Tuesday, July 17, 2018

திருச்சி கதைகள்-3


மன்னார்புரம் (அரசு குடியிருப்பு) செங்குளம் காலனி. பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர். ஒரு ஃப்ளாட்டில் மரக்கடை சையத் முர்துசா பள்ளியின் தமிழாசிரியர் குடியிருப்பாரென்றால் பக்கத்து ஃப்ளாட்டில் தாசில்தார் அலுவலக குமாஸ்தா. ‘DA அரியர்ஸ் போட்ருவானா இந்த தடவை?’ போன்ற பேச்சுக்கள் அங்கங்கே பரவலாக கேட்கும்.
ஹாலில் சோஃபா கம்பெட், டயனோரா டிவி, வாசலில் மொபெட் (சுவேகா அல்லது லூனா) என நடுத்தர குடும்பத்தினருக்கான அடையாளங்கள். கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டருக்கும் பையில் பால் பாக்கெட் காலை விழுந்தால் மேல் மாடிக்காரர் மேலே இழுத்துக்கொள்வார்.
அநேகமாக எல்லோரது வீட்டிலும் பொன்னருவியோ, KS ராஜாவின் இலங்கை திரை விருந்தோ (‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா’) பாடிக்கொண்டிருந்தது. சோனா மீனா, மாரிஸ், சிப்பி தியேட்டர்கள் வந்த புதிது. எல்லாமே நல்ல நல்ல படங்கள். தீபா, ஶ்ரீபிரியா, சத்யகலா, ராதா, அம்பிகா,மாதவி, சசிகலா போன்ற இளம் நடிகைகள் படங்கள் சக்கை போடு போட்டு இளையராஜா கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார்.
முகப்பருக்களுடன் கதாநாயகனாக வரும் மோகனை விட கதாநாயகி தான் முக்கியம் என நினைக்கும் பருவம் அது! தாசேட்டனின் ‘ராமனின் மோகனம்’, பாலுவின் ‘தேவதையிளம்தேவி உன்னைச்சுற்றும் ஆவி’ என முனுமுனுத்தபடி இளைஞர்கள் முக்கா கட்டு லுங்கியுடன் காலனிக்குள் திரிந்தனர்.
நெருக்கமான இரண்டடுக்கு கட்டிடங்களில் தலா ஆறு ஃப்ளாட்கள். அநேகமாக எல்லா வீடுகளிலும் கல்லூரி பெண்கள். நம் வீட்டு ஹாலில் இருந்து பார்த்தால் பின் ஃப்ளாட்டின் ஹாலோ பெட்ரூமோ தெரியும். ‘இது போதாதா வாலிப மாணவ மாணவியருக்கு’ என நினைப்பவர்கள் மன்னிக்க!
காதல் நமக்கு வந்தாலும் அந்த பக்கத்திலிருந்து வரனுமே! எப்படி வரும்? எப்போது எட்டிப்பார்த்தாலும் அந்தப்பக்கம் முண்டா பனியன் மற்றும் கையில் பேப்பருடனும் அவளது அப்பா தான் உட்கார்ந்திருப்பார். அதிலும் சிலர் வெங்காயம் நறுக்கிக்கொண்டு... மனைவிக்கு உதவியாம். அந்த பெண் ஈரத்தலையுடன் எப்போதாவது துணி உலர்த்த பால்கனி பக்கம் வரும்போது தான் கீழே தண்ணி லாரி வந்து தொலைக்கும். அப்பா கூட நாம் குடத்துடன் ஓடனும்.
எதிர் ஃப்ளாட் பெண் ஹோலி க்ராஸோ சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியோ. டவுன் பஸ்ஸில் நம் கூடத்தான் வருவாள் போவாள் . ஆனால் பேச மாட்டாள். மாலையில் அவங்கம்மாவுடன் நம் வீட்டுக்கு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலுக்கு போக வருவாள். அத்தோடு சரி. பேச்செல்லாம் கிடையாது. போதா குறைக்கு ‘இந்த தடவையும் இவனுக்கு ரிசல்ட்டுல போயிடுச்சு. ஹும்! சிஏ பரிட்சை கஷ்டம்னு சொன்னாலும் மத்த வீட்டு பசங்க பாஸ் பண்றாங்களே!’ போன்ற அம்மாவின் அங்கலாய்ப்புக்களுக்கு நடுவே காதல் எங்கிருந்து வரும்!. காதல் வர (நமக்கு) சான்சே இல்லாத இடமென்றால் அந்த காலனி தான்.
ஆனால் காதல் வந்ததே! யாருக்கு? எப்படி?
இரண்டாம் தளத்து வீட்டுப்பையன் நாயுடு. சுருட்டை முடி. முகத்தில் பரு. ஐடிஐ படிப்பு முடித்து திருவெறும்பூர் பகுதியில் எங்கோ வேலை. காக்கி பாண்ட் வெள்ளை சட்டை யூனிபார்ம், டிபன் டப்பா, டி-ஸ்கொயர் ஸ்கேல் சகிதம் காஜாமியான் ஸ்டாப்பில் இறங்கி ஈபி வழியாக காலனி உள்ளே தலை குனிந்தபடி வருவான். கூச்ச சுபாவம். அவன் அப்பா காய்கறி-வொயர் கூடையுடன் வருவது போவது தவிர வேறென்ன செய்கிறார் தெரியாது. ஆனால் சரியாக இரவு 2 மணிக்கு எங்கோ நாய் ஊளையிடுவதை தொடர்ந்து அவர் கொல்..கொல்லென இருமுவது காலனி முழுவதும் கேட்கும். பையனுக்கு ஒரே தங்கை. காலேஜ் போகும் நேரம் தவிர அவளை யாரும் பார்க்கவே முடியாது. ‘ஒரேய்!’ என அடிக்கடி கூப்பிடும் அம்மா தெலுங்கில் சாதாரணமாக பேசினாலே இரண்டரை கட்டை உச்ச ஸ்தாயி. சண்டையென வந்து விட்டால் குரல் தாரை தப்பட்டை தான்.
பையனுக்கு பக்கத்து ஃப்ளாட்டில் சைவ பிள்ளைமார்கள். அப்பா, அம்மா, குட்டி தம்பியுடன் நெடுநெடு உயர பெண். அவள் குண்டா, ஒல்லியா என நாம் யூகிக்க முடியாதபடி ஆண்கள் போடும் முழுக்கை சட்டை மற்றும் பாவாடை. தாவணி பிடிக்காதாம். ஹாலில் மேலும் கீழும் நடந்துகொண்டே பொருளாதாரம் படிப்பவள். பாங்க் எக்ஸாம் எழுதிக்கொண்டிருந்தாள்.
பையன் ஃப்ளாட்டுக்கு நேர் எதிரே பால்கனியில் இரண்டு கல்லூரி மாணவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை எதிரே வைத்து பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ‘டேய்! இதென்ன பொழுதன்னிக்கும் கண்ணாடில மூஞ்சை பாத்துக்கிட்டு!’ என அவர்கள் அம்மா கேட்டு விட்டு அந்தப்பக்கம் போய்விட பையன்கள் மறுபடியும் கண்ணாடியுடன்...
விஷயம் இது தான். கண்ணாடியில் பார்க்கும்போது அதில் அவர்களுக்கு பின்னால் தூரத்தில் காக்கி பாண்ட் பையன் தன் பெட்ரூம் ஜன்னல் அருகே நின்று கொண்டு ஏதோ சைகை காட்ட, அந்தப்பக்கம் ஆம்பளை சட்டைப்பெண் அவள் வீட்டு பெட்ரூமிலிருந்து பதிலுக்கு சைகை. காலனியில் சில இளைஞர்களுக்கு மட்டும் அந்த சைகைக்காதல் விளையாட்டு தெரியவர, விஷயம் வெளிவராமல் கப்சிப் தான்.
அடுத்த சில நாட்களில் மன்னார்புரம் EB ஆபிஸ் பின்புறம் மறைவாக கருவேல மர நிழலில் எப்போதும் அந்த ஜோடி பேசிக்கொண்டிருந்தது. அரசல் புரசலாக எல்லோருக்கும் தெரியவர, காலனியில் அந்த காதலுக்கு சப்போர்ட்.
திடீரென ஒருநாள் பையன் வீட்டு பால்கனியில் இருந்து லபோ லபோவென சத்தம். பையனும் பெண்ணும் திடீரென திருமணம் செய்துகொண்டு மாலையுடன் பெண் வீட்டில் தஞ்சமடைய, பையனின் நாயுடம்மா தன் பால்கனியிலிருந்து எதிரே பெண் வீட்டை பார்த்து வாயில் வந்தபடி திட்டிக்கொண்டிருக்க, காலனி பரபரப்பானது. வொயர் கூடை அப்பா கையில் புடலங்காயுடன் வழக்கம்போல மௌனம்.
அடுத்து சில நாட்களில் தினமும் மாமியார் வீட்டிலிருந்து பையன் பெண்ணுடன் ஆபிஸ் கிளம்பும்போது, நாயுடம்மா அதே நேரத்திற்கு பால்கனியிலிருந்து ‘அடியே சிறுக்கி! எம்பையனை முந்தானைக்குள்ள வச்சிக்கிட்டு.. நீயெல்லாம் பொம்பளையா?’ என கத்த, மற்ற ஃப்ளாட்காரர்கள், காஸ் அடுப்பில் பால் பொங்குவதையும் விட்டுவிட்டு , அதை வேடிக்கை பார்க்க அலாரம் வைத்துக்கொண்டார்கள்.
அம்மா கடைசி வரை பையனை வீட்டிற்குள் சேர்க்க மறுத்ததால், அவன் மாமியார் வீட்டோடு இருந்தான். 9 மணி பால்கனி சத்தங்கள் தொடர்ந்தன. மற்ற வீட்டிலும் அலாரம் அடித்துக்கொண்டு தான் இருந்தது.
ஒரு நாள் காலை 9 மணிக்கு பால்கனியில் சத்தத்தையே காணோம். எல்லோரும் தத்தம் வீடுகளிலிருந்து எட்டிப்பார்த்தபோது வீட்டுக்குள்ளே இருந்தும் நாயுடம்மா வெளியே வரவில்லை.
அவர் சத்தம்போடுவதை ஏன் நிறுத்தினார் என எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் ஒரு செட்டியாரம்மா வேறு ஒரு ஃப்ளாட் பால்கனியிலிருந்து நாயுடம்மா வீட்டை பார்த்து ‘அடியே சிறுக்கி!....’ என கத்திக்கொண்டிருந்தார்.
சட்டென வரைந்த ஓவியத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)

2 comments:

  1. //அந்தப் பக்கம் ஒரு செட்டியாரம்மா வேறு ஒரு ஃப்ளாட் பால்கனியிலிருந்து நாயுடம்மா வீட்டை பார்த்து// Sridhar sir, would it means couple moved to நாயுடம்மா வீடு or some other sibling got eloped?

    ReplyDelete
    Replies
    1. Some other boy eloped with Nayudamma's daughter. I had given a hint that Nayudamma had a daughter

      Delete