Tuesday, March 13, 2018

Mythili Varadarajan

சில மாதங்கள் முன் பெங்களூர் சென்றிருந்த சமயம் இவரை நேரில் சந்திக்கலாமென இருந்தேன். இவரும் வீட்டிற்கு வரும்படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
ஒரு மதிய வேளை போகலாமென முடிவு செய்து மல்லேஷ்பாளையா என பிக்கப் இட்டு ஓலா டாக்ஸி தேடினேன். அடுத்த விநாடி ஓலா வரைபடத்தில் கரப்பான் பூச்சி மாதிரி ஏழெட்டு டாக்சிகளில் ஒன்று பொம்மை கார் மாதிரி சரட் சரட்டென முன்னே பின்னே நகர்ந்து திடீரென வீடு நோக்கி வர என் கைப்பேசியில் உடனே மெசேஜ். வெளியே ஓடிப்போய் டாக்சியில் அமர்ந்து ஓட்டுநரிடம் ஓட்டிபி கொடுத்த கையோடு ஓலா வரைபடத்தில் சர்ஜாபூர் அம்பாலிபுரா ரோடு எங்கேயென தேடினேன். சின்ன புள்ளியொன்று என் டாக்சி போகும் தடத்தை அழகாக காட்ட, வெளியே நல்ல டிராஃபிக்.
கரடுமுரடான பெங்களூர் சாலைகள் இன்னும் எத்தனை வருடத்திற்கென தெரியவில்லை. 80, 90 களில் எவ்வளவு அழகாக இருந்த நகரம்!. முன்பெல்லாம் அகண்ட சாலைகள் இருமருங்கிலும் மரங்கள். சிக்பேட்டில் பஸ் விட்டிறங்கி 'சிவாஜி நகர் ஹோகி' என ஆட்டோ பிடித்தால் சில்லென குளிர் காற்று நம் முகத்தில் வீச ஸ்வெட்டர் போட்ட ஆட்டோக்காரர் பத்தே நிமிடத்தில் சிவாஜி நகரில் இறக்கி விட்டு நம் முகம் கூட பார்க்காமல் காசு வாங்கிக்கொண்டு திரும்ப சிக்பேட்டுக்கே போவார். இப்ப அதெல்லாம் சாத்தியமில்லை.
பெங்களூரில் ரோட்டில் போகும்போது தலையை தூக்கினாலேயே மெட்ரோ ரயில் பாலங்கள் கட்டுமானம் தான் எங்கு பார்த்தாலும். 24 மணி நேரமும் பானி பூரி சாப்பிடும் நகரம். மோட்டார் பைக்குகளும் ஸ்கூட்டிகளும் ஆட்டோக்களும் தலை தெறிக்க ஓட்டுகிறார்கள். டிராஃபிக்கிற்கு பயந்து முதல் நாள் பய்யப்பன்னஹள்ளியில் மெட்ரோ ரயில் பிடித்து மஹாலக்ஷ்மி போய் இஸ்கான் கோவில் தரிசணம் முடித்த கையோடு கோவில் பிரசாத உணவகத்தில் கோகோனட் ஹோளிகே (தேங்காய் போளி), பெண்ணெ (வெண்ணெய்) தோசா மற்றும் காஃபின் நீக்கப்பட்ட வேதிக் காபி சாப்பிட்டது சுகானுபவம் (காபி தவிர).
ஓலா வரைபடத்தில் புள்ளி சர்ஜாபூர் ரோட்டைக்காட்ட அதற்குள் இவரிடமிருந்து குறுஞ்செய்தி.. 'எங்கே இருக்கீங்க' என. தொடர்ந்து தொலைபேசி அழைப்பு. 'இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேங்க' என சொல்லி ரோட்டை பார்த்தேன். கார்களுக்கிடையே கிடைக்கும் சின்ன இடைவெளியில் வரிசையாக ஸ்கூட்டிகளும் பைக்குகளும் புகுந்து முன்னேற, ஓட்டுநர் தொலைபேசியில் 'ஹொரகடே இல்லப்பா..ஒளகடே..நானு ஹேளிதே.. அவ்தா? அவ்தா?' என யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
பிக் பஜார் தாண்டி டோமினோ பீட்ஸா முன்னால் இடது பக்கம் திரும்பி ஶ்ரீரெட்டி கட்டிடம் நுழைந்து நேபாளி செக்யூரிட்டி காட்டிய ரிஜிஸ்தரில் கையொப்பமிட்டு முதல் தளத்தில் நாலைந்து ஃப்ளாட்டுகள் தாண்டி அழைப்புமணியை அழுத்த, கதவைத்திறந்து புன்முறுவலோடு வரவேற்றார். சென்ற ஆண்டு என் முகநூல் நண்பரானவர்.
இவரது முகநூல் பதிவுகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில். அபாரமாக எழுதுபவர். அப்பா, சகோதரிகள் என இவரது குடும்பத்தில் எல்லோரும் புத்தகம் சார்ந்த துறைகளில் (மாக்மில்லன்) பணியாற்றியவர்கள்.
தன் குடும்பத்தைப்பற்றி சுறுக்கமாக சொல்லி, எனது குடும்பத்தாரைப்பற்றியும் விஜாரித்தவுடன்,
பணிப்பெண்ணை காபி கலக்கச்சொன்னார். காபியை உறிஞ்சியவாறே வீட்டை சுற்றி வந்தேன். அழகான இரண்டு பெட்ரூம் ஃபளாட். முன் அறை, பெட்ரூம் என எங்கு பார்த்தாலும் ஏராளமான புத்தகங்கள். எனக்கு எதிரே அமர்ந்திருந்த அவரின் கைக்கெட்டும் தூரத்தில் சோஃபாவிலேயே கொஞ்சம் புத்தகங்கள்.
புத்தகம் அதிகம் படிப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். ரயிலில் கடலை வாங்கி சாப்பிட்டாலும் கடலை பொட்டலத்தின் பேப்பரை முழுவதும் படிக்க விரும்புவேன்.
அடுத்த அரை மணி நேரம் இவருடன் பேசும்போது நிறைய மெசேஜ்கள் எனக்கு கிடைத்தன. வயதான காலத்தில் அடுத்தவருக்கு உபத்திரவமோ தொந்தரவோ கொடுக்காமல் கூடியவரையில் நம்மை நாமே பார்த்துக்கொள்வது, கவலையோ வருங்காலத்தைப்பற்றியோ நினைத்துக்கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் வாழ்வது, பாசிட்டிவ் மனப்பான்மை, எந்த வித கஷ்டத்தையும் புன்முறுவலுடன் ஏற்று அதனுடனே பயணிப்பது, சிரமங்களை தவிர்க்க நம் நினைவுகளை திசை திருப்பி (diversion) புத்தகம் படித்தல், நண்பர்களை சந்திப்பது போன்று நமக்கு பிடித்தவற்றை செய்வது.. இவையெல்லாம் இவரிடம் கற்றுக்கொண்டேன்.
தனக்கு பிடித்தவர்கள் லிஸ்ட்டில் இவரது பேத்தி முதலிடம் என்பதை தெரிந்து கொண்டேன். அவ்வப்போது இவருடைய பதிவுகளில் பேத்தியின் புகைப்படத்தை பார்க்க முடிகிறது.
இவரின் இனிய பிறந்த நாளான இன்று பேத்தியுடனிருக்கும் இவரது பென்சில் ஓவியத்தை வரைந்து பதிவிடுவதில் எனக்கு மகிழ்ச்சி.

No comments:

Post a Comment