரதிராஜா அவர்களைப்பற்றி அவரது பிறந்தநாளன்று ஒரு பதிவும் இட்டிருந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டருந்து விட்டு திருச்சிக்காரரான இவருடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். விடைபெறும் முன் ஒரு ஃபளாஷ் டிஸ்க்கை எனக்கு பரிசாக அளித்தார். கோவையில இருந்து திருச்சி திரும்பும்போது அவர் பரிசளித்த பென் ட்ரைவை காரில் ஓடவிட்டேன். ஆஹா...அந்த 3, 4 மணி நேரம்..என்ன ஒரு ஆடியோ வெரைட்டி....!
தண்டபாணி தேசிகரின் திருவாசகம்,
வேளுக்குடி கிருஷ்ணனின் 'விதூர நீதி' 25 பாகங்கள், சுகி சிவம்-பகவத்கீதை, நாராயணீயம், எம்.எல். வசந்தகுமாரியின் தாலாட்டுப்பாடல்கள், சிவனையும் அரங்கனையும் போற்றிப்பாடப்பட்ட எக்கச்சக்கமான பாடல்கள்...கிரிவலமகிமை, திருப்படையாட்சி, குலப்பத்து,அன்னாமலையார் அற்புதங்கள், திருச்சதகம் அனுபோகஸ்துதி....

எப்பிடி சார் எனக்கு ஃப்ரெண்டா கெடச்சீங்க Karthikeyan Meenakshi Sundar?

Caricaturist Sugumarje

Caricaturist Sugumarje அவர்களுடன் சுமார் ஒரு மணி நேர சந்திப்பு. முதல் சந்திப்பு அது. ஶ்ரீரங்கம் திருவானைக்காவலில் இருந்து கரூர் பைபாஸ் ரோடு வந்ததும் வண்டியை ஓரங்கட்டி அவருக்கு போன் செய்தபோது ' அடுத்த ஃபேஸ்புக் ஃபரெண்டா? அது யாரு?' என மனைவி கேட்டார். உடனை தன் ஆபிஸிலிருந்து வெளியே வந்து நின்றுகொண்டு தன் ஆபீசை ஆடைய வழி சொன்னார்.

பார்க்க கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் மிக அமைதியாக பேசுகிறார். குறைவாகவும் பேசுகிறார். அழகாக திருத்தப்பட்ட சால்ட் அன்ட் பெப்பர் தாடி..

'உங்கள் ஓவியங்கள் நன்றாக இருக்கிறது ஶ்ரீதர். ஆனா


ல் நீங்கள் human anotomy கொஞ்சம் படிப்பது அவசியம்' என அறிவுறுத்தினார். முகம் வரையும்போது கண்கள், தாடை போன்ற பகுதிகள் இன்னும் அழகாக வரைய இன்னென்ன செய்யவேண்டுமென நிறைய யோசனைகள் கொடுத்தார். விழிகள் வரையும்போது அதன் நடுவே எப்படி வெள்ளைப்புள்ளிகள் வைப்பதென்பதை அழகாக வரைத்தும் காட்டினார்.

ஓரிரு நிமிடங்களில் தான் காரிகேச்சர் வரையும் விதத்தையும் விளக்கினார். அதில்லாமல் ஓவியங்கள் வரையும்போது தான் பயன்படுத்தும் சில உத்திகளையும் தயங்காமல் சொல்லி என் மனதில் வெகுவாக உயர்ந்தார். Suresh cheenu வரையும்
ஓவியங்களையும் புகழ்ந்தார். அவர்கள் இருவரது ஓவியங்களுக்கும் உள்ள வித்தியாசங்களையும் அழகாக விளக்கினார்.

அடுத்து அவர் டிஜிட்டல் பேனா எடுத்து தான் எப்படி வரைகிறாரென்பதையும் செய்துகாட்டினார். ஏற்கனவே அவர் வரைந்த காரிகேச்சர்களையும் நமக்குக்காட்டினார். திடீரென 'நீங்க உட்காருங்க 2,3 நிமிஷத்துல நானே உங்கள வரையறேன்' என சொல்லி கிடுகிடுவென எங்கள் இருவரையும் வரைந்து காட்டி அசத்தினார். படம்
வரையும்போது தாடையில் ஆரம்பித்து தலைமுடியில் முடிக்கிறார்.

விடைபெற்றுக்கொண்டு அவர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தோம். வண்டியை எடுத்து தில்லைநகர் ஆர்ச் உள்ளே புகுந்து 1வது க்ராஸ் ஓரத்தில் இளநீர் குடிக்க நிறுத்தியவுடன் செல்போனை பார்த்தால் தான் வரைந்த எங்கள் படங்களை அடுத்த 5 நிமிடத்திலேயே பதிவு செய்திருந்தார்.

சுகுமார்ஜே சாருக்கு ஜே!!