Thursday, June 2, 2016

சார்... தபால்.....!

25.08.1991
பம்பாய்
அன்புள்ள அம்மாவிற்கு,
அநேக நமஸ்காரம். இங்கு நான் நலம். இதுபோல் அங்கு உங்கள் இருவரது ஷேமத்தையும் தெரியப்படுத்தவும். காய்ச்சல் எப்படி உள்ளது. சொக்கலிங்கம் டாக்டரிடம் போனீர்களா? மருந்து மாத்திரை ஒழுங்காக சாப்பிடவும். நான் அனுப்பிய ட்ராஃப்ட் கிடைத்ததா? காரைக்குடி ஜாதகம் வந்ததா? எனக்கு வரவர இங்கு மெஸ் சாப்பாடு ஒத்துவரவில்லை. உடன் பதில் போடவும்.
இப்படிக்கு,
ஶ்ரீதர்.
---------------------------------
11.09.1991
திருச்சி
அன்புள்ள ஶ்ரீதருக்கு உன் அம்மா ஆசிர்வதித்து எழுதிக்கொண்டது.
இங்கு நாங்கள் நலம். நீ பாம்பே வந்து அஞ்சு வருஷமாகப்போகிறது. இத்தனை வருடமில்லாமல் திடீரென்று இப்போது மட்டும் எப்படி மெஸ் சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை? (யாரு கிட்ட!)
காரைக்குடிக்காரர்கள் நேற்று வந்திருந்தார்கள். ஜாதகம் பொருத்தியிருக்கிறது. பெண் போட்டோ இத்துடன் அனுப்பியுள்ளேன். பெண் லட்சணமாக இருக்கிறாள். பி.ஈ படித்துவிட்டு அதே காலேஜில் (காரைக்குடி அழகப்பா எஞ்சினீயரிங் காலேஜ்) லெக்சரராம். பெண் பிடித்திருக்கிறதா என பதில் போடவும்.
தற்போது எனக்கு காய்ச்சல் தேவலை. ராத்திரி கால் குடைச்சல் மட்டும் தாங்கமுடியவில்லை. நீ பாம்பேயிலிருந்து வாங்கி வந்த இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர் அடுத்தமுறை மற்றொன்று வாங்கி வரவும். எதிர் வீட்டு மாமிக்கு வேண்டுமாம்.
இப்படிக்கு,
உன் அம்மா.
------------------------------
15.09.1991 (எவ்ள சீக்கிரம் பதில் போவுது பாருங்க)
பம்பாய்
அன்புள்ள அம்மாவிற்கு,
பெண் போட்டோ பார்த்தேன். எனக்கு பிடித்துள்ளது. ஏன் சின்னதாக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மட்டும் அனுப்பியிருக்கிறீர்கள்? ( அடி செறுப்பால!). பெண்ணின் உயரம் தெரிந்து கொள்ளத்தான். நீங்கள் வரதட்சினை எதுவும் வாங்க வேண்டாம். என் ஃப்ரெண்ட்ஸ் கணபதி, Paddu, சந்துரு, மகாதேவன் யாரும் டௌரி வாங்கவில்லையாம்.
இப்படிக்கு ஶ்ரீதர்.
--------------------------------
01.10.1991
திருச்சி.
அன்புள்ள ஶ்ரீதர்,
பெண்ணின் உயரம் 150 செ.மீட்டராம். வேற போட்டோ எதுவுமில்லையாம். ஏழு வயசு போட்டோ மட்டும் தான் உள்ளதாம். (😢😢). உன் நண்பர்கள் வரதட்சினை வாங்காததால் தான் நீயும் வாங்கமாட்டேன் என்கிறாயா? வாங்கக்கூடாது என உனக்கே சுயமாக தோன்றவில்லையா? (செம்ம அடி..யப்பா!).
நேரத்திற்கு ஒழுங்காக சாப்பிட்டு தூங்கவும். சீத்தா மரம் நன்றாக வளர்ந்து ஒன்றிரண்டு காய் வந்துள்ளது.
இப்படிக்கு அம்மா.
------------------------------
12.10.1991
பம்பாய்
அன்புள்ள அம்மா,
பெண் வீட்டுக்காரர்களுக்கு பாம்பேயில் யாரோ இருக்கிறார்கள் போலிருக்கிறது. எங்கள் ஆபிஸ் ரிஸப்ஷனில் 'பையன் எப்படி' என வந்து விசாரித்திருக்கிறார்கள். ரிஸப்ஷனில் இருக்கும் பெண் லஞ்ச்சுக்கு போயிருந்ததால் வேறு யாரோ 'பையன் நல்லவன் தான்' என சொல்லியனுப்பினார்களாம். (அப்பாடா! சொன்னவன் நம்ம தோஸ்த் தான்).
ஜாதகம் பொருந்தியிருப்பதால் இந்த இடத்தையே முடித்துவிடவும். எனக்கு இரண்டு நாளாக வயிறு சரியில்லை. டாக்டர் வெளியே அதிகம் சாப்பிடவேண்டாம் என சொன்னார்கள்.
இப்படிக்கு,
ஶ்ரீதர்.
-----------------------------
25.10.1991
திருச்சி
அன்புள்ள ஶ்ரீதருக்கு உன் அம்மா எழுதியது. நீ சாயங்காலம் ஆபிஸ் விட்டு நேராக ரூமுக்கு வராமல் ஜுஹு பீச், சினிமா என சுற்றுவதாக சந்துருவின் அப்பா சொன்னார். கண்ட இடங்களில் பாவ் பாஜி, பட்டாடா வடா சாப்பிடுவதால் தான் உனக்கு வயிறு கெட்டிருக்கும். ஒழுங்காக மெஸ்ஸில் மட்டும் சாப்பிடவும்.
உன்னைப்பற்றி உன் ஆபிஸ் ரிஸப்ஷனில் விஜாரித்தார்கள் என்பது உண்மை தான். அந்த ரிஸப்ஷன் பெண் கூடத்தான் நீ மதியம் லஞ்ச்சுக்கப்பறம் ஐஸ்க்ரீம் சாப்பிடப்போயிருப்பதாக சொன்னார்களாம்.(போட்டுக்குடுத்துட்டானா!)
பெண்ணின் அம்மாவின் பூர்விகம் பெங்களூராம். அப்பா காரைக்குடி. பெண்ணின் தாத்தாவும் அப்பாவும் தங்கம், வைரம் வியாபாரம் செய்தவர்களாம். அப்பா தற்போது ஃபைனான்ஸ் மற்றும் அடகுக்கடை வைத்திருக்கிறாராம். காரைக்குடியில் பனியாரக்கல்லும் ஜல்லிக்கரண்டியும் வாங்கினோம்.
இப்படிக்கு அம்மா.
----------------------------------
(நான் பதில் போடும் முன் அடுத்த கடிதமும் அம்மாவிடமிருந்து..)
-----------------------------------
30.10.1991
திருச்சி
அன்புள்ள ஶ்ரீதர்,
முடிந்தால் லீவு எடுத்துக்கொண்டு வரவும். சாங்கியத்துக்கு பெண்ணை நீ வந்து பார்த்துவிடலாம்.
பெண்ணுக்கும் வயது கூடிக்கொண்டே போவதால், பையன் பார்க்க சுமாராக இருந்தாலும் பரவாயில்லை முடித்துவிடலாமென பேசிக்கொள்கிறார்களாம். (ஙே!)
எனக்கு அந்த கடைசி பல்லும் நேற்று விழுந்துவிட்டது.
இப்படிக்கு அம்மா.
----------------------------------
பி.கு: நான் பிறகு பதில் எதுவும் போடவில்லை. நம்மள யாராரு கவுக்க ரெடின்னு வெளிய எல்லாம் தேடிப்போவேணாங்க!

No comments:

Post a Comment