Thursday, June 2, 2016

வெங்கடேஷ்

'நான் பர்துபாய் வந்தாச்சு..மாஷ்ரெக் பாங்க் முன்னால நிக்கிறேன்' என போனில் சொன்ன அடுத்த ஆறேழு நிமிடங்களில் என் முன் வந்து காரை நிறுத்தினார் நண்பர் Sankaranarayanan Venkatesh . தேசிய விருது பெற்ற 'தங்க மீன்கள்' சாதனா இவரது மகள்.
நான் துபாய் வந்ததை முகநூலில் பார்த்தவுடன் தனது அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு எப்போது வேண்டுமானாலும் ஹோட்டலுக்கு வந்து என்னை தனது இல்லத்திற்கு கூட்டிப்போவதாக தெரிவித்திருந்தார். 'தலைவரே! வைஃப் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும். நாம அதுக்குள்ளார மசாலா சாய் குடிக்கலாமா?' என கேட்டு வ்ருட்டென்று துபாய் குறுக்கு சந்து ஒன்றில் புகுந்து 'பாம்பே ட்ரீட்ஸ்'முன் வண்டியை நிறுத்தி சாபுதானா வடா, பஞ்சாபி சமோசா மற்றும் மசாலா சாய் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
டீயைக்குடித்துக்கொண்டே வரவேற்பறையை நோட்டம் விட்டேன். கண்ணாடி அலமாரி முழுவதும் நிறைந்திருந்தது. தேசிய விருது, ஏகப்பட்ட மற்ற விருதுகள், சான்றிதழ்கள், புகைப்படங்கள். சென்னையிலும் நிறைய தொண்டு நிறுவனங்களின் விருதுகள். பாடல், ஆடல், வாத்தியஇசை(வீணை), நடிப்பு, படிப்பு என சகலகலாவல்லி சாதனா. துபாய் அரசின் ஹம்தான் விருதிற்கும் விண்ணப்பம் செய்யவிருக்கிறார்கள். மூத்தவள் சஹானாவும் ஆடல் பாடல் படிப்பு என எல்லா துறைகளிலும் திறமைசாலி.
இரண்டு வருடங்கள் முன் பஹ்ரைனில் கலைமாமணி ஜாகிர் ஹுசேன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் வெங்கடேஷை முதன்முதலில் சந்தித்தேன். இரண்டு மணி நேரம் எல்லோரையும் மெய்மறக்கச்செய்த அந்த நிகழ்ச்சிக்கு நட்டுவாங்கம் இவரது மனைவி லக்ஷ்மி வெங்கடேஷ் தான். திரு. ஜாகிர் ஹுசேன் அவர்களின் சிஷ்யை. பரதக்கலைஞர் மற்றும் பாடகி...துபாய் மற்றும் மற்ற நாடுகளில் நிறைய நிகழ்ச்சிகள் செய்பவர்.
தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக தனது சொந்த நிறுவனம் ஒன்றை துபாயில் நடத்தும் வெங்கடேஷ் பழக இனியமையான மனிதர். தனது நிறுவனத்தை பார்த்துக்கொண்டே குழந்தைகளின் நிகழ்ச்சிகளுக்காக ஓடிக்கொண்டும் மனைவியின் பரதம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்துகொண்டும், காரை கர்நாடக இசையை ரசித்தபடி செலுத்திக்கொண்டும், நடுவே 'பாம்பே ட்ரீட்ஸ்' மசாலா சாய்...மனுஷன் பிசியோ பிசி.
அங்கிருந்து கிளம்பி Kannan Nagarajan வீடு வந்து சேர்ந்தோம். கண்ணனின் மகன் அபியின் பிறந்தநாளுக்கு வேண்டிய அலங்காரங்களை அவனுக்கு தெரியாமல் இரண்டே மணி நேரத்தில் சஹானா, சாதனா மற்றும் அனு மூவரும் செய்து, கேக் வெட்டி, பிட்ஸா சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.
கண்ணனின் மனைவி ஜானகி தயார் செய்த தோசை, காரகுழம்பு, கார்ன் சூப் எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு, திரும்ப விமான நிலையத்திற்கு தனது காரிலேயே வந்து விடுவதாகச்சொன்ன வெங்கடேஷிடம் அன்போடு மறுத்துவிட்டு டாக்சி பிடித்து ஏர்போர்ட் வந்து சேர்ந்தபோது மணி 8.15. ஆன்லைன் செக்கின் செய்திருந்ததால் அடுத்த சில நிமிடங்களில் விமானத்திற்குள் ஏறி அமர்வதற்குள் வெங்கடேஷிடமிருந்து போன்..'தலைவரே! டாக்ஸி கெடைச்சதா? போய்ட்டீங்களா?'
என்ன அருமையான ஜனங்கள்! இறைவனுக்கு நன்றி..

No comments:

Post a Comment