Thursday, June 2, 2016

கவிஞர் கா.மு.ஷெரீப்....

ஏரிக்கரையின் மேலே.. போறவளே பெண் மயிலே..
அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை..
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்...
என்றைக்குமே நெஞ்சில் நிறைந்திருக்கும் இப்பாடல்களை எழுதியவர் கவி.கா.மு.ஷெரிஃப் அவர்கள்.
தஞ்சைக்கு அருகே அபிவிருத்தீஸ்வரம் என்ற ஊரில் பிறந்த இவர் அந்த காலத்தில் 'ஒளி', 'சாட்டை', 'தமிழ் முழக்கம்' போன்ற பத்திரிக்கைகள் நடத்தி வந்தார். நிறைய நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தாராம்.
கவிஞர் கண்ணதாசன் இருந்த காலத்திலேயே இவரும் புகழ் பெற்றவர்.
"பாட்டும் நானே பாவமும் நானே' பாடலை எழுதியவர் இவர் தான் என்றும், ஆனால் இவரது ஒப்புதலுடனே ஏ.பி.நாகராஜன் அவர்கள் கண்ணதாசன் பெயரை போட்டுக்கொண்டார்" போன்ற வதந்திகள் முன்பு வந்தபோது இவரே விளக்கமளித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாராம்.
'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' (டவுன் பஸ் )
'பொன்னான வாழ்வு மண்ணாகலாமா?' (மாங்கல்யம்)
'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே' (பணம் பந்தியிலே)
'வானில் முழு மதியைக்கண்டேன்.. வனத்திலொரு பெண்ணைக்கண்டேன்' (சிவகாமி)
'ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா' (மக்களைப்பெற்ற மகராசி)
'வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்' (நான் பெற்ற செல்வம்)
அநேகமாக அவர் எழுதிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் தான்.
பெரியதாக சொத்து ஏதும் சேர்க்காமல் கடைசி வரை வாடகை வீட்டிலேயே குடியிருந்தவராம். அன்றைய முதல்வர் எம்ஜியாருக்கு நெருக்கமானவராக இருந்தும் தனக்கோ தன் குடும்பத்தவருக்கோ எந்தவொரு ஆதாயத்தையும் இவர் தேடியதில்லை. ('ராமாவரம் போகாவரம் வாங்கிவிட்டேன்' என்பராம்). கலைஞரின் உயிர் நண்பர்.
தத்துவப்பாடல்கள், சோகப்பாடல்கள், மனதிற்கினிய காதல் பாடல்கள் எழுதிய இவர் ஆபாசமான பாடல்களோ டப்பங்குத்துப்பாடல்களோ எழுதியதே இல்லை. “கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்” என்று சொன்னவர் அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் மறைந்தவர்.
கவி.கா.மு.ஷெரீப் அவர்கள் மறைந்த தினம் இன்று.
பி.கு: சென்ற வருடம் நவராத்திரி விழாவிற்காக எனது இல்லத்திற்கு வருகை தந்திருந்த கவிஞர்.அப்துல் கையூம்(தலைவர்-பாரதி தமிழ் மன்றம், பஹ்ரைன்) அவர்களுடன் அன்றைய திரைப்படங்களைப்பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருக்கும்போது ஜாம்பவான் கவிஞர்களான மருதகாசி, உடுமலை நாராயண கவி, நாமக்கல் கவிஞர், தஞ்சை ராமையாதாஸ், கா.மு.ஷெரிஃப் போன்றவர்களது பிரபலமான பாடல்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது கவி.கா.மு.ஷெரிஃப் பற்றி தனது blog (kavikamu.wordpress.com) இல் நிறைய சுவையான தகவல்களை தாம் எழுதியிருப்பதாகவும், அவரது ஓவியத்தை வரையமுடியுமாவெனவும் திரு.அப்துல் கையூம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தமையால் இன்று கா.மு.ஷெரிஃப் அவர்களின் ஓவியம் (அவரது மறைவு தினத்தையொட்டி) வரைந்து முகநூலில் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன். நன்றி திரு.கையூம்.
மேலே நான் குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் நண்பர் திரு.கையூம் அவரகளது blogஇலிருந்து திரட்(திரு)டியவையே..😀

No comments:

Post a Comment