Sunday, June 22, 2025

திருச்சியில் ஏழு நபர்கள்..


நேற்று காலை 8 மணிக்கு திருச்சியிலிருந்து கசின் Muraligtrichy Gopalஇடமிருந்து போன், தன் அம்மா (எனக்கு அத்தை) இறந்து விட்டதாக. பல வருடங்கள் சகோதரர்கள் நாங்கள் பாம்பே, பஹ்ரைன், மஸ்கட் என தள்ளியிருக்கும்போது அவர் தான் திருச்சியில் எனது பெற்றோருக்கு ஏதோ ஒன்றென்றால் முதலில் ஓடி வருவது. பெரிய சாவு என்பதால் பெங்களூரிலிருந்து கிளம்பினேன். பெங்களூர்-மதுரை வந்தேபாரத்தில் 9 காலியிடங்கள் காட்ட, உடனே முன்பதிவு செய்தேன். மதியம் 2 மணிக்கு கிளம்பி ஐந்தரை மணி நேரத்தில் திருச்சியாம்.
12.30க்கு அவசரமாக மனைவி பரிமாறிய சாம்பார் சாதம், வாழைக்காய் கறி பிரமாதம். ரிப்பேருக்கு வந்திருந்த எலெக்ட்ரீஷியன் ராஜு ‘சார்! அம்மாவெல்லாம் ட்ராப் பண்ண வேணாம், நா கொண்டு வந்து உட்றேன் உங்கள!’ என்று தன் மோட்டார்பைக்கிலேயே அடுத்த 15 நிமிடத்தில் கிருஷ்ணராஜபுரம் ஸ்டேஷனில் இறக்கி விட்டார். அவருக்கு கொஞ்சம் கூடுதலாகவே பணம் கொடுத்தேன். போகும் வழியில் ராமமூர்த்தி நகரில் ஐயங்கார் பேக்கரியில் நிறுத்தி வெஜ் பஃப்ஸ், இனிப்பு/உப்பு பிஸ்கட் வாங்கியாயிற்று. அசிடிட்டி வராமலிருக்க, மனைவி Usharani Sridhar வாங்கிக்கச் சொன்னது பிஸ்கட் மட்டுமே.
திருச்சி ஸ்டேஷன் பிரம்மாண்டமாக இருந்தது. சொல்லி வைத்தாற்போல ஆட்டோ சுப்பையா அங்கே நிற்க, ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். 25 வருடங்கள் எங்கள் குடும்பத்துக்கு பழக்கம் அவர். மேலப்புதூர் ரோட்டிலிருந்து சர்ரென சுப்ரமணியபுரம் பக்கம் திருப்பி ‘பெரியவன் துபாய்லர்ந்து திரும்பி வந்துட்டான் சார். சம்பளம் பத்தலையாம். உங்களுக்கு தெரிஞ்ச வேலை பஹ்ரைன்ல இருந்தா வாங்கிக்
குடுங்க!’ என்றார். ‘சரி! சின்னவன் எப்பிடி இருக்கான்…’ என கேட்க நினைத்து சட்டென நிறுத்திக்கோண்டேன். திருச்சி ஏர்போர்ட்டையடுத்த குண்டூர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவரது சின்னவன் ஸ்கூல் வாசலில் கிணற்று மேட்டில் உட்கார்ந்துகொண்டு அரட்டையடித்துக்கொண்டிருக்கும்போது தவறி உள்ளே விழுந்து விட, மற்ற மாணவர்கள் வீட்டிற்கு ஓடிப்போய், பயத்தால் ஒன்றும் சொல்லாமல் இருக்க, யாரோ ஒரு பையன் மட்டும் சொல்லிவிட, ஆட்டோ சுப்பையாவுக்கு 2,3 மணி நேரங்கள் கழித்து தகவல் போக, ஃபயர் சர்வீஸ்காரர்கள் இறந்த உடலை எடுத்தார்கள். அத்தோடு தினமும் ஸ்கூல் குழந்தைகளுக்காக ட்ரிப் அடிப்பதை விட்டுவிட்டார் சுப்பையா. அவர் கேட்ட 150 ரூபாயை பேரம் பேசாமல் கொடுத்துவிட்டு சேதுராம்பிள்ளை காலனி அத்தை வீட்டில் நுழைந்தேன்.
‘சூசை மாணிக்கம், சுப்ரமணியபுரம்’ பெயர் பொறித்த ஐஸ்பெட்டியில் அத்தை. வாய் லேசாக திறந்திருந்தபடியால் வெற்றிலையை மடித்து அடைத்திருந்தார்கள். ‘காலைல தாடையோட சேத்து கட்டிடலாம்!’ என்றபடி உறவினர் ஒருவர் அத்தையின் தலைக்கு கீழே சப்போட்டுக்கு கனமாக ஐஸ் தண்ணீர் பாட்டிலை வைத்தார். ‘நாளைக்கி எத்தினி மணிக்கு எடுக்கலாம்?’ என யாரோ கேட்க, ‘காலைல ஒம்பது டூ பத்தர குளிகைல பாடிய வெளிய கொண்டாரக்கூடாது. அதுக்கு மேலத்தான் எல்லாம் செய்யனும்’ என சட்டென பதில் வந்தது.
ஹோட்டல் டிபன் இட்லி, தே.சட்னி சாம்பார் வாளிகளுடன் வந்திறங்க, பயோ தட்டில் சாப்பிட்டோம். ‘இட்லி பத்துமான்னு பாத்துக்கிட்டு இன்னம் ஆடர் பண்ணனும். மாத்திரை போட்டுக்கிட்டவங்க மொதல்ல சாப்புடட்டும்’ என யாரோ சொல்லியும் மாத்திரை போடாத நான் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். இரவு உணவை சீக்கிரம் சாப்பிட மனைவியின் கட்டளை. பயணக்களைப்புடன் பசியும் கூட! ஐயங்கார் பேக்கரி வெஜ் பஃப்ஸ் ஜோலர் பேட்டை தாண்டும் முன்பே காலி!
‘பொம்பளைங்க எல்லாம் நாங்க அப்பிடியே உக்காந்துட்ருப்போம். நீங்கள்ளாம் தூங்கப்போங்க!’ என அக்கா சொல்ல, மனதிற்கு கஷ்டமாக இருந்தது. ‘அதென்ன இன்னம் பளைய வளக்கம்? நீங்களும் அப்படியே தூங்குங்க! பொம்பளைங்களும் மனுசங்க தானே!’ என யாரோ சொல்லிவிட்டு பட்டென கன்னத்தில் அடித்துக்கொண்டார் ‘ஓரே கொசு’ என்றபடி.
அடுத்த சிக்னல் தாண்டி ஏர்போர்ட்டுக்கு முன் அக்கா வீடு. ‘ஶ்ரீதர்! நைட் நாங்க இங்கயே இருக்கோம். நீ நம்ம வீட்ல மாராவை உன்னோட ரூம்லயே வச்சுக்கிட்டு தூங்கு. இன்னம் 2,3 பேர் நம்ம வீட்ல தங்கட்டும்’ என அக்கா சொல்ல, பைதிவே… மாராங்கறது எங்க வீட்டு தங்க மீட்பர் நாய் (Golden Retriever)
இன்று காலை 7.30க்கு அக்காவும், அவளது டாக்டர் பெண்ணும் வந்து ‘மாமா! ஏந்திரிங்க’ என என்னை எழுப்ப… சரியான தூக்கம் கழிந்து எழுந்தேன். ‘நீங்கள்ளாம் நைட் நல்லா தூங்கினீங்களா?’ என்ற என் கேள்விக்கு ‘ம்.. ரெண்டு மூணு மண்ணேரம் தூங்குனோம்’ என பதில். இறந்த வீட்டிலிருந்து தம்பிக்காக ஓடி வந்து காபி கலந்து கொடுத்த அக்கா எனக்கு அம்மா போல. இது தான் பெண்கள் குணம், அன்கன்டிஷனல் அக்கரை!
நாமம் போட்ட தாசரி எல்லா சாங்கியங்களையும் பொறுமையாக செய்து, ‘பேரன் பேத்தி மொதக்கொண்டு அந்துருனி பாட்டிய மூணு தடவ சுட்டி ரெண்டி.. கைல ரெடியா காயின் பெட்டுக்காவலி.. பாட்டி கைல காச வச்சு எத்துக்குனி வீட்ல வச்சுக்கலாம்!’ என்றதும் ‘ஶ்ரீதர்! நீயும் வரலாம்’ என அக்கா சொல்ல நானும் சேர்ந்து கொண்டேன். அத்தையின் விரல்கள் வெளிறி, ஊதியிருக்க ‘கோவிந்தா.. கோவிந்தா’ என்றபடி சுற்றி வந்தோம். ‘வண்டீலர்ந்து ஸ்ட்ரெச்சர் கொண்டுவாங்க!’ என தாசரி சொல்ல தலைப்பக்கம் பச்சை மூங்கில் அலங்காரம் செய்யப்பட்ட ஸ்டீல் ஸ்ட்ரெச்சரில் அத்தையை தூக்கி வைக்க, அதே ஐஸ்வாட்டர் பாட்டில் தலைக்கு கீழே.
‘சூசை மாணிக்கம்’ மாருதி ஆம்னி ஆம்புலன்ஸ் வண்டியில் கச்சிதமாக ஸ்ட்ரெச்சர் பின் பக்கம் உள்ளே தள்ளப்பட்டு, ஸ்ரெச்சரின் இரண்டு பின் கால்கள் சக்கென இரண்டு துளைகளில் உட்கார்ந்துகொள்ள (பாடி மூவ் ஆகாதாம்!), டிரைவர் பக்கத்தில் மண் சட்டிப்பானையுடன் மகன், பாட்டி உடல் அருகே பேரன் (பூவை ரோட்டில் தூவ), மற்ற பத்து பேர் டெம்போ டிராவலரிலும், டாடா டிகோர் ஈவி காரில் 4 பேரும் என எல்லோரும் ஶ்ரீரங்கம் ஓயாமாரி சுடுகாட்டுப்பக்கம் சென்றார்கள். மணி மதியம் 12.
எனக்கு பெங்களூர் ரெங்கநாதன் டிராவல்ஸ் இன்று மதியம் 1.30 மணிக்கென்பதால் சுடுகாட்டிற்கு வரத்தேவையில்லை என அன்புக்கட்டளை. ‘ஶ்ரீதர்! நீ குளிச்சிட்டு வா. சாப்பாடு வந்துடுச்சு’ என அக்கா சொன்னதும், மாடிக்கு விரைந்தேன். கீழே வந்த என்னிடம் மறுபடியும் அக்கா ஓடி வந்து ‘ஶ்ரீதர்! சுப்ரமணியபுரம் நால்ரோட்ல அந்த தணுஷ்கோடி வாடகை பாத்திரக்கடைல நாலு டேபிள் சொல்லிட்டு வந்துடறியா! காலைல மாதிரி நின்னுகிட்டே சாப்ட முடியாது’ என்றதும் கடைக்கு விரைந்தேன்.
‘டேபிள் இருக்கு சார்! ஆனா டெம்போ வண்டி வெளிய போயிருக்குது. அதோ அந்த தட்டு வண்டீல அனுப்பீறவா?’ என்று கேட்ட கையோடு ரோட்டுக்கு அப்பால் மீன்பாடி வண்டியுடன் நின்றுகொண்டிருந்த வயதான கிழவரை நோக்கி ‘அலி பாய்! கோடோன்லர்ந்து 3 டேபுளை சேதுராம்பிள்ளை காலனில போட்ருங்க!’ என்றதும் நான் நடத்து வீடு வந்து சேர்ந்தேன். அடுத்த பத்து நிமிடம் நான் அவசரமாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அந்த வயதானவர் டேபிள்களை வீட்டில் இறக்கி மடங்கியிருந்த டேபிள் கால்களை வெளியே இழுத்து ஹாலில் போட, நான் பஸ் ஸ்டாண்டுக்கு விரைந்தேன்.
பி.கு: மரணத்திற்கும் மனிதத்திற்கும் இறப்பே இல்லை. மரணத்திற்குப்பிறகும் நாம் பிரபஞ்சத்தின் ஓர் அங்கமே. இல்லையென்றால், பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயிலடியில் என்னை இறக்கி விட்ட எலெக்ட்ரீஷியன் ராஜு, மகனை இழந்த ஆட்டோ சுப்பையா, தெலுங்கு தாசரி, தனுஷ்கோடி வாடகை பாத்திரக்கடைக்காரர், மீன்பாடி வண்டி அலிபாய், அமரர் ஊர்தி மற்றும் ஐஸ்பெட்டி சூசை மாணிக்கம், ரெங்கநாதன் டிராவல்ஸ் டிரைவர் என எல்லோரும் என் அத்தையின் இறப்பு நிகழ்வின் அங்கமாக ஜாதிமதம் பாராமல் தத்தம் கைங்கர்யத்தை அளித்திருப்பார்களா! இல்லையென்றாலும் இது அவர்களது தினசரிப்பணி தானே என வாதிடாமல், இங்கே இன்னும் செத்துவிடாமல் உயிருடன் இருக்கும் மனிதத்தை நாம
பார்க்க முடிகிறது. தான் இறந்த பிறகும் இந்த 7 பேருக்கும் ஒரு நாள் ஊதியத்தைப் பெற்றுக்கொடுத்த அத்தைக்கு என் ஆழ்ந்த அஞ்சலி.
மனிதம் தொலைத்த மனிதர்கள் வாழும் பூமியில் அங்கங்கே இன்னும் தெரிகிறது மனிதம்!

No comments:

Post a Comment