Wednesday, July 22, 2015

விஜி...

சென்ற வாரம் திருச்சி தென்னூரில் என் சகோதரி இல்ல நிச்சயதார்த்த விழாவிற்கு இவர் உள்ளே நுழையும்போதே அதிரடி தான்..

என் உறவினர்களுக்கு இவர் அறிமுகப்படுத்தப்பட்டதும்...
' சார் என்ன செய்றீங்க..சொல்லுங்க'.... 
'எனக்கும் ஶ்ரீதருக்கும் அவர் காமன் ஃப்ரெண்டாச்சே'... 
'இல்லீங்க.. செல்லப்பா என்னோட பெரியம்மா பையனோட மச்சினனுக்கு ஷட்டகர்'..
'என்னப்பா ஜூசா? தேவையா? அதுல இருக்கற ஷுகர் நம்ம ஒடம்ப ஒரு வழி பண்ணீரும்ப்பா... ஆள வுடு...'

படு சகஜமாக உரத்த குரலில் பேசுவது யாரென எல்லோரும் என்னை பார்த்தார்கள். என் மாமனார், சகோதரன் எல்லோருடனும் அந்நியோன்யமாக பேசிக்கொண்டிருந்தார். நோட் பாடை எடுத்து நிறைய க்ளிக்கினார். மணப்பெண்ணுக்கு 'தாய்மாமன் மாலை' போட என்னை அழைத்தபோது எதிரே நின்று சரமாரியாக போட்டோ எடுத்துத்தள்ளினார். கையோட ஃபேஸ்புக்கில் உடனே ஏத்தினார்.. அப்பவே முகநூலை திறந்து அந்த பதிவை எனக்கு காட்டினார்.

' போட்டோவ எப்பவுமே வெர்ட்டிக்கலா எடுக்கக்கூடாது தம்பி...ஹரிசான்ட்டிலா எடுத்துட்டு அப்பறமா எப்பிடி வேணும்னாலும் மாத்திக்கலாம்... நீ என்னைய கேளு... நான் சொல்றேன்... ' நிறைய பேருடன் நெடுநாள் பழகிய மாதிரி பேசிக்கொண்டிருந்தார்..

மாடியில் சாப்பிடும்போது, 'டேய் கண்ணா.. சாம்பார் கொஞ்சம் விடுறா'... ' பாத்துடாப்பா சாம்பார் கரண்டிய சாதத்து மேல படாமெ ஊத்துடா'..

என் ஶ்ரீரங்கத்து நண்பர்கள் பாதி பேரை இவருக்கு தெரிகிறது ( 'உங்க ஃப்ரெண்டு ரங்கநாதன் என்ன செஞ்சான் தெரியுமா?...'
'யாரு முரளியா! அவன் எப்பிடி கல்யாணம் பண்ணிக்கிட்டான் தெரியுமா உங்களுக்கு ..'
மறுபடியும் ஒரு லிஸ்ட்...)

இவரது விஜயம் அந்த ஒரிரண்டு மணி நேரங்கள் அடை மழை போலத்தான். அவர் இருந்த இடமே கலகலப்பு...சரியான லூட்டி...குறும்பு

திருச்சி போகும்போது அவருடன் இரண்டு மணி நேரம் செம்ம அரட்டை அடிப்பேன்..

திருச்சியின் புராதண சரித்திரங்கள் கரைத்துக்குடித்தவர்... ஏகப்ப்ப்ப்பப்பட்ட புள்ளி விபரங்கள்...
'...ராபர்ட் க்ளைவ் வந்த தேதி, போன தேதி.. இவன் அவனை சுட்டான்.. அவன் இவனை குத்தினான்.. அந்த இடம் தான் க்ளைவோட புள்ளையோட ஆபிசு( இப்ப பழைய ட்விங்க்கிள் விக்கிறாங்க).... சந்தா சாகிப்பு ஜெயிச்சான்... மாலிக் கஃபூர் எல்லாரையும் அடிச்சி விரட்டுனான்....'

'ஸ்ஸ்ஸப்பாடா.... மனுஷனுக்கு என்னா ஒரு ஞாபக சக்தி! கேக்கற நமக்கே கண்ண கட்டுதே'

ஶ்ரீரங்கத்தில் தனது சொந்த ஃபாக்டரி நடத்திக்கொண்டு சுயதொழில் செய்யும் இவரை பார்க்கவே பொறாமையாக இருக்கிறது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்த தேர்ந்த எழுத்தாற்றல் இவருக்கு. திருச்சியின் சரித்திரம் பற்றி நிறைய இடங்களில் இவர் பேச அழைக்கப்படுகிறார். குறிப்பாக கல்லூரிகளில், சங்கங்களில், பாரதி தாசன் இன்ஸ்டியூட் ஆஃப் மானேஜ்மென்ட்டில் உரை....

மதியம் சுமார் 2 மணிக்கு படாரென ஸ்கூட்டியை உதைத்து விடை பெற்றுக்கொண்டார்.

பாதி நேரம் அலுத்துக்கொண்டும், சோக கதை பேசிக்கொண்டும், சலித்துக்கொண்டும், நெகடிவ் ஆட்டிட்யூடுடன் திரியும் மக்கள் மத்தியில் இவரைப்போன்றவர்கள் நமக்கு அவசியம் தேவை. இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். அனைவரிடமும் இனிமையாகவும், சகஜமாக சிரித்துபேசிக்கொண்டும் அரட்டையடித்துக்கொண்டும் பழகுவது நிச்சயம் இவரை சுற்றியிருப்பவர்கள் மனதை லேசாக்கும்.

உங்கள் நண்பன் என சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமை விஜி.


No comments:

Post a Comment