Thursday, June 2, 2016

சப்தரிஷி வைத்யநாதன்..

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் தாண்டி தஞ்சாவூர் ரோட்டிலிருந்து வலது பக்கம் திரும்பினால் பொன்மலை ரயில்வே காலனி ஆரம்பம். அடுத்த நூறு மீட்டருக்குள் பொன்மலை ரயிலடி..எதிரே மரங்களடர்ந்த பெரிய பங்களா வீடு. உள்ளே நுழைய ஒரு கேட்....வெளியே வர மற்றொரு கேட். பல நாட்கள் மணிக்கணக்காக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்த வாசல் கேட் அல்லவா! ரயில்வே டிவிஷனல் இஞ்சினீயர் சப்தரிஷி அவர்களின் வீடு அது. அவரது பையன் வைத்தி, நான், கணபதி (Ganapathi Subramanian) , கணபதி சுந்தரம், ஜோசப் எல்லோரும் CA பரீட்சைக்கு சேர்ந்து படிப்போம்.
இஞ்சினியரிங் கிடைக்காமல் கோபமாக திருச்சி செயின்ட் ஜோசப்ஸில் பி.எஸ்ஸி பௌதிகம் படித்து பிறகு CA படிக்க வந்தவர்கள். ரயில்வே ப்ளாட்ஃபார்ம், பொன்மலை ஆர்மரி கேட், ஜோசப் வீடு அல்லது ஏதாவது ஒரு ஷெட் என ஒவ்வொரு இடத்திலும் தினமும் சேர்ந்து படிப்போம். என்னை விட ஆரேழு மாதங்கள் சிறியவனான வைத்தி தான் எங்கள் குழுவில் முதலில் CA பாஸ் (1985) செய்தது.. அடுத்து கணபதி..கடைசியில் நான்.
தேவர் ஹால் எதிரே ஆடிட்டர் குமாரசாமியிடம் CA ஆர்ட்டிகிள்ஸ் செய்த வைத்தி, 80களில் முழுக்கை சட்டையை இன் செய்து கருகருவென சுருள் முடி மற்றும் பட்டை மீசையுடன் கோவார்டிஸ் அணிந்து லூனா மொப்பைட்டில் எங்கள் வீட்டிற்கு வரும் ஸ்டைலே தனி.
கொஞ்சமும் மாறாத அதே ஸ்டைலை இன்று காலை நாங்களிருவரும் பெங்களூர் Ballal ரெஸிடென்ஸியில் காலை உணவுக்காக சந்தித்தபோது கண்டேன். அரைக்கை லினன் சட்டை, ஜீன்ஸ், அதே பட்டை மீசை, குளிர் கண்ணாடி மற்றும் கட் ஷூவுடன் சினிமா நடிகன் போல வந்த வைத்தியிடம் எனக்கு பிடித்தது டான் என 9.30 க்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஆஜர் ஆனது.
பல வருடங்களுக்கு முன் தான் பெங்களூரில் ரியல் எஸ்டேட் கம்பெனி தொடங்கி, பப்ளிக் இஷ்யூ மற்றும் பங்குச்சந்தை லிஸ்டிங் போன்றவைகளுக்குப்பின், பல பெரிய குடியிருப்பு கட்டிடங்கள், ஹோட்டல் மற்றும் மால் போன்ற ப்ராஜெக்டுகள் செய்து கொண்டிருக்கும் நிறுவனம் அது.
எக்ஸிக்யூடிவ் டைரக்டராக வெற்றிகரமாக தனது நிறுவனத்தை நடத்தும் வைத்தியுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தபோது நான் கண்டது நேர்மை, கடும் உழைப்பு, தரமான கட்டுமானம், அதிக லாப நோக்கமின்மை, வர்த்தகத்தை நிலைநாட்டுதல் (sustainability). வியாபாரத்தை பேராசையில்லாமல் ஆர்வமுடன் செய்தாலே அதிக இலாபமீட்டமுடியும் என்பது வைத்தியின் கருத்து.
ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நிதி மற்றும் அதன் பின்புலம் சார்ந்த CAவின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை வைத்தி விளக்க முறுகல் ரவா தோசை சாப்பிட்டுக்கொண்டே நான் கேட்டுக்கொண்டிருந்தேன். நாம் படித்த கணிதம் மற்றும் பொருளாதாரம் எந்த அளவிற்கு நிதி சார்ந்த வடிவமைப்புக்கள் (financial models) அமைக்க உதவுமென்பதையும் விவாதித்துக்கொண்டிருந்தோம்.(ஒந்து மிசி நீரு கொடி..)
திருச்சியின் பழைய நண்பர்கள் எல்லோரைப்பற்றியும் பேசிக்கொண்டிருப்பதில் என்னவொரு சுகம். குறிப்பாக கணபதி, பல்லடம் ஶ்ரீதர் (வேற யாரு.. நம்ம Sridharan Srinivasan தான்), வைத்தியின் அண்ணன் வெங்கடேஷ் (.L.s. Venkatesan ), ஶ்ரீரங்கம் ஶ்ரீதர் (ஓவியர் மாருதி இவரின் தாய்மாமன்)...
80களில் சின்ன பையனாக வலம் வந்த, தனது ஆடிட்டர் குமாரசாமியின் மகன் நளன் தான் 'சூது கவ்வும்' பட இயக்குநர் என்பது கூடுதல் தகவல்.
மேலும் நாலைந்து மணி நேரங்கள் பேச நிறைய சமாசாரங்கள் இருந்தாலும், நாங்களிருவரும் தற்போது பிள்ளைக்குட்டிக்காரர்களாகிவிட்டதாலும், மற்ற அலுவல்கள் இருப்பதாலும், கிளம்ப மனமில்லாமல் பழைய நினைவுகளை அசைபோட்டவாறே விடை பெற்றுக்கொண்ட என்னை தனது காரிலேயே இறக்கி விட்ட சப்தரிஷி வைத்தியநாதனை ( Vaidya Rishi ) நினைக்க பெருமையாக இருந்தது.

No comments:

Post a Comment