Thursday, June 2, 2016

சின்னத்திரை ஆராவமுதன்

12 வயதிருக்கும் எனக்கு அப்போது. இவர்களது மன்னார்குடி வீட்டில் என் தாய் மாமாவின் திருமணம். இவரது மூத்த சகோதரி தான் மணப்பெண். என்னைவிட ஓரிரு வயது இளையவர். அந்த திருமண வைபவத்தில் சின்ன பசங்களான நாங்கள் முதல் நாள் மட்டும் தான் பட்டும் படாமல் இருந்தோம். மறுநாள் முதல் அடுத்த நான்கு நாட்கள் இவருடன் சரியான லூட்டி. இவரது மற்ற மூன்று சகோதரர்களும் செம்ம அரட்டை.
வீட்டிலேயே ஒரு கலியாணம் நடத்தும் அளவுக்கு அவ்வளவு பெரிய முற்றத்தில் நலுங்கு மற்றும் மற்ற சடங்குகள் தினமும் நடக்கும். பெண் வீட்டாருக்கு பூர்வீகம் சிங்கப்பூர் என்பதால் ஒரே சிங்கப்பூர் கும்பல். தினமும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்.
"நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தேனய்யா..
ஆட்டமாடி தம்பி பாட்டுப்பாடி அழகான கோமாளி வந்தேனய்யா"
போன்ற பாடல்களை நான் மற்றும் என் சகோதரன் ரவி (Vijay Raghavan ) பாட, அடுத்து எங்கள் தங்கம் எம்.ஜி.யாரின் "தமிழ் நாடு நல்ல தமிழ்நாடு.. சட்டசபை போற்றும் தமிழ் நாடு" என இவரும் இவரது சகோதரன் அபோன்டுவும் ( Gopi Krishnan )கதாகாலட்சேபம் செய்வார்கள்.
பிறகு வருடாவருடம் ஆண்டு விடுமுறையில் சென்னையில் கூடி இவரது சகோதரர்களுடன் பட்டனத்தை சுற்றிப்பார்ப்பது..இவரது மூத்த அண்ணன் ராஜுவுடன் எக்மோர் ஸ்டேஷன் எதிரே புஹாரி ஹோட்டல் காபி, லைட் ஹௌஸ், கடற்கரை என கழித்த நாட்கள் மறக்க முடியாது.
மூத்த அண்ணன் ராஜு ( Rajagopal Venkatesan) தற்போது மன்னார்குடியில் பிரபல தொழிலதிபர், இன்டேன் கேஸ் ஏஜென்சி, அரிமா சங்கத்தில் உயர்பதவி, மேடை நாடக நடிகர்,அவரது நண்பர் டெல்லி கணேஷுடனும் ட்ராமா போட்டு நடித்துவிட்டார். மற்ற சகோதரர்கள் மாலத்தீவில் (Maldives) கல்லூரி பேராசிரியர், வங்கியில் மானேஜர் என செட்டிலாகிவிட, இவர் சினிமா கல்லூரியில் படித்து, பிரசாத் ஸ்டுடியோவில் இருந்துவிட்டு சின்னத்திரைக்கு வந்து விட்டார். டீவி சீரியல்களில் (தற்போது 'குலதெய்வம்') பிரபலமாகிவிட்டார். மறக்காமல் இந்த சகோதரர்கள் இன்னும் எங்களது பழைய நாட்களை அவ்வப்போது அசைபோடுவதுண்டு.
ப்ரோ' என என்னை வாஞ்சையுடன் அழைத்து என் முகநூல் பதிவுகளை மறக்காமல் படிப்பவர்.
'ஆரா' என செல்லமாக எல்லோராலும் 'ஆரா மாமா' என எங்கள் குடும்பத்து சிறுசுகளாலும் அழைக்கப்படும் தம்பி ஆராவமுதனுக்கு இன்று பிறந்த நாள்.
இறைவன் அருளால் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
சின்ன வயசு குறும்பு மட்டும் இன்னும் போகவில்லை (சீரியல்ல தான் பாக்கறோமே!)
ஹாங்... சொல்ல மறந்து விட்டேன்..அந்த மன்னார்குடி கல்யாணம் முடிந்து சில நாட்களில் எங்கள் மாமா புத்தம்புது ஸ்டான்டர்டு-20 கார் வாங்கி அத்தையின் பிறந்தகம் (இவரது வீடு) போய் தங்கிவிட்டு இரண்டு நாட்கள் கழித்து மதராஸ் திரும்பும் முன் யதேச்சையாக காரை பார்த்தபோது கார் கதவில் 'ஆராவமுதன்' என ஆணியால் கீறி அழுத்தி எழுதப்பட்டிருந்தது. 😄😄

No comments:

Post a Comment