Thursday, June 2, 2016

மாதவன் மாமா.

மாதவன் மாமா..(கோம்பூர் வாங்கீபுரம் மாதவன்)
பஹ்ரைனில் தமிழ் குடும்பங்களுக்கு மத்தியில் மாதவன் மாமா மற்றும் சந்திரா மாமி என்ற பெயர்கள் மிகவும் பரிச்சயமானது. வருடமொருமுறை இந்தியாவிலிருந்து இங்கு வந்து இரண்டு மூன்று மாதங்கள் தன் இரு புதல்வர்களுடன் தங்கி பஹ்ரைனில் அனைத்து தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகளில் கலந்துகொள்வார். வேத உபநிடத்திலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டி தமிழ், ஆங்கில மொழி அறிவையும், ஆன்மிக பற்றையும் வளர்க்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உதவுபவர்.
அனுமனைப்பற்றிய கதைகள் மற்றும் ஸ்லோகங்கள், அவ்வையாரின் விநாயகர் ஸ்துதி, ஶ்ரீமத் பாகவத்தின் அரண்யகங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை அழகாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் வடித்து நண்பர்களுக்கு ஈமெயிலில் அனுப்புவது அவரது வழக்கம். மார்கழி மாதம் 30 நாட்களும் தினமும் ஒரு பாசுரத்தை எடுத்துக்கொண்டு அதை பாமரர்களுக்கும் புரியும்படி அழகாக விளக்கி, அவற்றைப் படிக்கையிலேயே சித்திரப் பண்பு (picturesque quality) பெறுகின்ற பேரானந்தத்தை நமக்கு அளிப்பவர் மாதவன் மாமா..
மாமாவின் அபரிதமான ஆங்கில எழுத்தாற்றலுக்கு பத்திரிக்கைகளில் வரும் அவரது எழுத்துக்களே சான்று. பஹ்ரைனின் Gulf Daily News ஆங்கில நாளிதழில் வாரம் ஒரு முறையாவது 'சந்திரா மாதவன்' என்ற பெயரில் அவரது கடிதங்களை படிக்கலாம். பஹ்ரைனில் அவதியுறும் தொழிலாளர்கள் இந்தியா மற்றும் பஹ்ரைனில் வாங்கிய கடனை திருப்பசெலுத்த இயலாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ளும் அவலத்தை எழுதியதுமட்டுமல்லாமல், சமூக நற்பணியென்ற பெயரில் விளம்பரம் தேடும் செல்வந்தர்களும் சங்கங்களும் இயன்றளவு அந்த ஏழைத்தொழிலாளர்களுக்கு உதவலாமேயென வேண்டுகோளும் விடுத்திருந்தார். உண்மையான நோக்கத்துடன் அறப்பணிகள் செய்யும் சங்கங்களையும் வெகுவாக பாராட்டியிருந்தார்.
முகநூலில் இவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள். பஹ்ரைனில் பாதி தமிழ் இளைஞர்களுக்கு இவர் நண்பர். பஹ்ரைனிலிருக்கும் இவரது பையன்கள் ராம் ப்ரசாத் மற்றும் விஜய் இருவரும் எனது நண்பர்களாக இருந்தாலும், அப்பாவிடம் தான் அதிகம் சம்பாஷனை எனக்கு.
Ram Prasad ஒரு CA..அருமையான கரோக்கி பாடகர். சடாரென மைக் எடுத்தால் ' ராத் கலி எக் க்வாப்மெ ஆயெ' என கிஷோர்தா பாடல்கள் பாடுவார். அவரது மனைவி சங்கீதா ஒரு கர்நாடக சங்கீத கலைஞர். பஹ்ரைனில் ப்ரபலம் என்பது மட்டுமல்லாமல் டிசம்பர் சீசனில் சென்னையிலும் பிசியாக கச்சேரி செய்பவர். விஜய் Vijay Sagar Madhavan மற்றும் அவரது மனைவி
சரன்யா Sharan Sagar இருவரும் CA படித்தவர்கள். மாமா, ராம் மற்றும் விஜய் மூவரும் நான் படித்த திருச்சி St Joseph's மாணவர்கள்..
சேலத்தில் வெளிநாட்டிற்குச்சொந்தமான மாக்னசைட் கம்பெனியோன்றில் வேலையில் இருந்தவர். தனது வேலையின் ஆரம்ப நாட்களில் கல்கத்தாவில் இருந்தவர். நிறைய நாடகங்கள் நடத்தியவர். சரளமாக வங்கமொழியும் பேசுபவர். Gopala Sundaram மாமா இவரது நாடகத்தில் நிறைய நடித்திருக்கிறாராம்.
கடந்த இரண்டு மூன்று மாதங்கள் மாமா பஹ்ரைனில் இருக்கிறார். தமிழ் நிகழ்ச்சிகள், பூஜை போன்ற எந்தவொரு நிகழ்ச்சியிலும் முன் வரிசையில் மாமாவை பார்க்கலாம். நேற்று ஆரம்பமான வசந்த நவராத்திரி விழாவிலும் தினமும் அவரை தவறாமல் பார்க்கலாம்.
சென்ற மாதம் ஒருநாள் மாமா வீட்டிற்கு வந்திருந்தார். சுமார் ஒன்னறை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தவர், காஞ்சிப்பெரியவாளின் மகிமைகளை அழகாக விளக்கிக்கொண்டிருந்தபோது தனக்கு நேர்ந்த சுவையான அனுபவமொன்றை பகிர்ந்துகொண்டார். காஞ்சிபுரம் அருகேயுள்ள ஓரிக்கையில் காஞ்சி மாஹாஸ்வாமிகள் மணிமண்டபத்திற்கு தவறாமல் பிரயாணம் மேற்கொள்பவர் மாமா. அங்கு மஹாலட்சுமி அஷடோத்ரம் சொல்லி அர்ச்சனை செய்வது அவரது வழக்கம். அதற்கு முன் அவர் காஞ்சி வரதராஜ பெருமாளை சேவித்துவிட்டுத்தான் போவார். ஒரு முறை காஞ்சிபுரம் சென்றடைய கொஞ்சம் காலதாமதமாகிவிட, வரதராஜபெருமாளை தரிசிக்காமல் மணிமண்டப கோவில் மூடும் முன் நேராக ஓரிக்கையே போய்விடலாமாவென யோசித்தார். திடீரென அவருக்கு மகாபெரியவா கனவில் தோன்றுவதைப்போல் ஓர் உணர்வு. பெருமாளை சேவித்தபிறகு தான் ஓரிக்கை செல்லவேண்டுமென்ற கட்டளை. பிறகு தயக்கத்துடன் அவர் தாமதமாக காஞ்சிபுரம் சென்றடைந்தார். கோவிலில் கூட்டம் இருக்குமென்பதால் அங்கிருந்து கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம், மற்றும் ஓரிக்கை சென்றடைய அரை மணிநேரம் ஆகும் என யோசித்தபடி பிரகாரத்தில் நுழைய..என்ன ஆச்சரியம்! அன்று கோவிலில் யாருமே இல்லை. மாமா மற்றும் அர்ச்சகர் இருவர் மட்டுமே. உடனே பெருமாளை சேவித்துவிட்டு, நடையை சாத்தும் முன்னரேயே ஓரிக்கை போய்ச்சேர்ந்தார். ராகு காலத்துக்கு முன் நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து, பயபக்தியுடனும் மனநிம்மதியுடனும் மஹாலட்சுமி அஷ்டோத்ர பாராயணம் செய்து வெகு விமரிசையாக பூஜையை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பினார் மாமா. மெய்சிலிர்க்கும் அனுபவமது.
இந்த வயதிலும் சேலத்தில் முதியோர் இல்லமொன்றை மாமா நடத்தி வருகிறார் என்பது நம்மை வியக்க வைக்கிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியா திரும்பும் மாமா மாமி அவர்களுக்கு எனது நமஸ்காரங்கள். விடைபெறும் முன் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், சிறிய அளவில் பகவத்கீதை புத்தகமொன்றையும் பரிசாக அளித்த மாமாவிற்கு நன்றி.
மாமா விடைபெற்றுச்சென்ற பின் அவர் அளித்த கீதை நூல் பக்கங்களை புரட்டியபோது பளிச்சென என்னைக்கவர்த்த வாசகம்...
" give your mind to Me, be devoted to Me, worship Me and bow to Me. Doing so, you will come to Me alone, I truly promise you.. for, you are exceptionally dear to Me.."

No comments:

Post a Comment