Thursday, July 30, 2015

‎படக்குறுங்கதை‬ (‎இசக்கி)

(கதை சொல்லும் புகைப்படம் . இந்தப் படத்துக்கு குறுங்கதை எழுத Anand Raghav Tiruchendurai Ramamurthy Sankar Venkatasubramanian Ramamurthy Sridhar TrafcoJayaraman RaghunathanVallabha SrinivasanAnanya Mahadevanஅனைவரும் வருக கதைகளைத் தருக- Ganesh Srinivasan).

'அடப்பாவி மனுசா.. வீட்டுக்குச்சாப்ட வராமெ இங்கென என்ன செய்றீய? சோலி ஒன்னுங்காங்கல?'
மீன்பாடி வண்டியில் உட்கார்ந்திருந்தவாறு ரோட்டையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த இசக்கி, அவசரமாக ஒடி வந்த மனைவியை வெறும் பார்வை பார்த்தான்...
'திரும்பவும் விசாரிக்காங்க புள்ள'
'யாரு... போலீசா?'
'ஆமாம்.... சுயம்புலிங்கம் பய இங்ஙன வந்துட்டுப்போனாங்கென்'
'என்ன சொல்லுதாம்ல?'
சொன்னான்..
சற்று நேரம் முன் ஓடி வந்த சுயம்புலிங்கம் தன் மீன்பாடி வண்டியின் மீது சாய்ந்து அவசரமாக மூச்சு விட்டபடி ' எலே இசக்கி! புதுசா இன்ஸ்பெக்டர் வந்திருக்காம்ல... பய திரும்ப ஒன்னொன்னா நோண்டி எடுக்கான்..'
'என்ன சொல்லுதீரு'
' அன்னிக்கு ராத்திரி உன் மீன்பாடி வண்டிய பயபுள்ள ஒருத்தன் நம்ம வீட்டு பொறத்தால பாத்திருக்காம்லே'
' மூனு வருசங்கழிச்சா? அது யார்லெ கோட்டிப்பய இப்ப வாயத்தொறக்கான்'
'அத வுடு.. போலீஸ் உன்னெ கூப்புடும்..எனக்கொன்னுந்தெரியாது சாமி.. ஏதோ செத்த கன்னுக்குட்டிய அந்த மூட்டு (மரத்தடி) கிட்ட பொதைக்க சுயம்புலிங்கத்துக்கு ஒத்தாசையா இருந்தேன்னு மட்டும் சொல்லுலே'
'எலே ஆக்கங்கெட்ட கூவே.. போலீஸ் நம்புங்கே?'
' நம்ப மாட்டாங்கலே... நாஞ்சொல்லுதேன்...மொதல்ல ரெண்டு தட்டு தட்டுவாங்கலே... நீ சொன்னத மட்டும் வுடாமெ கெட்டியா புடிச்சுக்க..'
' ஆமா... அந்த பெருமாள் எம்மூஞ்சியில குத்தறப்ப உன்னெ மாதிரி காமெராவெ மொறச்சி மொறச்சி பாக்கனூங்கெ?...கொண்டேபுடுவாங்கடி'
வீட்டு வாசலில் டிவிஎஸ்ஸை நிறுத்திவிட்டு அவிழ்ந்த சாரத்தை இழுத்துக்கட்டியபடி ' ஏட்டி ராணி!' என கத்தியபடி உள்ளே ஓடிய சுயம்புலிங்கம் எதிரே வந்து நின்ற மனைவியிடம் விபரம் சொல்ல...
' அடப்பாவி.. திரும்பவுமா? அடி வாங்கியே குண்டாயிட்டேன்யா..இப்ப என்ன பண்ணுதீய? திரும்பவும் அடிப்பாங்களா?'
' பாக்கலாம்... ரெண்டு நாள் யோசிக்கேன்'
' எதுக்கு.... பக்கத்தூரு போயி பிரியாணி வாங்குன பில்லு, சினிமா- பஸ் டிக்கெட் எல்லாம் பய்யி நெறைய கொண்டாரவா? மூனு வருசமா அந்த ரூம்பு பூரா மளிகை பில்லும் பேப்பருந்தாங்கெடக்கு..காங்கல?'
' அடி.. யார்ரி இவ.. பின்ன குறுக்கெ சாஞ்சு கெடக்கச்சொல்லுதியா?... போலீஸ் இசக்கிய கூப்புடும்..அதான் யோசிக்கேன்'
' எல்லாஞ்சரி... ஏற்கனவே அந்த மஞ்சக்கார் கதவ தொறக்கறப்ப அக்கம்பக்கம் பாக்கக்காமெ கோட்ட விட்டீக... இப்ப மீன்பாடி வண்டி.... ஹும்...ஒங்களுக்கு வண்டியில தான் கண்டம்' முனுமுனுத்தாள் ராணி..
' ஏட்டி.. மூதி..,அங்கென்ன முனுமுனுக்கே.. சாதாரணமாவே பல்லு வெளக்கீட்டே பேசறமாதிரி தான் இருக்கும் நீ பேசறது.. இதுல முனுமுனுத்தா வெளங்கீரும்'
' பின்ன என்னவாம்.. அவஞ்செஞ்சது தப்பு...ஆமா நாந்தா அவன கொன்னேன்னு சொல்லிட்டு.. ஏதோ நம்ம கெரகம்...ஆறேழு வருசம் செயிலுக்கு போய்ட்டு வந்துட்டா நிம்மதியா தூங்கலாம்ல!'
' பொறுத்துக்க புள்ள.. கொஞ்ச நாளைக்கி..இத்தினி நாளு சமாளிச்சிட்டோம்.. சரி..சரி.. அவிய ரெண்டும் எத்தினி மணிக்கு வரும்... இப்ப நீ என்ன செய்யுத' என விஷமப்புன்னகையுடன் நெருங்கிய சுயம்புலிங்கத்தை நெட்டித்தள்ளினாள் ராணி...
' போய்யா... உருப்படியா எங்கள காப்பாத்தற வழியப்பாரும்... மொதல்ல மீசைய சரியா ஒட்டு.. உளுந்துறப்போகுது'
இரவு இசக்கி வீட்டில் அவன் மனைவி...
' இதப்பாரும்... இப்ப என்னா சொல்லுதீரு? அவிய இழுத்து நாலு சாத்து சாத்துனா நா வாயத்தொறந்து சொல்லிடுதேன்... வேணாம்யா.. எதையும் மறைக்காத. குத்தம் குத்தம் தாம்ங்கென்... சட்டப்படி தண்டன கெடச்சாலும் பரவால்ல...
நம்ம பக்கத்து தெரு செவந்திய கெடுத்தவனெ போலீஸ்காரங்க காசு வாங்கிட்டு கேஸ் போடாமெ விட்டாலும் செவந்தி புருசன் அவனை நடு ரோட்ல வெட்டி, தன்னோட மீன்பாடி வண்டியிலயே அவந்தலைய எடுத்துட்டுப்போயி போலீஸ்ல சரணடைச்சான். 7 வருசம்னு சொல்லி உள்ள போனாலும் ரெமிசன் அது இதுன்னு 4 வருசத்துலயே வெளிய வந்துட்டான்.. இப்ப பாரு அவனும் உன்னெ மாதிரி வண்டியிழுக்கான். செவந்தி வயித்த தள்ளிட்டா...அவங்க சந்தோசமா இல்ல? நீ ஆயுசு முளுக்க முட்டு சந்துல வண்டிய நிறுத்தீட்டு, பயந்துகிட்டே எல்லாரையும் வெறிக்க பாத்துட்டா இருப்பே?
போய்யா.. போய்ச்சொல்லு.. அய்யா கேட்டுக்கிடுங்க! கன்னுக்குட்டிய இங்க பொதைச்சிட்டு, அந்த எறப்பாளி நாயெ அங்கதாம்பொதைச்சோம்னு'
ஹும்.. என பெருமூச்சு விட்டபடி படுத்த இசக்கி அன்று இரவு தூங்கவில்லை...
அடுத்த சில நாட்களில் அந்த போலீஸ் ஸ்டேஷனை புல்டோசர் இடித்துக்கொண்டிருந்தது...
(சீதாபதி ஶ்ரீதர்)

Raveendran...

நண்பர்கள் Tiruchendurai Ramamurthy Sankar மற்றும் Suresh Seenuமூலம் இவர் எனக்கு முகநூலில் அறிமுகமானவர். இருவருக்குமே நெருங்கிய உறவினர் கூட.
சென்ற மாதம் சென்னையில் இருந்த இரண்டு நாட்களில் முதல் நாள் இவருடன் வெகு நேரம் போனில் பேசிக்கொண்டிருந்தேன். மறுநாள் இரவு பஹ்ரைன் கிளம்ப வேண்டும். கிடைத்த அந்த இரண்டு மணி நேரத்தையும் வீணாக்க விரும்பாமல் மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் 8 மணிக்கு இவரை சுரேஷ் சீனுவுடன் சந்திப்பதாக முடிவு செய்தோம்.
இரவு சரியாக 8 மணிக்கு ஹோட்டலை நெருங்கும்போது 'நான் வந்தாச்சு.. ரிஸப்ஷன்ல இருக்கேன்' என இவரிடமிருந்து போன். சென்னை போன்ற பிசியான நகரத்திலும் சொன்ன நேரத்துக்கு ஆஜரா!
பிருந்தாவன் பகுதியின் ஒரு மூலையில் இடத்தை தேர்வு செய்து அமர்ந்ததும் நண்பர் சுரேஷிடமிருந்து போன், தான் வர இயலவில்லையைன.
சுமார் ஒரு மணி நேரமே இவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தன்னைப்பற்றி சுருக்கமாக தெரியப்படுத்திக்கொண்டு என்னைப்பற்றியும் விசாரித்துக்கொண்டார். என்னுடைய பதிவுகளை தவறாமல் படிப்பதாகவும் எனது எழுத்துக்களையும் வெகுவாக பாராட்டினார். அந்த பாராட்டில் பொய் எதுவும் இல்லாமல் மனதாரவும் வாழ்த்தினார்.
இந்தியாவில் அநேகமாக எல்லா இடங்களுக்கும் போயிருக்கிறார். ஒரு பிரபல நிறுவனத்தின் டெரிடரி விற்பனையனைத்தையும் தன்கீழ் வைத்திருக்கும் இந்த மனிதரிடம் அந்த ஒரு மணி நேரத்தில் நான் கற்றது:
1. எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும் சாதாரண மனிதனாக எளிமையாக இருப்பது ( 10 க்ரெடிட் கார்டுகளுடன் மொத்தமான மணி பர்ஸ் மற்றும் 25 சாவிகளுடனான கார் கீ செயின், இரண்டு ஸ்மார்ட் போன்கள் எல்லாவற்றையும் கடமுடாவென டேபிளில் நம் எதிரே குவித்து விட்டு உட்காரும் மனிதர்கள் மத்தியில்)
2. 'You know...when I was the Country Manager of Brittania....' என பீலா விடும் மனிதர்களுக்கு நடுவே எந்த ஆர்ப்பாட்டமுமில்லாத இவரது அமைதியான பேச்சு...
3. 'எனக்கும் நிறைய எழுதனும்னு ஆசை... ஆனா எனக்கு பழக்கமில்ல...' என மிகவும் சகஜமாக வெளிப்படுத்தும் இயல்பு...
இரவு 12 மணிக்கு ஏர்போர்ட் போக வேண்டும், அடுத்து நாலைந்து மணி நேரம் பிரயாணம் என்பதால் கொஞ்சமாக சாப்பிடுவேங்க என்ற என்னை அதிகம் கட்டாயப்படுத்தாமல் 'நீங்க எவ்வளவு கொஞ்சமானாலும் சாப்பிடுங்க.. பரவாயில்ல.. ஆனா சூடான குலாப்ஜாமுனுடன் விடை பெறலாமே' என்ற அவரது அன்பான உபசரிப்பால் திக்குமுக்காடிப்போனேன்.
உட்லண்ட்ஸ் விட்டு வெளியே வரும்போது பேச்சின் நடுவே எங்களது வயது பற்றி பேசும்போது 'என்ன...எனக்கு 54 ன்னா இவருக்கும் கிட்டத்தட்ட அதே வயசு தான் இருக்கும்' என ஊகித்து அவரிடம் கேட்டபோது 'நீங்களே guess பண்ணுங்க' என்றார்.
'என்ன உங்களுக்கு ஒரு 54..55 இருக்கும்... பையன் காலேஜ் முடிச்சுருப்பான்.. பொண்ணு கொஞ்சம் லேட்டா பொறந்து இந்த வருசம் 10th படிக்கிறா.. கரெக்டா?' என அதிகப்பிரசங்கி மாதிரி கேட்ட என்னிடம், பிரகாசமான முகத்துடன் ' அய்யோ... எப்பிடி இவ்வள கரெக்டா guess பண்றீங்க!' என சொல்வாரென எதிர்பார்த்தேன்.
அமைதியாக சொன்னார்...
' பையன், பொண்ணு ரெண்டு பேரும், படிச்சு முடிச்சு வேலைக்கு போறாங்க' ( ந்நங்குன்னு யாரோ மண்டைல அடிச்ச மாதிரி இரு
ந்தது எனக்கு)
' ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயாச்சு' (பளார்... பளார்)
' நானும் தாத்தா ஆயிட்டேன்' ( இப்ப.. நானு எங்க இருக்கேன்!)

நான் உன்னை வாழ்த்திப்....


'ஶ்ரீதர்! இவங்களுக்கு 2.10 குருவாயூர புடிக்கனும்.. அவங்களுக்கு மூனு மணிவாக்குல பாண்டிச்சேரிக்கு பஸ். ' என யாரோ சொல்ல நான் அவசரமாக சாப்பிட்டு வண்டியை எடுத்தேன்.
ஒரு மாதம் முன்பு எங்கள் இல்ல (சகோதரி மகள்) நிச்சயதார்த்த விழா தென்னூர் ஹோட்டல் 'ஷான்'இல்.
பஹ்ரைனில் 19 வருடங்களாக இடது கை ஓட்டு (left hand drive) பழக்கமிருந்தாலும் திருச்சியில் மாருதி எர்டிகாவில் வலது கை பக்கம் ஓட்டுவது பெரிய சிரமமாக தெரியவில்லை. பின் சீட்டில் அண்ணி மற்றும் அவரது இரு பெண்கள்..
கொளுத்தும் வெயில்... மணி மதியம் ஒன்னறை. சரியான டிராபிக் வேறு. வண்டியை ஸ்டார்ட் செய்து ஹோட்டலை விட்டு வெளியே வரும்போது எதிரே ஒரு காலத்திலிருந்த மதுரை ஶ்ரீ முனியாண்டி விலாசை காணோம். தற்போது மொபைல் போன் கடை...இடது பக்கம் தென்னூர் வண்டி ஸ்டாண்டையும் காணோம். தென்னூர் ஹைரோடு நல்ல விஸ்தாரமாக்கப்பட்டுள்ளது.திருச்சி முந்தைக்கு இன்னும் அழகாக இருப்பது போல் உணர்ந்தேன். விதவிதமான மாடல்களில் கார்கள்.. ஸ்கூட்டி ஓட்டும் பெண்கள்.. ஸ்கின் ஃபிட் ஜீன்ஸ் பசங்கள்...
சூரியன் எஃப்பெம்மில் சினிமாப்பாடல் ஒன்றின் ஆரம்ப இசை. வயலின்,அக்கார்டியன் மற்றும் புல்லாங்குழல்..ஆஹா! இது ஜெயந்தியுடன் நாகேஷ் சுழன்று ஆடிப்பாடும் 'தாமரைக்கன்னங்கள்' பாட்டாச்சே!... அடாடா...பாடலை ஒலிபரப்பாமல் ஏன் அதற்குள் நிறுத்தி... ஓகே..ஓகே..அந்த இசையமைப்பாளர் பற்றி சில வார்த்தைகள் சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெண் அறிவிப்பாளர்..
தில்லை நகர் ஆர்ச் எதிரே அந்தக்காலத்தில் வேலூஸ் காபி இருந்த இடத்தில் இப்போது ஏதோ ஒரு மருந்தகம் இருந்தாலும், சிக்கரி வாசனை இன்னும் வருவது போல இருந்தது. ஆர்ச் முன்னால் வழியை அடைத்துக்கொண்டு ஒரு லாரி..
சரி... பாடலை கொஞ்சம் ரசிக்கலாமென்றால்..
பாம்.. பாம் என பின்னாலிருந்து ஹார்ன் ஒலி..(அட இருங்கப்பா.. நல்ல பாட்டு ஓடிக்கிட்டிருக்கு)
"மழை தூரல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது..
அது உன்னை நனைத்து தெறித்தபோது என்னை நனைத்தது.."
'அஹஹா..ஹா..ஹா..ஹா..ஹா'... என்ன அழகா SPB ஹம்மிங் இழுக்கிறார்! பாடல் முடிந்தும் கூட மனம் அதே பாடலை 'நவக்கிரகம்' போல் சுற்றி வர...
முன்னால் லாரி நகர, பாடலை விட்டு மனம் அகன்று மறுபடியும் ரோட்டுக்கு...
ஜெனரல் பஜார் தெரு முகனையில் ஆடிட்டர் கந்தசாமி வீடு இடிக்கப்பட்டு பெரிய கட்டிடம் இப்போது. பட்டாபிராம் பிள்ளைத்தெருவுக்கு முன் ஃபண்டாபீஸ் சந்து அருகே எனக்கு முன்னால் ஒரு மூங்கில் வண்டி திடீரென நிற்க... நான் ப்ரேக் போட்டேன்.. மறுபடியும் டிராபிக் ஜாம்...வலது பக்கம் முன்பு (70 களில்) பழைய லைப்ரரி இருக்கும். ஏ.கே.பட்டுசாமியின் 'கான்ஸ்டபிள் கந்தசாமி' அங்கே படிப்போமே!பக்கத்தில் முந்தி சிவகண்ணு கிளினிக் (இப்ப ஒவ்வாமை ஆசுபத்திரியாம்), மற்றும் திருச்சியின் முதல் ஏசி சலூன் 'சுரேஷ் முடி திருத்தகம்', இந்தப்பக்கம் கோல்டன் காஃபி பார் எல்லாம் இருந்ததே!
" வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்..
வன்ன விழிப்பார்வையெல்லாம் தெய்வீகம்"...
ரேடியோவில் யேசுதாஸின் 'தேன் சிந்தும்' குரல் அந்த பிசுபிசுப்பான வெய்யிலிலும் இதம்.. பாடல் முடிந்து பெண் அறிவிப்பாளர் அந்த இசையமைப்பாளர் பற்றிய சுவாரசியமான தகவல் கொடுத்துக்கொண்டிருக்க...
மூங்கில் வண்டி நகர்ந்து பட்டாபி ராம பிள்ளைத்தெரு நுழைந்தேன்.
பழனியாண்டி டாக்டர் க்ளினிக் .. அடுத்து பெரியார் இவெரா ஹாஸ்டல் இருந்த இடத்தில் வேறு நான்கடுக்கு கட்டிடங்கள்..வலது பக்கம் பாப்புச்செட்டித்தெரு...
( 1973 களில் இரவு 8 மணி வாக்கில் இருட்டில் பாட்டி வீட்டுக்கு பாப்புச்செட்டித்தெரு வழியாக நடந்து போகும்போது 'அவசரமாக' வந்துவிட்டால் சரட்டென ட்ரௌசரை இறக்கி அப்படியே சாக்கடை ஓரத்தில் உட்கார்ந்து விடுவோம்.. துணைக்கு என் தம்பி (Jani Vijay Raghavan ) வேறு. லேசாக வந்த சிரிப்பை டக்கென அடக்கிக்கொண்டேன்... நல்லவேளை.. பின்னால் உட்கார்ந்திருந்த அண்ணி, குழந்தைகள் கவனிக்கவில்லை..
"மாலையிட்டால் அது ஒரு முறை தான் என நினைப்பது பெண்மையன்றோ..
ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவனின் தன்மையன்றோ"
அடடா...அந்த நேரத்தில் சுசிலா,ஜமுனாராணி, சௌகார், ஜெயந்தி, வாலி, எல்லோரையும் விட கே.பியும் அந்த இசையமைப்பாளரும் தான் 'இரு கோடுகளாக' நினைவுக்கு வந்தார்கள்.. என்னவொரு இசை!
வலது பக்கம் பட்நூல் காரத்தெரு...(சௌராஷ்டிரா தெரு).."இவங்க பேசினா ஊசிப்பட்டாசு வெடிக்கற மாதிரியே இருக்குடா..." துவாரகா மாமா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது(1976)...
இடது பக்கம் பெருமாள் கோவில்..
மார்கழி மாதம் நாலு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு 'கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே'... என சாமி முன் ஈரத்துண்டுடன் அன்றைய பாசுரம் படித்தபின் கால்சராயை மாட்டிக்கொண்டு இந்த பெருமாள் கோவிலுக்குத்தான் சக்கரைபொங்கல் வாங்க ஓடி வருவோம்.. தண்ணீரில் விரல்களை நனைத்து நனைத்து சூடான பொங்கலை தட்டின் ஓரத்திலிருந்து வழித்து குருக்கள் எங்கள் கையில் வைக்கும்போதும் சூடே தெரியாமல் பொங்கலை நக்கி சாப்பிட்ட கையோடு பின் பக்கம் துடைத்துக்கொள்வோம் (1973)..,
கார் புத்தூர் மெயின் ரோடு வந்து, கோர்ட் பக்கம் உய்யகொண்டான் பாலம் மேலேறி வலது பக்கம் பஸ் ஸ்டாண்டு நோக்கி சரிவான ரோட்டில் இறங்கும்போது....
"ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம் உனது கையில்...
பெண்ணாக பிறந்துவிட்டாய் நாங்கள் தான் உன் மடியில்..
தனமானம் காப்பவள் நீ..
சன்மானம் யார் தருவார்.."
'மூத்தவள்-பிரமிளா' பாடும் பாடலில் மனம் லயித்து, வலது பக்கம் ஐயப்பன் கோவிலை நோக்கி குனிந்து சேவிக்கும் வழக்கத்தை மறந்து, பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்து 'அரங்கேற்றிய' அந்த இசையமைப்பாளரை நினைத்துக்கொண்டேன். அவரது சாதனைகளை மேலும் அடுக்கிக் கொண்டே போனார் ரேடியோ பெண்.
'பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்'
- சீர்காழியின் குரல் மனசை கொஞ்சம் அழுத்தினாலும், சட்டென நான் மூடை மாற்றிக்கொள்ள, 'நீர்க்குமிழி' மாதிரி சோகம் மறைந்தது... வண்டி வெஸ்ட்ரி ஸ்கூலைத்தாண்டி பஸ் ஸ்டாண்டை நோக்கி...
'நீலக்கண்கள் தாமரை போல் சிவப்பதெப்போது...
நினைவில்லாமல் மார்பிலே மயங்கும்போது..
வார்த்தை ஜாலம் பேச்சிலே வருவதெப்போது..
மங்கையின் மடியிலே புரளும்போது..'
ஆஹா.. ஜெய்சங்கரும் வாணிஶ்ரீயுடன் பாடும் 'புலவர் சொன்னதும் பொய்யே.. பொய்யே' பாட்டாச்சே! ஜெ.ச.க்காக TMS தன் குரலை இளமையாக காட்டி 'ஆயிரம் பொய்'யுடன் ('பொஞ்ஞே...பொஞ்ஞே' என) பாடியதை ரசித்தபடி ஜங்ஷனுக்குள் நுழைந்தேன்..
குருவாயூர் 2.10க்கு வரவில்லை.. 20 நிமிடம் லேட். அண்ணி மற்றும் குழந்தைகளை ப்ளாட்பாரத்தில் விட்டு விட்டு மறுபடியும் காரில் ஏறும்போது....
"இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்...
மெய்யெழுத்துக்களில் ஒலிக்குமந்த மெல்லினம்"
ஜீரா சொட்டும் ஜிலேபி போன்ற ஜேசுதாசின் குரலும் 'நல்ல பெண்மணி'யான ஸ்வர்ணா ( இசையமைப்பாளரின் மனைவி) குரலுடன்....
சூரியன் FM இல் இன்னும் 'இன்றைய இசையமைப்பாளர்' பற்றிய நிகழ்ச்சி....
திரும்ப ஹோட்டல் நோக்கி வண்டியை செலுத்தினேன்.. இந்த 40 வருடங்களில் இன்னும் திருச்சி நகரம் அதே பொலிவுடன் இருப்பதை ரசித்தபடி...ஜங்ஷனை விட்டு வெளியே வந்து, வழிவிடு வேல்முருகன் கோவிலை தாண்டும் போது முன்பு இருந்த 'சங்கர் கபே' இப்போது காணோம். காலை 5 மணிக்கு சுடச்சுட இட்லி, கேசரி கிடைக்குமே! பக்கத்தில் ஹோட்டல் ராஜா, அதன் வாசலில் பூக்கடை இப்போதும் இருந்தது.
"ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று...
என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று...
கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதை நெஞ்சம்..
நம் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம்...
பெண்ணல்லவா மனம் போராடுது..
நான் சொல்லியும் ஏன் தடுமாறுது..."
பாடலின் அருமையான வரிகளும், ஈஸ்வரி மற்றும் அடக்கமான ராஜா குரலும்.... சூப்பர் இசையமைப்பு... மனம் 'ரங்கராட்டின'மாக சுற்றியது.. ஈஸ்வரியும் ராஜாவும் சேர்ந்து பாடும் பாடல் இது ஒன்று தானோ!
திருச்சி நகரில் எத்தனையோ மாற்றங்கள் இருந்தாலும் இன்னும் மாறாதது... ஜங்ஷன் ஸ்டேட் பாங்க் எதிரே LIC ஆபிஸ் அருகே இன்னமும் இளநீர் விற்கிறார்கள்.. அடுத்து அந்த வின்சென்ட் பேக்கரி இன்னும்...வேறு பெயரில்.. பக்கத்தில் இன்னமும் கலர்/க்ரஷ்...காளிமார்க் எங்கே... இப்போது பவன்டோ ...
இடது பக்கம் 'பதஞ்சலி' அவசரத்துக்கு பாண்ட் சர்ட் எடுக்க நல்ல இடம்.. செக்யூரிடிக்காரர் நல்ல மரியாதை கொடுக்கிறார்..கொஞ்சம் முன்னே போய் ஹெட் போஸ்ட் ஆபிஸ் சிக்னலில் இடது பக்கம் திரும்பி கன்டோன்மென்ட் ரோட்டை பிடித்தேன்...
FM ரேடியோவில் 'இன்றைய இசையமைப்பாளர்' நிகழ்ச்சியின் கடைசி பகுதி....
'உனக்கென்ன குறைச்சல்.. ல்ல்ல்..ல்ல்ல்ல்..' MSV அழகாக இழுக்க அந்த கடைசி 'ல்'லுடன் சேர்ந்து மெதுவாக இழையும் புல்லாங்குழல்.. ஆஹா..தெய்வீகமான இசை!
"கடந்த காலமோ திரும்புவதில்லை
நிகழ்காலமோ விரும்புவதில்லை
எதிர்காலமோ அரும்புவதில்லை
இதுதானே அறுபதின் நிலை"
"எதையோ தேடும் இதயம்
அதற்கு எண்ணம் தானே பாலம்
என்ற நினைவே இன்று போதும்
தனிமை யாவும் தீரும்.."
தனக்கென ஒரு தனி ஸ்டைலை வைத்துக்கொண்ட அந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னரையே பாட வைத்து அசத்தியிருக்கிறார். கே.பி.யின் பெரும்பாலான படங்கள் இவர் இசையமைத்தது...
ஒரு நாள் மதிய வேளை முழுவதும் சுட்டெறிக்கும் வெய்யிலிலும் சுமார் ஒரு மணி நேரம் என்னை தன் இசையால் கிறங்கடித்து, திருச்சி நகரையும் ரசிக்க வைத்த அந்த (படுபா)வீகுமார் வாழ்க!
அவரது பிறந்த நாள் இன்று...
"பத்துக்கு மேலாடை...
பதினொன்றேயாகும்...
பக்கத்தில் நீ இருந்தால்...
பல கதை உருவாகும்...."
(சீதாபதி ஶ்ரீதர்)

Wednesday, July 22, 2015

அனந்தசயனம்

தென்னூரிலிருந்து காலை எட்டு மணிக்கு கிளம்பி வண்டி ஸ்டாண்டு, ஹிந்தி பிரச்சார சபா தாண்டி இடது பக்கம் சாஸ்திரி ரோடு திரும்பி வாமடம் உள்ளே புகுந்து கோட்டை ஸ்டேஷன் வழியாக வெளியே வந்து, நிர்மலா லாட்ஜ் பால்கனியில் நிற்கும் வாத்தியார்களுக்கு சல்யூட் அடித்து ஸ்கூல் உள்ளே எட்டேமுக்காலுக்கு நுழையும்போது அந்த சிகப்பு கலர் ஸ்கூல் பஸ் உள்ளே வரும். புதுக்கோட்டை குடுமியான்மலை மற்றும் நெய்வேலி ஸ்கூல் டூர் எல்லாம் அந்த பஸ்ஸில் தான் போவோம்.
கிராப்பட்டியிலிருந்து ரங்க பிரசாத் மற்றும் வால்டர், புத்தூர் சாமு சுந்தர சுகதிர், உறையூர் கண்ணன் எல்லோரும் பஸ்ஸில் வந்திறங்குவார்கள். எனக்கு நெறுங்கிய நண்பர்கள் சிலரில் ரங்க பிரசாத் ஒருவன். நன்றாக படிப்பான். ரீசஸில் அவனுடன் நான் ஸ்கூலுக்கு வெளியே விற்கும் மாங்கா பத்தை, ஆரஞ்சு ஜூஸ், ஐஸ்க்ரீம் வாங்கித்தின்ற நாட்கள் பல.
ஒரு நாள் ரங்க பிரசாத்தின் குட்டித்தம்பிகள் இருவரும் ஸ்கூலில் சேர, தினமும் அவர்களும் ஸ்கூல் பஸ்ஸில் வர ஆரம்பித்தார்கள். எங்களை விட நாலைந்து வயது சின்ன பையன்கள். சகோதரர்கள் மூன்று பேரும் படிப்பில் கெட்டி.
பியூசி வரை என்னுடன் படித்த ரங்க பிரசாத் REC சீட் கிடைத்து போய்விட, நான் அலகாபாத் பக்கம்....அடுத்த நாற்பது வருடங்கள் அவர்கள் தொடர்பே இல்லை. சென்ற வருடம் லிங்க்டின்னில் ரங்க பிரசாத்தை தேடினேன். கிடைக்கவில்லை. வேறு நண்பர்கள் மூலமும் ரங்க பிரசாத்தை தொடர்புகொள்ள முயன்றும் பலனில்லை.
நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar மூலம் Ananthasayanam Thiruvenkatachary மற்றம் Parthasarathy Thiruvenkatachary இருவரும் முகநூலில் எனக்கு நண்பர்களான பின் சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் ரங்க பிரசாத்தின் அந்த குட்டி சகோதரர்கள் என்று (சங்கர் சொல்லி) தெரிந்தது. மூத்தவர்கள் இருவரும் REC... கடைக்குட்டியான அனந்தசயனம் சீ.ஏ...
சில வாரங்களுக்கு முன் நான் திருச்சி போயிருந்த போது அ.சயனம் போன் செய்தார். ('செய்தான்'னு எழுத பயங்க). மறுநாள் ஆபிஸ் முடிந்து அட்ரஸ் விஜாரித்து எங்க ஏரியாவே கரன்ட் கட்டாகி, அந்த இருட்டிலும் வீடு தேடி
வந்துவிட்டார், சின்னவன் ப்ரணவ்வுடன். ( என் சின்னவனும் ப்ரணவ்).
நாற்பது வருடங்களுக்கு முன் பார்த்த அதே குழந்தை முகம் தான் அந்த இருட்டிலும் அ.சயனத்திடம் தெரிந்தது.
சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். சன்னமான குரலில் மிகவும் அடக்கமாக பேசும் அ.சயனத்திடம் நான் அந்த சில நிமிடங்களில் கவனித்தது, மற்றவர்கள் பேசும்போது பொறுமையாக கவனித்து பிறகு தான் பேசுவது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த சின்னவனிடத்தில் என்னைப்பற்றி சில வார்த்தைகளை சொல்லி, நடுநடுவே அவனுக்கும் பதில் சொல்லி...என்ன ஒரு பதவிசு!
இவருக்கு இரண்டு வருடங்கள் சீனியரான என் தம்பி Jani Vijay Raghavanஉம் என்னுடன் இருந்ததால் எங்களது பள்ளி வாழ்க்கை பற்றிய பேச்சு படு சுவாரசியமாக இருந்தது.
ஒன்பது மணிக்கு நான் திருச்சி ஏர்போர்ட் கிளம்ப வேண்டுமென்பதால் எட்டு மணிக்கு கிளம்பிவிட்டதுடன், எனது பிரயாணம் அவரது வரவால் தாமதமாகவில்லையேயென கேட்டு மன்னிப்பும் கேட்டுக்கொண்டு விடை பெற்றுக் கொண்டார்.
அவரது சகோதரன் அந்த இன்னொரு குட்டிப்பையன் 😄பார்த்தசாரதி மற்றும் இவர்களது மூத்த சகோதரனும் எனது க்ளாஸ் மேட்டுமான ரங்க பிரசாத்தையும் அடுத்த விடுமுறையில் சந்திக்க வேண்டும்..
சீ.ஏ ஃபைனல் பரிட்சைக்கு சங்கர் மற்றும் நிறைய மாணவர்களுக்கு க்ளாஸ் எடுத்த அ.சயனம் சீ.ஏ பரிட்சையில் அகில இந்திய அளவில் ராங்க் வாங்கியவர்.
சுமார் 25 வருடங்களுக்கு மேலாக BHELல் வேலை செய்யும் 'கூடுதல் பொது மேலாளர்' ( Addnl GM) ஆன இவர், கூடிய விரைவில் அந்த நிறுவனத்தின் GM ஆக வாழ்த்துக்கள்...

பாஹுபலீ..

பாஹுபலீஈஈ....பாஹுபலீஈஈஈ
வாடு மரணம் நா செய்லோ...
நாக்கு குருத்து சச்சின வரைக்கு மறியது...
வாடு தல்லினி சம்ப்பேஸுன்னானு...
வாளு கண்லோஞ்ச்சி குட்டுனி கடுப்புலோஞ்ச்சி பேகுலுனி திஞ்ச்சேசுன்னானு..
இதி நா மாட்ட காது..இதி மன ராஜநிதி...
மரணம்... மரணம்... யெவருக்கு காவாலி...
வாடுனி நேனே பய்கா பம்பிஸ்தானு...
ஒரேய்ய்ய் கதலுத்துன்னாவா...
நேனு அர்தம் கண்ட்டலோ கெலிச்சேசுன்னானு.....
பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனைவி உஷா நடுவே 'washroom எக்கடே உந்தி.. ஒஸ்தாவா?' என கேட்டபோது ' நேனு ரானு.. நுவ்வே வெள்ளு' என அலறினேன்..
படம் முடிந்து ஃபுட் கோர்ட்டில் 'ஒரேய்ய்ய்.. லெபனீஸ் bread உந்தியா' என குரலை உயர்த்தி கேட்டபோது 'இது நோன்பு நேரம்.. இன்னும் ஒரு மணி பாக்கியிருக்கு.. இல்லன்னா உள்ள தள்ளிடுவாங்கடி' என அவன் எச்சரித்தான்..
காரை கோபமாக ஸ்டார்ட் செய்து பையனுக்கு போன் போட்டு ' ஒரேய்ய்ய்.. டுயூஷன் அய்ந்தா.. நேனு இப்புடே ஒஸ்தானு' என கர்ஜித்து வண்டியை உறும விட்டு பறந்தேன்...
நடுவே யாரோ போன் செய்ய 'நேனு ட்ரைவ் சேஸுகுன்னானு.. தரவாத்த போன் சேஸ்தானு.. அர்த்தமய்யிந்தா..லேதா?' என கத்தினேன்..
வீடு வந்து சேர்த்து ரெண்டு பிஸ்கட் கொஞ்சம் காபி குடித்த பின் மூச்சிரைப்பு குறைந்து கொஞ்சம் சாந்தமாகி சகஜ நிலைக்கு வந்தேன்...
Tiruchendurai Ramamurthy Sankar சொன்னமாதிரி படம் பார்த்துவிட்டு எல்லோருமே நரம்பெல்லாம் புடைக்க வெளியே வந்தார்கள்..
இதுவே ராஜமௌளிக்கு வெற்றி...

வேதா கோபாலன் தம்பதி

'குரோம்பேட் சரவணா ஸ்டோர்ஸ் தாண்டிட்டேன்.. உங்க வீடு எந்தப்பக்கம்?'
போனில் கேட்ட என்னிடம் 'அடடா.. நீங்க ஏர்போர்ட்ல இருந்து கிளம்பறச்சயே போன் பண்றதா இல்ல சொன்னீங்க?.. பரவால்ல.. சுத்திகிட்டு வாங்க' என தன் வீட்டுக்கு சரியான வழித்தடங்களை சொன்னார்.
ராதா நகர் புகுந்து டிரைவர் அறக்க பறக்க மேலும் கீழும் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க, மெல்ல அவர் தோளை தட்டி 'ஒருத்தர் வீட்டு அட்ரஸ் விஜாரிக்க இப்பிடி தலை தெறிக்க நீங்க வண்டிய ஓட்டுனா அவங்க வீட்ட கண்டே பிடிக்க முடியாது ' என சொன்ன ஓரிரண்டு நிமிடங்களில் நிதானமாக ஸ்கூல் ரோடை பிடித்து அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினார் அந்த ரோஷக்கார டிரைவர்.
திரு. பாமா கோபாலன் அவர்களே வாசல் வரை வந்து நின்றுகொண்டு வரவேற்க, மிகுந்த சங்கோஜத்துடன் வீட்டில் நுழைந்த என்னை திருமதி. வேதா கோபாலன் வரவேற்றார்.
'வேதா கோபாலனா? ரொம்ப பரிச்சயமான பேரா இருக்கே'யென நினைப்பவர்களுக்கு.... என்பதுகளில் நீங்கள் கவனித்திருக்கலாம்.. வாராவாரம் குமுதம் பத்திரிக்கையை திறந்தால் வேதா கோபாலன் அவர்களது ஒரு பக்க கதை நிச்சயம் இருக்கும். அநேகமாக எல்லா பெண்களுக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர்.
அம்மா, பெண், பையன், பேரன், பேத்தி, மாமியார், மருமகள், நாத்தனார், கொழுந்தனார் என எல்லா உறவுக்காரர்களும் அவரது கதைகளின் காரெக்டர்கள். பெரும்பாலும் நடுத்தர குடும்பங்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான சப்ஜெக்ட்டில் கதைகள் எழுதுவார். ஒரே பக்கத்தில் ஓராயிரம் சமாசாரங்களை நச்சென்று சொல்லியிருப்பார். கதையின் முடிவில் நல்ல நீதி அல்லது தகவல்(message) இருக்கும். கதைகள் பெரும்பாலும் ராமுவின் ஓவியங்களுடன்...
கதைகள் எழுதுவது மட்டுமல்லாமல் புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறார். அது மட்டுமா! குமுதம் பத்திரிக்கையின் வளர்ச்சியில் இவரது பணி பெரும் பங்கு வகித்திருக்கிறது. பல வருடங்கள் கணவர் திரு. பாமா கோபாலன் அவர்களுடன் குமுதத்தில் பணியாற்றியிருக்கிறார். ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்களின் வலது கரமாக இருந்திருக்கிறார் என சொல்லலாம்.
முக்தா ஶ்ரீனிவாசன், ராகி.ரங்கராஜன், பாக்கியம் ராமசாமி ஜராசு, சுஜாதா, லா.ச.ரா, மாலன், ராஜேஷ்குமார், ப.கோ.பிரபாகர், லேனா தமிழ்வாணன், தலைமை நிருபர் பால்யூ, க்ரேஸி மோகன், ஓவியர் மாருதி, ஓவியர் ஷ்யாம், காந்தி கண்ணதாசன், பத்திரிக்கைகள் ஜோக்ஸ் மன்னன் கீழை.அ.கதிர்வேல் Keezhai A Kathirvel சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள்.... என இவரது நண்பர்கள் பட்டியல் மிக நீளம்.
இவர்கள் வீட்டிற்கு போனதும் என்ன பேசலாம் என ஏற்கனவே யோசித்த போது ஒன்றும் புலப்படவில்லை. ஆனால் சுமார் ஒன்னறை மணி நேரம் போனதே தெரியவில்லை.
'திருக்குறள் படிக்கற மாதிரி...மேடம்...உங்க கதைகள் படிக்கறது' என சொன்னபோது அடக்கத்துடன் மறுத்தார். பரஸ்பர விசாரிப்புக்களுக்குப்பிறகு முதலில் முகநூல் நண்பர்கள் பற்றிய பேச்சு ஆரம்பமானது. எங்களது முகநூல் நண்பர் திரு. சீராளன் ஜெயந்தனைப்பற்றி Seeralan Jeyanthan பேச ஆரம்பித்தோம். இவரது குடும்பத்திற்கு மிக நெறுக்கமானவராம். அவரை மிகவும் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார் திருமதி.வேதா. சீராளன் தமிழக ஆளுநரின் உதவியாளர், சிறந்த ஓவியர் மற்றும் எழுத்தாளர், பிரபல எழுத்தாளர் ஜெயந்தனின் மகன். சீராளன் வரைந்த திரு. பாமா கோபாலன் திருமதி. வேதா இருவரது படம் தத்ரூபம்.. அந்த இல்லத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தது.
பேச்சின் நடுவே கணவர் உள்ளே போய் 5 நிமிடம் கழித்து எங்களுடன் சேர்ந்துகொள்ள, பிறகு இவர் உள்ளே போய் காபி கலந்து கொண்டு வந்தார், தட்டில் பலகாரங்களுடன். அப்புறம் தான் தெரிந்தது.. கணவர் முதலில் போனது காபிக்கு டிகாக்‌ஷன் போட என்பது. என்ன ஒரு கோ-ஆர்டினேஷன்! அதையும் என்னிடம் வெளிப்படையாக சொல்கிறார்களே!
ஷ்யாம், கரோ, ம.செ, அரஸ் போன்ற ஓவியர்களைப்பற்றி நிறைய பேசினோம். ஷ்யாமின் ஓவியங்களை வெகுவாக புகழ்ந்தார். ஸ்கூலில் மற்ற பையன்கள் அனில், ஆடு.. சொல்லும்போது, ஷ்யாம் மட்டும் அனில் ஆடு படங்களை வரைந்து காட்டுவாராம். ஷ்யாமின் ஓவியங்களின் uniqueness பற்றி நான் குறிப்பிடும்போது ஒரு இளம் பெண்ணின் கழுத்தில் ஆரம்பித்து நளினமான தோள், முழங்கை மற்றும் விரல் வரை ஒரே கோட்டை அழகாக வளைத்து ஷ்யாம் வரைந்திருப்பார் என்றேன். பதிலுக்கு வேதா அவர்கள் 'ஷ்யாம் வரையும் பெண் கையில் காபி கோப்பை இருந்தால் அந்த கோப்பையில் உள்ள மலரின் படத்தையும் வரைந்திருப்பார்' என்று சொன்னபோது ஒரு எழுத்தாளர் எப்படி எதையும் நுட்பமாக கவனிப்பாரென தெரிந்தது. ஷ்யாம் வரைந்த இவர்களிருவரது ஓவியத்தையும் ரசித்தேன்.
எழுத்தாற்றல் மட்டுமல்ல..ஜோதிடம் பயின்றவர் இவர். நாற்பது வருடங்களுக்கு மேலாக ஜோதிடம் பயிற்சி செய்கிறாரென்றால் நம்ப முடிகிறதா!
என்னுடையது பதிவுகள் அனைத்தையும் படித்திருக்கிறாராம் திருமதி.வேதா. குறிப்பாக நான் எழுதிய 'கத்தார் பெண் கல்யாண வைபோகமே' கட்டுரை மற்றும் ஓவியம், என்னுடைய மற்ற ஓவியங்களையும் ரசித்து பாராட்டினார்.
திரு.பாமா கோபாலன் 60களிலிருந்து எழுதுகிறாராம். ஏராளமான கதைகள், கட்டுரைகளாம். மிகவும் மென்மையாகவும் நட்புணர்வோடு பேசுகிறார்.
தாங்கள் 2013இல் பஹ்ரைன் வந்திருந்தது பற்றியும், தங்களது எழுத்துலக வாழ்க்கை மற்றும் அமெரிக்காவிலிருக்கும் தனது மகன் மருமகள் பற்றி மட்டுமல்லாது எனது குடும்பம், பஹ்ரைன் வாழ்க்கை பற்றியும் நிறைய விசாரித்தார்கள். இவர்களா பிரபலங்கள்? ஏதோ எனக்கு பெரியம்மா பெண் போல ஒரு அன்னியோன்யம்.
வரவேற்பறையில் இவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பும்போது கேட் வரை வந்து வழியனுப்பி வைத்த இந்த பிரபல தம்பதியின் எளிமையை பற்றி என்ன சொல்வது!

விஜி...

சென்ற வாரம் திருச்சி தென்னூரில் என் சகோதரி இல்ல நிச்சயதார்த்த விழாவிற்கு இவர் உள்ளே நுழையும்போதே அதிரடி தான்..

என் உறவினர்களுக்கு இவர் அறிமுகப்படுத்தப்பட்டதும்...
' சார் என்ன செய்றீங்க..சொல்லுங்க'.... 
'எனக்கும் ஶ்ரீதருக்கும் அவர் காமன் ஃப்ரெண்டாச்சே'... 
'இல்லீங்க.. செல்லப்பா என்னோட பெரியம்மா பையனோட மச்சினனுக்கு ஷட்டகர்'..
'என்னப்பா ஜூசா? தேவையா? அதுல இருக்கற ஷுகர் நம்ம ஒடம்ப ஒரு வழி பண்ணீரும்ப்பா... ஆள வுடு...'

படு சகஜமாக உரத்த குரலில் பேசுவது யாரென எல்லோரும் என்னை பார்த்தார்கள். என் மாமனார், சகோதரன் எல்லோருடனும் அந்நியோன்யமாக பேசிக்கொண்டிருந்தார். நோட் பாடை எடுத்து நிறைய க்ளிக்கினார். மணப்பெண்ணுக்கு 'தாய்மாமன் மாலை' போட என்னை அழைத்தபோது எதிரே நின்று சரமாரியாக போட்டோ எடுத்துத்தள்ளினார். கையோட ஃபேஸ்புக்கில் உடனே ஏத்தினார்.. அப்பவே முகநூலை திறந்து அந்த பதிவை எனக்கு காட்டினார்.

' போட்டோவ எப்பவுமே வெர்ட்டிக்கலா எடுக்கக்கூடாது தம்பி...ஹரிசான்ட்டிலா எடுத்துட்டு அப்பறமா எப்பிடி வேணும்னாலும் மாத்திக்கலாம்... நீ என்னைய கேளு... நான் சொல்றேன்... ' நிறைய பேருடன் நெடுநாள் பழகிய மாதிரி பேசிக்கொண்டிருந்தார்..

மாடியில் சாப்பிடும்போது, 'டேய் கண்ணா.. சாம்பார் கொஞ்சம் விடுறா'... ' பாத்துடாப்பா சாம்பார் கரண்டிய சாதத்து மேல படாமெ ஊத்துடா'..

என் ஶ்ரீரங்கத்து நண்பர்கள் பாதி பேரை இவருக்கு தெரிகிறது ( 'உங்க ஃப்ரெண்டு ரங்கநாதன் என்ன செஞ்சான் தெரியுமா?...'
'யாரு முரளியா! அவன் எப்பிடி கல்யாணம் பண்ணிக்கிட்டான் தெரியுமா உங்களுக்கு ..'
மறுபடியும் ஒரு லிஸ்ட்...)

இவரது விஜயம் அந்த ஒரிரண்டு மணி நேரங்கள் அடை மழை போலத்தான். அவர் இருந்த இடமே கலகலப்பு...சரியான லூட்டி...குறும்பு

திருச்சி போகும்போது அவருடன் இரண்டு மணி நேரம் செம்ம அரட்டை அடிப்பேன்..

திருச்சியின் புராதண சரித்திரங்கள் கரைத்துக்குடித்தவர்... ஏகப்ப்ப்ப்பப்பட்ட புள்ளி விபரங்கள்...
'...ராபர்ட் க்ளைவ் வந்த தேதி, போன தேதி.. இவன் அவனை சுட்டான்.. அவன் இவனை குத்தினான்.. அந்த இடம் தான் க்ளைவோட புள்ளையோட ஆபிசு( இப்ப பழைய ட்விங்க்கிள் விக்கிறாங்க).... சந்தா சாகிப்பு ஜெயிச்சான்... மாலிக் கஃபூர் எல்லாரையும் அடிச்சி விரட்டுனான்....'

'ஸ்ஸ்ஸப்பாடா.... மனுஷனுக்கு என்னா ஒரு ஞாபக சக்தி! கேக்கற நமக்கே கண்ண கட்டுதே'

ஶ்ரீரங்கத்தில் தனது சொந்த ஃபாக்டரி நடத்திக்கொண்டு சுயதொழில் செய்யும் இவரை பார்க்கவே பொறாமையாக இருக்கிறது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்த தேர்ந்த எழுத்தாற்றல் இவருக்கு. திருச்சியின் சரித்திரம் பற்றி நிறைய இடங்களில் இவர் பேச அழைக்கப்படுகிறார். குறிப்பாக கல்லூரிகளில், சங்கங்களில், பாரதி தாசன் இன்ஸ்டியூட் ஆஃப் மானேஜ்மென்ட்டில் உரை....

மதியம் சுமார் 2 மணிக்கு படாரென ஸ்கூட்டியை உதைத்து விடை பெற்றுக்கொண்டார்.

பாதி நேரம் அலுத்துக்கொண்டும், சோக கதை பேசிக்கொண்டும், சலித்துக்கொண்டும், நெகடிவ் ஆட்டிட்யூடுடன் திரியும் மக்கள் மத்தியில் இவரைப்போன்றவர்கள் நமக்கு அவசியம் தேவை. இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். அனைவரிடமும் இனிமையாகவும், சகஜமாக சிரித்துபேசிக்கொண்டும் அரட்டையடித்துக்கொண்டும் பழகுவது நிச்சயம் இவரை சுற்றியிருப்பவர்கள் மனதை லேசாக்கும்.

உங்கள் நண்பன் என சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமை விஜி.


Jayaraman Raghunathan

பஹ்ரைன் ஏர்போர்ட்டிலிருத்து கிளம்பி ரன்வேக்கு விமானம் ஊர்ந்து வரும்போது கூட நம்மாட்கள் சிலருக்கு தண்ணி தாகம் எடுக்கும்... பணிப்பெண் பாவம்.. அவங்கவங்க சீட்ல உட்காருங்க... விமானம் மேலே பறக்க ஆரம்பிச்சவுடன எழுந்திருக்கலாம்னு சொல்லியும் சிலர் டாய்லெட் பக்கம் போவதும், பட்டனை அழுத்தி குடிக்க தண்ணி வேணுமென கேட்பதும்..
எங்கள் பகுதிக்கு நியமிக்கப்பட்ட அந்த ஃபிலிப்பினோ மற்றும் பல்கேரிய பணிப்பெண்கள் இருவரும் படு சூட்டிகை. பொறுமையாக எல்லோரையும் கேட்டு பணிவிடை செய்தார்கள். என்னைச்சுற்றிலும் வெறும் ஆந்திராக்காரர்கள். எனக்கு பின்னாலிருந்து ஒரு பெண்மணி முன்னால் பகுதியிலிருந்த தன் சகோதரரை 'ஒ! பாபு..சீட்டு தொருக்கிந்தா... கூஸ்குன்னாவா?' என ராகமாக கேட்க, முன் பகுதியிலிருந்து ஏக காலத்தில் மூன்று பாபுக்கள் 'சிக்கிந்தி... நேனு இக்கடே' என பாலகிருஷ்ணா மாதிரி கத்தினார்கள்.
விமானம் இன்னும் ரன்வே நோக்கி போய்க்கொண்டிருக்க, நான் கைப்பேசியை ஆஃப் செய்யும்போது மனைவி Usharani Sridharஇடமிருந்து போன். 'போர்டிங் அயிந்தி... தரவாத்த போன் சேஸ்தானு' என நான் பதில் சொன்னதும், பக்கத்தில் 'சார்! தெலுகு ஒஸ்துந்தா? மீரு தெலுகு வாளா?' என ஒருவர் வாஞ்சையுடன் கேட்க, மற்றொரு பாபு 'நேனு நலகொண்டா.. மீரு சித்தூரா?' என விஜாரிக்க, 'ஐயோ..நேனு சித்தூருமில்ல புத்தூருமில்ல.. திருச்சி தென்னூரு' என கத்த வேண்டும்போலிருந்தது..
சற்று நேரத்திற்கு முன் 'என் பெயர் ஆமிர்.. நான் தான் இன்றைய ஃப்லைட் க்ரூவின் மேலாளர்.. விமானம் சில நிமிடங்களில் பறக்க இருக்கிறது' என அரபி மற்றும் ஆங்கிலத்தில் விளம்பிய அவர் டொக். டொக்கென மைக்கை மறுபடியும் தட்டி.. நாம் இப்போ ரன்வே வந்துவிட்டோம்.. ஆனால் இஞ்சினில் ஏதோ பழுது.. திரும்ப ஷெட்டுக்கு போகிறோம் என சொல்லும்போது பாதி பாபுக்கள் 'கத்தி' படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு வழியாக ஒன்னறை மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்ப திடீரென குருமா வாசனை.. சாப்பாட்டுக்கச்சேரி ஆரம்பமானது. மணி இரவு 12(இந்திய நேரப்படி 2.30). நல்ல பசி .. ஏஷியன் ஹிண்டு விஜிடேரியன் மீல் என சொல்லி கொஞ்சூன்டு சோற்றுக்கு எக்கச்சக்கமான பட்டானி பனீர் மசாலா.. இரண்டே கவளத்தில் சாப்பிடும் சாப்பாட்டை பத்து முறை ஸ்பூனால் சாப்பிட்டு, ஒரு டேட் பிஸ்கட், சிக்பீஸ் சாலட்.. ஓரளவு வயிறு நிரம்பிவிட்டமாதிரி இருந்தபோது விஜய் வரிசையாக தன் சகாக்களுடன் ஏதோ குழாய்க்குள் உட்கார்ந்திருந்தார்..அந்தப்பக்கம் தம்பி ராமையா யாரிடமோ அழுது கொண்டிருந்தார்.. கை கால் குடைச்சலுடன் தூங்கிப்போனேன்..
காலை 7.30 க்கு இளையராஜா பாடல் ஒலிக்க ஃபாஸ்ட் ட்ராக் டாக்சிக்காரர் தி.நகர் உஸ்மான் ரோடு தாண்டி முதலாம் பாரதி தெருவில் பெரியவன் பிரஷாந்த் தங்கியிருக்கும் ஃப்ளாட் முன் வண்டியை நிறுத்தினார். ஃப்ளாட்டுக்கு சொந்தக்காரர் வேறு யாருமில்லை.. நண்பர் Tiruchendurai Ramamurthy Sankarஅவர்களின் மனைவி Kalpana Sankar தான்.
ஒரு மணி நேர தூக்கத்திற்குப்பின் 10.30க்கு மயிலை மாடவீதி கற்பகாம்பா மெஸ்ஸுக்கு பெரியவன் கூட்டிப்போனபோது பாதி ஐட்டம் காலி. எண்ணெய் இல்லா வெ.உத்தப்பம் சாப்பிடும்போது ஒரு கணவன் மனைவி ஜோடி எதிரே அமர்ந்தார்கள். ஆஹா... ரொம்ப பரிச்சயமான முகமா இருக்கேயென பார்த்தால் நம் முகநூல் நண்பர் Subasree Mohan. சீனாவில் குடியிருந்தவர்கள். அவர் ஒரு எழுத்தாளர். ஆகஸ்ட் மாதம் இருக்கும் எனது சீன பயணத்தைப்பற்றி அவரிடம் சொன்னதும் நிறைய தகவல்கள் கொடுத்தார். சீனா பற்றிய புத்தகம் ( 'சைனா.. அண்ணன் தேசம்' என்ற தலைப்பாம்) தான் வெளியிட்டிருப்பதாகவும், ஆனந்த விகடன் அலுவலகத்தில் கிடைப்பதாகவும் சொன்னார்.
அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே நண்பர் Jayaraman Raghunathan தன் மனைவி Latha Raghu வுடன் நுழைந்தார். ஆஹா... என்ன அருமையான நாள் இன்று! சென்ற வாரம் தான் 3 நாள் பஹ்ரைன் வந்து செமினார் உரை, பத்திரிக்கைகளில் போட்டோ என கலக்கிய JRஐ மறுபடியும் சந்திக்கிறேன். எனது படத்தை ஓவியமாக வரைந்து JR மூலம் கொடுத்தனுப்பிய லதா அவர்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது.
கையலம்பிவிட்டு வந்த சுபஶ்ரீ அவர்களும் எங்களுடன் கணவரோடு சேர்ந்து கொள்ள சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இந்த இனிய காலை வேளைக்கு இறைவனுக்கும் முகநூல் 'மார்க்'குக்கும் நன்றிகள் பல. விடை பெற்றுக்கொண்டோம்.
ஒரு சின்ன ஏமாற்றம். லேட்டானதால தோசை தான் இருக்கு.. மத்ததெல்லாம் தீர்ந்து போச்சென என்னிடம் சொல்லிவிட்டு, JR இலையில் மட்டும் வழுக்கியபடி சூடா ரவா கிச்சடி எப்படி விழுந்து?

கல்லுக்குழி ராமநாதன்..


திருச்சி டிவியெஸ் டோல்கேட் பகுதி..மன்னார்புரம் சர்க்யூட் ஹவுஸ் அரசு குடியிருப்பு காலனி...சுமார் ஏழெட்டு வருடங்கள் அங்கே குடியிருந்தோம். இரண்டு தளங்கள் உள்ள கட்டிடம் ஓவ்வொன்றிலும் விசாலமான 6 ஃப்ளாட்கள். மிகவும் சுவாரசியமான காலனி வாழ்க்கை. அடுத்த ஃப்ளாட்டில் தொபேல் தொபேல் என அப்பாவிடம் அடி வாங்கும் பசங்க சத்தம் இங்கே கேட்கும். பின்புற பால்கனி போனால் 'இந்த வீட்ல என்னை யாரு மதிக்கறாங்க' போன்ற கணவன் மனைவி சண்டை காதில் விழும். பால்கனியிலிருந்து வெளியே கழுத்தை நீட்டினால் மேல் தளத்திலிருந்து சப்பிய மாங்கொட்டை நம் தலையில் விழுவது நிச்சயம்.
பக்கத்தில் செங்குளம் காலனி..அப்புறம் காய்கறி கடைகள், மட்டன் ஸ்டால், டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட், அரிசிக்கடை தாண்டினால் கல்லுக்குழி மாரியம்மன் கோவில். கோவிலுக்கு எதிரே ரயில்வே காலனி வீடுகளில் ஒன்று தான் 'கல்லுக்குழி ராமநாதன்' வீடு.
ஓவியர் வினு வரைந்த மாதிரி அழகான முகம் ராமநாதனுக்கு . நெற்றியில் விபூதி..முகத்தில் மீசையில்லாமல் தாடையில் மட்டும் தேவையில்லாமல் வளர்ந்த தாடி. அவனது பெற்றோர் நாமக்கல்லில் இருக்க, திருச்சியில் அத்தை மாமாவுடன் அந்த ரயில்வே குவார்ட்டர்ஸ் வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தான்.
நான், ராமநாதன் மற்றும் ஶ்ரீரங்கம் காமாட்சிநாதன்) Venkat Kamatchinathan ) மூவரும் ICWA பரிட்சைக்கு கணிதம் சேர்ந்து படித்தோம்.CA மற்றும் ICWA படிப்புகளில் கணிதம் மிகவும் கஷ்டமான பேப்பர். 'நானெல்லாம் B.Sc வரைக்கும் மேத்ஸ்ல எப்பவுமே சென்ட்டம் தான்' என பீற்றிக் கொண்டு, CA கணிதத்தில் 30க்கும் குறைவாக வாங்கி சில நாள் பேயறைந்த மாதிரி திரிந்தவர்கள் பலர்.
வீட்டு வாசல் வேப்ப மர நிழலில் நாற்காலி போட்டு அத்தையும் மாமாவும் உட்காந்துகொண்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, நங்கள் உள்ளே முன் கூடத்தில் தரையில் புத்தகங்களை பரப்பிக்கொண்டு படிப்போம்.
ஒரு ட்ரெப்பீசிய வடிவ தொட்டியின் நீள அகல ஆழம் இவ்வளவு..அதில் நிரம்பியுள்ள தண்ணீர் முழுவதையும் இன்ன அளவுள்ள சொம்பால் மொண்டு வெளியே கொட்ட மொத்தம் எத்தனை சொம்பு தேவை? ராமநாதன் பேப்பர் எதுவும் இல்லாமல் சிமென்டு தரையிலேயே சிலேட்டு குச்சியில் எழுதி கணக்கு போடுவான். அந்த கணக்கு முடிந்ததும் பலப்பத்துடன் பச்சக்கென அந்தப்பக்கம் தாவி தரையில் அடுத்த கணக்கை ஆரம்பிப்பான். 'ஒரு செவ்வக வடிவ கூண்டின் மூலையில் கயிற்றால் கட்டப்பட்டுள்ள குருவி அக்கூண்டின் எல்லா பகுதிகளுக்கும் பறக்கவேண்டுமாயின் குறைந்த பட்சம் எவ்வளவு நீளமான கயிறு தேவை?'....அடுத்த இரண்டு மூன்று கணக்குகள் முடிக்கும்போது தரை முழுக்க கிறுக்கல்கள். 'பாவம்... கஷ்டப்பட்டு படிக்கறான். தரைல எழுதி கணக்கு போட்டுத்தான் அவனுக்கு பழக்கம். எனக்குத்தான் அதை அழிச்சு அலம்ப மனசே இல்லை' யென அத்தை சொல்வார்கள்.
அடுத்த சில மாதங்களில் நான் பம்பாய்... ராமநாதன் சென்னை பக்கம் என போய்விட்டோம். அடுத்த லீவில் ஊருக்கு வரும்போது கல்லுக்குழி போய் ராமநாதனின் வீட்டுக்கதவை தட்டினேன். 'பழைய பேப்பர்க்காரனா நீ' என கேட்டபடி வேறு ஒருத்தர் கதவைத்திறந்து முறைத்தார். ராமநாதனின் மாமா அங்கே இல்லையென தெரிந்தது.
பம்பாயில் நான் செம்பூரில் தங்கியிருந்தேன். CA படிப்புக்கு ஓரளவு நல்ல வேலை. பழைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. காமாட்சிநாதன் மற்றும் ராமநாதனைப்பற்றி தகவல் ஏதுமில்லை. நான் அடிக்கடி மாடுங்கா பகுதியில் சங்கர மடம் அருகே சிவன் கோவிலுக்கு போவதுண்டு. கோவில் வாசலில் ஒருவர் தினமும் புல்லாங்குழல் வாசிப்பதை எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம்.
அப்போது தான் கல்லுக்குழி ராமநாதனை அங்கே பார்த்தேன், கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து...அழகான மீசை. சீராக வளர்ந்த இரண்டு நாள் தாடி. கட்டையாக கொஞ்சம் குண்டடித்திருந்தான். அவனும் படிப்பை முடித்துவிட்டு சென்னையிலிருந்து பம்பாயில் புதிய வேலைக்கு வந்திருந்தான். பக்கத்தில் கன்செர்ன் அல்லது சொசைட்டியில் இரவு சாப்பாடு நாலரை ரூபாய்க்கு சாப்பிட்டோம். 'வா.. வா.. பக்கத்துல தான் வீடு' என இழுத்துக்கொண்டு போனான்.
கிங்ஸ் சர்க்கிள் சமீபம் 'ஓகே கண்மணி' படத்தில் வருவது மாதிரி பழைய கட்டிடம். பெரிய உயர்ந்த கதவுகள். அங்கே தான் அவன் பேயிங் கெஸ்ட். வயதான பார்ஸி பெண்மணி கதவைத்திறக்க உள்ளே தன் ரூமுக்கு அழைத்துக்கொண்டு போனான். அவனுக்கு நாரிமன் பாயின்ட் மித்தல் கோர்ட்டில் ஆபிஸ். எனக்கு ரீஜென்ட் சேம்பர்ஸ். ரொம்ப பக்கம் தான். நிறைய நேரம் பேசிவிட்டு, மறுநாள் மதிய உணவு இடைவேளையில் சந்திப்பதாக முடிவு செய்து, விடை பெற்றுக்கொண்டு '8 லிமிடெட்' பிடித்து செம்பூர் வந்து சேர்ந்தேன்.
மறுநாள் மதியம் 1 மணிக்கு அவனது ஆபிஸ் போனேன். 'பெஸ்ட் அன்டு க்ராம்ப்டன்' நிறுவனம். அதில் டெபுடி அக்கவுன்ட்ஸ் மானேஜராம். 'கஷ்டப்பட்டு படிச்சதனால நல்ல வேலைல நீ இருக்கறது ரொம்ப சந்தோஷம்பா' என அவனை வாழ்த்தி, அவனது ஆபிஸ் நம்பரை என் பாக்கெட் டைரியில் குறித்துக்கொண்டேன்.
'உன்னோட ஆபிஸ் நம்பரை சொல்லு' என அவன் தன் முன்னேயிருந்த காகிதங்களை விலக்கி, பேப்பர் ஏதுமில்லாத கிறுக்கல்கள் நிறைந்த மேசையின் மேல் பரப்பில் குறித்துக்கொண்டான்.நல்ல வேளை தரையில் கார்பெட் போட்டிருந்தார்கள்...

சந்துரு

86இல் நான் பாம்பே வந்தவுடன் என்னுடன் தங்கியிருந்தவன் Balasubramaniam Chandrasekaran . திருச்சி ஐயப்பா நகரில் எங்கள் பக்கத்து வீடு. அவனது அப்பா அந்தக்கால 'சேலம் பாங்க்' மானேஜர். மிகவும் சகஜமாக பேசுவார். ஶ்ரீரங்கம் பாய்ஸ் ஹை ஸ்கூல், ஜமால் முகமது காலேஜில் பி.காம், பிறகு கம்பெனி செக்ரெடரி கோர்ஸ் (ACS) பாஸ் செய்து விக்ரோலி பகுதியில் ஒரு மார்வாடி கம்பெனியில் வேலை சந்துருவுக்கு.
சந்துரு என்கிற
துருதுருவென இருப்பான். கிட்டத்தட்ட நாகேஷ் மாதிரியான ஒடிசலான உடலமைப்பு. 'தெய்வத்தாய்'( 'வந்து சுடுவேன்...'), 'அன்பே வா' ( 'வாழ்க்கைல நொண்டியா இருக்கலாம்.. ஆனா ஒண்டியாக இருக்கக்கூடாது !').. சோப்பு சீப்பு கண்ணாடி ( அய்! அந்த போர்டுல எம்பேர் இருக்கு! .. டேய்.. அது கரீம் இல்லடா.. க்ரீம்..) போன்ற நாகேஷ் பட ஜோக்குகள் நிறைய சொல்வான். சரியான லூட்டி..குறும்பு..அரட்டைப்பேர்வழி...
கத்தார் வேலையை விட்டு விட்டு எங்களுடன் சேர்ந்து கொண்ட மகாதேவன் கொண்டு வந்திருந்த சந்திரபாபு கேசட்கள் நிறைய கேட்பான். 'காத்தவராயன்' இல் ஜிக்கியுடன் பாடும் 'ஜிகு ஜிகு...ஜியாலங்கடி ஜியாலோ' மற்றும் 'மகாதேவி'யின் 'தடுக்காதே என்னெ தடுக்காதே'
சந்திரபாபு பாடல்களை முனுமுனுப்பான்.
இரவில் தூங்கும் முன் படுத்துக் கொண்டே 'இதய கமலம்' PB ஶ்ரீனிவாஸ் (நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்), 'மன்னவனே அழலாமா'(கற்பகம்) பாடல்கள் கேட்கத்தவறுவதில்லை.
செம்பூர் ஸ்டேஷனை தாண்டி தண்டவாளத்தை ஒட்டிய ஜோப்பர்பட்டி பகுதிகளில் திருட்டு வீடியோ பார்லர்களில் ஊட்டி வரை உறவு போன்ற நிறைய தமிழ் படங்கள் பார்ப்போம். அந்தப்பக்கம் தனியே தமிழில் 'பீப்பி...பீப்பி (BPயாம்) என சத்தம் போட்டு டிக்கெட் விற்பார்கள். அதற்கு கூட்டம் இன்னும் அதிகம். பார்த்திபனின் 'புதிய பாதை' பார்த்த பின் திருட்டு வீடுயோ பார்லர் போவதை (பார்த்திபன் படங்களையும் சேர்த்து) விட்டு விட்டோம்
மாலை ஜீவன் மெஸ்ஸில் தாலி, ஞாயிரு காலை செம்பூர் கீதா பவனில் பொங்கல் அவியல், பைனாப்பிள் தோசா, சரோஜ் ஹோட்டலில் காரா பாத், சில சமயம் ரோட்டுக்கடை அண்ணாச்சியிடம் இட்லி, பரோட்டா.. என நினைத்த இடத்தில் என்னுடன் சாப்பிடுவான்.
செம்பூர் அகோபில மடம் பகுதி ரிசர்வ் பாங்க் மாமி வீட்டில் ஒரு கொல்லம் சாப்பிட்டோம். அங்கே காலை டிபனுக்கு உட்காரும்போது பிரேமன் என்கிற பாலக்காட்டுப்பையன் மட்டும் பேசினில் இருக்கும் 12 இட்லிகளையும் தன் தட்டில் கவிழ்த்து அதன் மேலே சட்னி சாம்பாரை கொட்டி பிசைவதை பார்த்து ஸ்தலத்திலேயே விழுந்து விழுந்து சத்தம் போட்டு சிரிப்பான் சந்துரு. பிரேமனை மாமி அடுத்த மாதமே கழட்டி விட்டார்கள். செம்பூரிலிருந்து பஸ் பிடித்து 30 நிமிடம் சயான் மணீஸில் வரிசையில் நின்று உ.கி கறி & வெ.சாம்பார் சாப்பாடு வாங்கித்தருவான்.
தன் மார்வாடி பாஸ் எப்படி இயந்திரத்தின் உதிரி பாகங்களை கஸ்டம்ஸ் டூட்டி கட்டாமல் இறக்குமதி செய்தார் என்பதை விலாவாரியாக விளக்குவான். அடுத்த சில வருடங்களில் மாட்டிக்கொண்டு அவரே ஒர் இரவு ஜெயிலில் கழித்ததையும் பூரிப்புடன் சிலாகிப்பான். சக மானேஜர் சுரானா, மாதாமாதம் இன்கம் டாக்ஸ் ஆபிஸில் 'அவர்களுக்கு' கொடுப்பதற்கென என்று சொல்லி கொண்டு செல்லும் பத்தாயிரம் ரூபாயில் சுமார் எட்டாயிரத்தை தனியாக லவட்டி, கஞ்சூர் மார்க் பாரில் பீர் குடிக்கும் கதையை சந்துரு கண்டுபிடித்து புட்டு புட்டு வைப்பான்.
எவ்வளவு சிரித்து அரட்டையடித்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு சோகம். தன் குடும்பத்தின் பெர்சனலான நிறைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வான். வடக்கே வேலையிலிருந்த அண்ணனிடமிருந்து கொஞ்ச நாள் தகவல் ஏதும் வராமல் திடீரென அவர் இறந்துவிட்டதாக வந்த தந்தியை படிக்கும்போதே அதிர்ச்சியில் அப்பா கண் பார்வையை இழந்ததை
மெதுவாக சொல்வான். பின் சில நிமிடங்கள் மௌனம்...அடுத்த நொடியே ' டேய்.. கிளம்பு.. மாடுங்கா உடுப்பி கிருஷ்ண பவன்ல பூரி தாலி சாப்பிடலாம்' என மூடு மாறி சட்டென பிரகாசமடைவான்.
என்னுடன் பஹ்ரைனில் கொஞ்ச நாள் இருந்தான் ( இந்த ஊர்ல ஜூனியர் விகடன் படிக்கறதைத்தவிர வேற வேலை யாருக்கும் இல்லப்பா) .. பின் ஆஸ்திரேலியா அருகே பப்புவா நியூ கினியாவில் பயந்து கொண்டே ஒரு வருடம் ( தெனமும் பாண்ட் போடறப்ப பயமா இருக்குப்பா! ரோட்ல போறப்ப வண்டிய நிறுத்தி இறங்கச்சொல்லி கீழே சுடுவானாம்)...
பெங்களூரில் செட்டிலான சந்துருவை விடுமுறையில் சந்திக்கும் போது இன்றும் அதே கலகலப்பு, சிரிப்பு, லூட்டி.. இப்போதும் சந்துருவிடம் நம் பம்பாய் கதையை ஆரம்பித்தால்.. 'தெரியுமே..,' என மீதிக்கதையை சொல்வது அவனது மனைவி..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்துரு...

மார்ட்டின் ஜெரோம்

பெயர் மார்ட்டின் ஜெரோம். திருச்சி அருகே குலமாணிக்கம் சொந்த ஊர். சட்டென கோபம் வந்த கையோடு கன்னங்குழி விழ சிரிக்கவும் செய்வார்.
80களில் திருச்சி மன்னார்புரம் பவானி லாட்ஜில் தங்கிக்கொண்டு ICWA படித்துக்கொண்டிருந்தார் மார்ட்டின். அவரது அப்பா குலமாணிக்கத்தில் நிலபுலன்கள் வைத்துக்கொண்டு மாதாமாதம் பணம் அனுப்ப, இவர் திருச்சியில் சொகுசாக படித்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பாக்யராஜ் கண்ணாடி மற்றும் தலைமுடி ஸ்டைல்.
ஆருயிர் நண்பன் கணபதி Ganapathi Subramanian தான் இவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தினான். 'ஶ்ரீதர்..நம்ம ரூமுக்கு வந்தீங்கன்னா நாம சேந்து படிக்கலாமே' என அவர் கேட்க கம்பைன்ட் ஸ்டடீஸ் செய்ய முடிவு செய்தோம்.
ஒருநாள் சைக்கிள் காரியரில் கனமான புத்தகங்கள் எடுத்துக்கொண்டு அவரது லாட்ஜ் ரூமுக்கு போனேன். 'ஶ்ரீதர்.. எதையுமே ஒழுங்கா ப்ளான் பண்ணி செய்யனும்.. இல்லன்னா ஒன்னும் செய்யக்கூடாது.. புரிஞ்சுதா?' என அவர் முதல் நாள் கேட்டதும் நான் 'ஆஹா..வடிவேலு மாதிரி வில்லங்கம் புடிச்சவர் மாதிரீல்ல இருக்காரு' என இவரைப்பார்த்தேன்.( 80களில் வடிவேலுவெல்லாம் இல்லீங்க..அத இப்ப யோசிக்கிறேன்) 'சொல்லுங்க மார்ட்டின்.. என்ன செய்யலாம்? அக்கவுன்ட்ஸ் புக் கொணாந்திருக்கேனே' என அப்பாவியாக கேட்ட என்னிடம், 'அக்கவுன்ட்ஸ் புக்கெ ஓரமா வைங்க புள்ள...மொதல்ல முந்தின அஞ்சு வருச கொஸ்டீன் ஆன்ஸர் எடுத்துப்பாப்பம்' என சொல்லி அலமாரியிலிருந்து சரட்டென பழைய சஜ்ஜஸ்டட் ஆன்சர் புத்தகங்களை வெளியே எடுத்தார். மணி காலை பதினொன்று.
'ஶ்ரீதர்.. ICWAவை சாதாரணமா நெனைச்சுடாதீங்க.. அந்த காஸ்டிங் பேப்பர் இருக்கே.. எப்பிடி படிச்சாலும் கடசீல ஊத்தீரும்' என சொல்லி அஹ்ஹஹ்ஹாவென அவர் எகத்தாளமாக சிரிக்க நான் உள்ளுக்குள்..'ஏது ஆரம்பமே சரியில்லியே....'.
அடுத்து ' டேய் கிட்டா! காபி கொண்டாடா' என அவர் சத்தம் கொடுக்க சில நிமிடங்களில் டபரா செட்டில் ஒன் பை டூ காபி..'ஶ்ரீதர் காபி சாப்டவுடன நீங்க மார்ஜினல் காஸ்டிங் இதுக்கு முந்தி எந்தெந்த வருஷம்(...கெட்ட வார்த்தை) கேட்டுத்தொலைச்சிருக்கான்னு ஒரு பேப்பர்ல குறிங்க.. நான் ஒரு தம்ம முடிச்சிக்கறேன்னு சொல்லி மேசை டிராயரிலிருந்து பிளேடை எடுத்து வில்ஸ் ஃபில்டரை இரண்டாக வெட்டி ஒன்றை பத்த வைத்து காலை நீட்டி மேசை மேல் வைத்து மூக்கு வழியாக புகையை விட்டார். ' ம்ஹூம்.. இவுரு விவகாரம் புடிச்சவர் தான்.. மணி இப்பவே பன்னிரண்டு.
' ஶ்ரீதர்.. தல கொஞ்சம் கணக்குது.. நான் அப்படியே சரிஞ்சி ஒக்காந்து ஒரு பத்து நிமிசம் தூங்கிட்டு வந்துரவா? இல்ல நீங்க சாப்டு ஒரேடியா சாய்ங்காலம் வரீங்களா? என கேட்டு என் பதிலுக்கு காத்திராமல் இடுப்பிலிருக்கும் லுங்கியை தளர்த்தி மீண்டும் இழுத்து சொறுகிக்கொண்டு அவர் தூங்க ஆரம்பிக்க, நான்... (கிழிஞ்சது போ..).
மாலை மார்ட்டின் ரூமுக்கு போனால் ஆளைக்காணோம். வெளியே வந்து பார்த்தால் தூரத்தில் ஆட்டோ ஸ்டான்டில் இருந்தார், ஒரு ஆட்டோ பின் சீட்டில் அமர்ந்தவன்னம் ஆட்டோக்காரரிடம் பேசிக்கொண்டு. 'வாங்க ஶ்ரீதர்.. பாத்திங்களா..நம்ம எபிநேசர் புது வண்டி எடுத்திருக்காப்ள.. இப்பத்தான் மாலை போட்டு ரெண்டு நாளா ஓடுது.'
' சரி மார்ட்டின்.. நாம படிக்க அந்த பளய கொஸ்டீன்ஸ்... என இழுத்தேன். '
'அதுவா.. இப்ப கொஞ்ச நேரத்துல கரூர் தான்தோன்றிமலையில இருந்து நம்ம ஒறவுக்காரப்பையன் வர்ரான். அவனோட டின்னர முடிச்சிகிட்டு நாம நைட்டு ஒரு ஒம்பது மணிக்கி ஆரம்பிக்கலாமா'வென கேட்ட கையோடு அவரே ' வேணாம் ஶ்ரீதர்..படிக்க ஒக்காந்தா சும்மா மூனு நாலு மணி நேரம் கிடு..கிடுகிடு ன்னு ஒடனும் இல்ல? இல்லன்னா வேஸ்ட்டு. நாம ஒரேடியா நாளைக்கி காலைல பத்து மணிக்கே ஒக்காரலாம். இன்னிக்கி மாத்திரம் ஃப்ரெண்டு கூட நைட்ஷோ 'கோழி கூவுது' பாத்துடறேன்' என இழுத்தார். எனக்கு மகா எரிச்சல்..'கோழி கூவுதா?எக்ஸாம்ல கூவிடும்டி' என உள்ளுக்குள் சலித்துக்கொண்டு வீடு திரும்பினேன்..
அடுத்த நாள் படிக்க போனால் லாட்ஜ் ரூம் பூட்டியிருந்தது. எங்க போயிருப்பாரென யோசித்தபடி வெளியே வந்து பக்கத்து ரோட்டோரமாக டீக்கடையில் ஒரு வாழைக்கா பஜ்ஜி,போன்விடா டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தான் கவனித்தேன். தூரத்தில் ஒரு அம்பாசடர் கார்... கிட்ட வரும்போது அதில் முன் பக்கம் பயில்வான் போன்ற டிரைவர் பக்கத்தில் குட்டியூண்டாக மார்ட்டீன். பஜ்ஜி சுற்றிய பேப்பரை கசக்கியெறிந்துவிட்டு உற்று பார்த்தேன். பின் சீட்டில் முரட்டு உருவத்துடன் மூன்று பேர். வண்டி நிற்கவில்லை. சிறிது நேரத்திலே மறுபடியும் அதே வண்டி.. மேலும் ரெண்டு முறை அந்த ஏரியாவில் ரவுண்டடிக்க எனக்கு ஒன்றும் புரியவில்லை. அன்றைய படிப்பும் கோவிந்தா..
மறுநாள் லாட்ஜ் ரூமில் மார்ட்டீன் இருந்தார்.'என்னங்க மார்ட்டீன் நேத்திக்கி என்னாச்சு,நம்ப ஏரியா பக்கம் கார்ல சுத்திக்கிட்டுருந்தீங்க?'
அதுவா ஶ்ரீதர்.. கார்ல எங்கூட இருந்தவங்க எல்லாரும் மஃப்டி போலீஸ்காரங்க.. முந்தாநாளு மெஸ்ஸுல சாப்ட்டு வெளில வற்ரேன்.. இந்த ஏரியா ரவுடிபசங்க மூனு பேரு என்னைய நிறுத்தி 'யார்ரா நீயி நம்ப ஏரியாவுல?ன்னு விஜாரிச்சதுமில்லாமெ பளார்னு ஒருத்தன் அறைஞ்சுட்டான்'
'ஐயய்யோ .. அப்பறம்?'
' அப்பபறமென்ன.. ஊருக்கு தகவல் சொல்லியனுப்ச்சேன்..எங்கப்பாரு உடனே இவங்கள காரோட அனுப்பிட்டாரு..'
' மஃப்டில அவங்கள பாக்க பயம்மா இருந்துச்சே! என்னா பண்ணாங்க?'
' கார்ல ரெண்டு ரவுண்டு சுத்தி வந்து கனகா வீட்டான்ட முச்சந்தியல அந்த ரவுடிங்கள புடிச்சிட்டோம். கார்ல ஏத்திகிட்டு அண்ணா ஸ்டேடியம் பக்கம் போயிட்டோம். அதுல என்னைய அறைஞ்சவன மத்தரம் ஓன்னு அழுது கெஞ்சுனான். டோல்கேட்ல நிறுத்தி மெரட்டிட்டு எறக்கி வுட்டுட்டோம்'
' சரி.. கூட்டிக்கிட்டு போயிருந்தா என்னா பண்ணியிருப்பீங்க?'
' அதுவா.. ஸ்டேஷன்ல அவனுங்கள ஜட்டியோட நாலு நாள் வச்சிருந்து சுளுக்கெடுத்து மன்னார்புரத்துல எறக்கி விட்ருப்பாங்க..செத்த நேரம் முன்னே அந்த முக்குல அவனுங்க நின்னிட்டிருந்தாய்ங்க.. என்னிய பாத்தவுன்னே சலாம் வெக்கிறான்' என சிரித்த மார்ட்டினை பார்க்க எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது. நல்ல மனுஷன் தான். ஆனால் அவர் கூட சேர்ந்து உருப்படியா இன்னும் படிக்க ஆரம்பிக்கவே இல்லியேயென கவலை.
அடுத்த இரண்டு மாதங்கள் இப்படியே.. ஓரிரு நாள் படித்தால் அடுத்த நான்கு நாட்களுக்கு நிறைய காரணங்கள் சொல்லி லாட்ஜுக்கு போன என்னை திருப்பி அனுப்பி விடுவார். அல்லது ரூம் பூட்டியிருக்கும். அப்பத்தாவுக்கு பேதி, அண்ணன் பையனுக்கு கட்டி ஒடைஞ்சிடுச்சு, ஒன்னுக்கு போனா எரியுது... என பல காரணங்கள். முக்காவாசி நேரம் நானே தனியாக படிக்க வேண்டியதாகிவிட்டது.
நடுவே அவ்வப்போது மார்ட்டீனை பார்க்கும்போது ' மாஞ்சு மாஞ்சு புஸ்தகத்தை படிக்காதீங்க ஶ்ரீதர். அஞ்சு வருசம் பழைய கொஸ்டின் பேப்பர் படிங்க போதும்' என அட்வைஸ்...இருந்தாலும் பயந்துகொண்டு புத்தகங்களையும் படித்தேன்.
பரிட்சை ஒரு வாரம் தினமும் நேஷனல் காலேஜில். ஒரளவு சுமாராகவே எழுதினேன். தினம் பரிட்சைக்கு வரும் மார்ட்டீன் கையில் சிகரெட் வாசனையுடன் பழைய விடைத்தாள்கள்.. சிகப்பு பேனாவில் அன்டர்லைன் செய்யப்பட்ட பக்கங்கள். அவர் சட்டை பாக்கெட்டில் அரை துண்டு வில்ஸ் சிகரெட் வழக்கம்போல.
ரிசல்ட் வரும் முன் மார்ட்டீனுக்கு என். டி. பி. சி. கம்பெனி நாக்பூர் தொழிற்சாலையில் வேலைக்கான கடிதம் வந்தது. ட்ரெய்னீ அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசராம். ICWA இன்டர் முடித்தால் அடுத்த க்ரேடு கிடைக்குமாம்.
ரிசல்ட் வந்தது. இருவரும் இன்டர் பாசானோம்...ஆனால் மார்ட்டின்.. நிறைய மார்க்குகளுடன்..

Tuesday, June 2, 2015

தன்னு மன்னுவை மணக்கிறார்(ஹிந்தி).. (Tannu weds Mannu- returns)


கடந்த பத்து நாட்களாக இந்த படத்தை பார்த்துவிடவேண்டுமென மனைவி உஷா சொல்லிக்கொண்டே இருந்தாலும், நேற்று தான் நேரம் கிடைத்தது. க்வின் படத்திற்குப்பிறகு அவள் கங்கனா ரனவத்தின் விசிறி. மதிய சாப்பாட்டிற்குப்பிறகு சின்னவனை சல்மானியா பகுதியில் டியூஷனுக்கு இறக்கிவிட்டபின் நாங்கள் 'தனா மால்' சினிப்ளெக்ஸ் உள்ளே போனபோது தியேட்டரில் எங்களையும் சேர்த்து மொத்தமே பத்து பேர் தான். இனி படம்...
லண்டனில் காதல் திருமணம் செய்துகொண்ட தன்னு(கங்கனா)வும் மன்னு(மாதவன்)வும் நான்கே வருடங்களில் தங்கள் உறவில் விரிசல் ஏற்பட உள்ளூர் மனநோய் மருத்துவரிடம் போய் முறையிட்டு, அங்கேயும் சத்தமாக சண்டையும் போட்டு, கங்கனா அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, முடிவில் மாதவன் காச்மூச்சென கத்த, அவருக்குத்தான் பிரச்னையென குண்டுக்கட்டாக அவரை தூக்கிக்கொண்டுபோய் அங்கேயே அனுமதிக்கப்படுகிறார். உடனே கங்கனா இந்தியா வந்து விவாகரத்து நோட்டீஸ் கொடுக்க வழக்கறிஞரை நாடுகிறார்.
ஆரம்பித்து பத்தே நிமிடத்தில் இவ்வளவு களேபரமும் நடக்க, படம் சூடு பிடிக்கிறது. கணவன் மனைவி சண்டையென்றால் அப்படியே ஒன்றிப்போய் தான் படம் பார்க்கிறார்கள் ஜனங்கள். படம் பார்ப்பவர்கள் முகத்தில் தான் என்னவொரு மலர்ச்சி! படம் முழுவதும் தியேட்டரில் ஒரே சிரிப்பலை.. அவ்வளவு காமெடி.
கதையின் சம்பவங்கள் பெரும்பாலும் லக்னௌ, கான்பூர் மற்றும் டெல்லி போன்ற இடங்களில். குறுகிய சந்துக்குள் மிகப்பெரிய வீடுகள். சைக்கிள், டோங்கா மற்றும் சேத்தக் ஸ்கூட்டர்கள், மொட்டை மாடியில் சார்ப்பாய்(கயிற்றுக்கட்டில்), மோடா வகையராக்கள், சுடிதார் அணிந்து மாடியில் பட்டம் விடும் இளம் பெண்கள், முக்காடிட்ட வயதான தாதி மற்றும் மௌசிகள், பழைய கங்கா ஜமுனா படம் திலிப் குமார், கண்ஹையா லால் போல சைடு பாக்கெட், வி-கட் பனியன் முன்ஷி மற்றும் பெருசுகள். திரையில் நம் கண் முன் அப்படியே வட இந்தியா...
1977 முதல் 80 வரை பட்டப்படிப்புக்காக நான் அலகாபாத்தில் என் மூத்த சகோதரி வீட்டிலிருந்தேன். அலகாபாத்திலிருந்து வாரனாசி, லக்னௌ, கான்பூர் நாங்கள் அடிக்கடி போகுமிடங்கள். கங்கனா விவாகரத்துக்காக கச்சேரி (கோர்ட்) பகுதி சென்றபோது அந்த சீனில் நான் படத்தோடு ஒன்றி அப்படியே 1979க்குப்போய்விட்டேன் என்பது உண்மை.
அலகாபாத் கச்சேரி வளாகத்திற்குள் நான் நிறைய முறை போனதுண்டு. நிறைய வக்கீல்கள் க்ளையன்ட்டுகளுக்காக திறந்தவெளியில் உட்கார்ந்திருக்க..பான்வாலாக்கள், சாய்வாலாக்கள் சுற்றி வர வியாபாரம் களைகட்டும். ப்ரெட்டை கடலைமாவில் முக்கியெடுத்து சுடச்சுட பஜியா ஒரு பக்கம், மீட்டா திக்கா சட்னியுடன் சமோசா கச்சோரி, காலா நமக் தண்ணீர் கலந்த பானி பூரி, கட்டித்தயிருடன் ஜிலேபி, இந்தப்பக்கம் பன்னீர் தெளித்த டன்டா பெனாரஸ் லஸ்ஸி, வேகவைத்த உ.கிழங்கை மசித்து சூடான கல்லில் தட்டி வஞ்சனையில்லாமல் நெய்யை கொட்டி வறுத்த ஆலு டிக்கியாவை ஆல இலையில் வைத்து பிசைந்து அதன் மேலே இம்லி கா ரஸ், தஹி, சாட் பொடிகளை தூவி மரக்குச்சி ஸ்பூனை நட்டு அவன் கொடுப்பதை வாங்க கூட்டமோ கூட்டம்..
இங்கும் அங்கும் ஓடும் நோட்டரி பப்ளிக்குகள்..உள்ளே நடக்கும் நீதிபதியின் விசாரனையோ வேடிக்கையாக இருக்கும். ஒருமுறை கோர்ட்டுக்கு ஏதோ ஒரு ஜோலியாக வந்து நானும் என் மாமாவும் உள்ளே போய் நீதி விசாரணையை வேடிக்கை பார்த்தோம். 'கணம் கோர்ட்டார் அவர்களே' போன்ற சினிமா டைப் வசனங்களோ, நடந்துகொண்டே சரட்டென செந்தாமரை மாதிரி ஸ்டைலாக திரும்பி 'ஆகவே மை லார்ட்' என முடிக்கும் லாயர்களோ கிடையாது. அதெல்லாம் சினிமாவில் மட்டுமே..பப்ளிக் பிராசிகியூட்டர் வாய் கொள்ளாத அளவு பான் போட்டுக்கொண்டு எச்சில் வழியாமலிருக்க தலையை கொஞ்சம் உயர்த்தியபடி பேசி, விசாரனையின் நடுவே அந்தப்பக்கம் போய் சுவற்று மூலையில் துப்பி விட்டு வருவார். சில லாயர்கள் விசாரனையின் நடுவே பொட்டலத்தை திறந்து 'பான்'ஐ ஆசையுடன் வாய்க்குள் தினிப்பதுடன் எதிரே உள்ள நீதிபதிக்கே கொடுப்பதுமுண்டு. நீதிபதியும் அங்கே அவ்வளவு உயரத்திலெல்லாம் உட்கார்ந்திருந்திருக்க மாட்டார்..ஆமாம்.
மன்னிக்கவும்.. அலகாபாத் கோர்ட் வளாகம் மாதிரியே இப்படத்திலும் இருப்பதால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நம் கதையையும் புகுத்தி விட்டேன்.
சரி..,படத்துக்கு வருவோம். இதற்குள் மாதவனும் லண்டனிலிருந்து வருகிறார். கணவன் மனைவி தனித்தனியாக வாழ்கிறார்கள். ஒருநாள்
மாதவன் அசப்பில் கங்கனா சாயலில் (இரட்டை வேடம்) இருக்கும் ஒரு விளையாட்டு வீராங்கனையை (குஸும்) சந்திக்கிறார். காதல் கொண்டு இருவரும் மணந்துகொள்ள முடிவு செய்கிறார்கள். பாப் முடி மற்றும் லேசாக தெற்றுப்பல்லுடன் வரும் குஸும் (கங்கனா-2) பஞ்சாபி போன்ற ஹரியான்வி மொழியில் பேசி அசத்துகிறார். ஆண் போல அசைந்து நடந்து கலக்குகிறார். கொஞ்சம் முரட்டு சுபாவமும் கூட. 'வோ தேக் கபூத்தர்...' ( அங்க பார் புறா..) என அவர் சொல்ல, எதிரே இருப்பவர் முகத்தை அந்தப்பக்கம் திருப்பியதும் ஒரே அப்பு...இந்த 'வோ தேக் கபூத்தர்' காலர் டியூனாகி வட இந்தியாவை கலக்குகிறதாம்.
மாதவன் இந்த மாதிரி ரோல்கள் எப்போதுமே அட்டகாசமாக நடிப்பார். படத்தில் நடுநடுவே தான் வருகிறார். நடிக்கிறார். அழுகிறார். இன்னமும் இளமையுடன் அழகாக இருக்கிறார். சொல்வதற்கும் இதற்கு மேல் ஒன்றுமில்லை.
படம் முழுக்க கங்கனா.. கங்கனா...கங்கனா தான்.நடிப்பில் அம்மனி பிச்சு உதறுகிறார். படு ஸ்டைலாக டான்ஸ் ஆடுகிறார். அசால்ட்டாக வசனம் பேசுகிறார். முனுக்கென்றால் மூக்கை சிந்தி அழகாக நடிக்கிறார். நண்பனின் கையிலிருந்து மாஞ்சா நூலை சடக்கென பறித்து மேலே இன்னொரு பத்தங்கை( பட்டம்) அறுத்து விடுகிறார். நேரம் கிடைக்கும்போது தண்ணியும் அடிக்கிறார். உரித்துப்போட்ட வாழை மட்டை மாதிரி படு ஒல்லி.. சைஸ் ஜீரோவில் புடவையுடனும், அத்லெட்டாக ஜீன்ஸ் டி-ஷர்ட்டுடனும் அசத்துகிறார். ஜெயம் ரவியுடன் தமிழில் தாம்தூம் படத்தில் பனங்கிழங்கு மாதிரி ஒல்லி பிச்சானாக வந்த இவரா இப்படி பட்டையை கிளப்புகிறார்?
படம் சக்கை போடு போடுகிறது. சுனிதி சௌஹானின் 'மூவ் ஆன்' பாடல் பஹ்ரைன் ரேடியோ எஃப். எம்.இல் தினம் இரண்டு முறை. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் சிறந்த வசனங்கள். வட இந்தியாவின் சுத்தமான ஹிந்தியில் நிறைய நகைச்சுவை வசனங்கள். நடுநடுவே ஹிந்தி கெட்ட வார்த்தைகளையும் கங்கனா சொல்லத்தவறவில்லை.
30 கோடி பட்ஜெட் படம் முதல் வாரத்திலேயே 90 கோடி வசூலை தாண்டி, இன்றோடு ஒன்பது நாட்களில் 100 கோடியையும் தாண்டியதாம்.
கடைசி சீன் மிகவும் அருமை. தன்னுவும் மன்னுவும் ஒன்று சேர்கிறார்களா என்பது நீங்களே தியேட்டரில் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டியது. அவசரமாக டி.வி.டி வாங்க கடைக்கு ஓடாமல் தியேட்டரில் இரண்டரை மணி நேரம் சிரித்துக்கொண்டே பார்த்தால் மனசு லேசாவது நிச்சயம்...
கங்கனாவுக்கு இதிலும் அவார்டு கிட்டுமாம்...