Tuesday, July 17, 2018

திருச்சி கதைகள்-5 (கடைசி பாகம்)


காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் சாலை வரகனேரி செல்லும் வழியில் அண்ணா மராட்டா புரோட்டா கடையை அடுத்த கடைகளில் ஒன்று சாஸ்தா உணவகம். மற்ற கடைகளின் டன்..டன்..டன்..கொத்து புரோட்டா, முட்டை புரோட்டா சத்தங்களுக்கு நடுவே இந்த சைவ உணவகத்தில் இட்லி, தோசை, புரோட்டா குருமா, இடியாப்பம், ஆப்பம் சாப்பிட கூட்டம் அள்ளும். சென்ட்ரல் டாக்கிஸில் மேல்நாட்டு மருமகள் செக்கன்டு ஷோ முடிந்து இரவு ரெண்டு மணி வரை எப்பவுமே ஜேஜேன்னு கூட்டம்.
கடை உரிமையாளர் பவித்ரன். மலையாளி. நெற்றியில் எப்பவும் சந்தனம், முகம் முழுக்க தாடி, வெள்ள சட்டை வேட்டி தான். இரவு இரண்டு மணிக்கு கடையை பாலனிடம் விட்டுவிட்டு சைக்கிள் மிதித்து உறையூர் பாண்டமங்கலத்தில் வீடு வந்து சேரும்போது காலை மணி மூன்றாகிவிடும். மதியம் பன்னிரண்டு வரை முன் ரூமில் பெஞ்சு மேல் தலகானியில்லாமல் தூக்கம். பின் மாலை ஏழு மணிக்கு மேல் குளித்துவிட்டு கடைக்கு போவார். பாலன் மற்றும் ஐந்து மலையாளி பையன்களை வைத்து நடத்தும் வியாபாரம்.
பல வருடங்களுக்கு முன் கேரளாவை விட்டு மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் திருச்சி வந்து நைட்டுக்கடை போட்டது நல்ல நேரம். பணம் தாராளமாக புழங்கியது. பீடி சிகரெட் தண்ணி கிடையாது. அடுத்து மூன்று குழந்தைகள். உறையூரிலேயே 90 ரூபாய் மாத வாடகை வீட்டை முப்பதாயிரத்திற்கு விலைக்கு வாங்கி, பின்பக்கம் பத்தடிக்கு இடத்தில் கொட்டாய் போட்டு கறவை பசுக்கள்.
மார்கழி மாதம் முழுவதும் அவர்கள் வீட்டில் ஐயப்ப பூஜை. ‘என்ன மணக்குது.. எங்கே மணக்குது’, ‘சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்’ போன்ற பாடல்களை அவர்கள் மனமுருக பாடும் அழகே தனி.
மனைவி அனகா ஈரத்தலை, நெற்றியில் சந்தனத்துடன் சுகுமாரி மாதிரி இருப்பாள். செலவுக்கு எப்போது பணம் கேட்டாலும் கணவனின் ‘என்டே சர்ட்டில் நின்னும் எடுத்தோ’தான். கடை வருமானத்திலிருந்து வீட்டு செலவுக்கு அவள் எடுத்துக்கொள்ளும் பணம் மற்றும் பால் வியாபார பணத்தை அக்கம்பக்கத்தில் நூறு இருநூறு என வட்டிக்கு விட்டு இரண்டு சுற்று பெருத்திருந்தாள்.
பெரிய பெண்ணை பாலக்கரையில் லேத்து பட்டரை நடத்தும் மலப்புரம் விநோதனுக்கு கட்டிக்கொடுத்தார். இரண்டு பையன்கள் தென்னூர் இந்தி பிரச்சார சபா இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் படித்து காலேஜ் மேற்படிப்பு என போய் விட்டார்கள்.
கடைக்குட்டி லெலிதா கல்யாணத்துக்கு காத்திருந்தாள். நெடுநெடுவென உயரம். வெளிச்செண்ணெயில் வளர்ந்த நீண்ட கேசம். அழகு, எழில், நளினம், வனப்பு, வாளிப்பு என எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தமாக இருந்தாள். ஆனால் சரியான பையன் கிடைக்காதது பவித்ரனை கவலையில் ஆழ்த்தியது. மரக்கடை வித்யாதரன் பையனை லெலிதாவுக்கு பார்த்தார்கள். பையனிடம் எப்பவும் சாராய வாடை மற்றும் இருமும்போது தகர உண்டியல் சத்தம் (பீடி இருமல்). பேலஸ் தியேட்டர் காண்டீன் நடத்தும் செருதுருத்தி கோவிந்தன் பையன் ரெவி அழகாய் இருந்தாலும் கடன் அதிகம் என்பதால் பவித்ரனுக்கு இஷ்டமில்லை.
பவித்ரனுக்கு கடை தவிர வேறு எதுவும் தெரியாது. பையன்கள் யாரும் அவருக்குப்பின் கடையை எடுத்து நடத்தக்கூடியவர்கள் அல்ல. அவரை விட்டால் பரோட்டா மாஸ்டர் பாலனுக்குத்தான் கடை வரவு செலவு, சாதனங்கள் வாங்குவது போன்றவை தெரியும். பாலன் ஹைஸ்கூல் வரை படித்தவன். பல வருடங்கள் பவித்ரனுடனே இருந்து விட்டான். கோதுமை சிவப்பு நிறத்தில் சுருட்டை முடி, பட்டை மீசை, எடுப்பான பற்கள். மேலுதட்டையும் சேர்த்து மேலே தூக்கின மாதிரி மூக்கு. சுருக்கமாக..இளம் மம்மூட்டி சாயல்.
‘சரி ஶ்ரீதர். புரிஞ்சிடுச்சு! பாலன் நல்லவன். லெலிதாவுக்கும் கல்யாணமாகவில்லை. பவித்ரனுக்கு அப்புறம் கடையை பாலன் தான் பார்த்துக்கொள்கிறான். அதனால் லெலிதா- பாலன் காதல்! கரெக்ட்டா?’ என கேட்பவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்! தொடர்ந்து படிக்க!.
பவித்ரன் ஒரு வழியாக திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் ரோட்டில் டீக்கடை நடத்தும் மது என்ற பையனுக்கு லெலிதாவை பார்த்து கல்யாணத்தை முடித்தார்.
அடுத்த ஒரே வருடத்தில் அவருக்கு சர்க்கரை வியாதி, கால் வீக்கம் என கடை பக்கம் அதிகம் போக முடியாமல் போனது. மனைவி அனகா குடும்பத்தை குறையில்லாமல் நடத்த, பையன்களும் வேலைக்கு போக ஆரம்பித்தார்கள்.
கடையை பாலனுக்கே கொடுத்து விட முடிவு செய்து அது விஷயமாக அவனிடம் பவித்ரன் பேச, பாலனுக்கு இஷ்டமில்லை. அரசுக்கு சொந்தமான சாலையில் கடை இருந்ததால் பகடி ஐம்பதினாயிரம் கொடுத்து கடையை வாங்க நிறைய பேர் முன் வந்தும், பாலனுக்கே மிகக்குறைந்த விலையில் கடையை கொடுப்பதாக முடிவு செய்தார்.
ஒரு நாள் சென்னையிலிருந்து கைக்குழந்தையுடன் வந்திறங்கினாள் லெலிதா, இரண்டே வருடத்தில் கணவனால் விரட்டப்பட்டு... ‘என்டே பர்த்தாவு என்னெ கை விட்டு.. அது கொண்டானு ஞான் வீடு விட்டு எறங்ஙியது..’
பவித்ரன் நிலைகுலைந்து போனார். பெற்ற பாசம். ‘நீ சங்கடப்படண்டா மோளே! ஞான் நின்னே நோக்கிக்கொள்ளாம்’ என அவளை தேற்றினாலும், உடல் நிலை சரியில்லாமல், மகள் திரும்பி வந்தது அவரை மேலும் வாட்ட, அடுத்த சில மாதங்களில் தூக்கத்திலேயே போய்ச்சேர்ந்தார்.
அனகா மனம் தளறாமல் லெலிதாவையும் குழந்தையையும் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தினாள். உறவினர்கள் பாலனுக்கே லைலிதாவை கட்டி வைத்துவிடலாமேயென கேட்க ஆரம்பிக்க, லெலிதா தீவிரமாக மறுத்தாள். பாலன் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழலாமே என நினைத்தாள். அனகா என்ன நினைத்தாள்? பாலன் என்ன சொல்கிறான்? முடிவு தான் என்ன?
முடிவு-1
நீண்ட தயக்கத்திற்குப்பிறகு லெலிதா பாலனை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க, பவித்ரன் மீதுள்ள மரியாதையால் லெலிதாவையும் குழந்தையையும் பாலன் ஏற்றுக்கொள்கிறான். குடும்பத்தில் சந்தோஷம் நிலவுகிறது.
முடிவு-2
தன்னால் பாலன் எதற்காக வாழ்க்கையை தியாகம் செய்யவேண்டும்! நான் குழந்தையுடன் தனியாகவே இருந்து விடுகிறேனே என லெலிதா முடிவெடுக்க, பாலன் திருமணத்தை நல்ல முறையில் அனகா நடத்தினாள். பின் லெலிதா மற்றும் கைக்குழத்தையுடன் பவித்ரனின் நினைவுகளுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு பயணம் செய்யத்தொடங்கினாள்.
முடிவு-3
இந்த முடிவு தான் நான் எழுத நினைத்தது. என்னவாக இருக்கும்! நீங்களும் சொல்லலாமே!
சட்டென வரைந்த ஓவியத்துடன்
(சீதாபதி ஶ்ரீதர்)

1 comment:

  1. முடிவு - 3:

    லெலிதாவின் கணவன் மது தன் தவறை உணர்ந்து திருந்துகிறான். மனைவியிடம் மன்னிப்பு கேட்டு தன்னுடன் சென்னைக்கு வருமாறு அழைக்கிறான். அவள் தன் அப்பாவின் உணவகத்தை நடத்திக்கொண்டிருப்பதால் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் தான் உடனே சென்னைக்கு வரமுடியாது என்கிறாள். மது யோசிக்கிறான். தன் திருவல்லிக்கேணி டீ கடையை மூடிவிட்டு மாமனாரின் உணவகம் நடத்தும் பொறுப்பை ஏற்கிறான். பாலனும் அவனுக்கு துணையாய் இருந்து தொழிலை கற்றுக்கொடுக்கிறான். எல்லாரும் சந்தோஷமாய் வாழ்கிறார்கள். சுபம்.

    ஓவியம் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete