Thursday, June 2, 2016

ராயர் மெஸ்...


காலை ஆறு மணிக்கு கணபதி போன் செய்து'ஶ்ரீதரா! பல்ல மட்டும் தேச்சுட்டு கெளம்பு... வாக்கிங் போகலாம்.' என்று சொன்ன அடுத்த அரை மணியில், உட்லண்ட்ல ஹோட்டலை விட்டு வெளியே வந்தேன். சிக்னலை கடந்து எதிரே பி.எஸ்.சிவசாமி சாலையை பிடித்தேன். ஜன நடமாட்டம் அதிகமில்லை. அதிகாலையில் துப்புரவுத்தொழிலாளர்கள் மட்டும் அங்கங்கே. ஶ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமி குரு பாதுகா மண்டபம் தாண்டும்போது எம்மெஸ்ஸின் குரல் அந்த காலை வேளையில் மனதிற்கு இதம்..
மஹாலக்ஷ்மி அபார்ட்மென்ட் வாசலில் காத்திருந்த கணபதி என்னுடன் சேர்ந்துகொள்ள மெல்ல நடத்தோம். இடது புறம் இந்திராணியம்மாள் தெரு, பாலூர் கன்னியப்பன் தெரு என குறுக்கு தெருக்கள். பழ வியாபாரிகள் கடை திறக்க பழங்களை அடுக்கிக்கொண்டிருந்தார்கள்.
"இதாண்டா வீணை பாலச்சந்தர் வீடு.." கணபதி காட்டிய வீட்டின் வாசல் பெயர்ப்பலகையில் வீணை வடிவத்தில் பாலச்சந்தர் என்று எழுதப்பட்டிருந்தது. 'நாலு பக்கம் ஏரி.. ஏரியில தீவு.. தீவுக்கொரு ராணி...ராணிக்கொரு ராஜா..' ஈஸ்வரி பாடும், அவர் இயக்கி நடித்த 'நடு இரவில்' படப்பாடல் நினைவுக்கு வந்தது.
ராயப்பேட்டை மெயின் ரோடு பிடித்து சுவாரசியமாக பேசியபடி நடந்தோம். பேச்சு நமது முகநூல் நண்பர்களைப்பற்றித்தான். கணபதி ஃபேஸ்புக் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருந்தான் போலும்.
"அதென்னமோடா ஶ்ரீதர்.. மாஞ்சு மாஞ்சு கஷ்டப்பட்டு பகவத் கீதாவையெல்லாம் கோட் பண்ணி எழுதினா நாலைஞ்சு கமென்ட்டும், ஏழெட்டு லைக்ஸும் தான் விழறது. ஆனா நீ பஹ்ரைன்ல ஃப்ரெண்ட்ஸோட குல்ஃபி சாப்ட்டுண்டு 'செல்ஃபி...குல்ஃபி' ன்னு தலைப்பை போட்டு எழுதினதுக்கு நூறு கமென்ட்டு கவனிச்சியா?"...
"சரி... அது யாருப்பா அந்த சிங்கை சிவா?"....
"கடசீல நம்ம சப்தரிஷி வைத்திய ஃபேஸ்புக்ல புடிச்சிட்டேம்ப்பா"..
"ஶ்ரீதரா... சில பேருக்கு பயமே இல்ல பாத்தியா... அந்த திருமலை சா என்னமா எழுதறாரு பாரு!.. என்.டி.டி.வி 'பரக்காவெட்டி தத்'தாம்". கணபதி சமீபத்தில் முகநூலுக்கு அடிக்ட்டாகிவிட்டான் என்பது தெரிந்தது.
இடது பக்கம் தண்ணித்துறை ஆஞ்சநேயர் கோவிலும் வலது பக்கம் கமலம் காபி ஓர்க்ஸ்( சமையல் வெண்ணை நெய் வியாபாரம்) கடந்து கச்சேரி ரோடுக்குள் நுழைந்து அருண்டேல் தெரு கடைசி கோவில் குருக்களிடம் விஜாரித்து வலது பக்க சந்தில் நுழைந்தால் 'ராயர்ஸ் உணவகம்' என்ற பச்சைக்கலர் பெயர்ப்பலகை.
அந்த சந்தில் பத்து பதினைந்து மோட்டர் பைக்குகள் மட்டுமே நிறுத்தலாம். த்ரீ ஃபோர்த் போட்ட வடநாட்டு மாணவர்கள் வாசலில் நின்று காபி குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆண்கள் பெண்கள் வெளியே காத்திருக்க மனோஜ் என்ற பையன் நம் பெயரை காகிதத்தில் குறித்துக்கொண்டான். அடுத்த இருபது நிமிடத்தில் நம் பெயரை கூப்பிட்டதும் உள்ளே நுழைந்தோம்.
தரையில் காபி டபராக்களை சிறுவர்கள் அலம்பிக்கொண்டிருக்க, அவர்களைத்தாண்டி குறுகிய காரிடரில் வழியில் நின்றுகொண்டு காபி ஆற்றிக்குடிப்பவர்களை கடந்து இடது பக்க அறையில் நுழைந்தால் மொத்தம் நான்கே மேசைகள், 16 பேர் மட்டுமே அமரலாம். தலைக்கு மேல் மங்கிய டியூப்லைட்டிற்கு மேல் ஸ்தாபகர்கள் படங்கள். சற்று தள்ளி ஆணியில் மாட்டப்பட்ட விசிறி, அம்பாள் படம், தமிழ் காலண்டர்.
டிபன் இலையில் தண்ணீர் தெளித்ததும் கெட்டி சட்னி (கின்னத்தில்), தே. சட்னி, கார சட்னி. இட்லி வரும்வரை கெட்டி சட்னியை விரல் விட்டு நக்கி பார்த்தேன். அருமை.. செம காரம். பின் வித்தியாசமான டிபன் சாம்பார். கேட்டவர்களுக்கு பொடி எண்ணெய். பிறகு சுடச்சுட இட்லி. பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்ட குழிக்கரண்டியால் நெய்ப்பொங்கலை பக்கெட்டிலிருந்து வழித்து நம் இலையில் போட்டவரை நன்றியுடன் பார்த்தேன். கருவேப்பிலை, மிளகுடன் வாயில் போட்ட நெய்ப்பொங்கலை ருசி பார்க்க நாக்கு நினைத்தாலும் மனம் முந்திக்கொண்டு அவசரமாக தொண்டையில் வழுக்கிக்கொண்டு இறக்கியது. உள்ளே பெரியவர் ஒருவர் பெரிய்ய கடாயில் உளுந்த வடை போட்டுக்கொண்டிருந்தார்.
பொங்கலையும் இட்லியையும் சட்னிகளில் தோய்த்து சாம்பாரில் முக்கியெடுத்து விழுங்கியபின், இலையிலிருக்கும் கரைந்த பொங்கல் சாம்பாரை ஸ்லர்ப்.. ஸ்லர்ப் என மக்கள் ஸ்வாஹா செய்து கொண்டிருக்க, அடுத்து மெதுவடை... ஆளுக்கு ஒன்று, இரண்டென இலையில் வைக்க, ஹிந்தி பேசும் சிறுவர்கள் சாம்பார் சட்னி அடுத்த ரவுண்டு பரிமாறினார்கள். சட்டென ஓரிரண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டோம். வயிறு நிரம்பினாலும் மேலும் இரண்டு இட்லி சாப்பிட ஆசை.
பத்தே நிமிடத்தில் கிடுகிடுவென பந்தி முடிய நிறைய பேர் எழுந்து கொண்டார்கள். 'இன்னும் மூனு இட்லி பாக்கியிருக்கு' என அந்தப்பெண் அறிவிக்க கூச்சத்துடன் நான் ஒன்று வாங்கிக்கொண்டேன்.
வாஷ்பேஸினில் கையலம்பும்போது கவனித்தேன்... மூன்று நான்கு கிரைன்டர்கள் சட்னிக்கும் வடைக்கும் ஆடி அரைத்துக்கொண்டிருந்தன. பெண்மணி காபி ட்ரேயை நீட்ட அருமையான ஃபில்டர் காபி பருகிய பின் வெளியே வரும்போது, முட்டித்தள்ளியபடி அடுத்த பந்திக்கு உள்ளே வரும் மக்கள்.
கன்னடம் பேசும் ராயர்களாம் அவர்கள். ஐம்பது, அறுபது வருடங்களுக்கு மேல் அந்த மெஸ்ஸை நடத்துகிறார்களாம். உள்ளே வடை போடுபவர் ஸ்தாபகரின் மூத்த மகன். அவரது பையன் மனோஜ் தான் பெயர்களை குறித்துக்கொண்டு நம்மை உட்கார வைப்பவர். மெக்கானிக்கல் இஞ்சினீயராம். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை.வெளியே வாடிக்கையாளர்களை கவனிப்பவர் மூத்தவரின் தம்பி மோகன். 'சார்... சொல்லுங்க' என சுவற்றில் காகிதத்தை வைத்து நாம் சாப்பிட்ட அயிட்டங்களைக்கு கணக்கு போட்டு பணம் வசூலிக்கிறார். பொடி, எண்ணெய், கெட்டி சட்னிக்கு தனியாக சார்ஜ். ஞாயிறு காலை இட்லி, வடை, பொங்கல் மட்டுமே.
எஸ்.வி.சேகர், க்ரேஸி மோகன் போன்ற பல பிரமுகர்கள் அங்கு வருகிறார்களாம். முன்பு எம்.ஜி.ஆருக்காக இங்கே டிபன் ஆர்டர் செய்வார்களாம்.
லாப நோக்கம் இல்லாமல் தரமான சிற்றுண்டியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதையும் ஐம்பது அறுபது வருடங்களாக சம்பாதித்த பெயரை காப்பாற்றும் நோக்கமே ராயர்களின் வெற்றியின் ரகசியம். உரிமையாளர் மோகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது (படம் பார்க்க) எளிமையும் நடுத்தர வர்க்கத்திற்குறிய வறுமையும் அவரிடம் தெரிந்தது. பெரியதாக அவர் ஒன்றும் சம்பாதிக்கவில்லை என்பது சத்தியம். கணபதி கொடுத்த அன்பளிப்பையும் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு ஐட்டமும் பத்து பதினைந்து ரூபாய் மட்டுமே என்றால் என்ன சம்பாதிப்பார் எனத்தெரியவில்லை.
திரும்ப முன்டகன்னியம்மன் கோவில் தெரு வழியாக வரும்போது நாக்கில் காரத்துடன் காபியின் சுவை இன்னும் இருந்தாலும் கனத்த மனதுடன் தான் ஹோட்டல் அறைக்கு திரும்பினேன்.

2 comments:

  1. எனக்கு இப்ப பசி எடுக்க ஆறம்பிக்குது

    ReplyDelete