Sunday, June 12, 2016

அல்லூர் அ க்ரஹாரம்

திருச்சி ஜீயபுரம் பகுதியில் இருந்து எனது பள்ளிப்பருவ சக மாணவர்கள் தினமும் பஸ்ஸில் வருவார்கள். திருச்சியின் சிறப்பு என்னவென்றால் நகரை விட்டு (சத்திரம் பஸ் ஸ்டாண்டை விட்டு) 2,3 கிலோ மீட்டரை தாண்டியதும் முழுக்க கிராமிய மணம் தான்.
ஜீயபுரம், முத்தரசனல்லூர், அல்லூர், கம்பரசம்பேட்டை, வாளாடி, லால்குடி, பேட்டவாய்தலை (அம்மன் கோவில்), குணசீலம்(ஆஞ்சநேயர் கோவில்), சமயபுரம், மன்னச்சநல்லூர், திருப்பளாய்த்துரை....
சின்ன வயதில் எனது அம்மா ..'குறும்பு செஞ்சே.. ஒன்ன திருப்பளாய்த்துரை ஹாஸ்டல்ல விட்டுடுவோம்.. அங்க உனக்கு மொட்ட அடிப்பாங்க.. கக்கூஸ நீ தான் கழுவனும்.. காலைல நாலு மணிக்கு எழுப்புவாங்க' போன்ற மிரட்டல்கள் நினைவுக்கு வந்தது...
நிறைய கிராமங்கள். பச்சை பசேலென வயல்கள், ஒருபுறம் நம் கூடவே பயணிக்கும் காவிரி அல்லது கொள்ளிடம்..பஸ்ஸிலிருந்து திரும்பி பார்த்தால் எப்போதும் தெரியும் மலைக்கோட்டை, மறுபுறம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்..
பஸ்ஸில் பயணிக்கும்போது ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நாம் பார்க்கும் இளநீர், நுங்கு விற்பவர்கள், ரோட்டை ஒட்டிய சிறிய குடிசை வீடுகள், வீட்டு வாசலில் கயிற்று கட்டிலில் பெருசுகள், பக்கத்தில் கட்டப்பட்ட சிறிய ஆடுகள்,பாய்லரில் டீ மற்றும் போண்டா, வடையோடு கூடிய டீ கடைகள், அருகே பரோட்டா ஸ்டால், நடுநடுவே wine ஷாப்புகள், பூக்கடை, திடீரென்று ஒரு பிள்ளையார் கோவில், அதை அடுத்து 'குமரிக்கோட்டம் -MGR படத்துடன் சினிமா கொட்டகை, ராஜா பல் மருத்துவமனை, லக்ஷ்மி மருந்தகம்.... அடடா கிராமத்து அழகே தனி..ஒரு மணி நேர பயணத்தை மிகவும் ரசித்தேன்.
ஒரு வழியாக நாம் போக வேண்டிய அல்லூர் வந்து சேர்ந்ததும் மெயின் ரோட்டில் இருந்து 50 மீட்டர் தாண்டினால் அக்ரஹாரம். கோடியில் பெருமாள் கோவில். கோவிலுக்கு இரு புறமும் வீடுகள்.
திருச்சி ICWA சாப்ட்டரில் கூட படித்த நண்பன் வீடு அதில் ஒன்று. கீழே வீடு..மாடியில் ஒரு ரூம். போனவுடன் ஒரு தம்ளரில் மோரு கொடுத்தார்கள். ஜில்லென்று தொண்டைக்கு இதமாக இருந்தது. நண்பனின் அம்மா, அப்பா மற்றும் பாட்டி எல்லோரும் அன்புடன் வரவேற்க ' ஸ்ரீதர் இப்போ பாம்பேல வேல ' என்று சம்பிரதாயங்களுக்கு பின் நாங்கள் மாடியில் பேசிக்கொண்டிருந்தோம்.
மாலை..கீழே இருந்து 'அண்ணா காபி ரெடி!' என்ற தங்கையின் குரல் கேட்டு நண்பன் கொண்டுவந்த காபி அருமை. 'இந்த தடவையும் 2nd க்ரூப் போய்டுத்து.. பயோ டேட்டா தர்றேன்.. பாம்பேல எனக்கும் கொஞ்சம் டிரை பண்ணுடா..அப்பா பென்ஷன் பத்தாது, தங்கை வேற இருக்கா.' நண்பனின் தொண்டை லேசாக கரகரத்தது.
நிறைய பேசிக்கொண்டிருந்த எங்களுக்குள் திடீரென கொஞ்சம் நேரம் மௌனம் ..
மாலை விடை பெற்று கிளம்பும்போது நண்பனின் அம்மா, தங்கையின் முகங்களில் ஒரு ஏக்கம்..கெஞ்சல்.. எதிர்பார்ப்பு... மெயின் ரோடு வரை நண்பன் கூட வந்து, பிறகு பஸ் வந்ததும் விடை பெற்றுக்கொண்டோம்.
படிக்கும்போது இருந்த அந்த குறும்பான பேச்சு, சிரிப்பு , கிண்டல் எல்லாவற்றையும் அவன் தொலைத்திருந்தான்.
பஸ்ஸில் திருச்சி திரும்பும்போது நான் அந்த கிராமத்து ரோட்டோர கடைகளை மறுபடியும் ரசிக்கவில்லை.....

Thursday, June 2, 2016

வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே!

சென்னை வந்திறங்கி ஓரிரு நாள் கழித்து பெங்களூர் சென்ற ஒரே வாரத்தில் பையனுக்கு முழங்காலில் மறுபடியும் காயம் என அவசரமாக போன் வந்து, பஸ் பிடித்து, மறுபடியும் சென்னை திநகர் தனிகாசலம் ரோடு மத்ஸ்யா ஹோட்டல் சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் பெட்டியை போட்டுவிட்டு, மகாலிங்கபுரம் டாக்டர், மெடிப்ளஸ் மருந்துக்கடை என அலைந்து, ரகுவரன் மாதிரி முழங்கைகளில் இரண்டு கவட்டைக்குச்சிகளுடன் பையன் ஹாஸ்டலுக்கு திரும்ப, சாவகாசமாக பாண்டிபஜார் பாலாஜி பவனில் உட்கார்ந்து ஆப்பம் தே.பால் சாப்பிடும்போது..ஸ்ஸப்பாடா! மூச்சு விட ஆரம்பித்தோம்.
மறுநாள் காலை 'சார் மணி எட்டாச்சு.. நீங்க செக்கவுட் பண்ணனுமே' என போனில் விளித்த பெண்ணிடம் கெஞ்சி அடுத்த ஒரு மணி நேரத்தில் அறையை காலி செய்து இன்டிகாவில் பெட்டியை அடைத்துவிட்டு மத்ஸ்யாவில் நுழைந்து காலை புஃபே சிற்றுண்டிக்கு மஞ்சள் கலர் அர்ச்சனைச்சீட்டைக்காட்ட...
அரிசி (134) பாசிப்பருப்பு (89) மிளகு(8) சீரகம்(1).. கிட்டத்தட்ட தமிழக தேர்தல் முடிவுகளின் அதே விகிதாச்சாரத்தில் அநியாயத்துக்கு நெய் சொட்டச்சொட்ட நெய்ப்பொங்கல்... பச்சை பட்டானி ஆங்காங்கே உடன்பிறப்புகள் மாதிரி தலைதூக்க அரைகுறையாக வெட்டப்பட்ட பெரிய வெங்காயத்துடன் எண்ணெயில் மிதக்கும் ரவ உப்புமா , நேரடி சமையல் தோசா (live cooking) , க்ரிஸ்ப்பியான உளுந்து வடை, ஸ்டீமரில் வைக்கப்பட்ட தலையனை சைஸ் உடுப்பி இட்லி (இடுக்கியை அகலப்படுத்தி இட்லியில் மாட்டி எடுக்க வேண்டியிருந்தது), தேங்கா மற்றும் தக்காளி சட்னி, பூரி கிழங்கு, அந்தப்பக்கம் பெரிய பேஸினில் டால்டாவில் மிதக்கும் அன்னாசி பழ கேசரி, டோஸ்டரில் ப்ரெட் மற்றும் ஜாம் (ஒருத்தர் தொடனுமே!) எலுமிச்சம்பழச்சாறு, மேலன்னத்தில் ஒட்டும் காபி, தண்ணீர் கலக்காத பாலில் தேநீர்..
இதென்னடா! வயிறா.. வண்ணாந்தாழியா? என அடிக்கடி சொல்லும் Ganapathi Subramanian ஞாபகத்திற்கு வந்தான். வயிறார சாப்பிட்டும் கண்களில் இன்னும் பசி. 'இன்னும் கொஞ்சம் கேசரி போட்டுக்கொண்டிருக்கலாமோ' என எண்ண வைக்கும்படியாக ஒரு தெலுங்கு பெண்மணியின் தட்டு நிறைய கேசரி..நடந்து போய் உட்கார்வதற்கு முன்பே ஸ்பூனால் கேசரியை கெந்தி லபக்கென உள்ளே தள்ளினார்.. ச்சே அவசரமா இட்லியை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொண்டோமே!
அடுத்த நான்கு மணி நேரத்துக்கு டாக்சி கையிலிருந்ததால் மாம்பலம், தி நகர் பகுதிகளில் ஃபான்ஸி ஷாப்பிங், லினன் சட்டை (சுறுங்காது சார்! நெப்போலியனே இங்க தான் வாங்குவாரு!), ஃபோரம் மாலில் குர்த்தி, காதிம்ஸ் செறுப்பு, கல்மனேயில் காபி குடித்து, எக்மோர் வாசல் அடையார் ஆனந்த பவனில் மதிய சாப்பாட்டு பொட்டலம் வாங்கிக்கொண்டு பல்லவனில் ஏறி உட்கார்ந்தோம். ரயில் மெல்ல நகர ஆரம்பித்தது.
'அந்நியர் தரும் திண்பண்டங்களையோ குளிர் பாணங்களையோ உட்கொள்ளாதீர். அவற்றில் மயக்க மருந்து கலந்திருக்கலாம்' ...ரயிலிலிருந்த அந்த வாசகத்தை சத்யாவின் கணவர் பிரகாஷ் பார்த்திருந்தால் அதை 'அண்ணியார்' என திருத்தியிருப்பார்.
கடைசி நேர தத்கால் வெயிட்டிங் லிஸ்ட் கன்ஃபர்ம் ஆகி ரயில் முழுக்க நல்ல கூட்டம்.மேல்மருவத்தூர் தாண்டுவதற்குள் 'காபே! காப்பே! சூடா தக்காளி சூப்பே!'... கவிதை நடையில் கூவினான் காண்டீன்காரன்.
'எக்ஸ்க்யூஸ் மி! நீங்க 68 க்கு போய்க்கிட்டீங்கன்னா நானும் இவரும் (கணவர்) சேர்ந்து உட்காருவோம்.' என்ற பெண்ணிடம் நான் 'ரொம்ப சாரிங்க! அப்ப நானும் இவங்களும் (மனைவிUsharani Sridhar ) சேர்ந்து உக்கார முடியாதே!' என்றதும் வழிந்தார் பாவம். கணவர் அந்தப்பக்கம் தலைக்கு மேலே போனை சார்ஜ் செய்ய போராடிக்கொண்டிருந்தார். போன் சார்ஜ் ஆகாததால் ப்ளக்கையும் வொயரையும் இழுத்து இழுத்து குத்திக்கொண்டிருந்தார்.
'ஏ..காளிப்பளவர் பக்கோடா.. சூடா காளிப்பளவர் பக்கோடா..' பலகாத தூரத்தில் இருந்தாலும் இரத்தச்சிகப்பு நிறத்தில் பக்கோடா கண்ணை பறித்தது. கமகம வாசனை.
நாங்கள் இருந்த ஏ.சி. பகுதியின் தடுப்புக்கதவு அருகே நின்றுகொண்டு சத்தமாக பேசிக்கொண்டிருந்த இரண்டு ஆண்களின் சம்பாஷனையை இந்த லோகமே கேட்டுக்கொண்டிருந்தது...
"தெரியுமே! கருத்த ஆளு தானே! அவம்புள்ளக்கி தானே பொண்ணு கொடுத்துச்சு! அவன் ரிடையர் ஆயிட்டானா? டாஸ்மாக்ல தானே அவம்புள்ளக்கி வேல?.. வேலையெங்க செஞ்சான்! பாதி நேரம் குடி தான்.. வளர்ப்பு சரியில்லீங்க.. அவங்க ஆயி போயி பத்து வருஷமாகுது.."(அதாவது ஆயின்னா அம்மா!😃)
ஒரு வழியாக 68க்கு வேறு யாரையோ விரட்டிவிட்டு கணவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு போனில் யாரையோ பேசவிடாமல் விஜயதாரினி மாதிரி கத்திக்கொண்டிருந்தார். கணவர்? இன்னும் சார்ஜ், ப்ளக், வொயர்.. முடிந்தபாடில்லை.
தாம்பரம், செங்கல்பட்டு தாண்டி விழுப்புரம் தாண்டுவதற்குள் 'ஏ.. சுக்கு காபே..ஏ.. மிளகா பஜ்ஜே.. ஏ.. ப்ரட் ஆம்லெட்டே..ஏ.. கூல் ட்ரிங்ஸே'..என விற்றுத்தள்ளிவிட்டார்கள்.. எழுந்து நின்று, ஏ.. கொலஸ்ட்ராலே.. ஏ.. ட்ரைக்ளிசரைடே.. ஏ.. டயாபடீசே.. என கத்தவேண்டும்போலிருந்தது.
சின்ன குழந்தை ஒன்று அடிக்கடி சினுங்க, பக்கத்திலிருந்தவர் குழந்தையை தூக்க கை நீட்டினார். குழந்தையின் அம்மா: மாமா கூப்புற்ராங்க போடா கண்ணு!... புடிக்கலயா அவர.. அதுக்கு ஏன் அளுவுற...ச்சேரிடா குட்டி..(மாமா என்ற வாலிபர் முகத்தை அந்த பக்கம் திருப்பிக் கொண்டார். தேவையா அவருக்கு!)
'ஹலோ.. யாரு புகலா?' (புகழேந்தியா இருக்கும்).. ஒரு வழியாக அந்த கணவருக்கு சார்ஜ் கிடைத்துவிட, விஜயதாரினி மேல் நன்றாக சாய்ந்து கொண்டு சத்தமாக பேச ஆரம்பித்துவிட்டார்...
"புகல்! எங்க வேகன்ஸி இருக்கோ அங்க தான் போடுவாங்க.. (வேறெங்க போட முடியும்!) சீனியர் டிவிஷனல் கோஆர்டினேட்டர்.. ஆமா.... கேக்குதா? குறிச்சுக்கோ..கோஆர்டினேட்டர்..'கோ' பக்கத்துல டேஷ் போடு..போட்டியா? என்னது பேனாவை கீழ போட்டியா!.. சரி சரி.. இங்கயும் சார்ஜ் இல்ல" (உங்களுக்கு நேரமும் சரியில்ல!)
ரயில் சீராக ஓடிக்கொண்டிருக்க, சுவர்களில் ஏராளமான விளம்பர வாசகங்கள்..நடுவே பளிச்சென 'மதுரை அம்மா மெஸ்' போர்டு... 'அனைத்து உணவு வகைகளும் எங்கள் தரமான தயாரிப்பில்..இடிச்ச நாட்டுக்கோழி ரோஸ்ட் (இடிச்சது அவ்வள பெரிய குத்தமாடா!)
நடுவே கழிப்பறை போகவேண்டியிருந்தது. படுசுத்தமாக இருந்தாலும் தண்ணீருக்காக அந்த இரும்புப்பிடியை அழுத்த போதிய பலம் இல்லை. வழக்கம்போல உள்ளே 'தடாம்..புடாம்' என தண்டவாள சத்தம்..இனம்புரியா பயம் வேறு. வெளியே வாஷ்பேசினில் இன்னும் அந்தக்கால கூர்மையான குழாய். தண்ணீர் வர கீழே இருந்து மேல்பக்கம் அழுத்தினால் கடகடகடவென பைப் அதிர நமது சப்தநாடிகளும் அதிர்ந்து, பீச்சியடித்த தண்ணீர் சட்டை பேண்ட்டெல்லாம்.
ஶ்ரீரங்கம் நெருங்க நெருங்க மக்களுக்கு இருப்பு கொள்ளவில்லை.. படபடவென பெட்டிகள் எடுக்கும் சத்தம்.
'ட்ராலிய மேலர்ந்து எடு.. பாத்து வீலு மாட்டிகிட்ருக்கு பாரு'
'ஹலோ..ஹலோ. சிக்னல் சரியா இல்ல.. நா பல்லவன்ல வர்றேம்ப்பா..நீ பல்லேரோவ கொணாந்திரு'
'கருணாநிதிங்ளா! ஸ்டேட்ஸ் போய்ட்டு எப்ப வந்தீங்க? எய்ட்த்தா? ச்சேரி...அதான் சும்மா போனடிச்சேன்..'
'நீ பாத்து எறங்கு.. நா ஜாமான பாத்துக்கறேன்' (ஶ்ரீரங்கம் ஸ்டேஷன்)
அடுத்த நாலைந்து நாட்கள் திருச்சி, காரைக்குடி, விராலிமலை என அலைச்சல்..திருச்சியில் எங்கு பார்த்தாலும் ஜனத்திறள். அக்னி நட்சத்திரம்.. சுட்டெறிக்கும் வெய்யிலிலும் மக்கள் பஸ்ஸிலும், ரயிலிலும் பயணம் செய்கிறார்கள். பஜ்ஜி, வடை, அப்பமுடன் டீக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம்,
ரோடெங்கிலும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், இளநீர் வெட்டுபவனைச்சுற்றி நாலு பேர் (சார்! கஞ்சியா?), ஐஸ்கட்டியை ரப்பர் டியூப்பில் போட்டு கதற கதற நடுரோட்டில் அடித்து விற்கும் நன்னாரி சர்பத் வாங்க கூட்டம், தேன்மொழி இரத்த பரிசோதனை நிலையத்தின் பெஞ்சில் ஆறேழு பேர்,
புடவைக்கு மேல் நீலக்கலர் சட்டையணிந்து கண்டக்டர் மாதிரி தோல்ப்பையுடன் 'பெட்ரோலா.. டீசலா.. ஐந்நூறுக்கே போட்றவா' என கேட்கும் பெட்ரோல் பங்க் பெண்கள், 'மூன்னாளைக்கி நைட்ல இந்த மாத்தரைய போட்டுக்கோங்க.. வலி நல்லா கேக்கும்' (நீ மொத டாக்டர கேட்டியா!) என இலவச ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுக்கும் மருந்து கடைக்காரர், 'பாஸ்புக்ல என்ட்ரி இப்ப போடமுடியாதுங்க..சிஸ்டம் டௌன்' என்பவரைச்சுற்றி எட்டு பேர் பாங்க்கில், அவருக்கு பக்கத்தில் 'பணம் எடுக்கவா.. போடவா?' எனக்கேட்டு ஸ்லிப் கொடுக்கும் துப்பாக்கியேந்திய செக்யூரிட்டி, 'சார் வழில நிக்காதீங்க பெரிய டாக்டர் வற்ர நேரம்' என்றதும் அசுபத்திரி காரிடாரிலிருந்து கலைந்து ஓடும் ஐந்தாறு பேர், 'எய்ட்டி டொன்ட்டி இல்லீங்க.. சிக்கிரி இல்லாத ப்யூர் நரசுஸ் காபி தான் இருக்கு' என சொல்லும் மளிகைக்கடைக்காரர் முன் பத்து பேர்..எங்கு பார்த்தாலும் கூட்டம்..
சிறிலங்கன் ஏயரில் கொழும்பு வழியாக பஹ்ரைன் வந்திறங்கி, காலியாக இருந்த இம்மிக்ரேஷனில் மெல்லிய புன்முறுவலுடன் ஸ்டாம்ப் அடித்த பஹ்ரைனி அன்பருக்கு 'ஷுக்ரன்' சொல்லி, அடுத்த பத்தே நிமிடங்களில் ட்ராலி நிறைய பெட்டியுடன் வெளியே வரும்போது இந்த அழகிய பஹ்ரைன் நகரம் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடியிருந்தது. ஹார்ன் சத்தமேயில்லாத சாலைகளில் இலக்கில்லாமல் ஓடும் கார்கள்.
ச்சே! சரட்டென குறுக்கே வரும் பல்சர்கள் எங்கே! பக்கவாட்டிலிருந்து முந்தும் ஆட்டோக்களும், கும்பகோணம் அரசுப்பேருந்துகளின் பாம்.. பாம் ஹார்ன் ஒலிகளும் எங்கே! இளநீர்.. காபி க்ளப் டிபன் சென்டர்கள்.. பூக்கடைகள்.. கோவில்கள்.. பழமுதிர்ச்சோலை..ஃபாஸ்ட் ட்ராக் மற்றும் ஓலாக்கள் ஒன்றையும் காணோம்! எனக்கு இப்பவே இடியாப்பம் தேங்காய்ப்பால் வேணும்..
சாவியை செக்யூரிட்டியிடமிருந்து வாங்கி பூட்டிய வீட்டை திறந்து, மணிப்ளாண்ட்டுக்கு தண்ணீர் ஊற்றி, சோஃபா டிவியின் மேல் போர்த்தியிருந்த பெட்சீட்டுகளை உருவி, குக்கிங் ரேஞ்ச் காஸ் ஸிலின்டரை திறந்து, சீடை தட்டை முறுக்கு மற்றும் திருச்சி ஏர்போர்ட்டில் வாங்கிய இருட்டுக்கடை அல்வாவை டப்பாவில் அடைத்து, பாஸ்போர்ட், இந்திய கரன்சி, ஏடியெம் கார்டுகள் மற்றும் இந்திய வாகன ஓட்டுநர் உரிமத்தை பீரோவுக்குள் பத்திரமாக வைத்து... வெறும் தயிர்சாதம் மற்றும் தொட்டுக்க தட்டை முறுக்குடன் டீவி-அர்னாப் கோஸ்வாமி முன் உட்காரும்போது.. 'ச்சே! எவ்வளவு சுகங்களை இழந்துவிட்டு இங்கே உட்கார்ந்திருக்கிறோம்! மறுபடியும் இந்தியாவுக்கே போய்விடலாமா' எனத்தோன்றும்.
அதுசரி..போனமுறை ஊருக்கு போய் வந்தபோதும் இப்படித்தான் தோன்றியது. போனமுறை மட்டுமா.. ஒவ்வொரு விடுமுறைக்குப்பிறகும் இதே கதை தான்.
எல்லாம் ஒரே நாள் தான் சார், மறுநாள் ஏடியெம்மில் எடுத்த தினார்கள் பர்ஸுக்குள் போகும் வரை...
என்னைப்போல நிறைய 'பதிபக்தி' பாண்டியன்கள் 'வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே' பாட காத்திருக்கிறார்கள் இங்கு.. ஆச்சு 22 வருடங்கள்..

ஆண்டவனின் தோட்டத்திலே...


ஆண்டவனின் தோட்டத்திலே...
வருடம் 1996..ஒருநாள் இரவு பத்து மணிக்கு மேல் நகருக்கு வெளியே நிறைய பாகிஸ்தானி கராஜ்கள் இருக்கும் புதய்யா பகுதிக்கு நண்பனுடன் போயிருந்தேன். காத்திருந்த பலூச்சி ஒருவன் ஷட்டரை சர்ர்ரென்று உயர்த்த, கராஜ் உள்ளே நீலவானக்கலரில் அழகிய 1979 மாடல் டாட்ஸன் 120Y சலூன் கார்..
பஹ்ரைன் வந்து ஓட்டுநர் உரிமம் எடுத்தவுடன் பழைய கார் ஓன்று வாங்க ஆசை. டயோட்டா கரோனா, க்ரௌன், கரோல்லா, நிஸான் சன்னி, நிஸான் அல்டிமா, லிங்க்கன், ஷெவர்லே மாலிபு, ஜீப் ஷெரோகி என விதவிதமான கார்கள் இங்கு புழக்கம். எல்லாமே கொள்ளை விலை. அவைகளின் புராதன மாடல்களே ஆயிரம் இரண்டாயிரம் தினார்களாவது ஆகும். அதற்கும் குறைவான விலைக்கு டாட்ஸன் 120Y, 140J (பின்னால் நிஸான் ஆனது), பான்ட்டியாக், ஹையுன்டாய் ஆஸ்ஸென்ட், எலான்ட்ரா மாடல்கள் கிடைக்கும். அரதப்பழசாகவும், நிறைய சொட்டைகளுடன் இருக்கும் மனமகிழ் (!) ஊர்திகள் அவை. செம்ம க்ராஸ் இஞ்சின். பாகிஸ்தானிகளும் பிலிப்பினோக்களும் மலையாளி கள்ள டாக்சி ஓட்டுநர்களும் அதிகம் பாவிக்கும் வண்டிகள் அவை. வளைகுடாவில் முதன் முதலில் ஒரு சாதாரண டெபுடி சீஃப் அக்கவுன்டன்ட் ஆக வேலையில் சேர்ந்த எனக்கு அந்த வண்டி எதேஷ்டம்.
நான் வாங்கப்போகும் டாட்ஸன் 120Yக்கு வருவோம். 'தேக்கோ' என அந்த பலூச்சி கார் கதவை திறக்க, டாஷ்போர்டு முழுக்க விரிசல்கள்... மேலே கார்ப்பெட் ஒட்டி விரிசலை மறைத்திருந்தான். தீவின் வெயில் அப்படி. ஏசி வென்ட்கள் உடைந்து அங்கங்கே ஓட்டைகள். ரேடியோ ஓரளவு வேலை செய்தாலும் கிர்ற்ர்.. என மாவு மில் சத்தம்..நடுவே பாடல்கள். ஸ்டெப்னி இல்லையாம். கைப்பிடி இல்லாத டிக்கியின் ஓட்டைக்குள் விரலை விட்டு திறந்து காட்டினான் பலூச்சி. ஆடோமாடிக் கியர் இல்லை. மானுவல் தானாம். முன்பக்க பானைட்டை திறக்க ஒரே கெரோசின் வாடை. பாட்டரி பழசாகி பேரிச்சம்பழத்தை தொடுவது போல பிசுபுசுப்பு. 'காடி அச்சா ஹெ.. தும் பிந்தாஸ் சலாவ்.. ஸச்சீ!'.. பலூச்சி சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டான். வண்டியை வாங்கிவிடுவதென முடிவு செய்யும்போது என்னையறியாமல் உதட்டில் புன்னகை.
'பெப்ஸி பீயேகா?' என அன்புடன் விசாரித்த பலூச்சி
விலை 400 தினார் என்றான். என்னுடைய பட்ஜெட் அவ்வளவு கிடையாது. பேரம் பேசி 375 தினாருக்கு முடித்தேன். அப்போதைய மதிப்பு 30,000 இந்திய ரூபாய். கையில் 300 தினார் மட்டும் இருந்ததால் அதை அட்வான்ஸாக கொடுத்து அங்கிருந்து கிளம்பினோம். பலூச்சியும் எங்கள் பின்னால் அந்த டாட்ஸன் வண்டியில் தொடர்ந்தான். இரவு பதினோறு மணிவாக்கில் ஹூரா பகுதியில் நான் தங்கியிருந்த கட்டிடம் வந்து மீதி 75 தினாரை பெற்றுக்கொண்டபின் வண்டி பேப்பர்கள் என்னிடம் சமர்ப்பித்து விட்டு கிளம்பிப்போனான்.
ஆக, முதல் முறையாக 35 வயதில் சொந்த கார் வாங்கிவிட்டோம் என்ற பெருமிதம் எனக்கு. இரவு மணி பனிரெண்டை தாண்டினாலும் மனைவியை( Usharani Sridhar)) முன்னிறுக்கையில் அமர்த்தி வண்டியை ஸ்டார்ட் செய்தேன். 'ஏசியை போடுங்க' என அவசரமாக உஷா கேட்க 'ஏசி இல்லையாம்' என்றேன். அடுத்து 'ரேடியோ?' என அவள் கேட்க ' அதுவும் கிடையாதாம்'. 'சுத்தம்' என முனுமுனுத்தாள். 'இந்த வெலைக்கு கார் இப்பிடித்தான் இருக்கும்மா!. அல்பா ஸ்க்ராப் யார்டுல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் வாங்கிக்கிறலாம்'.
அதென்ன அல்பா ஸ்க்ராப் யார்டு? நகரை விட்டு சுமார் 15, 20 கி.மீ தள்ளியிருக்கும் புகழ் பெற்ற Aluminium Bahrain (ALBA) கம்பைனி அருகே மிகப்பெரிய, பழைய கார்கள் மற்றும் உதிரி பாகங்கள் கிடைக்கும் பிரம்மாண்டமான ஸ்க்ராப் யார்டு மிகவும் பிரசித்தம். நகரில் சாலை விபத்து நடந்து முடிந்து சில தினங்களில் வண்டிகளும் அதன் உதிரி பாகங்களும் அங்கே விலைக்கு வந்துவிடும். வசதி குறைவானவர்களும், சில உதிரி பாகங்கள் கிடைக்காத மெக்கானிக்குகளும் கட்டுசாத மூட்டையுடன் அங்கே பயனிப்பார்கள். அந்த வண்டிகளில் இருந்து எல்லா உதிரி பாகங்களையும் கழற்றி, குறைந்த விலைக்கு விற்றுவிட்டு எஞ்சிய கார்களை நசுக்கி ஸ்க்ராப் ஆக்கி சீனாவிற்கு ஏற்றுமதி செய்துவிடுவார்கள்.
ஒரு வெள்ளியன்று பாலக்காடு சுந்தரம் மாமா (மாமாஜி) மற்றும் கணபதியுடன் ( Ganapathi Subramanian) என் டாட்ஸன் வண்டியில் அங்கே போனோம். 'மிட்சுபிஷி'யில் ஸ்பேர் பார்ட்ஸ் சூப்பர்வைசரான மாமாஜி கணபதிக்கு மாமா முறை. தஞ்சாவூர் கணபதி அக்ரஹாரத்தை பூர்வீகமாகக்கொண்ட கணபதி எப்படி பாலக்காடு சாத்தபுரம் மாமாவுக்கு உறவுமுறை என்ற விளக்கம் இப்பதிவுக்கு அவசியமற்றது. மாமாஜியுடன் உட்கார்ந்தால் செம்ம அரட்டை தான். புள்ளி ஷெரிக்க லூட்டியானு. டாட்ஜ், க்ரைஸ்லர், ப்யூக் போன்ற உலகத்தரம் வாய்ந்த கார்களின் லக்னம், இருப்பு தசை மாமாஜிக்கு அத்துப்படி. ஜிதாஹ்வ்ஸ் பகுதியில் லேபர் காம்ப்பில் தனியறையில் தங்கி, தானே பொங்கி சாப்பிடும் மாமாஜிக்கு (60) காலை 4 மணிக்கெழுந்து குளித்துவிட்டு ஒரு மணி நேரம் பூஜை மற்றும் நாராயணீயம் அக்ஷரசுத்தத்துடன் சொல்லிவிட்டு விபூதி பட்டையுடன் 6 மணிக்கு வீட்டு வாசலில் கம்பெனி பஸ்ஸில் ஏறுவார்.
சரியான வெய்யில். பாலைவனத்தின் நடுவே எண்ணெய்க்கிணறுகள் மத்தியில் உள்ள அந்த ஸ்க்ராப் யார்டு கேட்டை மலையாளி ஒருவன் திறந்தான். 'ஏது மாடலானு?' என அவன் கேட்க, மாமாஜி.. '1979.. டாட்சன்.. ச்சிறிய பார்ட்ஸ் உண்டெங்கில்' என இழுக்க, அவன் ' ஓ! டோட்ஸன்! என்றபடி சிகரெட்டை தூர எறிந்து, காரி எச்சிலையும் துப்பிவிட்டு, ஸ்பானர் ஒன்றை எடுத்துக்கொண்டு 'ஆவ்' (ஹிந்தி) என முன்னே விரைந்தான். 'காடி உதர் ஹெ.. பசந்து ப்ரோ' என கை காட்டினான்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் மாடல்வாரியாக நிறுத்தப்பட்டிருந்தன. பழைய பென்ஸ், லெக்ஸஸ் கார்களைத்தாண்டி ஏதோ ஒரு கோடியில் ஆக்ஸிடென்ட் ஆகி உருக்குலைந்த பழைய டாட்ஸன் ஒன்றின் முன் நின்றோம். சற்றுநேரம் முன்னர்தான் ரௌடிகளால் மானபங்கப்படுத்தப்பட்ட 'அரங்கேற்றம் பிரமிளா' மாதிரி நின்றுகொண்டிருந்தது அந்த வண்டி. பாதி பாடியை காணோம் (வண்டிக்கு!). மலையாளியும் வண்டியை ப்ரதட்சனமாக சுற்றி வந்து 'பசந்து கரோ' என கேட்க, 'யார்ரா இவன்! பொழுதன்னைக்கும் பசந்து கரோ.. பசந்து கரோ..ன்னுகிட்டு' என மாமாஜி முனுமுனுத்தார்.
'டிக்கி லாக்' வேணும் என நான் சொன்ன மறு நிமிடம் சுத்தியால் லொடக்கென பிரமிளாவின் இடுப்பில் ஒரு போடு போட்டு டிக்கி லாக்கை உடைத்து கழற்றி, 'கழிஞ்ஞு..பின்னே.. பர?' என அவன் என்னைப்பார்க்க, நான் சுயம்வரத்தை தொடர்ந்தேன். சில பேரிங்குகள், சிறிய காய்ல், ஹார்ன், எக்ஸ்ட்ரா வைப்பர்கள் என எல்லா உதிரி பாகங்களையும் அவன்ஒரு ஷாப்பிங் பேக்கில் போட்டுக்கொடுக்க, சம்பாவனை மாதிரி பெற்றுக்கொண்டேன். எல்லாம் ஒரொரு தினார் தான் (அப்போ சுமார் 70 ரூபாய்).
அடுத்து என் புதுவண்டி டாஷ்போர்டில் ஸ்பீடாமீட்டர் வேலை செய்யாததால் அது மட்டும் அந்த பழைய வண்டியிலிருந்து கழட்டித்தர முடியுமா என கேட்டேன். பழைய வண்டிகளின் ஸ்பீடோமீட்டர் தனியாக கழட்ட முடியாதாம். தீர்க்கமாக சொன்னான் மலையாளி..'முழு டாஷ்போர்டு தன்னே கிட்டும்.. கொழப்பல்லா? ' என கேட்ட கையோடு மஞ்சுளா மேல் படரும் அசோகன் மாதிரி டாஷ்போர்டில் அப்படியே சாய்ந்து பத்தே நிமிடத்தில் அதை கழற்றி என் முன் வைத்து, சிகரெட்டை பற்றவைத்தான்.
'இந்த பார்ட்ஸையெல்லாம் அடுத்த வாரம் வெள்ளிக் கெழமை போய் காராஜ்ல குடுத்து வண்டியில ஃபிட் பண்ணிக்கலாமா மாமா?' என நான் கேட்க, உடனே மாமாஜி ' ஏன்.. இப்ப சுந்தரகாண்டம் படிக்கப்போறியா' என கேட்டார். பக்கத்திலிருந்த கணபதி விழுந்து விழுந்து சிரித்தான். 'இப்ப மணி ஒன்னு தானே! உச்சிக்கி மூனு மணிக்குள்ளாற முடிச்சுடலாம்' என மாமாஜி என்னை நேராக குதேபியா பகுதியில் பங்களாதேஷி (பங்காலி) ஒருவனிடம் கூட்டிப்போனார்.
அந்த பங்காலி என் கார் டிக்கியிலிருந்து ப்ரௌன் கலர் டாஷ்போர்டை வெளியே எடுக்கும்போது தான் கவனித்தோம், என் கார் உள்ளே எல்லாம் கருப்பு. சற்றும் மனம் தளறாத விக்கிரமாதித்தன் மாதிரி அவன் அடுத்த நிமிடம் ஏதோ ஸ்விட்சைத்தட்டி 'பூஊஊம்' என்ற சத்தத்துடனான ஸ்ப்ரேயரை கையில் எடுத்து சின்ன புலியாட்டம் ஒன்று ஆடி டாஷ்போர்டிற்கு கருப்பு கலரடித்து முடித்தான். சில நிமிடங்களில் காய வைத்து வண்டியில் மாட்டி ஸ்பீடாமீட்டரையும் ஆட்டிக்காட்டினான் கில்லாடி பங்காலி. சொற்பத்தொகையை மட்டுமே வசூலித்து அரங்கேற்றம்-பிரமீளாவை தங்கப்பதக்கம்-பிரமிளாவாக ஆக்கினான். ஆக 1979 மாடல் டாட்ஸன் 120Y தயார்.
அடுத்த ஒரு வருடம் முழுக்க அந்த வண்டிக்கு செம்ம மவுசு. நண்பர் Mohan Gopal Krishnan மற்றும் Lakshmi Mohan குழந்தைகள் சகிதம் பஹ்ரைன் முழுக்க டாட்ஸனில் சுற்றினோம். யாருமே விரும்பாத நீலக்கலர் வண்டி அந்த தொகுதியில் என்னுடையது மட்டுமே. சில பார்ட்டிகளில் யாராவது நண்பர்கள் 'ஶ்ரீதர்! உங்க வண்டி எது' எனக்கேட்க, அதோ என நான் காட்டிய திசையைப்பார்த்து லேசாக வழிந்து மனதிற்குள் 'அய்யிய்யே! இந்த வண்டியா!' என அவர்கள் நினைப்பது அப்பட்டமாகத்தெரிந்தது.
மெதுவாக, மாத வாடகை மாதிரி தனியாக ஒரு தொகையை கனிசமாக விழுங்கியது அந்த வண்டி. ஒவ்வொரு ரிப்பேருக்கும் மனைவியிடமிருந்து அர்ச்சனை. அவளுக்கு ஒரு ஸ்கூலில் புது வேலை கிடைத்து, முதல்நாள் அவளை ட்ராப் செய்ய நாங்கள் டாட்ஸனில் ஜாலியாக ஹைவேயில் போய்க்கொண்டிருக்க, 'டமார்' என பெருஞ்சத்தம். 'பாவம்..பின்னால எவனுக்கோ டயர் பஞ்சர் போல' என அலட்சியமாக நான் கியரை மாற்றும்போது கடகடவென என் வண்டியில் சத்தம். பக்கத்து வண்டி க்ரௌன் விக்டோரியாக்காரர் என்னை புழு மாதிரி பார்த்து என் சக்கரத்தை காட்டிவிட்டுப்போனார். இறங்கி ஜாக்கியை கீழே வைத்து கடகடவென சுற்றி வண்டியை மேலே உயர்த்தி, பங்ச்சர் ஆன வீலை கழற்றி, + வடிவ ஸ்பானரை சக்கரத்தில் மாட்டி அதன் மேல் ஏறி நின்று போல்ட் நட்டை டைட் செய்து, ஒரு வழியாக உஷாவை ஸ்கூலில் இறக்கிவிட்டு ஆபிஸ் விரைந்தேன். முதல் முறையே வெற்றிகரமாக ஸ்டெப்னி மாற்றி, மாமாஜியின் பாராட்டும் கிட்டியது.
அந்த ஒரு வருடத்தில் 'எக்ஸாஸ்ட்' உடைந்து சல்லிசான 'சவுதி' மேக் வாங்கி மாட்டினேன். ரேடியேட்டர் தெறித்து தொறதொறவென தண்ணீர் ரோடெல்லாம் கொட்டி என் குலத்தையே திட்டினான் பின்னால் வந்த சிறிலங்கன். பாட்டரி டவுனாகி ஜம்ப்பர் மாட்ட மற்ற கார்களை பார்த்து ரோட்டில் உஞ்சவிருத்தி செய்தேன். நெம்பர் ப்ளேட் கலர் வெளிறி, ட்ராஃபிக் பாஸ்ஸிங் போகும் முன் மார்க்கர் பேனாவினால் நம்பருக்கு கலர் அடித்தேன்.
'முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொர்ரி முஸ்தபா' பாடிக்கொண்டு 60 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டு 'பர்த்டே பார்ட்டீல மத்த பசங்களை அடிக்கக்கூடாது.. சமத்தா இருக்கனும்.. புரிஞ்சுதா? ' என பின் சீட்டில் இருக்கும் என் 3 வயது பையனுக்கு அட்வைஸ் கொடுத்தபடி கழுத்தை திருப்பி பார்த்தால் பின் கதவு 'பா'வென திறந்திருந்தது. அடிச்சுப்புடிச்சு வண்டியை நிறுத்தி, ஓடிப்போய் கதவை சாத்தினேன். (சில வண்டிகள்ல சைல்ட் லாக்னு ஒன்னு இருக்காமே என மனைவி அவ்வப்போது புலம்பிக்கொண்டிருந்தாள்). சிக்னலில் நிற்கும்போது பக்கத்து வண்டி அரபி ஒருவன் 'for sale?' என கேட்டு வெறுப்பேற்றினான்.
ஒரு நாள் சடன் ப்ரேக் போடும்போது கால் தரையைத்தொட அலறிக்கொண்டு உம்மல்ஹாசம் கராஜ் ஜோர்ஜிடம் ஓடினேன். 'உன் வண்டிக்கு ஹைட்ராலிக் ப்ரேக் இல்லை. அதனால் பம்ப் பண்ணி தான் ப்ரேக் போடனுமென்றான். அப்படீன்னா? 'ஏது ஸ்தலத்தில் சடன் ப்ரேக் போடனுமோ அதற்கு கொஞ்ச தூரம் முன்னால் 'புஸ்க் புஸ்க்'னு 2,3 தடவை ப்ரேக்கை பம்ப் செய்யுங்கில் டைட் ஆகும், பின்னே ப்ரேக் பிடிக்கும்' என்று சொன்னவனை ஆலிங்கனம் செய்து கழுத்தை அப்படியே கடிக்கலாம் போலிருந்தது. வண்டியை விற்க முடிவு செய்தேன், மனசே இல்லாமல்.
அருமையான இஞ்சின். நல்ல மைலேஜ். சின்ன சின்ன ரிப்பேர்களானாலும் மன உளைச்சல், அதிக செலவு. 'வண்டி என்னா ஸ்மூத் பாரு' என யாராவது சொன்ன மறுநாளே 50 தினாருக்கு மொய். வண்டியை விற்க '4 sale' போர்டு மாட்டிய சில தினங்களில் பாகிஸ்தானியர்கள் ஓநாய் மாதிரி வண்டியை சுற்றிச்சுற்றி வந்து குசலம் விஜாரித்தார்கள். அவர்கள் கேட்ட விலை எனக்கு அழுகையை வரவழைத்தது. பனைமர உசர பலூச்சி ஒருவன் கூசாமல் 80 தினாருக்கு ( சுமார் 6000 ரூபாய்) கேட்டு கடைவாய்ப்பல் மட்டும் தெரிய விஷமப்புன்னகை புரிந்தான்.
கடைசியில் 175 தினாருக்கு உ.பி. பய்யா ஒருவனுக்கு வண்டியை தள்ளிவிட்டு, சோகத்துடன் ட்ராஃபிக் டைரக்டரேட்டில் அவன் பெயருக்கு வண்டியை மாற்றிக்கொடுத்து, பித்ரு ஸ்ரார்த்தம் முடித்துவிட்டு அம்மா மண்டபத்திலிருந்து ஈர வேட்டியைடன் திரும்பி வருவதுபோல வீடு வந்து சேர்ந்தேன், கனத்த மனதுடன்.
சமீபத்தில் இந்தியாவில் முதன்முறையாக நீலக்கலர் டாட்ஸன் கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 20 வருடங்களுக்கு முன் பஹ்ரைனில் நான் ஓட்டிய அதே நீலக்கலர் டாட்ஸன் மற்றும் வண்டியை பராமரிக்க உதவிய மாமாஜியின் நினைவுகள் மனதை இதமாக வருட, உடனே இப்பதிவு...
பி.கு: பதிவைப்படித்த பிறகு இன்று மாமாஜியின் பிறந்தநாள் என்ற உபரி தகவலை ஆருயிர் நண்பன் கணபதி கொடுக்க, மெய் சிலிர்த்தது எனக்கு.

தென்னூர் வண்டி ஸ்டாண்டு...

தென்னூர் வண்டி ஸ்டாண்டு...
'வண்டி ஜங்சனுக்கு வருதாங்க?'
'வருந்தம்பி! வீடெங்க?'
'ந்தா..பாப்புச்செட்டித்தெருவுல போஸ்ட் மாஸ்டர் வீடு..'
'வற்ரேன்.. பன்னண்டனா ஆவும்..'
அடித்த சில நிமிடங்களில் தென்னூர் பாப்புச்செட்டித்தெருவில் எங்கள் தாத்தா வீட்டு வாசலில் குதிரை வண்டி வந்து நின்றது.
'ம்மா..! குர்ரம்பண்டி ஒச்சேசிந்தி' என கத்தியபடி நானும் என் தம்பியும் வாசலுக்கு ஓடுவோம்.
பழைய வண்டியில் பூட்டிய அந்த குதிரை சற்று நோஞ்சானாக இருந்தது. சவாரி ஏறும் வரை குதிரைக்கு முன்னால் கொஞ்சம் சாப்பிட புல்லை போட்டிருந்தான் வண்டிக்காரன். வண்டிக்கு அடிப்பகுதியில் தொங்கும் சாக்கில் நிறைய புல் இருக்கும். பரம சாது குதிரை. நின்றபடியே புல்லை சாப்பிட்டது. கழுத்துப்பகுதியில் கட்டியிருந்த கனமான சேணம் அதன் தோளில் உரசி உரசி அந்த இடமே ரணமாகி சிகப்புக்கலரில் சதை தெரிந்தது. குதிரையின் தலையில் புஸுபுஸுவென கலர் கொண்டை.. நெற்றியில் சீராக வெட்டிய முடி.. குட்டி பத்மினியை விட அழகாக இருந்தது.
வண்டிக்கு பக்கவாட்டின் ஒரு பகுதி 'அவசர உதவிக்கு போன் 100 'வாசகத்துடன். மற்றொரு பக்கம் சின்ன விளக்கு. சாயங்காலம் தான் அதில் கிருஷ்ணாயில் ஊற்றி விளக்கை பற்ற வைக்கனும். வண்டிக்கு அடியிலும் சிலசமயம் அரிக்கேன் விளக்கு.
முன்பக்கமிருந்து வரும் நீளமான தோல் பெல்ட்டை வாலுக்கு அடியில் கொடுத்து இழுத்து கட்டியிருக்கும். குதிரையின் பின்பாகம் பார்க்க அழகாக இருக்கும். வால் பகுதியில் தொங்கும் அடர்த்தியான மயிரை சீராக வெட்டியிருப்பான்.
'டேய் ஶ்ரீதர்! குதிரை பின்னால நாம தொட்டா அதுக்கு கிச்சுகிச்சு மூட்டுமாம்.. உடனே ஒன்னுக்கடிக்கும் பாரேன்!' என என் தம்பி ரவி Vijay Raghavan ஐடியா கொடுக்க, நான் மெல்ல அதன் பின் தொடையை தொட, குதிரை ப்ஹுர்ர்ர்ர் என சப்தத்துடன் உடம்பை ஒரு சிலுப்பு சிலுப்பி, கிணிகிணியென மணி சத்தத்துடன் வண்டியை குலுக்க, ' அடேய் தம்பி! அங்க தொடாத...திரும்ப தண்ணி கேக்கும் அது!' என வண்டிக்காரன் கத்திய மறுநிமிடம் சடசடவென ஒன்னுக்கு போனது ரோடெங்கும் வழிந்தோட.. 'ஹே'யென நானும் ரவியும் சிரித்தபடி முழங்கால்களை துடைத்துக்கொண்டோம். நான் அப்ப செஞ்சோசப்ல ஏழாங்கிளாஸ். ரவி புத்தூர் பாத்திமா ஸ்கூல்ல அஞ்சாப்பு..
அம்மா, பாட்டி இருவருக்கும் பெருத்த சரீரம். வீட்டை விட்டு வெளியே வந்து வண்டியின் பின்பக்கம் தொங்கும் இரும்புப்படியில் காலை வைத்து அவர்கள் ஏறும்போது, வண்டியின் முன்பக்கம் செங்குத்தாக மேலே எழும்ப, வண்டிக்காரன் குதித்து முன் பக்கம் அழுத்துவான். அவன் கால்கள் தரையிலிருந்து ஓரடி மேலே. பிறகு பின்னால் வந்து கம்பியை கொக்கியில் மாட்டுவான். நல்லா முன்னுக்கு வாம்மா என கேட்டு வண்டியை பாலன்ஸ் பண்ணுவான்.
எங்களுக்கு எப்போதும் வண்டியின் முன்பக்கம் ஏறத்தான் பிடிக்கும். முன்பக்கம் வண்டிக்கு முழுக்க வெளிப்பகுதியில் கட்டை மேல் குத்தவச்சு வண்டிக்காரன் உட்கார்ந்திருப்பான். எங்களுக்கும் அவனைப்போல அங்கே உட்கார ஆசை. ஆனால் உட்கார விடமாட்டார்கள்.
முன் சக்கரத்தின் கட்டையில் கால் வைத்து ஏறி உட்காருவோம். வண்டிக்குள்ளே மெதுமெதுவென இருக்கும் சாக்கின் அடியில் உள்ள பசும்புல் மற்றும் குதிரை சாணம் கலந்த வாசம் வீசும். வண்டி நகர நகர நம் மண்டை உள்பக்க மூங்கில் கூரையில் இடிக்கும்.
வண்டி மெல்ல ஊர்ந்து தென்னூர் கவுன்சிலர் கிருஷ்ணன் வீட்டைத்தாண்டி புத்தூர் நோக்கிப்போக, குதிரை இன்னமும் மெதுவாக நடக்கும். வண்டிக்கு உள்பக்கம் சொறுகியிருக்கும் சாட்டையை உறுவி வெளியே எடுத்து சுளீரென குதிரையின் முதுகில் அடித்து 'அய்.. த்தா' என வண்டிக்காரன் அதட்ட, குதிரை லக் லக் லக்கென லேசாக ஓட ஆரம்பிக்கும். குளம்பில் அடித்த இரும்பு லாடம் ரோட்டில் பட்டு இனிமையான சத்தம். எப்போது அவன் சாட்டைக்குச்சியை சக்கரத்தின் நடுவே விட்டு கடகடவென ஒலியெழுப்புவானென நாங்கள் காத்திருப்போம். க்ளுங்.. க்ளுங் என மணியடிக்கும் சப்தத்துடன் குதிரை வண்டி வேகம் பிடித்து புத்தூர் பெரியாஸ்பத்திரி தாண்டி ஓடும்.
இப்ப இந்த குதிரைக்கதை யாருக்காக?
கடந்த சில நாட்களாக இரவில் கை கால் குடைச்சல். அதனால் தூக்கம் குறைவு. விட்டமின் D குறைச்சலாம். முப்பதுக்கும் கீழ் காட்டிய ரிப்போர்ட்டை நேற்று பஹ்ரைனி பெண் டாக்டர் பார்த்துவிட்டு 50,000 IU க்கு 8 வாரத்துக்கு மாத்திரை சாப்பிடச்சொல்லி எழுதிக்கொடுத்தார். படுக்கையிலிருந்து நடு இரவு ஒரு மணிக்கு எழுந்து நடந்து பார்த்தேன். பிறகு நின்றுகொண்டே கொஞ்ச நேரம் தூங்கினேன். வலி பரவாயில்லை. குதிரை அல்லவா நின்றுகொண்டே தூங்கும் பிராணி!
'சிரித்து வாழ வேண்டும்' இரவுக்காட்சி ராமகிருஷ்ணாவில் பார்த்துவிட்டு தென்னூர் வண்டி ஸ்டாண்டு வழியாக நடந்து வரும்போது பார்ப்போம்.. சில நோஞ்சான் கிழ குதிரைகள் லாயத்தில் நின்றுகொண்டே தூங்கும்.
குதிரைக்கு எப்போதோ கிச்சுகிச்சு மூட்டிய பாவம் போலும். நேற்று நடுநிசி நின்றுகொண்டே கொஞ்ச நேரம் தூங்கி திடீரென விழித்தபோது, அந்த குதிரைகள் ஞாபகம் வந்ததன் விளைவு தான் அடுத்த ஒரு மணி நேரத்தில் இப்பதிவு... முடித்துவிட்டு அப்படியே தூங்கிப்போனேன்..

இந்த பிரபலம் எங்கள் வீட்டில் ....

இந்த பிரபலம் எங்கள் வீட்டில் ....
எழுத்தாளர், மேலாண்மை நிதி ஆலோசகர், நிறைய பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றுபவர். சமூகம், அரசியல் மற்றும் வரலாறு சார்ந்த நூல்கள் நிறைய எழுதியிருப்பவர். வித்தியாசமான சிந்தனையும் சமூக நல அக்கரையும் கொண்டவர். அனுபவமிக்க சிறந்த Banker என்பதால் நிதி ஆலோசனைகள், பொருளாதாரம் சம்மந்தப்பட்ட கருத்தரங்குகள், டிவி நேர்க்காணல் என நாள் முழுவதும் தன்னை முழு ஈடுபாட்டுடன் வைத்திருப்பவர்.
இவருடைய blogஐ படித்தால், மலைத்துப்போகும் அளவிற்கு அட்டகாசமான கட்டுரைகள். 'ஈர்ப்பு விசையை இசையாக கேட்கலாம்', 'என்று தணியும் இந்த தாகம்' போன்ற கட்டுரைகளே சான்று. (ramananvsv.blogspot.com)
ஏராளமான டீவி கருத்து மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை அடக்கமாக, அழகாக, ஆணித்தரமாகவும் சொல்பவர். ஜெயா டிவியில் சுதாங்கன் அவர்களின் 'நடந்தது என்ன' நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் வானதி ஶ்ரீனிவாசன் அவர்களும் இவரும், 'மோடி அரசு திட்டக்கமிஷனை கலைத்து விட்டு 'நிதி ஆயோக்' கொண்டு வந்தது சரியா இல்லையா' என்று விவாதம் செய்யும் நிகழ்ச்சி, நிதி மற்றும் பொருளாதாரத்தை பாமரரும் புரிந்துகொள்ளும் அளவிற்கு அருமை.
எனது முகநூல் நண்பர் இவர். இம்மாதம் முதல் வாரத்தில் நான் சென்னையில் இருந்தபோது இவரிடமிருந்து குறுஞ்செய்தி.. 'தினமும் முகநூலில் சந்திக்கிறோம். உங்க பஹ்ரைனுக்கு வருகிறேன்' என்று. எனது தொடர்பு எண்ணை இவருக்கு அனுப்பிவிட்டு பஹ்ரைன் வந்துவிட்டேன்.
'ஹலோ! வளைகுடா நாடுகளில் நாங்க மேற்கொண்ட ஆய்வில் நீங்க தான் சிறந்த CEOவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கீங்க. அடுத்த மாசம் லண்டனில் பாராட்டு விழா. டி.வி பேட்டி உண்டு. உங்க சேர்மனான்ட பேசியாச்சு. ஒத்துன்ட்டார். சுமார் பத்தாயிரம் பவுண்டு எங்களுக்கு உடனே அனுப்பிச்சா நாங்க மேற்படி வேலைய துடங்குவோம். மீதி காசு பொறவு கொடுத்தா போதும்' என 'பல் விளக்கும்' ஆங்கிலத்தில் லண்டன் கால்கள் வருவது இங்கு சகஜம். ' உதைப்பேன் படவா!' என்ற ரீதியில் நாம் பதிலளித்தால் போன் உடனே துண்டிக்கப்படும். 'அப்படீங்களா! இதெப்போ? தெரியாம போச்சே!' என கேட்டுத்தொலைத்தோமென்றால் போச்சு. கழிவறையில் உட்கார்ந்திருக்கும்போதும் கூட அந்த லண்டன் போன் கால்கள் வந்துகொண்டேயிருக்கும்.
இந்த கதை இப்ப எதுக்கு? அப்படியொரு கால் சமீபத்தில் எனக்கு வர, உடனே துண்டித்தேன். உஷார் பேர்வழிகள் எப்படியோ அடுத்த சில நிமிடங்களில் ஏதோ உள்ளூர் நெம்பரில் இருந்து திரும்ப திரும்ப அழைக்க, போனை எடுத்து 'ஹலோ! எத்தினி தபா போன் செய்வீங்க? என கொஞ்சம் காட்டமாக கேட்டேன். அடக்கமாக பதில் வந்தது: 'இல்லீங்க நான் xxxx பேசறேன். சென்னையிலிருந்து பஹ்ரைன் வர்றேன்னு உங்களுக்கு மெசேஜ் அனுப்ச்சேனே!' என இவர் பேசவும், வெலவெலத்துப்போய் 'சார்! மன்னிச்சுக்கோங்க.. வேற நியூஸென்ஸ் காலோன்னு நெனைச்சுக்கிட்டேன்' என பகிரங்கமாக பல முறை மன்னிப்பு கேட்டேன். 'பரவால்லீங்க..இந்த ஏரியாவுல சிக்னல் பிரச்னை.. போன்ல சத்தம் கேக்கலை... அதான் திரும்ப திரும்ப பண்ணினேன்' என சர்வ சன்னமான குரலில் பேசிய அவரது humblenessஐ நினைத்து எனது செயலுக்கு வருந்தினேன்.
பஹ்ரைனில் வங்கி ஒன்றில் Senior Vice President ஆக இருக்கும் இவரது மைத்துனர் எனக்குத்தெரிந்தவர் தான். மறுநாள் அவரது இல்லத்தில் இவரை சந்தித்தேன். அடுத்த வாரம் எனது அழைப்பை ஏற்று எங்கள் இல்லத்திற்கும் வந்திருந்தார்.
இவரா அந்த பிரமுகர்..! எவ்வளவு எளிமையாக இருக்கிறாரென வியக்க வைக்கும் உருவம். தூக்கி வாரிய தலைமுடி. சிலர் மீசையை மேலுதட்டில் வளரவிட்டு அத்தோடு விடாமல் மேல்பக்கம் அழகாக நேர்க்கோடு மாதிரி ட்ரிம் செய்வார்கள். வைகோ, எழுத்தாளர் ஜெயகாந்தன், கலைஞர், இயக்குநர் மகேந்திரன் போன்றவர்கள் வரிசையில் இவருக்கும் சீராக ட்ரிம் செய்யப்பட்ட மீசை.
சுமார் ஒரு மணி நேரம் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தார். கல்கி பத்திரிக்கை மற்றும் கல்கி குடும்பத்தினருடன் மிகவும் தொடர்புடையவர். நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அந்தக்கால ஓவியர்களைப்பற்றி எங்கள் பேச்சு திரும்ப, ஓவியர் லதா மற்றும் ம.செ, G.K. மூர்த்தி ஓவியங்களையும் வெகுவாக புகழ்ந்தார். ஓவியர் லதா அவர்கள் வரையும் பெண்கள் எப்போதும் புஷ்டியானவர்களாக இருப்பதை மெல்லிய நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். புத்தகங்கள் படிக்கும் பழக்கம் நமது இளைஞர்களிடம் குறைவது குறித்து வருந்தினார். துபாய் விமானதளத்தின் duty free கடைகளில் புத்தகங்களுக்கு தள்ளுபடி இல்லை ஆனால் மதுவிற்கு தள்ளுபடி என்ற இவரது ஆதங்கம் நியாயமானது தானே!
இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் பற்றியும், கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் (defaulters) மற்றும் அதனால் அவதியுறும் வங்கி உயர்மேலாளர்களின் அவலத்தையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். இவரது மனைவி கனரா வங்கியில் பணிபுரிந்தவர். எம்.ஏ (பிரபந்தம்) படித்துக்கொண்டிருப்பவர் என்பதால் நண்பர் Sarva Bhoumanஅவர்களது பன்னிரு ஆழ்வார்கள் புத்தகத்தை அவருக்கு அளித்தேன். கவிதை நடை நூலா என வியப்புடன் பெற்றுக்கொண்டார். அதில் இடம்பெற்ற எனது ஓவியங்களையும் மிகவும் ரசித்தார்.
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். விடை பெற்றுக்கொண்டு சென்றவுடன் மறுநாள் தனது மைத்துனர் மூலம் 'கருப்புப்பணம்', 'சீனா வல்லரசு ஆனது எப்படி', 'கடைசி கோடு' போன்ற அவர் எழுதிய புத்தகங்களை எனக்கு பரிசாக அளித்துவிட்டு துபாய் சென்றுவிட்டார். 'நினைவில் நிற்கும் ஒரு மாலைப்பொழுதை அளித்த அன்பான ஶ்ரீதர் தம்பதியினருக்கு' என்ற கைப்பட எழுதிய வரிகளுடன் புத்தகங்கள்.
உங்களுக்கு வேறொரு பிரபல பிரமுகர் முக ஜாடை இருக்கேயென நான் தயங்கி கேட்டபோது, தான் மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. மாலன் அவர்களது சகோதரர் என அடக்கமாக சொன்னார்.
நன்றி Ramanan Vsv சார்...

பெய்ஜிங் (சீனா)...

சீனா செல்ல பஹ்ரைனிலிருத்து விமானம் பிடித்து துபாயில் இறங்கி, லோலோவென இருபது நிமிடம் நடந்து, விமான தளத்தின் உள்ளேயே மெட்ரோ ரயில் பிடித்து, டெர்மினல் வந்து, ட்யூட்டி ஃப்ரீ கடைகளுக்கு மத்தியில் தேடி, துபாய் மர்ஹாபா லௌஞ்சு வந்து சேரும்போது கண்ணாடி ஜன்னல் வழியே சீனப்பெருஞ்சுவரே தெரிந்தது.
மதியம் 12 மணி. கொலைப்பசி.. லவுஞ்சில் சுடச்சுட ஏஷியன் உணவு, பச்சை தேனீரை முடித்து வைஃபையை முடுக்கி கொஞ்ச நேரம் முகநூலை மேய்ந்து, சரியாக இரண்டு மணிக்கு பெய்ஜிங் விமானத்தை பிடிக்க கேட் நெ:15 வந்து சேர்ந்தபோது அங்கே ஒரு மினி சைனாவே இருந்தது. உரித்த உருளைக்கிழங்கு மாதிரி சின்னச்சின்ன குழந்தைகள். 'சிக்கு மங்கு சிக்கு மங்கு செக்க பப்பா' பாடலாம். எங்களைத்தவிர இந்தியர்களே இல்லை.
அந்த A380 விமானத்தின் உள்ளே மேல் தளமும் இருந்தது. இருக்கையில் உட்கார்ந்த இருபதே நிமிடங்களில் பட்பட்டென கதவை சாத்தி மெல்ல டாக்சியிங் செய்து ஜிவ்வென மேலே எழும்பி மணிக்கு 500 கி.மீ வேகத்தில் பறக்க ஆரம்பித்தார், ஓமக்குச்சி நரசிம்மனை விட இன்னும் ஒல்லியாக இருந்த சீன விமானி. துபாயிலிருந்து பெய்ஜிங் சுமார் ஆறாயிரம் கி.மீ. தூரம். அடுத்த சில நிமிடங்களில் மணிக்கு 1000 கி.மீ. வேகமெடுக்க சிற்றுண்டி கொடுக்க ஆரம்பித்த சீன விமான பணிப்பெண்கள் படு சுறுசுறுப்பு! . இப்பத்தானே கீழே சாப்ட்டோம்! அடுத்த 6, 7 மணி நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு முறை உணவு விநியோகம். பக்கத்தில் மனைவி Usharani Sridharஇரண்டு தமிழ் படங்கள் பார்த்துவிட்டார்.
இரவு பெய்ஜிங்கில் விமானத்தை விட்டு வெளியே வரும்போது 'சீதாபதி ஶ்ரீதர்' பெயர் பொறித்த அட்டையுடன் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணொருத்தி எங்களை வரவேற்று அடுத்த அரை மணியில் ஹோட்டலில் இறக்கி விட்டு விடைபெற்றுக்கொண்டாள். பெட்டியை போட்டுவிட்டு கீழே இறங்கி வந்து சீனத்தெருவில் சிறிது நேரம் நடந்து அருகே KFC ஒன்றில் பூண்டு ரொட்டி சாப்பிட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம்.
அழகான பெய்ஜிங் நகரம்... ஓரிடத்தில் அருகருகே நான்கு நீளமான கட்டிடங்களை சேர்த்து ராட்சத டிராகன் வடிவில் கட்டியிருந்தார்கள்.அகன்ற சாலைகளின் ஒரு பகுதி இரண்டு/மூன்று சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல. நகர் முழுக்க சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தவன்னம் இருக்கும்போது தரையின் கீழ் மெட்ரோ ரயில்கள். சுமார் 20 மில்லியன் ஜனத்தொகையாம். பிரதான வீதிகள் ஒவ்வொன்றும் குறைந்தது 5 கி.மீ நீளமாவது இருக்கும். எங்கு பார்த்தாலும் ஈசல் மாதிரி ஜனங்கள் கூட்டம்.ஆண் பெண் எல்லோருக்குமே ஒடிசலான உருவம். யாருமே மெதுவாக நடப்பதாகத்தெரியவில்லை. விசுக் விசுக் என கையை நீட்டி நடக்கிறார்கள். பல பெண்கள் கிட்டத்தட்ட நம்ம ஊர் மஞ்சுளா சாயல். மை பென்சிலால் கிழித்து விட்ட கோடுகள் மாதிரி கண்கள்.
பஹ்ரைனில் தாதாபாய் டிராவல்ஸின் மலையாள பெண்மணி சகாயமான விலையில் எங்களுக்கு மூன்று நாட்களுக்கான ஐடினெரரியை தயார் செய்து கொடுத்தாலும், மனைவி உஷா அவரை பெண்டு எடுத்து விட்டார். ஏற்கனவே வலையில் பீராய்ந்து என்னென்ன இடங்கள், எவ்வளவு தூரம் போன்ற தகவல்களை திரட்டிய உஷா 'நீங்க டியான்மன் ஸ்கொயர் கூட்டிப்போக தனியாக சார்ஜ் செய்ய வேண்டாம். அது எங்க ஹோட்டலில் இருந்து பக்கமாச்சே! நாங்க போய்க்கறோம்' என அவரது லாபத்தில் கொஞ்சம் மண்ணையும் அள்ளிப்போட்டார்.
'நோவோடெல்' என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கான கட்டனம். எல்லாம் ரிஸெஸ்ஷன் கொடுமை. இதுவரை அவ்வளவு வெரைட்டியான காலை உணவை வேறெங்கும் சாப்பிட்டதில்லை. Conjee (கஞ்சி), க்ராய்ஸோ(ன்ட்), ஆவியில் வேகவைத்த கொழுக்கட்டை போன்ற டம்ப்ளிங், கொழுப்பில்லா முட்டை ஆம்லெட்.. என வகைவகையாக காலை உணவை உண்டபின் வெளியே வந்தால் 12 seater டொயோட்டா ஹைஏஸ் வேனில் 14,15 வயது மதிக்கத்தக்க ஈவா என்ற பெண் காத்திருந்தாள். 29 வயதாம். அப்போது பேச ஆரம்பித்த அவள் அடுத்த இரண்டு நாள் கழித்து திரும்ப நாங்கள் விமானம் ஏறும் வரை ஓயவில்லை. அவளது குட்டிப்பையன் போட்டோ காட்டினாள். 'படு க்யூட்டா இருக்கானே' என சொன்னபோது அவளது முகம் பிரகாசமாகி 'ஓ.. தேங்க்ஸ்' என்றார். உலகின் எந்த ஒரு மூலையாக இருந்தாலும் அம்மா.. அம்மா தான்.
நகரத்திலுள்ள பிரதான நினைவுச்சின்னங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் அரச பரம்பரைக்கதைகள் தான். அந்தக்கால மன்னருக்கு ஆயிரம் பெண்டாட்டிகள் மற்றும் சேவை செய்ய அழகான யுவதிகள். திருநங்கைகள் தான் அரன்மனையில் சேவை செய்தார்களாம். தினமும் மன்னரின் அழைப்புக்காக அழகிகள் காத்திருக்க, அவர் தினமும் ஒரு அழகியை தேர்ந்தெடுப்பாராம். மன்னரின் திக்விஜயத்தின்போது, படை வீரர்களின் மனைவியோ பெண் குழந்தைகளோ கொஞ்சம் அழகாக இருந்து அவர் கண்ணில் பட்டுவிட்டால் போச்சு..திக்விஜய் சிங் ஆகிவிடுவாராம். நடுநடுவே ஈவாவை கொஞ்சம் தண்ணீர் குடிக்கச்சொன்னோம்.
முதல் நாள் சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்குப்பின் நாட்டின் எல்லையோரப்பகுதியில் பெரிய மலையடிவாரத்திற்குப்போனோம். அங்கிருந்து கேபிள் காரில் மலைமேல் ஏறிப்போனால் பிரம்மான்டமான சீனப்பெருஞ்சுவர். கிட்டத்தட்ட பத்தாயிரம் கி.மீ நீளமான சுவற்றின் ஒரு பகுதி தான் நாம் பார்ப்பது. நல்ல கூட்டம். விண்வெளியிலிருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரிகிறதாம். சுவற்றை உயரமான மரங்களடர்ந்த மலைகள் மேல் கட்டியிருக்கிறார்கள். ஆனால் சுவர் மேல் ஏறியவுடன் அங்கிருந்து தாவி வெளியே குதிக்கும் அளவே உயரம். 'அப்ப எதிரிகள் ஈசியா உள்ளே ஏறி குதிக்கலாமே!'என கேள்வி கேட்ட சின்னவனை அதட்டினேன்.
திரும்ப வரும் வழியில் jade factory என்ற இடத்தில் jade பவளக்கற்களைக்கொண்டு விதவிதமான ஆபரணங்கள் செய்வதை பார்த்தோம். மோதிரம், வளையல், காப்பு போன்ற அந்த ஆபரணங்களை அணிந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்குமாம். இரத்த கொதிப்பு வராதாம். விலையை கேட்டால் இன்னும் கொஞ்சம் ஆபரணங்கள் போடவேண்டி வரும்.
அடுத்து சீன தேநீர் தொழிற்சாலை ஒன்றிற்கு கூட்டிப்போனார்கள். இளைஞன் ஒருவன் பெண் சிப்பந்தியுடன் எங்களை ஒரு அறையில் அமர வைத்தான். பின் விதவிதமான கருப்பு, பச்சை மற்றும் வாசனை தேநீர் வகைகள் தயாரிக்கும் முறையை எங்கள் முன் செய்து காண்பித்து, சுவை பார்க்கச்சொன்னான். 'நீ எங்க வாரேன்னு எனக்கு தெரியும் ராசா' என நான் நினைத்தது சரி. எல்லா தேநீர் வகைகளும் அடங்கிய அட்டை டப்பாவை சல்லிசான விலையென்று நம் தலையில் கட்டப்பார்த்து நூதன முறையில் கொள்ளையடிக்கப்பார்த்த இளைஞனை வெற்றிகரமாக சமாளித்து காரில் ஏறும்போது, 'oh.. Pleasant flavor !' என வியந்த ஐரோப்பிய தாத்தா ஒருவரை 'மாட்னான்டா சேகரு.. தோ.. வாரேன்' என இளைஞன் எங்களை விட்டு ஓடினான்.
மறுநாள் காலை மழையில் நனைந்தவாறு tiannaman square. அதை அடுத்து forbidden city. அந்தக்கால அரண்மனைகள் அப்படியே பாதுகாக்கப்பட்டு இருந்தன. வாசல் உள்ளே நுழையும்போது ஒரு அரண்மனை தான் இருக்கும் என நினைத்தால் ஏழெட்டு அரண்மனைகள் உள்ளே. Large stone carving, summer palace, Imperial ancestral temple, garden of virtue and harmony என எல்லா அரண்மனை பின்னனியிலும் ஒரே அரச பரம்பரை கதைகள் கேட்க போரடித்தது.
'அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மீது எங்கள் அரசாங்கத்துக்கு எப்பவுமே பொல்லாத கோபம். நல்ல சமாச்சாரங்களை விட்டுவிட்டு எங்க நாட்டைப்பற்றி அவதூறு செய்திகளை மட்டும் பரப்புகிறார்கள். அந்த காலத்தில் எங்களது புராதன சின்னங்களை அழித்த அல்லைடு ஃபோர்ஸுகள் மீதுள்ள கோபம் இன்னும் தனியவில்லை' என ஈவா பெருமூச்சு விட்டபோது அவளது தேசப்பற்று தெரிந்தது. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளதாம். 'என்னாது!' என வடிவேலு மாதிரி கேட்டு வியந்தோம்.
அடுத்து சீன இயற்கை மருந்து தயாரிக்கும் நிறுவனம். நிறைய சுற்றுலா பயணிகள். நல்ல கூட்டம் என்பதால் இருபது இருபது பேராக உள்ளே விட்டு உட்கார வைத்து கதவை மூடி, இளம்பெண் ஒருத்தி முதலில் சீன மருந்தின் மகத்துவத்தை விளக்க ( ஆஹா.. மறுபடியும் பணம் பிடுங்கும் உத்தி!) மற்றொரு பெண் உள்ளே வந்து 'இன்னும் சில நிமிடங்களில் டாக்டர்கள் வந்து ஒவ்வொரு குடும்பத்தின் முன் உட்கார்ந்து உங்க நாடிய புடிச்சி பார்த்து உடம்புல என்ன நோய் இருக்குன்னு கரெக்டா சொல்வாங்க' என்றார். நம் எதிரே மிக நெறுக்கமாக அவரது நாற்காலி. பர்ஸை ஒரு முறை தொட்டுப்பார்த்துக்கொண்டேன். டாக்டர் ஒருவர் வந்து என்னெதிரே அந்த பெண்ணுடன் நெருக்கியடித்து அமர்ந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியாதாம் (கிழிஞ்சது போ!) அருகே மொழிபெயர்க்க மற்றொரு பெண். எல்லோரும் அத்துனூன்டு இடத்திற்குள். நேராக என் கையை பிடித்தார் டாக்டர். கொஞ்சம் முறுக்கினார். தேவையில்லாமல் என் முகத்தை வேறு உற்று பார்த்தார். ( பக்கத்தில் சின்னவன் சிரிப்பை அடக்க முயற்சித்தான்). உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்ஜியாரிடம் அடி வாங்கும் ஜப்பான் காரன் முகம் அவருக்கு. அடுத்து ##**##€£¥{=+<~• என சீனமொழியில் ஏதோ அவர் சொல்ல, அந்தப்பெண் 'உங்களுக்கு வயிற்றுப்பகுதியில் பிரச்சனைன்னு சொல்றார்' என்றார். 'என்னா பிரச்னைன்னு அவரை சொல்லச்சொல்லு' என பதிலுக்கு நான் கேட்டேன் ( டேய்! நாங்க திருச்சி.. ஆமா!). 'அது வந்து.. வந்து..You have many problems in this region' என அவளும் வயிற்றை தொட (அவளுடைய வயிற்றைத்தான்! 😄)..உஷா கண்களில் மிறட்சியுடன் என்னை கெட்டியாக பிடித்துக்கொண்டாள். ஐம்பது வயது ஆண்களுக்கு வயிற்று பிரச்னை மற்றும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னை என பொத்தாம் பொதுவாக சொன்னால் ஒன்றிரண்டு கேஸ் எப்படியும் மாட்டிவிடும் போலும். என்ன பிரச்னை என கடைசி வரை சொல்லாமல் பங்கஜ கஸ்தூரி மாதிரி ஒரு மருந்து டப்பாவை எடுத்தாள் அந்த யுவதி. சேலம் சிவராஜ் மூல பவுந்திர வைத்தியர் ஸ்டைலில் நடக்கும் மருத்துவம் அது என பயந்து அங்கிருந்து ஓட்டமெடுத்தோம். எங்களை அங்கே கூட்டிச்சென்ற ஈவாவிற்கு 'கட்டிங்' உண்டாம்.
கடைசியாக பர்ல் மார்க்கெட் என்ற பல அடுக்கு கட்டிடம் வந்தோம். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் நம்ப முடியாத அளவிற்கு குறைவான விலை. ஐபோன்-6 இன் விலை சுமார் 50 டாலர்கள் தானாம். பஹ்ரைனில் 500 டாலருக்கு கிடைக்கும் GoPro காமிரா இங்கு வெறும் நாற்பது டாலருக்கும் குறைவு. வாங்கினோம். கடைக்கார பெண்ணிடம் 'ஏன் சீனாவில் இவ்வளவு குறைவான விலை' என கேட்டபோது அவள் 'உன்னிடமுள்ள ஐபோனை கீழே போடு.. ஒன்னுமாகாது.. எங்க போன் கீழே விழுந்தால்.. அவ்வளவு தான்.. கீழே விழாத வரை உன்னுடைய போனை விட என்னுது பல வருடங்கள் அருமையா வேலை செய்யும்.. நான்கு வருடங்களுக்கு மேல் என் போன் வேலை செய்கிறதே' என அடித்து சொன்னாள். அடுத்து அவள் ' பொருளாதாரங்களின் அளவு (economies of scale), குறைந்த மூலதன முதலீடு (investment), அதிக தொழிலாளர் உற்பத்தித்திறன்(efficiency), குறைவான போக்குவரத்து செலவு(freight), லாப சதவிகிதம் (profit margin %) குறைவென்றாலும் எங்க மாஸ் ப்ரொடக்‌ஷனில் லாபத்தொகை அள்ளிடும்... இப்படி நிறைய சமாசாரங்கள்' என்று பொருளாதாரம் பேசி என்னை வியக்க வைத்தாள்.
'கடைக்காரர்கள் சொல்லும் விலையில் பாதிக்கு பாதி கேட்டு பேரம் பேசினால் சாமர்த்தியம்' என யாராவது சொல்லி நீங்கள் வாங்கி விட்டால் ஏமாந்தீர்கள் என அர்த்தம். அவர்களுக்கு கோபம் வரும் அளவிற்கு கால் பங்குக்கும் குறைவாக விலை கேட்டு, பேரம் பேசி, கடைசியில் கால் பங்கிற்கு வாங்கினேன். பொருளை வாங்கிவிட்டு அடுத்த கடை போகும்போது 'இவன் விவகாரம் பிடிச்சவன்' என அடுத்த கடைக்காரிக்கு சீனமொழியில் இவள் சொல்லியிருப்பாளோ என்னவோ.. 'சாரி இங்க இல்லை' என்றார்கள், பொருளை வைத்துக்கொண்டே. பம்பாய் ஃபோர்ட் பகுதி ரோட்டோர சேட்டன்களிடம் பேரம் பேசிய அனுபவம் எனக்கு உண்டு. டெல்லி பாலிகா பஜாரில் புடவைகள் வாங்கும்போது பேரம் பேசி, சர்தார்ஜி ஒருவன் என்னை கெஞ்சி 'நீ வாங்கலைன்னாலும் பரவால்ல.. இங்கிருந்து போயிடு' என கெஞ்சியது நினைவுக்கு வந்தது.
இன்டர்நெட், மெயில், மெஸ்ஸேஜ், காமெரா, போன், ரேடியோ, யூட்யூப் அனைத்தும் உள்ளடக்கிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை நூறு டாலரில் ஆரம்பித்து இருபது டாலருக்கு வாங்கினேன். பக்கத்திலிருந்த சின்னவன் 'பஹ்ரைனிலேயே ஒரிஜினல் சோனி ஸ்மார்ட் வாட்ச் 40 தினார் (100 டாலர்) தானேப்பா!.. this is fake' என்றான்.
அடுத்தநாள் காலை நான்கு மணியளவில் நோவோடெல் ஊழியர்கள் காலை உணவுப்பொட்டலங்கள் கொடுத்து விமான தளத்தில் இறக்கிவிட்டார்கள். கடும் பாதுகாப்பு சோதனைகள். செக்கின் பாகேஜிலிருந்த பாட்டரி சார்ஜ் பாங்க்கை பிடிங்கி வைத்துக்கொண்டார்கள். மறுபடியும் துபாய் வந்திறங்கி சென்னை விமானத்தில் ஏறி அமர்ந்தோம்.
விமானத்தில் 'பர்ல் மார்க்கெட்ல வாங்கின ஸ்மார்ட் வாட்சை ஃப்ளைட்ல ஆன் பண்ணக்கூடாது. எலெக்ட்ரானிக் சாதனமாச்சே!. மெட்ராஸ் போனவுட்டு ஆன் பண்ணிக்கலாம்' என கட்டளையிட்ட உஷாவிற்கு என்னுடைய பதில்: 'அந்த வாட்ச் பர்ல் மார்க்கெட்லேயே ஆன் ஆகலை'

மாதவன் மாமா.

மாதவன் மாமா..(கோம்பூர் வாங்கீபுரம் மாதவன்)
பஹ்ரைனில் தமிழ் குடும்பங்களுக்கு மத்தியில் மாதவன் மாமா மற்றும் சந்திரா மாமி என்ற பெயர்கள் மிகவும் பரிச்சயமானது. வருடமொருமுறை இந்தியாவிலிருந்து இங்கு வந்து இரண்டு மூன்று மாதங்கள் தன் இரு புதல்வர்களுடன் தங்கி பஹ்ரைனில் அனைத்து தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகளில் கலந்துகொள்வார். வேத உபநிடத்திலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டி தமிழ், ஆங்கில மொழி அறிவையும், ஆன்மிக பற்றையும் வளர்க்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உதவுபவர்.
அனுமனைப்பற்றிய கதைகள் மற்றும் ஸ்லோகங்கள், அவ்வையாரின் விநாயகர் ஸ்துதி, ஶ்ரீமத் பாகவத்தின் அரண்யகங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை அழகாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் வடித்து நண்பர்களுக்கு ஈமெயிலில் அனுப்புவது அவரது வழக்கம். மார்கழி மாதம் 30 நாட்களும் தினமும் ஒரு பாசுரத்தை எடுத்துக்கொண்டு அதை பாமரர்களுக்கும் புரியும்படி அழகாக விளக்கி, அவற்றைப் படிக்கையிலேயே சித்திரப் பண்பு (picturesque quality) பெறுகின்ற பேரானந்தத்தை நமக்கு அளிப்பவர் மாதவன் மாமா..
மாமாவின் அபரிதமான ஆங்கில எழுத்தாற்றலுக்கு பத்திரிக்கைகளில் வரும் அவரது எழுத்துக்களே சான்று. பஹ்ரைனின் Gulf Daily News ஆங்கில நாளிதழில் வாரம் ஒரு முறையாவது 'சந்திரா மாதவன்' என்ற பெயரில் அவரது கடிதங்களை படிக்கலாம். பஹ்ரைனில் அவதியுறும் தொழிலாளர்கள் இந்தியா மற்றும் பஹ்ரைனில் வாங்கிய கடனை திருப்பசெலுத்த இயலாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ளும் அவலத்தை எழுதியதுமட்டுமல்லாமல், சமூக நற்பணியென்ற பெயரில் விளம்பரம் தேடும் செல்வந்தர்களும் சங்கங்களும் இயன்றளவு அந்த ஏழைத்தொழிலாளர்களுக்கு உதவலாமேயென வேண்டுகோளும் விடுத்திருந்தார். உண்மையான நோக்கத்துடன் அறப்பணிகள் செய்யும் சங்கங்களையும் வெகுவாக பாராட்டியிருந்தார்.
முகநூலில் இவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள். பஹ்ரைனில் பாதி தமிழ் இளைஞர்களுக்கு இவர் நண்பர். பஹ்ரைனிலிருக்கும் இவரது பையன்கள் ராம் ப்ரசாத் மற்றும் விஜய் இருவரும் எனது நண்பர்களாக இருந்தாலும், அப்பாவிடம் தான் அதிகம் சம்பாஷனை எனக்கு.
Ram Prasad ஒரு CA..அருமையான கரோக்கி பாடகர். சடாரென மைக் எடுத்தால் ' ராத் கலி எக் க்வாப்மெ ஆயெ' என கிஷோர்தா பாடல்கள் பாடுவார். அவரது மனைவி சங்கீதா ஒரு கர்நாடக சங்கீத கலைஞர். பஹ்ரைனில் ப்ரபலம் என்பது மட்டுமல்லாமல் டிசம்பர் சீசனில் சென்னையிலும் பிசியாக கச்சேரி செய்பவர். விஜய் Vijay Sagar Madhavan மற்றும் அவரது மனைவி
சரன்யா Sharan Sagar இருவரும் CA படித்தவர்கள். மாமா, ராம் மற்றும் விஜய் மூவரும் நான் படித்த திருச்சி St Joseph's மாணவர்கள்..
சேலத்தில் வெளிநாட்டிற்குச்சொந்தமான மாக்னசைட் கம்பெனியோன்றில் வேலையில் இருந்தவர். தனது வேலையின் ஆரம்ப நாட்களில் கல்கத்தாவில் இருந்தவர். நிறைய நாடகங்கள் நடத்தியவர். சரளமாக வங்கமொழியும் பேசுபவர். Gopala Sundaram மாமா இவரது நாடகத்தில் நிறைய நடித்திருக்கிறாராம்.
கடந்த இரண்டு மூன்று மாதங்கள் மாமா பஹ்ரைனில் இருக்கிறார். தமிழ் நிகழ்ச்சிகள், பூஜை போன்ற எந்தவொரு நிகழ்ச்சியிலும் முன் வரிசையில் மாமாவை பார்க்கலாம். நேற்று ஆரம்பமான வசந்த நவராத்திரி விழாவிலும் தினமும் அவரை தவறாமல் பார்க்கலாம்.
சென்ற மாதம் ஒருநாள் மாமா வீட்டிற்கு வந்திருந்தார். சுமார் ஒன்னறை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தவர், காஞ்சிப்பெரியவாளின் மகிமைகளை அழகாக விளக்கிக்கொண்டிருந்தபோது தனக்கு நேர்ந்த சுவையான அனுபவமொன்றை பகிர்ந்துகொண்டார். காஞ்சிபுரம் அருகேயுள்ள ஓரிக்கையில் காஞ்சி மாஹாஸ்வாமிகள் மணிமண்டபத்திற்கு தவறாமல் பிரயாணம் மேற்கொள்பவர் மாமா. அங்கு மஹாலட்சுமி அஷடோத்ரம் சொல்லி அர்ச்சனை செய்வது அவரது வழக்கம். அதற்கு முன் அவர் காஞ்சி வரதராஜ பெருமாளை சேவித்துவிட்டுத்தான் போவார். ஒரு முறை காஞ்சிபுரம் சென்றடைய கொஞ்சம் காலதாமதமாகிவிட, வரதராஜபெருமாளை தரிசிக்காமல் மணிமண்டப கோவில் மூடும் முன் நேராக ஓரிக்கையே போய்விடலாமாவென யோசித்தார். திடீரென அவருக்கு மகாபெரியவா கனவில் தோன்றுவதைப்போல் ஓர் உணர்வு. பெருமாளை சேவித்தபிறகு தான் ஓரிக்கை செல்லவேண்டுமென்ற கட்டளை. பிறகு தயக்கத்துடன் அவர் தாமதமாக காஞ்சிபுரம் சென்றடைந்தார். கோவிலில் கூட்டம் இருக்குமென்பதால் அங்கிருந்து கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம், மற்றும் ஓரிக்கை சென்றடைய அரை மணிநேரம் ஆகும் என யோசித்தபடி பிரகாரத்தில் நுழைய..என்ன ஆச்சரியம்! அன்று கோவிலில் யாருமே இல்லை. மாமா மற்றும் அர்ச்சகர் இருவர் மட்டுமே. உடனே பெருமாளை சேவித்துவிட்டு, நடையை சாத்தும் முன்னரேயே ஓரிக்கை போய்ச்சேர்ந்தார். ராகு காலத்துக்கு முன் நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து, பயபக்தியுடனும் மனநிம்மதியுடனும் மஹாலட்சுமி அஷ்டோத்ர பாராயணம் செய்து வெகு விமரிசையாக பூஜையை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பினார் மாமா. மெய்சிலிர்க்கும் அனுபவமது.
இந்த வயதிலும் சேலத்தில் முதியோர் இல்லமொன்றை மாமா நடத்தி வருகிறார் என்பது நம்மை வியக்க வைக்கிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியா திரும்பும் மாமா மாமி அவர்களுக்கு எனது நமஸ்காரங்கள். விடைபெறும் முன் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், சிறிய அளவில் பகவத்கீதை புத்தகமொன்றையும் பரிசாக அளித்த மாமாவிற்கு நன்றி.
மாமா விடைபெற்றுச்சென்ற பின் அவர் அளித்த கீதை நூல் பக்கங்களை புரட்டியபோது பளிச்சென என்னைக்கவர்த்த வாசகம்...
" give your mind to Me, be devoted to Me, worship Me and bow to Me. Doing so, you will come to Me alone, I truly promise you.. for, you are exceptionally dear to Me.."

ஆதூ

பஹ்ரைனில் பிறந்து வளர்ந்த சின்னவன் ஆதூ(ஆதேஷ் ப்ரணவ்) ப்ளஸ்2 முடித்து சி.ஏ.மேற்படிப்புக்கு இன்று சென்னை கிளம்பி விட்டான். சென்ற மாதம் முழுவதும் ஒரு வாரம், 10 நாட்கள் இடைவெளி விட்டு முழுப்பரிட்சை இருந்ததால் நடுவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் உஷா அவனை பக்கத்தில் உள்ள ஹயாத் மால் அழைத்துக்கொண்டு போய் அவனுக்கு வேண்டிய ஜீன்ஸ், டீ-ஷர்ட், பாக்ஸர், சாக்ஸ் என கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை வாங்கினாள். பையனும் கொஞ்சம் முன் ஜாக்ரதை பேர்வழி. ஏற்கனவே ஒரு லிஸ்ட்டை போனில் போட்டு வைத்திருந்தான். Dove சோப் (தோல் அலர்ஜியாம்), நிவ்யா ஆஃப்டர் ஷேவ் லோஷன், ஃபோன் சார்ஜர், 2TB ஃஹார்ட் டிஸ்க், ஹெட்ஃபோன், அமெசான் மூலம் இறக்குமதி செய்த ஒன் ப்ளஸ் மொபைல் மற்றும் சின்ன JBL ஸ்டீரியோ என பலசரக்குக்கடை மாதிரி பெரிய லிஸ்ட்டை அவ்வப்போது சரிபார்த்து, திருப்தியடையாமல் மேலும் ஷூக்கள், ஆங்க்கிள் சாக்ஸ், அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் ட்ரௌசர் என வஞ்சனையில்லாமல் வாங்கி குவித்தான். நேற்று இரவு வெகுநேரம் உட்கார்ந்து நூற்றுக்கணக்கில் பாடல்களையும் திரைப்படங்களையும் மடிக்கணினிக்கு தரவிறக்கம் செய்து முடித்தான்.
புதிய ஊர்.. முதன்முதலாக சென்னை போகிறான் என்பதால், கார் ஓட்டும்போது கூட பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அவனுக்கு உஷாவின் ஏகப்பட்ட உபதேசங்கள். சமீபத்தில் 'விசாரனை' படம் பார்த்தது முதல் அவளுக்கு கொஞ்சம் பயம் அதிகமானது தெரிந்தது. சென்னை வந்திறங்கியவுடன் நம் பையனையும் சந்தேக கேஸில் உள்ளே வைத்து பின்னி எடுத்துவிடுவார்களோ என்ற அவளது பயத்தை தயக்கமின்றி எனக்கும் பகிர்ந்தளித்தாள். 'ஆதூ.. பீ கேர்ஃபுல் இன் சென்னை..கீப் யுவர் மொபைல் வித் யூ.. டோன்ட் டாக் டு ஸ்ட்ரேஞ்சர்ஸ்'..கீப் யுவர் சினிமா டிக்கெட் வித் யூ வொய்ல் கமிங் பேக் இன் லேட் நைட்ஸ்' போன்ற அடுக்கடுக்காக பீதியை கிளப்பும் அவளது அறிவுரைகளை அவன் சிறிதும் சலனமின்றி உள் வாங்கிக்கொண்ட கையோடு காதில் இயர்ஃபோனை மாட்டி கட்டைவிரலை உயர்த்தி சைகை காண்பித்தான்.
வீட்டில் தெலுங்கு மற்றும் பள்ளியில் ஆங்கிலம் மட்டும் பேசிக்கொண்டிருந்த அவனுக்கு தமிழ் பேசுவது கொஞ்சம் கஷ்டமாயினும் நன்றாகவே புரியும். நேற்று அவனிடம் 'எங்க தமிழ்ல எதாவது சொல்லு பாக்கலாம்' எனக்கேட்டபோது அவன் உடனே உதிர்த்தது 'பன்னாட, பரதேசி' என்ற இரு வார்த்தைகள். உபயம்: வேறு யார்? பெரியவன் ப்ரஷாந்த் தான்.. ஐந்து வருடம் முன் பஹ்ரைனிலிருந்து முதன் முதலாக சென்னைக்கு படிக்கப்போன பெரியவன் தற்போது பரிட்சைக்கு படிக்க வந்திருக்கிறான். எங்களை சீண்டுவதற்காக சின்னவனுக்கு பகீர் பகீரென நிறைய டிப்ஸ் கொடுத்தான். நாம் கவனிக்கும் நேரத்தில் 'ஆதூ..பஸ்ஸில் ஃபுட்போர்டில் தொங்கிக்கொண்டு போனால் தான் ஜாலியாக இருக்கும்' என சொல்லி விஷமப்புன்னகையுடன் எங்களை பார்த்தான்.
ஐந்து வருடத்தில் பைக்கில் சுற்றி சென்னை முழுவதும் பெரியவனுக்கு அத்துப்படி. Learners லைசென்ஸ் காலாவதியாகியும் பர்மனென்ட் லைசென்ஸ் எடுக்காமல், பிறகு அவனை கெஞ்சி ஒரு வழியாக எடுக்க வைத்தோம். 'நடுவே போலிஸ்காரரிடம் மாட்டவில்லையா' என கேட்டபோது 'yes..I did.. I just paid him 100 bucks' என அலட்சியமாக சொன்ன அவனை உஷா மிரட்சியுடன் பார்த்தாள். போலீஸகாரர்களை அங்க்கிள் என்றும் ஆட்டோ ஓட்டுநர்களை அண்ணா என்றும் அழைக்கிறான்.
தற்காலத்தில் பயம் என்பது பையன்களுக்கு சிறிதும் இல்லை. நம்மை விட பலமடங்கு தைரியம் மற்றும் street smartness இருக்கிறது. உலக நடப்புக்கள் விரல் நுனியில். 'So what'? போன்ற உடனுக்குடன் பதில்கள். நாம் 'வேண்டியதை தந்திட வெங்கடேசன்' என்றிருக்க, அவர்களுக்கு வேண்டியதைத்தந்திட ஃப்லிப்கார்ட் மற்றும் அமெசான் இருக்கிறது. தலைமுறை இடைவெளி நம்மை வியக்க வைக்கிறது. திருச்சியில் வளர்ந்த நான் மற்றும் என் இரு சகோதரர்கள் மூவரும் பயந்தாங்கொல்லிகள். வளர்ப்பு அப்படி. அப்பாவோ அநியாயமாக பயந்த சுபாவம். காய்கறி விற்பவனிடம் கூட பயந்துகொண்டு அதிகம் பேரம் பேசமாட்டார். கேட்டால் 'தண்ணி போட்ருக்கான்டா' என்பார்.
80களில் திருச்சி மன்னார்புரம் அரசு காலனியில் நாங்கள் குடியிருந்தபோது, காலனி மாணவர்கள் இரவு ரோந்து போவோம் (அட! நாங்களா!) ஒருமுறை திருடன் ஒருவனை சில மாணவர்கள் பிடித்துவிட, உடனே போலிஸ் லாரி வந்து 'சாட்சி சொல்ல எல்லாரும் வண்டியில ஏறுங்க' என்று சொன்ன மறுநிமிடம் அந்த நள்ளிரவில் முழு கும்பலும் போலீஸ் வண்டியில் ஏறிவிட, ஜகா வாங்கி தனியே நின்ற எங்கள் மூன்று பேரையும் புழுவைப்போல பார்த்துவிட்டு போலிஸ் வண்டி கிளம்பிப்போனது.
நல்ல வேளை பசங்கள் நம்மைப்போல இல்லை...
பி.கு: பஹ்ரைன்-சென்னை விமான பயனத்தில் கால் கை குடைச்சலை மறக்க, கைப்பேசியின் airplane mode இல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு தட்டச்சு செய்ததே மேற்சொன்னவை...வெளியே குட்டி குட்டியாக கட்டிடங்கள் தெரிய ஆரம்பித்தது.. ஆஹா..சென்னை!
ஏர்போர்ட்டுக்கு அழைக்க வந்திருந்த பால்ய/ஆருயிர் நண்பன்Ganapathi Subramanian மற்றும் Durga Ganapathi Subramanian க்கு நன்றி. 'எதிர்ல தானே வீடு.. வாங்க..ரெண்டே நிமிசத்துல தோச வாத்து தற்ரேன்' என்ற துர்காவின் அன்புக்கட்டளையை வேண்டாமெனச்சொல்லி, மயிலை உட்லண்ட்ஸில் பத்தேகாலுக்கு செக்கின் செய்யும்போதே 'சார் இன்னும் 10 நிமிஷத்துல பிருந்தாவன் மூடீருவாங்க.. மொத சாப்ட்ருங்க.. பெட்டிய நாங்க ரூம்ல வெச்சுடறோம்' என எங்களை அன்போடு விரட்டிய சிப்பந்திகளுக்கு நன்றி. 'ஆயில் இல்லாமெ ஒரு சாதா தோசை' என்று சொல்லியும் சொட்டச்சொட்ட எண்ணையுடன் தோசை கொண்டு வந்த (அது கல்லுல உள்ள எண்ணெ சார்..) அன்பருக்கும் நன்றி. 'வேற அல்லாம் கலாஸ்' என முடித்துக்கொண்ட நேபாளிப்பையனுக்கும் நன்றி.
நண்பன் கணபதி பிரிய மனமில்லாமல் ஹோட்டல் ரூமிலிருந்து விடைபெற்றுக்கொண்டபோது மணி 12.30...
இரவு வணக்கங்கள்...

சுஜாதா...நினைவில் நின்றவை...

பிப்ரவரி 27...சுஜாதா அவர்கள் நினைவு தினம்...(எனது பிறந்த நாள்)
நினைவில் நின்றவை...
ஶ்ரீரங்கத்தில் பள்ளிப்படிப்பு. நினைவில் இருப்பது: பக்கத்துப்பையனை சேஃப்டி 'பின்'னால் தொடையில் குத்தியபோது அவன் அலறியது. மானிட்டருடன் ஹெட்மாஸ்டரிடம் 'கேஸ்' போனது. காது சற்று மந்தமான ஹெட்மாஸ்டர், மானிட்டர் கூறியதை தவறாகப்புரிந்துகொண்டதால், 'பின்'னால் குத்தப்பட்டவன் செம்மையாக அடி வாங்கியது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பௌதிகம் பி.எஸ்.ஸி. பட்டம். கல்லூரியில் இருந்த மலைப்பாம்பும், ஃபாதர் எட்ஹார்ட்டின் மூக்கு நுனியின் ஆப்பிள் சிவப்பும் நன்றாக நினைவு இருக்கிறது. ( பாவம், சமீப வெள்ளத்தில் மூழ்கி அந்த பாம்பு இறந்துவிட்டது)
குரோம்பேட்டை எம்.ஐ.டியில் எலெக்ட்ரானிக்ஸ் படித்தபோது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி: 'ராத்திரி ஒன்பது மணி சுமாருக்கு நண்பர்கள் சினிமாவுக்கு அழைக்க, அலறி அடித்துக்கொண்டு ஓடினேன். டிக்கெட் வாங்கி விட்டதாகக்கூறி, விசில் முடிந்து புறப்பட தயாராயிருந்த எலெக்ட்ரிக் ட்ரெயினில் என்னை ஏற்றி விட்டு அவர்கள் 'டாடா' சொல்லிவிட்டு, பிளாட்பாரத்திலேயே தங்கிவிட்டார்கள். நான் டி.டியிடம் மாட்டிக்கொண்டு, சகல சொத்துக்களையும் இழந்து, பனியனுடன் பல்லாவரத்திலிருந்து நடந்தே வந்தேன். நண்பனின் அறைக்கதவை தட்டி, எழுப்பிக்கேட்டபோது வந்த பதில் 'ஸாரிடா...'
ஆனந்த விகடனில்..! 11.12.77
(விகடன் சுஜாதா மலரிலிருந்து)
பி.கு: ஓவியத்தை வரைந்த பின் அவரது கையொப்பத்திலிருந்தே எனது கையெழுத்தையும் போட ஒரு முய

கவிஞர் அப்துல் கையூம்



பஹ்ரைனில் கவிஞர் அப்துல் கையூம் அவர்களை தெரியாதவர்கள் இல்லையெனலாம்...
உருவத்தில் சிறியவராயினும் நம் உள்ளத்தில் உயர்ந்தவர்..
பஞ்சமில்லா நகைச்சுவை அவரது பேச்சிலும் எழுத்திலும்..
பணிவு, கண்ணியம் போன்ற நற்பண்புகள் கூடிய இலக்கணன்..
பாரதி தமிழ் மன்றத்தை திறம்பட நடத்தி அறக்கொடை பல செய்பவர்..
இன்று பிறந்த நாள் காணும் என் இனிய நண்பரான அவரது ஓவியத்தை வரைந்து வெளியிடுவதில் பெருமையெனக்கு..
தான் எழுதிய நூல் ஒன்றை வித்தியாசமாக சிலருக்கு இப்படி சமர்ப்பணம் செய்துள்ளார்...
சமர்ப்பணம்:
'சமர்ப்பணத்தை சாதாரணமாக நான்கே வரிகளில் வடித்து விடுவார்கள். இதில் அது சாத்தியமில்லை.
சொந்த மண்ணில் நான் சந்தித்த அந்த வித்தியாசமான மனிதர்களுக்கு இந்நூலை அர்ப்பணம் செய்கின்றேன்.
எத்தனையோ மனிதர்களை அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்க் கொள்கிறோம்.
அத்தனைப் பேர்களும் ஒட்டு மொத்தமாக நம் மனதில் நிலைப்பெற்று விடுவதில்லை.
ஒரு சிலர் மட்டும் ஏனோ நம்முள் ஒரு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்திச் சென்று விடுகிறார்கள்.
இவர்கள் மறக்க முடியாத மாறுபட்ட கதாபாத்திரங்கள். இவர்களில் பலர் நம்மை விட்டு மறைந்து போயிருக்கலாம். ஆனால் அவர்களின் நினைவுகள் நம்மைத் துரத்தி வரும்.
பேருந்துகளின் ஓசையை வைத்தே அது எந்த நேரத்துக்கு வரும் எந்த ஊருக்குப் போகுமென்று துல்லியமாக கணக்கிட்டுச் சொல்லும் கண்பர்வை இழந்த சக்தி விலாஸ் நாகப்பன்.
அஞ்சல்துறை ஊழியர்களுக்கு அழகிய முன்மாதிரியாய் சமுதாயத்தில் ஒரு அங்கமாகி விட்டிருந்த தபால்காரர் பக்கிரிசாமி.
துணியை வெளுக்க வந்து என் மனதை வெளுத்துச் சென்ற சுயமரியாதைச் சிந்தனைவாதி சின்னத் தம்பி
அணியவேண்டிய சட்டையை அக்குளில் இடுக்கிக்கொண்டு ஹாயாய் பவனிவந்து நம் கவனத்தை ஈர்த்த கப்பவாப்பா.
தைக்கால் திடலில் பலநாட்கள் மிதிவண்டி ஓட்டிச் சாதனை புரிந்த பெண் வீரங்கனை சபுரா.
ஆயிரம் எதிர்பார்ப்போடு அன்றாடம் அஞ்சல் துறை அலுவலகத்துக்கு முன் கூட்டியே வந்து மகாத்துக் கிடக்கும் அதே பழக்கப்பட்ட முகங்கள்
நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு பாடகன் அல்லது கவிஞன் காலில்தான் விழவேண்டும் என்றொரு கூற்று உண்டு.
மளமளவென்று மாற்றங்கள் காணும் பூலோகத்தில் மாறாத பண்புகளோடு மனதில் இடம் பெற்று விடும் மனிதர்களோடு இந்த ஊர் மகத்தாக திகழ்கிறது என்றால் அது இந்த மண்ணின் மகிமை.'
அப்துல் கையூம்
பஹ்ரைன்

மாஷே

காலை 6 மணிக்கு மேல் எங்கள் ஃப்ளாட்டில் தூங்க முடியாது. ஃப்ளாட்டிற்கு பின் பக்கம் கடகடவென சத்தத்துடன் செம்பூரிலிருந்து மான்குர்ட் செல்லும் மின்சார ரயில்கள். பால்கனியில் நின்றுகொண்டு பார்த்தால் மக்கள் அவசரமாக ரயிலைப்பிடிக்க ஓடுவது தெரியும். தூரத்தில் இடுப்பில் துண்டுடன் தண்டவாளத்தை கடந்து பொதுக்குளியறை நோக்கிச்செல்லும் மராட்டிய இளைஞர்கள்...தண்டவாளத்திற்கு இருபுறமும் அடர்ந்த ஜோப்பர்பட்டி குடிசைகள்.
மெல்ல அறை நண்பர்கள் தூக்கத்திலிருந்து ஒவ்வொருவராக எழுந்து கொள்ள, படுக்கையிலிருந்தவாறே முதல் நாள் 12 மணிக்கு விட்ட ஆபிஸ் கதைகளை மீன்டும் தொடர்வோம். அதில் ஒருவர் பெயர் ஜெய். 'என்ன மாஷே! நல்ல தூக்கமா?' ('மாஸ்டர் என்பதன் சுருக்கம் 'மாஷே') என விசாரிப்பபார்.
அவருக்கு கன்னியாகுமரி பக்கம் மணவாளக்குறிச்சி. பாதி மலையாளம் கலந்த தமிழ்.
'தூங்கலாமா' என்பதை 'கெடந்துறங்கலாமா' என்பார். 'என்ன பண்றீங்க' எனக்கேட்டால் 'சுகம்மா கெடக்கேன்' என பதில் வரும். 'வெளிய கெளம்ப ரொம்ப 'மடியா' (சோம்பேறித்தனமாம்) இருக்கு', 'குட்டிப்பட்டி' (நாய்), 'மாஷே! அழகான சுண்டு(உதடுகள்) அவளுக்கு'... என அவர் தமிழ் பேசக்கேட்க இனிமையாக இருக்கும். கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இஞ்சினீயராக இருந்தார்.
சுமார் 7 மணி வாக்கில் லுங்கியுடன் ஃப்ளாட்டுக்கு வெளியே வந்து செம்பூர் கொவான்டி ரோட்டில் நடப்போம். செம்பூர் ஸ்டேஷனிலிருந்து ஆறாவது கட்டிடத்தில் தான் தங்கியிருந்தோம். எதிரே உ.பி. பையா கடையில் இஸ்திரி போட சட்டை, பாண்ட்டை கொடுத்துவிட்டு அருகே செம்பூர்புவன் ஹோட்டலில் சாய் குடித்த பின், அயர்ன் செய்த உடைகளை திரும்ப வாங்கிக்கொண்டு ஃப்ளாட்டுக்கு திரும்புவோம்.
செம்பூரில் எக்கச்சக்கமாக தமிழ் பிரம்மச்சாரிகள். மாலை ஜீவன் மெஸ் போனால் அங்கே நண்பர்கள் எல்லோரையும் பார்க்கலாம். கன்னடக்காரர்கள் நடத்தும் மெஸ். நாலறை ரூபாய்க்கு தாலி. இரண்டு சப்பாத்தி, சுக்கா பாஜி, சாம்பார், ரசம், ராய்த்தா, அரிசி, கட்டோரியில் தயிர். கல்லாவின் அருகே மற்றொரு மங்களூர்க்காரன் நாலுக்கு இரண்டடி (அவன் நிற்பதே கடைக்கு வெளியே தான்) கல்கத்தா, பனார்ஸி பான் பீடா சிகரெட் கடை வைத்திருப்பான். கடையின் பக்கவாட்டில் தொங்கும் கயிற்றின் நுனியில் நெறுப்புக்கங்கு. கை விரல்களுக்கிடையே ஃபோர்ஸ்கொயர் மற்றும் வில்ஸ் ஃபில்டருடன் பெருவாரியான நண்பர்கள் சந்திக்கும் இடம் அது.
ஜெய்க்கும் எனக்கும் ஓரே வயது. ஒரே மாதிரி சராசரி உயரம். தலைமுடி ஸ்டைலில் அதிக அக்கறை, உடையலங்காரத்தில் நாட்டம், பிடித்த காலணிகள் வாங்குவது, விதவிதமான உடைகள் அணிவது, பெண்களைப்பற்றி நிறைய பேசுவது (அப்போ 1987-90ங்க), இருவருக்கும் பிடித்த நடிகை நிரோஷா, நிறைய தமிழ் சினிமா பாடல்கள் கேசட் வாங்குவது, Steve Winwood இன் Arc of the diver பாடலை வெறித்தனமாக கேட்பது, எக்ஸெல்ஸியர் சினிமாவில் பாட்ரிக் ஸ்வேய்ஸின் dirty dancing படம் பார்ப்பது, கோவிந்தாவின் ஆடலை ரசிப்பது, ஞாயிரன்று பாத்ரூமை ஆக்கிரமித்து ஜீன்ஸ் மற்றும் டீஷர்ட்டுகளை 'வர்ரக்..வர்ரக்' என ப்ரஷ்ஷால் தோய்ப்பது, செம்பூர் ஸ்டேஷன் எதிரே உள்ள கடையில் சமோசா சன்னா மற்றும் சாய் அருத்துவது, கீதா பவனில் தவறாமல் ஞாயிறன்று பொங்கல் அவியல், பைனாப்பிள் தோசா மற்றும் சரோஜ் ரெஸ்ட்டுரன்ட்டில் காஜர் ஹல்வா சாப்பிடுவது..காசிருந்தால் ஆசிஷ் தியேட்டரில் படம்.. காசில்லையென்றால் செம்பூர் ரயில்வே ட்ராக் தாண்டி ஜோப்பர்பட்டி தகர வீடுகளில் தின்னவேலி அன்னாச்சிகள் நடத்தும் வீடியோ சினிமா(புதிய பாதை, சிப்பிக்குள் முத்து..), படம் முடிந்து ஸ்டேஷன் ரோட்டோரத்தில் பரோட்டா குருமா, எக்புர்ஜி...ஞாயிரன்று செம்பூரிலிருந்து கிளம்பி மங்களூரியன்ஸ் அதிகம் வசிக்கும் பான்டிரா லிங்க்கிங் ரோட்டில் ஜீன்ஸ், டீஷர்ட் ரோட்டோரக்கடையில் வாங்குவது, சிவாஜி பார்க், வொர்லி சித்தி விநாயக் டெம்பிள், பாம்பே சென்ட்ரல் கிராண்ட் ரோடு சர்தார்ஜி கடையில் பாவ்பாஜி ( திக்கா கம்..மஸ்கா ஜ்யாதா பாய்!) எதுவுமே இல்லையென்றால் செம்பூர் டைமண்ட் கார்டன், வரும் வழியில் அகோபில மடம்... பிரம்மச்சாரிகளுக்கு நேரத்தை போக்க சொல்லியா தரவேண்டும்!
பிறகு 20th ரோடுக்கு வீடு மாறி அங்கே சில வருடங்கள். என்னுடன் பாம்பே நாட்களை கழித்த கணபதி (Ganapathi Subramanian ) மற்றும் சந்துருவுக்கும்(Balasubramaniam Chandrasekaran) ஜெய் பரிச்சயமானவர்.
திருமணமாகி அடுத்த இரு வருடங்களில் நான் பஹ்ரைன் வந்துவிட ஜெய்யும் ஓரிரு வருடங்களில் பஹ்ரைன் வந்து விட்டார். அவருக்கும் திருமணமாகி ஒரே பையன். தொடர்ந்தது எங்கள் நட்பு..குடும்பங்களுடன்.
நல்ல வேலை வாய்ப்புடன் ஜெய் துபாய் பக்கம் போக எங்கள் சந்திப்பு கடந்த பத்து வருடங்களாக வெறும் தொலைபேசியில் மட்டும்.
சென்ற மாதம் அலுவல் பணி நிமித்தம் நான் துபாய் போகவிருந்ததால் இவருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் மறுநாள் டின்னருக்கு கராமா பகுதியில் அவரது இல்லத்தில் சந்திப்பதாக முடிவானது.மாலை ஏழு மணிக்கு ஜப்லாலியிலிருந்து தனது பெரிய்ய்ய்யய ஃபோர்டு எக்ஸ்ஃப்ளோரரில் அல்பர்ஷா வந்து நான் தங்கியிருந்த நோவோடெல் ஹோட்டலில் பிக்கப் செய்ய வந்தவரை பார்த்ததும் அதிர்ச்சி. தலைமுடி, மீசை கலரடிப்பதை நிறுத்திவிட்டாலும் இளமை குன்றாத அதே முகம். மனைவி அம்பிலி சிட்டி பாங்க்கில் ஜோலி. சீக்கிரமே வீட்டிற்கு வந்து அருமையான இரவு உணவு தயாரித்திருந்தார்.
பழைய செம்பூர் நாட்களைப்பற்றி நேரம் போவது தெரியாமல் பேசிவிட்டு இரவு பதினோரு மணிக்கு திரும்ப என்னை ஹோட்டலில் இறக்கிவிட்டு விடைபெற்றுக்கொண்ட ஜெய்யை சில விநாடிகள் உற்றுப்பார்த்தேன்.. அதே வெகுளியான முகம்.. ( அப்பிடியே இருக்கீங்க மாஷே!)
பையன் அடுத்த வருடம் MBBS முடிக்கிறானாம்

ரேணிகுண்டா


ரேணிகுண்டா ஸ்டேஷன். இரவு 7 மணிவாக்கில் பம்பாய் மெயில் சோம்பேறித்தனமாக க்றீச்சிட்டு நின்றது.. 'ச்சாயே..காபி.. ச்சாயே ச்சாய்..டீ விற்பவர்கள் சத்தம். ஸ்டேஷனில் எங்கு பார்த்தாலும் தெலுங்கு எழுத்துக்கள். 'பயணிகள் கவனிக்க!' என தெலுங்கில் ஏதோஅறிவிப்பு.
'ரவுடி ராமுடு கொண்ட்டே கிருஷ்ணுடு' சினிமா போஸ்டரில் சமோசா மூக்குக்கு கீழே பென்சில் மீசை என்.டி.ஆர் கன்னத்தில் ஶ்ரீதேவி இச். தண்ணீர் பாட்டிலுடன் தபதபவென பெண்கள் குறுக்கே ஓடிக்கொண்டிருக்க, வயதான பெற்றோர்களை 'ஜல்தி வெள்ளு' என அதட்டி இழுத்துக்கொண்டு மக்கள் விரைந்துகொண்டிருந்தார்கள்.
கையில் சின்ன பையுடன் முதல் வகுப்பு தங்கும் அறைகள் பகுதியை நோக்கிப்போனேன். வாசலில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருந்தவன் தெலுங்கில் ஏதோ சொல்லும் முன் 'பாஆஆம்' என ஏதோ ரயில் ப்ளாட்ஃபாரத்தினுள் நுழைய மறுபடியும் அவன் 'ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் உந்தியா?' எனக்கேட்டான். பாண்ட்டிலிருந்து இரண்டு ரூபாய் எடுத்து அவனிடம் நீட்டி 'ஸ்நானம் காது..ஃபேஸ் மாத்ரம் வாஷ் செய்வாலெ!' என்றதும் மரியாதையுடன் உள்ளே விட்டான்.
அடுத்த பத்து நிமிடத்தில் ஜீன்ஸ் டீ-ஷர்ட்டுக்கு மாறிக்கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது 'செப்புறா! ஏஞ்ச்சேசுன்னாவு?' என இரு ஆந்திர போலீசார் இளைஞன் ஒருவனை அடிக்க கையை ஓங்க, அடி விழும் முன்பே பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி 'ஐயோ..ஐயோ.. லேதய்யா!' என இளைஞன் கத்திக்கொண்டிருந்தான்.
திருச்சானூர்.. திருச்சானூர்.. என கத்திக்கொண்டிருந்த காலி பஸ்ஸினுள் ஓடிப்போய் ஏறி அமர்ந்தேன். ஓரிரு நிமிடங்களில் புளுதியை கிளப்பி பலத்த அதிர்வுடன் பஸ் கிளம்பும் சமயம் பார்த்து இருபதுக்கும் மேற்ப்பட்ட கிராமத்து கும்பல் உள்ளே ஏறியது. பஸ் முழுக்க அடுத்த நொடி வேப்பெண்ணெய் நெடி.. கூட செம்மறியாடு வாடை. திம் திம் என பஸ்ஸின் மேற்புறம் மூட்டைகள் வைக்கும் சத்தம். பஸ் மெல்ல கிளம்பியது.
அடுத்த நிமிடம் 'நீ ரூபம் ஆனந்தமே..' என் ஸ்பீக்கரில் கண்டசாலா தெலுங்குப்பாட்டு அலற, முண்டாசு கட்டிய பாபுக்கள் தலையை ஆட்டி ரசித்தனர். பஸ்ஸுடன் சேர்ந்து கண்டசாலாவின் குரலும் கு..லு.. ங்கி..யது. 'இதெல்லாம் எப்பிர்றா!' என வியந்தவன்னம் பஸ் குலுக்கலில் நானும் முண்டாசுக்கள் மேல் சரிந்து ஆடிக்கொண்டே பிரயாணம் செய்தேன். வெளியே இருட்டு..அரை மணி நேரப்பயணம்.
சில மாதங்கள் முன்பு இரவு உணவு முடித்தவுடன் பத்து மணிக்கு, செம்பூரில் நான் தங்கியிருந்த 20த் ரோடு வீட்டை விட்டு கிளம்பி தபால் அலுவலகத்திற்கு போனேன். எனக்கு முன்னே சிலர் தொலை பேசிக்காக காத்திருந்தனர். பொது தொலைபேசியில் விரலை விட்டு நம்பரை சுழற்ற உடனே லைன் கிடைக்க எதிர்முனையில் விசாக பட்டினத்திலிருந்து என் தம்பி ரவி என்கிற விஜயராகவன்.
' ரவி!..அவங்க மெட்ராஸ் யூனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட்ங்கற..ஆபீஸ்லயும் ரொம்ப நல்ல பேரு. பாதி ஆந்திரா இன்சார்ஜ். நீயும் ராயலசீமா, காகிநாடான்னு மீதி ஆந்திரா இன்சார்ஜ்... அவங்களும் தெலுங்கு. ரெண்டு பேரும் டிசைட் பண்ணிட்டீங்கல்ல?' சாவியினால் அங்கங்கே சுரண்டி சுவரில் எழுதப்பட்டிருந்த தொலைபேசி எண்களை பார்த்தவாறு நான் தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தேன். இருபத்தி அஞ்சு நிமிடம்... நாற்பது ரூபாய் என மீட்டர் காட்ட சீக்கிரம் போனை துண்டித்து ரூமிக்கு திரும்பினேன்.
திடீரென கிராமத்து கும்பல் கடாமுடாவென என் மண்டையில் இடித்து எழுந்துகொள்ள பழைய நினைவுகளிலிருந்து நான் மீண்டு.. பஸ் நின்றிருந்தது. வெளியே திருச்சானூர். எங்கோ எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல்...
தூரத்தில் கோயில். பக்கத்தில் எக்கச்சக்கமான திருமண மண்டபங்கள். நாதஸ்வர ஒலி காற்றில் பரவ ஒரொரு மண்டபமாக பார்த்துக்கொண்டே வந்தேன். ஆ.. எனக்கு பரிச்சயமான முகங்கள்! இன்னும் பக்கத்தில் போனேன். மண்டபத்தினுள் அம்மா! நம்ம வீட்லயும் எல்லாரும் வந்திருக்காங்களே என வியந்து நான் உள்ளே நுழைய, டும்..டும் என தவில் சத்தம்..'வாப்பா ஶ்ரீதர்! நீயும் வந்துட்டியா என அக்காக்கள் என்னை நோக்கி ஓடி வர, 'ராப்பா ஶ்ரீதர்! ஒச்சேஸ்திவா? சந்த்தோஷம். ரேப்பு தரவாத்த முகூர்த்தம்'...பதட்டமில்லாமல் முகம் நிறைய புன்னகையுடன் வரவேற்ற அம்மா.
'டேய்! பாம்பேல இருந்து வந்துட்டியா!' அப்படியே என்னை அனைத்துக்கொண்டான் என் தம்பி ரவி. சற்று தள்ளி வெள்ளை வேஷ்டியில் மூத்த அண்ணன் பாபு..
இப்போதும் நான் நினைத்து ஆச்சரியப்படுவது:
1. வளைகுடாவில் பிறந்து வளர்ந்து பஹ்ரைனில் பல வருடங்கள் தினமும் ஃபுட்பால் மற்றும் செஸ் சேர்ந்து விளையாடிய ரவியின் பையன் சித்தார்த்( தற்போது கனடாவில்), சின்னவன் ப்ரணவ் (தற்போது சென்னையில்) மற்றும் பெரியவன் பிரஷாந்த் (தற்போது பம்பாயில்).
2. மஸ்கட்டில் வளர்ந்து படித்து, ஐ.ஐ.டியில் இடம் கிடைத்தும், உலகத்தர வரிசைப்பட்டியலில் முதலிடத்திலுள்ள சிங்கப்பூர் NTU வில் படித்து சிங்கப்பூர் சிட்டி பாங்க்கில் வேலை செய்யும் அர்விந்த்(ரவியின் பெரியவன்)
27 வருடங்களுக்கு முன் ரேணிகுண்டா to திருச்சானூருக்கு நான் பஸ்ஸில் சென்ற தினம் இன்று.. நேரமும் இப்போது அதே!