‘ஶ்ரீதர்! நாளைக்கி ரெடியா இருங்க. நாம ஷார்ஜா பக்கம் கோர் ஃபக்கான் மலைப்பகுதிக்கு நெடுந்தூரப்பயணம் செய்யலாம்’ என இவரிடமிருந்து குறுஞ்செய்தி.
துபாய் வரும்போதெல்லாம் நான் சந்திக்கும் நண்பர் சிவா, பஹ்ரைனில் பல வருடங்கள் பழகிய எங்கள் நட்பால். 20 வருடங்களுக்கு முன் நாங்கள் இருவரும் பஹ்ரைன் சி.ஏ நிர்வாகக்குழுவில் இணைந்து பணியாற்றியதும், சி.ஏ டோஸ்ட்மாஸ்டர் க்ளப் எனப்படும் பேச்சுத்திறனை வளர்ப்பதற்கான குழுமத்தின் அங்கத்தினர்களாக இருந்ததும் எங்கள் நட்பின் ஆழத்தை அதிகரித்தது எனலாம். பஹ்ரைன் மற்றும் சவுதியில் பல வருடங்கள் வசித்துவிட்டு தற்போது இவர் துபாயில். கணவன் மனைவி இருவருமே பட்டயக்கணக்காளர்கள் (CA).
காலை என்னையும் மனைவி Usharani Sridhar யையும் நாங்கள் தங்கியிருந்த மைத்துனரின் டமாக் ஹில்ஸ் இல்லத்திற்கே வந்து காரில் அழைத்துக்கொண்டு ஷார்ஜா நோக்கி தம் பி.எம்.டபுள்யூ வண்டியை செலுத்திக்கொண்டே படு சுவாரசியமாக பேசிக்கொண்டே வந்தனர் இத்தம்பதி. வேறென்ன பேசப்போறோம்! குழந்தைகள் வளர்ப்பு, கரன்ட் ஜெனரேஷன், ‘ஓ.. அப்படியா! என் பசங்களும் அப்படித்தான்’ என மாறி மாறி தத்தம் குழந்தைகளைப்பற்றி பேசினால் நேரம் போவது தெரியாது.
பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தை ஒட்டிய பக்கவாட்டுச் சாலையில் சடாரென வண்டியை ஓரங்கட்டி, டிக்கியிலிருந்து டிபன் பொட்டலங்களை வெளியே எடுத்தார் சிவா. ஆலு (ச்சீ… உருளைக்கிழங்கு) பராட்டா மற்றும் ஆனியன் பராட்டா, பொஹா.. இல்ல இல்ல, அவல் உப்புமா அல்லாத்தையும் வெளியே எடுத்து காரில் இருந்தவன்னமே மொஸ்க்கினோம்.
அடுத்த சில நிமிடங்களில் எமராட் பெட்ரோல் பங்க் சூப்பர்மார்க்கெட்டில் இஞ்சி டீ, சுடுசாக்லேட் வாங்கிப்பருகிய பின் வண்டியை 135 கி.மீ வேகத்தும் மேல் கூட்டி க்ரூஸ் மோடில் போட்டு சர்.. சர்ரென நாலைந்து சுரங்கப்பாதையில் நுழைத்தார். சாலையின் இருமருங்கிலும் பாறையிலான மலைகள், நீர்நிலைகள். வண்டியை நிறுத்தி இயற்கை அழகை ரசித்தோம். பாலைவன மணலை கையால் அள்ள மிகவும் லேசாக இளம் மஞ்சள் நிறத்தில் மிருதுவாக கையில் கரையே படாமல் பார்க்க அழகாக இருந்தது. நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
சுமார் ஒன்னரை மணி நேரப்பயணத்திற்குப்பிறகு தூரத்தில் ஷார்ஜாவின் கோர் ஃபக்கான் எனும் மலைவாசஸ்தலம் தெரிந்தது. பல்அடுக்கு கட்டிடங்கள் ஏதுமிலா நிறைய தனிவீடுகள், அரசாங்க கட்டிடங்கள், பள்ளிவாசல்கள், பூங்காக்கள், கடைவீதிகள் என நகரமே அழகாக இருந்தது. ஒருபுறம் அலைகளற்ற அமைதியான கடலும் மறுபுறம் மிகப்பெரிய அரைவட்டப்பள்ளத்தில் அரங்கம் (Amphitheatre), உணவுக்கூடம் (Food court), மிகப்பெரிய செயற்கை நீர் வீழ்ச்சி, பள்ளி வாசல் என அந்த பிரதேசமே பார்க்க இனிமை. இயற்கையை ரசிப்பதை விட புகைப்படமெடுப்பதில் மெனக்கெடும் 60ஸ் கிட்ஸ் நாமல்லவா! 

வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் கல்லூரியில் பயின்று, சென்னையில் CA, ICWA, தகவல் தொழில்நுட்பம், கணினியில் தணிக்கை சார்ந்த CISA, லண்டனின் ACCA என ஓயாமல் படித்து முடித்து பல வருடங்கள் வளைகுடாவில் வசிக்கும் சிவா ஒரு சொல்வேந்தர் (Toastmaster). சரளமாக மணிக்கணக்கில் மேடையில் பேசக்கூடியவர். மேடையில் ஏறியதுமே புதியதாக கொடுக்கப்படும் பொருளில் குறைந்தது 3 நிமிடம் பேச வேண்டிய Table Topics எனப்படும் பேச்சுப்போட்டியை அனாயசியமாக எதிர்கொண்டு பரிசுகள் வாங்குபவர். இவரது மனைவி கல்யாணி சி.ஏ மட்டுமல்லாது CIA எனப்படும் உள் தணிக்கை (Certified Internal Auditor) எனும் உயர்படிப்பையும் படித்தவர். பையன் லண்டன் மற்றும் வேல்ஸ் CA படிப்பு முடித்து Big4 எனப்படும் தணிக்கை நிறுவனமான PWCயில் பணி, மூத்த பெண் பல் மருத்துவத்தில் முதுநிலை பட்டப்படிப்பை படித்தவர்.
மதியம் துபாய் பக்கம் திரும்பி வந்து வசத்தபவனில் மினி தாலி உண்டபின் அவர்களது புதிய இல்லத்திற்கு விஜயம் செய்து, கராமா பகுதிக்கு வந்து கடக் ச்சாய்..மன்னிக்கவும்… கெட்டித்தேநீர் குடித்து விட்டு எங்களை வீட்டில் இறக்கி விட்டனர் Sivakumar Lakshman மற்றும் Kalyani Sivakumar
ஆக, அரைநாள் ஷார்ஜா சுற்றுலா இனிதே முடிந்தது.
No comments:
Post a Comment