Wednesday, August 13, 2014

ரங்கநாதன் கோதண்டம்

'தொட்டால் குழையும் சோறு
தொட்டால் விறைக்கும் மனைவி
நொந்து போனது மனசு'

இந்தக்கவிதையை எழுதிய ranganathan Kothandam அவர்களை நேற்று காலை மாரத்தஹள்ளி அடையாறு ஆனந்த பவனில் சந்தித்தேன். 

காலை 8.30 மணியளவில்
சந்திப்பதாக முடிவு செய்திருந்தோம். 7.30 க்கு வீட்டை விட்டு நான் கிளம்பி பழைய ஏர்போர்ட் ரோட்டை பிடித்ததும் காரின் இரண்டு பக்கமும் உரசியபடி பைக் மற்றும் ஆட்டோக்கள்... 'கீக்...கீக்'கென ஒரே ஹார்ன் சப்தம். இஞ்ச் இஞ்ச்சாக நகர்ந்தது பெங்களூர் ட்ராஃபிக். முந்திச்சென்ற பைக்குகள் என்னை 'சாவு கிராக்கி'யென கன்னடத்தில் சபித்துச்சென்றது போலிருந்தது. கடைசியில் அ.ஆ.பவனுக்காக திரும்பவேண்டிய இடது பக்கத்தையும் (வலது பக்க driving வண்டி வேறு) கோட்டை விட்டு அடுத்த சிக்னல் போய் சுற்றி வர மேலும் அரை மணி நேரம் விரயம்.8.15இலிருந்து 9 மணி வரை பொறுமையாக ஹோட்டல் வாசலில் நின்றிருந்தார் ரங்கா.

உயரமான டேபிளின் முன் எதிரெதிரே நின்றுகொண்டே மற்ற பெங்களூர்க்காரர்கள் போல மினி டிபன் சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தோம். பெங்களூர்க்காரர்கள் முக்காவாசி நேரம் வண்டி ஒட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வண்டி ஒட்டாத நேரத்தில் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். குறிப்பாக பானிபூரி...

ரங்கா நல்ல உயரம். ஒடிசலான உருவம். இளநரை. கலைந்த தலைமுடி. நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் மற்றும் சரியான அரட்டைப்பேர்வழி என முகத்திலேயே தெரிகிறது.
நாற்பத்தைந்தே வயதான ரங்காவின் ரசனை, விருப்பங்கள், ஆன்மிகத்தில் ஈடுபாடு, எழுத்தாற்றல், குழந்தைகள் நலன்களில் அக்கறை, தொண்டு செய்யும் ஆர்வம், வயதில் பெரியவர்களுக்கு மரியாதை,பணிவிடை செய்தல்....இவ்வளவு நற்குணங்களைக்கொண்டவரா இவர்! மலைப்பாக இருந்தது..

18 வயதிலிருந்து எழுதுகிறாராம். ஆரம்பத்தில் கையெழுத்துப்பிரதி தொடங்கி, பிறகு 300 ரூபாய் செலவில் 20 பிரதிகள் வீதம் அச்சிட்டு பத்திரிக்கை(1999), 'என் பார்வையில்' என்ற தலைப்பில் சினிமா விமரிசனங்கள் எழுதுதல், ப்ளாக் எழுதுதல், அதன்பின் யாஹூ க்ரூப்பில் பத்திரிக்கை நடத்தியவர்..பேச்சு சுவாரசியத்தில் தட்டிலிருந்த இட்லி, பொங்கல், வடை, சேசரி மற்றும் மசால்தோசை எங்கே போனதென்று தெரியவில்லை.

காஞ்சி மஹா பெரியவரின் மகிமைகளையும் எழுத்துக்களையும் நன்கு அறிந்தவர்.அதன்படி தன் கடமைகளை தவறாமல் செய்பவர்.திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்களின் பக்தர். வாரியாரவர்களைப்பற்றி நிறைய பேசிப்புகழ்ந்தார். வாரியாரின் கந்தர் அநுபூதி, கந்தர் அலங்கார விரிவுரைகளை நிறைய படித்திருக்கிறாரென்பதால் அதிலிருந்து நிறைய பாடல்களையும் மேற்கோள் காட்டினார்.

மினி டிபனோடு சேர்த்து காபி இல்லையாம். 2 காபி வாங்கிக்கொண்ட பின், குடும்பம், குழந்தைகள் மற்றும் அவர்களது படிப்பைப்பற்றியும் பேசினோம். காலை/மாலையில் தினமும் குழந்தைகள் தம் தாய் தந்தையரை பணிவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் பேசினார். தற்போதைய தலைமுறை நமது மூதாதையர்களை மறந்தும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கர்மகாரியங்களை சரிவர செய்ய இயலாததையும் குறிப்பிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். 'சிந்தனையைத்தூண்டுகிற சின்னஞ்சிறு விஷயங்களையும் சுவாரசியமாகச்சொல்லும் கலை நண்பர் ரங்கநாதன் கோதண்டராமன்' என எஸ்ஸெஸ்பீ அவர்கள் சரியாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். நேரமின்மை காரணமாக அடுத்தமுறையே குடும்ப சகிதம் சந்திப்பதாகவும் முடிவு செய்தோம்.

தான் எழுதிய பக்தி கஃபே (தனிச்சுற்றுப் பத்திரிக்கை) யின் முதல் பாகம், எஸ்ஸெஸ்பீ அவர்கள் தமிழ்ப்பாக்களில் வெளியிட்ட ஶ்ரீ ஹனுமான் சாலிசா மற்றும் அசோகமித்திரன் அவர்
களின் சிறுகதைத்தொகுப்பு (மாற்று நாணயம்)
ஒன்றையும் பரிசாக அளித்த ரங்கா போன்ற இனிய மனிதர்கள் எனக்கு முகநூல் நண்பர்களானதில் மிகுந்த பெருமையடைகிறேன்..

சுமார் 45 நிமிடங்களேயான எங்களது சந்திப்பை 9.45க்கு
முடித்து விடைபெற்றுக்கொண்டு அவர் வொயிட்ஃபீல்டு பக்கமும் நான் மல்லேஷ்பாலயா திசையிலும் கிளம்பினோம்.

'கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே! ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழிசெல்லும் அவாவினையே'...
பாடலை வீடு திரும்பும்போது முனுமுனுக்க வைத்துவிட்டார் ரங்கா

No comments:

Post a Comment