Sunday, December 7, 2014

பாபு

இந்தப்பக்கம் நிற்பவன் மூத்தவன்..
பாபு..பாம்பேவாசி. அந்தப்பக்கம் தம்பி.. ரவி, ஒமான்(Jani Vijay Raghavan) வருடத்திற்கு இருமுறை ஊருக்குப்போனாலும் சகோதரர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக சந்திப்பது அபூர்வம். கடந்த 2,3 வருடங்களாகத்தான் அம்மா, அப்பாவின் மறைவினால் நாங்கள் அடிக்கடி சந்திக்கிறோம். 

பெரியவன் பாபு பரமசாது,கூச்ச சுபாவமுள்ளவன். கொஞ்சம் வெகுளி. சின்னவன் ரவி அப்படியல்ல. அவன் ஏவியெம் ராஜன் மாதிரியென்றால் இவன் ஆனந்தராஜ்.

சின்ன வயதில் பாபு ரொம்ப கண்டிப்பானவனா இருப்பான். எங்கள் இருவருக்கும் அவனிடத்தில் கொஞ்சம் பயம். ரெண்டு தடவை திட்டுவான். மூன்றாவது தடவை பளார் தான்.

70 களில் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் தெருவில் இருந்தோம். ஏதாவது கலியாணமென்றால் லௌட் ஸ்பீக்கரில் 'ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன் (மாணிக்கத்தொட்டில்)... கேட்டுக்கோடி உறுமி மேளம்..(ப.பா)... ' என பாடல்களும் முழு சினிமாப்பட வசனம் ஓடிக்கொண்டிருக்கும். படம் பார்க்காமலேயே வசனங்கள் எங்களுக்கு அத்துப்படி. அடிக்கடி சினிமாவும் போவோம். பேலஸ் தியேட்டரில் 'கோமாதா என் குலமாதா', அருணா தியேட்டரில் 'பாபி', ராமகிருஷ்ணாவில் 'சிரித்து வாழ வேண்டும்', பத்மாமணியில் 'தீபம்', ஜுபிடரில் 'நீதிக்குத்தலை வணங்கு'.. என எக்கச்சக்கமான படங்கள்.

ராக்ஸி வெலிங்டனில் பட்டிக்காடா பட்டனமா படத்துக்கு ஒரு நாள் எங்களை கூட்டிப்போனான் பாபு. சரியான கூட்டம். ஐம்பது பைசா டிக்கட் கியூவில் நாங்கள் முன்னால் நின்றாலும் கவுன்ட்டர் திறந்தவுடன் திடீரென வரிசை கடைசியிலிருப்பவர்கள் மேலே ஏறி நம் தலைக்கு மேல் இருக்கும் இரும்புக்கம்பியை பிடித்துக்கொண்டு பல்லி மாதிரி தலைகீழாய் ஊர்ந்து முன்னால் வர, "டாய்.. எறங்குடா.." வென கூச்சல். கசகசவென கூட்டம், பீடி நாற்றம் எல்லாம் சேர்ந்துகொள்ள பாபுவுக்கு திடீரென மூச்சு முட்டி கண்கள் சொறுகி.. மயக்கம் வர, "பாபு..பாபு.." என நானும் ரவியும் கத்தினோம். " டேய்.. இவனுக்கு மயக்கம்டா..அடுத்த நிமிடம் வரிசையிலிருந்து வெளியேற்றப்பட்டோம். 'ச்சே..படம் பார்க்க வந்த சமயத்திலயா இவனுக்கு மயக்கம் வந்துத்தொலையனும்?...சில நிமிடங்களில் அவனுக்கு குடிக்க தண்ணீரெல்லாம் கொடுத்ததும் எழுந்து உட்கார்ந்தான். 'அப்பாடா.. எந்திரிச்சுட்டான்..திரும்பவும் கியூவில் நிற்கலா'மென நாங்கள் நினைக்கும்போது ' வாங்கடா.. வீட்டுக்கு போலாம்' என எங்களை வெறுப்பேற்றி வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போனபோது ஈஸ்வரியின் 'ஓ..மை ஸ்வீட்டி.. ஓ குடுமி அங்கிள்..' பாட்டு மனதில் ஓடியது..

அந்தத்தெருவில் நாங்கள் குடிபோன புதிதில் சின்ன சைக்கிள் ஒரு மணி நேரம் வாடகைக்கு எடுத்து விடுவான் பாபு. எண்ணைக்கடைக்கார வீட்டுப்பையன்கள் இவன் சைக்கிள் சக்கரத்துக்குள் குச்சியை விட தபாலென இவன் கீழே விழுந்து ' ஏன்டா.. சைக்கிள் வீல்ல குச்சியை விட்டா சைக்கிள் எப்பர்றா ஓடும்' என வெகுளியாக கேட்க 'ஆஹா... கண்டுபிடிச்சுட்டார்யா..கொலம்பஸ்..' என கலாய்த்து அன்றிலிருந்து இவன் பெயரையே 'கொலம்பஸ்' ஆக்கினார்கள்.

அந்த வெகுளித்தனம் அவனுக்கு கல்யாணம் ஆகியும் போகவில்லை. 90இல் (பம்பாய்-முலுன்டு) இவனது குழந்தையின் மூன்றாவது பிறந்த நாளன்று அக்கம்பக்கத்து சின்னக்குழந்தைகள் சப்பிட வரிசையாக தரையில் உட்கார்ந்ததும், அண்ணி 'ஏங்க.. குழந்தைங்களுக்கு இட்லி வைங்க' என சொன்னதுதான் தாமதம், மூன்று, நான்கே வயதான குழந்தைகள் எல்லோருடைய தட்டிலும் மூன்று மூன்று இட்லி மற்றும் பெரிய சாம்பார் கரண்டியால் சட்னியை ஊத்தி, எல்லா ஐட்டங்களையும் ஒரே பந்தியில் காலி செய்து மனைவியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டான்.

பாபு படிப்பில் மட்டும் எப்போதும் பயங்கர புலி. ஆனால் தீபாவளியன்று நானும் ரவியும் பாம்பு மாத்திரை விடும்போது இவன் மட்டும் புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டு எங்களை கடுப்பேத்துவான்.

கான்பூர் யுனிவர்சிட்டியில் இளங்கலை பாட்டனி மற்றும் எம்.ஏ படித்து குடும்ப சூழ்நிலையால் பாங்க் எக்ஸாம் எழுதி சீக்கிரம் வேலைக்குப்போனாலும், உடனே சென்னைக்கு மாற்றிக்கொண்டு வந்தவுடன், ராவ்ஸ் கோச்சிங் இன்ஸ்டிட்டியூட்டில் சேர்ந்து சிவில் சர்வீஸ் (IAS & IPS) தேர்வுக்கு கடுமையாக உழைத்து, ப்ரிலிமினரி மற்றும் மெயின் பரிட்சைகள் பாஸ் செய்து டெல்லி இன்டர்வியூ வரை போய், 961வது ராங்க் வாங்கி சுமார் 15 ராங்க்குகள் பின் தங்கியதால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் அருமையான வாய்ப்பை இழந்தான்.

பின் பம்பாயில் ரிசர்வ் வங்கியில் வேலை செய்து கொண்டு ஒரே அட்டெம்ட்டில் ICWA ஃபைனல், பின் CFA போன்ற படிப்புகளை அசால்ட்டாக பாஸ் செய்து MBAவும் முடித்து பம்பாய் பங்கு மார்க்கெட்டுக்குத்தாவினான்..ஆனாலும் அதே வெகுளித்தனத்துடன்..

சென்ற மாதம் நாங்கள் மூவரும் திருச்சியில் எங்கள் ஒரே சகோதரி Hemalatha Manoharவீட்டில் கூடினோம். அம்மாவுக்கு முதல் வருட ஸ்ராத்தம்.. வழக்கம்போல வீட்டில் ஒரே அரட்டை..சின்ன வயசில் எவ்வளவு வெகுளியாக இருப்பாய் நீ என பாபுவை கேலி செய்துகொண்டிருந்தோம்.

பூஜைக்கு நேரமாகவே புரோகிதர் 'மூத்தவர் வந்து மொத ஒக்காருங்க' என இவனைக்கூப்பிட்டு, 'சட்டைய கழட்டீட்டு இடுப்புல துண்டை சுத்துங்கோ' என சொன்னவுடன் 'அப்ப வேஷ்டி?' எனக்கேட்டு சாஸ்திரிகளையே கலங்கடித்தான்.

No comments:

Post a Comment