நீங்கள் 60களில் குமுதம், விகடன் பத்திரிக்கைகள் தவறாமல் வாசித்தவரா! ஆம் எனில் குமுதத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களின் ‘படகு வீடு’ தொடர்கதை நிச்சயம் படித்திருப்பீர்கள். வாராவாரம் அரசாங்க செலவில் தால் ஏரியில் படகு வீட்டில் தங்கி உல்லாச யாத்ரிரீகர்களை அங்கே ஈர்க்கும் விதத்தில் கட்டுரைகளை எழுத அரசாங்கத்தால் அழைக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களில் ரா.கி அவர்களும் ஒருவர். அந்த நோக்கத்தை நிறைவேற்ற காஷ்மீரத்தின் பின்னணியை வைத்து ஒரு நாவலே எழுதி விட்டார் ‘படகு வீடு’ என்ற தலைப்பில்.
‘பூவையும், நீரையும் பொருளாதாரமாகக் கொண்டு இயங்கும் அந்த ஒரே இந்திய ராஜ்யமான காஷ்மீரில், அடுக்கடுக்காக வானை மறைக்கும் தொழிற்கூடமோ, மூட்டை மூட்டையாக நிலத்தை மறைக்கும் விவசாயமோ ஏற்பட முடியாத அந்த இடத்தில், உல்லாசப் பயணிகளின் கையை எதிர்பார்த்தே மக்களின் வாழ்க்கை அமைந்திருப்பதால் ‘படகு வீடு’ நாவலைப் படிப்பதனால் உந்தப்பட்டு, வசதி படைத்த ஒரு பத்துப் பேராவது காஷ்மீருக்குச் சென்று மனமோகனமான அந்தப் படகு வீடுகளில் பத்து நாளேனும் தங்குவார்களானால், காஷ்மீர அரசாங்கம் செய்த உபசரிப்புக்குக் கைம்மாறு செய்த திருப்தியை அடைவேன்’ என ரா.கி அவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ரா.கி அவர்களின் ஆசை நிறைவேறி இன்று அரசாங்கத்திற்கு சுற்றுலா வருமானத்தின் ஒரு அங்கமாக உள்ளது இந்த உல்லாச படகு வீட்டு வாடகை.
குஷி யாத்ரா டிரைவர் எங்களை காரில் ஏற்றிக்கொண்டு ஶ்ரீநகரின் பிரதான சுற்றுலாத்தளமான தால் ஏரியின் 17ஆம் நெம்பர் Ghatஇல் இறக்கி விட்டு படகோட்டிக்கு கண்களால் சமிஞ்சை செய்து விட்டு பறந்து விட, ‘ஆயியே பெஹன்ஜி!, ஆவ் பாய்!’ என எங்களை படகில் ஏற அழைத்தார் படகோட்டி.
தளக் தளக்கென சப்தத்துடன் மிதக்கும் அந்த படகின் கூரான முன் பகுதி கரையில் ஒரு கழியுடன் கயிற்றால் கட்டப்பட்டுள்ளது. நாம் சர்வ ஜாக்ரதையாக ஒரு காலை வைத்ததுமே உடல் தள்ளாடி படகுக்காரன் கையை பிடித்து உள்ளே ஏற்றி விடுவான். படகின் நடுப்பகுதி பல்லக்கு போல அலங்கரிக்கப்பட்டு நாம் உள்ளே உட்கார்ந்ததும் நீரைக்கிழித்துக்கொண்டு படகு நகர, ‘ஆஹா இன்ப நிலாவினிலே’ என கண்டசாலா போல பாடிக்கொண்டே போகலாமென நீங்கள் நினைத்தால்… சாரி…. ‘அய்யிய்ய!’ என வடிவேலு ஒரு ஜோக்கில் அங்கலாய்ப்பது போல இங்கும் உண்டு. இந்தப்பக்கம் கபில் சிபல், அந்தப்பக்கம் இளங்கோவன் போல மேலும் இரண்டு படகுகள் உங்கள் படகை முற்றுகையிடும். ஒரு படகு கைவினை பொருட்கள் விற்பவர், மற்ற படகில் பழங்கள் அல்லது காஷ்மீர க்காவா எனப்படும் தேனீர் விற்பவர். நடுவே உங்கள் படகு நகராது. துளைத்து விடுவார்கள் இருவரும்.,படகுச்சவாரியே ஒரு மணி நேரம் தான். அதில் இந்த வியாபாரத்தால் ஆன பத்து, பதினைந்து நிமிடங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என கிட்டத்தட்ட கபில் சிபலின் ‘மருத்துவ சிகிச்சையிலிருந்த காலத்தை அமலாக்கத்துறையின் காவல் கணக்கில்தான் சேர்க்க வேண்டும்’ போன்ற வாதிடங்கள் படகுக்காரரிடம் செல்லாது. ‘அபி சாலிஸ் மினிட் பாக்கி ஹெ’ என கல்நெஞ்சத்துடன் சொல்வார். அவருக்கும் சீக்கிரம் போனியாக வேண்டுமே!
மிதக்கும் சந்தைப்பக்கம் படகு மெதுவாக போக அங்கே கார்ப்பெட் படகுக்காரர் ‘பாத்து மெள்ள சாக்ரதையா வெளிய வாங்க தம்பி!’ என மாமனார் போல அழைக்க அந்த படகிற்கு தாவினோம். ஒரு வோல்வோ பஸ் சைஸுக்கு இருந்தது அந்த படகு. உள்ளே கடை போலவே அலமாரி முழுக்க பெட்ஷீட், கார்ப்பெட் எல்லாம். கொள்ளை விலை. தப்பித்தால் போதுமென திரும்ப நம் படகில் குதித்தோம். மினி டீக்கடையே இருந்த படகு ஒன்று அருகில் வர, டீயை கலந்து அவர் நம் வாயில் ஊற்றாத குறை தான். மனைவி Usharani Sridhar அந்த குங்கும்ப்பூ கலந்த டீயை ரசித்து குடித்தார். ஆனால் அதிலிருந்த லவங்க பட்டை வாசனையால் டீயில் மூட்டைப்பூச்சி நாற்றம். ரோஜா தேனீர், பதாம் கலந்த தேனீர் நல்ல சுவை. காய்கறிகள், பழங்கள் எல்லாமே படகில் விற்கிறார்கள். சற்று தள்ளி ஒரு படகு சலூன் என்னை கவர்ந்தது. படகு ஆட்டத்தில் சவரக்கத்தி நம் கழுத்தை வெட்டும் அபாயம் நிச்சயம். அடுத்து மிதக்கும் தபால் அலுவலகம். தரையில் இயங்கும் தபால் அலுவலகத்திலேயே வேலை இருக்குமோ… இந்த மிதக்கும்… சரி வேண்டாம்.
காஷ்மிர் சால்வை மற்றும் ஸ்வெட்டர், மஃப்ளர் என படகு முழுவதும் அடுக்கிவைக்கப்பட்டு வந்த படகு அன்பரிடம் ‘மன்னிக்கவும் வேண்டாங்க’ என நாங்கள் மறுக்க, அவர் ‘பாய்சாப்! நீங்கள் கொடுக்கும் இந்த நூறு, இருநூறு ரூபாயால் தான் என் குழந்தைகளுக்கு இன்று சாப்பாடே!’ என்றதும் மனம் கணத்தது. உடனே பேரம் பேசாமல் சால்வைகள் வாங்கிக்கொண்டோம். ‘என் சார்பாக உங்கள் குழந்தைக்கு சாக்லேட் வாங்க இந்தாங்க ஐம்பது ரூபாய்!’ என நீட்ட அன்புடன் வாங்க மறுத்து விட்டார் அவர்.
எல்லா வியாபாரிகளுக்கும் பெரும் லாபம் ஈட்டும் விற்பனை இருப்பதாக தெரியவில்லை. நாம் வாங்க மறுத்தால் உடனே விலையை பாதிக்கு மேல் குறைத்து கெஞ்சாத குறை தான். சுற்றுலா பயணிகளால் தான் டீக்கடைகள், செறுப்புக்கடைகள், மக்காசோளம் விற்பவர், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸிகள் என எல்லோரும் பிழைக்க வேண்டிய நிலை. நகரம் முழுவதும் இராணுவ, துணை ராணுவ வீரர்கள். பஹல்காம் போன்ற சில நகரங்களை விட்டு மதியம் 3 மணிக்குள் நாம் வெளியேறாவிட்டால் இரவு அங்கேயே CRPF கூடாரங்களில் நாம் தங்க வேண்டுமாம், அவர்களின் உணவு உபசரிப்பில். அமர்நாத் யாத்திரை சமயம் நம் பாதுகாப்பிற்காக போக்குவரத்தை குறைக்கும் நோக்கத்துடன் இது போன்ற தடைகள்.
No comments:
Post a Comment