Tuesday, July 17, 2018

திருச்சி கதைகள்-4


வடு என்கிற வடுகநாதன் தென்னூர் பருப்புக்கார தெருவில் வசிக்கும் செட்டியார் வீட்டுப்பையன். அப்பா ராமநாதன் புத்தூர் பெரியாஸ்பத்திரியில் கம்பவுண்டர்.
பையன் நல்ல சேப்பு கலர். நேஷனல் ஈவ்னிங் காலேஜில் BA கார்ப்பரேட். சுமாரான உயரம். நெஞ்சாங்கூடு கட்டி உரோமக்காடு. பேப்பரை சுருட்டியபடி காலை பதினோறு மணிக்கு ஜெனரல் பஜார் தெரு மொகனையில் டைப்ரைட்டிங் ஹையர் படித்தான். எதிரே அழகான பெண் வந்தாலும் ஏறெடுத்து பார்க்காத சுபாவம்.
டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் இன்ஸ்ட்ரக்டர் பிலோமினா நல்ல கருப்பான நிறம். கருங்கல் சிலை போலிருப்பாள். லேசாக விடைத்த மூக்கு. மூக்கின் மேல் வைரம் போல மின்னும் வியர்வைத்துளிகள். திருத்தமான புருவங்களுக்கிடையே கொஞ்சம் சொறுகின மாதிரி அழகிய கண்களில் எப்போதும் காந்தம். பேசும்போது நம் கண்களை அவள் வசீகரமாக ஊடுருவி பார்க்க, எந்த ஆணும் பயத்துடன் சட்டென பார்வையை அகற்றுவான். இரு காதுகளின் பின் பக்கம் எடுத்து விடப்பட்டிருக்கும் நீண்ட முடிக்கற்றை அவள் அழகை இன்னும் பத்து பர்ஸன்ட் கூட்டியது. மினி ஜாங்கிரி போன்ற ஈர அதரங்கள். நொடிக்கொரு தரம் தன்னையே குனிந்து பார்த்து, உடையை சரிப்படுத்தி, நம்மையும் படுத்தியெடுத்து ‘இப்ப நாம என்ன செஞ்சிட்டோம்!’ என நம்மை யோசிக்க வைப்பாள். நகங்களை அழகுபடுத்தி பிங்க் கலர் நெயில் பாலிஷ் இட்டு அவள் நளினமாக டைப் செய்யும்போது நமக்கு படு அவஸ்தை. ‘மஞ்சள் வானம்.. தென்றல் காற்றில்.. உனக்காகவே நான் வாழ்கிறேன்’ என நம்மை கனவு சீனுக்கு கொண்டு போய்... வேணாம்.. படுத்தாதே பிலோமினா!.
கதையை எழுதும் நமக்குத்தான் இவ்வளவு அவஸ்தை. தினமும் அங்கே டைப்பிங் செய்யும் வடு ஏதோ கோவில் பிரகாரம் சுற்றுவதுபோல இயந்திரமாய் வலம் வருவான். ‘அந்த கார்பன் சீட்டை எடுங்க’ என யாராவது ஒரு பெண் கேட்டால் நாம் ஜென்ம சாபல்யம் அடைந்த மாதிரி துள்ளிக்குதித்து பேப்பரை எடுத்துக்கொடுத்து ஜெமினி மாதிரி அவளை பார்ப்போம். வடு அப்படியல்ல. முகத்தை கூட பார்க்க மாட்டான்.
வடுவின் இந்த குணமே பல பெண்களை அவன் பக்கம் ஈர்க்க, அவன் வீசாத காதல் வலையில் பிலோமினா தொபுக்கடீரென விழுந்தாள்.
அவனுக்கு மட்டும் சில சலுகைகள கொடுப்பதை மற்ற பெண் இன்ஸ்ட்ரக்டர்கள் கவனிக்காமலில்லை. வடுவிற்கு சாமர்த்தியம் போறாது. அவனவன் பிலோமினாவிற்காக உயிரையே விடத்தயாராக இருக்க, இவன் ஏன் இப்படி ஜடம் மாதிரி?
மற்ற பையன்கள் சங்கிலியாண்டபுரம் போய் ரெண்டு ரூபாய் கொடுத்து ஸ்டெப் கட்டிங், முடியை பின் பக்கமாக காலர் வரை புரள விட்டு அப்படியே ரோலிங் கோம்பில் சுருட்டி, சமஸ்பிரான் தெரு ஆல்ஃபா டெய்லரிடம் பதினெட்டு இஞ்ச் பாட்டம் மற்றும் தேயாமலிருக்க ஜிப் வைத்து, நெஞ்சு வரை பேண்ட், கட்டையில் செய்த செறுப்பு, படு குட்டையான சட்டை, முழங்கை மூடிய அரைக்கை, ஸ்வஸ்திக் பக்கிள் வைத்த பட்டை பெல்ட்.. என இவ்வளவு முஸ்தீபுகளுக்குப்பின் கடைசியில் அந்த பெண்கள் ‘தேங்க்ஸ்ண்ணா!’ என வெறுப்பேற்றுவார்கள். ஆனால் சாதாரண பாட்டா செறுப்பில் வரும் வடுவிற்கு மட்டும் அப்படி என்ன மச்சம், பிலோமினா அவனைச்சுற்றி வர!
‘வடு! இங்க வாயேன்! இங்கிலீஷ் வார்த்தைகள் நீ ரொம்ப தெரிஞ்சுக்கனும். நல்லது தானே! இந்தா வச்சுக்கோ!’ என ஒருநாள் அவள் லிஃப்கோ டிக்‌ஷ்னரி கொடுக்கும்போது காதலுடன் அவனை ஓரக்கண்ணால் பார்த்து அனுப்பியதை அவன் கவனித்த மாதிரி தெரியவில்லை.
முன்கூடத்தில் அப்பா அம்மா இருக்க, வடு ரூமுக்குள்ளே டிக்‌ஷ்னரியை சுவாரசியமில்லாமல் புரட்டினான். நடுவே சில பக்கங்கள் மடிக்கப்பட்டு இருக்க, ஏதோ நினைவாக அலட்சியமாக அந்த பக்கங்களை அவன் திரும்ப பார்க்க E, I, L,O,U,V எழுத்துக்கள் ஆரம்பமாகும் பக்கங்கள் முறையாக மடிக்கப்பட்டு இருந்தன. அதென்ன E I L O U V? சட்டென வடு பிரகாசமானான். அந்த எழுத்துக்களை மாற்றியமைத்தால் ‘I LOVE U’.. சட்டென தெப்பமாக நனைந்திருந்தான் வடு. தூரத்தில் எங்கோ 100 யானைகள் பிளிற, செண்டை மேளம் முழங்க, அணையில் வெள்ளம் புரண்டு ஓட, பாரதிராஜா பட கடைசி சீன் உடுக்கை சத்தம் கேட்க.. வடுவிற்கு முதல் முறை காதல்..
படாரென எழுந்து ஹாலுக்கு வந்தால் நிசமாகவே ஏதோ பாரதிராஜா படத்தின் கடைசி காட்சி.. திரையில் ‘அ ஃபிலிம் பை பாரதிராஜா’. ‘என்னாச்சுப்பா! ஏன் வியர்த்திருக்கே?’ என அவனது அப்பா அம்மா கேட்க, வழிந்தபடி ஏதோ சொல்லி சமாளித்தான். உடலெங்கும் இனம்புரியாத ஏதோ ஒரு சிலிர்ப்பு.
‘தம்பி! டிக்கெட் எடுத்தீங்களா இல்லியா? சோஃபீஸ் கார்னர் வந்துடுச்சு!’ என கண்டக்டர் சத்தம்போட்டதும் தான் சட்டென சகஜ நிலைக்கு வருவான் வடு. டவுன் பஸ்ஸில் போகும்போதும் ‘வடு மீது தலை வைத்து.. விடியும் வரை தூக்கமோ!’ என பிலோமினாவுடன் கனவு சீனில் இப்ராஹிம் பூங்காவில் பூக்கள் மத்தியில் கிடப்பான். பாதி தூக்கத்தில் திடுக்கென எழுந்து உட்கார்ந்து, மீதி தூக்கத்தை இழப்பான். புத்தகத்துடன் உட்கார்ந்தாலும் நடுவே தானாகவே சிரிப்பான். யாரும் பார்க்கவில்லையே என சுற்றுமுற்றும் பார்த்துக்கொள்வான். அரியர்ஸை மட்டும் கவனமாக குறைக்காமல் பார்த்துக்கொண்டான்.
வடு-பிலோமினா காதல் விஷயம் இன்ஸ்டிட்யூட்டில் பரவ, அடுத்த சில நாட்களில் ‘கொஞ்சம் டவுட் இருக்கு. லிஃப்கோ டிக்‌ஷ்னரி இருக்கா?’ என பையன்கள் விஜாரிக்க ஆரம்பித்தார்கள். எல்லா பையன்கள் காலிலும் சாதாரண பாட்டா செறுப்பு.
இங்கே செட்டியார் அப்பா பூமிக்கும் ஆகாசத்துக்குமாக குதித்துக்கொண்டிருந்தார். ‘டேய்! நாம செட்டியாருங்க.. அவங்க கிரிஸ்டியன். ஒத்து வராது. தள்ளி வச்சுருவாங்க’
‘யாரு தள்ளி வப்பாங்க?’ தெகிரியமா கேட்டான் வடு.
‘நம்ம சமூகம் தான். எந்த கல்யாணம், சாவுக்கும் இனி போக முடியாது.’
‘ஆமா.. பெரிய சமூகம். இப்பவே தள்ளித்தானே இருக்கோம் திருச்சியில. நீ எந்த கல்யாணத்துக்கும் காரைக்குடி பக்கம் போறதே இல்லியே! அப்பிடியே போனாலும் ஒரு ரூபா தானே மொய் வெக்கிறே உன் சமூகத்துக்கு!’ வடு சமயம் பார்த்து ராவினான்.
‘ நம்ம சமூகத்துல ஒரு ரூபா மொய் வெக்கிறது தானே வழக்கம்! அதெல்லாம் இருக்கட்டும். இந்த கல்யாணம் நடக்காது’ தீர்க்கமாக சொன்னார் செட்டியார்.
இதற்குள் பிலோமினாவின் அப்பா ஒரு பங்கு தந்தையுடன் செட்டியாரை பார்க்க வந்தார். அவர்களுக்கு இந்த திருமணத்தில் ஆட்சேபனை இல்லையாம்.
‘வணக்கம் சார். நான் பெஞ்சமின். என் பொண்ணு பிலோமினா. நான் கோர்ட்டுல அமினா’
‘க்கும்.. கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. அமினா பொண்ணு பிலோமினா.. பொருத்தமாத்தான் பேர் வச்சிருக்கீங்க. கல்யாணம் மட்டும் சரிப்பட்டு வராதுய்யா!’ செட்டியார் வெடித்தார்.
‘ இல்லீங்க! சர்ச்சுல வச்சு கல்யாணம் பண்ணீறலாம்’. இதோ பங்கு தந்தையே சொல்றாரு..’
‘யோவ்! அவரு பங்கு தந்தை.. பையனுக்கா தந்தை? அவர் பங்குக்கு எதையாச்சும் சொன்னா நீயும் வந்துடறதா? போய்யா அப்பால!’
வாக்குவாதங்களுக்கு நடுவே ஒரு நாள் வடு, பிலோமினா திருமணம் பீமநகர் ரெஜிஸ்த்ரார் ஆபிசில் நடந்து முடிந்தது. வடுவை சமூகம் தள்ளி வைத்தது.
கலப்புத்திருமணத்தால் பிலோமினாவின் தங்கை கல்யாணம் தள்ளிப்போனது. ‘இன்னும் எத்தினி நாள் பொறுமையா இருக்கச்சொல்லுவீங்க?’ என பங்கு தந்தையிடம் எரிந்து விழுந்தார் அமினா.
ஒருநாள் செட்டியாருக்கு பெராலிடிக் அட்டாக்.. அப்பாவை பார்க்க வடு ஓடினான். சமூகம் உள்ளே விட மறுத்தது. ‘அடேய்! அவரு எங்கப்பாடா! சமூகமா வந்து தைலம் தேய்க்கும்?’
உங்களாலத்தான் என் தங்கை கல்யாணம் நடக்கல என பிலோமினாவும், உன்னாலத்தான் அப்பாவுக்கு உடம்புக்கு வந்தது என வடுவும், ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு, அவர்களுக்குள் தினமும் நடக்கும் சண்டையை சமூகமும் பங்கும் வேடிக்கை பார்த்தன.
ஒருநாள் வடு ஆபிசிலிருந்து வீடு வந்தபோது பிலோமினா எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் மேசை மீது லிஃப்கோ டிக்‌ஷ்னரி. எடுத்துப்பார்த்தான்.
C D E I O R V எழுத்து கொண்ட பக்கங்கள் மடிக்கப்பட்டு இருந்தன.
சட்டென வரைந்த ஓவியத்துடன்,
(சீதாபதி ஶ்ரீதர்)

1 comment: