Tuesday, March 13, 2018

வெங்கடேஷ்

டோல்கேட்டிலிருந்து செந்தண்ணீர்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் வலதுபுறம் ஜி-கார்னர் திரும்பி ‘பேய் தொங்கிட்ருக்குமோ!’ என பயத்துடன் அந்த புளிய மரங்களை பார்ப்பதை தவிர்த்து, அடர்ந்த மரங்கள் இருபுறமும் உள்ள சாலை உள்ளே நுழைந்தால் பொன்மலை. பொன்மலை ரயிலடி எதிரே ‘அவன் தான் மனிதன்’ சிவாஜி வீடு மாதிரி பெரிய வீடு. உள்ளே நுழைய ஒரு கேட். வெளியே வர ஒரு கேட். வெள்ளைக்காரன் கட்டிய, டிவிஷனல் இஞ்சினீயர் சப்தரிஷி வீடு.
பெரியவன் வெங்கடேஷ். சின்னவன் வைத்தி. நான், வைத்தி, கணபதி மூவரும் சேர்ந்து சி.ஏ பரீட்சைக்கு படிக்க ரயில்வே ஸ்டேஷன் போகும் முன் வைத்தி வீட்டில் காபி. வெங்கடேஷ் எம்.ஏ முடித்து மனிதவளம் சார்ந்த (DPMIR) படிப்பு. வாசலில் நாலைந்து சேர் போட்டு எல்லோரும் அரட்டை. அந்தப்பக்கம் அவர்கள் அம்மாவும், சில சமயம் டூர் முடிந்து ஜீப்பில் வந்திறங்கிய அப்பா சப்தரிஷியும் பனியனுடன்.
பேச்சின் நடுவே ‘அப்பா நேத்து ரயில்ல ஏ.சி சலூன்ல வற்ரச்சே’ என வெங்கடேஷ் சொல்ல, நான் குறுக்கிட்டு ‘ஏசி சலூனா! அப்ப முடி வெட்டறவருக்கு ஜாலி தான்.. அவருக்கும் ஏசி இல்ல!’ என சொல்ல பெருங்குரலுடன் நண்பர்களின் வெடிச்சிரிப்பு அந்த இடமே ஒலிக்கும். டி.ராஜேந்தர், பாரதி ராஜா, பாக்யராஜ் படங்கள், ராதா, அம்பிகா என நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம்.
சில்க் ஸ்மிதா, ப்ரிமிளா என பேச்சு ஒரு மார்க்கமாக திரும்பும்போது குரலை கம்மி குசுகுசுவென நாங்கள் பேச ஆரம்பிக்க, ‘போதும்பா! நாழியாச்சு! படிக்க கிளம்புங்க!’ என அம்மா விரட்டியும் கேட் அருகே நின்று கொண்டு ஶ்ரீப்ரியா ஜோக் (இங்க எழுத முடியாதுங்க) பற்றி இன்னும் கொஞ்ச நேரம்..
இன்கம் டாக்ஸ் சப்ஜெக்டில் ‘ஏம்ப்பா! அந்த க்ளப்பிங் ஆஃப் இன்கம் டாக்ஸ் ஆஃப் ஸ்பௌஸ்.. என்ன செக்‌ஷன் அது!’ என நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளே இருந்து ‘செக்‌ஷன் 64(1)!’ என வெங்கடேஷ் கத்துவான். இன்கம்டாக்ஸ் அமென்ட்மென்ட் பற்றி எங்களுடன் நிறைய விவாதிப்பான் வெங்கடேஷ். அசாத்தியமான ஞாபக சக்தி அவனுக்கு.
நெடுநெடுவென உயரம் வெங்கடேஷ். ஞாயிரன்று அவன் பெரிய வெள்ளை ஜிப்பா+ஜீன்சுடன் தம்பி வைத்தி சகிதம் தனது லூனாவில் சோனாமீனா தியேட்டரில் கன்னிராசி படம் பார்க்க போகும் வழியில் சர்க்யூட் ஹவுஸ் காலனியில் குடியிருக்கும் என்னை பார்க்க வரும்போது அங்கங்கே மாணவிகள் பால்கனியிலிருந்து இவர்களை சைட் அடிப்பது பார்க்க எனக்கே பொறாமையாக இருக்கும். ‘ஹும்! எல்லாத்துக்கும் மச்சம் வேணுமே!’ என பெருமூச்சுடன், தண்ணி லாரி பின்னால் குடத்துடன் ஓடுவேன்.
1986இல் இப்படியான திருச்சியின் சொர்க்கமான இளமைக்காலத்தை அப்படியே விட்டுவிட்டு பம்பாய் சென்றதும், வெங்கடேஷ், வைத்தி போன்ற நண்பர்கள் தொடர்பு அற்றுப்போனதும், கணபதியுடன் பம்பாய், இந்தோர், பஹ்ரைன் என ஊர் ஊராக மாறியது.. 31 வருடங்கள் உருண்டு ஓடியது தெரியவில்லை.
சில வருடங்கள் முன் கணபதி மூலம் வைத்தியின் (Vaidya Rishi) தொடர்பு கிடைக்க 25 வருடங்களுக்குப்பிறகு பெங்களூரில் அவனை சந்தித்தேன். நிதிஷ் எஸ்டேட்ஸ் எனும் புகழ் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ED யாக இருக்கிறான். பலால் ரெசிடென்சியில் முறுகல் ரவா தோசைக்கு நடுவே மறக்காமல் வெங்கடேஷின் நம்பரை வாங்கிக்கொண்டு, அப்போதிலிருந்து வெங்கடேஷுடனும் மீண்டும் தொடர்பு கொண்டாலும் அவனை நேரில் சந்திக்க இயலாமல் தள்ளிப்போனது. முகநூலில் நட்பு தொடர்ந்தது.
சென்ற மாதம் சென்னையில் நண்பர் வீட்டு
விஷேசத்திற்கு போகவேண்டியிருந்தது. ‘ஶ்ரீதரா! வெங்கடேஷை வரச்
சொல்லியிருக்கேன்!’ என கணபதி சொல்ல மனம் குதூகலமானது. மண்டபத்தில் நுழையும்போது கூட்டத்தின் நடுவே உயரமான வெங்கடேஷ் தான் தெரிந்தான். அப்படியே இறுக்க கட்டிக்கொண்டான். இப்பவும் அதே சிரிப்பு, பொன்மலை தெனாவெட்டு, குறும்பு, அரட்டை.. நெற்றியில் குங்குமம்.
HR Consultancy, இன்டெலிஜென்ட் என வெங்கடேஷைப்பற்றி கணபதியின் முகநூல் பதிவு பார்த்தேன்.
இன்று வெங்கடேஷுக்கு பிறந்தநாள். ‘ஶ்ரீதரா! அவம்படத்தையும் வரஞ்சு போட்ரு’ என்ற கணபதியின் கட்டளையை மீறுவேனா!
நமக்கு நண்பர்கள் தானே வாழ்க்கையே!
Image may contain: 1 person, smiling, drawing

No comments:

Post a Comment