Wednesday, August 13, 2014

Queen (Hindi movie)

டெல்லி ரஜோரி பகுதியில் மிட்டாய் கடை வைத்திருக்கும் பஞ்சாபி குடும்பத்தாரின் பெண்ணான ராணிக்கு (கங்கனா ரனவத்) முகமெங்கும் பரவசம். இன்னும் ரெண்டே நாளில் கல்யாணம். மிகவும் கட்டுப்பாடான குடும்பம்.வீட்டைவிட்டு அதிகம் வெளியே போய்ப்பழக்கமில்லாத அவள் பஞ்சாபி உறவினர்களுடன் பாடி ஆடுகிறாள். மறுநாள் மாப்பிள்ளைப்பையன் விஜய் (ராஜ்குமார் ராவ்) அவளை காஃபி ஷாப்புக்கு கூப்பிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாமென சுறுக்கமாக சொல்ல.. 'ஏன்டா.. நீதானே என்னை சுத்தி சுத்தி வந்து காதலித்து பெண் கேட்டாய்.. இப்ப என்ன குடிமுழுகிப்போச்சு?' என அழுகையினூடே கேட்ட ராணிக்கு ஏதோ சால்சாப்பு செல்கிறான் அவன். நமக்கு ஒத்து வராது. நீ நிறைய மாற வேண்டுமே.. அது இதென்று சில காரணங்களைச்சொல்லி கழண்டுகொள்கிறான் அந்த அழகான இளைஞன்.

கல்யாணமும் நின்றுவிட, ஒருநாள் முழுவதும் கிடந்து அழுத பின் ஏற்கனவே தேனிலவுக்காக புக் செய்திருந்த பாரிஸ் டிக்கட்டை கேன்சல் செய்யாமல், பெற்றோர் வேண்டாமென சொல்லியும் அழுத மூஞ்சியுடன் விமானம் ஏறுகிறாள் சாதாரணமாகவே அழுமூஞ்சி மாதிரி இருக்கும் கங்கனா.

பாரிஸ் விடுதியில் பணிப்பெண்ணாக இருக்கும் விஜயலக்ஷ்மியின் நட்பு கிட்டுகிறது கங்கனாவுக்கு. விஜயலக்ஷ்மியாக வரும் லிசா ஹேடன் பாலிவுட் இறக்குமதி... பூர்வீகம் சென்னையாம். அவள் வரும் சீனில் தியேட்டரில் கர்சீப்பால் முகம் துடைத்துக்கொண்ட நிறையபேருக்கு தூக்கம் கெடுவது நிச்சயம். உலகமே தெரியாத அப்பாவி கங்கனாவுக்கு தைரியமூட்டுகிறாள். பெண்கள் எப்படி தனித்துப்போராட வேண்டுமென அறிவுறுத்துகிறாள். நடுவே ஏன் தண்ணியடிக்கவும் கற்றுக்கொடுக்கிறாள் எனத்தெரியவில்லை.

கங்கனா அடுத்து ஆம்ஸ்டர்டாம் போய் இறங்குகிறாள். ஹாஸ்டல் ஒன்றில் 3 ஆண்களுடன் தங்க அவளுக்கு இஷ்டமில்லையென்றாலும், அவர்கள் மிக அன்பாகப்பழகி நல்ல நண்பர்களாகிறார்கள். ஒரு உணவகத்தின் முதலாளியுடன் சேர்ந்து இந்திய உணவெல்லாம் தயாரித்து கொஞ்சம் பணமும் சம்பாதிக்க, அவளுக்கு மனதிடமும் தைரியமும் கூடி வாழ்க்கையில் மறுபடியும் சந்தோஷ தருணங்களை எதிர்கொள்ளும்போது, பழைய காதலன் விஜய் அவளைத்தேடி அங்கே வருகிறான். பழசையெல்லாம் மறந்து மறுபடியும் திருமணம் செய்துகொள்ள அவளை வற்புறுத்துகிறான்.

திரும்பவும் கங்கனா மனம் மாறியதா? என்ன முடிவு செய்கிறாள்? கல்யாணம் மறுபடியும் நடந்ததா என்றெல்லாம் நம்மை ரொம்ப மண்டையைப்போட்டு குழப்பிக்கொள்ளவிடாமல், நம்மூர் பாரதிராஜா, பாக்யராஜ் மாதிரி டன்...டன்..என உடுக்கையெல்லாம் அடித்து நீண்ட க்ளைமாக்ஸ் சீன், வசனங்கள் என இழுக்காமல் சட்டென்று படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் விகாஸ் பெஹல்.

' உன்னோட நிம்மதியக் குலைச்சி, உன் புருஷனையே என் முந்தானைக்குள்ளாற முடிச்சி, உன் குடும்பத்த நடுத்தெருவுக்கு கொண்டு வரத்தயங்கமாட்டா இந்த சாவித்திரி' போன்ற சின்னத்திரை சீரியல் வசனங்களை பார்க்கும் மாலை வேளையில், வன்முறை மற்றும் சண்டைக்காட்சிகளில்லாத, நகைச்சுவை கூடிய இந்த ஹிந்திப்படத்தை நிம்மதியாக 3 மணிநேரம் பார்க்கலாம்..

No comments:

Post a Comment