Friday, June 20, 2025

கபீர்தாஸின் தோஹா

 பால்ய நண்பன் Ganapathi Subramanian வீட்டில் டைனிங் டேபிளில் அவனுடன் சேர்ந்து உக்கார, எதிரே இருவருக்கும் தட்டு. அதில் கணபதி அக்ரஹாரம் பிள்ளையார் கோவில் பிரசாதமான மோதக் ஆளுக்கிரண்டு, மயிலாப்பூர் மின்சக்தி விநாயகர் கோவில் பிரசாதமான கொண்டக்கடலை சுண்டல் கொஞ்சம் மற்றும் சின்ன ஸ்பூனால் ஸ்லைஸ் செய்தெடுத்த தங்கம் போல மின்னும் கேசரி. உள்ளே உஷாவும் (Usharani Sridhar) துர்கா கணபதியும் (Durga Ganapathi Subramanian) சூடாக, முறுகலாக வார்த்து கொண்டு வந்து வைத்த தோசை ஆளுக்கு ரெண்டு, கட்டித்தயிரை வெட்டி நல்ல பெரிய கொழம்பு கரண்டியால் ரெண்டு.. இந்தப்பக்கம் பச்சை புதினா சட்னியும், சிகப்பு மொளகா சட்னியும்.. துர்கா! கொஞ்சம் எண்ணெய் விடேன் என கணபதி கேட்க ரெண்டு குழிக்கரண்டி நல்லெண்ணெய் சட்னி மேல..

திவ்யமான டின்னருடன் சுவாரசியமான சம்பாஷணை! கணபதியுடன் என்ன டிஸ்கஷன்? கணபதி கபீர்தாஸின் ‘தோஹா’வால் ரொம்ப ஈர்க்கப்பட்டவன். அதென்ன தோஹா? ஒன்னேமுக்கால் வரி திருக்குறள் போல இரண்டடிகளில் (தோ+ஹெ) கபீர்தாஸின் செய்யுட்கள்.
‘ஶ்ரீதரா?
Dukh Mein Smaran Sab Kare, Sukh Mein Kare Na Koye�Jo Sukh Mein Smaran Kare, Tau Dukh Kahe Ko Hoye’
படிச்சிருக்கியா? கபீர் தாஸ் பாடினது!’ எனக்கேட்ட கையோடு ஒரு விள்ளல் தோசையால் புதினா சட்னியை சுற்றி வளைத்து போர்த்தியெடுத்து அப்படியே கட்டித்தயிரில் தள்ளி, புரட்டியெடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஐயென்டியூசி யூனியன் அங்கத்தினரை போலீஸ் வேனில் ஏற்றி உள்ளே தள்ளுவது போல தோசையை வாயில் தள்ளினான்.
எண்ணெயில் வறுத்த கொழுக்கட்டை பற்களில் கறகறவென அறைபட தேங்கா+வெல்லப்பூரணம் நாவில் நர்த்தனமாடி சுவைநரம்புகளை மீட்டி அல்மோஸ்ட் ஜென் நிலையை அடைய எத்தணித்த நான் ‘கபீர் தாஸா? இல்லியே! கமலாதாஸ் தான் படிச்சிருக்கேன்’ என்றேன்.
‘அதாவது ஶ்ரீதரா! While Suffering, everyone prays and remembers Him, in joy no one does. �If one prays and remembers Him in happiness, why would sorrow come?’ அப்படீங்கறார் கபீர்தாசர். கணபதி அழகாக மேலும் இரண்டு செய்யுள்களை விளக்கினான்.
கபீர்தாஸ், மஹாப்பெரியவா போன்ற மகான்களைப்பற்றி பெரிய ஆய்வே செய்திருக்கிறான் கணபதி. மேலும் தமிழ், சமஸ்க்ரிதம் போன்ற பழமையான மொழிகளின் நிறைய வார்த்தைகள், அதிலிருந்து திரிந்து வந்த மற்ற மொழிகள் என டீப்பாக கணபதி உள்ளே போக, மூனாவது தோசைக்கு நான் காத்திருந்தேன்.
அதாவது ஶ்ரீதரா! ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்க்ரிதம், லத்தீன், அரபி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலிருந்து தலா இருநூறு வார்த்தைகளை வைத்துக்கொண்டு ரிசேர்ச் செய்யப்போகிறேன். படு சுவாரசியமான தகவல்கள் கிடைக்கும் என்கிறான். இந்தியாவுடன் மற்ற பல உலக நாடுகள் இந்த வார்த்தைகள் மூலம் கனெக்ட் ஆகும். கலிஃபோர்னியா கபிலவஸ்துல இருந்து வந்தது என மஹாப்பெரியவா சொன்னது போல! என்கிறான்.
எழ மனமில்லாமல், விடை பெற்றுக்கொண்டோம். நண்பர் ஜெயராம் ரகுநாதன் Jayaraman Raghunathan இல்லத்திருமணத்திற்காக நேற்று காலை பெங்களூரிலிருந்து வந்த நாங்கள் நாளை விடிகாலை திரும்ப வேண்டியிருப்பதால் சட்டென போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பினோம். விரைவில் கணபதியின் கட்டுரையை எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment