Sunday, April 22, 2018

கலவச்சட்டி.....-2014 மீள்

2 நாட்களுக்கு முன் திருச்சியில் எங்கள் சுந்தர் நகர் வீட்டிற்கு போயிருந்தேன். முன்பு அம்மா அப்பா மாடி போர்ஷனில் குடியிருந்தார்கள். இருவரும் தற்போது இல்லை. வீட்டை விற்க மனமில்லை. வாடகைக்குக்கொடுத்துவிட்டோம்.
சில மராமத்து வேலைகள் இருந்ததால் ஒரு மேஸ்திரி மற்றும் சித்தாள் வைத்து வேலைகளை காலை 9 மணிக்கு ஆரம்பித்தேன். பதினொன்னரை மணியளவில் அவர்களுக்கு வடையும் டீயும் (இன்னுமா இந்த சிஸ்டம்!) வாங்கிக்கொடுத்து விட்டு மெல்ல வீட்டைச்சுற்றி வந்தேன்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் அம்பாசடர் கார் நிறுத்த இடம் போறாததால் எங்கள் பகுதியிலிருந்து ஓரடியை தங்கள் நிலத்துடன் சேர்த்து முள்வேலிக்கம்பி தடுப்பு சுவர் எடுத்ததை நான் 20 வருடங்களுக்கு முன் கண்டித்தபோது அப்பா "இருக்கட்டும்டா..பின்னால பாத்துக்கலாம்..அவங்க ஏமாத்தமாட்டாங்க. மஞ்ச்சி வாளு!" என சொன்னார். இப்போதும் அந்த வேலிக்கம்பி அப்படியே இருந்தது. ஆனால் அம்பாசடர் இருந்த இடத்தில் ஃபோர்டு ஃபிகா. தற்போது இரண்டடி இடம் மிச்சமாக அவர்கள் பக்கம்.
ஆண்டு விடுமுறைக்கு நாங்கள் வரும்போது அம்மா ஒரு ஆளை வைத்து இளநீர், கொய்யா, சீதாப்பழம், மாங்காய் எல்லாம் எங்க வீட்டு மரங்களிலிருந்து பறித்து பேரன்களுக்கு கொடுப்பது நினைவுக்கு வந்தது. தற்போது தென்னைமரம் ஒன்றை காணோம். ஒருமுறை தங்கள் அம்பாசடர் கார் மேல் தென்னை ஓலை விழுந்ததால் மரத்தை பக்கத்து வீட்டுக்காரர்களே தரையோடு தரையாக வெட்டியிருந்தார்கள். அதற்கு முன் பதிவுத்தபாலில் இன்ன திகதிக்கு மரத்தை வெட்டப்போவதாக அறிவித்து சட்டபூர்வமாக கடிதம் வேறு. மற்ற இரு தென்னைமரங்களை பூச்சியரித்து பாதி இளநீரைக்காணோம். மாங்காய் மற்றும் கொய்யா மரங்களும் மொட்டையாக இருந்தன. அம்மா இருந்தவரை 6 மாதங்களுக்கொருமுறை பூச்சிக்கொல்லி மருந்தடித்து உரம் போட்டு வளர்த்த மரங்கள் அம்மாவோடு போய்ச்சேர்ந்துவிட்டன.
"சார்! பின்பக்க காம்பவுன்டு சுவத்த கொத்தி வுட்டு பூசனும். மேல ஏற ஏணி வேனும்" என மேஸ்திரி கேட்க வீட்டின் பக்கவாட்டில் படிக்கட்டின் கீழே முன்பு அப்பா சாய்த்து வைத்திருந்த ஏணியை தேடினேன். முற்றிலும் உடைந்திருத்தது. "பரவால்ல சார்..கடைல எடுத்தரலாம். நா சாப்ட்டு வாங்கியாந்துர்றேன். நாள் வாடக 50 ரூபா தானென மேஸ்திரி கடைக்கு ஓடினார். முன்பு மாதிரி பித்தளை தூக்கில் மதிய உணவெல்லாம் அவர்கள் கொண்டுவருவதில்லை. காசு வாங்கிக்கொண்டு குஸ்கா சாப்பிட ஹோட்டலுக்கு ஓடினார்.
வாசலில் மேல் போர்ஷனுக்குறிய எலெக்ட்ரிக் மீட்டரில் வேப்பங்குச்சி தொட்டு சிவப்புக்கலர் பெயின்ட்டில் எழுதிய ‘சீதாபதி’ என்ற அப்பாவின் பெயர் அப்படியே இருந்தது. எப்போதும்போல் மீட்டர் பெட்டியின் உள்ளேயிருந்து ஒரு பல்லி எட்டிப்பார்த்தது. அருகே முன்பு தொங்கிக்கொண்டிருந்த கொக்கி காணாமல் போயிருந்தது. அதில் மின்கட்டண பில்கள், வீட்டு வரி ரசீது, கேபிள் டீவி கார்டு அனைத்தையும் குத்தி மாட்டி வைத்திருப்போம். வாசல் கேட்டில் பால் பாக்கெட் மஞ்சப்பை மாட்டும் கொக்கியையும் காணோம்.
கேட்டுக்கு பக்கத்தில் தரையில் காவேரி தண்ணீர் மீட்டர் பழுதடைந்திருந்தது. முன்பு அப்பா அந்த இடத்தில் சிறியதாக தொட்டி ஒன்றை கட்டி அதனுள் குழாய் வைத்திருப்பார். அதன் வாயில் வடிகட்ட துணி (வேட்டியில் கிழித்த). நல்ல தண்ணீர் வரும் அந்த இரண்டு மணி நேரம் குடத்தில் பிடித்து மாடியில் தேக்ஸா, தவலை, அண்டாவிலிருந்து சிறிய போவனி வரை ரொப்புவது அவர் வேலை. தற்போது அதற்கெல்லாம் அவசியமில்லை. போன் செய்து விட்டால் பல்சர் பைக்கில் கொண்டுவந்து போடுகிறார்களாம்.
அந்த தொட்டி மூடப்பட்டு அங்கே தற்போது மோட்டர் பைக்.. முன்பு அப்பாவின் ராலே சைக்கிள் இருக்கும். நினைவுகள் மெல்ல பின் செல்ல...சைக்கிள் சீட்டின் அடியில் சொறுகப்பட்டிருக்கும் துணி, அந்த துணியை சக்கரங்களின் இடையே கொடுத்து ஸ்போக்ஸ் மற்றும் ரிம்மை சரட் சரட்டென்று இழுத்து துடைப்பது, டைனமோவை அழுத்தி சக்கரத்தைச்சுற்ற விட்டு முன்புறம் லைட் எறிகிறதாவென அவர் சரிபார்ப்பது, டைனமோ மோட்டரால் டயர் தேயாமலிருக்க அதற்கும் ஒரு சிறிய ரப்பர் கவர், முன்புறம் டைனமோ லைட்டைச்சுற்றி கட்டப்பட்டிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் மஃப்ளர் மாதிரியான மஞ்சள் துணி, சைக்கிள் செயின் கவர் இடுக்கில் உள்ள ஓட்டையில் எண்ணெய் விட ஒரு சிறிய ஆயில்கேன், பின் காரியரில் சுற்றப்பட்ட சைக்கிள் டியூப்(அரிசி மூட்டை, பழைய பேப்பர் கட்ட), "சார் பஞ்சர் இல்ல.. வால்டியூப் தான் போய்ருச்சு" போன்ற வசனங்கள்...
"சார் எக்ஸ்ட்ரா அரை மூட்ட சிமென்ட் வந்துருச்சு" ..மேஸ்திரி கூப்பிட, சட்டென்று விழித்து வாசலுக்கு விரைந்தேன். மோட்டர் பொறுத்தப்பட்ட பெடல் வண்டியிலிருந்து சிமெண்ட் மூட்டை இறங்கியது. முன்பு மாட்டு வண்டியில் வந்திறங்கும். சிமென்ட் இறக்கி முடியும்வரை மாட்டின் மூக்கனாங்கயிறு சக்கரத்தில் கட்டப்பட்டிருக்கும்.
லூசில் நாலைந்து கிலோ சிமென்ட் மற்றும் மணல் 4 சட்டி அப்பா வாங்கி கொடுத்தால் கலவச்சட்டி கொண்டு வரும் மேஸ்திரி வாசலில் பெயர்ந்திருக்கும் தரையை அழகாக பூசி மட்டப்பலகையில் தேய்த்து சரி செய்யும் அந்த நாள் இனி வருமா!
ஒருவழியாக மாலை 6 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வெளியே இருந்தபடியே குடித்தனக்காரர்களிடம் விடை பெற்றுக்கொண்டேன். வீட்டின் உள்ளே போக மனமில்லை. போயிருந்தால் நிச்சயம் கீழ் கண்டவை நினைவுக்கு வந்திருக்கும்:
1. அப்பாவின் பழைய மர்ஃபி ரேடியோ, அதன் பின்புறமிருந்து வயர் எடுத்து ஒரு கண்ணாடி கிளாசில் எர்த்திங் விட்டிருப்பார், ரேடியோவின் தலையில் இரண்டாக மடிக்கப்பட்ட காசி துண்டு.
2. படுத்தவாறு நேஷனல் பானசானிக் டேப் ரெகார்டர். நீட்டிய கால்கள் போல 4 பட்டன்கள்.
3. TDK காஸெட்டுகள்.. பக்கத்தில் அரை பென்சில் (காஸெட் சுற்ற)
4. கேமலின் இங்க் பாட்டில்(blue black) மற்றும் இங்க் ஃபில்லர்.
5. இன்லாண்டு லெட்டர், போஸ்ட் கார்டு.
6. விராலிமலைக்கு பணம் அனுப்ப மணியார்டர் பாரம்.
7. அவசரத்திற்கு தந்தி பாரம்
8. கோபால் மற்றும் பயோரியா பல்
பொடி.
9. ஃபோர்ஹான்ஸ் டூத் பேஸ்ட் (எங்களுக்கு)
10. புலிமார்க் சீயக்காய் மற்றும் அறப்புத்தூள்
11. பொன்வண்டு சோப்பு.
12. மரச்சீப்பு (ஈறு, பேனெடுக்க)
(வேறு ஏதும் நினைவுக்கு வருகிறதா?)
என்னதான் பழமைவாதியாக இருந்தாலும் அப்பாவிற்கு புதிய வாட்சுகள், ஸ்டேட் எக்ஸ்பிரஸ் பெல்ட், பஹ்ரைனில் வாங்கிய சின்ன டிரான்சிஸ்டர், தம்பி Vijay Raghavan ஓமானிலிருந்து வாங்கி வந்த டி.வி.டி ப்ளேயர் (ரஜினி படம் பார்க்க) எல்லாம் பிடிக்கும்.
iPhone பிறப்பதற்கு முன் அப்பா இறந்துவிட்டார். இல்லையென்றால் இன்று காலை திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் பஸ் ஏறியவுடன் ஆரம்பித்து காரைக்குடி இறங்கும்போது இந்தப்பதிவை iPhone இல் தட்டச்சு செய்து முடித்திருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பார்...
சட்டென வரைந்த பென்சில் ஓவியத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)

No comments:

Post a Comment