Thursday, June 2, 2016

பிச்சை சார்....

90களில் பம்பாயில் பங்குச்சந்தை பற்றி தெரிந்தவர்களை விட தெரியாதவர்களே அதிகம் அதைப்பற்றி பேசிக்கொண்டும் வர்த்தகம் செய்துகொண்டும் இருந்த நேரம். செம்பூரில் இருந்து காலை 8.11 லோக்கலில் ஏறினால் 'சங்கம் அலுமினியம் படுத்துடுச்சாமே.. நீ வித்துட்டியா' போன்ற சம்பாஷனைகளை சகஜமாக கேட்கலாம்.
ஒரு நிதி நிறுவனத்திலிருந்து வேலையை விட்டுவிட்டு பம்பாயின் மிகப்பெரிய கப்பல் சேவை நிறுவனத்தில் சேர்ந்திருந்திருந்தேன். இரண்டு கப்பல்கள் சொந்தமாக வைத்திருப்பவர்கள். பங்கு வர்த்தகமும் செய்பவர்கள். பம்பாய்த்தமிழர்களுக்கு சொந்தமான கம்பெனி அது. பூர்வீகம் நாகர்கோவில்/திருநெல்வேலி அவர்களுக்கு. துறைமுகங்கள் உள்ள அனைத்து நகரங்களிலும் அவர்களுக்கு கிளைகள். எம்.டி முதல் பியூன் வரை தமிழும் மலையாளமும் தான். 70 வயதான பிச்சை என்பவர் தான் எனக்கு பாஸ். எம்.டி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சித்தப்பாவாம். கனரா வங்கியில் பொது மேலாளராக ரிடையராகி இங்கே அட்வைசராக இருக்கிறார். சரளமான மலையாளமும் நெல்லைத்தமிழும் கலந்து பேசுவார். எப்போது கோபம் வருமென்று கணிக்க முடியாது. கோபம் வந்தால் கொலவெறி தான்.
'எலே.. ரமணி! இன்னிக்கி காபால் வரக்காங்கலியே. மங்களூர்ல என்ன மயித்துக்கு உக்காந்துண்டிருக்கே?' போனை எடுத்து அவர் உச்ச ஸ்தாயியில் கத்தும்போது பக்கத்திலிருந்த பாலக்காட்டுப்பையன் 'புள்ளி.. ச்சூடாயி' என யாருக்கோ விளக்கிக்கொண்டிருந்தான். எல்லா கிளை அலுவலகங்களிலிருந்து CABAL (cash bank balance) தினமும் காலை அவரது மேசைக்கு வந்துவிடவேண்டும். தாமதமானால் ரணகளம் தான்.
சில வேலைகளை எனக்குக்கொடுத்துவிட்டு அவர் வெளியூர் போயிருந்தார். தாய் மற்றும் துணை நிறுவனங்களுக்கு இடையேயான பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நான் கணக்கில் எழுதி அவர் திரும்பி வந்ததும் காண்பித்தபோது மனைஷன் அகாசத்துக்கும் பூமிக்குமாக குதிக்க ஆரம்பித்தார்.
' உங்கள நா இந்த ஜோலிய செய்யச்சொல்லலியே.. ஆரைக்கேட்டு செய்தீரு?'
' இல்ல சார்.. பாங்க் ரிகன்சிலியேஷன் செய்யிறப்போ இந்த என்ட்ரியெல்லாம் போட்டாத்தான் டேலியாகும். அப்பறம் ஆடிட்டு பண்றப்போ ப்ராப்ளம் இல்லிங்களா?' (இப்ப என்னை பாராட்டுவார் என நினைக்க)
' நீங்க ஆடிகிட்டோ ஆடாமலோ ஒன்னத்தயும் சறைக்க வேணாம்.. மொதல்ல பேப்பர எடுத்துகிட்டு இங்கேர்ந்து போங்கேன்' என விரட்டினார். மனுஷனுக்கு BP எகிறிவிட்டது.
அங்கிருந்து கிளம்பும்போது 'ராமசாமி சார் தான் செய்யச்சொன்னார்' என நான் லேசாக முனுமுனுத்து தான் தாமதம்... அவர் உடனே போனை எடுத்து ' ராமசாமி எங்கடே.. வரச்சொல்லு அந்த தாயோளிப்புள்ளய'. பாண்ட்டை மேலே இழுத்துக்கொண்டு அவரது அறைக்கு ஓடிய ராமசாமி அடுத்த பத்து நிமிடத்தில் வெளியே வரும்போது என்னைப்பார்த்த பார்வையிலேயே கெட்டவார்த்தைகள் தெரிந்தன. படுகுள்ளமான ராமசாமி தான் ஃபைனான்ஸ் மானேஜர் அங்கே. டோம்பிவிலியிலிருந்து வருபவர். ஹிண்டு பேப்பரும் டிபன் டப்பாவும் கொண்ட சின்ன ப்ரீஃப்கேஸுடன் ஸ்டேஷனில் ட்ரெயின் வந்து நிற்கும்முன் ஓடித்தாவி ஏறி இடம் பிடிப்பவர்.
மறுநாள் கோபத்தையெல்லாம் மறந்து பிச்சை சார் சகஜமாக பேசிக்கொண்டு காபியும் கொடுத்தார். சாதாரணமாக நல்ல மூடில்தான் இருப்பார். ஆனால் இன்கம் டாக்ஸ், ஆடிட்டர், சி.ஏ, அல்லது ஆடிட் சம்மந்தமான அலர்ஜி வார்த்தைகளை கேட்டாலே கெட்ட கோவம் வந்துவிடும். அதை சரியாக கவனிக்காமல் நானும் 'என் ஃப்ரெண்டு ஒருத்தன் சார் இப்பிடித்தான்.. அவனும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ' என ஆரம்பிக்க.. " சரி சரி.. சீட்டுக்கு போங்க.. ச்சார்ட்டர்ட் அக்கவுன்டு.. சானி திங்கிற அக்கவுட்டு... " என முனுமுனுத்தார்.
நிறுவனத்தின் நிதி நிலை நன்றாக இருந்ததால் பங்கு வர்த்தகத்தில் நல்ல முதலீடு அவர்களுக்கு. பிச்சை சார் ஒரு நாள் பங்குத்தரகர் ஒருவரிடம் என்னை அனுப்பி....
'அவங்க உங்களுக்கு short selling சம்மந்தமான சில ட்ரான்சாக்‌ஷன் சொல்லித்தருவாங்க.. போய் கத்துகிட்டு வாங்க.. நல்லா கவனிங்க.. ஊட ஊட கேள்வி கேக்காதீய.. வெளங்கா?'
' ஓகே சார்.. ஒரு சின்ன ரிக்வெஸ்ட்..ராமசாமி சாரையும் கூட்டிகிட்டு போட்டுமா சார்.. அவருக்கும் வரனும்னு...' என இழுத்தேன.
' ராமசாமியப்பத்தி உங்களாண்ட நாங்கேட்டனா? உள்ளூர்லயே அவன் ஓணான் புடிக்கல..இனி உடையார்பாளையத்துலயா உடும்பு புடிக்கான்?'
எது கேட்டாலும் திட்டு தான். தலைதெறிக்க பங்குத்தரகர் ஆபிசுக்கு ஓடினேன். அந்த புரோக்கருக்கு பெருத்த சரீரம். முதல் இரண்டு மூன்று நாட்கள் தனது பெண் சோனாலி சொல்லிக்கொடுப்பாளென அவர் என்னை அடுத்த அறைக்கு அனுப்ப, ஓரிரண்டு பணியாளர்களுக்கு மத்தியில் பளிச்சென இருந்த அவரது மகள் சோனாலியை கண்டு நான் பிரகாசமடைந்தேன். ரோஸ் நிறம், அழகான விழிகள் மற்றும். உதடுகள், சுருள் இல்லாத நேரான கேசம், குஜராத்திப்பெண். பூனம் தில்லோன் சாயல். ஆனா செம்ம குண்டு.
பங்குச்சந்தையில் short selling பற்றி சோனாலி விளக்க ஆரம்பிக்க, அவளது அழகு என்னை சித்ரவதை செய்துகொண்டிருந்தது. தலையை மட்டும் புரிந்தமாதிரி அவ்வப்போது ஆட்டி வைத்தேன்.
ஷார்ட் செல் செய்ய பங்குச்சந்தை இறங்குமுகமாக இருத்தல் அவசியம். குறிப்பிட்ட அளவு பங்குகளை (இறுப்பில் அப்பங்குகள் இல்லையென்றாலும்) அன்றைய விலையில் விற்க ஆர்டர் செய்து, செட்டில்மென்ட் திகதிக்குள் அதே அளவு பங்குகளை மேலும் குறைந்த விலையில் வாங்கி நமது கணக்கை நிகர் செய்ய வேண்டும். மார்க்கெட் இறங்கினால் தான் இதில் லாபம். நிகர லாபத்தில் தரகர்களது வட்டி மற்றும் கமிஷனை கழித்துக்கொள்வார்கள். இதற்கு மார்ஜின் மணி என முன்பணம் கட்டவேண்டும். ஷார்ட் சேல் செய்தவுடன் பங்குகளை திரும்ப வாங்கும் முன் மார்க்கெட் திடீரென உயர்ந்தால் தலையில் துண்டு தான்.
சோனாலி படு சீரியஸாக விளக்கிக்கொண்டிருக்க, அவளது அருகாமை.. கமகம வாசனை.. திருச்சிக்கார பிரம்மச்சாரிக்கு ரசிக்க சொல்லியா தரவேண்டும். கனவில் அவளுடன் 'கண்மணி அன்போடு காதலன்' டூயட் பாடிக்கொண்டிருந்த எனக்கு 'சமஜ்கயானா?' என நடுவே அவள் கேட்டபோதுதான் பிரக்ஞையே வந்து...'ம்.. பில்குல்' என நான் தலையை ஆட்டியதிலேயே அவளுக்கு தெரிந்துவிட்டது, பையன் செம்ம ஜொள்ளென்று.
அடுத்த நொடி 'பப்பா...தமே ஹ்யா ஆவ்னெ' என அவள் கத்த கடோத்கஜன் மாதிரி அவளது அப்பா அசைந்து வந்தார். அப்போதைக்கு ஏதாவது சந்தேகம் கேட்க வேண்டுமே! ' அது சரி சார்.. இறுப்பிலில்லாத பங்குகளை ஷார்ட் சேல் செய்தபின் செட்டில்மென்ட்டுக்குள் ஆண்டிறுதி நாள் வந்துவிட்டால் எப்படி அதை கணக்கில் காட்டுவது?' என நான் கேட்க அவர் கொஞ்சம் காட்டமானார். அதை கவனிக்காமல் நான் 'ஆடிட்டுக்கு இது முக்கியமாச்சே! ஹ்ஹெ...என்ன நாஞ்சொல்றது?' என பாக்யராஜ் பாணியில் தொடர அவர் சுட்டெறிப்பது போல என்னை முறைத்து, மகள் பக்கம் திரும்பி குஜராத்தியில் ஏதோ கத்த, அவள் என்னை கனிவான பார்வை பார்த்து, கண்களால் கெஞ்சி, அவரையும் சமதானப்படுத்தி அனுப்பினாள்.
கடோத்கஜன் போனபிறகு 'ஹையா! சோனாலி எனக்கு சப்போர்ட் பண்ணிட்டா! ' என புளகாங்கிதமடைந்து இவள் பக்கம் திரும்பினால், 'புத்தூ!.. எல்லா டவுட்டும் உனக்கு ஒரே நாள்ல..அதுவும் அவர் கிட்டத்தான் கேக்கனுமா... நா இல்லியா?' என செல்லமாக கோபித்துக்கொண்டபோது இன்னும் அழகாக தெரிந்தாள்.
'அவருக்கு ஏற்கனவே ஹார்ட் ப்ராபரளம், BP வேற அதிகம். அதான் உங்ககிட்டே கோவிச்சுக்கிட்டேன்.. நீங்க நாளைக்கும் வாங்களேன் சொல்லித்தர்றேன்' என கண்களை அகலத்திறந்து தலையை சிலுப்பி தலைமுடியை பின்னுக்குத்தள்ளி கேட்ட மறுநிமிடம் மானசீகமாக 'நினைவோ ஒரு பறவை..' ஸ்டார்ட் ஆனது.
மறுநாள் திரும்ப ஆபீஸ் போகும் வரை ஒரே கனவு மயம் தான். தலை முடியெல்லாம் ஒழுங்காக சீவி ஆபிஸ் போனவுடன் அதிர்ச்சி. பிச்சை சார் கூப்பிட்டு ' நீங்க அங்கெ போகண்டா..ராமசாமிக்கு அந்த அபய்பாய் போன் பண்ணியிருக்காப்ள.. ஆமா அதென்ன..அந்த புரோக்கருக்கே நீங்க க்ளாஸ் எடுத்தீயளாமே!... அவன் நேமிஷ் ஷாவுக்கு அடுத்தபடியா பெரிய புரோக்கர் தெரியுமோல்லியோ?'
'இல்ல சார்... சும்மா டவுட்டு கேட்டேன்..'
' என்னவே பெரிய டவுட்டு... எலே ராமசாமி! உனக்குத்தானே போன் வந்துச்சி... என்னாங்கான் அவன்?'
ராமசாமி ஏதோ பெரியதாக விளக்க பிச்சை சார் உஷ்ணமாகிக்கொண்டே போனார் கிடுகிடுவென முகம் நடுங்க...அப்படியும் நிறுத்தாமல் ராமசாமி நீட்டி முழக்கி ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, 'எலே.. சுறுக்க சொல்லுலே! காளமாட்டு மூத்தரம் மாதிரி நீண்டுகிட்டே போவாத' என கோபத்துடன் என் பக்கம் திரும்ப,
' இல்ல சார்..ஆடிட் சம்மந்தமா டவுட்டு கேட்டேன்' என சொல்லி முடிக்கும் முன் பிலுபிலுவென என்னை உலுப்பியெடுத்துவிட்டார். ஆடிட்டே அவருக்கு பிடிக்காதென்பது.. சனியன்.. எனக்கும் அப்பப்போ மறந்து போகிறது.
அடுத்த மாதம் நான் வேறிடத்தில் வேலைக்கு சேர்த்தேன். சோனாலி கனவும் நின்றுபோனது..

No comments:

Post a Comment