Friday, September 5, 2014

பொளேர்... பொளேர்... (மீள் பதிவு.. புது நண்பர்களுக்காக.. சில மாற்றங்களுடன்)

இப்பவும் பனியன் போடும்போது முதுகுப்பக்கம் கொஞ்சம் லேசா வீங்கின மாதிரி ஒரு பிரமை எனக்கு…எல்லாம் ஸ்கூல் வாத்தியார் கிட்ட வாங்கின விழுப்புண்கள்.. திருச்சி புனித வளனார் (St Joseph's) பள்ளியில்  காலை உள்ளே நுழைந்ததும் மாலை வரை ஒரு தனி உற்சாகம்…வேறென்ன..வாத்தியார்களை ஓட்டுவதில் தான்..சக மாணவர்களும் என்னை உற்சாகப்படித்தி உசுப்பேற்றுவதில் கில்லாடிகள்..நடுவே அவர்களே நம்மை மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதுமுண்டு ..

"என்ன கெளவன்னு நெனைக்காதீங்கடா.. தொலைச்சுப்புடுவேன்" என்று தன்  சோடாபுட்டி கண்ணாடி வழியாக பார்த்து மிரட்டும் சவுரிராஜன் வாத்தியார் கிளாசில் நானும் தென்னூர் கவுன்சிலர் கிருஷ்ணனின் பையன் தனபாலும் அடி வாங்கிய நாட்கள் பல. 'where the mind is without fear' மற்றும் ‘palanquin bearers’ என்ற poemகளை மனப்பாடமாக சொல்லவில்லை என்றால் பிச்சுப்புடுவார். கிளாசின் நடுவே நான் காலை ஆட்டிக்கொண்டிருக்கும்போது தனபாலும் தனது கால்களால் என் கால்களை உதைத்து ஆட வைப்பதை ரசித்து நாங்கள் சிரித்துக்கொண்டிருக்கும்போது 'என்ன கிளாஸ்ல சத்தத்தையே காணோமே' என நிமிர்ந்து பார்த்தால் சவுரிராஜன் எதிரே நின்றுகொண்டு எங்களை பார்த்துக்கொண்டிருப்பார். அடுத்த நிமிடம் 'தொபேல்..தொபேல்' என அடி விழும். மனுஷன் படு ஒல்லி.. ஆனால் அடித்தால் அங்கங்கே நானாவிதமாக கன்னிப்போகும்.

முக்காவாசி கலாட்டா தமிழ் கிளாசில் தான். தமிழ் வாத்தியார் பரிமேலழகர்... "எல்லோரும் செய்யுள் படிங்கடா" என சொல்லிவிட்டு பாதி நேரம் சேரில் சாய்ந்தவன்னம் யோகநித்திரையில் இருப்பார். நாங்கள் ஒரே கலாட்டா செய்துகொண்டு நடுநடுவே அவரை 'அய்யா..அய்யா..இவன் அடிக்கிறாய்யா' என கூப்பிடுவோம்.. காதில் விழுந்தும் அவர் எழவில்லை என்றால் நடுவே 'அய்யா'வுக்கு பதில் 'யோவ்' என நாங்கள் கத்த "டேய்.. யார்ரா அவன் யோவ்னு கூப்புட்டது" என எழுந்துவிடுவார்.

எழுந்ததும் 'பரஞ்சோதி! எங்க..'பொங்கு பல சமயமெனும்'  செய்யுள் சொல்லு' என்றதும்,பரஞ்சோதி எழுந்து கை கட்டி 'பொங்ங்ங்ஙகு பல' என்று முதல் வார்த்தையை மட்டும் காட்டு கத்தலுடன் ஆரம்பித்து, பிறகு..$$.. ##..&&..@@..மண..மன.. லப..ளப... என்று மற்ற எல்லா வார்த்தைகளை வேண்டுமென்றே முழுங்கி... கடைசி வார்த்தை மட்டும் 'தேவ தேவே’  என்று சத்தம் போட்டு சடுதியில் முடித்து விஷமப்புன்னகையுடன் உட்காருவான். அவனை நாங்கள் பொறாமையுடன் பார்ப்போம், வெறும் மொதல் வார்த்தையும் கடைசி வார்த்த மட்டும் தெரிஞ்சிக்கிட்டு எப்பிடி சமாளிச்சிட்டான் பாரு' என்று. அந்த சாமர்த்தியம் இல்லாமல் செய்யுளை தப்பாகச்சொல்லி சத்தியசங்கல்பனாக மாட்டிக்கொண்ட எங்களுக்கு 'பொளேர்.. பொளேர்..' தான். திருச்சி வயலூர்/உய்யகொண்டான் திருமலை கிராமப்பகுதியில் இருந்து அந்த காலத்திலேயே தினம் டெரிகாட்டன் சட்டையுடன் வரும் பரஞ்சோதி 2011ல் ஜெயலலிதா அமைச்சரவையில் மந்திரியானான்(ர்).

சயென்ஸ் வாத்தியார் தாமஸ் வகுப்பில் convex லென்சு வழியாக பார்க்கும்போது objects தலைகீழாக தெரியும் என்று வாத்தியார் விளக்கும்போது, செந்தில் மாதிரி கட்டையாக முழங்கால் வேட்டியுடன் நம் வகுப்பிற்கு  வாசஞ்செய்யும் பியூன் அந்தோணியை காட்டி நாங்கள் 'சார்...அப்ப அந்தோனிய convex லென்சு வழியே தலைகீழா பார்த்தா வேட்டி கீழ எறங்கிடுமே' என்று எழுந்து கேட்டவுடன் கிளாஸே குபீரென சிரிக்கும். மறு நிமிடம் 'நரம்புப்பயலே.. வாடா இங்க' என வாத்தியார் கூப்பிட, அன்று எனக்கு முதுகு பழுத்து விடும்.  நாம் அடி வாங்கும்போது சக மாணவர்களுக்கு ஸ்கூலுக்கு வெளியே விற்கும் ஜிகர்தன்டா சர்பத் குடித்த மாதிரி திருப்தி.

'வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை' பாடலை நாங்கள் 'ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி ' மெட்டில் பாடிக்கொண்டிருக்கும்போது, பின்பக்கமாய் வந்து நின்று கொண்டு வாத்தியார் பார்த்துக்கொண்டிருப்பது தெரியாமல், மாட்டிக்கொள்வோம். பிறகென்ன? பொளேர்..பொளேர் தான்...

காலை ஸ்கூல் வாசலில் நிற்கும் ஹெட் மாஸ்டர் ஆரோக்யம் SJ அவர்களை எல்லா மாணவர்களும் 'ஸ்தோத்திரம் ஃபாதர்' ...'ஸ்தோத்திரம் ஃபாதர்'..என்று  சத்தம் போட்டு சேவிக்கும்போது  'தோச தின்றோம் ஃபாதர்' என்று நாங்கள் மட்டும் கூட்டத்தின் நடுவே கத்துவொம். கூட்டத்தில் அவர் மலையாள காதுக்கு சரியாக கேட்காது என்ற நம்பிக்கை…  

தமிழ் புத்தகம் முழுவதும் பேனாவால் பெயர்களை திருத்தி எழுதுவது ஒரு விளையாட்டு. 'உமறு புலவர்' என்பதை 'திமுறு புலவர்' என்றும், 'திரு.கோ. வில்வபதி' என்ற அழகான பெயரை 'திருக்கோவில் விபூதி' என்று மாற்றி சக மாணவர்களுக்கு காட்டி மகிழும்போது  யாராவது ஒருத்தன் வாத்தியாரிடம் போட்டுக்கொடுக்க, அவர் புத்தகத்தை பிடுங்கி சத்தமாக வாசித்து காட்டுவார். பிறகென்ன..'பொளேர்..பொளேர்' தான்.

சிங்கராயன் ஸார் கிளாஸ் நடக்கும்போது பக்கத்து வகுப்பில் இருந்து மாணவன் ஒருவன் வந்து 'ஸார் என் அண்ணன் மணியை பார்க்கணும்' என அழைப்பான். வெளியே வந்த மணியிடம் அவன் தன் வாயிலிருந்து எடுத்த பாதி சாப்பிட்ட நெல்லிக்காயை கொடுக்க, மணி லபக்கென்று வாயில் போட்டுக்கொண்டு உள்ளே வருவான்.  'எங்க அம்மா தான் ஆளுக்கு பாதின்னு சொன்னாங்க ஸார்' என விளக்கம் வேறு.

'k' லாங்கூவேஜ் அப்போது ரொம்ப பிரபலம். சீனி என்ற பெயரை      'க-சீ க-னீ 'என்று கற்றுக்கொண்டதும் முதல் வேலை சில கெட்ட வார்த்தைகளை 'k' லாங்குவெஜில் சொல்லிப்பார்ப்பது (வாத்தியார் பெயரையும் சேர்த்து தான்).

'கிளைவ்ஸ் ஹாஸ்டல்' போலீஸ் தடியடி சம்பவம் சமயத்தில் அடிக்கடி ஸ்கூல் ஸ்ட்ரைக் நடக்கும். வகுப்பு நடக்கும்போது ஸ்கூலுக்கு வெளியே மாணவர்கள் கத்தும் சத்தம் கேட்கும். அடுத்த சில நிமிடங்களில் ஹெட் மாஸ்டர் அறையிலிருந்து அவர் மைக்கை 'டொக்.டொக்' என்று தட்டுவது மேலே ஸ்பீக்கரில் கேட்டவுடனே கிளாஸ் முழுவதும் கடாமுடாவென  சத்தம்.. வேறென்ன மூட்டை கட்டுவோம். வாத்தியாரும் உள்ளுக்குள் சந்தோஷத்துடன் 'டேய்... இருங்கடா HM என்ன சொல்றாருன்னு கேப்போம்' என்று சொன்ன மறு நிமிடம் HM மெதுவாக 'மாணவர்களே!... இன்று..நம் பள்ளி..' என ஆரம்பித்தால் போதும், முழு வகுப்பும் 'ஹோ' வென கூச்சலோடு வீட்டிற்கு ஒடுவோம்..

PT கிளாஸ் என்றாலே எல்லோருக்கும் வயிற்றை கலக்கும். ஸ்ரீரங்கம் கிட்டப்பனும் கிராப்பட்டி ஜானும் எடுத்த எடுப்பிலேயே பளார் என்று அறைந்து நம்மை நிலைகுலையச்செய்பவர்கள். 'எவன்டா அது வரிசைய வுட்டு தனியா நிக்குறான்' என கிட்டப்பா சொல்லும்போதே  தெரிந்துவிடும் யாருக்கோ இன்னிக்கி செமத்தியா இருக்கு என. கிராப்பட்டி ஜான் தண்ணீர் விட்டு தலைமுடியை தூக்கி வாரியிருப்பார். ஸ்கூலுக்கு வந்தவுடன், பின் மண்டையிலிருந்து மெதுவாக அழுக்குத்தண்ணீர் கழுத்தில் வழிவது பார்க்க எங்களுக்கு அறுவறுப்பாக இருக்கும். கண்,காது,மூக்கு என இந்திரியங்கள் பார்க்காமல் அவர் நம்மை அறைந்தால் ஒரு சில வினாடிகள் காது கொய்ங்...கண் மங்கலாகத்தெரியும். எல்லோரும் கிளாசிலிருந்து கிளம்பி இரண்டிரண்டு பேராக வரிசையாக PT கிரவுண்டுக்கு போகும்போது யாரும் பேசக்கூடாது என்பது சட்டம். நாங்கள் கடைசி வரிசை.. பின்னால்  2 வாத்தியார்களும் சைக்கிளில் வருவது தெரியாமல் ஜாலியாக 'வாஸ்கோடகாமா... வென்ட் டு தி டிராமா... ஒப்பன்ட் ஹிஸ் பைஜாமா' என்று பாடிக்கொண்டே போகும்போது எங்களை பிடித்து  தனியாக முட்டி போட வைத்து லாடம் கட்டுவார்கள்.  

ஆசிரியர்களுக்கு விதவிதமான நாமகரணங்கள் சூட்டியிருக்கிறோம்:
'குட்டாரோக்யசாமி' ( கைக்குட்டையை முழங்கையில் கட்டியிருப்பார்),
'குண்டாரோக்யசாமி' ( விளக்கம் தேவையில்லை),
 'செங்கோல் வாத்தியார்' (கையில் மொத்தமான தடியுடன் வருவார்),
'வாத்தியான்'( யாருக்கும் இவரை பிடிக்காது),
'கரிபால்டி' (சரித்திர ஆசிரியர் ஒரு மாணவனிடம் கரிபால்டி (garibaldi) பற்றி கேள்வி கேட்டதற்கு அவன் 'உலகப்போர் முடிந்து இத்தாலியில் முன்னொருகாலத்தில் இவர் கரி விற்றார்,பால் விற்றார், டீ விற்றார்' என பதில் சொல்லி அலற அலற அடி வாங்கி அன்றிலிருந்து வாத்தியாருக்கே அந்தப்பெயர் வந்துவிட்டது)
இதெல்லாம் இல்லாமல் சீத்தலை சாத்தனார், உமறு புலவர், நாலடியார், நியான்டர்தால் மனிதன் என்றழைக்கப்படும் சில வாத்தியார்கள்.

ஆசிரியர் தினமான இன்று வாத்தியார்களை வைத்து நாங்கள் லூட்டியடித்தை நினைவுகூர்வதில் என்ன ஒரு மகிழ்ச்சி..

பி.கு: மேற்சொன்ன இத்தனை அட்டூழியங்களை மறக்காமல் எழுதத்தூண்டிய நம் வாத்தியார் சுஜாதாவை மறக்க முடியுமா?.. அவர் ஸ்ரீரங்கத்தில் படிக்கும்போது வகுப்பில் சிறிய பிளேடை டெஸ்க்கில் சொருகி ' டொய்ங்..டொய்ங்' என மாணவர்கள் சப்தம் எழுப்பும்போது 'என்னடா சத்தம்' என்று வாத்தியார் கேட்டால் 'வண்டு ஸார்'...என்பார்களாம்.

3 comments:

  1. அன்புள்ள அய்யா திரு.ஸ்ரீரங்கம் ஸ்ரீதர்,

    தங்களின் அனுபவப் பகிர்வு அருமை.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. உங்க கமென்ட்டை இப்போது தான் பார்த்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்

      Delete
  2. சார்.. உங்க கமென்ட் எனக்கு ஈமெயிலில் வராமல் போனது ஆச்சரியம். தற்போது தான் கவனித்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். மிக்க நன்றி. திருச்சியில் எனக்கு தெரிந்த வலைப்பதிவர் யாருமில்லை..

    ReplyDelete