Thursday, June 2, 2016

ஆயிரத்தில் ஒருவன்: திருவிளந்தூர் பாலு...


இவ்வருடம் பஹ்ரைன் நவராத்திரியில் 'பாஹுபலி' இடம்பெற்ற கொலு இவர் வீட்டில் மட்டும் தான் என நினைக்கிறேன். குட்டி குட்டி மலைகள்...மலையின் மேல் ஒரு குட்டியான பெண் பொம்மை. உற்றுப்பார்த்தால் படு நேர்த்தியாக ஒட்டப்பட்ட தமன்னாவின் முகம். இந்தப்பக்கம் கையில் வில்லுடன் மலையிலிருந்து தாவும் ப்ரபாஸ். கீழே உயரமான வீரன் பொம்மை (அட நம்ம கட்டப்பா!) அந்தப்பக்கம் கருப்பான முரட்டு பொம்மை (காலகேயா)..சண்டை போடும் போர்க்களம்.. பல்லால்தேவா...நடுவே தண்ணீர் விட்டு சிறிய குளம் செய்திருக்கிறார்கள். தண்ணீரிலிருந்து வெளியே மேலே வரும் கையில் (ரம்யா கிருஷ்ணன்) குழந்தை பொம்மை... பிரமிப்பாக இருந்தது.
கொலு பார்த்த பின் அந்தப் பக்கம் நகர்ந்தால் சுவற்றில் ஒரு காகிதத்தை ஒட்ட வைத்திருந்தார் Jayashree Balu . அதில் அவர்கள் வீட்டு கொலுவிலிருந்து சில கேள்விகள். 'ஔவையார் முன் நிற்கும் சிறுவன் கையில் என்ன?'..போன்ற பத்து கேள்விகள். கொலுவை மறுபடியும் பார்க்காமல் நாம் பதில் தரவேண்டுமாம். அற்புதம்.
பஹ்ரைனின் மிகப்பெரிய வங்கி ஒன்றின் compliance பிரிவின் தலைவர் நண்பர் பாலு. சென்ற வருடம் Manchester Business school பஹ்ரைன் மத்திய வங்கியுடன் சேர்ந்து நடத்திய IDC(International Diploma in Compliance) பரிட்சையில் உலகளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று இந்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்.
சென்னைக்காரரான நண்பர் பாலுவிற்கு பூர்விகம் மாயவரம். ஐம்பது வயது தாண்டியவர் மாதிரியே இல்லாத உருவம்.இந்தியாவில் யூகோ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளில் உதவி பொது மேலாளர் போன்ற பதவிகளில் இருந்துவிட்டு நேராக கரீபியக்கடலில் குதித்தவர். கரீபியத்தீவுகளான, பனைமரங்களும் வெள்ளை மணலும் கொண்ட, Trinidad & Tobago மற்றும் West Indies போன்ற நாடுகளில் வங்கி வேலையிலிருந்து விட்டு பத்து வருடங்களுக்கு முன் பஹ்ரைன் வந்து செட்டிலானவர்.
இரண்டு நாட்கள் முன் நவராத்திரி அழைப்பிற்காக அவரது இல்லத்திற்கு சென்ற எங்களை முதலில் வரவேற்றது 'மும்பை ஸ்பைசஸ்' சாட் கார்னர். பேல்பூரி, பானிபூரி, சேவ்பூரி எல்லாம் முடிந்து ஹாலுக்கு வந்தால் கொலு.. அந்தப்பக்கம் சப்பாத்தி சன்னாவில் ஆரம்பித்து விதவிதமான சாப்பாட்டு ஐட்டங்கள்... டெஸர்ட் வரை.
அலமாரி முழுக்க விசா மற்றும் கிழக்குப்பதிப்பக புத்தகங்கள். தேவனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் ஆயிற்றே! சி.ஐ.டி சந்துரு, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்..மற்றும் நிறைய சுஜாதா நாவல்கள், பொன்னியின் செல்வன் (ஆங்கிலத்தில்).
இவரது மனைவி ஜெயஶ்ரீ டெல்லியில் படித்து வளர்ந்தவர். சென்ற வருடம் நடந்த இவர்களது மகளின் பரதநாட்டிய அரங்கேற்ற விழாவின் ஸ்பான்சர்களில் எங்கள் ட்ராஃப்கோவும் ஒன்று. விழா முடிவில் திருக்குறளை மேற்கோள் காட்டி நண்பர் பாலு ஆற்றிய உரை மிகவும் அருமை.
சடசடவென சதா பேசிக்கொண்டிருக்கும்போது பாலு படார் படாரென ஜோக்குகளை நிறைய உதிர்க்கிறார். முதன்முதலில் வேலையில் சேர்ந்து ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் ட்ரெய்னிங் சென்றபோது சேர்மன் அவர்கள் அளித்த சிறப்புரையில் 'can you all tell why you chose this career?' என கேட்க, ஆளாளுக்கு 'வங்கித்துறைக்கு வரவேண்டுமென்பது எனது passion'...'நிறைய பணம் சேர்க்க'... 'நல்ல career உருவாக்க' என விதவிதமான பதில்கள். கடைசியில் அவர் மர்மப்புன்னகையுடன் சொன்ன பதில்.. ' because you all did not get a better job!'. கூட்டம் கப்சிப். குறும்புக்காரரா இருப்பார் போல. கடைசியாக அவர் மற்றொரு கேள்வி கேட்டாராம். ' ok.. Now tell me why we selected you people out of 3 lacs?'. யாரும் பதில் சொல்ல முன்வரவில்லையாம். 'இந்தாளு கொஞ்சம் வெவகாரமான ஆளு..எதாவது வில்லங்கமா பதில் வச்சிருப்பாரு'. யாரும் வாயைத்திறக்காததால் அவரே கடைசியில் ' because we did not get better candidates!. என ஒரு போடு போட்டார். வெடிச்சிரிப்பு சிரித்து கலகலவென பேசும் பாலுவிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பும்போது இரவு மணி பதினொன்று.
மூன்று லட்சம் பேர் எழுதிய ஸ்டேட் பாங்க் ப்ரொபேஷனரி ஆபிஸர்களுக்கான தேர்வில் மூவாயிரம் பேரை நேர்க்காணலுக்கு அனுப்பி கடைசியில் தேர்வான வெறும் முன்னூறு பேர்களில் இவரும் ஒருவர். (அதனால் பதிவின் தலைப்பை மறுபடியும் பார்க்க).

No comments:

Post a Comment