Wednesday, August 13, 2014

ஆனந்த் ராகவ் & சுதாகர் கஸ்தூரி

இரண்டு பெரிய எழுத்தாளர்களை முதன்முதலில் நேரில் பார்க்கப்போகிறோம்... எப்படி நம்மிடம் அவர்கள் பேசுவார்கள்...என்னென்ன விஷயங்கள் நமக்கும் அவர்களுக்கும் பொதுவானது போன்ற கேள்விகளுடன் மல்லேஷ்பாளயாவிலிருந்து கிளம்பினேன். 

ஒருவர் ஆனந்த் ராகவ்.. ஷ்ரத்தா மேடை நாடக குழுவின் தலைவர், பிரபல பத்திரிக்கைகளில் சிறுகதை மற்றும் கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர், கலைஞர் டீவி நாளைய இயக்குநர் குறும்படங்கள் சிலவற்றின் கதாசிரியர், நாடக நடிகர், விரைவில் வெள்ளித்திரையில் நாம் காணப்போகும் சினிமா நடிகர், company secretary, ஒரு IT நிறுவனத்தின் Chief Financial Officer, குழந்தைகள் நலனில் அபரிதமான அக்கரையும் பாசமும் கொண்ட தந்தை ( ப்ளஸ் 2 படிக்கும் பையனின் நலன் கருதி டீவிக்கு தடை விதித்து தானும் டீவி பார்க்காமல் இருக்கிறார்).

மற்றொருவர் சுதாகர் கஸ்தூரி.. தமிழகத்தின் டான் ப்ரௌன்..விஞ்ஞானக்கதைகள் எழுதி எல்லோரையும் மலைக்க வைத்துக்கொண்டிருப்பவர். குறும்பு மற்றும் நகைச்சுவை இழையோடும் சிறு கதைகள், தமிழ் செய்யுள், இலக்கணம், கவிதைகள், தமிழ் இலக்கியத்திலிருந்து ஏராளமான மேற்கோள் காட்டி அதை திறம்பட தன் கதைகளின் கருவுக்குள் புகுத்தி அசத்தல் சிறுகதைகள் எழுதுபவர்..

இருவரும் படு ஸ்மார்ட்... ஸ்மார்ட் கேஷுவல் உடையணிந்து, குறுந்தாடியைச்சுற்றி ஓரிரு நாள் தாடியுடன் மௌனராகம் கார்த்திக் மற்றும் ரன்பீர் கபூரை நினைவுபடுத்தினார்கள். இருவரும் போட்டோவில் பார்த்தைவிட நேரில் மிக இளமையாக ஐந்தாறு வயது குறைவாகவே காணப்பட்டார்கள்.

சில்க்போர்டு சமீபம் ஒரு கஃபே காஃபி ஷாப்பில் மூவரும் சந்தித்தோம். பரஸ்பரம் குடும்பம், குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயங்கள், அலுவல், பஹ்ரைன் வாழ்க்கை பற்றிய நுணுக்கமான விபரங்கள் பற்றி நிறைய பேசினோம். க்ராய்சோ(ன்), பிக்கீஸ், டார்ஜிலிங் தேனீர், கருப்பு காபி சகிதம் மூவரும் சுமார். ஒரு மணி நேரம் பேச முடிந்தது. இருவருக்குமே பல நாடுகளுக்கு சென்று வந்த அனுபவங்கள் ஏராளம். இலக்கியம், அரசியல், சினிமா, உலக நடப்பு என எந்த துறை பற்றியும் விவாதிக்கக்கூடியவர்கள். ஏதோ பல வருடங்கள் அறிமுகமானார்கள் போல பேசிக்கொண்டிருந்தோம்.

திறமையான எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு எத்தனை கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பது இவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தெரிந்தது.

மணி ஐந்தரையானதும் சுதாகர் விடைபெற்றுக்கொண்டார். இதற்குள் ராஜ்ஜிடமிருந்து( Rajagopalan Trichy ) போன் வந்தது. அதன்படி ஆனந்த் என்னை தன் காரில் கூட்டிச்சென்று பன்னர்கட்டா ரோட்டில் ஒரு சிக்னலில் இறக்கிவிட அங்கே மற்றொரு காரில் ராஜ் எனக்காக காத்திருந்தார். ராஜகோபாலுடன் கழித்த அடுத்த 4 மணி நேரங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாது(தனி பதிவு)

முகநூல் மூலம் எனக்கு கிடைத்த இந்த இரு நண்பர்கள், அவர்களது ப்ரொஃபைல், இனிமையாக பழகும் விதம்.... அடடா...இந்த இரு படைப்பாளர்களும் மேலும. பிரபலமடைந்து அடுத்த சில மாதங்களில் புகழின் சிகரத்தில் அமர்வது உறுதி..

No comments:

Post a Comment