Tuesday, July 17, 2018

திருச்சி கதைகள்-1


மனைவி Usharani Sridhar ன் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக பஹ்ரைனிலிருந்து கிளம்பி திருச்சி வந்து பத்து நாட்கள் ஓடியது தெரியவில்லை. ஆசுபத்திரி, அனஸ்தீசியா, ஐசியூ இத்யாதிகளுக்கு நடுவே உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது கிடைத்த சுவாரசியமான சில திருச்சி குட்டிக்கதைகள்..(நிற்க! மனைவி தற்போது நலமே!)
இடம்: நலம் மருத்துவமனை, சுப்ரமணியபுரம்.
கதை சொன்னவர்: நம் உறவினர் பார்த்தசாரதி பாவா (கீர்த்தி சுரேஷ் மாதிரி பாதி தெலுங்கு பாதி தமிழில் பேசுவார்)
‘மஞ்ச்சி ஃபாமிலி.. ஶ்ரீதர்!’
‘யாரு பாவா?’
‘தோ.. எதுத்த வார்டுல இருக்காங்களே! அந்தம்மா..’
‘அப்படியா?’
‘ ஆமா.. சுமாரான வசதி உள்ள குடும்பம். ஓரே பையன். அப்பா சீக்கிரம் எறந்துட்டாரு. மனவாளு! பையன் பிஷப் ஹீபர்ல தான் படிச்சான். ஓரளவு மார்க்கு வாங்கி காரைக்குடி கிட்ட ராயவரம் பாலிடெக்னிக்ல டிப்ளமோ படிச்சான்’
‘சரி..’
‘’தரவாத்த.. பசங்க நாலஞ்சு பேரை சேத்திக்கிட்டு பெல்லு (BHEL) கிட்ட ஒரு யூனிட் போட்டான். நெறைய பெல்லு சப்-கான்ட்ராக்ட் கெடச்சது. நல்லா சின்சியரா வேலய முடிச்சு கொடுப்பான். அதனால அவனுக்கு பெல்லுலயே வேல போட்டு கொடுத்தாங்க. யூனிட்ட மத்த பசங்களுக்கு வித்துட்டு வேலைல சேந்தான்’
‘சுவாரசியமா இருக்கே!’
‘வீடு சீரங்கத்துல தான். ஒத்திக்கி வீடெடுத்தான். அம்மாகாரி சமச்சி போட, பையன் திருவெறும்பூருக்கு தெனம் பைக்குல வேலக்கி போவான்’
‘சரி..’
‘வீட்டு ஓனரு மதுரக்காரங்க, மாடில உண்ட்டாரு. ரெண்டு பொண்ணு. இத்துருனி பெத்த பில்லலு. பெரியவள உள்ளூர்ல கட்டிக்கொடுத்து அவங்க புருசன் உறையூர்ல டீக்கடை. நல்ல வசதி’
‘டீக்கடைல அவ்ளோ காசா?’
‘மரி ஶ்ரீதர்! ஒரு கடை தொறந்து நல்ல காசு சேத்து, எம்பது லச்சத்துக்கு வீடு. புத்தூர்ல இன்னொரு கடையும் தொறந்தாங்க.. அத விடு. ரெண்டாவது பொண்ணு பக்கத்துல காலேஜ் போய்ட்ருந்தாப்டி.. கீழ் வீட்டுல ஒத்தக்கி இருந்த நம்ம பையன் ஆபிசுக்கு கெளம்பற சமயம் இவளும் காலேஜ்க்கு கெளம்புவா’
‘லவ்வா?’
‘அவ்னு! (கொஞ்சம் வெட்கத்துடன்).. வீளு தெலுங்கு..ஆ பில்ல அரவம்.. தேவர்வாளு.’
‘ரெண்டு வீட்லயும் ஒத்துக்கிட்டாங்களா!’
‘அவ்னு. அவங்களுக்கு பையன ரொம்ப பிடிக்கும். இருவத்தெட்டு வயசுல பின்னோடு ச்சால பொடுவு (பையன் நல்ல உயரம்) ஓரளவு நல்ல வேலை. ஒத்திக்கு கொடுத்த வீட்டை இவங்க விக்கலாம்னு இருக்கறப்ப பையனே வெலைக்கி வாங்க ரெடின்ட்டான். ஒத்திக்கி மேல கொஞ்சம் பணத்த லோனு போட்டு கட்டி வாங்குனான். அஞ்சு பத்து பாக்கி இருந்து லவ்வு வேற வந்துடுச்சா! கல்யாணத்த பண்ணி வச்சுட்டா அம்மாகாரி. பெல்லி பாக சேஸினாரு ஶ்ரீதர்!’
‘பரவால்லியே. சாதி பிரச்சனை ஒன்னுமில்லியே?’
‘அதி சினிமா, பாலிடிக்ஸ்லோ தா பா!’
‘ரொம்ப சந்தோஷம்’
‘பையன் காலைல ஆபிஸ் போயிடுவான். பொண்ணு தில்லைநகர்ல எதோ டிராவல்சுல வேல’
‘சரி..’
‘அம்மாகாரி அப்பப்ப பஸ் புடிச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலுக்கு போய்டுவா. கெட்டிக்கார பொம்பள. வாராவாரம் அவங்களுக்கு மைக்கேல்ல ஐஸ்கிரீமும் சிரப்பும் சாப்புடனும். அப்படியே சினிமா போயினுவா. வர்றப்ப சாஸ்திரி ரோடு அடயார் ஆனந்தபவன்ல சாப்ட்டு பையனுக்கும் கோடாலுக்குனி (மருமகளுக்கும்) பார்சல் வாங்கிட்டு வந்துடுவா. நேரங்கெடச்சா ஜங்ஷன் பக்கம் பையனுக்கு இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டறது, லோனு இம்மய் அது இதுன்னு அலைவா பாவம். நல்லா தெம்பா இருப்பா. எளநீ, பாலக்கரை பிரம்மானந்தால சர்பத், ஜிகர்தண்டா வாங்கி குடிக்கும்’
‘சரி அப்பறம்..’
‘பையன் ஒருநா காட்டூர்ல இருந்து இந்தப்பக்கம் வர்றான். அரியமங்கலம் மேம்பாலத்துல ஏறுனான். சீரங்கம் தானே! பைப்பாஸ் ரோட்ட புடிச்சான்’
‘அப்பறம்?’ (பைக்னு சொன்னப்பவே பக்குன்னு எதோ ஒரு பயம் எனக்கு)
‘டிரைய்லர் பின்னாடி ஒழுங்காத்தான் வந்துட்ருந்தான் பைக்குல. டிரெய்லர் என்ன தலதெறிக்கவா ஓட்டுவான்?’
‘சரி.. விசயத்துக்கு வாங்க பாவா’
‘அவசரம்.. சைட்ல ஓவர்டேக் பண்ண பாத்தான் பையன்’
‘ஓவர்டேக் பண்ணானா?’
‘லேது.. எதுத்தாப்ல மெட்ராஸ் பஸ் ஒஸ்துந்தி கதா! பையன் சுதாரிச்சு ஸ்பீடை கொறச்சு டிரைய்லர் பின்னாடி திரும்ப வரலாம்னு...’
‘ஐய்யய்யோ.. ஒன்னும் ஆகலயே!’
‘பின்னாடி அவனால வர முடியல. ஏதோ ஒன்னு அவன இழுத்துச்சு. எதுத்தாப்ல பஸ் கிட்ட வந்துடுச்சு’
‘என்னாச்சு.. சட்னு சொல்லுங்க பாவா’
‘டிரெய்லரோட சைடு பக்கம் கயிறு சுத்திக்கட்ட இரும்பு கொக்கி இருக்குமே! அதுல பையன் சட்டையோ காலரோ மாட்டி பைக்கோட உள்ளாற போய்ட்டான்’
‘ஐயோ! ஒன்னும் ஆபத்தில்லே!’
“பையன் தொடைல பின்வீலு எக்கிந்தி. நெத்துரு (இரத்தம்) ஒக்கட்டி லேது. பையன் முழிச்சிக்கிட்டு தான் ரோட்ல கெடந்தான். படுத்த வாக்குலயே அம்மாகாரிக்கு போன் போட்டு ‘அம்மா! இட்டவேல அய்ப்பொய்ந்தி. பயம் லேது! நா ஆபிஸ் போன் சேசி ச்செப்பு’ன்னு சொல்லிட்டு மயக்கமாயிட்டான்”
‘கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்களேன் பாவா! பையன் பொழைச்சிக்கிட்டானா இல்லியா?’
‘ஆபிஸ் காரங்க ஸ்பாட்டுக்கு வர்றதுக்குள்ளாற பின்னாடி வந்த பெல்லுகாரங்க யாரோ அவன் யூனிஃப்ர்மை பாத்துட்டு வண்டிய நிறுத்தி போன் செஞ்சி ஆம்புலன்ஸ் வந்துடுச்சு’
‘ ஐயோ..’
‘ ஆசுபத்திரில சேத்து ரெண்டு நாள்ல போய்ட்டான்’
‘ஐயோ பாவம். பயங்கர அதிர்ச்சியா இருக்கே! கல்யாணம் ஆயி மூன்னாலு மாசந்தானே ஆச்சு!’
‘ சும்மா சொல்ல கூடாது ஶ்ரீதர்.. அம்ம கத்த போல்டு தா!. பையனுக்கும் நல்ல தைரியம். அந்த ரெண்டு நாள்ல அம்மாவையும் பொண்டாட்டியையும் பயப்பட வேண்டாம்னு சொன்னான். இன்ஷீரன்ஸ் உந்தி காதா! தான் இறந்துட்டா வீட்டு லோன் கட்டவேண்டியதில்லைனு முன்கூட்டியே சொல்றான் பாத்துக்க!’
‘அப்படியா! அவ்ளோ வெவரம் தெரிஞ்சவனா?’
‘அவ்னு! இன்டெலிஜென்ட் வாடு! ஷிஃப்ட்க்கு ஒரு மணி நேரம் முன்னயோ பின்னயோ, வேலை செய்ற எடத்துக்கு பதினஞ்சு கி.மீ சுத்தி எங்க ஆக்சிடென்ட்ல செத்தாலும், அது டூட்டில செத்த மாதிரி.. ஆபிஸ்ல பணம் முழுசும் கெடைக்கும்னு சொல்லிட்டு செத்துப்போனான். பசிவாடு.. பாப்பம்..சச்சியே பொய்னாடு!’
‘இதெல்லாம் நடந்து எத்தினி நாளாவுது?’
‘ஒக்கட்டினார சம்வச்சரம் (ஒன்னறை வருடம்) அய்ந்தி..’
‘சரி.. இப்ப அந்தம்மா எதுத்த வார்டுல எதுக்கு இருக்காங்க?’
‘ஆ அம்மக்கு இப்புடு ஹை ஃபீவர்.. ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் சேஸ்தாரு.. நாலு மணிக்கு அவங்களோட மருமக தன் புருஷனோட டீ கொண்டாருவாங்க’
‘ என்ன! அந்த பொண்ணுக்கு கல்யாணமாயிடுச்சா?’
‘மரி! பையன் செத்த கொஞ்ச நாள்லயே தேனி பக்கத்துலர்ந்து நல்ல பையனா பாத்து அந்தம்மாவே கல்யாணம் செஞ்சி வச்சிருச்சு. அவனுக்கும் திருச்சியில தான் வேலை’
‘தேனியா? பையன் தேவரா.. தெலுங்கா?’
‘அதி மனக்கு எந்துக்கு இப்புடு? டீ சாப்டலாமா ஶ்ரீதர்?..இப்ப அதே வீட்ல நாலு பேரும் இருக்காங்கல்ல!’
‘நாலு பேரா?’
‘ஆமா.. பேரன் பொறந்துட்டான்ல! மொகுடு பென்லாம் பாக உண்ணாரு. மன செய்லோ ஒக்கட்டி லேது ஶ்ரீதர்.. தேவுடு தா சேஸ்தாடு காதா! ’
கதையை நீட்டி சொன்ன பார்த்தசாரதி பாவாவுக்கு நன்றி..
சட்டென வரைந்த பத்து நிமிட ஓவியத்துடன்...
(சீதாபதி ஶ்ரீதர்)

No comments:

Post a Comment