Thursday, June 2, 2016

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு...

திருமதி.புலபகா சுசிலாவை (பாடகி சுசிலாம்மா தாங்க!) அவர்கள் இல்லத்தில் (வாசலில் 'சுசிலா மோகன்' பெயர்ப்பலகையாம்) இவர் சந்தித்தது பற்றி முகநூலில் படு சுவாரசியமாக எழுதியிருப்பார். மற்றொரு பாடகியுடன் பேசிக்கொண்டிருந்த சுசிலா அவர்கள் இவரை வரவேற்று, நலம் விசாரிப்பு சம்பிரதாயங்கள் முடிந்தவுடனேயே 'நீங்க என்னை ரொம்பவே புகழ்ந்திருக்கீங்க' என சொல்லி இவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம். அதாவது பத்மபூஷண் விருது பெற்றதற்கு பாராட்டு தெரிவித்து இவர் முன்பு எழுதிய கட்டுரையை யாரோ சுசிலாம்மாவிடமே சேர்த்திருப்பது அப்போது தான் இவருக்கு தெரிந்ததாம். என்னவொரு இனிய தருணம் அது! ஐம்பதுகளில் சலூரி ராஜேஸ்வர்ராவ், டி.சலபதி ராவ், ஆதிநாராயண ராவ், ஜி.ராமநாதன் போன்ற பத்துக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களிடம் பாடி சுசிலா பிரபலமடைந்தது பற்றியும்,
டி.ஜி.லிங்கப்பாவின் ஒரே பாடல் மூலம் (அமுதை பொழியும் நிலவே) புகழின் உச்சியை அடைந்து பற்றியும், டி.ஆர். பாப்பா வரை (வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே) அத்தனை இசையமைப்பாளர்களைப்பற்றியும் சுசிலாம்மாவுடன் சில மணி நேரங்கள் இவர் நடத்திய சம்பாஷனைகளை பார்த்து அசந்து விட்டார்களாம் அங்கு வந்திருந்த பாடகி சுஜாதா மற்றும் அவரது மகள் ஸ்வேதா மோகன்.
'என்னதான் ரகசியமோ இதயத்திலே', 'மலர்கள் நனைந்தன பனியாலே', 'உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல' பாடல்களைப்பற்றி இவர் சுசிலாம்மாவிடம் விவாதித்தது பற்றி விரிவாக குறிப்பிட்டிருப்பார். 50களில் சுசிலா அவர்களுடன் திரையுலகில் போட்டியிட்ட ML வசந்தகுமாரி, ராதா ஜெயலக்ஷ்மி, பாலசரஸ்வதி, P லீலா, ஜிக்கி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, டி.எஸ்.பகவதி, டி.வி.ரத்தினம், AP கோமளா மற்றும் ஜமுனாராணி அனைவரையும் பின்னுக்குத்தள்ளி 60க்குத்தாவி புகழின் உச்சியை அடைந்ததை இவர் சுசிலாம்மாவிடம் குறிப்பிட்டபோது அவரது முகத்தில் தெரிந்த மலர்ச்சியை அழகாக குறிப்பிட்டிருப்பார். பாடலை பாடுவதற்கு முன் கதையையும் பாடல் காட்சியின் சிச்சுவேஷனையும் இயக்குநர் தனக்கு முழுவதும் விளக்கி விட்டதால் தாய்-மகள் உறவை அப்பாடலில் அழகாக வெளிப்படுத்தியிருப்பதாக சுசிலாம்மா சொன்னார்களாம். பாடல் என்னவென்பதை இந்நேரம் நீங்கள் யூகித்திருக்கலாம் ('ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு'- காவியத்தலைவி). வேறு யாருடனும் இந்த அளவிற்கு சுசிலா அவர்கள் தனது பாடல்களைப்பற்றி கலந்துரையாடியிருப்பார்களா என்பது சந்தேகம் தான்.
இசையமைப்பாளர் மனயங்கத்து சுப்ரமணியம் விஸ்வநாதன் (MSVன்னாத்தான் நமக்கெல்லாம் தெரியும்) இறப்பதற்கு முன் சமீபத்தில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் இவர் எழுதிய இரங்கல் பதிவை 'ஆளுக்கொரு தேதி வெச்சி ஆண்டவன் அழைப்பான்' என்று MSVயே பாடிய பாடல் வரிகளிடன் முடித்திருக்கும் விதம் அருமை.
SV சுப்பையா என்றாலே நம்மில் நிறைய பேருக்கு அவர் வி-கழுத்து பனியனுடன், கக்கத்தில் துண்டுடன் குனிந்து 'சொல்லுங்க எசமான்' என வந்து நிற்பதும், துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணில் நீர் தளும்ப, துண்டை வாயில் பொத்திக்கொண்டு அழுகையை அடக்க முயற்சிக்கும் முகம் தான் நினைவுக்கு வரும். ஆனால் சுப்பையா அவர்களைப்பற்றி ஒரு முழு நீளப்பதிவே இவர் எழுதியிருப்பார். குறிப்பாக சுப்பையா அவர்களே தயாரித்து 'சூப்பிரென்டென்ட் ராகவனாக' நடித்த 'காவல் தெய்வம்' படம் பற்றிய பதிவு. எத்தனை பேருக்குத்தெரியும் அல்லது நினைவிருக்கும் அது ஜெயகாந்தன் அவர்களின் 'கை விலங்கு' கதையென்றும், கே.விஜயன் இயக்கத்தில் ஜி.தேவராஜன் இசையமைப்பில் வெளிவந்த சுப்பையா அவர்கள் தயாரித்த படம் என்பது? இப்பதிவில் நான் மிகவும் ரசித்த பகுதி மாணிக்கமும்(சிவகுமார்) கோகிலாவும் (லட்சுமி) பாடும் 'அய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்' பாடல் பற்றிய தகவல், பாடலைப்பாடிய தாராபுரம் சுந்தர்ராஜன் மற்றும் பாடலாசிரியரான மாயவநாதன் (அதுவும்..இவரது ஸ்டைலில் 'the forgotten Mayavanathan' னாம்!).. 1969இல் நான் ஈரோட்டில் கைக்காளந்தோப்பில் இருந்து குதிரை வண்டியில் சென்று தியேட்டரில் இப்படத்தை பார்த்து ரசித்த நினைவலைகளுக்கு இவரது இந்த பதிவு என்னை கொண்டு சென்றது என்பது உண்மை.
'கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்' தான் நம்ம KB சுந்தராம்பாள் போன்ற தகவலை இவரது முகநூல் பதிவைத்தவிர எந்த பத்திரிக்கையிலும் நாம் படித்திருக்க வாய்ப்பில்லையென நினைக்கிறேன். சுந்தராம்பாள் சிறு வயதில் ரயிலில் பாட்டுப்பாடி பிழைத்தவர் என்பதும் பிறகு பிரபலமாகி SG கிட்டப்பா அவர்களை காதலித்து மணந்தார் போன்ற தகவல்கள் மட்டும் தான் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அவர் செங்கோட்டை கங்காதர கிட்டப்பாவை (முழு பெயரெல்லாம் எப்பிடீங்க ப்ரதர் கெடைக்கிது உங்களுக்கு!) எப்படி சந்தித்தார், எப்படி காதலித்தார், பிறகு சூழ்நிலை எப்படி இருவரையும் பிரித்தது, பிரிந்த கணவருக்கு எப்படி அவர் கடிதம் எழுதினார், இக்கடிதத்திற்காவது பதில் போடுங்கள் என KBS கெஞ்சியது, கடிதத்தின் கடைசி வரிகளில் 'தங்கள் அன்பையே ஆபரணமாகக்கொண்ட அடியாள் சுந்தரம்' என கையெழுத்திட்டது, பின் மறுபடியும் இருவரும் இனைந்தது, சேர்ந்து சில நாட்களிலேயே 26 வயதான சுந்தராம்பாளை தனியாக விட்டுவிட்டு 27 வயதிலேயே கிட்டப்பா அவர்கள் அகால மரணமடைந்தது, அதற்குப்பின் ஆண்களுடன் சேர்ந்து நாயகியாக நடிப்பதில்லை என முடிவு செய்து கடைசி வரை வெந்நிற ஆடையிலேயே தன் மீதி நாட்களை கழித்தது....மை காட்! கடந்த 20 வருடங்கள் துபாயில் உட்கார்ந்துகொண்டு எப்படி இவ்வளவு தகவல்கள் திரட்டி வைத்திருக்கிறார்! பிரமிப்பாக இருக்கிறது.
1942இல் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்ததாக குறிப்பிட்டு வயலின் வித்வான் L. வைத்தியநாதனைப்பற்றி இவர் எழுதிய பதிவை படித்து மலைத்துப்போனேன்.
'திலிப் குமார் வைஜயந்தி மாலா நடித்த 'Naya Daur' ஹந்திப்படத்தின் தமிழாக்கமான 'பாட்டாளியின் சபதம்' பற்றி இவர் எழுதிய பதிவில் ஹிந்தித்திரையுலகின் பல அரிய விவரங்களை காணலாம்.
தண்டபாணி ஜெயகாந்தனைப்பற்றி இவர் எழுதிய 'யாருக்காக அழுதான்' மற்றும் பாதை தெரியுது பார்' பதிவுகள் இரண்டும் (அதுவும் இரண்டிரண்டு பாகங்களுடன்) வரிக்கு வரி படித்து முடிக்க குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும்.
சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் PB ஶ்ரீனிவாஸ் அவர்களுடன் இவர் உரையாடியதைப்பற்றி எழுதிய பதிவில் PBS இன் குறும்புப்பாடல்களான 'வாடாத புஷ்பமே' (அடுத்த வீட்டுப்..), 'மாடி மீது மாடி கட்டி' (காதலிக்க நே..), 'ஜாவ்ரெஜா' (குமரிப்..), 'காதல் என்பது எதுவரை' (பாத கா..) என சுமார் பத்து பாடல்களை குறிப்பிட்டும், சரித்திரம் படைத்த பாடல்களான 'நிலவே என்னிடம் நெருங்காதே', 'காலங்களில் அவள் வசந்தம்' போன்ற எக்கச்சக்கமான பாடல்களையும் வரிசைப்படுத்தி இவர் நமக்கு வழங்கியிருப்பார். அடுத்து 'ஏன் சார்! அறுபதுகளின் கடைசியில் உங்கள் திரைப்பயணத்தின் வேகம் திடீரென குறையத்தொடங்கியதே!' என்ற இவரது கேள்விக்கு PBS அவர்கள் புன்முறுவலுடன் நெற்றிக்கு குறுக்கே விரலால் கோடு போட்டுக்காட்டியதை இவர் அழகாக குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த வருடம் (2013) மீண்டும் சந்திப்போமென இவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்ட PBS அவர்களால் தன் வாக்கை காப்பாற்ற முடியவில்லை என உருக்கமாக குறிப்பிட்டு 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடல் வரிகளுடன் பதிவை முடித்திருப்பார்.
வி.குமாரைப்பற்றி ('உனக்கென்ன குறைச்சல்.. நீ ஒரு ராஜா..') இவர் எழுதிய நீண்ட பதிவு அட்டகாசம். வி.குமாரின் உருவப்படம் வரைய எனக்கு வலைதளத்தில் சரியான புகைப்படம் கிடைக்காதபோது இவரது பதிவில் அருமையான படம் கிடைத்தது. தமிழ் சினிமா உலகம் மறந்த வி.குமாரின் மனைவி பாடகி ஸ்வர்ணா ( 'என்னோடு என்னென்னவோ ரகசியம்') மற்றும் மகன் சுரேஷ் இவருடன் இப்போதும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். வி.குமார் அவர்கள் வீடு இருக்கும் தெருவுக்கும் இவரது பெயர் தானாம்.
பழம்பெரும் மலையாள இசையமைப்பாளர் MB ஶ்ரீனிவாசன் அவர்களைப்பற்றி நமக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. தமிழில் மொத்தம் 8 படங்கள் மட்டும் செய்திருக்கும் இந்த இசையமைப்பாளரைப்பற்றியும் இவர் விரிவாக எழுதியிருக்கிறார் (சிட்டுக்குருவி பாடுது.. தன் பெட்டைத்துணையை தேடுது..தென்னங்கீற்று ஊஞ்சலிலே..)
எந்த ஒரு பிரபலத்தைப்பற்றி எழுதும்போதும் அவர்கள் பிறந்த ஊர், இயற்பெயர், சிறுவயதில் அவர்கள் செய்த சாதனைகள், அவர்களது குரு, அவர்களை யார் ஊக்குவித்தவர்கள், எப்படி திரையுலகில் காலடி வைத்தார், என்னென்ன படங்கள் அல்லது பாடல்கள், ருசிகரமான அல்லது சோகமான சம்பவங்கள் என அவர்களது கடைசி கால சம்பவங்கள் வரை விரிவாக எழுதும் திறன் இவருக்குண்டு. 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற தலைப்பில் நடிகை ஶ்ரீவித்யா பற்றிய பதிவு என்னை பிரமிக்க வைத்தது. சென்னையின் அந்தக்கால எலியட்ஸ் ரோட்டில் (இப்போது ராதாகிருஷ்ணன் சாலையென்று அடைப்புக்குறிக்குள் போட்டுவிட்டார்) அவர்கள் வீடாம். மீனாட்சி(ஶ்ரீவித்யாவின் பெயராம்) தன் தாத்தா அய்யாசாமி அய்யருடன் தினமும் காலை ரிக்‌ஷாவில் காய்கறி வாங்க தண்ணித்துரை மார்க்கெட் ( லஸ் ஆஞ்சநேயர் கோவில் பக்கம்) போவது வழக்கமாம். மறக்கமுடியாத அந்த தினசரிப் பயணமே மீனாட்சியின் இசைப்பயணத்தின் முதல் மைல்கல் என அழகாக குறிப்பிட்டிருக்கிறார். அதாவது வீட்டிலிருந்து போகும்போது தாத்தா சொல்லிக்கொடுக்கும் ராகங்கள் மற்றும் வாய்ப்பாட்டுக்களை திரும்ப வரும்போது அவரிடம் ஒப்பிக்க வேண்டுமாம். பத்தே வயதில் அந்தப்பெண் மேடைக்கச்சேரி செய்யும் அளவிற்கு தயாரானாள் என்பதையும், மதராஸ் லலிதகுமாரி வசந்தகுமாரியின் (MLV) பெண் அவர் என்பதில் ஆச்சரியமில்லை என்பதையும் இவர் குறிப்பிட்டிருந்த விதம் அருமை.
மறைந்த தக்ஷணாமூர்த்தி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு ('ஆண்டவனில்லலா உலகமிது..ஐலசா')
வாணி ஜெயராம், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பற்றிய கட்டுரைகள்.
தெலுங்கு திரையுலகத்தைப்பற்றி முழுக்க எழுதியிருப்பார் 'இப்படியும் ஒரு பெண்ணா' என்ற தலைப்பில் பானுமதி ராமகிருஷ்ணா பற்றிய பதிவில்..
GK வெங்கடேஷ் ('தொடுவதென்ன தென்றலோ மலர்களோ..') பற்றிய இவரது பதிவு மனதை கனக்கச்செய்யும். ஏற்ற இறக்கங்கள் நிறைந்த அவரது திரையுலக வாழ்க்கை வரலாற்றை வரிக்கு வரி ரசிக்கும்படி எழுதியிருப்பார். அவரது தமிழ், கன்னட, தெலுங்குப்பட பாடல்களை அத்தனையும் வரிசைப்படுத்தி கடைசி காலங்களில் அவர் பட்ட கஷ்டங்களை குறிப்பிட்டு கடைசியில் அவரிடமே பணியாற்றிய இளையராஜாவின் உதவியை பெற்று, பிறகு அவர் மறைந்ததை இவர் 'காலம் வந்தது.. கதை முடிந்தது.. போகிறேன்' என அவரது பாடல் வரிகளுடன் முடித்த அந்த பதிவை நாம் நீண்ட பெருமூச்சுடன் தான் படித்து முடிப்போம்.
நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar இவரைப்பற்றி எழுதிய பதிவு ஒன்றில் குறிப்பிட்டது:
"ம‌க்க‌ளைச் ச‌ற்று நேர‌மாவது, அவ‌ர்க‌ளின் க‌வ‌லைக‌ளை ம‌ற‌ந்து ம‌கிழ்வுற‌ச் செய்த‌ சிறிய, பெரிய‌ க‌லைஞ‌ர்க‌ளையும் த‌மிழ்நாட்டு ம‌க்க‌ளின் வாழ்வில் பின்னிப்பிணைந்த‌ திரைப் பாட‌ல்க‌ளையும் அத‌ற்கு பின் இருந்த‌ முக‌ம் தெரியாத‌ க‌லைஞ‌ர்க‌ளையும் இன்றும் நினைவில் நிறுத்தும் திரு-----ஐ தாராபுர‌ம் சுந்த‌ர்ராஜ‌னும், கோவை சௌந்த‌ர்ராஜ‌னும் நிச்ச‌ய‌ம் மேலுல‌கிலிருந்து வாழ்த்துவார்க‌ள்".
பி.கு:
அது சரி...யார் இவர்? ஐம்பதுகளில் நடந்த சினிமா செய்திகளையும், நாம் கேள்விப்பட்டிராத வடநாட்டு திரையுலக ஜாம்பவான் நிமாய் கோஷ் அவர்கள் பற்றியும் இன்று எழுதும் இவருக்கு சுமார் 60 வயதாவது இருக்கலாம் என எல்லோரும் நினைக்கலாம். மன்னிக்கவும். சின்னப்பையனாட்டம் இருக்கிறார் சார்.. வயது 40ஐக்கூட எட்டியிருக்க முடியாதென்பது என் ஊகம்.
பள்ளியில் ஹிந்திப்பாடம் மட்டுமே எடுத்த இவர் தமிழில் சுமாராகவே எழுதமுடியுமென்பதால் திரையுலகம் பற்றிய பதிவுகள் அனைத்தையும் அருமையான ஆங்கில நடையில் எழுதுபவர். இவரது ஆங்கிலப்புலமை மற்றும் எழுத்தின் ஆளுமை பற்றி பாராட்ட வார்த்தைகளில்லை. தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் இசையமைப்பாளர்கள் மற்றும் தெலுங்கு, ஹிந்தி, மலையாள திரையுலக புள்ளிகள் பற்றிய தகவல்களும் ஏராளமாக வைத்திருப்பவர். அவர்களை அவ்வப்போது நேரிலும் சந்தித்து அச்சந்திப்பைப்பற்றி விரிவாக எழுதுவார். சில பிரபலங்கள் தங்களைப்பற்றிய அரிய தகவல்கள் வைத்திருக்கும் இவரையே சந்திக்க விரும்புகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Dhool.com இல் சில வருடங்கள் திருச்செந்துரை ராமமூர்த்தி சங்கருடன் சேர்ந்து சினிமா பற்றி நிறைய கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தவர். இவரது பெற்றோருக்கே இவர்Dhool.com இல் எழுதிக்கொண்டிருப்பது நண்பர்கள் மூலம் தான் தெரிந்ததாம். 1963இல் கிண்டி இஞ்சினியரிங் கல்லூரியில் படித்த இவரது தந்தை Bala Natarajan னின் நண்பர் பசுபதி (கனடா)கூறியது: 'தமிழ் திரைப்பாடல்கள் பற்றிய தரமான கட்டுரைகளை படிக்க விரும்புவோர் அவசியம் இவர் எழுதும்Dhool.com வலைதளத்தை பார்க்கலாம்.'
இவர் ஒரு சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் . உலகமெங்கும் பரவி வெற்றிகரமாக இயங்கும் ஜெம் கல்வி நிறுவனத்தின் தலைமை தணிக்கையாளர் (Chief Internal Auditor).
சென்ற வாரம் நான் துபாய் வந்திருப்பதாக இவருக்கு தெரியப்படுத்தியதும் உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மறுநாளே சந்திப்பதாக முடிவு செய்தோம். இரண்டு நாட்கள் முழுக்க எனக்கு அலுவல் சம்மந்தப்பட்ட மீட்டிங்குகள் இருந்தாலும், துபாயின் ஒரு கோடியில் ஜுமேய்ரா பகுதியின் பா(ல்)ம் தீவில் நான் தங்கியிருந்த அட்லான்டிஸ் ஹோட்டலுக்கே 45 நிமிட கார் பயணம் செய்து வந்துவிட்டார். 30 நிமிடங்கள் போதுமென முடிவு செய்திருந்த எங்கள் சந்திப்பு ஒரு மணி நேரத்தைத்தாண்டவே, ஐந்தாவது மாடியறையிலிருந்து கடல்அலைகளை பார்த்துக்கொண்டு நேரம் போவது தெரியாமல் போய்க்கொண்டிருந்த எங்கள் பேச்சை சட்டென முடித்துக்கொண்டோம். பிரிய மனமில்லாமல் காரிடரிலும் சிறிது நேரம் பேச்சு.. எதிரே வந்த பிலிப்பினோ இளம்பெண் உதவியுடன் எங்கள் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு , லவுஞ்ஜ் வரை பேசிக்கொண்டே நடந்து, பின் கட்டியனைத்து விடை பெற்று, அவர் கார் பார்க்கிங் பக்கமும் நான் திரும்ப மீட்டிங் ஹால் பக்கமும் ஓடினோம்.
நன்றி..நன்றி..நன்றி Saravanan Natarajan

No comments:

Post a Comment