Wednesday, August 13, 2014

ஜருகன்டி...ஜருகன்டி


வருடாந்திர விடுமுறையை சென்னையில் துவங்கப்போவதாக ஆருயிர் நண்பன் கணபதிக்கு சொன்னதும் இனம்புரியாத சந்தோஷம் அவனுக்கு. சென்னையில் ஶ்ரீதர் & சந்தானம் என்ற ஆடீட் ஃபெர்மில் இருக்கும் கணபதி கடந்த 3 மாதங்களாக நைரோபி(கென்யா)வில் ஒரு அரசு நிறுவனத்தில் ஐ.டி.இம்ப்ளிமென்ட்டேஷன் என ரொம்ப பிசியாக இருந்தான். கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் உ.பி. பையாவின் அருமையான சமையலை 10 நாட்கள் விட்டு விட்டு சென்னை வந்துவிட்டான்.

முதல் இரண்டு நாட்கள் வழக்கம்போல் கணபதியின் மயிலாப்பூர் வீடு, அலுவலகம் மற்றும் காலை 6 மணிக்கு மெரினா கடற்கரை நடைபயிற்சி...மெரினாவிலிருந்து நேராக அவர்களது பார்ட்னர் திரு.சந்தானம் அவர்களது வீடு சென்றோம். நேபாலிச்சிறுவன் அருமையான ஃபில்டர் காபி கலந்து கொடுத்தான்.

மூன்றாவது நாள் காலை 5.30க்கு நான் தங்கியிருந்த உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு வெளியே இன்னோவாவில் காத்திருந்தான் கணபதி. அம்மா, துர்கா கணபதி, மகன் ஹேரம்பா மற்றும் எங்கள் குடும்பத்தினர் எல்லோரும் திருப்பதி கிளம்பிப்போனோம்.

சீரான வேகத்தில் அருமையான கார் பயணம். பென் ட்ரைவில் ஶ்ரீவெங்கடேசா பாட்டு..டிரைவர் புகழேந்தி (பாலாஜி டிராவல்ஸ்) படு ஸ்மார்ட்.வேகத்தடைகளை பொறுமையாக தாண்டி, மற்ற ஊர்திகளையும் கவனமாக முந்தி காரைச்செலுத்தினார். மாதத்தில் 25 நாட்கள் திருப்பதி போய்வருகிறாராம். காலை 5 மணி வாக்கில் சென்னையிலிருந்து வாடிக்கையாளர்களை தினமும் கொண்டுசென்று தரிசனம் செய்வித்து சிற்றுண்டி, மதிய உணவு வாங்கிக்கொடுத்து மாலை 6 மணிக்குள் பத்திரமாக சென்னை கொண்டுபோய்ச்சேர்க்கிறார். திருப்பதி பற்றி அவர் புத்தகமே எழுதலாம். இன்ன நேரத்துக்கு இன்ன மாதிரியான சேவைகள், எத்தனை மணிக்கு போனால் சீக்ரதரிசனம் கிடைக்கும், கூட்டம் அதிகமான சமயங்களில் எப்படி தரிசனம் கிடைக்கும், சுப்ரபாத சேவை எத்தனை நாட்கள் போன்ற நிறைய தகவல்கள் அவரிடமிருந்து கிடைத்தன.

பொதுவாக டிரைவரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டேயிருக்க வேண்டுமென்பது கணபதியின் தாயாரின் கருத்து. குறிப்பாக மதியம் சாப்பாட்டுக்குப்பிறகு மற்றும் இரவில் பயணம் செய்யும்போது டிரைவருக்கு தூக்கம் வராமலிருக்க நாம் அவரிடம் பேச்சுக்கொடுத்தல் அவசியமாம். 'பரவால்ல...ரொம்ப ஜாக்ரதையா ஓட்டறீங்களே! எத்தினி வருஷமா கார் ஓட்டறீங்க?' என டிரைவருக்கு பிடித்த விஷயங்களைப்பற்றி பேசுதல் அவரை உற்சாகப்படுத்துமாம்.
கணபதியின் பையன் ஹேரம்பா ஒருமுறை இரவில் காரில் பயணம் செய்யும்போது திடீரென இப்படி சொன்னானாம்.." அப்பா டிரைவர் தூங்கி விழறான்..மொதல்ல அவன் வாயில டீய வாங்கி ஊத்து... இல்லாட்டி நம்ம வாயில பால் ஊத்திருவான்"..

நேத்ரசேவா போவது சுகமான அனுபவமென புகழேந்தி குறிப்பிட்டார். அப்போது மட்டும் பெருமாள் உடம்பில் குறைவான ஆபரணங்கள் மற்றும் வஸ்திரங்கள்...அவரது கால்களை நாம் பார்க்க இயல பெருமாளும் கண்களைத்திறந்து நம்மை பார்த்தவாறு தரிசனம் கொடுப்பாராம். மற்ற தரிசனங்களில் நாம் தான் அவரைப்பார்ப்போம். உள்ளூரில் கொடிகட்டிப்பறக்கும் ஆடிட்டர் தேவராஜ் ரெட்டி ப்ரசாத சேவை நிறைய செய்வதாக கணபதி சொன்னான். CA சென்ட்ரல் கமிட்டி மெம்பரான அவர் சீக்கிரம் இன்ஸ்டிட்யூட் பிரெசிடுன்ட் ஆவது நிச்சயமாம். சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் சமீபத்தில் பெருமாளுக்கு எதிரே அதிகம் பேர் நின்று தரிசனம் செய்ய 3 வரிசைகள் அமைத்திருக்கிறார்களாம்.

திருமலை கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் அனைத்தும் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டனவாம்.மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை ஒருகாலத்தில் சூரையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தானாம். மேலும் ஸ்ரீரங்கத்தில் இருந்த அரங்கனின் திருஉருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறதாம்.

திருச்சானூர் நெருங்கும் முன் வடமாலப்பேட்டா என்ற ஊரில் இருந்து எங்களை திருமலையை பார்க்கச்சொன்னார் புகழேந்தி. குறிப்பாக ஏழு மலைகளில் ஒருமலையின் ஒரு பகுதி பெருமாள் சாய்ந்தவன்னம் நிற்பது போலத்தோற்றம்.தலைக்கிரீடம், உடல், கால்கள் என பாறையில் செதுக்கப்பட்டமாதிரியான உருவத்தை ஆச்சரியமுடன் பார்த்தோம்( படம் பார்க்க).

இன்னோவா திருச்சானூர் உள்ளே நுழைய வரிசையாக நிறைய கட்டிடங்கள்... அடுத்து எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சிலையைப்பார்த்தோம். சுற்றிலும் கடைகள், ஓட்டல்கள், பிரபு வணக்கத்துடன் கல்யான் ஜுவெல்லரி போர்டுகள், டீக்கடைகள், மருந்தகங்கள், அடகுக்கடைகள்,புரோட்டாக்கடைகள்,புடவைக்கடைகள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள், அங்கங்கே டூப்ளிகேட் சரவண பவன்கள்...

காலை சுமார் 9 மணிக்கே மலைக்கு கீழே சப்தகிரி போய்விட்டோம். மேலே போகும் முன் வாகன பரிசோதனையாம். சிகரெட், பீடி கொண்டுசெல்லமுடியாதாம். தனியாக அதற்கு வெட்டினால்.. 'ம்..ம்.. ஓகே'யாம். வரிசையாக வாகனங்கள் காத்திருக்க பின்பக்கமிருந்து கார்கள் பக்கவாட்டில் வந்து மூக்கை நுழைத்து நம்மைத்தாண்டிச்செல்வதை எங்களுடன் சேர்ந்து போலீஸ்காரரும் வேடிக்கை பார்த்தார்.

ஒருவழியாக அதை முடித்துக்கொண்டு கார் மலை மேல் போக ஆரம்பித்தது. சில இடங்களில் புகழேந்தி காரை நிறுத்தி அங்கிருந்து மலையைப்பார்க்கச்சொன்னார். ஆஹா.. மலையின் ஒரு பகுதியின் பாறை அப்படியே கருடாழ்வார் நிற்பதைப்போலிருந்தது(படம் பார்க்க)

300 ரூபாய் டிக்கட் வரிசையில் நம்மை நிற்க வைத்தார் புகழேந்தி. இருபுறமும் இரும்புக்குழாய்கள் பொறுத்தப்பட்ட வரிசைகள். வரிசையில் நிற்பவர்களுக்கு அங்கங்கே வெளியில் இருந்து இலவசமாக உப்புமா மற்றும் மோர் விநியோகம் செய்கிறார்கள். அங்கங்கே கழிவறைகள் இருந்தாலும் அவசரத்திற்கு மட்டுமே பிரயோகிப்பது நல்லது. இல்லையென்றால் தப்பித்தவறி போய்விடவேண்டாம் என்பது என் வேண்டுகோள்.

சுமார் ஒன்றரை மணி நேரம் வரிசையில் சில இடங்களில் மிக மெதுவாகவும், சில இடங்களில் தபதபவெனவும் ஓடினோம். 'ஏடு கொண்டலு வாடா.. வெங்கட்ராமா.. கோவிந்தா.. கோவிந்தா..' வென எல்லோரும் கோஷமிட்டோம். சின்னவனுக்கு நானும் கணபதியும் கோஷமிட்டதைப்பார்த்து ஒரே சிரிப்பு.

கடைசியாக கோவிலின் நடுப்பகுதி வந்தடைந்தோம். கூட்டம்... தள்ளு முள்ளு...கால்களுக்கு கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க இரண்டு மூன்று திருப்பங்கள்.. இதோ பெருமாள் சன்னதி வந்து விட்டது... அடடா இல்லியா! மறுபடியும் கொஞ்ச தூரம்... ஓரிடத்தில் வரிசைக்கு குறுக்கே கயிறு கொண்டு தடுத்து நிறுத்திவிட்டார்கள். தரிசனம் முடித்தவர்களை முதலில் வெளியே அனுப்பிவிட்டு பிறகு எங்களை உள்ளே அனுப்ப... ஆஹா.. இதோ பாலாஜி ஸ்வாமி தரிசனம் கிடைக்கப்போகிறது.....கூட்டம் பின்னாலிருந்து தள்ள மறுபடியும் இன்னொரு திருப்பம்.. திடீரென எதிரே ஶ்ரீ வெங்கடேசப்பெருமாள் காட்சியளித்தார். பெருமாளே! உலக நன்மைக்காக அவரை மானசீகமாக வேண்ட ஆரம்பிக்க...பின்னாலிருந்து 'ஜருகன்டி...ஜருகன்டி...' குரல்கள் ஒலிக்க...என்னென்ன நினைத்து வேண்டுவது அந்த அவசரத்தில் ! அந்த நேரம் பார்த்தா புகழேத்தி சொன்ன நேத்ரசேவா நினைவுக்கு வரும்(பெருமாளின் கால்களைப்பார்க்கலாமென சொன்னது) ? அன்றைக்கு நேத்ரசேவா இல்லையென்றாலும் என்னையறியாமல் பெருமாளின் கால்கள் தெரிகிறதாவென நான் கீழே பார்க்க.. பின்னாலிருந்து 'ஜருகன்டி'கள் எங்களைத்தள்ளியதில் ரங்கநாதர் முகத்தையே சரியாக பார்க்க முடியாமல் வெளியே வந்துவிட்டோம். " ச்சே... பார்த்த திருப்தி இல்லியே...ஒரு செக்கன்டு தானே பார்த்தோம்.. சரியா வேண்டக்கூட நேரமில்லியே...அப்பிடியே திரும்பவும் உள்ளாற போக விடுவாங்களா!.. " போன்ற கருத்துக்களை எப்போதும்போல பகிர்ந்து கொண்டு வெளியே வந்தோம்.

உண்டியல் பகுதியை நெருங்க அங்கேயும் முன்டியடிக்கும் கூட்டம். அதெப்படி சார் உண்டியலில் காசு போட பாண்ட் பாக்கெட்டில் கை விடும்போது மட்டும் கரெக்டாக சில்லரை மற்றும் சிறிய நோட்டுக்கள் வராமல் 100, 500 ரூபா நோட்டுக்களே வரும்? உள்ளுக்குள் பயம் வேறு...சாமியிடமே கணக்கு பார்க்கிறோமாவென..பயத்துடன் காணிக்கை செலுத்திவிட்டு வெளியே வந்தோம்.

கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வரும்போது சிறிய தொண்ணையில் புளியோதரை கொடுத்தார்கள். ஒன்று வாங்கி சாப்பிட்ட பிறகும் இன்னொன்று வாங்கி சாப்பிட ஆசை. எல்லோருக்கும் இந்த ஆசை இருக்கும் போலும். எல்லோர் கையிலும் ரெண்டு தொண்ணைகள். மறுபடியும் வாங்கி சாப்பிட்டோம். நாம் கொடுக்கும் கட்டணம் லட்டுவிற்கும் சேர்த்து என்பதால் புகழேந்தி ஓடிப்போய் லட்டு வாங்கி வந்துவிட்டார்.

திருமலையில் இருந்து கிளம்பி அடுத்த ஒரு மணி நேரத்தில் கீழ் திருப்பதியில் பீமாஸ் ஓட்டலில் வயிறாற தாலி சாப்பாடு. பொருத்தமான பெயர் தான் ஓட்டலுக்கு..

மதியத்திற்கு மேல் அருமையான பத்மாவதித்தாயார் தரிசனம். அதற்கும் வரிசை... நல்ல கூட்டம்..தாயாரின் சன்னதி நெறுங்கும் முன் கணபதி சில 50,100 ரூபாய் நோட்டுக்களை கையில் தயாராக வைத்திருக்க அங்கங்கே நின்றிருந்த 'தாயார்கள்' நம்மை நன்றாக கவனித்து பிரசாதம், மாலைகள் வாங்கிக்கொடுத்தார்கள். எல்லா இடத்திலும் டப்பு இருந்தால் நல்ல மரியாதை என்பது வேதனை.

மாலை 6 மணி வாக்கில் பத்திரமாக சென்னை வந்து சேரந்தோம். அருமையான பயணம்..நல்ல தரிசனம்..சென்ற வருடம் பெரியவனுக்கு 3 மாதங்கள் திருப்பதி தேவஸ்தான ஆடிட் இருந்ததால் அவனுடைய உதவியால் எங்களுக்கு திருப்பதி செல்ல நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த வருட உபயம் நண்பன் கணபதி...

No comments:

Post a Comment