Saturday, March 8, 2014

பட்டாபி ……….('பாம்பே டு இந்தோரி'ன் தொடர்ச்சி)



முன் கதை சுறுக்கம்:
நண்பன் கணபதி பாம்பேயிலிருந்து இந்தோருக்கு வேறு வேலை கிடைத்து போனபோது நானும் அவனுடன் கிளம்பி விட்டேன். அங்கே கம்பெனி செக்ரட்டரி ஆனந்த் ராவ் என்பவர் மூலம் ஒரு பிஸ்கட் கம்பெனியில் என்னை சேர்த்துவிட்டான். ஏனோ தெரியவில்லை ஆனந்த ராவுக்கு என்னைக்கண்டாலே பிடிக்கவில்லை. கம்பெனியில் பிரச்சனைகள் ஏராளம், சம்பள பாக்கி வேறு..கணபதி மறுபடியும் பாம்பே மாற்றிக்கொண்டு போனதும் எனக்கும்  இந்தோர் பிடிக்கவில்லை. ஆனந்த ராவின் நண்பர் பாம்பேயில் சிஃப்கோ ஃபைனான்ஷியல் சர்வீசஸ் என்ற பெரிய கம்பெனியில் உயர்பதவியில் இருப்பதாக கணபதி சொன்னதால் அங்கே எப்படியாவது சேர்ந்துவிட முடிவு செய்தேன்... ஆனால் ஆனந்த ராவுக்குத்தெரியாமல்... அவர் பெயரையே சொல்லி.. அது எப்படி?


இனி பட்டாபி ....

1986
இல் கணபதி மூலம் நான் சேர்ந்த முந்தைய  CA firm இன் பார்ட்னர்கள் அஜய் ஆஷர் மற்றும் ஹேமந்த் கபாடியா இருவரையும் தொடர்பு கொண்டு பட்டாபி இருக்கும் சிஃப்கோ க்ரூப் பற்றி விசாரித்தேன். குஜராத்தி குடும்பத்தினராம். பாம்பேயின் மிகப்பெரிய மர்ச்சன்ட் பாங்கர்ஸாம். அவர்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் சிஃப்கோவில் இல்லையாம். அங்கிருக்கும் சில குஜராத்தி ஷேர் புரோக்கர்கள் பெயர்களை  மட்டும் ஹேமந்தபாய் மூலம் தெரிந்து கொண்டாயிற்று.  


ஆனந்தராவ் உங்களை பார்க்கச்சொன்னார்என்று சொல்லி சிஃப்கோ பட்டாபியின் முன் போய் நின்றேன்.. தலையை படிய சீவி.. கையிலும் சீவி. 'இன்னும் மூன்று மாதங்கள் கழித்து பாம்பே வரும்போது உங்களை வந்து பாக்கறதா ஆனந்த ராவ் சொல்லச்சொன்னார்' என்று சின்னதா ஒரு புழுகல்... பட்டாபி அதை சட்டை செய்யாமல் சிஃப்கோ பற்றி சொல்ல ஆரம்பித்தார். ஆனந்த ராவ் மூலம் வந்தவன் என நினைத்து சம்பிரதாயமாக சில கேள்விகள் மட்டும் என்னிடம் பட்டாபி கேட்டபோது பொய்சொல்லி விட்டோமே என சின்னதாக ஒரு உறுத்தல். சரி.. பின்னால் சமாளிக்கலாம் என தைரியம் வேறு. இப்போதைக்கு ஃபனான்ஸ் டிபார்ட்மென்ட்டில் வேகன்சி இல்லையென்றதும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் சிஃப்கோ குழுமத்தைச்சேர்ந்த சுமார் 15க்கும்மேற்பட்ட சிறிய கம்பெனிகள் எனக்குக்கீழ் இருக்கு...அதன் அக்கவுன்ட்ஸ் பார்த்துக்கொள்ள 
ஒரு குஜராத்தி தேவை... இதுவரை ஆள் கிடைக்கவில்லை. இருந்தாலும்  நமது சேர்மன் பூபேன் தலால் உன்னை பார்க்க விரும்புவார்..”  என அங்கே அனுப்ப அடுத்த சில நிமிடங்களில் சேர்மன் பூபேன் தலால் முன் அமர்ந்திருந்தேன். கிரீஷ் கர்நாட் சாயலில் இருந்தார். நல்ல உயரம். சாதாரண basic லெவல் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் இன்டர்வியூவை கூட கம்பெனி சேர்மனே நடத்துவது கண்டு ஆச்சரியமாக இருந்தது. குஜராத்திகள் பொதுவாக 'சார்.. சாப்மிஸ்டர்'  என்றெல்லாம் விளிக்காமல்  பெயரின் முன் 'பாய்' (பூபேன்பாய்) சேர்ப்பது வழக்கம். பெண்கள் பெயரின் முன் 'பென்' ( ஜோதிபென்) ....


'
பட்டாபி மற்றும் எனது செக்ரட்டரி (மலையாளி) தவிர இங்கு சவுத் இன்டியன்ஸே கிடையாது.... எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் சவுத் இன்டியன்ஸ்' என பூபேன்பாய் ஆரம்பித்தார்.(இது போதாதா நமக்கு!).. அடுத்து நான் ஏற்கனவே கேள்விப்பட்ட அங்கிருக்கும் சில குஜராத்தி புரோக்கர்கள் (அபய்பாய்.. கம்லேஷ்பாய்.. சைலேஷ்பாய்...) பெயர்களை எடுத்து விட்டேன்       (எக்ஸ்-பாஸ் ஹேமந்த்பாய்க்கு நன்றி).. 'ஓ.. அபய்பாயை உனக்குத்தெரியுமா?' என அவர் கேட்டப்போ  ' என் பழைய பாஸ் ஹேமந்த்பாய்க்கு ஃப்ரெண்டாச்சே' என என் பதில்..(கேட்ட கேள்வி வேற. பதில் வேற.). இதெல்லாம் போதாமல் நானும் 'என் அப்பா கோ ஆபரேடிவ் சப்-ரிஜிஸ்ட்ரார்... கோஆபரேடிவ் வங்கிகளுக்கு ஆடிட்டராக இருக்கிறார்'…. (சொன்னதில் இது மட்டும் தான் உண்மை சார்). அவ்வளவு தான்..கையில் அப்பாயின்டமென்ட் லெட்டரே கொடுத்து விட்டார்கள். 


நான் பார்த்தவரை குஜராத்தி முதலாளிகள் நம் படிப்பு பற்றி கண்டுக்க மாட்டார்கள். நம் நடத்தை மற்றும் நம்மை அவர்களுக்கு பிடித்திருந்தால் போதும்..தம் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்பவர்கள். இன்டர்வியூவின் நடுவே சேர்மனின் மனைவி பாருல்பென்  எட்டிப்பார்த்தார்..கூடவே பக்கத்தில் ஆபிஸ'பாய்…(அவனும் பாய்.. அதாவதுஜிதேஷ்பாய்.. சாரி ஜீதேஸ்பாய். இவர்களுக்கு '' வராது '' தான்.). கையில் தட்டு நிறைய அல்பொன்ஸா மாம்பழத்துண்டுகள்.. என்னையும் எடுத்துக்கச்சொன்னார்கள். 


இப்போது என் கவலை எல்லாம் வேறு. திடீரென்று ஒரு நாள் ஆனந்த் ராவ் பட்டாபியை பார்க்க வந்தால் நான் மாட்டிக்கொள்வேன். மறு நாளே இந்தோருக்கு போன்போட்டு ஆனந்த ராவிடம் ' சார் நான் இங்கே சிஃப்கோங்கற கம்பெனியில சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசரா சேர்ந்துட்டேன். நம்ம பாஸ் பட்டாபின்னு ஒருத்தர். உங்கள நல்லா தெரியுங்கறார்' என்று சொல்லி வைத்தேன். அவர் பட்டாபியை பார்க்க வரும்போது சமாளிக்கலாமென இருந்துவிட்டேன்.


சீனியர் வைஸ் பிரசிடன்ட் பட்டாபிக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். முழுக்க முழுக்க டெல்லியில் வேலை பார்த்தவர். மினிஸ்ட்ரி ஆஃப் காமர்ஸில் இருந்து ரிடையர் ஆனவர். கம்பெனி லா அவருக்கு அத்துப்படி. சிஃப்கோ குழுமத்தின் அட்வைசர். ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ் (ROC), கம்பெனி லா போர்டு (CLB), ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(BSE) சம்மந்தப்பட்ட எல்லா வேலைகளும் அவர் தான் பார்த்துக்கொள்கிறார். அவருக்குக்கீழே அசிஸ்டன்ட் வைஸ் பிரசிடன்ட் ஜோஷி எனும் மராட்டிக்காரன், நான் மற்றும் ஓரிரு ஸ்டாஃப். பிறகு நண்பன் ரங்குவும் என்னுடன் சேர்ந்துகொண்டான்.அத்தனை கம்பெனிகளின் கணக்கு வழக்குகள், வருடாந்திர ROC ரிடர்ன்கள், ஆடிட்கள், மீட்டிங்குகளின் மினிட்ஸ் என பட்டாபியின் ட்ரெய்னிங் படு ஸ்வாரஸ்யமாக போய்க்கொண்டிருந்தது. ஆனந்த ராவ் போன் மட்டும் இன்னும் வந்ததாகத்தெரியவில்லை. 


ROC
அலுவலகத்தில் ஒரே லஞ்ச மயம். பட்டாபிக்கு லஞ்சம் கொடுப்பது பிடிக்காததால் வேலையில் எப்போதும் கறாராக இருந்தார். அங்கே லஞ்சம் வாங்குவது பாதி பெண்கள். டைரக்டர்களை நியமிக்கும்போதும், அவர்கள் ராஜினாமா செய்யும்போதும் கம்பெனிகள் ROC யில் அதுகுறித்து ரிட்டர்ன் ஃபைல் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் அந்த ROC பெண்கள் back- dated ரிட்டர்ன் ஃபைல் செய்யச்சொல்லி பணம் பிடுங்குவதால் நாங்கள் வேலையில் மிக ஜாக்கிரதையாக இருப்போம். நண்பன் ரங்குவின் தூரத்து உறவுக்காரப்பெண் UPSC தேர்வில் பாசாகி 'அஸ்ஸிஸ்டன்ட் ரிஜிஸ்ட்ரார் ஆப் கம்பனீஸ்'ஆக வந்து சேர்ந்திருந்தாள். அதனால் எங்களது வேலை சுலபமாக முடிந்தது. சிறிய முதலீட்டில் நிறைய கம்பெனிகளை form செய்து எங்களில் சிலரையே டைரக்டர்களாக போட்டு live ஆக அவைகளை ஷெல் கம்பெனிகளாக வைத்திருப்பார் பட்டாபி. பிறகு Sandoz , பிராமல் போன்ற பெரிய கம்பெனிகள் ஏதாவது டைவர்சிஃபை செய்யும்போது பட்டாபியிடமிருந்து அந்த கம்பெனிகளை வாங்கி அதில் தங்கள் இயக்குநர்களுக்கு shareகளை மாற்றி புதிய தொழில் துவங்குவார்கள். அவர்களுக்கும் ROC மூலம் புதிய கம்பெனி துவங்க எடுக்கும் நேரம் மிச்சம். பட்டாபியும் நல்ல லாபத்திற்கு கம்பெனிகளை விற்பார். சுவாமி நாராயன் இயக்கத்தைச்சேர்ந்த குங்கும பொட்டு வைத்த கம்பெனி ஆடிட்டர் 'அதுல் பண்டியா'வே பட்டாபியின் திறமையை கண்டு வியந்தவர். ஆனந்தராவ் போன் வந்தபாடில்லை. பட்டாபியும்  என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். இப்போதைக்கு நான் மாட்டிக்கொள்ளும் பயமில்லை. 


சூப்பரான ஆங்கிலப்புலமை பட்டாபிக்கு. கடிதங்கள் எழுதுவது, கம்பெனி லா போர்டு பெட்டிஷன்கள் ட்ராஃப்ட் செய்வது எல்லாம் அவருக்கு ஜுஜூபி.. Gammen India கம்பெனி பங்குகளை சிலர் மார்க்கெட்டிலும் தனியாரிடமும் வாங்கி, கம்பெனியை பின்கட்டில் கைப்பற்ற (backdoor take-over bid) முயன்றபோது தம் ஸ்டாஃப் புடை சூழ கம்பெனி லா போர்டிலையே உட்கார்ந்திருந்து அந்த அக்விசிஷனை வெற்றிகரமாக முறியடித்து gammen சேர்மன் சுப்‌பா ராவின் நன்மதிப்பை பெற்றவர் பட்டாபி.  'நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு மூன்றும் இருந்தால் போதும் அதை வைத்து career இல் முன்னுக்கு வந்துவிடுவேன் என்ற வேட்கை உன் நெஞ்சில் கனல் போல் எறிந்துகொண்டேயிருக்கவேண்டும்'  என பட்டாபி அடிக்கடி சொல்வார்.  


பழைய குமுதம் கார்ட்டூனிஸ்ட் சுதர்சன் கேரக்டர்களின் முகங்கள் உருண்டையாக சுறுங்கியிருப்தை நினைவுபடுத்தும் முகம் பட்டாபிக்கு. தலையில் முடி இல்லை. அந்த வயதிலும் கண்ணாடியில்லாமல் தான் படிக்கிறவர். மூக்கிலிருந்து ஓரிரு முடி வெளியே எட்டிப்பார்க்கும். தமிழை விட ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தான் அதிகம் பேசுவார். ரிட்டயராகி டெல்லியிலிருந்து பம்பாய் வந்தபின் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டாராம். நல்ல உயரம். அந்தக்கால பேண்ட்  நெஞ்சு  வரை.. முழங்கை வரை மடித்துவிடப்பட்ட சட்டை. படு சிறியதான ப்ரௌன் கலர் தோல் பெல்ட்.சீட்டுக்குப்பின்னால் எப்போதும் தொங்கும் பழைய கோட்டு.. அந்தேரியில் இறங்கி ஆட்டோ பிடித்து போனால் ஜோகேஸ்வரி பக்கம் அவர் வீடு. சாதாரண 2 பெட்ரூம் ப்ளாட் தான். அவர் பையன் பத்ரி CA.. எனது நண்பன். சாப்பிட டிபன் டப்‌பாவெல்லாம் கொண்டுவரமாட்டார். ஆபிஸ் காண்டினில் தினமும் பஜியா, ஸ்வீட் கச்சோரி போன்ற சமாசாரங்களை விரும்பி சாப்பிடுவார்.


சோதனையான அந்தநாள் வந்தது. ஒரு நாள் பட்டாபிக்கு எதிரே நான் உட்கார்ந்திருந்தபோது ஆனந்த ராவிடமிருந்து போன். பக்கென்றது எனக்கு.. பட்டாபி போனில்,  ம்..ம்...என மட்டும் சொல்லிக்கோண்டிருந்தார். பிறகு போனை வைத்தார். இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீசிங் கம்பெனியில் ஏதோ வேலையாம் ஆனந்தராவுக்கு. அது சம்மந்தப்பட்ட சில கோப்புகளை தயார் பண்ணச்சொல்லி விட்டு  எதிரே மித்தல் கோர்ட்டிலிருக்கும் அந்த கம்பெனிக்கு ஓடினார். அரை மணியில் திரும்ப வந்து வேறு சில வேலைகள் கொடுத்தார். ஆனந்த ராவ் என்னைப்பற்றி எதுவும் சொன்னதாக தெரியவில்லை. அப்பாடாவென இருந்தது.


மாலை வீட்டிற்கு கிளம்பும் முன் பட்டாபி அந்த குண்டைப்போட்டார். ஆனந்த ராவ் மறுநாள் பாம்பே வருகிறாராம். அய்யய்யோ! நாளை அவரும்  பட்டாபியும் சேர்ந்திருக்கும்போது  பொய்சொல்லி நான் வேலையில் சேர்ந்தது இருவருக்கும் தெரிந்து விடுமேயென பயம் என்னை கவ்வ ஆரம்பித்தது.. இருந்தாலும் 6 மாதம் ஓடிவிட்டதால் வெறும் திட்டுடன் முடிந்துவிடலாம். அல்லது சேர்மன் போன்றவர்களுடன் நல்ல பரிச்சயமிருந்ததால் பட்டாபி ஒன்றும் சொல்ல மாட்டாரோவென தைரியமும் எனக்கிருந்தது. எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாமென விடு வந்து சேர்ந்தேன்.


மறுநாள் காலை வரை அதே ஞாபகம். பட்டாபியும் ஆனந்தராவும்  தூக்கத்தின் நடுவே வந்து மிரட்டிவிட்டுப்போனார்கள். ச்சே...வேலை போனால் தான் என்ன?’ என சமாதானம் செய்துகொண்டு காலை 9.30 க்கு ரீஜென்ட் சேம்பரை அடைந்து ஆபீசுக்குள் நுழைந்தபோது எல்லோரும் அங்கங்கே கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்க பட்டாபி சீட்டில் இல்லை. ..ஜோஷி 'ஓ..வென அழுதவாறு என்னிடம் ஓடி வந்தான். 


அன்று மதியம் காட்கோபர் இடுகாட்டுக்கு நான் போனபோது நல்ல கூட்டம். கூட்டத்தின் நடுவே ஆனந்த ராவ். அடுத்த 3 வருடங்களில் சிஃப்கோ க்ரூப்பில் நான் பதவி உயர்வு பெறுவேனென எனக்கு அப்போது தெரியாது. என்னை காப்பாற்றிய பட்டாபியை மட்டும் கடைசியாக ஒருமுறை பார்க்க நான் கூட்டத்தை கடந்து கொஞ்சம் முன்னே  போய் பார்த்தேன்.
  
'நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு மூன்றும் இருந்தால் போதும் அதை வைத்து career இல் முன்னுக்கு வந்துவிடுவேன் என்ற வேட்கை உன் நெஞ்சில் கனல் போல் எறிந்துகொண்டேயிருக்கவேண்டும்'  என எப்போதும் சொல்லும்  பட்டாபியின் வெற்று மார்பில் சூடம் எரிந்துகொண்டிருந்தது..

Saturday, March 1, 2014

பாம்பே டு இந்தோர்

1986 இல் நான் பம்பாய் வந்த ஓரிரு வருடங்களில் நண்பன் கணபதி வேறு வேலை கிடைத்து இந்தோர் போன கையோடு என்னையும் பாம்பெயிலிருந்து இழுத்துக்கொண்டான். சிறிய அழகான நகரம் மத்திய பிரதேஷின் இந்தோர். பம்பாய் மாதிரி எல்லா மாநிலத்தவர்களும் அங்கு வசிப்பதால் 'மினி பம்பாய்' என்றும் சொல்கிறார்கள்.

கணபதியின் நண்பர் ஆனந்த ராவ் என்பவர் என்னை அங்கு வேலையில் சேர்த்து விட்டவர். கம்பெனி செக்ரட்டரியாக ப்ராக்டீஸ் செய்பவர். அந்த நகரத்தை சுற்றியுள்ள தேவாஸ், ரத்லம் போன்ற இடங்களில் நிறைய தொழிற்சாலைகளுக்கு வங்கிக்கடன் வாங்கி தருவதில் இருந்து நிதி சம்மந்தப்பட்ட ஆலோசனை எல்லாம் அவர் தான். கொட்டோ கொட்டேன்று பணம் கொட்டியது. மனுஷன் எப்பவும் சிடு சிடு தான். சுமார் 60 வயதான அவருக்கு வயதுக்கு மீறிய முதிர்ந்த படு ஒடிசலான தோற்றம். பில் கிளிண்டன் மற்றும் மைக்கேல் ஷூமாக்கர் இருவரையும் கூட்டி ஆவேரெஜ் ஆக்கி அந்த உருவத்தையும் கால் பங்கு சுருக்கி தாவாங்கட்டையை சுத்தியலால் ரெண்டு தட்டு தட்டி கரிய வர்ணம் பூசினால் ஆனந்த் ராவ் ரெடி.

அரை மணிக்கு ஒருதரம் சிகரெட்டை வெளியே எடுத்து அதை செங்குத்தாக நிறுத்தி டப்பாவில் தட்டி இடது உதட்டில் சொருகி பத்த வைத்து ஸ்டைலாக அவர் இழுத்தபோது இரு கன்னங்களும் )( மாதிரி ஓட்டிக்கொண்டன.  அடுத்து ஆனந்த் ராவ் இரும ஆரம்பித்தார். கல்லாப்பெட்டியை திறந்து சில்லறையைத்தேடி மூடும் சப்தத்துடன் அவர் இருமி, அடுத்து அந்த கோழையை முழுங்கியும் தொலைத்தார். பனித்த கண்களை துடைத்துக்கொண்டார். ரன்பீர் கபூர் ஸ்டைலான அடி வயிற்றுக்கும் கீழே இறக்கி பாண்ட் போடுவதை ஆனந்த் ராவ் அப்போதே ஆரம்பித்து விட்டார். ஆனால் இவர் கொஞ்சம் ஓவர். முழங்கால் அரித்தால் பாண்ட் வழியாக சொறிந்துகொள்ளும் அளவுக்கு கீழே இறக்கம். இவ்வளவு ஒல்லியா என வியந்தவண்னம் என் கண்கள் அவரது பின் பக்கம் போனபோது கூடுவாஞ்சேரி பக்கம் விற்கும் இரு காலி மனைகள் நினைவுக்கு வந்தது..

இன்டர்வியூ அவரது வீட்டில் தான். பெரிய சாலமான வீடு. சாப்பிட எதுவெனும் கொடுப்பார்களோ என யோசித்துக்கொண்டிருக்கும்போது அறையில் திடீரென கமகமவென சோப்பு வாசனை. ப்ரெஷாக அழகான பெண் காபி கொண்டு வந்து வைத்தாள். என்னையும் கணபதியையும் ஏறெடுத்துகூட பார்க்கவில்லை. அட... ஆனந்த் ராவ் மூஞ்சிக்கி இவ்வள அழகான பெண்ணா?..’.  எனது ரியாக்‌ஷனை ஆனந்த் ராவ் கவனித்துக்கொண்டு, பேசுவதை உடனே நிறுத்தி, காபி கோப்பையை பார்த்தவுடன் சோப்பு வாசனை உள்ளே போய் விட்டது. என்னை அவருக்கு அறவே பிடிக்கவில்லை போலும்.

 'என்னாயா.. CA வா? கம்பெனி லாவெல்லாம் ஒழுங்கா தெரியுமா' என எகத்தாளமாக கேட்டார். "caveat emptor பத்தி சொல்லு பாக்கலாம்" என கேட்டுவிட்டு நம்மை கூர்ந்து பார்த்தார். "யோவ்.. படிக்கிற காலத்திலேயே இதெல்லாம் நமக்கு மண்டக்குள்ள ஏறாது.. இப்பப்போய் கேக்கறீயே..!" என அவரை சபித்துக்கொண்டே "ஹாங்.. ம்ம்..when the buyer buys something.." என இழுத்தேன். அதற்க்குள் அவர் "wait…wait.. ..no kite-flying ..OK?" .."உனக்கெல்லாம் யாருய்யா வேல குடுப்பா?  இரு.. ஒரு எரநூறு கொறைச்சே கொடுக்கச்சொல்றேன்" என சொல்லி கம்பெனிக்கு அனுப்பினார்.  

நான் வேலையில் சேர்ந்த கம்பெனி நகரை விட்டு சுமார் 30 கி.மீ. தொலைவில் பீதாம்பூர் என்றவூரில்.. ஒரு பிஸ்கட் தயாரிக்கும் கம்பெனியில் அக்கவுன்ட்ஸ் ஆபீசர் வேலை.  கம்பெனியின் MDக்கு 35 வயதுதான் இருக்கும். அவரது அம்மா ம.பி.மாநில தொழில்துறை செயலர். மகனுக்கு எல்லா உதவிகளும் செய்து கம்பெனி ஆரம்பித்து, பொது மக்களின் பங்குகளுடன்  நிறைய பணம் திரட்டி, கொஞ்சம் சுருட்டி... MDக்கு டெக்னிக்கல் ஆலோசனை என்ற பெயரில் சிலர் தரம் குறைவான மெஷின்களை வாங்க வைத்து தத்தம் கமிஷன்களை வாங்கிக்கொண்டு அபேஸ்..

வேலையில் சேர்ந்து முதல் மூன்று மாசம் சம்பளமே கிடைக்கவில்லை.. "எல்லாம் சேர்த்து வைத்து பின்னால் கொடுப்பார்கள் தானே?" என விகல்பமாக கேட்ட என்னை அக்கவுண்டன்ட் பண்டாரி ஏளனமாக பார்த்து "ஊக்கும்.. பின்னால் தான் கொடுப்பார்கள்" என பின்புறத்தை எட்டி உதைக்கிற மாதிரி சைகை செய்தான். சம்பள தினம் வருவதாக தெரியவில்லை. ஒரு நாள் MD எல்லோரையும் கூப்பிட்டார். ஆவலுடன் ஓடினோம். முதலில் ஆபீஸ் பையனிடம் "தும்கோ அபி கித்னா பைசா  ச்சாஹியே?" என கேட்டதும் அந்த படுபாவி.. " ஹமாரா போஜனாலயாமே அஸ்ஸி ருப்பியா ஜமா கரேகா தோ கானா மிலேகா” ….என்ற அவன் முன் அஸ்ஸியை விட்டெறிந்த பின்  MD என்னைப்பார்த்தார். "பாவிகளா! அவனுக்காவது போஜனாலயா பாக்கி... எனக்கு தங்கற ஆலயாவுக்கே 3 மாத வாடகை பாக்கி" என கெஞ்சி அட்வான்ஸ் ஆயிரத்தை அவரிடம் கறந்தேன்.

பாக்டரி செயல்படும் லட்சனம் இன்னும் கேவலம். நாலைந்து வகை பிஸ்கட்டுகள் உற்பத்தி செய்து ம.பிரதேசத்தின் முக்கிய நகரங்களுக்கு அனுப்புகிறார்கள். ப்ரொடக்‌ஷன் மானேஜருக்கு 4 மாத சம்பள பாக்கி. ஆந்திராக்காரன் வேறு. காட்டமாக இருந்தான். கமிஷன் வாங்கிக்கொண்டு நம் தலையில் கட்டப்பட்ட க்ரீம் பிஸ்கட் மெஷின் கிட்டத்தட்ட தையல் மெஷின் சப்தத்துடன் இயங்கியது. முதலில் கீழ் பக்க பிஸ்கட், கன்வேயரில் மெதுவாக நகர்ந்து வந்து நடுவே நிற்க மேலிருந்து 'ப்ளக்'கென கொஞ்சம் க்ரீம் கெட்டி சட்னி மாதிரி அந்தபிஸ்கட்டின் மேல் உட்காரும். அடுத்து இன்னொரு பிஸ்கட் மேலிருந்து வந்து க்ரீம் மேல் வைக்கப்பட்டு வலது பக்கம் நகர்ந்து 10 பிஸ்கட்டுகள் சேர்ந்த பின் பேக் செய்யப்படும். இதெல்லாம் ஒரு நல்ல மெஷினில் நடக்க வேண்டிய சமாசாரங்கள். ஆனால் அங்கு நடப்பது வேறு. நடுவே வந்து நிற்க வேண்டிய பிஸ்கட் தயங்கியவாறு வந்து கொஞ்சம் முன்னாடியே நின்றுவிட, மேலிருந்து கொட்டப்படும் க்ரீம் வாழையிலையில் வைக்கப்படும் தொக்கு மாதிரி பச்சக்கென்று கன்வேயரில் வந்து உட்காரும். உடனே மேல் பிஸ்கட் அதன்மேல் உட்கார,சற்று தள்ளி தனியாக யோசனை செய்துகொண்டிருந்த பிஸ்கட் திடீரென நடுவே வர, அந்த கலவையின் மேல் மறுபடியும் க்ரீம் விழ, அடுத்த சில நிமிடங்களில் அந்த இடமே ஏதோ குழந்தை கக்கா போன மாதிரி இருக்கும். உருப்படுமா அந்த கம்பெனி?

பிஸ்கட் தயாரிக்க தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் கோதுமை மாவு, சர்க்கரை மற்றும் விஜிடபிள்  கீ(ghee). இது மூன்றும் கொள்முதல் செய்து 6 மாத பாக்கி வைத்ததால் சப்ளையர்கள் தினமும் வந்து என்னை சரமாரியாக திட்டுவார்கள். ஒருவருடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. திரும்பவும் பாம்பே போக தீர்மானித்தேன். 



இதற்குள் கணபதியும் பாம்பே போய் விட்டான். அங்கே CIFCO க்ரூப் என்ற பெரிய கம்பெனியில் சீனியர் வைஸ் ப்ரெஸிடென்ட் பட்டாபி என்பவர் இருக்கிறாராம். அவர் நாம் ஆனந்த் ராவின் நண்பர் என உபரி தகவலையும் கணபதி கொடுக்க, அந்த கம்பெனியில் சேர ப்ளான் செய்தேன். ஆனந்த் ராவுக்கு நம்மை கண்டாலே பிடிக்காதே!. அவருக்கு தெரியாமல் அவர் பேரையே சொல்லி CIFCO பட்டாபியிடம் சேர்ந்தது தனி கதை.. அது அப்புறம்..