Thursday, June 2, 2016

ம.வெ.சிவகுமார்

எழுத்தாளர் ம.வெ.சிவகுமார் மரணம்..
1980 என நினைக்கிறேன். டிகிரி முடித்து CA சேரும் முன் திருச்சியிலிருந்து சென்னை சென்றிருந்த சமயம். இராஜாஜி சாலையில் பீச் ரோடு கிளை பாங்க் ஆஃப் பரோடாவில் 'ஷ்ராஃப் கம் கிளர்க்' காக வேலை செய்து கொண்டிருந்த என் மூத்த அண்ணனை பார்க்கச்சென்றிருந்த சமயம்... 'இவன் தான் MV சிவகுமார். கூட வேலை செய்யறான். நிறைய எழுதுவான்' என எனக்கு அறிமுகப்படுத்தியதோடு லஞ்ச்சுக்கும் அவருடன் என்னை அழைத்துச்சென்றான் அண்ணன்.
பாக்யராஜ் கண்ணாடி.. நீண்ட தலைமுடி.. ஸ்டெப் கட்.. பெல்பாட்டம் பேண்ட், ஓவியர் ஜெயராஜ் மாதிரி மீசைக்கு நடுவே சரியாக மூக்குக்கு கீழே முடி முளைக்காத இடைவெளி.... பின்னால் இந்த MV சிவகுமார் தான் பிரபல எழுத்தாளர் ம.வெ.சிவகுமார் ஆவார் என்பது தெரியாமல் பருப்பை பிசைந்து நெய்க்காக காத்திருந்தேன். அந்த ஹோட்டலில் எல்லோரும் திரும்பிப்பார்க்கும்படி கலகலவென சப்தமுடனும் நடுவே ஹாஹ்ஹா என இடிச்சிரிப்பு சிரித்தும் செம்மையாக அரட்டையடித்துக்கொண்டு 'டேய் தம்பி! கொஞ்சம் மோர் விடப்பா' என கத்திக்கொண்டிருந்தார் MV சிவக்குமார் . அதே வங்கியின் சூளைமேடு கிளையில் பாலகிருஷ்ணன் என்ற இளைஞரும் இருந்தார். ( அவரும் பாங்க் ஆஃப் இந்தியா சுரேஷும் சேர்ந்து 'சுபா' என்று பின்னாளில் பிரபலமடைந்த இரட்டை எழுத்தாளர்கள்)
எக்மோர் கன்னிமரா நூலகம் அருகே இயங்கிக்கொண்டிருந்த பரீக்ஷா (ஞானி சங்கரன்) வுடன் இனைந்து நிறைய நாடக வசனங்கள் எழுத ஆரம்பித்த சிவக்குமார் அந்த நாடக அனுபவங்களினால் 'வட்டம்' என்ற சிறுகதையை முதன்முதலில் கனையாழியில் எழுதினார். பின் விகடன், கல்கி (பாப்கார்ன் கனவுகள்), குங்குமம் (குதிரைகள்) என வரிசையாக அவரது கதைகள் வரத்தொடங்கின.
எழுத்துலகில் பிரபலமடைந்ததும் மெல்ல சின்னத்திரையிலும் சினிமா உலகிலும் நுழைந்தவுடன் தான் அவருக்கு சோதனைகள் ஆரம்பம்.
தேவர் மகன் படத்தில் சரியான பெயர் மற்றும் சம்பளம் வரவில்லையென நிறைய பிரச்சினைகள். சின்னத்திரையில் பிரபல சினிமா இயக்குநரின் சீரியலுக்கு கதை எழுதி அதில் பெயர் மட்டுமல்ல... சம்பளமும் சரியாக வரவில்லை. இயக்குநரின் வீட்டு வாசல் முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சத்தம்போட்டு கத்தியதும் ஓரளவு பணம் கிடைத்ததாம். பிறகு 'என்னாச்சுப்பா?' என கேட்ட நடிகர் ஒருவரிடம் 'உங்க குருவாச்சே! உங்கள மாதிரி தான் இருப்பார்' என முகத்திற்கு நேரே தயங்காமல் சொல்லும் சிவகுமார் கொஞ்சம் முன்கோபி.
இதய நோயால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்தில் pace maker பொருத்தப்பட்டிருந்தது. சினிமா படமெடுக்க வீட்டை விற்றதுடன், கடன், பணப்பிரச்னை. அதிக மன உளைச்சல். மகளின் திருமணம் ஒரே வருடத்தில் முறிந்தாலும் உடனே மறுமணம் செய்து வைத்தது ஓரளவு அவருக்கு நிம்மதியை கொடுத்தது. மகளின் திருமணத்தை சக்கர நாற்காலியிலிருந்தவாறே நடத்தினார் என்பது வேதனை. மகனும் TCSஇல் நல்ல வேலையில் அமர்ந்தான்.
ஆனால் உடல் உபாதை பல வருடங்கள் நீடித்திருந்தது என்பது மிகவும் வேதனை.
பல வருடங்கள் முன் பாங்க் ஆஃப் பரோடாவிலிருந்து முதல் பாட்சில் பென்ஷன் இல்லாமல் VRSஇல் ரிடையர் வாங்கிக்கொண்டபோது இவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓரளவு பென்ஷன் கொடுக்க மேலிடத்தில் ஒப்புக்கொண்டார்களாம்.
இன்று காலை நண்பர்கள் மூலம் இவர் இறந்த விபரம் என் அண்ணனுக்கு தெரிந்தபோது அதிர்ச்சியடைந்ததை விட, எப்படி இறந்தார் என கேள்விப்பட்டபோது இன்னும் அதிர்ச்சி... வீட்டிலிருப்பவர்கள் காலை இவரது அறைக்குச்சென்றபோது நாற்காலியில் உட்கார்ந்தவாறே இறந்திருப்பது தெரிய வந்ததாம், டீ.வி இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்.
இரண்டு வருடங்கள் முன் பஹ்ரைனில் எங்களது ICAB (Indian Chartered Accountants Bahrain) Toastmasters எனப்படும் public speaking ஃபோரம் வருடாந்திர ஆங்கில பேச்சுப்போட்டியில் 'touching story' என்ற தலைப்பிலான எனது பேச்சு பரிசு பெற்றதற்குக்காரணம் எழுத்தாளர் ம.வெ.சிவகுமார் தான். டில்லி செல்லும் இவரை அனுப்ப ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்த தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தபோது அப்பாவின் கை மேல் இவரது கை உரச, அந்த ஸ்பரிசத்தினால் இவருக்கு நல்ல கரு கிடைக்க, தந்தை-மகனின் உன்னதமான உறவைப்பற்றி இவர் 'ஸ்பரிஸம்' என்ற கதை எழுதியிருப்பதைப்பார்த்ததும் எனது பேச்சுப்போட்டிக்கும் நல்ல கரு கிடைத்தது. கொஞ்சம் சுட்டுவிட்டேன்.. கொஞ்சமென்ன 'கட் அன்ட் பேஸ்ட்' தான்.
CA படித்து முடித்து பம்பாயில் நல்ல வேலையில் சம்பாதித்துக்கொண்டிருத்தாலும் சினிமாவிற்கும் ஜீன்ஸ் பாண்ட்டிற்கும் சினிமாப்பாடல் காசெட்டுகளுக்கும் சிலவு செய்துகொண்டு, அப்பாவிற்கு பணம் அனுப்பாமல், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு திரிந்த என்னை ஒரு முறை வழியனுப்ப அப்பா திருச்சி ஜங்ஷன் வந்திருந்தபோது ஜன்னல் கம்பியை பிடித்தவாறே ரயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அவரது கை விரல்களுடன் என் கைகள் உரச (கட் அன்ட் பேஸ்ட் இந்த இடத்தில் முடிந்தது), வெடுக்கென இருவரும் கைகளை இழுத்துக்கொள்ள ( இதெலேந்து நம்ம சரக்கு) , சட்டென்று என்னை ஏறிட்டு நோக்கிய அப்பாவின் கண்களை நான் தவிர்க்க, சில நொடிகள் விசித்திர மௌனம்... பிறகு 'பென்ஷன் பத்தலை...அப்பப்போ ஏதாவது முடிஞ்ச அளவு பணம் அனுப்புப்பா' என்று சொல்லி சட்டைப்பையில் ப்ளாட்ஃபார்ம் டிக்கட் இருக்கிறதாவென சரிபார்த்து அப்பா சரேலென நகர்ந்த நொடியில் அவரின் அந்த 'ஸ்பரிசம்' என்னை எப்படி மாற்றியது, பின் பார்க்கின்சன் நோயால் அவர் பேசும் திறன் இழந்து (இனி உண்மைச்சம்பவங்கள்) வருடாவருடம் அவரைப்பார்க்க பஹ்ரைனிலிருந்து நான் போகும்போது அவரது கைகளை ஆதரவாக பற்றிய நிலையில் அவருடன் பேசுவது, 'மதராசபட்டினம்' பட இடைவேளையில் கைத்தாங்கலாக அவரை கூட்டிக்கொண்டு போய் அவருக்குப்பிடித்த முக்கோன வடிவ காய்கறி சமோசா வாங்கித்தந்தபோது அவரது கண்களில் (பச்சை நிற விழிகள் அவருக்கு) நான் கண்ட ஒளி....அடுத்த வருடம் 82 வயதில் அவர் இறந்தாலும் அந்த 'ஸ்பரிசம்' இன்னும் என் மனதில் உயிருடன் இருப்பதாகச்சொல்லி முடித்த எனது உரைக்கு சந்தேகமில்லாமல் முதலிடம் கிடைத்து போது கவனித்தேன், ஃபிலிப்பினோ ஜட்ஜ் பெண்மணி கண்களை துடைத்து டிஷ்யூ பேப்பரில் மூக்கை சிந்தினார்.
சென்ற வருடம் திருச்சியிலிருந்து தொலைபேசியில் ம.வெ.சிவகுமாருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது 'ஸ்பரிசம்' கதையின் கருவையும் தாக்கத்தையும் கொண்டு ஆற்றிய என் உரையைப்பற்றி குறிப்பிட்டபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்த அவர் 'பாத்து எத்தனையோ வருஷமாச்சுப்பா.. உங்கண்ணாவைப்பத்தி கூட விகடன்ல ஒரு கதை எழுதினேன். அடுத்த வருஷம் வர்ற போது நேர்ல சந்திக்கலாம் வா' என்று முடித்தவர் தான் பாவம்.
சென்ற அக்டோபர் மாதம் 60 வருடங்கள் பூர்த்தி...இந்த வருடம் உயிருடன் இல்லை.
'விதிப்படி தான் நாம இறப்போம்.. அதனால மருந்து மாத்திரை சாப்பிட மாட்டேன். I am not scared of my death' என விவாதிப்பரிடம் என்ன சொல்வது?
'நீ எவ்வளவு பெரிய ஆளானாலும் ஒரு நாள் பூஜ்யமாத்தான் போய்ச்சேருவே... அத மனசுல வச்சித்தான் என் முதல் கதைக்கு 'வட்டம்'னு பேர் வச்சேன்' என்று சொன்ன அவர் சரியாகத்தான்....,ஹ்ம்..

No comments:

Post a Comment