வொய்ட்ஃபீல்டு மாரத்தஹல்லி ரோட்டுப்பக்கம் எங்கியோ போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட போது இவரிடமிருந்து ‘என்னாச்சு ஶ்ரீதர்? வரேன்னீங்களே, எங்க இருக்கீங்க?’ என போன். மாலை நான்கு மணிக்கு மேல் இரவு ஒன்பது வரை பெங்களூர் சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும், பணியிலிருந்து வீடு திரும்பும் மக்கள் மற்றும் போற வழியில் வண்டியை நிறுத்தி பானிபூரி சாப்பிடும் ஜனங்களால். ஒருவழியாக அடுத்த ஒரு மணி நேரத்தில் இவர் வசிக்கும் சதாஷிவ்நகர் பக்கம் வந்துவிட்டோம்.
சதாஷிவ்நகர் பழைய பெங்களூரின் ஒரு பகுதி. அடர்ந்த மரங்கள் கொண்ட ஆளறவமற்ற அகண்ட தெருக்களின் இருபுறமும் 60X80 சதுரடி மணைகளில் அந்தக்கால ஹைவேஸ் இ்ஞ்சினீயர்கள், எம்மெல்ஏக்கள், சினிமாக்காரர்கள் கட்டிக்கொண்ட பங்களா வீடுகள். மழை பெய்தால் கூட கொஞ்ச நேரம் கழித்து தான் தெரியும் அளவிற்கு வானத்தை மறைத்தபடி நெடிய மரங்கள். எங்கோ பொமெரேனியன் நாய் குறைக்கும் சத்தம் தவிர எப்போதும் நிசப்தமான சூழல்.
இவர் என் பஹ்ரைன் நண்பர் ஹரிஷ் Harish Jagannath. அங்கே எங்கள் சஹஸ்ரநாம குழுவின் அங்கத்தினர். பூர்விகம் தமிழ்நாடு, தாய்மொழி கன்னடம். பெங்களூரில் இஞ்சினீயரிங் படிப்பை முடித்து, பஹ்ரைனில் அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணெய் கம்பெனியில் உயர்பதவியில் பல வருடங்கள் பணியாற்றி விட்டு என்னைப்போல ஓரிரு வருடங்கள் முன் தாயகம் திரும்பிவர்.
முதல் தளம் மற்றும் தரைத்தளத்தில் குடியிருப்பு, அடித்தளத்தில் கார் நிறுத்தம், ஜிம் என அழகாக வீடு கட்டியிருக்கிறார். தாராசிங் போல ஆஜானுபாகுவாக உருவம், ஆறடிக்கு மேல் உயரம். எதிரே இருப்பவர் பேசும்போது பொறுமையுடன் கேட்ட பிறகே சன்னமான குரலில் பேச ஆரம்பிக்கும் பாங்கு. மனைவி நந்தினியும் இவரைப்போலவே. எங்க வீட்டுக்காரர் அப்படியாம் இப்படியாம் என வளவளவென அப்டேட் செய்யாமல் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசக்கூடியவர்.
திருமணமான ஒரே பெண், எம்.டி படிக்கும் டாக்டர். ஐபிஸ் போலீஸ் அதிகாரியான மாப்பிள்ளை ராய்ச்சூரில் பயங்கரவாதம், கொள்ளை மற்றும் கடத்தல் தடுப்பு என துப்பாக்கியுடன் பரபரப்பான பணியில் இருந்தாலும் போலீஸ் அதிகாரிக்கான மிடுக்கு ஏதுமின்றி அடக்கமாக, மாமனார் மாமியார் போல நிறைகுடம்.
சூடான சமோசா மற்றும் சந்த்ரகலா, ஃபில்டர் காபி எல்லாம் சாப்பிட்டு முடிந்த பின் எங்கள் பஹ்ரைன் வாழ்க்கை பற்றி கொஞ்சம் அரட்டையடித்ததால் நேரம் போவதே தெரியவில்லை. அந்தி சாயும் வேளை நெருங்க, ‘வாங்க ஶ்ரீதர்! இன்னைக்கி உங்கள ஓரெடத்துக்கு அழைச்சிட்டுப்போறேன்’ என கண்களில் பிரகாசத்துடன் கிளம்பினர் அந்த இனிய தம்பதி. ஆர்வமுடன் கிளம்பினோம் நால்வரும்.
வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் ஒரு பெரிய ஏரி. சதாஷிவ்நகரையும் மல்லேஸ்வரத்தையும் இணைக்கும் சாங்க்கி டேங்க் எனப்படும் மிகப்பெரிய ஏரி. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் ரிச்சர்ட் சாங்க்கி எனும் ஆங்கிலேய ராணுவ அதிகாரியால் கட்டப்பட்டதாம். 1.7 கி.மீ நீளமும் 800 மீ அகலமும் 30 அடி ஆழம் கொண்ட இந்த செயற்கையான ஏரி அந்தக்காலத்தில் மழைநீர் சேமிக்க கட்டப்பட்டு, சுற்றிலும் மரங்களும் பூங்கக்களும் அமைக்கப்பட்டன. பின்னாளில் ஏரி மேல் கட்டிடங்கள் கட்ட பில்டர்கள் முயல, வெற்றிகரமாக அது தடுக்கப்பட்டு தற்போது அப்பகுதி பொதுமக்களின் பொழுதுபோக்குமிடமாக மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது.
தினமும் கூட்டமாக பொதுமக்கள் வருவதால் குழந்தைகள் விளையாட்டுப்பூங்கா, உடற்பயிற்சி மையம், நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி செய்ய தனித்தனி பாதைகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சக்கர நாற்காலியில் வருபவர்களுக்கென படிக்கெட்டுக்கு பக்கத்திலேயே சரிவுப்பாதையும் உண்டு. செல்லப்பிராணிகள் உள்ளே கொண்டு செல்ல தடை. பட்டாணி சுண்டல், மக்காசோளக்கடைகள் எதுவும் கிடையாது. கேட்டிற்கு வெளியே மட்டும் நடைபாதையில் ஓரிரண்டு இளநீர் கடைகள். உள்ளே வியாபாரம் செய்யத்தடையாம்.
புத்துணர்ச்சியூட்டும் இயற்கை மற்றும் அமைதியான சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் இயற்கை ஆர்வலர்கள் சில தருணங்களை அனுபவிக்க ஒரு சிறந்த இடமாக இந்த ஏரி நம்மை ஈர்க்கிறது. மயூரா சாங்க்கி படகு கிளப் பார்வையாளர்களுக்கு பல்வேறு வகையான படகு சவாரிகளை வழங்கி, குறைந்த கட்டணத்தில் தீவின் நடுவில் அமைந்துள்ள தீவிற்கும் நாம் செல்லலாம். தூர்வாரும் பணியினால் தற்போது படகுச்சவாரி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாம்.
தற்போது இந்த சாங்க்கி டேங்க் சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ஏரியை ஓட்டி மேம்பாலம் கட்டி சாலையை நீட்டிக்கும் மாநகராட்சியின் திட்டத்தை எதிர்க்கின்றனர், இதனால் இங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டு, அருகே பள்ளிக்கட்டிடத்தின் ஒரு பகுதியும் இடிக்கப்படும் அபாயம் உள்ளதாம்.
இரவு 7 மணிக்கு ஸ்கூட்டியி்ல் ஊய்.. ஊய்.. என விசில் ஊதியபடியே எல்லோரையும் வெளியேற அறிவித்தபடி ரவுண்டடித்தார் மாநகராட்சி சிப்பந்தி ஒருவர். மராமத்து பணிகள் நடந்துகொண்டிருப்பதால் இரவு ஏழு மணிக்கு கேட்டை மூடிவிடுவார்களாம். இல்லையென்றால் சாதாரணமாக இரவு பத்து மணி வரை பொதுமக்கள் இருப்பார்களாம்.
இரவு 8 மணிவாக்கில் நண்பரது இல்லத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம்.
No comments:
Post a Comment