Wednesday, August 13, 2014

G.K.R

ரிடையர் ஆன அன்று திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் வழியாக கோஷங்களுடன் பெரிய ஊர்வலம்.. யூனியன் தலைவர் GKR வாழ்க என சத்தம்..சரியான கூட்டம். நடுவே இவர் மாலையுடன்.... ரோட்டின் இருபுறங்களிலும் மக்கள் கூட்டம். கூட்டத்தின் நடுவே எங்கோ மூலையில் நான். எத்தனையோ வருடங்கள் இரயில்வேயில் இருந்து விட்டு இன்று பிரிகிறோமென சோகத்துடன் அவர் கண்களில் நீர் வழிந்தோட, நமக்கு இத்தனை பேர் நண்பர்களா என ஆனந்தகண்ணீருடன் நடந்து வருகிறார். ஊர்வலம் அவரது வீட்டை நோக்கி நகர்கிறது. அவ்வளவு பெரிய கூட்டத்திலும் அவர் என்னை பார்த்துவிட்டார். என்னைப்பார்த்து கையை தூக்கி ஆட்டி 'ஆத்துக்கு வந்துடுங்கோ' என சைகை செய்கிறார். அடுத்த அரை மணியில் அவரது வீட்டில் எல்லோருக்கும் இனிப்பு மற்றும் சிற்றுண்டி காபி...

இடுப்பிலிருந்து லேசாக அவிழும் வேட்டையை இழுத்து கட்டி, பெஞ்சில் கிடக்கும் துண்டை உதறி தோளில் போட்டு " உட்காருங்கோ.. அப்புறம் CA படிப்பெல்லாம் எப்பிடி போயின்டிருக்கு?" என கேட்டு லேசாக தலையை தூக்கி புகையிலை மணத்துடன் உதட்டோரம் தாம்பூலச்சிவப்புடன் எட்டிப்பார்க்கும் எச்சிலை உள்ளுக்குள் இழுத்துக்கொள்வார். பேச்சின் நடுநடுவே நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்காத ஆங்கில பழமொழிகளை எடுத்து விடுவார். வாழ்நாள் முழுக்க தனக்கென்று எதுவும் சேர்த்துக்கொள்ளாமல் பெரியவன் ரமணியின் BE (REC) படிப்பு, சின்னவன் கணபதியின் CA படிப்பு செலவுகளை சமாளித்து, 4 பெண்களான ராஜு, பத்மா, சந்திரா மற்றும் வாணி எல்லோரையும் நல்ல இடங்களில் கட்டிக்கொடுத்து அடுத்த 10 வருடங்களில் சட்டென்று இந்த லோகத்திலிருந்து விடை பெற்றுக்கொண்டார்.

மற்றவர்கள் செய்யும் தவறை அவர்கள் மனம் புண்படாவன்னம் முகத்துக்கு நேரே எடுத்துரைத்து..'அப்புறம் உங்க இஷ்டம்' என நாசூக்காக சொல்லிவிடுவார். தொழிலில் நேர்மை, பிறருக்கு உதவி, குடும்ப கடமைகள்... இதுதான் GKR என்கிற GK ராமமூர்த்தி அவர்கள். பயம் என்பது கொஞ்சம் கூட கிடையாது. காய்கறி வாங்கப்போனாரென்றால் கடைக்காரர் அரை கிலோ கொத்தவரங்காயை தராசில் நிறுத்தி அவர் பையில் போட்டபின்னும் கை நிறைய இன்னும் கொஞ்சம் அள்ளி பையில் போடும் அளவிற்கு அவ்வளவு மரியாதை.

தினமும் காலை உதவிகேட்டு யாராவது ஒருவர் இவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அதற்கென்றே வாசலில் பெஞ்சு போடப்பட்டிருக்கும். கல்யாணங்கள், சிலரின் பையனுக்கு ரயில்வே கலாசி வேலை, ஸ்கூல் அட்மிஷன், ரயில்வே கல்யாண மண்டபத்தில் சத்திர ஏற்பாடு என பொன்மலை ரயில்வே காலனியில் ஒரு MLA மாதிரி வலம் வந்தார். ஒரு சின்ன சதுர மரப்பலகையில் காவி வர்ணத்தில் சில நிமிடங்களில் அவர் வரைந்த காஞ்சிப்பெரியவர் ஓவியத்தை கண்டு மலைத்திருக்கிறேன்.

சின்னவனான கணபதி என் ஆருயிர் நண்பன்..குரு.. CAவில் சீனியர்.. திருச்சியில் இருந்த என்னை 20 வருடங்கள் முன் பஹ்ரைனில் உட்கார வைத்துவிட்டு சென்னை திரும்பியவன். "உன்னை அவருக்கு ரொம்ப புடிக்கும்டா... அடிக்கடி விசாரிப்பார்" என்பான்.

நைரோபியில் இருந்து நேற்று போனை வைக்க மனமில்லாமல் ஒரு மணி நேரம் கணபதி பேசிக் கொண்டுருந்தான். "அப்பறம் என்னடா ஶ்ரீதரா.. எதாவது சொல்றா....யார் மண்டையாவது போட்டு உருட்டேன்" என கேட்டுவிட்டுத்தான் போனை வைப்பான்.
ச்சே... இன்னிக்கி friendship dayயாகவும் இருக்கக்கூடாதா!..

தந்தையர் தினமான இன்று என் தந்தை மட்டுமல்லாது கணபதியின் தந்தையையும் நினைத்து அவர்களது ஆசி எப்போதும் எங்களுக்கு கிடைக்க தஞ்சை கணபதி அக்ரஹாரம் ஶ்ரீ மகா கணபதியை வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment