Sunday, June 22, 2025

பாசக்கார மதுரை..


மதுரைக்காரவிங்க பாசக்காரவிங்க என்பது எவ்வளவு உண்மை என்பது இரண்டு நாள் மதுரைப்பயணத்தில் கண்கூடு.
நெருங்கிய குடும்பம், அதுவும் மனைவி சைடுக்கு நெருக்கமான (முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம்) இல்லத்திருமணம் மதுரையில் இரண்டு நாள் வைபவமாக நடக்க, அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், கட்சி சார்பற்ற உள்ளூர் வெளியூர் அரசியல்வாதிகள் மைக்கில் வாழ்த்த, நம் பங்குக்கு நானும் மினிஸ்டர் வொய்ட் சட்டை, வெல்க்ரோ வேட்டியில். மதுரை ஜேசி ரெசிடென்சியில் அறை ஒதுக்கியிருந்தார்கள்.
கோலாகலமான திருமணம், விதவிதமான உணவு வகைகளுக்கு நடுவே நண்பர் Narayanan Seshadry அவர்களை அம்மன் சன்னதியில் சந்திப்பதென முடிவானது. இதற்கிடையில் சிங்கப்பூரிலிருந்து பூர்வீகம் மதுரைக்கு விடுமுறையில் வந்திருந்த லட்சுமி நாராயணன், சுஜி சுரேஷ் தம்பதியிடமிருந்து போன் ‘மதுரை வந்துட்டு எங்கள பாக்காமயா!’ என. இந்த இரண்டு நண்பர்களையும் சந்திப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
டான் என 3 மணிக்கு எங்க இருக்கீங்க? ‘ஓ.. நா உங்கள பாத்துட்டேன்.. நேரா பாருங்க.. ப்ளூ கலர் சட்டைல இருக்கேன் பாருங்க’ என்றபடியே எதிரே வந்து நின்ற நாராயணன் ‘இந்த பிரதேசத்துலயே வைஷ்ணவ நாமம் போட்ட ஒரே ஆள் நாந்தான், கண்டுபிடிக்கறது ஈசி!’ என ஜோக்கடித்தபடியே எங்களை அழைத்துச்சென்றார்.
ஏற்கனவே அனுமதி பெற்று பாஸ் வாங்கி விட்டாலும், முறையாக நமக்காக டிக்கெட்டும் வாங்கிய அவருக்கு (வங்கி ஒன்றின் விஜிலன்ஸ் துறையில் இருந்தவர்) எல்லா நுழைவு வாசல்களிலும் செம்ம மரியாதை, தவிர அலுவலர் ஒருவரும் எங்களுடனே எல்லா இடங்களுக்கும் வந்து கோவிலின் தலப்பெருமை, எந்த இடத்திலிருந்து மேலே பார்த்தால் கோபுரம் தெரியும் என ஆரம்பித்து, அருமையாக மீனாட்சியம்மன் தரிசனத்துடன் பிரசாதம், மாலை இத்யாதிகளுடன் எங்களை அனுப்பி வைத்தார். நண்பர் நாராயணனுக்கு இருக்கும் உள்ளூர் செல்வாக்கு பிரமிக்க வைத்தது. பல வருடங்கள் கழித்து மீனாட்சியம்மனை தரிசித்ததில் மகிழ்ச்சி. முக்கியமான சிவத்தலமாக (மீனாட்சி சுந்தரேசுவரர்) மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் (சியாமள பீடம்) ஒன்றுமாகும் இந்தக்கோவில்.
மணி நாலாச்சே! நண்பர் நாராயணனும் நம்மைப்போல காபி/டீ பிரியர் எனபது தெரிந்தது. சுவையான டீ வாங்கித்தந்து, புது மண்டபம் பக்கம் வெங்கல பாத்திரக்கடையெல்லாம் கூட்டிப்போய் மனைவி Usharani Sridhar சாமி விளக்குகள் வாங்க உதவினார். அடுத்து அழகர் கோவிலுக்கு தன் காரிலேயே கூட்டிக்கொண்டு போக அவர் விருப்பம் தெரிவிக்க, அவரை மேலும் தொந்திரவு செய்ய மனமில்லாமல், பக்கத்திலேயே ஆட்டோ பிடித்து 101ஆவது திவ்யதேசமான கூடல் அழகர் கோவிலுக்கு வந்தோம். ராஜகோபுரம், பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், மணவாள மாமுனிகள், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் என எல்லா சன்னிதிகளும் அழைத்துச்சென்றார் நாராயணன். எல்லாம் முடித்து வெளியே வந்தால்
சிங்கப்பூர் தம்பதிகள் கோவில் வாசலில். நண்பர் நாராயணன் விடைபெற்றுக்கொள்ளுமுன் சட்டென அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டோம். நன்றி சார்!
சிங்கப்பூர் சீன வங்கியொன்றில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வைஸ் பிரெசிடென்ட்டான Lakshminarayanan Mahadevan ஏரோப்ளேன் புள்ளி போட்ட சட்டை ஜீன்சுடன் சிக்கென சின்ன பையன் போல, மனைவி Suji Suresh உடன் எங்களை சேர்ந்துக்கொண்டு் அப்படியே காலாற நடந்தோம். திருவிழாக் கூட்டம் போல மதுரைக்கடை வீதிகள் பார்க்க திருச்சிக்காரனான எனக்கு பரம சந்தோஷம். மேலமாசி வீதி அப்படியே திருச்சி மலைக்கோட்டை என்எஸ்சி போஸ் ரோடு போல ரோட்டோர இட்லி கடைகள், பாய்லர் டீ, சுக்கு காபி, போளி பலகார கடைகள், அப்பளம் ஊறுகாய், வேகவைத்த சோளம் என பரபரவென இயங்கிக்கொண்டிருந்தது. போத்தீஸில் பசங்களுக்கு ஜிப்பா வாங்கனும் என்றதும் பொறுமையாக எங்களுடன் வந்த லக்ஷ்மிநாராயணன்-சுஜி தம்பதிக்கு சிரமம் வைக்காமல் சட்டென ஷாப்பிங் முடித்தோம்.
‘ஶ்ரீதர்! இந்த முருகன் இட்லிக்கடை தான் மொதமொதல்ல அவங்க ஆரம்பிச்ச ஒரிஜினல் ஹோட்டல்’ என சுஜி சொல்ல, தயங்காமல் உள்ளே தாவினோம். பாவிகள்.. இட்லி மீது ஏகத்துக்கும் பொடியைத்தூவி நெய்யில் முக்கியெடுத்தது போல சுடச்சுட வைத்தார்கள். என்னவொரு ருசி. இங்க சின்ன வெங்காயம் அரிஞ்சு போட்ட ஊத்தப்பம் ரொம்ப ஃபேமஸ் என சுஜி ஆர்டர் சொல்ல, அடுத்த சில நிமிடங்களில் தட்டுக்கு இரண்டு ஊத்தப்பங்கள் என, நடுவே பரவலாக அரிந்து போட்டு சுருள் சுருளாக ரோஸ் நிற சி.வெங்காயம் கல்லில் இருந்து எடுத்தும் கூட ஞீஈஈ என்ற சத்தத்துடன். மதுரை சட்னிக்கு ஃபேமஸ் என வடிவேலு சொன்னது நினைவுக்கு வந்தது, வெள்ளை சட்னியில் முக்கி எடுத்த விள்ளல் ஊத்தப்பம் வாயில் வெங்காயம், சட்னியில் தாளிக்கப்பட்ட உ.பருப்புடன் அறைபட.. ஆஹா! மடக்கென சுவையான காபி தொண்டையில் இறங்கும் சமயம் சர்வர் சுடச்சுட கோதுமை அல்வாவை கொண்டு வந்து ஆசை காட்ட, ‘சான்சே இல்ல’ என மனசே இல்லாமல் எழுந்துகொண்டோம்.
கை தட்டி ஆட்டோ ஒன்றையும் நிறுத்தி எங்களை அனுப்பி வைத்தனர் இந்த தம்பதி. சுஜி மதுரை பாத்திமா கல்லூரியிலும், லக்ஷ்மிநாராயணன் பம்பாய் பொவாய் ஐ.ஐ.டியிலும் படித்தவர்கள். ஆடம்பரம், படாடோபமின்றி நம்ம பக்கத்து வீட்டுக்காரர்கள் போல சகஜமாக பழகுகின்றனர்.
இரண்டு நாள் தடபுடலான கல்யாணம், பாசத்துடன் கவனித்த நண்பர் குடும்பம், மதியம் 3 மணியிலிருந்து 8 மணிக்குள் இரண்டு பெரிய கோயில், இரண்டு இனிய நட்புக்களுடன் பொழுதை கழித்து, டீ காபி டிபன், ஷாப்பிங் என மதுரைப் பயணம் சுகமாக இருந்தது.
தூங்காநகரம் எனப்படும் மதுரை, புகழ்பெற்ற பழம்பெரும் கோவில்கள், கடைவீதிகள், பாசக்கார பயபுள்ளைங்க, வாய்க்கு ருசியான தரமான சாப்பாடு பலகாரம் என சொல்வதற்கு நிறைய சமாச்சாரங்கள் உள்ள மதுரை இனி அடிக்கடி பயணிக்கும் தலம் எனக்கு.

No comments:

Post a Comment