Wednesday, August 13, 2014

பக்ரீனா...சார்ஜாவா...அபிதாயியா..

சென்ற மாதம் விடுமுறைக்காக பஹ்ரைனிலிருந்து நான் சென்னை வந்திருந்தது தெரிந்ததே.. (ரொம்ப தினத்தந்தி படிச்சா இப்பிடித்தான்) ஆனால் அபுதாபி வழியாக மட்டும் இனி வரக்கூடாதென முடிவெடுத்துவிட்டோம். 

அபுதாபி நேரம் இரவு 9 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதம். சரி.. கிளம்பி ஒரு அரை மணிக்குள் உட்கார்ந்து செட்டிலானவுடன் சாப்பாட்டுக்கடையை எப்போது திறப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தோம். சரியான பசி வேறு. பஹ்ரைன் ஏர்போர்ட் லவுஞ்சில் மாலை 4 மணிக்கு சாப்பிட்டது.

விமானம் கிளம்பி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை குடிதண்ணீர்,குளிர் பானம், நீராவியில் வைக்கப்பட்ட கைக்குட்டை வகையராக்கள் விநியோகம் நடந்து முடிந்தபின் மெதுவாக சாராய வண்டியை தள்ளிக்கொண்டு பணிப்பெண் வந்தாள். ஒவ்வொருவரிடமும் நெருங்கி வந்து குனிந்து 'ஊத்திக்கிறியா?' என பவ்யமாக ஆங்கிலத்தில் கேட்டாள். பக்கத்தில் மனைவி இருந்ததால் தான் நான் 'வேணாம்.. நன்றி' என சொன்னதாக நினைக்க வேண்டாம். தனியாக பிரயாணம் செய்திருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பேன். 'குடிக்க என்னென்னம்மா இருக்கு?' என கேட்டவர்களுக்கு முன் அவள் தரையில் மண்டியிட்டு அமர்ந்து அஷ்டோத்தரம் மாதிரி வரிசையாக சொல்ல ஆரம்பிக்க, அருள்வாக்கு கேட்பது போல சிலர் தலையை ஆட்டி தாகசாந்தி பெற்றுக்கொண்டார்கள்.

கண்ணாடி போத்தல் மூடியை அவள் அலட்சியமாக திருகி மதுவை சன்னமாக கோப்பையின் பக்கவாட்டுச்சுவற்றில் சரித்து, கிடுக்கியால் ஐஸ் கட்டியை மேலே மிதக்க விட்டு, பக்கத்தில் தொட்டுக்க ஒரு சின்ன கின்னத்தில் வறுத்த முந்திரி, கடலை, பிஸ்தா, பாதாம்..எல்லாம் வைக்க ...ஆஹா யாருக்குத்தான்
தண்ணியடிக்க ஆசை வராது!

அந்தபக்கம் விருத்தகிரி விஜய்காந்த் மாதிரி ஒருத்தர் தன் பெரிய வயிற்றுக்கு பின்னாடி உட்கார்ந்திருந்தார். சீட் பெல்ட் அவருக்கு போறாது. நெஞ்சுக்குத்தான் சீட் பெல்ட்டே போட்டிருந்தார். 'நீ சீக்கிரம் குடிச்சி முடிக்கலைன்னா அடுத்த ரவுண்டு உனக்கில்ல' என யாரோ அவருக்கு சொன்னமாதிரி ஒரு அவசரம். கோவில் தீர்த்த பிரசாதம் மாதிரி மடக் மடக்கென குடித்து, மீசையில் ஒட்டியிருந்த அந்நிய நாட்டுச்சாராயத்தை புறங்கையால் துடைத்துக்கொண்டே பிஸ்தாப்பருப்பை பற்களிடையே உள்ளே தள்ளினார். 'ஹையா..நான் குடிச்சே ஒழிஞ்சிடுவேனே...' என மகிழ்ச்சியுடன் சொல்லும் சிவந்த கண்கள். நமக்கு இன்னிக்கி புவ்வா அவ்வளவு தான் என நினைத்தேன்.

எனக்கு பக்கத்தில் ஒருத்தர் சின்ன பையனாட்டம்... அடடே..'ஜூன் போனா..ஜூலைக்காற்றே' பாடகர் க்ரிஷ். பகல் முழுவதும் பாரிசிலிருந்து அபுதாபி வரை பிரயாணம் செய்த களைப்பு அவருக்கு. படித்ததெல்லாம் அமெரிக்கா. திருச்சி கல்லுக்குழி பூர்விகமாம். விமானம் கிளம்பும் முன் எல்லா கணவன்மார்கள் போல அவரும் கைப்பேசியில் ' தோ..டேக் ஆஃப் ஆகப்போறதும்மா.. காலைல 6 மணிக்கு வந்தர்றேம்மா.. சரிம்மா..வச்சுடட்டுமாம்மா' என பயபக்தியுடன் அப்டேட் கொடுத்துவிட்டு, மதுவகை பட்டியல் அட்டையை 'பீர்'ராய்ந்தார். அமைதியாக மிகுந்த மரியாதையுடன் கொஞ்ச நேரம் என்னுடன் பேசிவிட்டு சாக்ஸை கழட்டி காலை நீட்டி சோம்பல் முறித்தார். 'அட.. சினிமாக்காரங்களும் நம்பள மாதிரியே எல்லாம் செய்றாங்களே' என வியந்து இந்தப்பக்கம் திரும்பினால்......தண்ணியடித்த கணவான்கள் சிலருக்கு முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர, வரிசையாக பாத்ரூம் போக நின்றார்கள்.

விமானம் சீரில்லா காற்றழுத்தத்தினால் கடகடவென அதிர பெங்களூர் மாரத்தஹள்ளி ரோட்டில் போவது போலிருந்தது. வழியை அடைத்துக்கொண்டு பாத்ரூம் போக நிற்பவர்களிடம் பணிப்பெண் 'வெளிய டர்புலன்ட் வெதர்.. இப்பசத்திக்கி அடக்கிட்டு அப்பறமேட்டுக்கு உச்சா போலாமே' என பணிவாக கெஞ்சியும், மேற்படி ஆட்கள் 'அடக்கு'முறைக்கு ஒப்புக்கொள்ளாமல் இருமாப்புடன் அங்கேயே கொஞ்சநேரம் நின்றுவிட்டுத்தான் பாத்ரூம்/மில் 'போனார்கள்'. விருத்தகிரியும் தான். வெளியே வரும்போது அவரை கவனித்தேன்.. பாண்ட்டிலேயே கொஞ்சம் போயிருந்தார்.விமானத்தின் அதிர்வு இல்லியா...

விமான ஓட்டிக்கு மிக அருகே முன்னால் மூன்றாவது வரிசையில் நாங்கள். எங்கள் பகுதிக்கு இரண்டு பணிப்பெண்கள். முதல் வரிசையில் ஒரு கைக்குழந்தைக்கு காது வலி போலும்..பாவம். வீர்..வீரென்று அது அலற, குழந்தையின் அம்மாவும், இடது கையில் மதுக்கோப்பையுடன் அப்பாவும் போராடினார்கள். யாருக்கும் புவ்வா இன்னும் கொடுக்கப்படவில்லை.

சாராய வண்டி மறுபடியும் ஊர்ந்து வர, அணையின் நீர்மட்டம் குறைந்த மக்களுக்கு இரண்டாவது சுற்று தண்ணீர்ப்பந்தல் ஆரம்பிக்க, நான் மெதுவாக பணிப்பெண்ணைக்கூப்பிட்டு 'ஏம்மா...தண்ணியடிக்காதவங்களுக்கு மட்டும் இப்ப சோறு கெடைக்குமா' வென கேட்டேன். அவள் உடனே குனிந்து தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து 'இப்பத்திக்கி இல்ல' என சொன்னாள் (இதை மண்டிபோடாமலேயே சொல்லலாமே!).

ஆஹா... ஒரு வழியாக அம்மணி வந்து எனக்கு முன் சாப்பாட்டுப்பலகையை சீட்டிலிருந்து வெளியே இழுத்து அதன்மேல் துண்டைப்போட்டாள். உணவுப்பட்டியல் அட்டையை காட்டி மரக்கறியா, மாமிசக்கறியா என முடிவு செய்ய வேண்டுமாம். அதற்குள் ஃபிலிப்பினோ பணிப்பெண் என்னிடம் வந்து மண்டிபோடாமல் சொன்னாள்.. 'நீங்க ஹிண்டு மீல் கேட்டு டிக்கெட் பதிவு பண்ணியிருக்கீங்க.. சரியா? அது கவுச்சாக்கும்..அதுல மாட்டுக்கறி உண்டாக்கும்.. பரவால்லியா' என கேட்க, எனக்கு ரத்தம் ஜிவ்வென்று தலைக்கு ஏறியது. ' சகோதரி... எங்க ஆபீஸ்காரங்க டிக்கெட் புக் பண்ணப்ப என்னை விஜாரிக்கல... ஹிண்டு மீல்னா காய்கறி இல்லியா? மாடு, பன்னியெல்லாமா? அப்ப மரக்கறிக்கு இன்னா ச்சூஸ் பண்ணனும்?' என கேட்டேன். அவள் 'அதுக்கு நீங்க ஏஷியன் ஹிண்டு மீல் னு கேக்கனும்' என பொழிப்புரை வழங்க, ஹிண்டு மீல் க்கும் ஏஷியன் ஹிண்டு மீல் லுக்கும் மாட்டுக்கறி தான் வித்தியாசமாவென வியந்தவன்னம் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்..விடிகாலை வெளிச்சம் லேசாக தெரிந்தது.

ஒருவழியாக கெஞ்சி கூத்தாடி வெஜ்ஜி மீல் கெடச்சுது...துக்குனூன்டு தட்டில். திருச்சி ஆதிகுடி காபி க்ளப்பில் அதே அளவு சிறிய தட்டில் பஜ்ஜி...இங்கே வெஜ்ஜி. தட்டின் ஒருபக்கம் துணியால் சுற்றப்பட்ட கரண்டி, கத்தி, முள்கரண்டி, காபி கலக்கி (ஸ்டிர்ரர்)...பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் இலைதழைகள் மற்றும் ஆலிவ், மறு கிண்ணத்தில் கேக்..அப்புறம் தேநீர், தண்ணீர் குடிக்க 2 காலி கோப்பைகள், சாக்லேட், பல் குத்த குச்சி மற்றும் ஃப்ளாஸ், குட்டி சாஷேயில் பால், சீனி, வெண்ணெய், பன்...ஸ்ஸப்பாடா! இதெல்லாம் வைத்தது போக மீதியிருக்கும் இடத்தில் பிடிசோறு.. கொஞ்சம் பீன்ஸ் கலந்த குழம்பு மாதிரி ஒரு வஸ்து, இதெல்லாம் வயத்துக்கு எந்த மூலைக்கு என பத்தாமல் 'ப்ளடி மேரி' அடித்த பெருசுகள் 'ப்ளடி இடியட்ஸ்' என முனுமுனுத்தவாறே முன்னே எட்டி எட்டி பார்த்தார்கள்.. ஊஹும்... பணிப்பெண்கள் வரக்காணோம்..

சாப்பாட்டுத்தட்டில் துணியைத்திறந்து கத்தி, கரண்டிகளை வெளியே எடுக்கும்போது 'ணங்ங்' என ஆங்காங்கே சிலர் கீழே போட்டார்கள். காதுவலி பாப்பா அழுகையெல்லாம் நிறுத்தி சிரித்து விளையாடியபடியே ஸ்பூனை பக்கத்து சீட்டுக்காரர் மேல் விட்டெறிய, அதை தடுக்க முயன்ற அப்பா ஒரு டம்ளர் தண்ணீரை அப்படியே அவர் சீட்டில் கொட்டினார். இந்தாண்ட பாண்ட் ஜிப்பை போட மறந்து ஜாலியாக எலும்பை கடித்துக்கொண்டிருந்தார் விருத்தகிரி. ஒருவழியாக எச்சில் தட்டுக்களை அப்பெண்கள் வாங்கி வண்டியில் சொறுகிக்கொண்டு போனவுடன் ஒரு அரைமணி நேரம் தூங்கியிருப்போம்.

மணி காலை 3.30(இந்திய நேரம் 5 மணி). 'சீட்டை நேராக்கி உக்காருங்க..இறங்கப்போறோம்' என எழுப்பிவிட்டார்கள்.

எங்கள் பஹ்ரைன் ஸ்லோகா குரூப் நண்பர் Sampath Vijaykumarமற்றும் Anuradha Vijaykumar தம்பதிகளது பெண் Aishwarya Vijaykumarதிருமணத்திற்காக சென்னை வந்திறங்கினோம். அத்திருமணம் பற்றிய பதிவைத்தான் விபரமாக எழுதலாமென ஆரம்பித்து விமானப்பயண அனுபவத்திலேயே இருக்கிறேன்...கோலாகலமான திருமண வைபவம் பற்றி அடுத்த பதிவில்...

No comments:

Post a Comment