சகோதரியின் மகளுக்கு திருச்சியில் தலைப்பிரசவம்.
தாய்மாமாவான நான் ஏற்கனவே தாத்தாவாகியிருந்தாலும், அக்காவுக்கு தார்மீக ஆதரவு கொடுக்க பக்கத்தில் இருக்க வேணுமில்லையா?
கட்ரா வேட்டிய.. எட்ரா பொட்டிய (ஒரு ரைமிங்க்காக
).. பூட்ரா வண்டிய!

விடிகாலை ஐந்தரை மணிக்கு போக்குவரத்தில்லா பெங்களூர் சாலை, மடிவாலாவை இருபதே நிமிடத்தில் கடந்து, 30 நிமிடத்தில் ஹோசூரையும் தாண்டி பறந்தது வண்டி. கிரிஷ்ணகிரி முருகன் இட்லி கடையில் நாஷ்டா துண்ணலாமென்றால் மனைவி Usharani Sridharக்கு பசி. பின் இருக்கையில் சர்க்கரை மாமியார்.
சூளகிரி தாண்டி அடையார் ஆனந்தபவனில் வண்டியை நிறுத்தினேன். சரியான பசி, அதுவும் நெய்ப்பொங்கல் கருவேப்பிலை வாசனை வேறு. காலை 7 மணிக்கு என்ன கூட்டம்!
வண்டி ஓட்றப்ப பொங்கல், தயிர்சாதமெல்லாம் சாப்ட்டா தூக்கம் வந்துடும்னு எவன் சொன்னது? வாழை இலையில் சுடச்சுட பொங்கல், சுற்றிலும் உதிரிக்கூட்டணி மாதிரி மூன்று நான்கு வகை சட்னி. அது நெய்யா டால்டாவா தெரியவில்லை, ஸ்பூனால் பொங்கலை அள்ள முடியாமல் வழுக்கியது. தேங்கா, புதினா, தக்காளி சட்னியில் பொங்கலை தொட்டு சாம்பாரில் முக்கி வாயில் தள்ளும்போது, இப்பசத்தக்கி லோக்சபா இல்லன்னாலும், ராஜ்யசபா சீட் கிடைத்த திருப்தி.
பக்கத்து டேபிளில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஐந்து பெண்கள் கன்னடம் கலந்த தமிழில் அரட்டை. இப்போதெல்லாம் Gals Outing எனப்படும் நாலைந்து பெண்கள் சேர்ந்து சுற்றுலா கிளம்பி லூட்டியடிப்பது பரவலாகி விட்டது, பாவம் கணவர்களை வீட்டில் விட்டுவிட்டு! பாவம்னு நாம நெனைச்சிட்ருக்கோம்.. வீட்ல ஒரே அவனுங்களுக்கு கொண்டாட்டமும் அழிச்சாட்டியமுமாக இருக்கும்! ரொம்ப நாள் கழிச்சு டீவி ரிமோட்டை தொட்டு பார்க்க சான்ஸ் அவர்களுக்கு. அந்த ஆன்ட்டி Gals எல்லோரும் பூரி, ஆனியன் ஊத்தப்பம், கேசரி என கபளீகரம் செய்துகொண்டிருக்க, காபியை வாயில் கவிழ்த்து விட்டு கிளம்பினோம்.
அதி அபாயகரமான தொப்பூர் தாண்டும்போது கொஞ்சம் வேகத்தை குறைத்தேன். சமீபத்தில் அங்கே தான் பயங்கரமான விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள்.
சேலம்- நாமக்கல் வாகனமோட்ட அற்புதமான தேசிய நெடுஞ்சாலை. கல்லுக்குழி ராமநாதன் நினைவுக்கு வந்தான். அவனுக்கு நாமக்கல் சொந்த ஊர். முன்பு கரடுமுரடாக இருந்த நாமக்கல்-தொட்டியம்-முசிறி சாலையா இது? தற்போது பாதி தூரம் இருவழி சாலையாக்கப்பட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அகலப்படுத்தப்பட்டும் சீராக இருப்பது மகிழ்ச்சி.
பக்கத்தில் காவிரி ஆறு கூடவே பயணிக்கும் குளித்தலை! என் குளித்தலை நண்பர்கள் சிலருக்கு ரத்னாச்சலம், ரத்தினம் ஶ்ரீனிவாசன், கிருஷ்ண ரத்தினம் போன்ற பெயர்கள். குளித்தலை அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் ரொம்ப பிரசித்தம். அதனால் அந்த ஊர்க்காரர்கள் பெரும்பாலோர் அந்தப்பெயரில் இருப்பார்களோ! இல்லை, குளித்தலைக்கும் ரெத்தினத்திற்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிறது.
பேட்டவாய்த்தலை! அங்கு பாலாம்பிகை அம்மன் கோவிலுக்கு நிறைய பெண்கள் வேண்டுதலுடன் வருகிறார்கள். ஒரு பெண் பூப்பெய்தும் நிலையிலிருந்து மாதவிடாய் நிற்கும் வரை சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் மகா சக்தியாக விளங்குகிறாள் பேட்டைவாய்த்தலை அருள்மிகு பாலாம்பிகை அம்மன். பல வருடங்களுக்கு முன் போயிருக்கிறேன். அம்மனை மனதார வேண்டி, இரு கையிலும் சிகப்பு குங்குமத்தை அள்ளி அம்மன் மேல் பூச, உதிரப்போக்கு மற்றும் கர்ப்பப்பை சார்ந்த நோய்கள் மாயமாக மறைந்து விடுமென நம்பிக்கை. எங்களுக்கு நல்ல பலனும் கிடைத்தது.
அடுத்து பெருகமணி, திருப்பராய்த்துரை. திருப்பராய்த்துரை ஹாஸ்டல் ரொம்ப ஸ்ட்ரிக்ட். சின்ன வயதில் குறும்பு செய்தால் வீட்டில் அந்த ஹாஸ்டலில் சேர்த்து விடுவோமென மிரட்டுவார்கள்.
முக்கொம்பு. திருச்சி கல்லூரி மாணவர்கள் (தங்கள்) காதலியுடன் திருட்டுத்தனமாக நேரத்தை செலவிட, மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் பாறையை அடுத்து முக்கொம்பு தான் தேர்வு செய்வார்கள். ஹோலி க்ராஸ் கல்லூரி அல்லது சீதாலட்சுமி ராமசாமி கல்லூரிப்பெண்கள் இதில் சேரமாட்டார்கள். சுலபமாக மாட்டிக்கொள்வார்கள். அதனால் உருமு தனலட்சுமி போன்ற கல்லூரிப் பெண்களே முக்கொம்புக்கு தைரியமாக செல்வார்கள். எல்லாத்தையும் தூர நின்னு மட்டும் வேடிக்கை பார்த்தவன் நான். காதல் சொல்ல அப்ப தைரியமில்லை. தைரியமிருந்தாலும், என்ன வரிசையிலா நின்றார்கள்! வீட்டில் பெரம்பில் விளாறி விடுவார்கள்.
அடுத்து குணசீலம், உத்தமர்கோவில், ஜீயபுரம், திருச்செந்துரை, அல்லூர், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை என வரிசையாக எல்லா ஊர்களிலும் எனக்கு நண்பர்கள். இந்தப் பகுதிகளிலிருந்தும், காவிரிக்கு அத்தப்புரம் லால்குடி டால்மியாபுரம் வழியாக தி்ருச்சி டவுன் ஸ்டேஷன், அரியமங்கலம், பொன்மலை ரூட் ரயில்களில் திறள் திறளாக மாணவர்கள் திருச்சி கோட்டை, திருச்சி டவுன் ஸ்டேஷன்களில் இறங்கி SRC, சாவித்ரி வித்யாசாலா, ER ஹைஸ்கூல், செஞ்சோசஃப்ஸுக்கு நடப்பார்கள். அடுத்த ஸ்டாப் பாலக்கரை, அதற்கடுத்து ஜங்ஷனில் இறங்கும் ஜமால் மற்றும் நேஷனல் காலேஜ் மாணவர்கள். அப்பல்லாம் கரிவண்டி நீராவி இஞ்சின்கள். ஆங்கிலோ இந்திய டிரைவர்கள். கூட கரியை அள்ளிப்போட தலையில் கர்ச்சீஃப் கட்டிய பச்சைவிளக்கு நாகேஷ்கள்.
கரூர் பைபாஸில் வலப்பக்கம் திரும்பி தில்லைநகர். ஆஹா! திருச்சி என்றாலே கண்ணில் படுவது காளிமார்க், பவண்ட்டோ, பன்னீர் சோடா, ஜிகர்தண்டா, நன்னாரி சர்பத். தற்போது ஷவர்மா, நூடுல்ஸ், பானிபூரி யுகமாகி விட்டது. சாஸ்திரி ரோடு ஹக்கீம் பிரியாணி, அன்னாநகர், கோர்ட், கண்டோன்மென்ட்டு, மேலப்புதூர் தாண்டி டிவிஎஸ் டோல்கேட்டையடுத்த (கண்டக்டர் வேலைக்கு போயிருக்கலாம்), சுப்ரமணியபுரத்தில் அக்கா வீட்டைத்தாண்டி நலம் மருத்துவமணையில் வண்டியை மதியம் 12க்கு நிறுத்தினேன், ஆறரை மணி நேரப்பயணம்.
2.7 கிலோ எடையில் ரோஜா கலரில், குட்டியூண்டாக பொம்மை போல, பென்சில் லைன் கண்கள், மிருதுவான கன்னம், ஆரஞ்சு மிட்டாய் போன்ற உதடுகள், பவழ நகங்களுடன் பிஞ்சு விரல்கள், பிறக்கும்போதே லைனிங் செய்த புருவங்கள், புசுபுசுமென டி.ராஜேந்தர் தலைமுடி, ஸ்டார் வார் நடிகர்கள் போல நீண்ட கூரான கிருதா… பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அழகிய இளஞ்சிசு!
ஹைதராபாத் Deloitte US-India office இல் தம்பதி சமேதராய் பணியிலிருக்கும் CA Sadana Mano & Vasanth Vaz இருவருக்கும் தாய்மாமனின் வாழ்த்துக்கள்.
சகோதரி Hemalatha Manohar மற்றும் மைத்துனர் Dr. மனோகருக்கும் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment